Print this page
ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 09:42

புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சிவ வடிவங்கள்(10)

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஓங்கார முகத்தொருத்தல் போற்றி!
ஏங்கா துயிர்க்கருள் இயற்கை போற்றி!
எண்ணும் எழுத்துமாய் இசைந்தாய் போற்றி!
பண்ணூம் எழுத்துமாய் பரந்தாய் போற்றி!
அருவே உருவே அருவுருவே போற்றி!
பொருளே பொருளின் புணர்ப்பே போற்றி! போற்றி!

புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சிவ வடிவங்கள்(10)

1.கஜாரி-ஆணை உரி போர்த்த அண்ணல்

தாருகாவனத்து முனிவர்கள், அவர்களின் பத்தினியர்களின் அகந்தையை அழிக்க சிவபெருமான் பிச்சை உகுக்கும் பெம்மானாகவும், திருமால் மோகினியாகவும் வடிவங்கள் கொண்டு தாருகாவனம் வந்தனர். ஆடையற்றுப் பிச்சை உகுக்கும் கோலம் கொண்டவரின் அழகில் முனிபத்தினியர் மயங்கியதால் அவர்களின் கற்பு நெறி கெட்டது. மோகினியின் அழகில் மயங்கியதால் முனிவர்களின் ஒழுக்கமும், தவமும் கெட்டன. இதற்கு காரணமான பிச்சை உகுக்கும் பொம்மான் மீது கோபம் கொண்டு அபிசார வேள்வி செய்து அதிலிருந்து தோன்றிய பல்வேறு பொருட்களை அவர்மீது ஏவினர்.
அவை எல்லாம் அவருக்கு ஆடையாகவும், அணிகலனாகவும், படைகளாகவும் மாறியதைக் கண்ட முனிவர்கள் பயந்து ஒரு மதயானையை வேள்வித் தீயிலிருந்து வரவழைத்து ஏவினர். சிவபெருமான் அனிமா சக்தியால் சிற்றுருவமாய் யானையின் வயிற்றுக்குள் புகுந்து கலக்க யானை வலிதாங்காமல் அலறியது. பெருமான் யானை வயிற்றுக்குள் இருந்த காலம் உலகம் இருண்டது. ஐயனைக் காணாமல் அம்பிகை அஞ்ச பெருமான் யானை வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளிவந்தார். யானையின் தோலை உரித்து தன் உடம்பின்மேல் போர்த்தி வீர நடனம் செய்தார். முருகன் தந்தையை ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்ட முனிவர்கள் அறிவு மயக்கம் தெளிந்து பெருமான் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர்.
எட்டு திருக்கரங்களில் வலது கைகள் பாசத்தையும், யானையின் தோலையும், திரிசூலம், வாள் ஆகியவற்றுடனும் இடக்கைகள் மண்டையோடு, கேடயம், மணி, யானையின் தோலையையும் பற்றியிருக்க, இடது திருவடி யானைத் தலையை உறுதியாக மிதித்துக் கொண்டும் மற்றொரு காலை தொடைக்குமேல் உயர்த்தி வளைந்து கஜசம்ஹார நடனமாடியபடி இருப்பர். அனைத்து அணிகலன்களுடன் கருஞ்சிவப்பு வண்ணத்துடன் காட்சி. அருகில் குமரனுடன் பெருமானின் உக்கிரம் கண்டு நடுங்கிய நிலையில் அம்பிகை. காட்சி: வழுவூர், திருச்செங்காட்டங்குடி, விருத்தாசலம், திருத்துறைப் பூண்டி, பேரூர், காஞ்சி, தஞ்சை கோவில்களில்.

2.கஜமுக அனுக்கிரக மூர்த்தி-விநாயகருக்கு அருளியது.

உமையுடன் சிவபெருமான் பொழில்கள் நிறைந்த பகுதியில் உலாச் சென்றபோது ஆண்யானையும் பெண்யானையும் இனைந்து இருக்கும் சித்திரத்தைக் கண்டு அதிலேயே லயித்திருக்க அப்போது ஓங்கார வடிவினராகிய ஆனைமுகன் தோன்றி பணிந்து வணங்கினார். அப்போது பெருமான், மகனே கணங்களுகெல்லாம் தலைமையேற்று கணபதி என்று போற்றப்படுவாயாக, எல்லோரும் உன்னைப் போற்றிய பின் எந்தச் செயலையும் தொடங்குவர். உன்னை வழிபடுவோரின் துன்பங்களைக் களைந்து அருள் புரிவாய். மேலும் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் துன்பம் அளிக்கும் கஜமுகாசூரனை கொன்று அவர்களின் துயர் துடைப்பாய் என அருளினார்.
மாகதர் என்ற முனிவருக்கும் விபுதை என்பவருக்கும் பிறந்தவன் அசுரன் கஜமுகாசூரன். சிவபெருமானை தியானித்து தவமிருந்து தேவர்களை வெல்லும் ஆற்றல் பெற்றான். நவ நிதிகள், பஞ்சதருக்கள் ஆகிவற்றை தனக்கு பணிவிடைகள் செய்யப் பணித்தான். தேவர்கள் தன்னை தினமும் வணங்க வேண்டுமென ஆணையிட்டான். வணங்கும்போது மூன்று முறை தலையில் குட்டிக்கொண்டு தோப்புக் கரணம் போட வலியுறுத்தினான்.
இந்திரன் முதலான தேவர்களின் துன்பத்தை போக்க படையுடன் கணபதி புறப்பட்டார். கஜமுகாசூரனும் எதிர்த்துப் போரிட்டான். இறுதியில் கணேசர் தனது கொம்பில் ஒன்றை ஒடித்து ஆயுதமாக்கி கஜமுகாசூரன்மேல் வீச அது அவன் மார்பை பிளந்து கடலில் நீராடி கணபதியிடம் வந்து சேர்ந்தது. தந்தத்தால் தாக்கப்பட்ட கஜமுகாசூரன் பெரிய பெருச்சாளியாக மாறி ஓடிவந்தான். கணபதி அதைப் பிடித்து அதன்மேல் ஏறி அமர அதன் ஆணவம் அடங்கி மெய்யறிவு தோன்றியது. கஜமுகன் வீழ்ந்த இடத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டார் கணபதி. அந்த இடமே கணபதீச்சரம் எனப்படும். கஜமுகாசூரனின் இரத்தம் அப்பகுதியை செங்காடாக மாற்றியதால் அந்தப் பகுதி செங்காட்டாங்குடி என்றானது.
மூன்று கண்கள், நான்கு திருக்கரங்கள், சடாமுடியுடன், தமது முன் வலக்கையை மடியில் அமர்ந்திருக்கும் விநாயகரின் தலைமேலும், இடக்கை வரத முத்திரையுடன், ஏனைய கைகள், மான், மழு தாங்கியிருக்க இடப்புறம் உமை சர்வ அலங்காரத்துடன் வலக்கையில் நீலோத்பல மலர், இடக்கரத்தில் வரத முத்திரையுடன் அமர்ந்த கோலம். விநாயகப் பெருமான் கிரீடம் தாங்கி இருகரம் குவித்து அஞ்சலி முத்திரை காண்பித்து அமர்ந்திருக்க அவரின் பின்னிரு கைகளில் பாசம், அங்குசம் இருக்கும்.
கஜமுகாசூரனை வணங்கும்போது தலையில் குட்டி தோப்புக்கரணம் போட்டபடியே தங்களை வணங்கும்போதும் அவ்வாறு செய்ய அனுமதிக்க தேவர்கள் விரும்பிக் கேட்க கணபதி அருள். அனைவரும் கயிலை சென்றனர். கணேசரை மடிமீது அமர்த்தி இவன் விக்னஹந்தன்- விக்னங்களைப் போக்குபவன். என பெருமான் கணேசருக்கு அருளிய கோலமே கஜமுக அனுக்கிரஹ மூர்த்தி / விக்னப் பிரசாத மூர்த்தி வடிவம். காட்சி: மதுரை, காஞ்சி.

3.இராவணனுக்கு அருளிய வடிவம்- இராவண அனுக்கிரக மூர்த்தி

பத்து தலைகள் இருபது தோள்களுடன் விரிந்த மார்பை உடையவன் தென்னிலங்கை மன்னன் இராவணன். வானில் செல்லவல்ல தேரினை உடையவன். ஒரு முறை கயிலை மலை வழியாக தேரில் சென்றபோது தேர் மேற்கொண்டு நகர தடையாக மலை இருப்பது கண்டு இறைவன் வீற்றிருக்கும் மலை என்று மதியாமல் மலையைப் பெயர்க்க கருதி மலையை அசைக்க உமை அஞ்சினாள். இதை உணர்ந்த பெருமான் தன் கால் விரலை ஊன்றி அழுத்த இராவணன் உடல் அதில் சிக்குண்டு இரத்தம் பெருக்கெடுத்தது. அவன் ஆணவம் ஒழிய தன் கையிலிருந்த நரம்பை வீணையாக்கி இறைவனை நோக்கி பண் நிறைந்த பாடல்களைப் பாடினான். அவன் பக்திக்கு மகிழ்ந்த பெருமான் காட்சியளித்து தேர், நீண்ட ஆயுள், வாள் ஆகியன அளித்து அருள் புரிந்தார்.
தான் செல்லும் வழியில் இடையூறாக இருந்த கயிலையை ஆணவத்தால் பெயர்த்தெடுக்க முனைந்த இராவணனை அவன் செருக்கு அழியும் வண்ணம் தண்டித்து அருள் புரிந்த வடிவம் இராவண அனுக்கிரக மூர்த்தி. காட்சி: திருவிடைமருதூர் உட்பிரகாரத்தில், தஞ்சை பெரிய கோவில் கருவறையின் சுவரில்

4.ஹரிவிரிஞ்சதாரணர்

பேருழிக்காலத்தில் எல்லோரைப்போல் தாங்களும் அழிவோம் என்று கருதிக் கலங்கிய பிரம்மனையும், திருமாலையும் தம் தோளின் மீதேற்றிக் காத்தருளிய வடிவம் ஹரிவிரிஞ்சதாரணர்

5.ஏகாதச ருத்திரர்

பிரமதேவனுக்கு படைப்புத் தொழிலில் உதவுவதற்காக சிவன் படைத்து உதவிய பதினோரு உருத்திரர்கள் ஏகாதசருத்திரர் எனப்படுவர். காட்சி: காஞ்சி கைலாசநாதர் கோவில்.

6.முயலகவத மூர்த்தி

அசுரன் முயலகனின் ஆணவத்தை அடக்கித் தம் காலடியில் அவனைக் கொண்ட தாண்டவ வடிவம் முயலக மூர்த்தி.

7.சர்வ சம்ஹாரர்

ஊழிக்காலத்தில் உலக உயிர்கள் அனைத்தையும் தம் திருவடிக்கீழ் இருத்திப் பின்னர் அவரவர் வினைகளுக்கேற்ப மீளவும் உயிர்ப்பிக்கும் சிவ வடிவம் சர்வ சம்ஹாரர்.

8.யக்ஞேசுவரர்

வேள்விகளின் தலைவராய் வீற்றிருந்து வேள்வியின் பலன்களை உரியவர்களுக்கு அருளும் வடிவம் யக்ஞேசுவரர்.

9.உக்கிரர்

இறைவன் உயிர்களுக்கு அருளும் கருணை அறக்கருணை, மறக்கருணை என இரண்டு வகைப்படும். தீமைகள் உலகில் பரவிப் பெருகாமல் அவற்றை அழித்து உயிர்களைக் காப்பாற்றி அருள்பவர் உக்கிரர்.

10.அந்தகாசூரனை அழித்த அம்மான்

உமை விளையாட்டாக சிவபெருமானின் மூன்று கண்களையும் பொத்தியதால், உலகம் இருண்டது. அது ஒரு கணம் என்றாலும் உலகிற்கு ஒரு ஊழிக்காலமானது. அந்த காலத்தில் ஓர் அசுரன் உருவானான். இருளில் பிறந்து கரிய நிறம் உடையவனாக இருந்ததால் அவன் அந்தகன் என்று அழைக்கப்பட்டான். சிவனிடம் தான் பெற்ற வரங்களினால் அகந்தை கொண்டு அமரர்களைத் துன்புறத்த அவர்கள் சிவபெருமானிடம் முறையிட சிவகணங்களுக்கு ஆணையிட்டு அந்தகனை அழிக்கச் சொன்னார். சிவகணங்களால் அந்தகனை அழிக்க முடியவில்லையாதலால் பெருமானே போர் தொடுத்தார். தரையில் வீழ்ந்த அந்தகன் குருதியிலிருந்து ஆயிரக்கணக்கான அந்தகர்கள் தோன்றி யுத்தம் புரிந்தனர். அவ்வாறு தோன்றியவர்களைத் தம் சக்ரப்படையால் திருமால் கொன்றார்.
அந்தகன் உடம்பிலிருந்து விழும் குருதியினை தடுத்து நிறுத்த பெருமான் யோகேசுவரியை உண்டாக்க அவருள் சப்தமாதர் (பிராமி, மகேசுவரி, வைணவி, வராகி, கௌமாரி, இந்திராணி, சாமுண்டி) என்ற ஏழு சக்திகளும் உறைந்து அந்தகனின் இரத்தம் பூமியில் விழாமல் அழித்தது. சூல நுனியால் குத்தப்பட்டு துன்பமுற்ற அந்தகன் தன் பிழை பொறுக்க வேண்டியதால் அவனுக்கு சிவஞானத்தை அளித்து சிவகணத்தின் தலைவனாக்கினார்.
நான்கு கைகளில் பின்னிரு கைகளில் மானும், மழுவும் இருக்க முன்னிரு கைகளில் அசுரனைக் கொல்ல சூலம் ஏந்த உயர்ந்தும் தாழ்ந்தும் இருக்கும். சடாமகுடம் தாங்கி திரிபங்க நிலையில் நிற்க காலடியில் அந்தகாசுரன்
அஞ்ஞானமாகிய இருள் அகன்றாலன்றி ஞானமாகிய ஒளியைக் காண இயலாது. இறைவனை, உலக இருளை அகற்றி ஒளிபரப்பும் ஞாயிறுவுடன் ஒப்பிடுவர். இருளில் தோன்றிய அந்தகனை அஞ்ஞானமாகவும் அவனை, இறைவன் வென்றதை, அஞ்ஞானத்தை அகற்றி ஞான ஒளியை பரப்பியதாக புரிய வேண்டும் என்பதே தத்துவம். நிகழ்வு நடந்த தலம்: திருக்கோவிலூர். காட்சி: காஞ்சி-முக்தேசுவரர் கோவில், தஞ்சை புள்ளமங்கை பசுபதி கோவில்.

#####

Read 15678 times Last modified on திங்கட்கிழமை, 13 November 2017 18:46
Login to post comments