ஓம்நமசிவய!
மருப்பையொரு கைக்கொண்டு நாரையூர் மன்னும்
பொருப்பையடி போற்றத் துணிந்தால் - நெருப்பை
அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை
வருத்த எண்ணுகின்ற மலம்!
&&&&&
அஷ்டமி திதி!
திதிக்குரிய விநாயகர்- உச்சிஷ்ட கணபதி, பருப்பு பொடிப்போன்ற சாதம்-- அந்தகன் அசுரன் அழிவிற்கு காரணமான எட்டு மாதர்கள் தோன்றிய நாள். அவர்களுக்காக அம்பாள் அந்தகனுடன் போர் புரிந்து வெற்றி பெற்ற நாள். அஷ்ட மாதர்களை பூஜிப்பது விசேஷம்.
பொதுவாக அஷ்டமி, திதி ஆகாது எனச் சொல்லுவர். நல்ல காரியத்திலிருந்து விலக்கிவிடுவர். இதனால் வருந்திய திதியின் தேவதை பிரம்மனிடம் சென்று முறையிட உலகம் போற்றும் அவதாரம் உன் திதியில்தான் நடைபெற இருக்கின்றன என அவர் ஆறுதல் கூறினார். அதன்படி கிருஷ்ணாவதாரம் அஷ்டமியில் நடக்க அது கோகுலாஷ்டமி என சிறப்புற்றது. ஆவணிமாதம் பௌர்ணமியை அடுத்து வரும் அஞ்டமி தினம் கிருஷ்ணர் பிறந்தநாள் கிருஷ்ணஜெயந்தி/ கோகுலாஷ்டமி நாளாகும். ஆகாதது என்றில்லை எதுவும் இப்பூமியில்
உமை விளையாட்டாக சிவபெருமானின் மூன்று கண்களையும் பொத்தியதால், உலகம் இருண்டது. அது ஒரு கணம் என்றாலும் உலகிற்கு ஒரு ஊழிக்காலமானது. அந்த காலத்தில் ஓர் அசுரன் உருவானான். இருளில் பிறந்து கரிய நிறம் உடையவனாக இருந்ததால் அவனுக்கு அந்தகன் என்று அழைக்கப்பட்டான். சிவனிடம் தான் பெற்ற வரங்களினால் அகந்தை கொண்டு அமரர்களைத் துன்புறத்த அவர்கள் சிவபெருமானிடம் முறையிட சிவகணங்களுக்கு ஆணையிட்டு அந்தகனை அழிக்கச் சொன்னார். சிவகணங்களால் அந்தகனை அழிக்க முடியவில்லை ஆதலால் பெருமானே போர் தொடுத்தார். தரையில் வீழ்ந்த அந்தகன் குருதியிலிருந்து ஆயிரக்கணக்கான அந்தகர்கள் தோன்றி யுத்தம் புரிந்தனர். அவ்வாறு தோன்றியவர்களைத் தம் சக்ரப்படையால் திருமால் கொன்றார்.
அந்தகன் உடம்பிலிருந்து விழும் குருதியினை தடுத்து நிறுத்த பெருமான் யோகேசுவரியை உண்டாக்க அவருள் சப்தமாதர் (பிராமி, மகேசுவரி, வைணவி, வராகி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டி) என்ற ஏழு சக்திகளும் உறைந்து அந்தகனின் இரத்தம் பூமியில் விழாமல் அழித்தது. சூல நுனியால் குத்தப்பட்டு துன்பமுற்ற அந்தகன் தன் பிழை பொறுக்க வேண்டியதால் அவனுக்கு சிவஞானத்தை அளித்து சிவகணத்தின் தலைவனாக்கினார்.
$$$$$