Print this page
ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 11:05

சுந்தரருக்கு அருளிய வடிவங்கள்-ஆறு!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பாரதம் எழுதிய பரூஉக்கர போற்றி!
மாரதம் அச்சொடி மதவலி போற்றி!
மாங்கனி அரன்பால் வாங்கினோய் போற்றி!
ஈங்கினி எம்பால் எழுந்தருள் போற்றி!
கரும்பாயிரங்கொள் கள்வா போற்றி!
அரும்பொருளே எம் ஐயா போற்றி! போற்றி!

சுந்தரருக்கு அருளிய வடிவங்கள்-ஆறு!

1.தடுத்தாட்கொள்ளவந்த முதிய அந்தணர் வடிவம்: திருக்கயிலையில் சிவபெருமானுக்கு தொண்டு செய்து வந்த ஆலாலசுந்தரர் ஒருநாள் நந்தவனத்தில் பார்வதியாரின் தோழிகளான அநிந்திதை, கமலினி ஆகிய இருவரையும் கண்டு காதல் வயப்பட்டு இருந்தார். இதை உணர்ந்த சிவபெருமான் நீங்கள் மூவரும் பூ உலகில் பிறந்து ஒன்றுபட்டு காதல் புரிந்து உங்கள் அன்பு கனிந்து நம் தொண்டினையும் செய்து வாருங்கள் என அருளினார். அவ்வாறே திருமுனைப்பாடி நாட்டின் நாவலூர் என்ற கிராமத்தில் சடையனார்-இசைஞானியார் என்ற தம்பதியினருக்கு ஆதி சைவ அந்தணராக நம்பி ஆரூரார் என்ற பெயருடன் பிறந்து வளர்ந்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். பருவம் அடைந்ததும் புத்தூர் சடங்கவி சிவாச்சாரியாருடைய புதல்வியை மணம் செய்ய நிச்சயத்தனர். அந்நன்னாளில் அவரை தடுத்தாட்கொள்ள பெருமான் கிழ வேதியராய் உருக்கொண்டு வந்தார். மணப்பந்தலின் முன் நின்று இந்த நம்பி ஆரூரான் என் அடிமை என்றார். ஆரூரார், ‘நான் அடிமை என்பதைக்காட்ட என்ன ஆதாரம் என்று கேட்டு வேதியர் கையிலிருந்த ஓலையை வாங்கி கிழித்தெறிந்தார். திருவெண்ணெய் நல்லூரில் வாழ்பவர் என வேதியர் கூறியதால் அனைவரும் அவ்வூர் சபையில் வழக்குப் பேசச் சென்றனர். அச்சபையில் யாரும் வழக்கை நம்பவில்லை. அப்போது வேதியர் ஆரூரான் கிழித்தது படி ஓலை. மூல ஓலை இது என அனைவரிடமும் காண்பிக்க, எல்லோரும் ஆரூரார் வேதியருக்கு அடிமை என ஒப்புக் கொண்டனர். பின் முதியவரை நோக்கி நீங்கள் இருக்குமிடம் எது எனக் கேட்க அனைவரையும் அழைத்து சென்று கோவிலுக்குள் புகுந்து மறைந்தார். பின் வானில் தோன்றி யாமே உம்மை ஆட்கொள்ள வந்தோம். எம்மை வன்மை பேசியதால் நீ வன்தொண்டன் என்றாவாய் என அருளினார்.

2.திருவதிகையில் திருவடிசூட அந்தணர் வேடம்: நம்பியாரூரர் சொல் தமிழ் பாடும் திருத் தொண்டை மேற்கொண்டு பல தலங்களுக்கும் சென்று வழிபட்டார். திருவதிகை தலம் வந்த போது அப்பரடிகள் உழவாரத் தொண்டு செய்த புண்ணிய பூமியாதலால் காலால் மிதித்தல் கூடாதென்று புறம்பே உள்ள சித்தவட மடத்தில் தங்கி உறங்கினார். பெருமான் முது வேதியராய் சென்று துயில்வார்போல் கிடந்து நம்பியாரூரார் தலைமேல் காலை நீட்டினார். பன்முறை கூறியும் மீண்டும் மீண்டும் தலைமேற் கால்வைக்க சினந்த ஆரூரார் அவர் பெருமான் என்பதை உணர்ந்தார். சுந்தரர் திருவதிகையில் முதிய அந்தணர் கோலத்தில் வந்த சிவபெருமானால் திருவடி சூட்டப் பெற்றார்.

3.திருக்கூடலையாற்றூருக்கு அழைத்துச் சென்ற வேதியர்: ஆரூரார் கவிரியின் இரு கரைத் தலங்களிலும் உள்ள சிவத் தலங்களுக்குச் சென்று இறைவனை தொழுது பாடி வழிபட்டு வந்தவர் திருக்கூடலையாறு என்ற தலத்தை விட்டுவிட்டு திருமுதுகுன்றம் எனும் தலத்தை நோக்கிச் சென்றார். எதிரில் வேதியராக வந்த பெருமானிடம் திருமுதுகுன்றத்திற்கு சொல்லும் வழியை சொல்லக் கேட்டார். இவ்வழி திருக்கூடலையாற்றூருக்குச் செல்லும் வழி எனக் குறிப்பாகச் சொல்லி உடன் வழித் துணையாக வந்து ஊரை நெருங்கியதும் மறைந்தார். அப்போது தன்னை வழிநடத்தியவர் பெருமானே என ஆரூரார் உணர்ந்தார்.

4.திருக்குருகாவூரில் பொதிச் சோறு அளித்த மறைவேதியர்: நம்பியாரூரார் சிவத்தலங்களை தரிசித்து வழிபட்டு வந்தபோது திருக்குருகாவூர் எனும் தலத்தை நோக்கித் தொண்டர் கூட்டத்துடன் செல்லும்போது பசியாலும் தாகத்தாலும் வருந்தினார். நிலையறிந்த பெருமான் நம்பி ஆரூரார் வரும் வழியில் ஓர் தண்ணீர் பந்தலை அமைத்து வேதியர் வேடத்தில் ஆரூராரை எதிர் நோக்கிக் காத்திருந்தார். ஆரூரார் வேதியரைப் பார்த்து சிவயநம எனச் சொல்லி அருகில் அமர்ந்தார். வேதியர் ஐயா நீங்கள் மிகுந்த பசியுடன் இருக்கின்றீர்கள் .இந்த பொதிச்சோறை உண்டு நீரை அருந்துங்கள் என்றார். பொதிச் சோறு அள்ள அள்ள வளர்ந்து அனைவரின் பசியைப் போக்கியது. நீரை அருந்தியதும் இறைவனைப் பாடி துதித்து உண்ட களைப்பினால் கண் அயர்ந்தனர். வேதியரும் பந்தலும் மறைந்தது. கண்விழித்த நம்பி ஆரூரார் வேதியராய் வந்தது சிவபெருமானே என உணர்ந்து பதிகம் பாடினார்.

5.திருக்கச்சூரில் உணவு இரந்து கொடுத்த அந்தணர்: நம்பியாரூரார் சிவத்தலங்களை வழிபட்டவாறு திருக்கழுகுன்றம் வந்து சிலகாலம் அங்கு தங்கி வழிபட்டு பின் திருக்கச்சூர் சென்று ஆலக்கோவிலில் இறைவனை தொழுது வழிபட்டார். அப்போது திருஅமுது செய்யும் நேரம் வந்தும் சமையற்காரர்கள் வரமையால் நம்பி ஆரூரார் பசியால் வடுவதை அறிந்த சிவபெருமான் ஒரு ஏழை அந்தணராக உருவெடுத்து திருக்கச்சூரிலுள்ள வீடுகள் தோறும் பிச்சையெடுத்து வந்து ஆரூராருக்கு நல்சோற்றையும் கறிகளையும் கொடுத்து பசியாற்றினார். உடன் இருந்த அடியவர்கள் அனைவரும் பசியாறிய பின் அந்தணர் மறைந்தார். பெருமானே தமக்காக பிச்சையெடுத்த கருணைக் கண்டு நம்பிஆரூரார் திருப்பதிகம் பாடினார்.

6.பரவையர் ஊடலைத் தீர்க்க ஆதிசைவர்: உமை விருபப்படி கமலினி திருவாரூரில் பரவையராகவும், அநிந்திதை திருவொற்றியூரில் சங்கிலியராகவும் பிறந்து வளர்ந்தனர். தினமும் தோழிகளுடன் கோவிலுக்குச் சென்று வந்த பரவையர் ஒருநாள் நம்பிஆரூராரைச் கோவிலில் சந்தித்தார். முன் வினை காரணமாக காதல் அரும்பி மறுநாள் வேதவிதிப்படி திருமணம் நடைபெற்றது. இல்லறவாழ்வு இனிது நடந்தது. ஆரூரார் தலயாத்திரையைத் தொடர்ந்து திருவொற்றியூரில் தங்கினார். ஒருநாள் வழிபாடு முடிந்தபின் மலர் தொடுக்கும் மண்டபத்திற்குச் சென்றபோது அங்கு சங்கிலியாரைக் கண்டார். காதல் கொண்டு இறைவனிடம் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டினார். உன்னைப் பிரியேன் எனச்சத்தியம் செய்து கொடுக்கத் திருமணம் நடைபெற்றது. அடியார்கள் மூலம் சங்கிலியார் திருமணச் செய்தி பரவையாருக்கு கிடைக்க துக்கமும் கோபமும் கொண்டார். சுந்தரர் சமாதனத் தூது அனுப்பியும் பலனில்லை. இறைவனிடம் பரவையாரின் ஊடலைத் தீர்த்து வைக்க வேண்டினார். சிவபெருமான் பரவையார் வீட்டிற்குச் சென்று சமாதான வார்த்தைகள் பேசியும் மன்றாடியும் பரவையர் சம்மதிக்கவில்லை. இதை அறிந்த சுந்தரர் இனி நான் உயிர் தரியேன் என இறைவன் பாதங்களில் வீழ பெருமான் மீண்டும் பரவையரிடம் தூது சென்றார். இறைவனே தூது என்பதை அறிந்த பரவையர் மனந்தெளிந்து இறைவன் விருப்பப்படி சுந்தரர் வருவதற்கு உடன் பட்டார். சுந்தரரிடம் பரவையரின் கோபம் தணிந்தது இனி அவள் மாளிகை செல்லலாம் எனச் சுந்தரரிடம் கூறி மறைந்தார்.

#####

Read 16715 times Last modified on திங்கட்கிழமை, 13 November 2017 18:31
Login to post comments