Print this page
செவ்வாய்க்கிழமை, 21 April 2020 09:53

பரியங்க யோகம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

#####

பரியங்க யோகம்!

825. உடலில் பூசுவதை பூசிக் கொண்ட ஆடவன் மலர்ந்த மணம் நிறைந்த மாலையை அணிந்த பெண்ணொருத்தியுடன் புணர்ச்சி செய்யும்போது உள்ளம் பிரமந்திரமான உச்சியை நினைத்திருந்தால் அவருக்கு புணர்ச்சி தளர்ச்சி அடையாது.

826. உச்சித் தொளையில் விளங்கும் பேரறிவு பொருளை நினைத்த வண்ணம் ஒருவன் புணர்ச்சியில் இருந்தால் காம வாயு விரைவாய் தொழிற்படாததால் நீரின் தன்மை கொண்ட சுக்கிலமும் சுரோணிதத்தில் கலக்காமல் திரும்பும். சூதாடும் கருவிகளைப் போன்ற முலைகளையுடைய பெண்ணும் உடலான தேரை நடத்தும் ஆணும் தங்களுக்குள் பொருந்திய கூட்டுறவால் வெளிப்பட்ட சுக்கில சுரோணிதங்கள் விந்து நாதங்களாக மாற்றம் அடைந்து சிரசை அடையும்.

827. ஒரு ஆணும் பெண்ணும் விருப்பமுடன் புணரும்போது தீ மண்டலம் சூரிய மண்டலம் ஆகியவற்றைக் கடந்து சந்திர மண்டலத்தில் இருவரும் மேல் வெளியை அறிவர். உடலான வண்டியை மேன்மேலும் செலுத்துவதால் சந்திரமண்டத்தில் வான் கங்கையாகிய ஒளியைப் பெருக்கிட உடலின் தண்டு ஒருபோதும் தளர்ச்சி அடையாது.

828. புணர்ச்சியின் காரணமாக காமத் தீ உடலில் விந்துவை நீக்கம் செய்யும் புணர்ச்சியில் கெடாது பாதுகாத்து யோகத்தால் மாற்றி விந்து வெற்றி பெற்றவன் தலைவன் ஆவான்.

829. வெற்றி கண்ட தலைவன் ஆன்மாவை அறிந்தவன். அவன் விரும்பிய சிவயோகம் அவனை தானே வந்தடையும். தன்னை வயப்படுத்தி ஆள்கின்ற தலைவன் ஆவான். அவன் விருப்பப்படி பூமி முதலிய பூதங்கள் நடக்கும்.

830. ஐந்து நாழிகைக்குமேல் ஆறாம் நாழிகை பெண் ஆணுடன் பொருந்தி உறங்குவாள். ஐந்து நாழிகை கொண்ட பரியங்க யோகம் இனித் தேவையில்லை என்ற மன நிறைவுடன் இருக்கும்.

831. பரியங்க யோகத்தில் ஐந்து நாழிகை அரிதாய் இருப்பவர்க்கே அன்றி நழுவும் கை வளையலையுடைய மணம் பொருந்திய சூரிய சந்திர கொங்கைகளை உடைய குண்டலினி சக்தியைக் கடந்து எவராலும் மேலே செல்ல முடியாது.

832. அடைவதற்கு அருமையான யோகத்தை செய்து அறிவித்தவர் வான்கங்கையை முடியில் வைத்த உருத்திரன் ஆவார். நாதத்துடன் கூடிய ஒளியை ஐந்து நாழிகை வரையில் எண்ணாமல் எண்ணி அனுபவித்தவன்.

833. பரியங்க யோகத்திற்கு ஏற்ற வயது பெண்ணுக்கு இருபது. ஆணுக்கு முப்பது. அப்போது பொருந்திய ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆனந்தம் உண்டாகும். இந்த யோகத்தில் ஞானேந்திரியங்களான மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்தும் இன்பம் அடையும். ஆயினும் விந்து நீக்கம் ஏற்படாது.

834. வெண்மையான சுக்கிலம் உருகிப் பொன்னிறச் சுரோணிதத்தில் கலக்காமலிருக்க தட்டானான சிவன் கரியாகி அருளைத் தந்து பக்குவம் செய்தார். தீயான அக்கினி கலை உண்டாக ஊதுகுழல் ஆன சுழுமுனை வழிச் சென்று பொன் எனும் சந்திரனை செப்பாகிய உள்நாவில் இருக்கும்படி வைத்தார்.

835. விந்து நீக்கம் இல்லாமல் புணர்ந்த ஆண் பெண் இருவரும் இன்பம் அடைந்து காம வயப்படாமல் தேவ காரியமாய் எண்ணிச் செய்கையில் அவர்களுக்கு பத்து திக்குகளும் பதினெட்டு வகை தேவர்களுக்கும் தலைவனான சிவ சூரியன் விளங்குவான்.

836. விருப்பைத் தரும் கதிரவனுக்கும் பிறப்பைத்தரும் கருவாய்க்கும் இடையே பெண்ணைப் புணரும் ஆண்மகன் ஆனந்தம் அடைவான். இருவரின் புணர்ச்சியில் சுரோணித வழிச் சுக்கிலம் பாயாமல் சந்திரமண்டலத்தின் செந்நிறம் கொண்ட சத்தியான நாதத்தில் திளைத்திருப்பர்.

837. பரியங்க யோகத்தால் மனத்தை தூய்மை செய்து கருத்தழகால் அங்கு இருந்தால் பெண்ணுடன் கூடுபவர்க்குத் துன்பமில்லை. உடலில் விந்து நீக்கம் இருக்காது.

838. சுவாதிட்டானத்தில் இருக்கும் காமாக்னியை மூலாதர வழி புருவ நடுவிற்கு கொண்டு சென்றால் தீயின் முன் மெழுகுபோல் உடல் காணாமல் ஒழியும். பேரொளியைக் கண்டபின் உழுதல் செயல் இல்லை. புருவ நடுவைத் தாண்டி துவாத சாந்தப் பெருவெளியை அடைந்தவரின் உடல் உயிர் பிரிந்த பின்பு கீழே விழாது உருகி விடும்.

839. வானத்தின் தன்மையை அறிந்து அங்கு விளங்கும் பொன் ஒளியை அறிந்ததால் உள்ளம் வேறுபடாமல் தெளிவான ஞானத்தை பெற்றுச் சிவன் அருளாலே பரமான வானத்தை அறிந்திருந்தேன் அதற்குமேல் நான் அறிய ஒன்றுமில்லை.

840. ஒன்றுக்கு ஒன்றாய் மேலாக விளங்கும் இடத்தில் இருப்பவர் யார் எனக் கேட்டால் திருமால், நான்முகன், உருத்திரன் ஆகியோர் துரிய பூமியில் விளங்கும் சிவன் பராசக்தியைவிட மேலே உள்ளது என்றனர்.

841. மின்னல் ஒளியில் விளங்கும் சக்தியும் அவளை ஆளும் சிவனையும் கூட்டத்துடன் பொன்னொளி கொண்ட வானத்தில் நிலைபெறும்படி செய்து அக்கூட்டத்தில் ஆன்மாவான தன்னையும் காண வல்லவரானால் இவ்வுலகில் நெடுங்காலம் வாழலாம்.

842. காம வாயுவை உள்ளே இழுத்து சுக்கிலம் கெடுமாறு செய்து இழுத்த காம வாயுவை மேல்முகமாய் ஆக்கும் வழி அறிந்தார் இல்லை. அவ்வாறு அறிந்தவர் வளர்ச்சி பெற்ற தன்னைச் சிவத்திடம் ஓமமாய் வேள்வியில் இடும் பொருளாய் செலுத்தியவராவார்.

843. ஆன்மாவை வேள்விப் பொருளாய் செலுத்திப் பிரமப்புழையில் மேலான சகசிரதளத்தில் பொருந்தினால் மண்டையில் உள்ள மயிர் கருக்கும். சீவனுக்கு அருள வெண்டிய நன்மையை எண்ணிக்கொண்டு சிவசக்தி இருப்பாள். பக்குவத்தை உயிரிடம் அறிந்து அதனிடமுள்ள பிருதுவிச் சக்கரத்தின் செயலை மாற்றி காம வாயுவை கீழ் நோக்கிச் செல்லவிடாமல் மேல் நோக்கிச் செல்ல வைப்பாள்.

844. சசிகரத் தளமாகிய ஆயிரம் இதழ் தாமரை சிதாகாயத்தில் இருப்பதால் நீரும், பூமியும் இல்லை. இத்தாமரை மலர்ந்து பூவாக உள்ளதால் மொட்டும் வேரும் இல்லை. ஆனால் அங்கு ஒளி ஒன்று உள்ளது. அகண்டு இருப்பதால் குறிப்பிட ஓர் இடம் இல்லை. நாதத்திற்கு காரணமான இந்த சசிகரதளத் தாமரை மலர் எங்கும் பரவியிருப்பதால் அடியும் நுனியும் இல்லை.

####\#

Read 3007 times Last modified on செவ்வாய்க்கிழமை, 21 April 2020 10:20
Login to post comments