ஓம்நமசிவய!
ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்
#####
யாக்கை நிலையாமை!
143. ஒரே மண்ணில் செய்த இரு பாண்டங்களில் தீயில் சுட்ட பாண்டம் வன்மையுடன் இருக்கும். தீயினால் சுடாத பாண்டம் விண்ணிலிருந்து நீர் பெய்தால் கரைந்து மண்ணாகும். அதுபோல் திருவருள் வழி நில்லாத உடல் மீண்டும் பிறப்பதற்கு காரணமாகி உடலை அழித்து எண்ணிலாத உயிர்கள் இறக்கின்றனவே.
144. வினை போகங்களை அனுபவித்த உடல் குறிப்பிட்ட காலத்தில் நீங்கும். இன்பங்கள் கண்டு அனுபவித்த மனைவியும் மக்களும் அப்போது வரமாட்டார். வாழ்ந்த காலத்தில் மேற்கொண்ட நோன்பின் பயன்களும் ஞானமும் தவிர மற்றது எதுவும் இறந்தவரின் கூடவராது.
145. உடலில் உயிர் நீங்கிய பின் ஊரார் கூடி அழுது ஓலமிட்டு அவன் பெயரை நீக்கி அது பிணம் எனச் சொல்லி முட்செடிகள் நிறைந்த சுடுகாட்டில் கொண்டுபோய்க் கொளுத்துவர். இப்படி ஒருத்தர் இருந்தார் என்பதை மறக்க நீரில் குளித்து அவர் எண்ணங்களை நீக்கி விடுவர்.
146. உடம்பு என்ற வீட்டிற்கு இரண்டு கால்கள், உத்திரம் போன்ற முதுகுத்தண்டு ஒன்று, அதன் பக்கத்தில் உள்ள எழும்புகள் முப்பத்திரண்டு இவை அனைத்தையும் போர்த்தி மூடப்பட்ட தசையான கூரை ஓரு காலத்தே நீங்கி விட்டால் உயிர் அதனுள்ளே மீண்டும் புகா.
147 உயிர் உடலைவிட்டு நீங்கும்போது கபம் மிகுந்து பல பிறவிகளில் ஏற்பட்ட தொடர்புகள் எல்லம் ஒழியும். உடம்பு நீங்கியது. பக்க எழும்பின் வன்மை போனது. மூக்கில் கைவைத்து உயிரில்லையென உணர்ந்து ஆடையால் போர்த்தி மூடிக் கொண்டுபோய்க் காக்கைக்குப் பலியிட்டு-வாக்கரிசியிட்டு இறுதிக் கடன்களைச் செய்வார்.
148. நல்ல முறையில் சமைத்த உணவை உண்டார். இளம் பெண்டிருடன் இன்பம் அனுபவித்தார். இடப்பக்கம் சற்றே வலிக்கிறதென்று மனைவியிடம் சொல்லி கீழே படுத்தவர் எழுந்திராமல் அப்படியே இறந்து விட்டார்.
149. ஒருவன் மாடவீடு கட்டி மகிழ்வோடு வாழ்ந்திருந்து பலரும் பார்க்க பல்லக்கில் ஏறி பொது இடத்தில் தாழ்ந்தவர்க்கும், சமமானவர்க்கும், மேலானவருக்கும் ஆடைகளை வழங்கினான். உயிர் நீங்கிய பின் அவன் மக்கள் அப்பா என்று அழைத்தனர். ஆனால் அவன் மீண்டும் உயிர்பெற்று எழவில்லை.
150 .இனிமையான சொற்களைப் பேசி நிச்சயம் செய்து மணம் செய்து கொண்ட மணைவி கணவரின் அன்பு கசந்து நினைவும் மறந்து அவர் இறந்தபின் பாடையில் வைத்து பொருத்தமாய் அழுது பற்றையும் சுட்டு எரித்து பிண்டம் இடுவர். எண்ணே பரிதாபம் இது.
151. நாடி பார்ப்பவர் இனி பயினில்லை முடிந்துவிட்டது எனக்கருத்து சொல்லியபின் எண்ணங்கள் கெட்டு இயக்கம் நின்றபின் நெய்யிட்டு பிசையப்பட்ட சோற்றை உண்ணும் வாய் முதலிய ஐம்பொறிகளும் செயல் அற்றன. மைபூசிய கண்ணை உடைய மனைவியும் செல்வமும் உலகில் இருக்க உடம்பை விடுவித்து உயிர் நீங்க விடை கொள்ளும் முறை இதுவோ!
152. உடல் எனும் பந்தல் பிரிந்தது. உயிர் நிலையான பண்டாரம் நிலை குலைந்து உடலில் உள்ள ஒன்பது துவாரங்கள் ஒரே சமயத்தில் அடைபட்டு துன்பம் மிக்க காலம் விரைவக வந்து சேர அன்பு கொண்ட சுற்றத்தவரும் அழுது விட்டு நீங்கிச் செல்வர்.
153. நாட்டின் தலைவன் ஊருக்கும் தலைவன் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் பாடையில் இறந்தபின் ஏறிக்கொண்டு செல்ல. நாட்டில் உள்ளவர் இறுதிக் கடன் செய்து பின் வரவும் பாடையின் முன் பறை கொட்டியும் நாட்டின் தலைமகன் காட்டிற்கு செல்லும் முறை இதுவோ!
154. தொன்னூற்றாறு தத்துவங்களை உள்ளடக்கிய நல்ல மதிலால் செய்யப்பட்ட கோவிலில் வாழ்பவர், செம்மையாகச் செய்யப்பட்ட மதில் பொருந்தி கோவில் நிலை கெட்டபின் அதில் வாழ்ந்த அனைவரும் ஓட்டமெடுத்து விடுவரோ!
155 .தேன் சிந்தும் நறுமண மலர்களை அணிந்த மனைவியும் செல்வமும் வீடும் இவ்வுலகில் தங்கிட உயிர் நீங்கிய உடலை பாடையில் வைத்து ஊரின் வெளியில் பொதுவாய் அமைந்த சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று மயக்கத்துடன் பாடையினின்று எடுத்து வைத்து சிதைமூட்டினர்.
156. சுடுகாட்டில் தீ வைத்து அனைவரும் நீங்கியதைப் பார்த்த பின்பும் மக்கள், தங்கள் உயிர் உடலை விட்டு நீங்காது என்று எண்ணி தான் தேடும் அரிய பொருள்களிலே மயக்கம் அடைந்து அப்பொருளைத் தேடுதற்கு அலையும் மக்கள் தன் நிலை மாறாமல் நின்று வருந்துகின்றனர்.
157. ஆரவாரம் செய்து எழும் சுற்றத்தாரும் மனைவி மக்களும் ஊருக்கு புறத்தே உள்ள நீர்த்துறையை அடைந்து பின் நீங்குவர். அவர்கள் அப்படி நீங்கியபின் வாழ்க்கைக்கு முக்கியமாக உள்ள தலையை மறைத்து விறகு இட்டு தீயை மூட்டுவர். பின் நீரில் தலை முழுகுவார்கள் அவர்கள் நீதியில்லாதவரே!
158. நிகரில்லா உடல் முழுவதும் வளமை மிக்க முன் இடமான கருப்பையான குளத்தில் சுரோணிதம் என்னும் மண்ணைக் கொண்டு பிரமன் என்ற குயவன் படைத்தது அது. மண்ணால் ஆன குடம் உடைந்தால் அதை ஓடு என்பர். அதை உதவும் எனப் பாதுகாப்பர். உடல் என்ற கலம் உடைந்தால் வீட்டில் வைத்திருக்க மாட்டார்கள் .இதுவே உலக இயல்பு!.
159. உடலில் ஐந்து பொறிகளும் ஆறு ஆதரங்களும் உள்ளன, எலும்பின் இனைப்புகள் முப்பது. அவற்றின் மீது போர்த்தப்பட்ட பந்தலும் ஒன்பது. வரிசையாய் உள்ள எலும்புகள் பதினைந்து. இவை எல்லாம் கூடிய உடல் வீதியில் வெந்து கிடந்தால் உயிரின் நிலையை அறிந்தவர் இல்லை.
160. அத்திப் பழமான உடலும் அரைக்கீரை விதையான உடலும் இரு வினைகளின் பயனாக உயிர்க்கு உணவாய் சமைத்து உலகில் பிறக்கச் செய்தனன். அத்திபழமான ஊழ்வினையை அரைக்கீரை விதையான உயிர் உண்டு கழித்து விட்டது. ஆதலால் உயிர் நீங்கிய உடம்பைச் சுடுவதற்கு துணிந்தனர். அழுகை ஒலியுடன் அதை சுடுகாட்டிற்கு எடுத்துக் கொண்டு போயினர்.
161. உடல் என்ற வீட்டிற்கு மேல் கூரையும் இல்லை கோழேயும் இல்லை. இடகலை பிங்கலை என்ற இரண்டு கால்கள் உண்டு. சுழுமுனை என்ற ஒன்றும் உள்ளது இப்படி கூரையால் மேயப்பட்டவர் சுழுமுனை வழி செல்லாமல் இருந்தால் வெண்மையான சுக்கிலத்தல் செய்த உடம்பு வெள்ளி கோவில்போல் இருந்தாலும் அழிந்து விடும்.
162. உயிர் நீங்கப் பெற்ற உடம்பு அங்கு கிடந்தது.. இதுவரை அது கொண்டிருந்த இயற்கையான பொலிவு இல்லை. ஒப்பனைகள் இல்லை. உழைத்தல் உண்டல் ஓடல் ஆடல் பாடல் முதலிய எந்த தொழிலும் அதனிடத்து இல்லை. இருக்கும் அதை நீக்க அருட் பாடல்களைப் பாடுகின்றனர். சிலர் இசையுடன் ஒப்பாரி பாடி அழுகின்றனர். சிலர் வேண்டிய பொருட்களுடன் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று தீயிட்டு எரித்தனர்.
163. கருப்பையில் பதியும் கரு முன்னூறு நாளில் வளர்ந்து பிறந்தது. அவ்வுடல் யார் விருப்படியும் உருவானது அன்று. அறிவு குறைந்தவர்களே பன்னிரண்டு ஆண்டுகளில் அஃது உலக இயல்பை பொருந்தியதாய் விளங்கும். எழுபது ஆண்டுகளில் மடியும் நிலையை அறிவீர்!
164. அகல் என்ற உடல் இருக்க ஒளியான உயிரை இயமன் எடுத்துச் சென்றான். இதை அறியாதவர் உடம்பு அழிவதை அறியாது புலம்புகின்றனர். பிறப்பு எனும் விடியலும் இறப்பு என்ற இருளும் மாறி மாறி வரும் என்பதை ஆறியாதவரே!. அறியார் நிலையில்லாத உடலை நிலையானது என நம்பி பற்றிகொண்டு வருந்துகின்றனரே!
165. மடல்கள் மலர்ந்த கொன்றை மலரை அணிந்து மாயைக்கு ஆதாரமாய் இருப்பவனான சிவன் உண்டாக்கிய உடலிலும் உயிரிலும் கலந்து நிற்கும் உருவத்தை வழிபடாமல் அவர்மேல் விருப்பமிக்க சொந்தங்கள் குடல் கிழிய கதறி துன்பம் மிகப்பெற்று ஏழுவகையான் நரகில் இருப்பதுபோல் துன்பபட்டு வருந்துவர்.
166. வெண்கொற்றக் குடையும் குதிரை சேனைகளும் செங்கோலும் கொண்டு நான்கு புறமும் மக்கள் சூழ நடுவே சென்றாலும் அவருக்கும் அழிவு வரும் காலத்தே அவ்வுயிர் இடம் வலமாய் சுழன்று நிற்கும்.
167. உடல் என்ற தோல்பையில் இருந்து வினை முடிவு எய்திய அதன் பயனை அனுபவிக்க உயிர் உடலான கூட்டை விட்டுச் சென்றபின் இந்த கூட்டை காக்கை கொத்தினால் என்ன! .கண்டவர் பழித்தால் என்ன! உடலை எரித்தபின் எலும்பின்மீது பால்துளி தெளித்தால் என்ன! பலரும் பாராட்டிப் பேசினால்தான் என்ன!
திருச்சிற்றம்பலம்!
#####