ஓம்நமசிவய!
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!
####
பரசுராம அவதாரம்!
ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவி தினமும் கலைக் கடன்களை முடித்து குளித்துவிட்டு ஆற்று மணலில் குடம்செய்து கணவரின் யாகத்திற்கு நீர் எடுத்துச் செல்வது வழக்கம். ஒருநாள் குடம் செய்ய முற்படும்போது வானில் கார்த்தவீரியார்ஜூனன் என்ற மன்னன் தன் ஆயிரம் கைகளுடன் வானில் செல்வதைப் பார்த்து பிரமித்த ரேணுகாதேவியினால் அன்று மணலில் குடம் செய்யாமல் போக தன் கணவரிடம் செல்ல ஞானதிருஷ்டியில் அனைத்தையும் உணர்ந்த ஜமதக்னி தடம் மாறவில்லை, மனம் தடுமாறிவிட்டாள் என்பதை அறிந்து கற்பில் தவறி விட்டாய் பெண்ணே என்று சொல்லி தன் மகன்களை அழைத்து அவளது சிரசை கொய்யச் சொன்னார்.
முதல் மூவரும் மருகி நிற்க நான்காவதான பார்க்கவன். தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை என்றாலும் உபநிடத கருத்துப்படி தந்தையின் விந்துதான் தாயின் கருவினுள் போய் முதல் பிறப்பு தந்தையுடையது என்கிறது. தாயின் கருப்பையை கோவிலாக்குவது தந்தையின் பிரதிஷ்டை, அதனால்தான் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதால் பிதாவின் வார்த்தைகளை நிறைவேற்றுவது தன் கடமை என்று தன் தாயின் சிரசை கொய்து எடுத்து வந்து தன் தந்தையிடம் சமர்ப்பித்தார்.
பின்னர் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று செயல் பட்டிருந்தாலும் அவரின் மனம் தாயைக் கொன்ற வேதனை நிறைந்திருந்தது. அப்போது அவரைக் கண்ட ஜமதக்னியிடம், தங்கள் தவ வலிமையால் தாயை உயிர் பிழைக்க வைக்க வேண்டும், மேலும் நடந்தது எதுவும் தாயின் நினைவில் இல்லாமல் குற்றமற்றவளாக விளங்க வேண்டும் என்ற இரண்டு வரங்களைப் பெற்றார்.
பத்தொன்பதாவது சதுர்யுகத் திரேதாயுகத்தில் விஷ்ணு ஜமதக்னிக்கு மகனாகப் பிறந்தார். மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் ஒன்று பார்க்கவன். சிறந்த சிவபக்தர். அவர் சிவனை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டிருந்தபோது அவரை சோதிக்க எண்ணங்கொண்டார் சிவபெருமான். வேடன் உருவமெடுத்து தான் கொன்ற மானின் மாமிசத்தை எடுத்து வந்து பரசுராமர் அருகில் வைத்தார்.
முகம் சுழித்த பார்க்கவன் இதை எடுத்துச் செல்லுமாறு வேடனிடம் சொல்ல, தவசிரேஷ்டரே, என்னை ஒன்றும் தூஷிக்க வேண்டாம், என் மனைவி, மக்களின் உணவிற்காக இந்த மாமிசத்தை கொண்டு போகிறேன். இது பிரம்மன் அளித்த உணவு. நாங்கள் உயிர் வாழ வேட்டையாடுகின்றேன் என்று தர்ம நியாயம் பேசினான். மேலும் நீங்கள் உங்கள் தகப்பனார் சொன்னார் என்பதற்காக உன் தாயையே கொன்றாயே. இதை தெரிந்தவர் உங்களை நிச்சயம் பழிப்பர். ஆதலால் நீங்கள் வேறு இடம் சென்று உங்கள் தவத்தை தொடர்ந்து செய்க என்றான்.
ஒரு வேடன் தன் செயலை அறிவது என்றால். அதிர்ச்சியடைந்தார் பரசுராமர். இவன் சாமான்யன் இல்லை என்ற நினைவு பார்க்கவனை தட்டி எழுப்ப, வேடனே நீயார்! சாதாரன வேடன் இப்படி அறிவு சார்ந்த கேள்வியை கேட்க முடியாது! தயவு செய்து நீ உன் சுய உருவை காட்டு என வேண்ட பரமேஸ்வரன் காட்சியளித்து அருள். பார்க்கவனே! நீ கேட்ட சாஸ்திர அஸ்திரங்களை உனக்கு வழங்குகின்றேன் அவற்றை நிர்வகிக்கும் ஆற்றலை பெற நீ தீர்த்த யாத்திரை சென்று ஸ்தல தேவதைகளை உபாசனை மேற்கொள் என்றார். அவ்வாறே பல தலங்களுக்கு யாத்திரை சென்று வழிபட்டு கைலாயத்தில் தன் தவத்தினை தொடர்ந்தார்.
முகலு என்ற அரக்கியால் துயறுற்ற தேவர்கள் ஈசனிடம் சென்று அவளிடமிருந்து காப்பாற்ற வேண்டினர். பெருமான் பார்க்கவனிடம் சென்று பார்க்கவ உன்னிடம் வலிமை இருக்கின்றது. இப்போது தவத்தின் சக்தியும் சேர்ந்துள்ளது. நான் தரும் இந்த பரசை-கோடாரியை ஆயுதமாக வைத்துக் கொள். எல்லா வெற்றியும் அடைந்து சித்திக்க என் ஆசீர்வாதம் தேவர்களை துன்புறுத்திய அரக்கி முகலுவை சம்ஹாரித்து தேவர்களுக்கு உதவி செய்க என்று அருள் புரிந்து பார்க்கவன் என்ற அவன் பெயர் கொண்ட பார்க்கவாஸ்திரத்தை தந்தருளினார். பார்க்கவன் பெருமான் தனக்கு அளித்த பரசை ஆயுதத்தால் முகலு அரக்கியை சம்ஹாரம் செய்தார். அன்றிலிருந்து பார்க்கவன் பரசுராமர் எனப் பெயர் பெற்றார்.
விண்ணில் பறந்த கர்த்தவீர்யாஜுனன் ஜமதக்னியை கொல்ல, அவனையும் அவன்பின் தோன்றிய 21 தலைமுறை சத்திரியர்களையும் பரசுராமர் கொன்றார். ஸ்ரீராமர் சீதாவை திருமணம் செய்து கொண்டு போகும் வழியில் அவரைப் போட்டிக்கு அழைத்து அவரிடம் தோற்று தனது தவ வலிமையை ராமருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். குருசேத்திரத்தில் சியமந்த பஞ்சகம் என்ற குளத்தை வெட்டி பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தார். அசுரர்களைக் கொன்ற பாவம் தீர அசுவமேத யாகம் செய்தார். கோகர்ணம் நீரில் மூழ்கியபோது முனிவர்களின் வேண்டு கோளுக்கிணங்க சமுத்திர ராஜனை அழைத்து கோகர்ணத் தலத்தை விட்டு நான்கு புறமும் விலகி இருக்க வேண்டி மீண்டும் முனிவர்கள் கோகர்ணேஸ்வரரை வழிபட வழிவகைச் செய்தார். தன்னிடம் இருந்த மற்ற பூமிப் பகுதிகளைத் தானம் செய்துவிட்டு தான் வசிக்க தவம் புரிய மகேந்திர பர்வதம் சென்றார்.
பரசுராமர் வழிபாடு சுக்கிரன் தோஷம் நீங்கும். பெரும்பாலான திருத்தலங்களில் தசாவதாரச் சன்னதிகளில்.
விஷ்ணுவின் பரசுராமாவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் மாதங்கி.
#####