அனுபவ-அறிவுப் பூக்கள்!
ஆன்மாக்கள் நல்ல விஷயங்களைக் கேட்கின்றன. படிக்கின்றன. ஆனால் அதன் சாதக பலன்களைப் புரிந்து விஷயங்களின் தன்மை உணர்ந்து பார்ப்பது இல்லை. அந்த படித்த, பார்த்த, கேட்ட நிகழ்வுகளை மறந்து ஒதுக்கி விடுகின்றனர். அவ்வாறு செய்யாமல் பார்த்த, கேட்ட, படித்த விஷயங்களின் பலன்களை கண்டு அதை நம் வாழ்வில் சிறிதளவேனும் உபயோகிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டால் இந்த விஷயம் பின் ஒருநாள் நம் செயலுக்கு வழிகாட்டியாய் உதவும்.
இதைத்தான் நாம் அனுபவ அறிவு என்கிறோம். நாம் அனுபவித்த அனுபவமட்டுமில்லை, நாம் பார்த்து கேட்டு உணர்ந்த அனுபவம்.
வாழ்வில் உணர்வு, உணர்ச்சி முக்கியம். ஆனால் அறிவுதான் உணர்ச்சியை கூட்டிக்கொண்டு வழி நடத்திச் செல்ல வேண்டும். உணர்ச்சி வயப்பட்டால் அறிவின் வழி புரியாது. சரித்திரம், பூகோளம், அறிவியல், கலை, கணிதம், விஞ்ஞானம் போன்ற உலக விபரங்களைத் தெரிந்துகொள்ளும் அறிவு ‘அபரவித்யா’ எனப்படும். வாழ்வில் தொழில், வேலைவாய்ப்பு என்பதற்காக இவைகளைப்பற்றி நாம் பள்ளி, கல்லூரிகளில் கற்று தேர்வு அடைகிறோம்.
வாழ்க்கைப் பயணத்தில் நாம் சந்தோஷ வெற்றியடைய வேறு நிலை அறிவு வேண்டியதாய் உள்ளது. வாழ்வில் ஏமாற்றங்களை சந்தித்து சமாளிப்பது எப்படி, ஏற்படும் சங்கடங்களை எப்படி போக்கிக்கொள்வது, சோதனைகளை எப்படித் தாண்டுவது, செயல்களில் தோன்றும் தோல்விகளிலிருந்து வெற்றியை அடைவது எப்படி என்பது போன்ற பல்வேறு உயர் நிலை பிரச்சனைகளைப் பற்றிய அறிவை பெறுதல் ‘பரவித்யா’ என மனுதர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. முடிவில் இந்த அறிவுதான் ஆத்மா புண்ணிய நிலையான முக்தியடையும் வழிகளை நாம் உணர்ந்துகொள்ள உதவுகிறது..
நாம்போய் சேரவேண்டிய இடத்தின் வழி தெரியாமல் தவிக்கும் நாம், பொதுவாக அதை தெரிந்து கொள்ள முயலுவதில்லை. முடிவான இடம் எது என்பதை புரிந்து கொள்ளுங்கள். வழிமுறைகளைத்தேடி தெரிந்து கொள்ள விருப்பப்படும்போது இதுதான் சரியானவழி எனக்கூற அனுபவஸ்தர்களில்லை.
தெரிந்தவர்கள் முன்வரும்போது தங்களுக்கு தெரிந்த வழிகளைத்தான் கூறுவார்கள். அது அனுபவப்பட்டு கூறிய வழியாக இருப்பதில்லை. உண்மையான அனுபவ அறிவு பெற்றவர்கள் அதைப்பற்றி பேசுவதில்லை. மனம் எனும் குதிரையை, அறிவு எனும் கடிவாளம் போட்டு அடக்கி கோபத்தைக் கைவிடு, உன்னுள்ளே தெளிவு தானே வரும்.
உற்று நோக்குங்கள். கூர்ந்து கவனியுங்கள். உங்களைச்சுற்றி, உங்கள் சம்பந்தப் பட்டவர்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என ஆழ்ந்து கவனியுங்கள். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் வழி உள்ளும் வெளியும் நடக்கும் நிகழ்வுகளை கவனியுங்கள். பல ஆயிரக்கனக்காண நிகழ்வுகளில் சில உங்களுக்குப் புரியும். ஏன் எப்படி என்ற கேள்வியுடன் உற்று நோக்குங்கள்.
கூர்ந்து கவனித்து அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அந்த நிகழ்வின் சாதக பாதகங்கள் புரியவரும் அது ஓர் அனுபவத்தை உங்களுக்குள் ஏற்படுத்தும். சுகத்தின்மேல் அமர்ந்துதான் துக்கம் வரும் என்பது அனுபவ அறிவு.
ஒவ்வொரு நிகழ்விற்கும் உங்கள் கவனத்தினால் ஆழமான ஓர் புதிய அனுபவம் மனதில் படரும். இனிமையான ஆந்த அனுபவம் ஓர் சூழலில் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ, நண்பர்களுக்கோ அவர்களின் செயலுக்கு உதவும். அந்தச் செயல் வெற்றிபெற இன்னுமொரு அனுபவம் உதவிபுரியும், இந்த உற்று நோக்குதலால் கிரகித்த அனுபவ அறிவுவால் மற்றவர்களைவிட உங்கள் செயல்பாடுகள் சிறப்படையும். உங்களின் இந்த தனித்தன்மை, முக்கியத்துவத்தை உங்களின் சொல்லுக்கு, முடிவுக்கு முதலிடம், என முதன்மைபடுத்தப் படுவது உங்களுக்கு சிறப்பு.
பெற்றோர்கள் தங்கள் மகளுக்கு மணமுடிக்க வரன் பார்த்தனர். ஒரு இளைஞனை தேர்வு செய்தனர். அந்தபெண் எல்லோரிலும் சிறந்தவன், உயர்ந்தவனைத்தான் மணந்து கொள்வேன் என கூறிவிட்டாள். அப்படி ஒருவனைத் தேடமுற்பட்டாள். அரசன் பல்லக்கில் வர அவனே உயர்ந்தவன் என நினைத்தபோது, அரசன் பல்லக்கிலிருந்து இறங்கி அவ்வழிவந்த துறவியை வணங்க, துறவியே சிறந்தவன் என நினைத்து அவரைத் தொடர்ந்தாள். வழியில் ஆலமரத்தடியில் இருந்த பிள்ளையாரை துறவி வணங்க, பிள்ளையாரே உயர்ந்தவர் என நினைத்தாள்.
அப்போது அவ்வழி வந்த ஓர் நாய் சிலைமீது காலத்தூக்கி சிறுநீர் கழிக்க, பிள்ளையாரை விட தெருநாய் உயர்வா என சிந்திக்க, அந்த நாயை ஒரு சிறுவன் கல்லெடுத்து அடிக்க, அச்சிறுவன் சிறந்தவனா என யோசிக்கும் போது, ‘நாயை ஏன் அடித்தாய்’ என ஓர் இளைஞன் அச்சிறுவனை மிரட்ட, சிறுவன், ‘இனிமேல் இது போன்று செய்ய மாட்டேன்’ எனக்கூறி ஓட, அந்த இளைஞனே சிறந்தவன் என முடிவு கொண்டாள்.
அரசன்- துறவி- பிள்ளையார்- நாய்- சிறுவன்- இளஞன் என முடிவு கொள்ள ஓர் ஆரய்ச்சி அனுபம் அவளுக்கு கிடைத்தது. அவளின் பெற்றோரிடம் அந்த இளைஞனை மணந்து கொள்வதாகக் கூறினாள். பெற்றோர்கள் தங்கள் அனுபவதால் அந்த இளஞனைத்தான் அவளுக்கு மணமகனாக தெரிவு செய்திருந்தினர். ஆக அனுபவத்தின் முடிவு ஒன்றாகவே சரியாக இருக்க வாய்ப்புண்டு. அனுபவ அறிவின் கூற்றுகளை செவி கொடுத்து கேட்டு செயல் படுங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள். எப்படி வெற்றி பெற்றவருக்கு பரிசுகள் மட்டுமல்லாமல் சிறப்பு பாரட்டுகள் கிடைக்கின்றன்வோ, அது போன்றே வாழ்வில் போராடி அனுபவங்களைப் பயன்படுத்தி வென்றவனுக்கும் மகிழ்வும் பெருமையும் உண்டு-குருஸ்ரீ பகோரா.