Print this page
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 11:17

மத்திய சாக்கிராவத்தை! அத்துவாக்கள்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மூவாச் சாவா முத்தா ஆவா எங்களுக்கு
அருள்வாய் தமிழ்ச்சுவைச்சார் திருச்செவியாய்
அமிழ்தாய் எம் அகத்தானாய் மழவிளங்களிறே மணியே
குழவியாய்ச் சிவன் மடி குலவுவோய் போற்றி! போற்றி!

#####

மத்திய சாக்கிராவத்தை!

2167. விழிப்பு நிலை விழிப்பு நிலையில் திரோதன் சத்தியால் ஆன்ம விளக்கம் அறிய இய்லாதபடி மறைக்கப்பட்டு நிற்கும். விழிப்பு நிலையில் கனவு நிலையில் ஆன்மா மாயா காரியங்களில் அழுந்தி நிற்கும். விழிப்பு நிலையில் சுழுத்தியில் உறக்கத்தில் கருவிகள் ஓய்வு அடைந்து விரும்பியதில் அதுவாக நிற்கும். விழிப்பு நிலையில் துரிய நிலையில் விரும்பிய பொருளில் அதுவாக நிற்றலை இழந்து மாயை வயப்பட்டு நிற்கும்.

2168. மாயை ஆன்மாக்களுக்குக் கலை முதலியவற்றைத் தூண்டி எழுப்பும். அதனால் இராகம் முதலியவற்றுக்கு ஏற்பச் சீவதுரியம் பொருந்தும். பின்பு சுழுத்தி கனவு நனவு ஆகிய நிலைகளைப் பொருந்திச் சகல நிலையில் உள்ள ஆன்மா ஆயினான்.

2169. பிறவியிலே குருடனும் இடைக்காலத்தில் குருட்னானவனும் என்னும் இருவரும் நடந்து செல்லும் போது முன்பு போன வழியை அறிந்து பொருந்திய தடியைச் கொண்டு வழியை அறிந்து நடப்பர். அங்ஙனமே மூன்று வகைப்பட்ட உயிர் இனங்களும் செயலில் பொருந்தும்.

2170. சிலந்திப் பூச்சு தான் கட்டிய வலையின் நடுவுள் பொருந்தியிருந்து நெருங்கி வரும் உயிர் இனங்களைப் பிடித்துத் தின்னும். அதைப் போல சிவபெருமானும் ஐம்பொறிகளும் வந்து பொருந்தும் மூளைப் பகுதியில் உடன் இருந்து சத்தம் முதலிய புலன்கள் ஐந்தையும் அனுபவிக்கின்றான்.

2171. வைக்க வேண்டியபடி இருபத்தைந்து தத்துவங்களைச் சாக்கிர நிலையில் வைத்து அவற்றையே உபாயமாகக் கொண்டு பொருந்தி எங்கும் உள்ள சிவன் பொருந்தியிருக்கின்றான். நான் அவனை பித்தன் என்றும் பெரியன் என்றும் பிறப்பில்லாதவன் என்றும் எப்போதும் விரும்பிப் போற்றி அவனது அருளைப் பெற்று உய்தி பெற்றேன்.

2172. ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்குடன் புருடன் என்ற தத்துவத்துக்கு வேறாக உள்ள இருபத்தைந்துடன் ஆன்மா, பிரமம், சொல்ல முடியாத வானம் என்பவனவற்றைச் சிறந்த தத்துவங்களாகப் பிரமவாதிகள் கண்டனர். இவ்வாறு வேறான இருபத்தெட்டும் வேதாந்ததுக்குரிய தத்துவங்கள் ஆகும்.

2173. ஆன்மா பொருத்தமாக உடலுள் இடைகலை பிங்கலை நாடிகளில் முறையாகப் பொருந்தி அங்குச் சத்துவ குணத்துடன் புகுந்து மூலாதாரம் முதலாக மூன்று முடிச்சுகளையும் கடந்து கலாதீதப் பொருளான சிவபெருமானின் திருவடிகளைக் காணலாம்.

2174. பத்து நாடிகளுள் நன்மையைத் தரும் பிராணன் முதலிய வாயுக்களும் மூலாதாரம் முதலாக மேலே செல்லும் சுழுமுனையில் ஒடுங்கி இருக்கும். காமப் புணர்ச்சி பெறும் இன்பமும் நன்மையை நாடிய மனமும் இவ்வுட்லில் பொருந்தும்.

2175. ஆக வேண்டியவை ஆகும். போக வேண்டியவை போகும். வரவேண்டியவை வரும். ஆதலால் காக்கும் இறைவன் ஆன்மாக்களுக்கு அனுபவத்தைத் தந்து சாட்சியாகக் கண்டிருப்பான். அதலால் இறைவன் தக்கபடி செய்யும் அருளாளன் ஆவான்.

2176. பத்துப் பொறிகளுடன் தொழில்கள் பத்தும் நான்கு அந்தக் கரணங்களும் இவை பொருந்திய சீவனும் தலையில் மோதும் பிராணனும் உண்மையான வானமும் மேல் முகத்தில் விளங்கும் பிரமமும் வேதாந்தத் தத்துவங்கள் இருபத்தெட்டு என எண்ணத் தக்கவனவாம்.

2177. விளக்கம் உடைய முப்பதுடன் பத்தாகிய முந்நூற்றைச் சேர்த்து அறுநூற்றை வன்மை ஆறை இரட்டிய முப்பதாறுடனே பெருக்குவதால் வரும் சுவாசம் 21600. மூச்சு நடந்தால் ஆணவம் முதலிய மலங்களும் வணங்கி நீங்கும் மூலவாயு மேல் எழுந்து விலங்கும்போது தத்துவஙகளும் அங்கங்கே நின்றிடும்.

2178. தத்துவங்களை வெவ்வேறாகக் கணக்கிட்டால் அவை நான்கு கோடியே நாறபத்தொண்ணாயிரத்து ஐந்நூறு என்று சிறப்பாய அடங்கும். அவற்றைப் பகுத்து தொகுத்தால் தொண்ணூற்று ஆறுள் அடங்கும். அவற்றை மேலும் சுருக்கினால் இருபத்தைந்துள் அடங்கும்.

2179. மாயையின் காரியம் ஆன தத்துவங்கள் பொதுவாகத் தொண்ணூற்று ஆறு ஆகும். அரிய சைவர் கொண்டுள்ளது முப்பத்தாறு தத்துவங்கள் வேதாந்திகளுக்கு இருபத்தெட்டு தத்துவங்கள் வைணவ சமயத்தார்க்கு இருபத்து நான்கு தத்துவம் மாயாவதிக்குரிய தத்துவம் இருபத்தைந்து.

2180. தத்துவங்களைத் தம் வசம் அடங்கி நிற்கும்படி செய்தால் மிகவும் சமர்த்தன் உடையவனாக விளக்கம் பெற்று விளங்கலாம். பிராண வெற்றி மற்றப் பொய்யான நெறி அகன்று விடும். அதை உணர்த்தும் நெறி அகார எழுத்து அறிவாகும்.

2181. முப்பத்தாறு தத்துவங்களும் ஆன்மா பொருந்தாத போது அறிவற்றவை. அங்ஙனமிருந்தும் அவற்றை அறியும் என்னை நான் அறியாமல் இருந்தேன். என் குரு நீ அதை அறியும் ஆற்றல் வாய்ந்தவன் என்று உரைத்தான். அதனால் நான் அதை அறியும் ஆற்றல் உடையவன் என்பதை உணர்ந்தேன்.

2182. நனவில் நனவு முதலிய அவத்தையில் சிவ தத்துவம் ஐந்தும் பொருந்தும். அவற்றை மலத்தைக் கார்ணமாக உடைய இந்த நனவு முதலிய ஐந்து அவத்தைகளால் போக்கி இவற்றுடன் பொய்யான முப்பத்தாறு தத்துவங்களையும் அகற்றி ஆன்மா பிரணவநெறி நின்று சிவத்துடன் பொருந்தி நிற்கும்.

2183. நான்முகனுக்கு ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்னும் ஐந்து மலங்களும் உள்ளன. திருமாலுக்கு ஆணவம், கன்ம, மாயை திரோதாயி என்னு நான்கு மலங்கள் உள்ளன. உருத்திரனுக்கு ஆணவம் கன்மம் திரோதாயி என்ற மூன்று மலங்கள் உள்ளன. மகேசுவரனுக்கு ஆணவமும் திரோதாயும் உள்ளன. சதாசிவனுக்கு ஆணவம் ஒன்று மட்டும் உளது

#####

அத்துவாக்கள்!

2184. மெய்கள்- தத்துவங்கள் முப்பத்தாறு மந்திரங்கள் எழுவகையான முடிவைக் கொண்டன. உண்மையில் வழங்கும் எழுத்துக்கள் ஐம்பத்தொன்றாகும். புவனங்கள் இருநூற்று இருபத்து நான்காகும். பதங்கள் என்பவை எண்பத்தொன்று. கலைகள் ஐந்து இவை படைப்பில் வந்தவை.

2185. திங்கள் கதிரவன் அக்கினி மும்மண்டலங்களின் நன்மையை அறிந்து மூலம் முதலாக மேலே செல்பவர் தங்களுடன் உடம்பில் உள்ள இருபத்தைந்து தத்துவங்களை அறிந்து கூடுவர். அவ்வாறு கூடிச் சகசிர தளத்தில் மேல் ஏறும் வழியை அறிந்து போய்த் தேடி அடைந்தபின் தத்துவங்களின் வழிச் செல்லாதவராய் விளங்கினர்.

2186. சாக்கிரத்தில் சாக்கிரம் முதலிய நிலைகளில் சிவ தத்துவ உணர்வை முதன்மையாகக் கொண்டு இந்தப் பருவுடலில் எல்லையான பிரமரந்தரம் வரை போய் அதன் மேல் உள்ள துரியாதீதம் ஆன துவாதசாந்தப் பெருவெளியில் கலந்து அன்பு வடிவான ஆனந்தக் கூத்தை கண்டு அந்த இன்பம் விளங்கும் சுத்த வித்தை முதலிய ஐந்தும் ஆன்மா சிவசத்தியோடு கூடிப் பொருந்தியிருக்கும்.

#####

Read 1747 times Last modified on செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:35
Login to post comments