Print this page
செவ்வாய்க்கிழமை, 07 July 2020 12:15

அறிவுதயம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மழைபொழி இமயவல்லி சேய் தழைசெவி எண்தோள்
தலைவ திங்கட் சடையோன் செல்வ எங்கட்கு அருளும்
இறைவா ஆறுமுகச் செவ்வேட்கு அண்ணா
சிறுகண் களிற்றுத் திருமுக போற்றி! போற்றி!

#####

அறிவுதயம்!

2355. ஆன்மாவான தன்னை அறிவுரு என்று அறிந்தால் கருவி கரணங்களுடன் பொருந்தி மயங்க வேண்டிய நிலை வராது. தான் அறிவுரு என்பதை அறியாமல் ஆன்மா தனது அஞ்ஞானத்தால் கருவி கரணங்களுடன் பொருந்திப் பிறவியில் சிக்கி வருந்துகின்றது. கருவி கரணம் இல்லாமல் தானே எல்லாவற்றையும் அறிய வல்ல ஒளிவடிவு என்ற அறிவை ஞான சாதனத்தால் அறிந்தபின் தன்னை உலகவர் வணங்கும் படியான சீவ வடிவமாகத்தான் இருந்தான்.

2356. அறிவு பெற்ற ஆன்மா அவ்விடத்து வலிமையும் பெருமையும் மிக்க நான்முகன் அரி முதலான தேவர்கள் அனைவரும் வணங்க அரியணையில் சிவபெருமானே வீற்றிருக்கின்றான் எனக் கருதி சங்கால் ஆன வளையலும் கால் சிலம்பும் ஓசை எழுப்ப மிக்க கூந்தலை உடைய பராசத்தியும் தேவர்க்கும் பிறர்க்கும் அருளுவாயாக என சொன்னாள்.

2357. எதையும் கருவி கரணம் இல்லாமல் அறியும் ஆற்றல் எனக்கு உண்டு என்பதை நான் அறியாதிருந்தேன்.. இத்தகைய என்னை என்னுடைய இயல்பான வடிவம் அறிவு தவிர வேறு இல்லை என்று அவன் அருளால் உணர்த்தினான். நான் அறிவு வடிவானவன் என்பதை அவனது சத்தியால் உணர்த்தப்பட்டபோது உணர்ந்து நான் அறிவு வடிவை உணர்ந்து கருவி கரணங்களை விட்டு அறிவாகவே இருந்தேன்.

2358. அறிவு வான் மண்டலத்தில் நுண்மையாய் உள்ளது. ஆதலால் அது எவ்விதமான தூல மாறுதலாலும் பாதிக்கப்படுவது இல்லை. அதனால் அதற்கு வளர்ச்சியும் இல்லை. ஆன்மா என்ற அறிவுப் பொருளுக்குப் பேரறிவான சிவத்தையே அல்லாமல் வேறே ஆதாரம் இல்லை. ஆதலால் அருவுருவான ஆன்மா பேரறிவான சிவத்தை அறிய முற்படுகின்?றது என்று வேதமுடிவுகளான உபநிடதங்கள் கூறுகின்றன.

2359. ஆதார் கமலங்களில் சிறந்த அனாகதச் சக்கரத்தின் மீது பரந்த விசுத்திச் சக்கரத்தில் பதினாறு இதழ்கள் கண்டத்தில் உள்ளன. தூய்மையான ஆன்ம அறிவு சிவானந்தம் பொருந்தி விசுத்தி சக்கரத்தை கடந்து பேரறிவாய் அதனுடன் கலந்து விளங்கும்.

2360. சிவ சிந்தனையில் இடைவிடாமல் நிற்பவரிடம் வந்து சுத்த மாயா காரியமான நாத தத்துவத்தில் வெளிப்படும் அவனை நினைத்தேன். அந்த முதல்வனும் பொன்னொளியில் சிறந்து விலங்கினான். அப்பெருமானின் நிகர் அற்ற புகழையுடைய பொன்னார் மேனியனைக் கூடி நின்றேன். அவனும் நீ பெரியவன் என்று அருள் கூர்ந்தான்.

2361. ஆன்ம அறிவு என்பது பேரறிவின் வயமானது என்று ஊர்ந்து அதனிடம் அன்பு காட்டுங்கள். அப்போது அகண்டகாரப் பேரறிவுப் பொருளான சிவமும் உங்கள் அறிவில் பொருந்துவான். உங்களது அறிவு அவனது அறிவால் அறிந்தால் அணிமா முதலிய சித்திகள் யாவும் கைகூடப்பெறும். அப்போது சிவன் உங்கள அறிவைத் தன் அறிவாகக் கொண்டவன் என்பது புலனாகும்.

2362. உலகத்தவர் அறிவு அறிவு என்று ஓயாமல் கூறுகின்றனர். அவர்கள் சொல்லும் அறிவு பாச அறிவாகிய அறியாமை என்பதை எவரும் அறியவில்லை. பாச அறிவைக் கடந்து சிவஞானமாகில் உயிர்களிடமுள்ள பாச அறிவு என்ன இலக்கணம் உடையது என்பது புலனாகும்.

2363. அறிவையும் அறியாமையும் நீங்கியவனே ஞானேந்திரியங்களைக் கடந்து அகண்டத்தில் ஒன்றான போது அவ்வறிவாய் அவ்வறிவுள் அடங்குபவனாகச் சிவ அறிவில் நீக்கம் இல்லாமல் நிறைந்தவன் சிவனே ஆவான்.

2364. ஞானியரின் உள்ளமே பரந்த உலகம். அவ்வுள்ளமே செயற்கரிய தவம் நிறையப் பெற்றது. அவர்களின் உள்ளத்தில் ஆதி மூர்த்தி சிவனும் கோயிலாகக் கொண்டு எழுந்தருளியிருக்கின்றான்.

2365. திருமால், நான்முகன், உருத்திரன் என்ற மூன்று வடிவமாய் உடல் உற்பத்திக்குக் காரணமான சிவபெருமான் தொலைவில் இருப்பவனாகவும் அண்மையில் உள்ளவனாகவும் சுவையான கரும்பானவனாகவும் அமுதமாகவும் நின்று இனிப்பவனாயும் உள்ளான்.

2366. நான் பாச நிலையில் பொருந்தியபோது என் உண்மைச் சொரூபம் ஒளியேயாகும் என்பதை அறியாமல் இருந்தேன். நான் ஒளி வடிவினன் என்று அறிந்த பின்பு என்னை முன்னம் தளைப் படுத்தியிருந்த தத்துவங்களை - இருளை நான் அறியவில்லை. அவ்வாறு நான் என் உண்மை வடிவத்தை அறிந்திருந்தும் என் முதல்வன் என்னுடன் இருந்தே என் நிலையைக் கேட்டுக் கொண்டு உள்ளான்.

2367. பெத்த (மலத்தால் கட்டப்பட்ட) நிலையில் உள்ளவர்க்கு ஆன்ம வடிவம் உடலுடன் பொருந்தியிருந்தும் விளங்காதபடி மறைந்திருக்கும் ஞான நிலையில் உள்ளவர்க்கு ஆன்ம வடிவம் விளங்கி ஒளி பெற்று நிற்கும். அஃது உடம்பிலே இருந்து சூட்டைத் தந்து கொண்டிருக்கும். அத்தகைய செம்மையான சோதிமயமான விளக்கினைத் தேடுகின்றேன்,

2368. சிவம் என்கிற விளக்கை எட்டுத் திக்குகளிலும் மேல் கீழ் என்ற இடங்களிலும் தேடுகின்றேன். இன்பமே வடிவான இறைவனின் திருவடிக் கரணங்களைத் தேடுகின்றேன். பரம்பொருளே தக்க துணை என அதைப் பாடுகின்றேன். நிறைந்த மனத்தால் அந்தப் பரம் பொருளைக் கூடுகின்றேன்.

2369. நான்முகன் படைப்பில் முதலில் படைக்கப் பெற்ற உயிர்கள் பெரிய ஆணவ மலச் சார்புடையவனாக இருந்தனர். அத்தகையவர் அரன் அருளால் அதனை நீக்கி ஆன்மாவான தன்னை அறிந்து பழமையான தலைவனின் திருவடியைப் பொருந்திச் சிவமாம் பெருநிலையை அடையின் பிறப்பு வராது.

#####

Read 1661 times
Login to post comments