தியானப் பூக்கள்!
உடலில் உயிர் இருக்கும்வரை ஆன்மா செயல்படுகின்றது. ஆன்மாவிற்கு உதவியாக உயிர், உடல், உடலின் ஐம்புலன்கள் செயல்பட்டு ஆன்மாவின் பயணம் இனிதே நடக்கின்றது. புலன்களைக் கட்டுப்படுத்த நாம் பழகிக் கொள்ள வேண்டும், அந்த கட்டுப் படுத்துதல் மனதில் சிறந்த எண்ணங்களை தோற்றுவித்து நாம் நன்கு செயல்பட உதவும்.
புலன்களின் ஒன்றின் சிறப்பு மற்றொன்றுக்கு இல்லை. பார்க்கும் திறன் கண்ணுக்குத் தவிர, பேசும் திறன் நாவிற்குத் தவிர, கேட்கும்திறன் காதிற்குத் தவிர, நுகரும் திறன் நாசிக்குத் தவிர வேறு புலன்களுக்கு கிடையாது. புலன்கள் என்ற வகையில் ஒன்றாகினும், ஒரே உயிர், உடலுக்கு உட்பட்டவையாக இருந்தாலும் அதனதன் செயல்பாடுகள் வேறு வேறு.
ஆனால் எல்லா புலன்களும், இல்லாத மனதின் எண்ணங்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட்டால் நலம். பார்க்கக்கூடாது என மனம் நினைத்ததைப் பார்த்தாலும், கேட்கக்கூடாது என நினைத்ததைக் கேட்டாலும், பேசக்கூடாது என நினைத்ததைப் பேசினாலும், நுகரக்கூடாதது என மனம் நினைத்ததை நுகர்ந்தாலும், உணரக்கூடாத உணர்வுகளை உணர்தலும்கூட உடலும், உயிரும், ஆன்மாவும் மாறுபட்ட வழியில் சென்று கர்மத்தின் பலாபலன்களைச் சந்திக்கும். எனவே புலன்களின் செயல்பாடுகள் சிறப்பாக, நாம் நம்மை செம்மை படுத்திக் கொள்ள வேண்டும்.
நம் மனம் வேண்டாம் என்று சொன்னால் எந்தவித சலனமின்றி அந்த செயலை அந்தந்த புலன்கள் செய்யாமல் இருக்க நாம் நம் புலன்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அதற்குரிய பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதையும் மீறி எதிர்பாராமல் புலன்கள் சிறிதளவு இயங்கினாலும் அதை மனமும், புத்தியும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. இன்று ஓர் நாள் மட்டும் என புலன்களின் போக்கிற்கு மனம் ஒத்துப் போகாமல் செயல்பட வேண்டும். அதற்காக தக்கமுறையில் மனதிற்குச் சிறப்பான பயிற்சி அளிக்க வேண்டும். எந்த சலனத்தையும் எதிர் கொள்ளும் திறனை வளர்த்து கொள்ளல் வேண்டும். சலனங்களின் பாதிப்பு சிந்தையை கலங்காமல் இருக்கவும், செயல்படவும் பயிற்சிகள் கொள்ள வேண்டும்.
பயிற்சிகளில் தியானம் ஓர் சிறந்த முறையாகும். சிறந்த தியானத்தின் மூலமாக நாம் ‘பரிக்ரஹ சக்தி ’ என்ற ‘ குண்டலினி ’ சக்தியை பெறமுடியும். ஆனந்தமாயமான சுதந்திரத்தை ஆன்மா அடையும். தியானம் மனதின் ரகசியங்களை உங்களுக்கு புரியவைத்து மனதை கட்டுப்படுத்தும் ஆற்றலை புத்திக்கு அளிக்கும்.
புலன்கள் கட்டுப்பட, நமது மனம் கட்டுப்பாடுடையதாக இருக்கவேண்டும். நமது கவனம் அங்கும் இங்குமாக சிதறி, நம் மனோசக்திதனை வீனடித்துவிடாமல் இருக்க, ஓர் ஒழுங்கு நிலைக்கு மனதைக் கொண்டுவர வேண்டும். மனதை கட்டுபடுத்தும் ஆற்றலை ‘ஆத்மவினிக்ரஹம்’ என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகின்றது. அதற்கு மனதை ஓருமுகப்படுத்துதல் முக்கியம். அப்போதுதான் மனதின் சக்திகள் புரியவரும். மன அழுத்தம் ஏற்படும் செயல்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்கமுடியும். நல்ல நினைவுகளுடன் செயல்களை திறம்பட காலவிரையமின்றி செய்து வெற்றி காண்பீர்! அதற்கு பிடித்த இறைவனின் நாமங்களை செல்லிச்சொல்லியோ, அல்லது தியானப்பயிற்சி மூலமாகவோ மனதை ஓர்முனைப்படுத்த முயற்சிக்கலாம்.
தியானம் என்பது கடவுளைத் தேடுவதற்காக அல்ல. உங்களை உங்களுக்குள் தேடும் ஓர் எளிய பயிற்சியாகும். வெளியே தேடி வேதனையடைதலை விடுத்து, உனக்குள் தேடி நிம்மதி அடைவீர். தியானம் பரிசுத்தமானது. மனதில் அழுக்குடன் தியானம் மேற்கொள்ள முடியாது. நன்னடத்தையை அஸ்திவாரமாக கொண்ட தியானமே, அன்பையும், அமைதியையும் தரும்.
நாம் ஒவ்வொருவரின் மூச்சும் ‘சுபசரமாக’ இருத்தல் வேண்டும். அவசரமாக இருக்கக்கூடாது. சரம்- என்றால் மூச்சு, இயக்கம் எனப்படும். ஒழுங்கு முறையற்றுத் தாறுமாறாக விரைந்தோடி திரியும் நமது மூச்சின் இயக்கத்தை ‘அவசரம்’ எனலாம். நம் பெரியவர்கள் அதனால்தான், என்னடா அவசரம், நின்று நிதானமாகச் செயல்படு எனக்கூறியுள்ளனர். அதேபோல ஒழுங்குமுறை தவறாமல் நிதானமாகப் பரப்பரப்பின்றி நிகழும் மூச்சினை ‘சுபசரம்’ எனலாம்.
மூச்சின் ஒழுங்கற்ற இயக்கத்தினால் புத்தியின் ஆற்றல் குறைகின்றது. புத்தியின் ஆற்றல் குறைந்தால் நமது செயலாற்றும் திறனும் குறைந்து விடும். மனதின் பரப்பரப்பு மூச்சின் இயக்கத்தை பெருமளவு பாதிக்கின்றது. மனம் கலங்குகின்றது. மனம் பரப்பரப்பின்றி இருக்கும்போது நிதானமான மூச்சின் ஒழுங்கான இயக்கம் நமது உடலுக்கு முறையான ஆக்ஸிசனை கொண்டு சென்று நமது மூளையின் ஆற்றலை அதிகரிக்கின்றது. நமது செயல்திறன் அதிகரிக்கின்றது. தியானம் மூலம் மூச்சை சீராக்கலாம்.
“சுவாச சஞ்சலமாதலால் என் மதிநிலை கெடாமல் அருள் தாராய்” என அருணகிரியார் கூறுகின்றார். ‘அவசரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்ற பழமொழியும் இதையே உணர்த்துகின்றது.
சர்வ சக்தியுடைய பரம்பொருளை தியானத்தால் உங்களுள்ளே புகச்செய்து, உங்களது செயல்களையெல்லாம் தேவர்கள் செயல் போன்று வெற்றியடைய இயங்க முற்படுங்கள்-குருஸ்ரீ பகோரா.