Print this page
திங்கட்கிழமை, 23 July 2018 20:27

தத்தாத்ரேயர்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.

####

தத்தாத்ரேயர்!

தங்களைவிடப் பதிவிரதைகள் பூலோகத்தில் இல்லை என்பதை நாரதர் மறுக்க கோபம் கொண்ட அலைமகள், கலைமகள், மலைமகள் ஆகியோரிடம் இரும்பு கடலையைக் காட்டி வேகவைக்க முடியுமா என்றார். பதிவிரதை என நீங்கள் சொன்ன அனுசூயையினால் கூட இதை வேகவைக்க முடியாது என்றனர் மூவரும். அனுசூயை இருப்பிடம் சென்ற நாரதர் அவரிடம் அந்தக் கடலைகளைக் கொடுத்து அவற்றை வேக வைக்கச் சொன்னார். அவர் தன் கணவர் அத்ரிமுனியை எண்ணி நீர் விட அந்த இரும்புக்கடலைகள் வெந்தன. இதை அறிந்த மூவரும் அனுசூயை சோதிக்க எண்ணம் கொண்டனர். தங்கள் கணவர்களை முனிவர்களாக மாறிச் சென்று அனுசூயையிடம் பிட்சைகேட்கவும் அனுசூயையை ஆடையின்றி பிட்சையிடவும் நிபந்தனை விதித்தனர்.

மும்மூர்த்திகளும் அத்ரி இல்லம் சென்று பிட்சை கேட்டனர். ஆடையின்றி அமுது அளிக்க வேண்டுகேள் வைத்தனர். முனிவர்களின் கோரிக்கையைக் கேட்டு அதிர்ந்த அனுசூயை தன் ஞானதிருஷ்டியில் வந்திருப்பது மும்மூர்த்திகள் என அறிந்து அவர்களது கோரிக்கைக்குச் சம்மதித்து அவர்களுக்கு இலைபோட்டு அமரவைத்தாள். தன் கணவரைத் துதித்து நீரை அவர்கள்மேல் தெளிக்க மூவரும் குழந்தைகளானார்கள். மும்மூர்த்திகள் விருப்பம் போல் அவர்களுக்கு தாயன்புடன் உணவு ஊட்டினாள். அரன் அரி அயன் மூவரும் குழந்தைகளாக விளயாடிக் கொண்டிருக்க கண்ட தேவியர்கள் அனுசூயையிடம் மன்னிப்புகோர அனுசூயை அவர்களை மீண்டும் மூர்த்திகளாய் மாற்றினார். மும்மூர்த்திகள் தங்கள் அம்சமாக தத்தாத்ரேயரை அந்த தம்பதியினருக்கு அளித்தனர்

மூன்று முகங்கள் ஆறு கரங்களுடன் அத்ரி முனிவர் அனுசூயாதேவி ஆகியோருக்கு மகனாக மும்மூர்த்திகளின் அருளால் பிறந்தவர் தத்தாத்ரேயர். ஒளதும்பரம் என்ற அத்திமரத்தடியில் பசு அருகில் இருக்க நான்கு நாய்களுடன் தரிசனம் தருபவர். பசு தர்ம தேவதையையும் பூமியையும், நான்கு நாய்கள் நான்கு வேதங்களின் அம்சமாகவும் கருதப்படும். கர்த்த வீர்யார்ஜுனனுக்கும் பிரகலாதனுக்கும் குருவாகத் திகழ்ந்தவர். அனுமனும் தத்தரும் யோகிகளுக்கு காட்சி தருவதுண்டு. ஆதிசங்கரர் இவரைச் சந்தித்து தமது அத்வைத கருத்துக்களுக்கு ஒப்புதல் பெற்றார்.

பஹுதர், குடீசர், ஹம்சர், பரமஹம்சர் என நான்கு சன்யாசி பிரிவுகளில் பரமஹம்சர்கள் மேம்பட்டவர்கள். அவதூதர்கள் அவர்களைவிட உயர்ந்தவர்கள். அவதூத சன்னியாசிகளின் முன்னோடி. ஜீவன் முக்த கீதை மற்றும் அவதூத கீதை என்ற அரிய நூலை எழுதியுள்ளார். வித்வத் சந்நியாசம் என்ற அவதூத பரம்பரைக்கு மூலகாரணபுருஷர் தத்தாத்ரேயர். அவதூத ஆஸ்ரமத்தை துவக்கி வைத்தார் தத்தாத்ரேயர். சதாசிவபிரமேந்திரான், புதுக்கோட்டை சாந்தானந்தர், ஜட்ஜ் சுவாமிகள் ஆகியோர் இந்த ஆசிரமத்தில் சந்நியாசம் பெற்றவர்கள்.

மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் தத்தாத்ரேயருக்கு பிரியமான இடம். கும்பமேளா சமயத்தில் எண்ணற்ற அவதூத சந்நியாசிகள் கூடுகின்றனர். இவர்களுக்கு தண்டம் கமண்டலம் கிடையாது. இவர்களின் பாதுகைகளை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்வது வழக்கம்.

இமயமலையில் ஆத்ரேய மலைப்பகுதியில் தத்தாத்ரேயர் தங்கி தவமியற்றிய தத்தர்குகை உள்ளது. பதினாயிரம் படிகளை உடைய கிர்நார் மலியின் உச்சியில் தத்தாத்ரேயர் சரண பாதுகை உள்ளது. ஸஹ்யமலை- தத்த சேத்திரம்- மகாபலேஷ்வர் என அழைக்கப் படுகிறது. குல்பர்கா அருகில் காங்காப்பூரில் தத்தாத்ரேயர் அமர்ந்த நிலையில் உள்ளார். இவரை ஜன்னல் மூலம் தரிசனம் செய்ய வேண்டும். மராட்டிய கிருஷ்ணா நதி தீரத்தில் தத்தர் ஆலயம்- பாதுகைகள் வழிபாடு. உத்தரப்பிரதேசத்தில் குருமூர்த்தி என அழைப்பட்டு தத்தகுரு ஆராதனை சிறப்பு. ஆந்திரா கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள ஒளதும்பரம் தத்த க்ஷேத்திரம். சேலம், சேர்ந்தமங்கலம் தத்தகிரி குகாலயத்தில் சிலாரூபம், குடவாசல் எனும் புதுக்குடியில் தத்த குடீரம், உடையார்பட்டியில் பதினாறு அடி உயரமுள்ள சிலாரூபம், சுசீந்திரன் தாணுமாலயன் ஒரு தத்த க்ஷேத்திரம்மைசூரில் புகழ் பெற்ற தத்தாத்ரேயர் கோவில் உள்ளது. தஞ்சை வடகுடியில் தத்தாத்ரேயருக்கும் கார்த்தவீர்யார்ஜுனனுக்கும் கோவில்.

#####

Read 9458 times Last modified on செவ்வாய்க்கிழமை, 23 April 2019 08:48
Login to post comments