Print this page
செவ்வாய்க்கிழமை, 17 July 2018 16:24

பூமாதேவி!

Written by
Rate this item
(1 Vote)

ஓம்நமசிவய!

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!

####

பூமாதேவி!

பூமி என்கிற வசுந்தராவிற்கு உர்பி, இஜ்யை, க்ஷிதி, காசியபி, க்ஷௌணி, பவை, அனந்தை, விசுவாம், பிருத்வி என பலப் பெயர்கள் உண்டு.

தேவர்கள் அசுரர்களுக்கு அஞ்சி வாழ்ந்திருந்தாலும் தேவர்களின் கௌரவம் மற்றும் இறையருளும் மேலோங்கி இருப்பதன் காரணம் முனிவர்களும் யோகிகளும் செய்யும் ஹோமத்தில் தரப்படும் ஆகுதி என்ற அவிஸ்ஸே தேவர்களின் பலத்திற்கு காரணம் என்பதை அறிந்த இரண்யாட்சன் தேவர்களுக்கு அவிஸ் கிடைக்காமல் இருக்க என்னவழி என்று யோசித்து பூமியிருந்தால்தான் யாகங்கள் நடைபெற்று தேவர்களுக்கு அவிஸ் கிடைக்கின்றது. எனவே பூமியில்லையென்றால் தேவர்களுக்கு யாகம் நடந்து அவிஸ் கிடைக்காது என்று முடிவுசெய்து பூமியை பாயாகச் சுருட்டி பாதாள உலகத்தில் பதுக்கிவிட்டான். அவிஸ் கிடைக்காமல் துன்பமுற்ற தேவர்கள் பூமியைக் காணாததால் பிரம்மனிடம் முறையிட அவர் திருமாலிடம் சென்று வணங்கி தேவர்களின் துயரத்தை தெரிவித்தார்.

திருமால் வராக அவதாரமெடுத்து பாதாளாலோகம் சென்று இரண்யாட்சனுடன் போர் புரிந்து அவனைத் தன் கோரப்பற்களால் குத்தி கிழித்து பூமியை மீட்டு வந்தார். அசுர சம்ஹாரத்தினால் ஏற்பட்ட கோபம் தீராத வராக மூர்த்தியினால் கடல்வாழ் உயிரினங்கள் துன்பமடைந்தன. முனிவர்கள் கயிலைநாதனிடம் சொல்ல சிவன் தன் கைகளினால் வராகத்தின் கொம்புகளை உடைக்க அதன் ஆவேசம் அடங்கி ஸ்ரீ விஷ்ணுவாக மாறினார். புவிமகள் ஸ்ரீவிஷ்ணுவின் மனைவியானாள்.

வீடு கட்டும் போதும், கிணறு, ஏரி, குளம் வெட்டும் போதும் நிலத்தை பயிரிடும் முன்பும் பூமிதேவியை வணங்க விஷ்ணு அருள் வரம். முத்து, வைரம், மாணிக்கம், துளசி, மலர்கள், சிவலிங்கம், ஜபமாலை, சந்தனம், தீர்த்தம், சாளக்கிரமம், தீபம், யந்திரம், புத்தகம் சங்கு, ஆகியவற்றை நிலத்தின் மீது வைக்காமல் ஆசனத்தின்மீது வைக்க வேண்டும்.

”ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் கிலீம் வசுதாயை ஸ்வாஹா” என்ற மந்திரத்தைச் சொல்லி வெள்ளைத் தாமரை நிறமும், சரத்காலச் சந்திரன் போன்ற முகமும் சந்தனம் பூசப்பட்ட சர்வாங்கமும் உடையவளாக நவமணிகளால் அலங்கரிப்பட்டு நெருப்பிலான தூய்மையான ஆடைகளை அணிந்து புன்னகையுடன் தோன்றும் பூதேவியே உன்னை நமஸ்கரிக்கின்றேன் என்று தியானித்து “ஜலத்தை அளிப்பவளே, நீரின் சொரூபமாக இருப்பவளே, நீருக்கு ஆதாரமாக இருபவளே, நீரைப் பரிசுத்தம் செய்பவளே, வராஹ மூர்த்தியின் பத்தினியே, எனக்கு வெற்றியைத் தருவாய், நலன்களை அளிப்பாய், மங்களத் தலைவியே, மங்கள ரூபியே, சம்சாரத்தில் மங்களமுண்டாகச் செய்வாயாக, எல்லாம் அறிந்தவளே சர்வ சக்தியே, சகல விருப்பங்களை வழங்குபவளே, புண்ணிய வடிவினளே, புண்ணியத்திற்கு பீஜமானவளே, அனாதியானவளே, எல்லா பயிர்களுக்கும் இருப்பிடமானவளே, சகல சக்தி தரும் பூதேவியே, சுகத்தையும் நிலத்தையும் வழங்குபவளே எனக்கும் அருள் புரிவாய் அன்னையே! என துதித்து வழிபட வேண்டும்.

#####

 

Read 12675 times Last modified on செவ்வாய்க்கிழமை, 17 July 2018 17:29
Login to post comments