மாயை!
இப்பூவுலகில் எல்லாமே மாயை! எதுவும் நிலையானது இல்லை. இன்று மலையாக இருந்தது ஒரு காலத்தில் மடுவாகவும், மடுவாக உள்ளது மலையாகவும் மாறும் மாயையானது. புல், பூண்டு, மரம், செடிகள், கொடிகள், ஊர்வன, நடப்பன, பறப்பன என எல்லாம் அழியக்கூடியவையே! ஆனால் மீண்டும் தோன்றக்கூடிய மாயையை பெற்றுள்ளது. உள்ளே குமுறும் நெருப்புத்தனலை மூடிமறைக்கும் எரிமலை போன்று.
தனல்களை மறைக்கும் சாம்பல்களையும், கத்தியை மூடிய வாள் உறைகளையும், செம்பை மூடிய களிம்பையையும், நம்முள் உயிர்த்த ஆன்மாவை மூடியிருக்கும் உடலையும் நம்மால் காணமுடிகின்றது. சாம்பலை ஊதினால் சுடர்விடும் தனலும், வாள் உரையை நீக்கினால் பளப்பளக்கும் வாளையும், களிம்பைப் போக்கினால் களிப்பூட்டும் செம்பையும் காண்கின்றோம். இவைகளைப்போலவே மனித ஸ்தூல உடலை நீக்கி நம்முள் இருக்கும் ஆன்மாவை உணரத்தெரிந்து கொள்ளவேண்டும். ஆன்மாவை நாம் புரிந்துணரவேண்டும்.
சாம்பல், களிம்பு, வாள் உரை இவைபோன்று மனித ஆன்மாவை உடலான மாயை மூடிமறைத்திருக்கின்றது. என்றோ ஓர்நாள் அது உடலைவிட்டு வெளிவந்து விடும். அதை நாம் உணர்ந்து நம் அறியாமை என்னும் மாயை நீக்கி ஆன்மா சீராக சிறப்பாக செயல்பட வழிவகுக்க வேண்டும். தியானிக்க வேண்டும். அது ஓர் இன்பம். நம் ஸ்தூல உடலுக்கு சிறப்பான வழிகாட்டும்.
பாலைவனத்தில் பயணம் செய்யும்போது வெப்பத்தின் மிகுதியால் தாகம் எடுக்கின்றது. அதேசமயம் அருகில் மணற்பாங்கான பகுதியில் நதி ஓடுவதுபோல தோற்றம் தெரியும். அருகில் செல்ல செல்ல நதி தெரிந்துகொண்டேதான் இருக்கும். நதியை நெருங்க முடியாது. இது பாலைவனத்தின் மாயை. இதைக் ‘கானல்நீர்’ என்கிறோம். மாயையான கானல் நீரைத் தேடியவன் அதை அடைந்ததாக, ஒரு நிகழ்வு நடந்ததாக கூறப்படவேயில்லை. அதைப்போலத்தான் இவ்வுலகிலும் மாயை நிறைய உண்டு. கண்ணுக்கு தெரிந்தாலும், மாயைகள் நிஜமாகாது.
உலகில் எல்லாம் மாயை. இன்பமும், துன்பமும் மாயை. இன்பத்திற்கு இன்பப்படாமலும், துன்பத்திற்கு துன்பப் படாமலும், மாயைக்கு ஆட்படாமல் ஒரு ஆத்மாவின் உயிர் வாழ்ந்தால் அதன் வாழ்வு வெற்றி பெற்றதாகிவிடும்.
அந்த மாளிகையில் திருடன் ஒருவன் உள்புகுந்தான். அனைவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். அந்த படுக்கை அறை அருகிலேயே இருந்த அறையின் கதவு திறந்தே இருந்தது. சப்தமில்லாமல் அங்கு சென்றவன், அங்கு பணப்பீரோ இருப்பதைக் கண்டான். நல்லவேளை எல்லோரும் நன்றாக தூங்குகின்றார்கள். எந்த பிரச்சனையும் இன்றி சுலபமாக திருடிக் கொண்டு போய்விடலாம் என நினைத்தான்.
அப்போது அந்த பணப் பெட்டியின் கைப்பிடியில் ‘பீரோவை திறக்க கஷ்டப்பட வேண்டாம். பூட்டப்படவில்லை, கைபிடியை திருகினால் பீரோவைத் திறந்து விடலாம்’ என்று எழுதியிருக்கக்கண்டு அதி ஆனந்தம் கொண்டான். இது மாயை! இப்படி யாராவது எழுதி வைப்பார்களா என்று நினைக்காமல், உற்சாகத்துடன் மெதுவாக கைப்பிடியைத் திருகி பீரோவின் கதவை திறக்க முற்பட்டான். கைப்பிடித் திருகியதும் அதன்மூலம் இனைக்கப்பட்டிருந்த நெம்புகோல்பிடி வேலைசெய்து ஒரு மண் மூட்டை மேலிருந்து தள்ள, அது கீழே இவன் தலைமேல் விழுந்தது.
ஆ என்று ஓலமிட்டான். அனைவரும் உறக்கத்திலிருந்து விழித்தனர். விளக்குகள் எரிந்தன. பிடிபட்ட திருடன், இப்படி மனிதர்கள் மாயை செய்தால், எப்படி இவர்களை நம்பி தொழில் செய்வது என வருந்தினான். எல்லோரும் எத்தனை காலத்திற்கு ஏமாந்தவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றவில்லை. ஏமாந்தவர்கள் இருக்கும் வரை ஏமாற்றத்தான் செய்வார்கள்-குருஸ்ரீ பகோரா.