Print this page
ஞாயிற்றுக்கிழமை, 08 April 2018 17:53

சனந்தனர்-பத்மபாதர்

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மூவாச் சாவா முத்தா போற்றி!
ஆவா எங்களுக்கு அருள்வாய் போற்றி!
தமிழ்ச்சுவைச்சார் திருச்செவியாய் போற்றி!
அமிழ்தாய் எம் அகத்தானாய் போற்றி!
மழவிளங்களிறே மணியே போற்றி!
குழவியாய்ச் சிவன் மடி குலவுவோய் போற்றி! போற்றி!

&&&&&

சனந்தனர்-பத்மபாதர்

சோழதேசத்தில் பிறந்த சனந்தனர் ஒரு மகானிடம் நரசிம்ம மந்திரத்தை உபதேசம் பெற்றார். அந்த மந்திரத்தைக் கோடிக் கணக்கில் ஜபித்து மந்திர சித்தி பெற்று நரசிம்ம மூர்த்தியை தரிசிக்க வேண்டி தனிமையில் இருக்க ஒரு மலை அடிவாரத்தை தேர்ந்தெடுத்தார். அருகில் உள்ள குகையில் தவம் செய்ய ஆரம்பித்தார்.

உருவைக் கண்ட வேடன் - குரலைக் கேட்ட சனந்தனர்

அந்தக் காட்டில் வேட்டையாடும் வேடன் ஒருவன் நாம் வேட்டையாட காட்டில் சுற்றித் திரிகின்றோம். இவர் எதற்கு இங்கு அமர்ந்திருக்கின்றார் என நினைத்து சனந்தரை அனுகி நீ எதற்காக இந்தக் காட்டில் உட்கார்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றாய் என்றான். சனந்தர் தன் நோக்கத்தை அவனுக்குப் புரிய வைக்க முடியாது என்பதால் நான் நரசிம்மத்தைக் கான வந்திருக்கின்றேன் அது இடுப்பிற்கு கீழே மனிதனாகவும் மேலே சிங்க உருவத்துடனும் இருக்கும் என்றதும், அப்படி ஒரு மிருகத்தை நான் இதுவரை இந்தக் காட்டில் கண்டதில்லை. உண்மையாக அப்படி ஒரு மிருகம் இருந்தால் நாளை மாலைக்குள் இந்தக் காட்டில் அது எங்கிருந்தாலும் கட்டி கொண்டு வருகின்றென் அதற்காக நீ சிரமப் படவேண்டாம் எனக் கூறிச் சென்றான். உன் விருப்பம் போல் செய் என்றார் சனந்தனர்.

வேடன், நரசிம்மத்தைத் தேடி காடு முழுவதும் சுற்றினான். குகைகள் மலை அடிவாரம் உச்சி எல்லா இடத்திலும் அது அவனுக்குத் தென்படவில்லை. அடுத்த நாள் மாலை வந்தது. அந்த அந்தணர் பொய் சொல்ல மாட்டார். நமக்குத்தான் திறமை போதவில்லை. அந்த அதிசய மிருகம் கிடைக்கவில்லை என்று தோல்வியை ஒப்புக் கொள்வதற்குப் பதில் உயிரை விடுவதுமேல் என்று காட்டுக் கொடிகளை எடுத்து தன்னைச் சுற்றிப் பிணைந்துக் கொண்டு உணவு உண்ணாமல் இறக்க முடிவு செய்தான். வேடனின் சத்ய நோக்கறிந்து நரசிம்மர் அங்கு தோன்றியதும் அதிசய மிருகத்தை கண்டமகிழ்வுடன் தன் கட்டுகளை அவிழ்த்து நரசிம்மத்தைக் கட்டி சனந்தனர் இருந்த குகைமுன் கொண்டு சென்று நிறுத்தி சனந்தரை அழைத்தான்.

சனந்தர் வந்த பார்த்தபோது அவருக்கு காட்டு கொடிகள்தான் கட்டுண்டு இருப்பது தெரிந்தது. ஆனால் சத்தம் கேட்டது. நரசிம்மத்தைக் கூட்டிக்கொண்டு நாட்டிற்குச் செல் இந்தக் காட்டில் இருக்காதே என்று வேடன் சொன்னது காதில் விழுந்த்தும் சனந்தனருக்கு உண்மை புரிந்தது. வேடனுக்கு காட்சி கொடுத்த நரசிம்மரே எனக்கு தரிசனம் அளிக்கக்கூடாத என வருத்தத்துடன் கேட்டார் சனந்தர்,

கோடி ஆண்டுகள் தவமியற்றி பெறும் சித்தியை வேடன் தொடர்ந்து இரண்டு நாளில் இடைவிடாத என் நினைவில் ஊண் உறக்கமின்றி இருந்து சித்தி பெற்று விட்டான். அவனுடன் உனக்கு தொடர்பு ஏற்பட்டதனால் என்னைக் காண முடியவில்லை என்றாலும் என் குரலைக் கேட்கும் பக்கியம் அடைந்தாய், உனக்கு மந்திரம் சித்தியாகிவிட்டது உனக்கு தேவையானபோது நான் உன்னிடம் வருவேன். நீ காசி சென்று உன் குரு சங்கரரை சந்திப்பாய் என அசரீரி கேட்டது.

சனந்தனர் - பத்மபாதர்

சோழநாட்டிலிருந்து சனந்தனர் காசிமாநகரில் சங்கரர் இருக்குமிடம் வந்து தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். உற்றுப்பார்த்த சங்கரர் தன் ஞான திருஷ்டியால் வந்திருப்பது விஷ்ணுவே என்றறிந்தார். சங்கரரும் சனந்தரும் நெருக்கமாக பேசிக் கொள்வது மற்ற சீடர்களுக்கு சனந்தனர்மேல் பொறாமையை ஏற்படுத்தியது. இதைப் போக்க நினைத்த சங்கரர் அக்கரையில் ஒரு வேலையை செய்ய சனந்தனரை பணித்தார். அன்றைய பாடத்தை ஆரம்பித்தார். அப்போது திடிரென்று சனந்தனரை இங்கே வா என்று சைகை செய்தார். அதைக் கண்டதும் குரு அழைக்கின்றார் என்பதை தவிர இடையே கங்கை இருப்பதையும் மறந்து நடக்க ஆரம்பித்தார். சீடர்கள் அவர் கங்கையில் மூழ்கி விடுவார் என நினைத்தனர். ஆனால் கங்கை அவர் வைக்கும் ஒரு அடிக்கும் ஒரு கமலத்தை வைக்க அதன் மேல் காலடிவைத்து சங்கரரை வந்தடைந்தார். சனந்தனரின் பெருமையை உணர்ந்த சீடர்களின் பொறாமை அகன்றது. அன்றுமுதல் சனந்தனர் பத்மபாதர் என்றழைக்கப்பட்டார்.

சங்கரரைக் காத்த பத்மபாதர்

தன் சீடர்களுடன் ஸ்ரீசைலம் சென்ற சங்கரர் மல்லிகார்ஜுனர் மேல் சிவானந்தலஹரி பாடல்களைப் பாடினார். அந்தப் பகுதியில் இருந்த கபாலிகர்கள் பைரவரை வணங்கி நரபலி கொடுப்பவர்கள். அதிகாலை நீராடி கொஞ்சநேரம் ஈசுவர தியானத்தில் தனியாக இருக்கும் சங்கரரைக் கொல்ல கபாலிகன் கையில் வாளுடன் வந்தான். சங்கரரைப் பார்த்து சம்மதமா எனக்கேட்க சம்மதம் சொல்லியவர் கண்மூடி அமர்ந்தார். கை வாளை ஓங்கியவன் ஐயோ என்று அலற கண் விழித்தவர் நரசிம்மர் அந்த கபாலிகனை நாராய் கிழித்து போட்டிருக்கக் கண்டார். உடனே காட்சியும் மாறியது அந்த இடத்தில் நரசிம்மருக்குப் பதில் பத்மபாதர் நின்றிருந்தார். பத்மபாதருக்கு நரசிம்ம மந்திரம் உபதேசமாயிருப்பதை சங்கரர் அறிந்தார். தன் குரு பயணம் செய்த எல்லத் தலங்களுக்கும் அவருடன் சென்று இறைவனை வழிபட்டார்.

பத்மபாதர் சங்கரருடன் சிருங்கேரியில் இருந்தபோது பிரம்ம சூத்திர பாஷ்யத்திற்கு விளக்க வுரை எழுத மண்டனமிஸ்ரர் விரும்ப சங்கரர் அதற்கு விளக்க வுரை தேவையில்லை என்றார். பத்மபாதர் சங்கரரிடம் அனுமதிகேட்க அவர் புன்னகைக்க பத்மபாதர் உரை எழுதி படித்துக் காண்பித்தார். அப்போதும் சங்கரர் புன்னகைப் புரிந்தார். பத்தமபாதர் தான் எழுதி உரையுடன் இராமேஸ்வரத்திற்குப் புறப்பட்டார். வழியில் தன் தாய்மாமன் வீட்டில் ஓலைச் சுவடிகளை வைத்துவிட்டு இராமேஸ்வாம் சென்று திரும்பி வருவதற்குள் அவர் தாய்மாமன் கர்ம மார்க்கத்தைப் பின் பற்றுபவர் வீட்டில் இப்படி ஒரு நூலா என அதை எரித்துவிட்டு அது வைத்திருந்த வீட்டையும் எரித்துவிட்டார். சங்கரரிடம் நடந்த விஷயங்களைச் சொல்லி பாதங்களில் வீழ்ந்தவருக்கு நீ படித்துக் காட்டிய பாடல்கள் எனக்கு நினைவிற்கு வருகின்றது நான் சொல்கின்றேன் நீ எழுதிக் கொள் என்றார். அதற்கு ‘பஞ்சபாதிகா’ எனப் பெயர்.

மண்டனமிச்சரரிடம் வாதிட்டபோது சரஸவாணி கேட்ட கேள்விக்கு ஒரு துறவியாக பதில் சொல்ல இயலாமையால் கூடுவிட்டுகூடு பாய்ந்து ஒர் அரசனின் உடலில் புகுந்து தன் ஆத்மாவிற்கு களங்கம் வரமல் பதிலை அறிந்து கொண்ட சங்கரர் மீண்டும் தன் உடலுக்கு வரும்போது அரசனின் மந்திரிகள் இட்ட தீயால் ஒரு கை கருகிவிட பத்மபாதர் விருப்பப்படி நரசிம்மர் துதிபாட கருகிய கை மீண்டும் ஒளிபெற்றது.

பின் தன் குரு சங்கரருடன், சிதம்பரம், திருவிடைமருதூர், திருச்சி, திருவானைக்கா, ஸ்ரீரங்கம், மதுரை, உப்பூர், திருவனந்தபுரம், திருக்கோகர்ணம், ஜயந்திபுரம்-திருச்செந்தூர், இராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருப்பதி, திரியம்பகேஸ்வரம், சோமநாதர் மற்றுமுள்ள எல்லா ஜோதிர்லிங்கத் தலங்களைத் தரிசித்துவிட்டு, கிருஷ்ணன் எழுந்தருளியுள்ள துவாரகை சென்றார். அங்கு காளிதேவியையும், சித்தேஸ்வரரையும் ஸ்தாபித்து காளிகாபீடம் நிர்மானித்த சங்கரர் அதன் முதல் ஆச்சார்யராக பத்மபாதரை நியமித்தார்.

$$$$$

Read 7759 times Last modified on ஞாயிற்றுக்கிழமை, 08 April 2018 18:10
Login to post comments