Print this page
வியாழக்கிழமை, 16 July 2020 12:31

மோன சமாதி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

விநாயகனே வல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!

#####

மோன சமாதி!

2936. பிரணவ யோகத்தில் நிற்கிறார். இருக்கிறார். கிடக்கிரார் என்பது இல்லை. நாதாந்த நிலையில் சித்தம் அடங்கி இருப்பதே ஒடுக்க நிலையாகும். தலையின் மீது அறிவாகாயப் பெருவெளியில் உயிர் அறிவுக்குப் புலப்படாத சிவம் இருக்கின்றது. நாத வழியில் போய் நதாந்தத்தை அடைந்தவர் சேரும் வழி இதுவேயாகும்.

2937. காட்டும் குறிகளையும் அடையாளங்களையும் கடந்தவன் மூலப் பொருளான சிவபெருமான், அப்பொருமானைப் பற்றி நூலில் எழுதி வைத்து என்ன பயன். உண்மையான ஞானத்தைக் கூட்டி வைக்கின்ற ஞான குருவான சிவன் உணர்த்தினால் அல்லாமல் ஆட்டின் கழுத்தில் பய்ன்படாமல் தொங்கும் சதைப் பிடிப்பைப் போன்று ஏட்டுப் படிப்புப் பயன் அற்றதாகும்.

2938. சிவவுணர்வு உடையவர்க்கு யாவற்றையும் இருந்த இடத்தில் இருந்தே அறியும் திறம் இருக்கும். அந்நன்மை வய்ந்தவர் எப்போதும் சிவத்திடம் தொடர்பு கொண்டிருந்தலால் அவர்கள் எதற்கும் கவலைப் பட மாட்டார்கள். முன்பே உணர்வைத் தன்பால் கொண்ட குருவானவர் மாணவனுக்கு உணர்த்த அவன் இருந்த போது உணர்வைப் பெற்ற மாணவர் தம் சுய அனுபவத்தில் சிவத்தை காணும்பேறு பெற்றவர்.

2939. தன் அறிவுக்கு உலகம் தோன்றாதபடி மிக நுட்பமாக நுண்மையான மண்டலத்தில் விளங்கிக் கொண்டிருப்பவன் மௌன யோகி. அவன் மீண்டும் பிறக்க வேண்டிய நியதியைக் கடந்து மற்றவர்க்கு அருளும் இயல்பினன. எல்லாச் சிறப்பும் உடையவன். சிவசத்தியும் தானும் பொருந்தி உலகை அறியாமலும் தன்னை அறிந்தும் இருப்பவன் ஆவான்.

2940. சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் மூன்றையும் கடந்து விளங்கும் பேரொளியில் அரிய துரிய நிலைக்கு மேல் உள்ள மூன்று நிலைக;ளிலும் பொருந்தி விரிந்தும் குவிந்தும் அனுபவித்தும் கடந்து வாயால் சொல்ல முடியாத அனுபவ நிலையில் இப்பயிற்சியாளன் இருக்கின்றான்.

2941. சிவபெருமான் மாயையின் காரியமான வடிவம் இல்லாதவன். ஊன் உடல் இல்லாதவன். ஒரு குறையும் இல்லாதவன். பராசத்தியை உடலாகக் கொண்டவன். தீமை ஏதும் செய்யாதவன். நான்முகன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் ஆகிய ஐவருக்கும் தலைவன் ஆவான். ஒப்பு இல்லாதவன். பூதப்படையை உடையவன். தனக்கு ஓர் ஆதாரம் இல்லாதவன். இத்தகைய சிவன் என் உள்ளத்தை இடமாகக் கொண்டு அமர்ந்திருக்கின்றான்.

2942. எடுத்துள்ள உடலில் சிவத்தைக் கண்டு வழிபடுபவர் ஒருவரும் இல்லை. ஆனால் எட்டுத் திக்குகளில் உள்ளவரும் சிவன் எல்லா இடங்களிலும் உள்ளான் என்று ஏத்துவர். இந்த மண்ணுலகைக் கடந்த எல்லையில்லாத சிவானந்தத்தைக் சாதகர்கள் அனுபவித்து நிற்கும் முறையை நாம் அறியவில்லை.

2943. சிவன் ஒன்பது வகையான பேதம் உடைய பரமும் அல்லன். அருவமான சதாசிவன் அல்லன். அருவம் ஆனவன் அல்லன். உருவத்துடன் கூடியவனும் அல்லன். அதிசயமாய் அனுபவிக்கின்ற காம இன்பம் போல் ஆன்மாவில் கற்பனை இல்லாமல் உண்மையாகவே பொருந்தி இன்பத்தை தருபவன்.

2944. முகத்தில் பொருந்திய கண்களால் புறப் பொருளைக் கண்டு மகிழ்கின்ற மூடர்களே. அறிவுக் கண் கொண்டு அக வுணர்வைக் காண்பதே உண்மையான சிவானந்தம் ஆகும். ஒத்த உறுப்பும் நலமும் உடைய மகளுக்குத் தாயானவள் தன் கணவனுடன் கூடிப் பெற்ற இன்பத்தை வாயால் சொல்ல வேண்டும் என்று மகள் விரும்பினால் தாய் எப்படிச் சொல்ல முடியும்.

2945. நீரில் கரைந்த உப்பு நீராய் இருப்பது போல் அத்தனான சிவன் ஆன்மாவைப் பொருந்தி ஆன்மா பரமாகவும் சிவன் பராபரமாகவும் இருந்தாலும் இரு பொருளாய் விளங்குவதில்லை. தத்துவமசி என்னும் பெருவாக்கியத்தில் மூன்றாவது பதமான அசிபதம் அழிய தத் ஆன சிவம் துவம் ஆகிய ஆன்மாவை மூடிக்கொண்டு தன்னைப் போலவே ஆன்மாவைத் தகுதி உடையதாக்கிவிடும்.

2946. பார்ப்பவருக்கு எட்டிப்பழம் கவர்ச்சியாய் இருக்கும். அதுபோல் உலகம் மிகவும் கவர்ச்சி உடையது. ஆனால் அந்த எட்டிப்பழத்தை தின்றவர்க்குக் கசப்பைத் தருவதைப் போன்று உலக வாழ்க்கையும் அனுபவித்த பின்பு கசப்பைத் தரும் என்பது புலனாகும். பெண் என்பவள் பக்குவம் அடைந்து மடந்தை ஆவதுபோல் சீவன் உலக அனுபவத்தில் கசப்புத் தோன்றிப் பக்குவம் பெற்ற போது சிவன் சீவனிடத்தில் விளங்கி நிற்கும்.. நிற்க சீவனும் சிவபோகத்தில் இன்பம் அடையும்.


2947. தத்துவக் கூட்டத்தின் நடுவில் இருந்து எல்லாத் தத்துவங்களையும் நடத்திக் கொண்டிருக்கும் ஆன்மாவிடம் சிவம் விளங்கினான். அவன் விளங்கியதால் அவனை அடைவதற்குரிய சமாதிப் பயிற்சியும் தேவை அற்றதாயிற்று. மணிபூரகத்திலிருந்து தோன்றி எழுகின்ற சிவக்கதிரவனை எனது அறிவால் நான் கண்டு கொண்டேன். அவனுடன் ஒன்றானேன்.

2948. ஞான சாதனையில் தளர்ச்சி அடையாமல் தத்துவங்களுக்கு வேறாகச் சிவத்தை நினைந்து நடுக்கம் ஏதும் இல்லாத நாத சம்மியம் செய்து ஓட்டம் எடுக்கின்ற மாயையை விட்டு நீங்கிக் கற்பனையைக் கடந்த சோதியான சிவத்தில் ஒழுகினேன்.

2949. தேவர்கள் சகசிரதளத்தில் விளங்கும் சிவனது செம்மையன திருவடிகளைப் பொருந்தார்கள். அறநெறி நாள் தோறும் தழைக்கப் பெருமை பொருந்திய அக்கினி மண்டலத்தில் சென்று அமுதம் விளையும்படி விரும்பமட்டர். அவர்கள் அமுதத்தை அடைய விரும்பமாட்டார்.

2950. அந்த காம இன்பத்துக்கு என்று உள்ள காதலர் ஒருவர் பேச்சினை மற்றவர் கேட்டதும் விரைந்து காமம் தோன்றும் அது போன்ற அந்தக் கராண விருந்தியைக் கடந்து நிற்கும் குருவைப் பார்த்ததும். தேன் சிந்தும் கொன்றை மாலையைப் போன்ற மஞ்சள் ஒளியில் சிவமும் வந்து இன்பத்தை அளிப்பான்.

2951. சிவசிந்தனைக் கண் கூட்டில் உடல் பற்று அகன்றது. பொருள பற்று அகன்றது ஊனாலான உடலில் வேட்கையும் கெட்டது. உயிர் பற்றும் விட்டது. வெளியே செல்லும் மனமும் கெட்டது. பின்பு என் இச்சை என்பதும் கெட்டது. எப்படி இது நிகழ்ந்தது என்பதை நான் அறியேன்.

2952. இருள் மயமான தத்துவங்களை நோக்காமலும் ஒளிமயமான சிவத்தை சுட்டி அறியாமலும் சிவத்தோடு சேர்ந்த சீவனாய் வேறுபாடு அற்றுப் பொருந்த அருளால் தன் நிலைகெடும் அப்பொழுது சிவத்தின் திருவடிக்குச் சென்று தவறாமல் கல்போல் மனம் பொருந்துமாறு நின்றேன்.

2953. என் உள்ளத்தில் பொருந்தி பரமாகவும் அபரமாகவும் இருக்கும் இறைவனை அறிந்தேன். என் மனத்தினுள்ளே நிலைப் பெற்று சிவசத்தியை அறிந்தேன். சீவனும் சிவனும் புணரும் முறையை அறிந்தேன். எனக்குள் விளங்கும் இறைவனுடன் பொருந்தி நான் பல யுகங்களைக் கண்டேன்.

#####

Read 1721 times
Login to post comments