கருவூரார் சித்தர்
கருவூரில் பிறந்தவர் கருவூரார். விளையாடும் பருவத்திலேயிருந்து ஆர்வத்துடன் ஞான நூல்கலைக் கற்றார். கருவூராரின் பெற்றோர்கள் ஊர் ஊராகச் சென்று கோவில்களில் விக்ரகங்கள் செய்து கொடுத்து வாழ்ந்தார்கள். போகர் திருவாவடுதுறைக்கு வர அங்கு சென்ற கருவூரார் தம்மை அவருடைய சீடராக ஏற்றுக்கொள்ள வேண்டினார்.
போகர், கருவூராரே உன் குலதெய்வம் அம்பாள், தினந்தோறும் அவளை வழிபடு. அவள் உனக்கு வழிகாட்டுவாள் என்று வழிபாட்டு நெறிகளை உபதேசித்தார். அம்மனை உள்ளம் உருக வழிபட்டு சித்துகள் புரியும் ஞானம் பெற்றார். சிவாலயங்களில் தங்கத்தால் சிவலிங்கங்களை உண்டாக்கி வைத்தார் கருவூரார். காசிக்குச் சென்று விசுவநாதர் ஆலயத்திலும் தாமிரத்தில் வேதை செய்து தங்கமயமான லிங்கத்தை உண்டு பண்ணி வைத்தார். கருவூர் சித்தரும், திருமாளிகைத்தேவரும் போகரின் சீடர்கள்.
இரணிய வர்ம சோழன் தீர்த்த யாத்திரையாக தில்லை வந்து சிவகங்கைத் தீர்த்த குளத்தில் குளிக்கும்போது தண்னீருக்குள் ஓங்கார ஓசை கேட்க மீண்டும் நீரில் மூழ்கி நடனத்துடன் கூடிய ஓங்கார ஒலியை உறுதிப் படுத்திக் கொண்டான். தான் கண்டு கேட்டு அனுபவித்ததை அனைவரும் கண்டுகளிக்க என்ன செய்யலாம் என சிந்தித்தான். இறுதியில் சொக்கத்தங்கத்தில் விக்ரகமாகச் செய்து எல்லோரும் தரிசனம் செய்யும்படி வைக்கலாம் என முடிவு செய்தனர்.
கலப்படமில்லாத சொக்கத்தங்கத்தில் 48 நாட்களுக்குள் செய்திட சிற்பிகளுக்கு ஆணை பிறப்பித்தார். சிற்பிகளால் என்ன செய்தும் குறையின்றி விக்ரகத்தை செய்து முடிக்க முடியவில்லை. 47 நாட்கள் ஆனது. விபரம் அறிந்த போகர் சிற்பிகள் கஷ்டப்படுவதால் கருவூரா நீ போய் அதை செய்து முடி என்றார். 48 நாள் முடிவில் சிற்பிகள் தங்கள் இயலாமையால் மரணபயத்துடன் இருக்க கருவூரார் அங்கு சென்றார். அந்த அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக்கொண்டார்.
நம்பிக்கையில்லாமல் வெளியில் காத்திருந்த சிற்பிகள் ஒருமணி நேரத்தில் கதவு திறந்து கருவூரார் வெளியில் வந்து உள்ளே சென்று பாருங்கள் உங்கள் எண்ணப்படியே விக்ரகம் செய்தாயிற்று என்றார். நம்ப முடியா ஆச்சரியத்தில் உள்ளே சென்ற சிற்பிகள் அங்கிருந்த சிலையைப்பார்த்து அதிசயப்பட்டனர். வெளியே வந்து கருவூரரை வணங்கினர்.
மறுநாள் சூரியோதயத்திற்கு முன் நீராடி மன்னர் திருநீற்றுக்கோலத்துடன் சிற்பிகளைப் பார்க்க வந்தான். சிலையின் அற்புத ஒளியில் மயங்கினார். தான் வரைந்த ஓவியத்தில் இல்லாத அருள்சக்து விக்ரகத்தில் இருப்பதை உணர்ந்தார். சிற்பிகளே அற்புதம். உங்களுக்கு தக்க சன்மானம் கொடுக்கப்போகிறேன் என்றார். அமைச்சர் சிலையிலிருக்கும் தங்கத்தை சோதித்து பின் வெகுமதி அளிக்கலாம் என்றார். சிலை செய்யும்போது சிந்தியிருக்கும் தங்கத்துகல்களை கொண்டுவந்து சோதனை செய்தபோது மன்னரின் முகம் இருண்டது.
சுத்தமான தங்கத்தில் செய்யும்படிநான் உங்களிடம் கூறியிருந்தேன். செம்பைக் கலந்து என்னை மோசடி செய்து விட்டீர்களே எனக் கடுமையாகக் கேட்டார். சிற்பிகள் பய்ந்து நடுங்கினர். மன்னா எங்களால் 47 நாட்களாக சிலை செய்ய முடியவில்லை. நேற்று அடியார் ஒருவர் வந்தார். அவர்தான் இதை செய்தார் என்றதும் மன்னர் திகைத்து அவரை கூட்டி வாருங்கள் என்றார். கருவூராரை அழைத்து வந்ததும் இவரை சிறையில் இடுங்கள். நான் நாளை என் தீர்ப்பை கூறுகிறேன் என்றார். விக்ரகத்தை தன்னுடன் கொண்டு சென்றார்.
விக்ரகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவர் கண்ணில் நீர் வழிந்தது. அவர் எதிரே போகர் தோன்றினார். அவர்பின்னால் ஐந்து சீடர்கள் தலையில் தங்க மூட்டையுடன் நின்றிருந்தனர். ஒருவரிடம் சிறிய தராசும் இருந்தது. ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்து வணங்கினார் மன்னர். போகர். மன்னா நீ சிறையில் அடைத்திருக்கும் கருவூரர் என் மாணவன். இனி எந்தக் கருவிலும் ஊர்தல் செய்யாத தகுதி கொண்ட அவனைச் சிறையில் அடைத்து விட்டாய். இதுதான உன் ஆட்சி முறை என்றார், மன்னர் சுத்த தங்கத்தில் விக்ரகம் செய்ய சொன்னால் செம்பு கலந்து செய்ததால் அந்த தண்டனை என்றார் மன்னன்.
சுத்த தங்கத்தில் விக்ரகம் செய்ய முடியாது. சுத்த தங்கத்திலிருந்து விக்ரகம் செய்தால் அதிலிருந்து கிளம்பும் ஒளி நாளடைவில் பார்ப்பவர் கண்களை குருடாக்கிவிடும். எனவே அதில் செம்பு கலக்கச் சொன்னேன். இந்த அறிவியல்முறை உனக்குத் தெரியாதா என்றார். என்மாணவன் செம்புடன் பலவிதமூலிகை சாறுகளைச்சேர்த்து செய்திருக்கின்றான். போனது போகட்டும். இந்தா நீ கொடுத்த அதே சுத்தத் தங்கம். சிலையைக்கொடு என தரசில் நிறுத்தி சிலையை எடுத்துக் கொண்டு செல்ல முயன்ற போகரின் கால்களில் வீழ்ந்தான் மன்னன்.
நடராசப்பெருமானை உங்களிடம் தருகின்றேன். என் சீடனை என்னிடம் கொடுங்கள் என்றார் போகர். போகர் அழைக்க சிறையிலிருந்து வெளியே வந்தார் கருவூரார். கோவில் அமைய வேண்டிய முறை எந்தெந்த வடிவங்கள் எங்கெங்கு வைக்கவேண்டும் எனவும் நடராசரை எப்படி பிரதிஷ்டை செய்து பூஜை செய்யவேண்டும் என்றும் சொல்லி மறைந்தார் கருவூரார்.
கருவூரார் திருவிடைமருதூர் தலத்தை அடைந்து இறைவனை நோக்கிக் குரல் கொடுக்க இறைவன் தன் தலையை சிறிது சாய்த்து கருவூரார் குரலைக்கேட்டு பதில் தந்தார்.தஞ்சை கோவில் கும்பாபிசேகம் தடைபட்டு நிற்பதைக் கண்ட கருவூரார் உடனே கருவறை சென்று எளிய அஷ்ட பந்தனம் செய்து குபாபிஷேகமும் செய்துவைத்தார். தஞ்சையிலிருந்து திருவரங்கம் சென்ற கருவூரரை அபரஞ்சி என்ற தாசி சந்தித்தாள். வணங்கி வழிபட்டாள். ஞான சாதனையில் தன்னுடைய சந்தேகங்களைச் சொல்லி விளக்கம் கேட்டாள். அவள் சந்தேகங்களை விளாக்கினார். மறுநாள் அரங்கனிடம் சென்று அபரஞ்சிக்கு பரிசளிக்க நவரத்னமாலை ஒன்றை வாங்கி அதை அவளிடம் தந்தார். விடை பெறுகையில் அவள் வருந்தவே நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன் எனக் கூறி விடைபெற்றார்.
மறுநாள் காலை திருவரங்கன் மேனியிலிருந்த நவரத்ன மாலை களவுபோய்விட்டது என்ற செய்தி அறிந்தவர்கள் அது அபரஞ்சி கழுத்திலிருப்பதை கண்டு திகைத்தனர். பஞ்சாயத்து கூடியது. பள்ளிகொண்டபெருமான் சார்பாக கருவூரார் கொடுத்தபரிசு என அபரஞ்சி சொல்ல கருவூரார் எங்கே என்றனர். அபரஞ்சிதா மனதார கருவூரரை நினைக்க, அதுசமயம் எல்லோருக்கும் கேட்கும் வண்ணம் நீங்கள் எனக்கு அலங்காரம் செய்ய நினைகின்றீர்கள். நான் என் அடியார்களுக்கு அலங்காரம் செய்து பார்க்க விரும்புகிறேன். நான்தான் அபரஞ்சிக்கு நவரத்னமாலையை கருவூரார் மூலம் அளித்தேன் என அசரீரி கேட்க ஊரார் அபரஞ்சியிடம் மன்னிப்பு கேட்டனர்.
அரசு செல்வாக்கும் ஊரார் செல்வாக்கும் கருவூரருக்கு இருப்பதைக் கண்ட அந்தணர்கள் பொறாமையினால் மதுவையும் மாமிசத்தையும் கருவூரார் வீட்டில் ஒளித்து வைத்து மன்னரிடம் கூறினார். கருவூராரின் வீட்டைச் சோதனையிட்ட காவலர்கள் ஏதுமின்றி வந்தது கண்டு அந்தணர்கள் மீது மன்னன் கோபம் கொண்டான். அவமானம் அடைந்ததனால் கடும் சினம் ஏற்பட அவர்காள் கருவூரரை கொலைசெய்ய திட்டமிட்டனர். அதையறிந்த கருவூரார் அவர்களுக்குப் பய்ந்து ஓடுவதுபோல் திருஆனிலையப்பர் கோவிலுக்குள் ஒடினார்.
கோவிலுக்குள் ஓடிய கருவூரார் “ஆனிலையப்பா, பசுபதீஸ்வரா” எனக் கூறி சிவலிங்கத்தை தழுவினார். இனி எந்தக் கருவிலும் ஊரல் இல்லாத கருவூரார் இறைவனுடன் இரண்டறக் கலந்து விட்டார். கருவூராரைத் துரத்தி வந்தர்கள் இந்த தெய்வீக காட்சியைக் கண்டனர். தங்கள் தவறுக்குப் பரிகாரமாக ஆனிலையப்பர் கோவிலில் கருவூராருக்குத் தனிசன்னதி அமைத்து வழிபட்டனர்.
கருவூரார் வாதகாவியம், வைத்தியம், யோகஞானம், பலதிட்டு, குரு நரல் சூத்திரம், பூரணஞானம், மெய் சுருக்கம், சிவஞானபோதம், கட்ப விதி முப்பு சூத்திரம், அஷ்டமாசித்து (மாந்திரீகம்) ஆகியநூல்களை எழுதினார்.
கருவூரார் தியானப்பூசைக்கு
“கருவூரில் அவதரித்த மஹாஸ்தபஸ்யே திருக்கலைத் தேரில்
முடிதரித்த நவநிதியே வாரிவழங்கி அருள் கொடுத்தாய்,
மாறாத சித்துடையாய் கள் உள்ளளவும் மண் உள்ளளவும்
உன் கருணைக் கரங்களே காப்பு காப்பு”
தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் கருவூரார் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு ஐந்து முக விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து துளசி மற்றும் மல்லிகை மலர்களாலும் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
அவதார புருஷரே போற்றி
இந்திராதி தேவர்களுக்கு ப்ரியரே போற்றி
ஓம் கம் நம்பீஜாட்சரத்தை உடையவரே போற்றி
ஒளி பொருந்தியவரே போற்றி
கற்பூரப்பிரியரே போற்றி
சிவனை பூஜிப்பவரே போற்றி
நடராசனை பிரதிஷ்டை செய்தவரே போற்றி
நாடி யோகியே போற்றி
பூவிலகில் சஞ்சரித்து கருவைக் காப்பவரே போற்றி
லோக க்ஷேம சித்தரே போற்றி
வெட்டை வெளியில் வசிப்பவரே
ஞானம் அளித்து வேண்டிய வரம் தருபவரே போற்றி.
நிவேதனமாக பச்சைக் கற்பூரம் போட்ட சர்க்கரைப் பொங்கலை இவற்றுடன் கருநீல வஸ்திரம் வைத்து சனிக்கிழமை வழிபடின் சிறப்பு,
தியானபூசைப்பலன்கள்
சனி கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக சனி தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். எழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி கோளாறுகள் நீங்கும். வாகன விபத்துக்கள் அகலும். விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். படிப்பில் உள்ள மந்த நிலை அகலும். வெற்றி கிடைக்காமல் தடை ஏற்படும் நிலைகள் மாறும். எலும்பு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். பிரம்ஹத்தி தோஷம் அகலும். புத்திர பாக்யம் கிடைக்கும். முதலாளி தொழிலாளி பிரச்சனைகள் தீரும்.
“ஓம் ஞானமளிக்கும் ஸ்ரீ கருவூரார் சித்தர் சுவாமியே போற்றி”
******
சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்
அகத்தியர் / அகப்பேய்சித்தர் / இடைக்காட்டுச்சித்தர் / உரோமரிஷி / கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் / குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்