ஓம்நமசிவய!
திருநீற்றொளிசேர் செம்மால் போற்றி!
இருவேறுருவ ஈசா போற்றி!
உள்ளத்திருளை ஒழிப்பாய் போற்றி!
கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி!
நம்பியாண்டார்க்கருள் நல்லாய் போற்றி!
எம்பிரானாக இசைந்தாய் போற்றி! போற்றி!
திரு நீலகண்ட நாயனார்க்கு அருளிய சிவயோகியர்!
சிதம்பரத்தில் பிறந்த நீலகண்டர் சிவனடியார்களுக்கு சிறப்பாக திருவோடுகள் செய்து தொண்டாற்றினார். இளமையான அழகான மனைவியுடன் இல்லறம் இனிது நடத்தி வந்தார். ஒருநாள் சிற்றின்பத்தில் ஆவல் கொண்டு விலைமகளோடு கூடி மகிழ்ந்திருந்து வீட்டிற்கு வந்தார். அவர் மனைவி விலை மகளைக் கட்டியணைத்த கைகளால் குலமகளானத் தன்னைத் தொட வேண்டாம் இது நீலகண்டத்தின்மேல் ஆணை என்றாள். அன்று முதல் அவளைத் தொடாமல் அயலார் பெண்போலவே பார்த்து உடலுறவில்லாமலே கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். எந்த மாதரையும் தொடாமல் நல்லொழுக்கம் தவறாமல் இருந்து வரும் நீலகண்டரின் ஒழுக்கத்தை உலகறியச் செய்ய ஆவல் கொண்ட பெருமான் சிவயோகியோர் வடிவில் வந்தார். தன்னிடமிருந்த திருவோட்டினைக் கொடுத்து தான் மீண்டு வந்து கேட்கும்போது தரும்படி கூறிச் சென்றார். பின்னர் அதை மறையவும் செய்தார். நீலகண்டர் திருவோடு காணாமல் கலங்க வேறு ஒரு திருவோடு செய்து தருவதாகச் சொல்லியும் சிவயோகியர் ஏற்கவில்லை. நீ திருவோட்டை உண்மையாக தொலைத்து விட்டாய் என்றால் உன் மனைவியின் கையைப் பிடித்து தாமரைத் தடாகத்தில் மூழ்கிச் சத்தியம் செய் என்று தில்லைவாழ் அந்தணர்களின் திருச்சபையில் வழக்காடினார் சிவயோகியார். நீலகண்டரை மனைவியுடன் சத்தியம் செய்ய தீர்ப்பளித்தனர். அனைவரும் தில்லை அருகில் உள்ள புலீச்சுரம் கோவில் முன் உள்ள குளக்கரையில் கூடினர். ஒரு தண்டினை எடுத்து ஒரு புறம் மனைவி பிடிக்க மறுபுறம்தான் பிடிக்க மூழ்க நினைக்கும் போது அனைவரும் மனைவியின் கரம்பற்றி மூழ்க என கூச்சலிட்டனர். தனக்கும் தன் மனைவிக்கும் ஏற்பட்ட பழைய வரலாற்றை கூறி மீண்டும் தண்டினைப் பற்றி மூழ்கி எழும்போது இளமைப் பொலிவோடும் அழகோடும் இருவரும் எழுந்தனர். ‘எம்பெருமான் பிராட்டியோடு விடைமேல் தோன்றி இந்த இளமை நீங்காது எம்மோடு சிவலோகத்தில் இருப்பீர்’ என அருள் புரிந்தார். நான் ஒரு அடியார். இளமையில் நடந்த செயல் யாரும் அறியாதது. அதை இப்போது சொன்னால் என் புகழ் கெடும் என பரத்தையர் விவகாரத்தால் மனைவியுடன் முரன்பாடு கொண்டதையும் வெளியில் தெரிய வேண்டாம் என்ற நீலகண்டர் மனத்திலிருந்த மாசினை நீக்க இறைவன் பார் அறிய சொல்ல வைத்தார்.
#####