Print this page
ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 10:59

மதுரை திருவிளையாடல் வடிவங்கள்-ஏழு!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

எள்ளுருண்டை பொரி ஏற்போய் போற்றி
தள்ளுறு தெவிட்டாத் தேனே போற்றி!
மூவர் மொழியிடம் மொழிந்தாய் போற்றி
தேவர்க்கு அரிய தேவா போற்றி!
மாலுக்கு அருளிய மதகரி போற்றி!
பாலனெக் கடல்நீர் பருகினாய் போற்றி! போற்றி!

மதுரை திருவிளையாடல் வடிவங்கள்-ஏழு!

1.வாள் ஆசிரியனாக: மதுரையில் வேற்று நாட்டு முதியவர் குடியேறி தனக்குத் தெரிந்த வாள் வித்தையை இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்தார். அவரிடமிருந்து சித்தன் என்பவன் வாள் வித்தையில் வல்லமை பெற்றதால் கர்வம் கொண்டு தனியாக பயிற்சிக்கூடம் நிறுவி நிறைய பொருள் சேர்ந்ததனால் மேலும் கர்வம் கொண்டு மதுரையில் தான் மட்டுமே பயிற்சிக்கூடம் நடத்தி அதனால் வரும் பொருள் எல்லாம் தனக்கே வேண்டும் என்ற அளவிற்கு அதிகமான ஆசை கொண்டான். தன் குருநாதரை மதுரையை விட்டு வெளியே அனுப்ப திட்டமிட்டு முதியவர் வீட்டில் இல்லாத சமயம் அவர் மனைவியிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தான். தன் கற்பை காப்பாற்றிக் கொண்ட அப்பெண் சொக்கநாதரிடம் முறையிட்டாள். பெருமான் வாள் பயிற்சி ஆசானக உருக்கொண்டு சித்தனுடன் வாள் போர் புரிந்து அவனுடைய அங்கங்களை வெட்டி எறிந்தார்.

2.தவசியாக தண்ணீர் பந்தல் வைத்தமை: இராசேந்திர பாண்டியனின் தம்பி இராசசிம்மனுக்கு தன் மகளை மணமுடித்து வைத்த சோழன் மனம் மாறி பாண்டிய அரசை அபகரித்து தன் மருமகனுக்கு அளித்திட எண்ணம் கொண்டு பாண்டிய நாட்டின்மீது போர் தொடுத்தான். இராசேந்திர பாண்டியன் சொக்கநாதரை வணங்கி தன்னையும் தன் நாட்டையும் காப்பாற்ற வேண்டி போருக்குச் சென்றான். கடுமையான போரில் வீரர்கள் நீரின்றி அவதிப்பட பாண்டிய சேனைக்கு உதவிட போர்க்களத்தின் நடுவே தண்ணீர் பந்தல் அமைத்து வீர்ர்களுக்கு நீர் தந்து உதவினார். தாகம் தீர்ந்ததும் பாண்டியப்படை புதிய வேகத்துடன் சண்டையிட்டு பொரில் வெற்றி பெற்றது.

3.விறகு வெட்டியாக விறகு விற்றமை: வரகுணப் பாண்டியன் ஆட்சிக்காலத்தில் வடநாட்டு யாழ்பாணன் என்ற ஏமநாதன் இசையில் பல விருதுகளைப் பெற்று சிறந்து விளங்கியவன் மதுரைக்கு வந்தான். மன்னனும் அவனுக்கு பரிசுகள் அளித்து சிறப்பித்ததால் கர்வம் மிகக்கொண்டு தன்னை மிஞ்சியவன் யாருமில்லை என்று இறுமாந்து, இந்த பாண்டிய நாட்டில் தன்னை வெல்ல யாருமில்லையா என ஆணவத்துடன் கேட்டான். மன்னன் புலவர் பாணபத்திரரை அழைத்து ஏமநாதருடன் அரசவையில் போட்டிக்கு பாட ஏற்பாடு செய்தார். ஏமநாதரின் சீடர்கள் மதுரை நகர் முழுவதும் சென்று நல்லிசையை பரப்பினர். அவர்களின் இசையைக்கேட்ட பாணபத்திரர் சீடர்களே இவ்வளவு இனிமையாகப் பாடும்போது ஏமநாதருடன் தான் எப்படி போட்டி போடுவது என்று குழப்பத்தில் ஆழ்ந்து சோமசுந்தரரிடம் முறையிட்டார். பக்தனின் குறையை நீக்க விறகு விற்பவன் போல் உருக்கொண்டு ஏமநாதன் தங்கியிருந்த வீட்டுப் புறத்திண்ணையில் அமர்ந்து தன் களைப்புத் தீர இனிய பாடல் ஒன்றைப் பாட அந்த இசையினால் கவர்ந்த ஏமநாதன், நீ யார் எனக் கேட்க! நான் பாணபத்திரரிடம் இசை கற்க வந்தேன். அவர் என்னைத் தகுதியற்றவர் எனக்கூறி ஒதுக்கி விட்டார் என்றார். பாணபத்திரரால் ஒதுக்கப்பட்ட விறகு வெட்டியே இசையில் இந்த அளவு சிறந்தவனாக இருக்கும்போது பாணபத்திரர் இசைஞானம் எப்படியிருக்கும் என அஞ்சி அன்று இரவோடு இரவாக மதுரையை விட்டு வெளியேறிவிட்டார்.

4.வலைஞராகி கடலில் மீன்வலையை வீசியமை: பெருமானின் திரு உளப்படி உமை பரதவ அரசனின் மகளாக வளர்ந்து வந்தாள். முருகன் வணிகன் தனபதியின் மகனாக உருத்திரசருமனாய் பிறந்திருந்தார். நந்திகேசுவரர் சுறாவாகி கடலை கலக்கினார். பரதவர் அனைவரும் வலை வீசி அந்த மீனைப் பிடிக்க முயற்சித்தும் அது நழுவிச் சென்றது. பரதவ அரசன் அதைப் பிடிப்பவர்க்கு தன் மகளை மணம் முடித்து தருவதாக அறிவிப்புச் செய்ததும் இறைவன் ஒரு வலைஞராக உருக்கொண்டு அந்த மீனை வலைவீசிப் பிடித்து இழுத்து கரையில் போட்டார். அறிவிப்பு செய்தபடி தன் மகளை அவருக்கு மணம் முடித்துக் கொடுத்ததும் இருவரும் மறைந்து சோமசுந்தரரும் மீனாட்சியுமாய் காட்சி கொடுத்து அருள நந்திதேவரும் தன் சுய உருக்கொண்டார்.

5.கூலியாளாய் பிட்டுக்கு மண் சுமந்தமை: திடீரென்று பெருக்கெடுத்தோடும் வைகை ஆற்றின் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்த வீட்டிற்கு ஒரு ஆள் அனுப்பவும் என்றும் ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதியை குறிப்பிட்டு அந்த எல்லைக்குண்டான கரையை அடைக்க வேண்டும் என்றும் பாண்டிய மன்னன் அரசானை பிரப்பித்தான். நகரக் குடிகள் சார்பாக பலதரப்பட்ட கூலியாட்கள் அவரவர் எல்லைக்குண்டான் வைகையாற்றின் கரையை சீர்படுத்த தொடங்கினர். நகரில் வாழ்ந்த வந்தி என்ற மூதாட்டிக்கு கரையை அடைத்திட கூலியாட்கள் கிடைத்திடவில்லை. வந்தி இறைவனிடம் முறையிட இறைவன் கூலியாளாக வந்து தான் செய்திடும் வேலைக்கு கூலியாக தான் அவித்து விற்கும் பிட்டைத் தந்தாள். விருப்பமுடன் பிட்டை அருந்திய கூலி ஆள் வந்தியின் எல்லைப் பகுதிக் கரையை அடைத்திடும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து வேலை செய்யாமல் அவ்வப்போது ஓய்வு கொண்டார். எல்லோருடைய எல்லைப் பகுதிக் கரைகளும் அடைக்கப்பட்ட நிலையில் வந்தியின் பங்கு மட்டும் சரியாக அடைக்கப் படவில்லை. அரசனுக்குத் தகவல் சென்றது. வந்து பார்த்த அரசன் கோபங்கொண்டு தன் கையில் இருந்த பொற்பிரம்பினால் அந்தக் கூலியாளின் முதுகில் அடித்தான். அந்த அடி தேவர், மானிடர் அனைவரின் முதுகிலும் பட அனைவரும் கலங்கினர். இறைவன் திருவிளையாடல் செயல் என உணர்ந்தனர்.

6.மடுவில் சோழனை வீழ்த்திய வேல்வீரன்: சுந்தரேச பாதசேகர பாண்டியன் சிவநேயம் கொண்டு சிவ கைங்காரியங்களில் ஈடுபட்டு ஆட்சி புரிந்து வந்தான். அதனால் தன்னுடைய நாட்டின் படை பலத்தைக் குறைக்க வேண்டியதாயிற்று. இதையறிந்த சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். பாண்டியன் சொக்கநாதரிடம் முறையிட பெருமான் தன் வேதப்பரிமீதேறி தன் கைவேலினை சுழற்றி போர் புரிந்தவாறு முன்னே சென்றதால் சோழப்படை புறமுதுகிட்டு ஓடியது. பின் சோழன் மீண்டும் பாண்டியனை எதிர்க்க பாண்டியன் மதுரையை நோக்கி விரைந்து செல்லும்போது மடுவில் விழ துரத்தி வந்த சோழனும் அதே மடுவில் விழுந்தான். பாண்டியனை பெருமான் கரையேற்றினார். சோழன் மடுவில் மாண்டான். சோழனது படைகளையும் பொன் பொருள்களையும் பாண்டியன் கைப்பற்றினான்.

7.சைவமுதியவர் வடிவம் தாங்கி வந்து இளைஞானக உருமாறால்: விக்கிரம பாண்டியன் காலத்தில் வாழ்ந்த விருபாட்சன்- சுபவிரதை என்ற தம்பதியர்க்கு குழைந்தைச் செல்வம் இல்லையாததால் பெருமானிடம் முறையிட ஓர் பெண் மகவு பிறந்தது. கௌரி எனப் பெயரிட்டு பருவம் வந்ததும் வைணவப் பிராமணனுக்கு மணம் செய்து வைத்தார்கள். கௌரி தன் தந்தை வீட்டிலிருந்த்து போலவே சிவ சிந்தனையுடன் இருக்க அவள் மீது அவளது மாமியாரும் மாமனாரும் கோபம் கொண்டனர். ஒருநாள் பக்கத்து ஊரில் இருக்கும் திருமணத்திற்கு கௌரியை மட்டும் வீட்டில் வைத்து பூட்டி விட்டு அனைவரும் சென்றனர். தனியே இருந்த கௌரி சிவனடியார் யாரையும் காணமல் மனம் கலங்கினார். சிவபெருமான் சைவமுதியவர் வேடம் கொண்டு வீட்டின் முன் நின்றார். அடியவரக் கண்டதும் உளமகிழ்ந்த கௌரி அவருக்கு தன்னால் அமுது படைத்திட முடிய வில்லையே என வருந்தியதை அறிந்த முதியவர் நீ தொட்டால் பூட்டுத் திறக்கும் எனச் சொல்ல அவ்வாறே சமையலறையின் பூடைத் திறந்து அமுது சமைத்து சைவ முதியவருக்கு அமுது படைத்தாள். அமுது உண்டதும் முதியவர் மூப்பு நீங்கி பேரழகுடன் கட்டுடல் கொண்ட இளம் வாலிபனாய் மாறினார். அச்சமயம் வேற்றூர் சென்றவர்கள் அனைவரும் திரும்பிவர இளைஞர் அழகிய சைவ குழைந்தையாய் மாறி அழுதது. மாமியார் ஏது இந்தக் குழந்தை எனக்கேட்க இது தேவதத்தனின் குழந்தை என்றாள் கௌரி. சைவக் குழந்தைமீது ஆசைக் கொண்டவளே எங்களுக்கு நீ வேண்டாம். குழந்தையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வேளியில் போ என்று கூறி குழந்தையுடன் வெளியில் தள்ளி கதவை மூடினாள். வெளியே தள்ளப்பட்ட கௌரி என்ன செய்வது என அறியாமல் சிவனை நினைத்து சிவனை ஜபித்தாள். குழைந்தை மறைந்து பெருமான் வானில் காட்சி தந்து அருள்.

#####

Read 18196 times Last modified on திங்கட்கிழமை, 13 November 2017 18:30
Login to post comments