ஓம்நமசிவய!
அறிவின் வரம்பை அகன்றாய் குறிகுணங் கடந்த
குன்றே எட்டு வான் குணத்தெந்தாய் கட்டறு
களிற்று முகத்தோய் மலரில் மணமாய்
வளர்ந்தாய் அலர் கதிர் ஒளியின் அமர்வோய் போற்றி!
#####
சற்குரு நெறி!
2049. உத்தம குரு என்பவன் சிவத்தின் திருவடியான் சிவ உணர்வைச் சீடன் சிரசில் அமையுமாறு செய்யும் ஆற்றல் உடையவன் ஆவான். அத்தகையவனே சிவத்தின் திருவடியைப் பதிப்பித்துச் சிவனின் உண்மை வடிவத்தை அறியும்படி செய்ய வல்லவன். சிவத்தின் திருவடி பதிப்பதால் முப்பத்தாறு தத்துவங்களையும் கண்டு விளங்கும் சீவனின் பாசங்களை ஞானம் அளித்துத் தணிக்க வல்லன் அவனே சிறந்த குரு ஆவான்.
2050. சத்குருவானவன் தன்னிடம் உபதேசம்பெற்ற அடியவரின் வினை தீரும்படி திருவருள் செய்தான். வினையால் தீவினை நெருங்காதபடி மாணவனின் தலையில் திருவடி சூட்டியருள் செய்தான். இயமனும் அவனது தூதரும் மாணவ்ன்பால் அனுகாமல் திருவருள் செய்தான். அதனால் பிறவித் துன்பம் நீங்கச் செய்தான்.
2051. கரிய இரும்பு இரசவாத முறையால் பொன்னாகும். அது திரும்ப இரும்பு ஆகாது. அதுபோல் பக்குவம் வந்த போதே குருவினது அருளைப் பெற்றவன் மீளவும் பிறவிக்கு வாரான்.
2052. பாசத்தைக் கெடுத்துச் சிவத்துடன் தனக்குள்ள தொடர்பை ஆராய்ந்து பாசக் கூட்டங்களை முழுவதும் அகற்றும் அனுபவம் உடையவரே குற்றம் இல்லாத சற்குரு ஆவர். சிவ அனுபவம் இல்லாது வாய் வாதம் செய்பவர் சிவஞானமுடைய குரு ஆகார்.
2053. தெய்வப் பொருளான சிவத்துடன் பொருந்தியிருக்கும் மலம் அற்றவனே மலம் நீங்கப் பெற்ற நேயப் பொருளை அளிக்க வல்லவன். அவனே நிலையானவனும் தூய்மை உடையவனும் ஆவான். அவனே ஆராய்பவரின் குணத்தை அறிந்தபோது செருகுற்ற அன்பர்க்கு உப்தேசம் செய்பவன் ஆவான். அவனே சி/றந்த குரு ஆவான்.
2054. தாழ்ந்த உலோகங்களைப் பொன்னாக மாற்றும் மருந்து பட்ட இடம் எல்லாம் மேன்மையைத் தருகின்ற பொன்தன்மை ஆவதைப் போன்று குருவின் திருவடிபட்ட உலகத்தவர் யாவரும் ஆணவம் கனமம் மாயை ஆகிய மூன்று மலங்களும் நீங்கிச் சிவகதி பெறுவர்.
2055. சிவமே தானாய் எழுந்தருளிய நல்ல குருவின் திருமுன்பு ஆன்மாவின் தன் உண்மை உணருமாயின் ஆன்மாவே சிவத்தை பெருமைபெற அறிவதாகும்.. அந்த அறிவே உடலுள் இருக்கும் சிவம் என்று அறிந்து கொள்வாயாக.
2056. பிறப்பு இறப்பு என்னும் இரண்டும் அற்ற இறவாத நெறியைக் கரு இடுவதையே செயலாக உடையார். காம விருப்புடையவர் காணாத வழியை சிவபெருமான் பெருந்துறையாகப் பேசும் வழியை அனுபவம் மிக்க குரு உபதேச வழியில் போய்ப் பொருந்தலாம்.
2057. சிவகுரு என்பவன் வேதாகமம் கூறும் பேரின்ப வடிவு உடையவன். அவ்வடிவுடையவனாகிச் சிவயோகத்தை உயிர்க்குச் சேர்ப்பித்து அருள்வான். அவ்வுயிர் திருவடியுணர்வு வரப் பெற்றமையால் வேறோர் எண்ணமும் உண்டாவதில்லை. அதனை உயரச் செய்து பாசத்தை அகற்றி அகத்தே தோன்றும் மேலான சிவத்திடம் வருவித்துச் சேர்ப்பவன் ஆவான்.
2058. சத்தான சிவமும் அசத்தான மாயையும் சத்துடன் கூடிச் சத்தாகவும், அசத்துடன் கூடி அசத்தாகவும் உள்ள ஆன்மாவும் ஆகிய முப்பொருளகளின் இயல்பை உணர்த்தி சித்தான ஆன்மாவையும் அசித்தாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் சிவத்துடன் சேர்த்துச் சுத்தமயையும் அசுத்த மாயையும் அகல இன்பவடிவான பிரணவ உபதேசம் அளிக்கின்ற தலைவனே அருட்குரு எனக் கூறப்படுவான்.
2059. உயிர்களிடம் உள்ள பாச உணர்வால் ஆணவம் கன்மம் மாயை மாயேயம் திரோதயி என்ற ஐந்தும் பொருந்தும். சிவத்தின் திருவடியை வழிபடுவதால் அவா நீங்கும் சிவப் பற்றை ஆதாரமாய்க் கொண்டு ஆன்மாவைச் சுற்றியிருக்கும் பேத ஞானத்தைச் சீவ துரியம் சிவ துரியம் பரதுரியம் என்னும் மூன்றாலும் கெடுத்துத் தற்பரம் என்ற மேலான சிவத்தை சார்பவார் மேலானவர் ஆவார்,
2060. அனைத்து உயிர்களும் இன்பம் அனுபவித்தற்குரிய வன்மை மிக்க புலன் உணர்வுடன் பொருந்த வரும் காலத்து இறைவன் இறைவியுடன் உள்ளத்தில் தோன்றிடவே சொல்லாமலேயே ஐம்மலக் குறுபுகளும் அடங்கி உயிர் சிறந்து மீண்டும் வாரா நெறியை அடையச் செய்தல் இறைவனுக்கு விளையாட்டாகும்.
2061. இழிவான பிறப்பிலே செலுத்திப் பின்பு அதனின்று மீட்டு வினைப் போகத்தை அனுபவிக்கச் செய்து பதமுத்தியை அடையும்படிச் செய்து பதவிகளின் இன்பத்தைத் துய்க்கும்படிச் செய்து உயிர்களைப் பிறவிக் கடலில் ஆழ்த்துதலும் பின் சிவஞானத்தில் மீளும்படி செய்தலும் வீட்டை அடையச் செய்து மௌனம் என்ற பேசாப் பெருவாழ்வு அளித்தலும் ஆகியவை முத்தியினைத் தரும் சிவனின் செயலாகும்,.
2062. சிவன் ஐந்தொழில்கள் செய்து விளையாடும் இடம் உடலகும். அறிவு அறியாமையை நீக்கித் தெளிவித்த சீவனை அதன் மலத்தினைப் போக்கித் தூய்மை உடையவன் ஆக்கித் தன் வயமாக்கலே ஐந்தொழில் காரியமாகும்.
2063.. இறைத் தன்மையைப் பெறுவதைப் போல் பெரும் பேறு இல்லை என்று அப்பால் ஆகி நின்ற சதாசிவ மூர்த்தியை பாசத்தில் உள்ள போதே பற்றி நில்லுங்கள். பாசத்தில் சிவன் பொருந்தியிருப்பினும் அதிலே ஒட்டாத நின்மலன் ஆவான். அவன் பொருந்தியிருக்க பாசமயமான உலகங்களை ஒளிமயமாகச் செய்தான்.
2064. சிவந்த மாணிக்க மாலையைப் போல் ஒளிவிட்டு எழும் புருவ நடுவான மண்டலத்தில் மாற்று உயர்ந்த பொன் போன்ற சிவம் பொருந்திப் பேரின்பமான அமுதை விளையச் செய்தது. இதை அறிந்து விந்து வெற்றியால் அமுதத்தைப் பெருகும்படி செய்பவரே பிறவியற்ற நெறியை அறிந்து வாழ்பவர். இதை உணராதா விலங்கைப் போன்ற மற்றவர் சோற்றுக்குக் கேடாய் வாழ்பவர்.
2065. மலத்துடன் கூடிய ஆன்மா உயிர்த்தன்மை நீங்கவும் கூட்டப்பட்ட பாசப் பற்றுகள் அழிந்து ஒழியவும் சுத்தமாயை அசுத்த மாயை என்னும் இரு மாயைகளையும் நெகிழ்வித்து அணுவாகிய ஆன்மாவை அங்கே கூட்டியவனும் பிரண்வ உபதேசம் செய்பவனும் சிவன் ஆவான்.
2066. மூலாதாரத்தினின்று தலையை நோக்கி ஏறும் பாதையில் உயிரைப் பிணிக்கும் மல இயல்பைச் சுட்டெரித்து மேலே செலுத்தலாலும் முடிவில்லாத நாத ஒலியால் இருளை நீக்குதலாலும் பசுவின் இயல்பான பாசத்தன்மை கெடுமாறு வாடுவதாலும் முத்தியுலகை அடையும்படி உபதேசிக்கும் சிவமே குருவாகும்.
#####