புகழ்!
எப்படியாவது தன் பெயர் வரவேண்டும், ஒலிபெருக்கியில், தொலைகாட்சித் திரையில், பத்திரிக்கைகளில் என விரும்புவபர்கள்தான் அதிகம். எதற்கு இந்த புகழ் பரபரப்பு. அதனால் உங்களுக்கு என்ன நன்மை. ஆன்மாவிற்கு என்ன பயன். சிந்தியுங்கள். கோவிலில் தொங்கும் திரைச்சீலையில்கூட இது இன்னார் உபயம் என எழுதி வைக்கின்றார்கள். அவர்களுக்கு ஓர் கேள்வி! நீங்கள் கோவிலில் ஆன்மீகத்திற்கு உதவுவதற்கு கொடுத்ததா! அல்லது அங்கு வரும் அன்பர்கள் அனைவரும் உங்கள் பெயரை படித்து தெரிந்துகொள்ள எழுதப்பட்டதா! ஆன்மீகத்தின் புனிதத்தன்மையை கெடுக்காதீர்கள்.
உலகில் உற்பத்தி ஓர் அதிசயம். அதை உருவாக்கிய இறை நமக்கு எவ்வளவோ செய்துள்ளார். உணவுக்கு, உடைக்கு, உறங்குவதற்கு, உறவுக்கு, உல்லாசத்திற்கு, இரசிப்பதற்கு, நேசிப்பதற்கு எவ்வளவோ தந்துள்ள இறைவன் இதையெல்லாம் தான் கொடுத்து என எங்கும் எழுதிவைக்கவில்லை.
ஆன்மாக்கள் இதுபோன்ற யாருக்கும் உதவாத செயல்களில் மனதை அலைய விட்டுக் கொண்டிருக்கின்றது. நோக்கங்கள் ஓர்முனைப்பட்டிருப்பதில்லை. பயன் மட்டும் எப்படி எதிர்பார்த்தவாறு கிடைக்கும். எவ்வளவு பெரிய கோவில்கள், எவ்வளவு கலைநயமிக்க சிற்பங்கள், தூண்கள், கட்டிடங்கள் இவ்வளவு காலமாகியும் தங்கள் பெருமைதனை சொல்லிக் கொண்டிருந்தாலும், அதை வடித்த சிற்பியையோ அதை உருவக்க முயற்சிகள் மேற்கொண்டவர்களையோ கீழே ஏன் எழுதிவைக்கவில்லை. அவர்கள் நோக்கம் ஓர்முனைப்பாடு கண்டிருந்தது. காலங்காலமாய அழியாமல் இருப்பவைகளை பற்றிய செய்திகள் செப்புத்தகட்டில் கல்வெட்டுக்களில் ஓரிடத்தில் அமைதியாய் இருக்கின்றது.
அதை நாம் தேடிச்சென்று பார்த்து, கேட்டுத் தெரிந்து மகிழ்வு கொள்கின்றோம். ஆச்சரியமடைகின்றோம். விரைவில் அழியக்கூடிய ஒளிதரும் விளக்குகள், மின்விசிறி, திரைச்சீலையில் கூட உபயம் எழுத்துக்கள் தற்போதைய மனிதனின் ஆர்பரிக்கும் புகழ் நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. தன் புகழுக்காக பெயர்களை எழுதிவிட்டு தானம் செய்தேன் என பறைசாற்றி என்ன பயன் சொல்! அதன் பலன் என்ன காண்பீர்!
நீங்கள் செய்யும் செயல்களால் புகழ் பரவவேண்டும். அது உங்களைத்தேடி வரவேண்டும். அதைவிடுத்து தீய வழிகளில் பொருள் சேர்த்து அதை சுயவிளப்பரத்திற்குப் பயன் படுத்தி அதன் மூலம் புகழ்தேட நினைப்பதால் எந்தவித பயனும் இல்லை. யாருக்கும் அதன் பலன் போய்ச்சேராது. உங்கள் அமைதிக்குகூட சிறிதும் அது உதவாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
வறியவர்களுக்கு கொடுத்தலால் புகழ் உண்டாகவேண்டும். தானங்களை புகழுக்காகவோ, புண்ணியத்திற்காகவோ செய்யக்கூடாது. புகழுக்காக அன்றி, இல்லாதவருக்கு உதவுவதே இருப்பவனின் கடமை.
ஒருவர் முகத்திற்கு முன்னாள் சொல்லப்படும் புகழ் அர்த்தமற்றவை. அதுவே அவருக்குப் பின்னால் பேசப்படுமானால் அதில் ஆழமான அர்த்தங்கள் உண்டு. மேலும் ஒருவர் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வது தற்புகழ்ச்சி எனப்படும். தற்புகழ்ச்சி தற்கொலைக்குச் சமம். இதையே ஒருவர் தன்னை, சாகாமல் சாகடித்துக் கொல்வது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே மறைமுகமாககூட தற்புகழ்ச்சி பாராட்டக்கூடாது. மூடரின் மனதில் உங்களைபற்றிய பொய்யான எண்ணங்கள் உண்டாக இடம்போடாதீர்கள்.
ஒரு துறையில் முன்னேறி வெற்றியுடன். புகழுடன் நிலைத்திருக்க வேண்டும். பூத உடல் அழிந்தபின்னும் புகழ் நிலைத்திருக்கும் வண்ணம் செயலகள் இருக்க வேண்டும்-குருஸ்ரீ பகோரா.