பண்பு!
பண்பு எல்லா உயிருக்கும் ஆன்மாவிற்கும் இன்றியமையாத ஒன்று. பிறர் மனம் நோகாமல் சொற்களை கையாள்வது ஓர் பண்பு! செயல்படுவது ஓர் பண்பு!
திருமணம் என்றபின் பெண்களுக்கு தாய்மை என்ற உயர்வு வேண்டியதாயிருக்கின்றது. உண்மையில் தாய்மை உயர்வு ஓர் பெண்ணுக்கு இல்லை என்றாலும் தாய்மை உணர்வு கொள்ளுதல் அவசியம். அதுதான் மற்ற உயிர்களிடம் நேசம் கொள்ளச் செய்யும். அதுவே அன்பின் சிகரம். சிறந்த பண்புகளையும் காணமுடியும்.
தாய்மையடையாமல் சில ஆண்டுகள் கழிந்தால், ஒரு பெண் எவ்வளவு பேச்சுக்கும், ஏச்சுகளுக்கும், கேலிகளுக்கும் ஆளாகி விடுகின்றார் என்பதை நாம் நடைமுறையில் காண்கின்றோம். இந்த பேச்சுக்களும். கேலிகளும் அதே பெண் இனத்திலிருந்துதான் வருகின்றது. இது கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
ஒருவர் மனதை அறிந்தும், அறியாமலும் பல சொற்களால் காயப்படுத்தி விடுகின்றோம். அந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லையென்றால் என்ன! அது அவர்கள் பிரச்சனை! அவர்கள் கர்மவினைப்பலன்! என்ற நிலையில் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
வாழ்வில் சந்தோஷம்காண மழலையும் ஓர் வழிதானே ஒழிய அது ஒன்றே அன்று. தாய் தந்தையரற்ற குழந்தைகள் மழலைக் காப்பகத்தில் நிறைந்துள்ளன. அவர்களுக்கு இவர்கள் உதவலாம். ஏன் நல்ல பண்பு இருந்கும் அனைவருமே உதவலாம்.
எந்த வழியிலாவது நிம்மதியாக சந்தோஷமாக ஜீவன் நடத்தி ஆனந்தம் அடையவேண்டும் என்பதே ஆன்மாவின் குறிக்கோள். இதைப் புரிந்து கொள்ளாமல் ஒருவரின் குறைகளையும், குற்றங்களையும் அவரைச் சுற்றியுள்ளவர்களிடம் வஞ்சகமான சொற்களால் மிகைப்படுத்திக் கூறி அதன் மூலம் ஒருவரின் மனதைப் புண்படுத்துதல் நல்ல பண்புள்ள செயலாகாது.
அவ்வாறு சுட்டிக்காட்டுவதால் அவரின் மனம் இறுகி, அதன் தாக்கத்தில் அவர் வேறு தவறு செய்ய ஏதுவாகும். அது அவர்கள் வாழ்வில் வசந்தத்தை வரவழைக்காது. துயரத்தைதான் தொடர்ந்து கொடுக்கும். இது நல்ல பண்பாளருக்கு அழகல்ல! மேலும் உங்கள் கர்மத்தில் தீயபலன்களைச் சேர்த்து கொள்கின்றீர்கள்
எல்லோரும் சந்தோஷத்துடன் வாழ, குறையுள்ளவரின் குறைகளை அவர் மனம் வருத்தப்படும்படியாக சுட்டிக் காட்டாமல் இருக்கப் பழகவேண்டும். அவர்கள் சந்தோஷமாக இருக்க ஆலோசனை அறிவுரை என்ற பெயரில் அவர்கள் குறை சம்பந்தப்பட்ட பேச்சுக்களையே பேசுதலைத் தவிர்க்க வேண்டும்.
அது சம்பந்தமான பொது விஷயங்கள் நடந்தாலும் பேச்சின் தன்மை உணர்ந்து, பேச்சின் போக்கை மாற்றிக் கொள்வதே சிறந்த பண்பு. அரக்கியின் மூக்கை அறுத்ததால் அவள் அலற அந்த சத்தம் கேட்ட ராமர், லட்சுமணா அரக்கியைக் கொன்று விட்டாயா? எனக் கேட்கிறார். “பெண்ணைக் கொல்வேனா?” எனச் சொல்லலாம் என லட்சுமணன் முற்பட்டபோது, அண்ணன் தடாகையை கொன்றது ஞபகம் வரவே, அப்படிச் சொன்னால் அது அண்ணணின் செயலை சுட்டிக்காட்டுவதுபோல் இருக்கும் என நினைத்து, “அலறினாள், விட்டுவிட்டேன்” எனக்கூறியதாக இராமயணம் கூறுகின்றது. எவ்வளவு உயர்ந்த பண்பு!
ராமன்மீது இலக்குவன் மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் கொண்டவராததால், தான் சொல்லும் சொற்கள் தன் அண்ணனைக் காயப்படுத்தக்கூடாது என ஒருகணம் சிந்தித்து சொற்களைக் கூறுகின்றான்.
இந்த எண்ணம் நமக்கும் வேண்டும். மனம் நோகும் கடுஞ்ச் சொற்களை விட்டு இதமான சொற்களைச் சொல்லப் பழகவேண்டும். அதற்கு நாம் அவர்களிடம் நேசமான அன்பு கொண்டிருக்க வேண்டும். எனவே அன்புதான் சிறந்த பண்பைத் தரும். அன்புதான் பிறர் மனதை புண்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தின் மூலம் பண்பை நாம் கொண்டிருக்க உதவுகின்றது. ஒருவரின் குறை, குற்றங்களை சொல்லுமுன் அவர்மீது அன்பு கொள்ளுங்கள். அவர் செய்த அன்புச் செயல்களை நினைவு கூர்ந்து நீங்கள் செயல் பட்டால், உங்களால் அவரின் குறைகள் குறைந்து அவரின் அன்பு மிகுதியாக தெரியும்.
அன்பு உலகம்! ஆனந்த உலகம்! பண்புகூடிய உலகம்! சந்தோஷம் நிறைந்த உலகமாகும்! அன்பு, கருணை, இரக்கம், சாந்தம், அடக்கம் இவைகள் மனிதகுலத்தின் நலனுக்கு ஏற்ற நற்பண்புகள். நம் ஆன்மாவின் எண்ணத்தில் செயலில் இவைகள் இடம் பெறவேண்டும்.
‘எங்கெல்லாம் தர்மமும் நற்பண்புகளும் நிலவுகிறதோ அங்கே வெற்றி கிடைக்கும்’ என்கின்றனர் அருள் நிறைந்தோர். எல்லா உயிர்களிடத்தும் அன்புடனிருத்தல், குறைகளையும், தவறுகளையும் கண்டு உணர்ச்சி வயப்படாமல் கருணைகொள்ளல், எந்தசூழல் அவர்களை இவ்வாறு செய்ய வைத்தது என இரக்கம் காண்பித்தல், எந்த நிலையிலும் அடக்கம் காத்து நின்றல், எப்போதும் பணிவுடன் இருத்தல் ஆகிய பண்புகள் மனிதனின் நிலையை மேம்படுத்தும்.
மற்றவரது உணர்வுகளையும், மனோ நிலையையும் எந்த அளவுக்கு உணர்ந்து செயல்படுகிறோமோ அந்த அளவுக்கு நாம் பண்பு உடையவர்களாகிறோம். அந்த புரிந்துணர்வு பண்பாட்டில் நாம் பூரணத்துவம் அடைய உதவும்.
பொறுத்தார் பூமி யாழ்வார், பொறுமை கடலினினும் பெறிது என்பன வழக்கிலிருக்கும் வார்த்தைகள். பொறுமை என்பது ஒரு சிறந்த பண்பாகும். பூமி எல்லாவற்றையும் தாங்குவதுபோல தன்னை இகழ்ந்து பேசுதலையும் பொறுத்துக் கொள்வது தலையாய பண்பாகும். பிறர் செய்த தீங்கை பொறுத்தல் சிறப்பு.
நான், எனக்கு: நாம் எல்லோரும் நான், எனக்கு என்று அதிகமாக ஆட்படுகின்றோம். நம் செயல்களில் நான், எனக்கு என்ற எண்ணம் நிரம்பி வழிகின்றது. ஒர் செயல் வெற்றிபெற நம்மால் இது முடியும் என்ற எண்ணம் வேண்டும். முடியும் என்ற மன உறுதிவேண்டும். வெற்றி பெற்றால் மகிழ்வு கொள்ளலாம். அகந்தை கொள்ளக்கூடாது.
நான், எனக்கு என்ற எண்ணமுடையவர்கள் ஆடம்பரப் பிரியர்கள். தங்களிடம் உள்ளதை வெளியில் கூறி பெருமை கொள்வார்கள். நான் என்பது அகந்தை மிகக் கொண்டது. அங்கே அன்பு இருக்காது. உண்மை நிலவாது. “நான்” “எனது” என்னும் உணர்வுகள் நம்மை ஆட்டிப்படைக்கும் தன்மைகொண்டது.
அது உங்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்தும் எண்ணத்தை தோற்றுவிக்கக் கூடியது. நான் என்று உச்சரிக்கும்போது நீங்கள் அனைவரையும் விட்டு விலகிச் செல்கின்றீர்கள். அது ஆணவத்தின் ஆரம்பம். ஆணவம் கொள்பவர் யாராயிருந்தாலும் அவனியில் தனித்திருந்து தவிக்கநேரிடும் சூழலில் இருப்பர்.
நான் இல்லை என்றால் இது நடக்காது, என்ற எண்ணம், ஓர் மமதையை, ஓர் மயக்கத்தில் ஆழ்த்தும் எண்ணமாகும். இதைத் தவிர்த்தல் உங்கள் முன்னேற்றத்திற்கு நன்மை பயக்கும். பெரியவரோ, சிறியவரோ ஓரு செய்தியை, நிகழ்வை சொல்கிறார் என்றால், அவர் கூறிமுடியும் வரை அமைதியாக கேட்டுக் கொள்ளுங்கள்.
எனக்குத் தெரியும் என்ற நினைவில் இடையில் ஏதாவது கூறி அவரின் பேச்சை தடை செய்யாதீர்கள். தெரிந்த நிகழ்வாயிருந்தால் முடிவில் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். அவர் மனம் நோகாமல் இதமாகக் கூறுங்கள். உங்களுக்கு தெரியாத விஷயமாக இருந்தாலும் முடிவில் சந்தேகங்களை கூறி விளக்கம் பெறுங்கள்.
இது உங்களுக்கும் அவருக்குமிடையில் நல்ல சுமூகமான உறவை ஏற்படுத்தும், மேம்படுத்தும். உங்கள் செயல் உங்கள் பண்பின் தன்மைதனை உயர்த்தும். இந்த பண்பு பலவகையில் உங்கள் வாழ்வை வளப்படுத்தும். சந்தோஷிக்க வைக்கும்.
இந்த உலகை திருத்த முயலாதீர். முதலில் நீங்கள் திருந்துங்கள். நாம் நடக்கும் பாதை கரடுமுரடானது என்றால் நம் வசதியால் அந்த பாதையை சீர் செய்ய நினைப்பதைவிட முதலில் நம் கால்களுக்கு பாதுகாப்பு செய்வதே சிறப்பு. பாதைக்கு தோலிடுவதைவிட பாதத்திற்கு தோலிட்டுக்கொள். வாழ்வதற்கு ஏற்ற உலகமாக மாற்ற முதலில் நாம் நம்மை மாற்றிக் கொள்ள வெண்டும். அதிகமான கர்வம் உடைய நாம் என்ற நினைவு நம்மை நம் திறமையை அழித்துக் கொன்றுவிடும்.
பீமனின் வலிமையினால் ஏற்பட்ட கர்வத்தை, அனுமன் போக்கியதாக புராணங்களில் அறிகிறோம். இந்தக்கர்வம் ஓர் மத மதப்பானது. இந்த மதம் ஒருவருக்கு வேண்டாத ஒன்று என இந்துமதம் சாஸ்திரங்கள், புராணங்கள் வாயிலாக அறிவுறுத்துகின்றன.
ஒருவனுக்கு நிறைய வசதிகள் இருக்கலாம். பசி எடுத்தபோது உண்ணாமலிருக்கப் பழக வேண்டும். அது நம்மைச்சுற்றி இயங்கும் இயக்கத்தில் இயங்காமை ஆகி, யோகத்தன்மை கிட்டும். பதவி வரும்போது அதைத்தூக்கி எறியும் எண்ணங்களின் தைரியம் வேண்டும். நமது எண்ணங்களை அடக்க முடியும் என்பதே யோகமாகும்.
எனக்கு வேண்டும் என எதற்கும் அலைந்து திரிதல் கூடாது. நம்மைவிடத் தாழ்ந்தவர்கள், அவர்களை உயர்வாக கருதும்போது அது தெரிந்து சிரித்து ஒதுங்குவது உயர்ந்தவர்களுக்கு யோகமாகும். ஒர் செயலை பார்த்தவுடன் மோசம், சரியில்லை, தீங்கானது என கண்டுகொள்கிறவனே யோகி.
எந்தச் செயல்களுக்கான எண்ணங்களாயிருந்தாலும் அதன் முடிவில் நான் என்ன ஆவேன்! எனக்கு என்ன பலன்! என்று நினையாமல் முழுத் திறமையுடன் செயல்பட்டால், ஆதாயம் இன்றி வாழ்க்கையின் நோக்கம் அமைந்தால் உங்கள் செயல்களின் முடிவில் நீங்கள் பெருமைக்கு உரியவராகிவிடுவீர்!
காந்தியடிகள் தனக்கு பெருமை சேரும் என நினைத்து எதையும் செய்யவில்லை. பொது நலன்கருதி அவர் போரட்டங்கள் நடத்தி வெற்றி பெற்றார். பெருமை அடைந்தார். உங்களைச் சுற்றியுள்ள சூழலை கவனித்தால் உங்களால் என்ன செய்யமுடியும் என்பதை உணர்வீர்.
உங்கள்முன் உங்களால் செய்யக்கூடிய ஆயிரம் விஷயங்கள் தெரியவரும். அவைகளில் கவனம் செலுத்தி செயல்படத் தொடங்கினால் நீங்கள் பிரகாசிப்பீர்கள்! ஓர்நாள் வீட்டளவில், பிரிதொருநாள் ஊரளவில், மற்றொருநாள் உலகலவில் என்று உயர்வடைவீர்!
தெளிவுடன் யோசித்தால் ஓர் ஆன்மா கர்வம் அடைய எதுவுமே இல்லை என்பது புரியும். உலகத்தில் உன்னைக்கேட்டு எதுவும் நடக்கவில்லை. நடக்கும் நிகழ்வுகளில் நீ பங்கு கொள்கிறாய். நீ கலந்து கொள்ளாவிடினும் நடப்பது நிச்சயம் நடக்கும். இதில் நீ, நான், எனக்கு என்பதெல்லாம் ஒன்றுமில்லை. ஆம் ஒன்றுமேயில்லை.
எல்லோரையும் விட தானே உயர்ந்தவன் என எப்போதும் நினைவுகளை கொண்டிருந்த மாணவன் ஒரு நாள் தன் ஆசிரியரைப் பார்க்க சென்றான். அவன் வந்தது அறிந்தும் கவனியாததுபோல் மேஜைமேல் சில மனித மண்டை ஒடுகளை வைத்து அவைகளை தீவிரமாக ஆரய்ந்து கொண்டிருந்தார். நீண்ட நேரம் ஆனதால் எரிச்சலுற்ற மாணவன் ஐயா நான் வந்துள்ளேன். பார்த்தும் பார்க்காதுபோல் இருக்கின்றீர்களே என வருந்தினான்.
அதற்கு ஆசிரியர், அன்பனே இங்கிருக்கும் மண்டை ஓடுகள் எல்லாம் அவர்கள் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர்களுடையது. இதில் உனது தந்தையுடையது எது என்று தேடிக் கொண்டிருக்கின்றேன் என்றார்.
மாணவனுக்கு அப்போதுதான் உண்மை புரிந்தது. தான் இன்று எப்படியிருந்தாலும் ஒருநாள் இதைப் போன்றே யார் என அறியா நிலை ஏற்படும் எனத் தெளிந்தான். அவனின் தான் என்ற செருக்கு, ஆணவம் ஒழிந்தது.
ஆத்மாக்களே இவ்வுலகில் எதுவும் உங்களுடையதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதுவே ஆனந்த பயனத்தின் முதல்படி.
‘என்னுடையது’ என்ற நினைவுகள் இருக்கும்வரை எதையும் விட்டுக் கொடுக்க நீங்கள் விரும்பவில்லை என்றாகும். அப்படி எதுவும் என்னுடையது அல்ல, இயற்கையிலிருந்து, இறைவனிடமிருந்து பெறப்பட்டது என்ற பக்குவம் வரும்போது, உங்களிடம் இருப்பது எல்லாம் பொதுவாகிப் போனதால், விட்டுக்கொடுக்க உங்களிடம் ஏதும் இருக்காது. மனம் தெளிவாக குழப்பமின்றி அமைதியாக எதையும் எதிர் நோக்கும்.
கீதா உபதேசத்தைவிட சிறப்பு என்னவெனில், தேரில் அமர்ந்து பவனிவர எல்லோருக்கும் நன்றாயிருக்கும், ஆனால் பாரத போரின் செயல் கர்மங்களை நிகழவைக்க அருளாளன் கண்ணபிரான் எல்லாம் விட்டு எளிமையாக, அமைதியாக தேரோட்டியாக அமர்ந்து கொண்ட பணிவு என்ற பண்பு நம் அனைவருக்கும் வேண்டும். அந்த பணிவு கொண்டதனால் அவர் எப்படி பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடித்தந்தார் எனப்புராணம் வாயிலாக அறியலாம்-குருஸ்ரீ பகோரா.