ஓம்நமசிவய!
பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில்
போற்றுகின்றேன்உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
#*#*#*#*#
26.கோவில்- எப்படி நடந்து கொள்ள வேண்டும்!
கோவில்களில் நுழைந்ததும் அல்லது அதற்கு முன்பாகவே இருக்கும் விநாயகருக்கு முதல் மரியாதை அளித்து அவரை வழிபட்டு உள்ளே செல்லுங்கள். அரச மரத்தடியில் விநாயகர் இருந்தால் கண்டிப்பாக சுற்றி வாருங்கள். அரச மரத்தின் வேர்ப்பகுதியில் பிரம்மாவும் மத்தியில் விஷ்ணுவும் மேலே சிவனும் இருப்பதால் அந்த நினைவுடன் சுற்றுங்கள்.
பலிபீடம்: மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை மலர் வடிவம் போன்றது. ஆகம விதிகளின் படி அமைக்கப்பட்ட தலங்களில் உள்ள பலிபீடங்கள் நம் வாழ்வை மேம்படுத்தும் ஒன்றாகும். பலி பீடத்தின் அருகில் சென்றதும் ஆன்மாவில் உள்ள ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மும்மலங்களையும் நான் என்ற அகங்காரத்தையும் பலியிட வேண்டும் மேலும் அந்த இடத்தில் நம்மிடம் உள்ள மோசமான குணங்களை பலியிடவேண்டும் என்பதாகும். இது ஆலயவழிபாட்டில் மிகவும் முக்கியமானது.
மனித உள்ளங்களில் போட்டி, பொறாமை, காமம், குரோதம், கோபம், தாபம், சூது, வாது, வஞ்சனை, ஆகிய குணங்கள் நீக்க முடியாதவனவாக இருக்கலாம். இக்குணங்கள் ஒருவரின் மனதில் இருந்தால் அதனால் வேண்டாத எண்ணங்கள் குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும். அவற்றிலிருந்து விடுபட பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிட மனம் தெளிவாக இருத்தல் வேண்டும். அப்போது தான் கோவிலில் நிறைந்துள்ள இறை அதிர்வுகள் நம்மீது பரவி நம் பிரச்சனைகளுக்கு நம்மால் தீர்வு காண இயலும். எனவே மனதில் உள்ள தீய குணங்களை வெளியேற்ற அந்த பலிபீடத்தில் தீய குணங்களை எண்ணங்களை பலிகொடுக்க வேண்டும் என்று நிறுவப்பட்டுள்ளது.
பாதுகா, ஜகதி, குமுதம், குமுத பத்திகம், கலா கம்பம், நிதிரவம், சுபோதன், அசுரபத்தி, பத்மம் என்று பலவகை பலிபீடங்கள் இருந்தாலும் அவைகள் பத்ர லிங்கம் என்றழைக்கப்படும்.
மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும்போதோ நைவேத்தியம் படைக்கும் போதோ பலிபீடத்தை வழிபடக்கூடாது.
பலி பீடத்தை வணங்கியபின் நம் மனதில் தீயவைகளை பலியிட்டு விட்டதால் நம் மனதில் மேலான சிறப்பான எண்ணங்கள் இருப்பதாக நினைவு கொள்ளல் என்பது முக்கியம். அதே நல்ல மனநிலையுடன் இறைவனை வழிபடும்போது அவர் அருள் நம்மை கண்டிப்பாக நம்மை ஆக்ரமித்து ஆசீர்வதிக்கும்.
பிறப்பி இறப்பு எனும் மாயச் சக்ரமாக பலிபீடத்தைக் கருதி வழிபடும் போது ஸ்தூல சூட்சம காரண சரீரங்களிலிருந்து என்னை விடுவித்துவிடு என்பதற்குச் சமமாகும்.
பலிபீடத்தில் உப்பும் மிளகும் போட்டு வழிபடுவது உப்பாகிய உடம்பையும் மிளகாகிய ஆணவத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து விட்டேன் என்பதன் அடையாளம். இதனால்தான் மாரியம்மன் திருவிழாவில் தேருக்கும், கம்பத்திற்கும், உப்பும் மிளகும் போடுவது வழக்கமானது.
பொதுவாக கோவில்களில் எட்டு மூலைகளிலும் எட்டு பலிபீடங்கள் வைப்பது இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்ற எட்டு திக் பாலகர்களைக் குறிக்கும்.
பலிபீடங்கள் அருகில் நின்று நிதானமாக வழிபடுங்கள். மனித குணங்களை மேம்படுத்துவை பலிபீடங்கள்.
ஸ்வாமிக்கும் அதற்கு முன் இருக்கும் வாகனத்திற்கும் இடையில் செல்லக்கூடாது. ஆடவர்கள் மேலாடையின்றி இறைவனுக்கு வலது பக்கமும் பெண்கள் இறைவனுக்கு இடது பக்கமும் நின்றுதான் வழிபடவேண்டும். அப்படி மாறி நிற்பவர்களை அர்ச்சகரும் ஒன்றும் சொல்வதில்லை. தங்களுடைய வருமானம் கருதி இதுபோன்ற முறைகளை அவர்கள் சொல்லுவதில்லை. இறை சன்னதியில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனத் தெரியாதவர்களுக்கு அவற்றைச் சொல்லித் தருவதில் தவறேதுமில்லை. யாராயிருந்தாலும் நமது இறை வழிபாட்டு முறைகளை நெறிப்படுத்த தெரிந்த ஒருவர் தெரியாத யாருக்கும் சொல்லலாம். அது அனைவருக்கும் நல்லது.
மணக்கோலத்தில் இருப்பவர்களை இறைவனுக்கு இடப்பக்கம் மணப்பெண்ணை நிறுத்தி அவர் அருகில் மணப்பையனை நிறுத்தி அர்ச்சனை செய்து மானசீக ஆசீர்வாதம் வேண்டி வழிபடவேண்டும். ஆண்கள் இருகைகளை உயர்த்தி தலைக்குமேல் கரம் குவித்து வணங்கவேண்டும்., பெண்கள் இரண்டு கையையும் நெஞ்சுக்கு நேராக வைத்து வணங்க வேண்டும்.
விநாயகர் சந்நிதியில் ஆண்கள் தோப்புக் கரணம் போடுவதைப் பார்த்த பெண்களெல்லாம் அதுமாதிரி செய்கின்றார்கள். அது தவறு. பெண்கள் தலையில் இரு கைகளாலும் குட்டிக் கொண்டால் போதுமானது.
கோவிலில் தரப்படும் சிட்டிகை விபூதி மற்றும் குங்குமத்தை அவரவர் நெற்றியில் இடவேண்டும். மீதியிருந்தால் அதை ஒரு பேப்பரில் வைத்து பாதுகாப்பாக வீட்டிற்கு கொண்டு சென்று கோவிலுக்கு வர முடியாத நிலையில் இருக்கும் பெரியவர்கள் நோயாளிகளுக்கு கொடுக்கவும். உடனே அடுத்த கைக்கு மாற்றிக்கொளவது, அருகில் இருக்கும் தூண்களின் இடுக்கில் போடுவது எல்லாம் தவறு. இறைவனுக்கு தீபராதனைக்காட்டி கொணர்ந்த விபூதியைப் பிரசாதமாகப் பெற்று அதை முறையாக உபயோகிக்க வேண்டும். ஒரு சிட்டிகை விபூதி உலகத்து செல்வம் எல்லாம் தரவல்லது என்பதால்தான் கோவிலில் பூஜை முடிந்ததும் ஒரு சிட்டிகை விபூதி பிரசாதம் தரப்படுகின்றது. அதை உபயோகிக்கும் பக்தர்களைப் பொருத்தது அதன் மகிமை. ஈசன் குபேரனை மன்னித்து ஒரு சிட்டிகை விபூதி அளிக்க அதை அவன் ஓர் சிமிழில் வைத்து பூஜை செய்து வந்தான். உரிய காலம் வந்ததும் உலகத்து செல்வம் எல்லாவற்றிற்கும் அவனே அதிபதி ஆனான்.
கோவிலுக்கு வந்தால் ஆண்களாயிருந்தாலும் சரி பெண்களாயிருந்தாலும் சரி சொந்தங்களை, நண்பர்களைப் பார்த்து நலம் விசாரித்து உலக விசயங்களை பேச ஆரம்பித்து விடுகின்றோம். தற்போது அது மூல ஸ்தானத்தில் நிற்கும்போதுகூட நடைபெறுகின்றது. அது தவறு. எதற்காக கோவிலுக்கு வந்தீர்களோ அந்தக் கடமைதனை செவ்வனே செய்து இறையருளை வேண்டி வழிபட்டபின் கோவிலில் அமர்ந்து செல்லச் சொல்லியிருக்கின்றார்கள் நம் பெரியோர்கள். அப்போது உங்கள் சொந்தங்களை நட்பை உங்கள் நேரம் அறிந்து உணர்ந்து அளவளாவுங்கள். அதுவே சிறந்தது. அதைவிடுத்து கோவிலின் மற்ற இடங்களில் யாரைப் பார்த்தாலும் பேசிக்கொண்டிருக்காதீர்கள். கோவிலின் ஆன்மீக அமைதி சந்நித்யம் ஆகியவற்றிற்கு கேடு செய்யாதீர்கள். மேலும் பூஜை மற்ற கோவில் நிகழ்வுகளில் தலையிடாதீர்கள். அதற்கு கோவில் நிர்வாகிகள் இருக்கின்றார்கள். அப்படி தலையிட்டால் உங்கள் பக்தியின் தரம் தாழ்ந்துவிடும். இறைவனை சேவிக்க வந்தவர்கள் தங்கள் நோக்கத்தில் கருத்தாக இருந்து தெய்வ தரிசனம் செய்தால் போதுமானது.
கோவிலைச் சுற்றி வரும்போது அவசரகதியில் ஓடிவருபவர்களைப் போல் சிலர் பிரதட்சனம் செய்வர். அது தவறு. கோவிலுக்கு வருபவர்கள் அதற்கு என்று நேரத்தை ஒதிக்கிவிட்டு வாருங்கள். கோவிலில் பிரஹாரத்தை சுற்றும்போது நிதானமாக இறை சிந்தனையுடன் முறையாக இறைவனுக்கு வலமிருந்து ஆரம்பித்து இடப்பக்கமாக சென்று ஒருமுறை அல்லது மூன்றுமுறை சுற்றவும்.
எல்லா சுற்றும் வழிபாடும் முடிந்தபின் துவஜ ஸ்தம்பம் அருகில் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்கார முறையில் முழுமையாக விழுந்து வணங்க வேண்டும். பெண்கள் மண்டியிட்டு வணங்க வேண்டும். துவஜஸ்தம்பம் அருகில் தவிர வேறு எங்கும் விழுந்து வணங்க கூடாது.
துவஜஸ்தம்பத்தின்முன் வணங்கியபின் கோவிலில் ஓர் பகுதில் சிறிது அமர்ந்து பின் உங்களது இருப்பிடத்திற்குச் செல்லுங்கள்.
#*#*#*#*#