ஓம்நமசிவய!
பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
#####
அடியார் பெருமை!
1868. திசைகளை உரிமையாகக் கொண்ட ஒரு பரம்பொருளை நாடும் தன்மையுடைய அடியார் நீங்காமல் இருப்பின் அந்நாட்டில் பகைப்பதற்கு ஒருவருமில்லையாகும். அந்நாட்டில் பருவ மழை முறையாய்ப் பெய்யும். அந்நாட்டில் விளையும் பொருளின் விலை தக்கதாய் விளங்கும்.
1869. முன்னைய புண்ணியப் பயனால் மண் உலகில் சிலலோக ஞானத்துடன் பிறந்து எடுத்த உடலிலேயே சிவவுலகத்தை அடையும் தவத்தைச் செய்வர். இவ்வுலகத்தில் சிவசத்தியின் ஆற்றலை அடைவர்.
1870. நாம் மேற்கொண்ட ஒளிமண்டலத்தில் எட்டுக் குலமலை உச்ச்சியும் கீழ் உள்ள நாகர்களும் அண்டங்களில் வாழும் தேவர்களும் ஆதிப் பரம் பொருளும் எட்டுத் திக்குகளில் உள்ள அனைவரும் வந்து என் கையில் உள்ளார் என்றாகி நாம் இனி உய்வு பெற்றோம்.
1871. ஏழு உலகங்களும் எல்லையில்லாத வானமும் உயிர்களும் உலகத்தில் உள்ள இயங்குபவை இயங்காதவையான எல்லாமும் அவற்றின் குண விசேடங்களும் பழைய வேதங்களும் படைத்தல் காத்தல் முதலிய தொழில்களும் அவை முறையாய் நிகழும்படி காண்கின்ற சிவனும் என் இடம் அல்லாமல் இல்லை.
1872. இறைவன் ஆண் பெண் பேடு எனப் பாகுபாடு உடையவன் அல்லன். அண்ட கோசத்தால் மூடியிருக்கும்போது உளே உள்ள அச்சோதியை எவராலும் அறிதற்கு இயலாது. கண்ணான கருவி இல்லாமலேயே காணும் செவி இல்லாமல் கேட்கும் சோதிக்குள் சோதியாய் விளங்குவான். அத்தகைய சிவத்தின் பெருமையை ஆராய்ந்து அறிந்ததே முதிர்ந்த ஞானம் ஆகும்.
1873. இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் சிவனடியார்கள் அறியாமையின் வழிப்பட்டு மயங்காமல் அறிவு வழிபட்டுச் செல்வர். அதனால் அவ்வடியார் வான் உலகத்தையும் ஆள்வர். அன்னாரின் தோள்களும் எட்டுத் திசையாம். அன்னாரின் திருவடித் தாமரைகள் பாதலத்தில் இருப்பவை. மயக்கும் தன்மை இ;ல்லாத வெளி அண்டமே அவர் சிரமாகும்.
1874. மனத்தின் கண் விளங்கும் இறைவனை எண்ணி மனம் அடங்கப் பெற்ற அடியார் துன்பத்தினால் வருந்த மாட்டார். ஆகவே அகங்காரம் அடங்கப் பெற்று உள் புகுந்து இறைவனை அறியும் உள்ளம் தன்முனைப்பு அற்றுப் புரியட்டகம் ஆன நுண்னுடலை அழிக்கவும் அவரால் இயலும்.
1875. எனக்குச் செல்வாகவும் வரவாகவும் காதலுக்குரிய துணையாகவும் அழிவாகவும் உள்ளவன் இறைவன். இத்தகைய இறைவனை யான் எண்ணியபோது பழியும் புகழும் அவற்றால் ஏற்படும் பயனும் ஆகிய அனைத்தையும் நீங்கிய என் உயிராகிய நிலத்தை அவன் பக்குவம் செய்தான்.
1876. என் தாயுடன் என் தந்தை எழேழ் பிறப்பும் முன்னமே சிவனுக்கு அடிமை என்று எழுதிக் கொடுத்த அடிமை ஓலையை தான் ஒருவனாய் நின்று உலகம் அனைத்தையும் படைத்த முதல்வன் எழுதினான். மேகம் போன்ற கரிய நிறம் உடைய திருமால் சாட்சிக் கையெழுத்திட்டான்.
1877. ஐயம் கொள்ளாமல் தன்னையே தம் முதல்வன் என்று துணிந்து வழிபட்டால் நெஞ்சில் இறைவன் பொருந்திக் தங்குவான் தன்னை வணங்குபவர் மனத்தில் பொருந்திய விருப்பத்தை நிறைவேற்றி வைப்பான். தன்னை அணியாகக் கொண்டவர் மனத்தில் வீற்றிருக்கும் அந்த முதல்வனை நினைத்துக் கொண்டே இருப்பவர் கைவிட முடியுமோ முடியாது!
1878. தேவரின் முடிமீது விளங்கும் ஒளிக்கதிரையுடைய சிவம் தனக்கு அடிமை செய்யத் தன் திருவடியை அடியார்க்குச் சூட்டியருளினான். பின்பு ஊன் உடல் நீங்கிய உணர்வு கொண்டு ஒளி மண்டலத்தை ஆளும் அப்பெருமான் பயனை அடையச் செய்தான்.
1879. இளம் பருவம் உடைய அடியவரை அவர்கள் மேற் கொண்டிருக்கும் கோலத்தைக் கொண்டு அன்னாரை இறைவன் அடிமை கொள்கின்றான். அந்நிலையிலும் அவர்க்கு ஒர் பேரின்பத்தை அருள்கின்றான். சிவக்கோலம் உடைய அடியார் ஒளிக்கதிரையுடைய சடை ஒளி நீங்காதபடி கட்டிக் கொண்டிருப்பர். அவ்வடியார் திருவடி உணர்வில் பொருந்துவது பெரிய தவம் ஆகும்.
1880. சிவன் அடியார் தம்மை நெருங்கி அன்பு செய்பவ்ர்களைச் சிவனிடம் அணுகும்படி செய்யவும் வல்லமை உடையவர் ஆவர். சிவன் அடியாரை அணுகி அவரையே விரும்பும் அடியாரிடத்தில் சிவனடியாரின் பெருமை வந்து அடங்கி விளங்கும்.
1881. பதினெட்டுக் கணத்தேவர்கள் எல்லாம் எல்லையில்லாத அன்பினால் இப்பெரிய பூமியில் வருவார்கள். அவரது வரவினால் பூமியினது எட்டுத் திக்கும் வானத்தைப் போன்று விளங்கப் பன்னிரண்டு காத எல்லைவரை உள்ளவர்க்கு நனமை உண்டாகும்.
1882. சிவன் அடியார் தங்கியிருக்கும் அப்பகுதி தீயவர் சேர்க்கையானது இல்லாது அறிவுடையவர் தோன்றக் காரணமாகும். புதிய யோகப் பயன்கள் கிட்டி மக்களிடம் நல்ல பண்புகள் விளங்கும். பிற்விக்குக் காரணமான மலத்தின் சேர்க்கை இல்லாமல் மேல் உலகும் கிட்டும்.
1883. மேலான் அறிவு வடிவன சிவன் பல உலகங்களைப் படைத்தான். அப்பெருமான் தான் படைத்த அவற்றைக் கடந்தும் உள்ளான். பல அண்டங்களில் வாழும் தேவர்கள் அவனை அறிவர். சிவத்தின் மெய்யடியார் அவனை அறிவர்.
#####