ஓம்நமசிவய!
மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!
&&&&&
சப்தமி திதி!
திதிக்குரிய விநாயகர்--சித்தி கணபதி, சூரியனுக்குகந்த நளான இன்று பாயாச நெய்வேத்தியம். வில்வ ஆகாரம் செய்யவும். கார்த்திகை சுக்ல சப்தமியில் விரதத்தை துவங்கலாம். நான்கு மாதம் அனுஷ்டிக்க வேண்டும். மாசி சப்தமி- விசேஷ பலன்களைத் தரும். வளார்பிறை சப்தமியிலோ அல்லது சங்கராந்தி கிரகணம் முடிந்த பிறகோ விரதத்தை தொடங்கி அக்னியை சூரிய ஜோதியாக பாவித்து ஹோமம் செய்யவும். 12 மாதங்களில் 12 ஆதித்தியர்களைப் பூஜை செய்தால் வருடம் முழுவதும் சூரியனைப் பூஜித்த பலன், சூரியனுக்கு பூஜை- ரதசப்தமி- மாசிமாத சுக்ல பக்ஷ பஞ்சமியன்று ஒரு பொழுது விரதமிருந்து மறுநாள் சஷ்டியன்று இரவு ஒரு வேளை மட்டும் உணவு உண்டு, அடுத்த நாள் சப்தமியன்று பாரணை செய்து சூரிய நாராயணருக்கு பூஜை செய்து எளியோர்க்கு உணவு அளித்திடல் வேண்டும்.
சப்தமிவிரத பலன்- தட்சனின் பெண்களில் திதி, அதிதி என்ற இருவரை காஸ்யபருக்கு மணம் செய்து கொடுத்தார். திருமணம் நடந்து முடிந்தபின் ஒரு பெரிய முட்டை- அண்டம் உண்டானது. பல நாட்கள் ஆனபின்னும் எந்த உயிரும் தோன்றவில்லை. முட்டை கெட்டுவிட்டது என அதிதி காஸ்யபரிடம் சொல்ல முட்டை-அண்டம் இறக்கவில்லை மிருதா என்றார் காஸ்யபர். அவரின் வாக்கு சத்ய வாக்கு. முட்டையை உடைத்துக் கொண்டு உயிர் ஜனித்தது. மிருத்தா, அண்டம் என்ற இரு வார்த்தைகளை அடக்கி மார்த்தாண்டன் எனப் பெயர் வைத்தார். இந்த மார்த்தாண்டனே சூரியன், பரிதி, பகலவன், கதிரவன், ஒளிக்கடவுள். அந்த நாளே சப்தமி.
தேவ சிற்பி விஸ்வகர்மாவின் மகள் சம்க்ஞா சூரியனின் மனைவியானாள். யமன், யமுனை, சாவர்ணிமனு என 3 குழந்தைகள் பிறந்தன. சூரியனின் வெப்பத்தை தாங்கமுடியாமல் சம்க்ஞா தன் கண்களை மூட அதை அவமதிப்பாக கருதிய சூரியன் உலகில் பிறப்பவர்கள் இறப்பதற்கு காரணமான ஒருவனை பெறுவாய் எனச் சாபம் தந்தான். யமன் பிறந்து. காலதேவனானான். இதனால் பயந்த சம்க்ஞா தன் கண்களை மூடிக் கொள்ளாமல் மூடி மூடித் திறந்ததனால் ஒரிடத்தில் நில்லாமல் ஓடும் நதியான யமுனையை பெற்றாள் சூரியனின் அன்பு பேரொளியாக இருந்ததால் தொடர்ந்து மெல்லியான சம்க்ஞாவில் தாங்க முடியவில்லை. தான் கருகி விடுவோம் எனப் பயந்த சம்க்ஞா தன்னைபோல தன் நிழலில் சாயா என்ற பெண்ணைத் தோற்றுவித்து தன் தந்தையிடம் சென்று விட்டாள். இந்த ரகசியத்தை சூரியன் கண்டு பிடிக்கும் வரை யாரிடமும் சொல்ல மாட்டேன் என சாயா உறுதி அளித்தாள்
சாயாவை தன் மனைவியாக நினைத்து சூரியன் பழக அவளுக்கு க்ருதச்ரவா-சனி க்ருதசர்மா-சாவர்ணுமனு, தபதி, விஷ்டி என்று 4 குழந்தைகள் பிறந்தன. சாயாவுக்கு தனக்கென குழந்தைகள் பிறந்ததும் அவளின் செயல்களில் மாற்றம் கொண்டாள். இரு பெண் குழந்தைகளுக்கும் சண்டைவர இருவரும் ஒருவரை ஒருவர் நதியாகப் போக சாபமிட்டனர். தன் மகள் தபதி நதியாக மாற சாபமிட்ட யமுனையை பழிதீர்க்க எண்ணி அண்ணன் யமனை துன்புறுத்த அவன் அவளை உதைக்க காலைத்தூக்க தூக்கிய காலை தரையில் வைத்ததும் புழுக்களும் கிருமிகளும் உன் காலை கபளீகரம் செய்யும் என சாபமிட்டாள் சாயா. தன் தாயாக இருப்பவரின் மாற்றத்தைக் கூறி தான் தாயை உதைக்க காலைத் தூக்கியதற்காக வருத்தப்பட்டு, தாய் தன்னை சபித்ததை தந்தையிடம் கூரினார். யமனே. தாயிட்ட சாபத்தை மாற்றமுடியாது என்றாலும் உன் கால்களை கிருமிகளும் புழுக்களும் கபளீகாரம் செய்து அழுகாமல் இருக்க வரம் தந்தார் சூரியன்.
பின்னர் உண்மையைச் சொல் என மனைவியிடம் கேட்க அவள் உன்மையை மறைவின்றி கூறிவிட்டாள். தன் மாமனார் தேவ சிற்பி விஸ்வகர்மாவிடம் சென்று தன் மனைவி தன் வெப்பம் தாங்காமல் தன்னை விட்டுப் பிரிந்தது அறிந்து அது பற்றி ஆலோசனை நடத்தினார். சூரியனுடன் தன் மகள் வாழ வேண்டும் என்பதற்காக விஸ்வகர்மா சூரியமண்டலத்தை தன் சாணைச் சக்கரத்தில் வைத்து தேய்த்து சூரியனின் தேஜஸில் எட்டில் ஒரு பங்கை குறைத்து சில மாற்றங்களை செய்து. அவரின் வெப்பத்தைக் குறைத்தார். அப்படிக் குறைத்த சூரிய மண்டலத்திலிருந்து விஷ்ணுவிற்கு சக்கரத்தையும், சிவனுக்கு சூலத்தையும், சுப்ரமணியருக்கு வேலையும் குபேரனுக்கு சிபிகை ஆயுதத்தையும் செய்து கொடுத்தார்.
தந்தை வீட்டில் தொடர்ந்து இருக்க தந்தை சந்தேகப்படுவதை அறிந்த சம்க்ஞா வீட்டை விட்டு வெளியேறி குதிரை உருக்கொண்டு வனத்தில் சுற்றிக் கொண்டிருந்தாள் என்பதை அறிந்து தானும் குதிரை வடிவு கொண்டு அங்கு சென்று அவளை சந்தித்தான். மனைவியை சமாதானப் படுத்தினார். அப்போது அவர்களுக்குப் பிறந்தவர்களே அஸ்வினி குமாரர்கள் எனப்படும் தேவருலக மருத்துவர்கள். இவர்களே மகாபாரத பஞ்ச பாண்டவர்களில் நகுல சகாதேவர்களின் தந்தையர் ஆவார்கள்.
சூரியன் தன் மனைவி சம்க்ஞாவை சந்தித்ததும் மீண்டும் குடும்பம் நடத்த தொடங்கியதும் இந்த சப்தமி திதியன்றுதான்.
சத்ராஜித் என்பவன் சூரிய பகவானை பூஜை செய்ய ஸ்யமந்தக மணி சூரிய பிரசாதமாகக் கிடைத்தது. சத்ராஜித்தின் தம்பி அந்த மணியை அணிந்து காட்டிற்குச் சென்றான். காட்டில் அவன் சிங்கத்தால் கொல்லப்பட அந்தச் சிங்கம் ஒரு கரடியினால் கொல்லப்பட ஸ்யமந்தக மணி கரடி வசமானது. பகை காரணமாக தன்தம்பியைக் கொன்று மணியை கிருஷ்ணன் திருடி விட்டார் என சத்ராஜித் புகார் சொல்ல அந்த அபவாதத்திலிருந்து தப்பிக்க கிருஷ்ணன் காட்டிற்குச் சென்று அந்த மணியைத் தேட ஆரம்பித்தார். கரடி குகையைக் கண்டு அங்கு சென்று கரடியைக் கொல்லும்போது அது ராமா என அலற அந்தக் கரடி சாதாரணக் கரடியல்ல .தன் ராமா அவதாரத்தின்போது உதவி செய்த ஜாம்பவான் எனப் புரிந்து கொண்டார். கரடியும் கிருஷ்ணரின் ஸ்பரிசத்தால் புரிந்து கொண்டு ஸ்யமந்தக மணியைக் கொடுத்து தன் மகள் ஜாம்பவியை கிருஷ்ணருக்கு மணம் முடித்து கொடுத்தார். நாடு திரும்பிய கிருஷ்ணர் ஸ்யமந்தக மணியை சத்ராஜிடம் கொடுக்க அவர் அம்மணியை கிருஷ்ணரிடம் கொடுத்து தன் மகள் சத்ய பாமாவை திருமணம் செய்வித்தான். கிருஷ்ணன் ஜாம்பவதிக்குப் பிறந்தவன் சாம்பன்.
சாம்பன் தன் தந்தையை நோக்கி, எந்த தெய்வத்தை வணங்கினால் நினைத்த பலன்கள் கிடைக்கும், உலகில் உள்ள ஐஸ்வர்யங்களை எப்வாறு துக்கமின்றி பெறலாம், வரக்கூடிய இடர்களை எவ்வறு தவிர்க்கலாம், நோயால் அவதிப்படுவதைக் கண்டால் வாழ்க்கையே வேண்டாம் எனத்தோன்றுகின்றது இகத்தில் பொன்னும் பரத்தில் முக்தியும் பெற வழி என்ன! என்று பல கேள்விகளைக் கேட்க, கிருஷ்ணர் தெய்வத்தை ஆராதனை செய்வதே கஷ்டங்களை குறைத்து பின் விளைவுகளைத் தவிர்க்க முடியும் என்றார், தெய்வங்களை மனதால் மட்டுமே உணர முடியும்.
பிரத்யட்ச தெய்வம் எல்லோருக்கும் கண்கண்ட தெய்வம் சூரிய நாராயணன். இந்த உலகம் நேரில் பார்க்கும் பெரிய தெய்வம் அவர். அவர் உதயமானால் உலகம் விழித்திருக்கும். அவர் மறைந்தால் உலகம் அஸ்தமித்து இருளில் மூழ்கும். சத்ய, த்ரேதா, த்வாபர, கலி என்ற நான்கு யுகங்களும் இவரின் கணக்கு. கிரகங்கள், நட்சத்திரங்கள், யோகம், கரணம், ராசி, ஆதித்யன், ருதுக்கள், வசு, வாயு, அக்னி, அசுவினி குமாரர்கள், இந்திரன், பிரஜாபதி, திசைகள் எல்லாம் அவரால்தான் இயக்கம் பெறுகின்றது. அந்தச் சூரியனுக்குகந்த நாள் சப்தமி.
12 ஆதித்தியர்கள். மாசிசப்தமி-வருணன், பங்குனி-சூரியன், சித்திரை-விசாகன், வைகாசி-தாதா, ஆனி-இந்திரன், ஆஷாட-ஆடி-ரவி, ஆவணி-நபு, புரட்டாசி-யமன், ஐப்பசி-பர்ஜயன், கார்த்திகை-த்விஷ்டா, மார்கழி-மித்ரன், தை-விஷ்ணு.
சூரிய ரதத்திற்கு ஒரே சக்கரம்- காலச்சக்கரம்
மூன்று நாபிகள்
நடுப்பகுதி- குடம்
மூன்று மேகலைகள்- காலை, நடுப்பகல், பிற்பகல்
வெளிவட்டம் 6 சுற்றுக் கட்டைகள்-6 ருதுக்கள்- வசந்தருது-பழுப்பு நிறம், க்ரீஷ்மருது-பொன்நிறம், வர்ஷருது-வெள்ளைநிறம், சரத்ருது-கருமை நிறம், ஹேமந்த ருது-தாமிரவர்ணம், சிசிர ருது-சிவப்புநிறம்- இந்த நிறங்கள் மழை பொழிவின் விளைவைக் காட்டும்.
வருணன் தேரோட்டி
ஏழு குதிரைகள்- காயத்ரி, பிருஹதி உஷ்னிக், ஜகதி, திருஷ்டிப், அனுஷ்டுப், பங்கதி என்ற எழு சத்தங்கள்
தேவர்கள் தங்களது தேஜஸை சூரியனிடமிருந்து பெறுகின்றனர். உதயத்தில் இந்திரன் பூஜை செய்ய, மதியத்தில் யமன் பூஜை செய்ய, அஸ்தமனத்தில் வருணன் பூஜை செய்ய, இரவில் சந்திரன் பூஜை செய்கின்றார்கள்.
சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும். சுக்ல பட்சத்தில் சந்திரனின் கிரணங்கள் விருத்தியடைவதற்கும் கிருஷ்ணபட்சத்தில் சந்திரன் கிரணங்கள் தேய்வடைவதற்கும் காரணம் சூரியனின் சக்தி ஆதாரம். சந்திரன் மூலம் சிருஷ்டி தழைத்து பெருகுவதால்தான் மூலிகைச் செடிகளும் மருந்துவ செடிகளும் வளர்கின்றது. தாணியங்கள், உணவுப் பொருட்கள், காய் கறிகள் கிடைக்கின்றன.
கிரியா யோகத்தின் மூலம் சூரியனின் அருளைப் பெறலாம். மனதில் சூரியனை நினைத்து, பஜனைசெய்து, பாடல்பாடி, பாராயணம் செய்து, ஆன்மாவிற்குள் சூரியன் இருப்பதாக நினைத்து நமஸ்காரம் செய்து, அன்று என்ன செய்தாலும் அது சூரியனுக்கு செய்வதாக நினைத்துச் செய்ய வேண்டும். எல்லாவற்றிலும் சூரியனைக் காண்பதே கிரியா யோகம்.
ஆதித்ய ஹ்ருதய விரதம்- சங்கராந்தி ஞாயிற்றுக் கிழமை வந்தால் அன்று அந்த விரதத்தை துவங்க வேண்டும். ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தைப் படித்து சூர்ய பூஜை செய்க. அஸ்தமந்ததிற்குப்பின் வேத வல்லுனருக்கு உணவு அளித்து உபசரிக்க. வெள்ளரிக்காய் கலந்த அன்னம் உண்டு தரையில் படுக்க. 108 நாட்கள் தொடர்ந்து செய்க. தினமும் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தைப் படிக்கலாம்.
போரில் மனம் தளர்ந்த இராமனிடம் அகத்தியர் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை சொல்லச் சொல்லி அவரின் கஷ்டங்களை தீர்க்க உதவினார்.
$$$$$