Print this page
புதன்கிழமை, 06 May 2015 05:10

சேருமிடம்சேர்!

Written by
Rate this item
(1 Vote)

நல்லோருடன் சேர்! நலவாழ்வு பெறுவாய்!

கதிவேறில்லை மதிகெட்ட மனமே. மரணம் வந்தெதிரில் நிற்கும்போது சரணம் வேண்டி என்ன பிரயோசனம், வாவென்று காலன் வந்தழைக்கும்போது ஆவென்று அலறுவாய் கற்றறிந்த மூடனே! நெட்டுருஞ் சூத்திரங்கள், மந்திரங்கள் எதுவும் அப்போது சற்றேனும் உதவாது அன்பான மடமதியே!

செல்வம் ஈட்டும் ஆசை ஒரு தீராத்தாகம், வெல்லுதல் வேண்டும் அந்தப் பொல்லா நோயை. நல்ல முடிவு செய்துகொள் உள்ளத்திலே, சொந்தத்தில் பாடுபட்டு இதுவரை வந்ததை வைத்து அந்த மட்டில் போதுமென்று மகிழ்ந்து அமர்வாய். வியர்த்தமானது பணம் பணமென்று அலைவது, அர்த்தம் என்பது அனர்த்தமே புரிந்துகொள், எள்ளளவும் சுகமில்லை பணம் சேர்ந்த பாவிக்கு, கள்ளனை மட்டுமல்ல, பெற்ற மகனையும் கண்டு அஞ்சுவான், சந்தேகமில்லா உண்மையிது அறிவாய் எந்த ஊரிலும், யாரிடத்துமுள்ள பணத்தின் மாறாக் குணமிது. அகத்தில் உள்ள மனக் கோயிலை காப்பாய்! அன்பனே மிகக் கவனம் வைப்பாய்! 

நம்பாதே நரம்பு வேகத்தை முறுக்கும் வலுவில் ஆனந்தமாயிருக்கும் அதனடியில் உள்ள தீரா மோகம் விவேகமழிக்கும்! அழகும் அந்தமும் வேர்வையும் மலமும் அழகும் தசையுமென்று தீர்த்தபின் உள்ளது என்ன! இந்த உண்மையைத் திரும்ப திரும்ப உணர்ந்து உள்ளத்தில் உறுதி அடைவாய்! கடை ஆயுள் முழுவதும் தீராத் துயரம் நோயும் நொடியும் உடலை வாட்டமுறும்போது மதிகெட்ட மனதை நினைத்து வருந்தி என்ன! மண்ணுலகத்தில் சாவதென்பது உறுதி இதை கண்ணாரக் கண்டும் இந்த பாபங்களை விடாமல் இருப்பது ஏனோ!

சற்றும் ஒழியாது ஆசைமேல் ஆசைதீர அலைந்து, தாமரை இலையின் நீர்த்துளி போல் சாகும்வரை இருந்துகாண்பது என்ன!, சுகமொன்றில்லை! சஞ்சலமன்றிச் சாந்தம் என்பது கொஞ்சமுமில்லா வாழ்க்கை! உடல் பலமுள்ளபோது சம்பாதிக்கும் சக்தியுடையவனை சம்பாத்தியமுள்ளவரை சார்ந்த பந்து, பாத்திய உறவு, வருமானமுள்ள மட்டும் பரிவாரக் கூட்டம், கிழவனாய்ப் நோயில் படுத்தபின் விழுந்தோடிக் கலையும். சிந்திப்பாய் நான் என்னும் பொருளை உண்மை ஞானம் அடைய. நல்லோர் வழியிலே மனத்தை நிறுத்து, செல்வம் இருந்தால் உண்மையாய் தேவைப் படுவோருக்கு உதவுவாய் சுருக்கமாய் சொன்னேன்.

வயதானால் ஏனென்பாரில்லை. இளம் மூச்சுள்ளபோது மனையாளின் பேச்சு, ஆசையுடன் கட்டியணைத்த தேகம் பட்டுப் போச்சு என்றதும் பயங்கொண்டு ஒதுங்குவாள். சுயம்வர மனைவியும். முதுமை வந்ததும் மாயமாகும் காமவிகாரம், வற்றிய நீர்நிலை போல் இருந்தவிடம் காணாது போகும், செல்வம் சுருங்கியதும் அதுகாறும் சூழ்ந்திருந்த சுற்றம் எங்கே! ஞானம் பெற்றால் இந்த மாயமெல்லாம் தீரும்.

விளையாட்டில் தீரும் குழந்தைப்பருவம், அதன் பின்னர் வளையல் கை மகளிரே சிந்தனையில், மனைவியும் மக்களும் கிழவன் விசாரம், கடவுளை நினைப்பனில்லை எந்த சூழலிலும். சொந்தமில்லை! பந்தமில்லை! மனிதர்குலமே, இது என்ன விந்தையே! அனைத்தும் சிந்தித்தாயேல், மனைவி, மக்கள், நீயும் அனைத்துமே மாயை என்று உணர்வாய் குலமேது ஊரேது உயிருக்கு! உறவையும் பணத்தையும் வயதையும் நம்பிட வேண்டாம், ஆங்காரம் போங்காலம் வந்தால், சடக்கென்று எல்லாம் மறையும் மகனே நொடிப்பொழுதில்.

நல்லது நல்லவர் நேசம், அதனால் குறையும் பிடித்த பாசம், பாசம் குறையத் தீரும் மோகம். மோகம் போனால் சித்தத்தில் ஏற்படும் அமைதி அதுவே உயிருடன் வீடு எனப்புரிவாய்.
காலையென்றும், நடுப்பகலென்றும், மாலைவேலையென்றும், நட்சத்திர மீன்கள் நிறைந்திருக்கும் இரவு என்றும், வெய்யில் என்றும் குளிர்பனி என்றும் ஆடியாட சந்தோஷ நடனமாடும் காலதேவி அவள். இடைவேளையின்றி ஆடினாலும் உன் மடைமை ஆசை தணியாத. புத்திகெட்ட மனமே! உன்னை நடத்துவார் இல்லையோ! சொத்தும் மனைவியும் எப்பவும் கவலையோ! வாழ்வின் கடைசி காலத்திலாவது நல்லாரின் சேர்க்கையை பிறவிக் கடலைக் கடக்க நல்லப் படகாக பயன்படுத்து!

நரம்பெல்லாம் நைந்தன, மயிரெல்லாம் நரைத்தது, குரங்கு முகமாச்சு, பல்லும் இழந்தாச்சு, கோலூன்றி நடக்கின்றான் தள்ளாடும் கிழவன், மேலும் மேலும் ஆசை இதற்கென்ன செய்வது! மரத்தடி இருப்பிடம், எடுப்பது பிச்சை, இரவினில் மோவாய்ச் சேருது முழங்கால் இவனையும் ஆட்டுது போராசைப் பேய்! எவனையும் எந்நிலையிலும் விடாதோ இந்நோய்! ஞானத்தை அடையாது விடுதலையில்லை. இமயமுதல் குமரிவரை நிலைத்த அனைத்து சமயங்கள் சொன்னதும் இதுவேயாகும்!

யோகத்திலிருப்பவனும் ஒரு சுகவேகத்திலிருப்பினும் கூட்டத்திலிருப்பினும், தனியிடத்திலிருப்பினும் அகிலம் கடந்த மெய்ப்பொருளில் கலந்து மகிழும் மகிழ்ச்சியே அளவிலா மகிழ்ச்சி. தான் புண்ணியம் தேடமாட்டான் பாவமும் செய்யான் ஈசனில் கரைந்து போச்சு இந்த ஆத்மனின் சித்தம். . இனி உள்ளம் எப்பவும் ஆனந்தம்.

என்ன இது! நான் யார்! நீர் யார்! அன்னையும் யார்! அப்பனார் யார்! யாது எம் ஊர்! ஒன்றுமில்லை இங்கே! தேடும் பொருள் எது! கனவின் கவலைகளைத் துறப்பாய்! தன்னையே தான் வெறுத்தல் விவேகமோ! என்னுயிருக்கும் உயிராவான்! உன்னுயிர்க்கும் அவனே உயிரன்றோ! எல்லாம் ஓர் உயிர்! எதிலும் ஓர் உயிர்! எல்லா உயிரும் அவன் அன்றோ! உன் வெறுப்பில் யாது பொருளுமில்லை! வித்தியாச எண்ணங்களை நீக்கி அனைத்து உயிரும் ஒன்றே என ஒர் உயிரைக் கண்டு கொள்வாய்!.

பகையென்றும் நட்பென்றும் பாராதே, மகனென்றும் உறவென்றும் மயங்காதே, சிவனடி சேரவேண்டி விரும்பின் சீக்கிரமே எவரிடத்தும் அகல்வதும் வேண்டாம், சேர்வதும் வேண்டாம் நட்பென்று, எல்லோரிடமும் ஒன்றுபோல் நிற்பாய். நலம் உனக்கு சொல்வேன், காமம் வேண்டாம், கோபம் வேண்டாம் ஆபத்தினின்று தப்ப அகற்றுவாய் லோபத்தை, ஒழிப்பாய் மோகத்தை,

சுவாசத்தை ஒழுங்காக்கி அமர்ந்து, ஆசையை அடக்கி ஐம்பெரும்பூதங்களான மூர்க்கரை மெய்யெது, மோகமெது என்று உணர்ந்து செய்யும் ஜபமும் தியானமுங் கொண்டு பையப் பையப் பயில்வாய், மனம் அலையாதிருக்க, மெய்பொருளின் சித்தத்தை நிலை நிறுத்தவே! குருவின் பாதகமலத்தில் குறையா பக்தி வைத்தால் துரிதம் அடைவாய் உறுதி

புலனும் மனமும் ஒழுங்குபட்டால் காண்பாய் உன் உள்ளத்தினுள்ளேயே! உலகத்தையாளும் ஒருவனின் ஒளிமயமான ஒளிஉருவை! -சித்தர்கள், யோகிகள் சொல்லியது- குருஸ்ரீ பகோரா

Login to post comments