மாணிக்கவாசகர்
திருவாதாவூரிலே ஆமாத்தியப் பிராமணர் மரபில் சம்புபாதாசிருத-ருக்கும் சிவஞானவதியம்மை-க்கும் வாதாவூரார் பிறந்தார். பதினாறு வயதிற்குள் கல்வி கேள்விகளில் சிறந்து சைவ நூல்களையும் தத்துவ நூல்களையும், உலகியல் நூல்களையும் நன்கு அறிந்து பேரறிஞரானார். சைவ ஒழுக்கத்திலும் சிவனடியார் பக்தியிலும் இறைவழிபாட்டிலும் சிறந்து நின்றார்.
இவரின் மேன்மைதனைக் கேட்ட அரிமர்த்தன பாண்டியன் வாதாவூராரை அழைத்து ‘தென்னவன் பிரமராயன்’ என்ற பட்டம் அளித்து தனது அரசவையில் முதல் அமைச்சராக்கிக் கொண்டான். அறிநெறி பிறழாமல் அரசு நடத்த துணை புரிந்தார். ஆயினும் அதில் பற்றின்றி பேரின்ப பெருவாழ்வு பெற உண்மை உணர்த்தும் ஞானாசிரியனை நாடி நின்றார்.
சோழநாட்டுக் கடற்கரையில் நல்ல குதிரைகள் விற்பனைக்கு வந்துள்ள செய்தியைத் தூதர்மூலம் அறிந்த அரசன் முதலமைச்சராகிய வாதாவூராரை அழைத்து அங்கு சென்று நல்ல குதிரைகளை வாங்கி வருமாறுப் பணித்து பெரும் பொருள் கொடுத்து அனுப்பினான். வாதவூரார் மதுரை மீனாட்சியம்மனையும் சொக்கலிங்கப்பெருமானையும் வணங்கிப் புறப்பட்டு சோழநாட்டுக் கடற்கரையை நோக்கிச் செல்லும்போது ஆவுடையார்கோயில் எனப்படும் திருப்பெருந்துறையை அடைந்தார்.
அப்போது அங்கிருந்த சோலையிலிருந்து ‘அர அர’ என்ற சிவநாம முழக்கம் முழங்குவதைக் கேட்டு மெய்மறந்தார். ஒலியின் வழி விரைந்து சென்றார். சிவபெருமான் வாதவூராரை ஆட்கொள்ளவெண்டி ஒரு சிவயோகியின் திருக்கோலங் கொண்டு சிவகணங்கள் சூழ குருந்த மரத்தடியில் அவர்களுக்குச் சிவஞானப் பொருளை உணர்த்திக் கொண்டிருந்தார்.
காந்தங்கண்ட இரும்பைப்போல் வாதவூரர் ஈர்க்கப் பெற்றுத் தம் வசமிழந்து பரவசமாகி குருமூர்த்தியின் திருவடிகளில் வீழ்ந்து தம்மை ஆட்கொள்ளுமாறு வேண்டினார். இறைவன் அவருக்கு ஞானதீட்சை செய்து உண்மைப் பொருளை உபதேசித்தருளினார். அப்போது சிவஞானச் செல்வராக விளங்கிய வாதவூரர் உடல் பொருள் ஆவி ஆகிய மூன்றையும் குருமூர்த்திக்கு அர்ப்பணம் செய்து உள்ளக் கனிவோடு மாணிக்கமெனத் திகழ்ந்த வாசகத்தைப் பல பாடல்களால் பாடியருளினார். அதனைக் கேட்டு மகிழ்ந்த குருநாதர் வாதவூராருக்கு “மாணிக்க வாசகர்” என்ற திருநாமம் சூட்டித் தொண்டு செய்யும்படி பணித்துவிட்டு அடியார்களுடன் மறைந்தருளினார்.
மாணிக்கவாசகர் இறைவன் ஆணைப்படி மெய்த்துறவியாகி தாம் கொண்டுவந்த பொருளையெல்லாம் பெருந்துறைப் பெருமானுக்குத் திருக்கோவில் எடுக்கும் பணிக்கு தந்தார். பலநாட்கள் சென்றன. குதிரை வாங்கச் சென்ற வாதவூரர் பரிசனங்களுடன் வராமை கண்ட மன்னன் ஆள் அனுப்பி விசாரித்துவரச் சொன்னான். ஏவலர்கள் வாதவூரரின் நிலைபற்றிக் கூறினர். அரசன் சினம் கொண்டு குதிரைகளுடன் வருமாறு ஓலை அனுப்பினான். வாதவூரர் பெருமானிடம் சென்று முறையிட்டார். இறைவன், ‘நாம் ஆவணிமூலத்தில் குதிரைகளைக் கொண்டு வருகிறோம், நீ முன்னர் செல்க, இம்மாணிக்கக் கல்லை அரசனிடம் கொடு’ என்று கூறி ஒரு மாணிக்கக் கல்லையும் தந்தருளினார். அமைச்சர் வாதவுரார் அவ்வண்னமே அரசனிடம் சென்று மாணிக்கக் கல்லையும் தந்து ஆவணி மூல நாளில் குதிரைகள் அனைத்தும் வரும் என்றார். அரசன் மகிழ்வுற்று எதிர்நோக்கி இருந்தான். ஆவணி மூலத்திற்கு முன்னாள்வரை குதிரைகள் வாராமை கண்டு பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரைச் சினந்து சிறையிட்டான்.
அப்போது வாதவூரார் குருமூர்த்தியை நினைத்து “நன்றே செய்வாய், பிழை செய்வாய், நானே இதற்கு நாயகமே” என மனவுறுதியுடன் இருந்தார். அடியவர் துயரம் பொறாத இறைவன் காட்டிலுள்ள நரிகளையெல்லாம் பரிகளாக்கி ஓட்டிக்கொண்டு தாமே குதிரைச் சேவகனாக ஆவணி மூலத்தன்று மதுரைக்கு வந்தருளினார். அது கண்ட மன்னன் வாதவூரரை விடுவித்து போற்றிப் புகழ்ந்தான். குதிரைத் தலைவராக வந்த சோமசுந்தரப் பெருமான் குதிரையின் இலக்கணங்களை அரசனுக்குக் கூறி கயிறு மாற்றிக் கொடுத்து குதிரைகளை ஒப்படைத்து மீண்டார்.
அன்றிரவே பரிகளெல்லாம் நரிகளாகி இன்னல்கள் பல விளைவித்து ஊளையிட்டுக்கொண்டு காடு நோக்கி ஓடின. இதைக் கேட்ட மன்னன் மிக்க கோபங்கொண்டு மாணிக்கவாசகரை வைகைச் சுடுமண்ணில் முதுகில் கல்லேற்றி நிறுத்தித் தண்டிக்கச் சொன்னான். வாதவூரர் துன்பம் பொறுக்கலாற்றாது எம்பெருமானை வேண்டி நின்றார்.
அன்பர்க்கு அருளும் ஆலவாய்ப் பெருமான் உண்மை விளங்கும் பொருட்டு வைகையாற்றிலே வெள்ளம் பெருகச் செய்தார். வெள்ளம் கரைகடந்து மதுரை நகருக்குள் பாய்ந்தது. அதனைக் கண்டு மருண்ட பாண்டியன் குடிமக்களை வீட்டிற்கு ஒருவராய் வந்து கரையை அடைக்குமாறு கட்டளையிட்டான். குடிமக்களுள் வயது முதிர்ந்த பக்தி நிறைந்த வந்தி எனும் பிட்டுவானுச்சிக்கு ஆள் இன்மையால் அவள் வேண்ட சிவபெருமானே மண்வெட்டும் கூலியாளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்து கரையை அடைக்கச் சென்றார். ஆனால் அவர் கரையை அடைக்கவில்லை. மற்றைய ஏவலர்கள் அடைக்கும் கரையை சிதைத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓடித் திருவிளையாடல் புரிந்தார். வந்தியின் பங்கு மட்டும் அடைபடாமல் இருந்ததைக் கண்ட பாண்டியன் வெகுண்டு வந்தியின் கூலியாளாக வந்த சிவபெருமானைப் பிரம்பால் அடித்தான். சிவபெருமான் கரையினை அடைத்து மறைந்தருளினார்.
பாண்டியன் பெருமானை அடித்த அடி அவன் முதுகிலும் மற்றைய எல்லா உயிர்கள் முதுகிலும் பட்டது. அரசன் இறைவன் திருவிளையாடலையும் மாணிக்கவாசர் பொருமையினையும் அறிந்து அவரைப் பிழை பொறுக்க வேண்டினான். மாணிக்கவாசகரும் பிழை பொறுத்துத் தம் அமைச்சர் பதவியை நீத்துத் திருப்பெருந்துறை, உத்தரகோசமங்கை, திருவாரூர், திருவிடைமருதூர், சீர்காழி, திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம் ஆகிய தலங்களை வணங்கிப் பதிகங்கள் பாடிக்கொண்டு தில்லை அடைந்தார்.
மாணிக்கவாசகர் சிதப்பரத்திலே நடராசப் பெருமானை இடைவிடாது தரிசித்துப் பற்பல பதிகங்களைப் பாடிக் கொண்டு இருந்தார். அப்போது தில்லைவாழ் அந்தணர்களோடு வாதுக்கு வந்த புத்த குருவை இறைவன் ஆணையின்படி வாதில் வென்றார். ஊமைப் பெண்ணைப் பேச வைத்தார். புத்த குரு முதலானோர் சைவராயினர்.
ஒருநாள் நடராசப் பெருமான் அந்தண வடிவு கொண்டு மாணிக்கவாசகரிடம் சென்று திருவாசகம் முழுமையும் ஓதச் செய்து தமது ஓலைச் சுவடியில் அவற்றை எழுதிக் கொண்டு திருக்கோவையாரையும் சொல்லச் செய்து, அதனையும் சுவடியில் எழுதிக் கொண்டு, “மாணிக்கவாசகன் சொல்ல அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது” எனக் கையொப்பமிட்டு அதனைக் கனகசபையின் பஞ்சாக்கரப்படியிலே வைத்து விட்டு மறைந்தருளினார்.
மறுநாள் காலயில் தில்லைவாழ் அந்தணர் பஞ்சாக்கரப்படியிலே சுவடியைக் கண்டு அதிசயத்து சுவடியில் அம்பலவாணன் கையெழுத்திடிருப்பதை உணர்ந்து மாணிக்கவாசகரிடம் சென்று விபரம் அறிந்தனர். பின்னர் அவரை இப்பாடல்களின் பொருளைத் தெரிவிக்க வேண்டினர். மாணிக்கவாசகர் தில்லைவாழ் அந்தணர்களை அழைத்துக்கொண்டு பொற்சபையை அடைந்து தில்லைத் திருக்கூத்தனைச் சுட்டி இவரே இத்திருவாசகத்திற்குப் பொருள் என்று காட்டி சிவபெருமானது திருவடிச் சோதியில் இரண்டறக் கலந்தார். அந்தநாள் ஆனிமக நாளாகும்.
திருப்பெருந்துறையில், உத்திரகோசமங்கையில் மாணிக்கவாசகர் சன்னதி.
அந்த நால்வர்.....
1.திருஞானசம்பந்தர்/2.திருநாவுக்கரசர்/3.சுந்தரர்