Print this page
ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 10:08

அதிதியாக!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

நாற்றிசை போற்றும் தலைவா போற்றி!
நானற்றவிடமே நிற்பாய் போற்றி!
அல்லல் களையும் அருளே போற்றி!
எல்லாம் வல்ல இறைவா போற்றி!

அதிதியாக!

சுதரிசனன் உத்தமமானவர். புண்ணிய புருஷர். மனைவி மகாபதிவிரதை. பக்தியில் சிறந்தவள். கணவன் மனைவி இருவரும் விருந்தோம்பலில் அறநிலை தவறாமல் அதிதிக்கு உணவளித்த பின்னரே தாங்கள் உண்ணும் நியமத்தைக் கடைபிடித்தனர்.
அன்று தன் இல்லம் வந்த அடியவரை சுதரிசனன் வரவேற்று இல்லத்தினுள் அழைத்துச் சென்றான். அவர் மனைவி அருஞ்சுவை உணவு தயாரித்து வைத்திருந்தாள். அடியவரும் சுதரிசனும் புஷ்கரணியில் நீராடி திருநீரணிந்து ருத்திரமாலைகள் தரித்து இல்லம் வந்தனர். சுதரிசனன் அடியவரை ஆசனத்தில் அமர்த்தி பாதபூஜை செய்து தீர்த்தத்தை தங்கள் தலையில் புரோஷித்தனர். தலைவாழை இலை போட்டு அறுசுவை அமுது படைக்க அதிதி ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்.
அச்சமயம் சுதரிசனருக்கு அவசர வேலை ஒன்று வர, அதிதியிடம் அவசர வேலை நிமித்தமாக வெளியில் செல்ல வேண்டியிருப்பதால் என்னை மன்னிக்க வேண்டும் எனது துணைவி தங்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பாள் எனக்கூறி விடை பெற்றான். அதிதி எந்தக் குறையின்றி உணவு ஊண்டார். சுதரிசனரின் மனைவி அவருக்கு தாம்பூலம் அளித்தாள். பின்பு சுவாமி தாங்கள் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என பணிவுடன் கூறினாள். அப்போது அதிதி, பெண்ணே! உனது விருந்து உபசாரத்தால் உள்ளம் மகிழ்ந்தது. அதேபோல் உடல் சுகத்தாலும் உள்ளம் மகிழவேண்டும். அதற்கு உன் சம்மதம் வேண்டும் என்றார். இதைக் கேட்டவள் ஒருகணம் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.
சிறிது நேரத்தில் சுய நினைவுக்கு வந்து கணவன் அதிதியின் மனம் கோணாமல் நடந்து கொள் எனக் கூறியது நினைவுக்கு வர, பூவுலகில் வாழ்ந்த பதிவிரதா பெண்மணிகளை வரித்து சிவநாமத்தை சொல்லியபடி, சுவாமி, உங்கள் சித்தம் எதுவோ அதுவே என் பாக்யம் எனக் கூறி அடியவர் படுத்திருந்த இடத்தருகே உள்ளம் நடுங்க உணர்வுகள் பதற என்ன நடக்கப் பொகிறதோ என்ற அச்சத்துடன் நின்றாள். அப்போது வெளியே சென்றிருந்த சுதரிசனன் வீட்டினுள் வந்தான். அடியவர் சுதரிசனைப் பார்த்து கண் மலர்ந்தார். அன்பரே நீ பெரும் பாக்கியசாலி. உனக்கு பெண் இரத்தினமாக இந்த உத்தமமான பெண் பத்தினி கிடைத்திருக்கின்றாள். இவள் அளித்த அற்புதமான அறுசுவை போஜனம் என் உள்ளத்தைக் குளிரவைத்தது. அத்தோடு இவள் எனது விருப்பதிற்கு இணங்கியதால் எனது உடலும் குளிர்ந்தது. பெண்களின் திலகமான இவள் கற்புடைய பெண்கள் வரிசையில் வைத்துப் போற்றப்படவேண்டியவள் என்றார்.
சுதரிசனன் இதைக்கேட்டு மனைவிபால் கோபமோ வெறுப்போ அருவருப்போ கொள்ளவில்லை. ஆனால் சுதரிசனனின் மனைவிக்கோ துக்கம் தொண்டையை அடைத்தது. நடக்காத ஒன்றை இந்த அடியவர் நடந்ததாகச் சொல்லி முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் பேசியுள்ளாரே என கலங்கினாள். சுதரிசனன் அடியவரைப் போற்றி வணங்கி சுவாமி தாங்கள் தீண்டியதால் இவள் தங்களுக்கு உடையவளாகி விட்டாள். இவளை இனி என் மனைவியாக நினைப்பதே பாவம். இனி இவள் உம்முடையவள். இவளை உம்முடன் அழைத்துச் செல்லுங்கள் என்றார். ஆனால் நங்கை நல்லாள் துடிதுடித்து துவண்டாள். நடக்காத ஒன்றை நடந்ததாகக் கூறும் இவருடன் எப்படிச் செல்ல முடியும்! அப்போது மேலும் சோதிக்க விரும்பாமல் அடியவராக வந்த எம்பெருமான் அந்தர் தியானமானார். சுதரிசனரும் அவர் மனைவியும் அதிதியைக் காணாமல் விழித்தனர். எங்கும் பிரகாசமாய் ஜோதி பரவியது. ஈசன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அம்பிகை சமேதராய் காட்சியளிக்க தம்பதியர் இருவரும் நிலம் கிடந்து வணங்கினர்.
#####

Read 15691 times Last modified on திங்கட்கிழமை, 13 November 2017 18:21
Login to post comments