gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

மகான்கள் (9)

புதன்கிழமை, 26 September 2018 09:44

ராகவேந்திரர்!

Written by

ஸ்ரீ ராகவேந்திரர்!


ஒம் நமசிவாய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

#####


வேங்கடநாதன் பிறப்பு!

திம்மண்ண பட்டர், கோபிகாம்பா என்ற தமப்தியினருக்கு முதலில் வேங்கடம்பாள் என்ற பெண் குழந்தையும், குருராஜன் என்ற ஆண குழந்தையும் பிறந்தனர். இன்னொரு குழந்தை வேண்டுமென்று திருப்பதி பெருமாளிடம் வேண்ட கோமதியம்மாள் மீண்டும் கருவுற்று 1959 ம் வருடம் பால்குணமாதம் சுக்ல சப்தமி மிருக சீரிட நட்சத்திரத்தில் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தார். அக்குழந்தைக்கு வேங்கடநாதன் எனப் பெயரிட்டனர். அந் நிகழ்ச்சியில் வந்த பரிசுப் பொருட்களை ஒதுக்கிவிட்டு துளசி மாலையை மட்டும் எடுத்து குழந்தை விளையாடியது கண்டு அனைவரும் ஆனந்தப்பட்டனர்.


வித்யாப்யாசம்-!

மூன்று வயது ஆனதும் குழந்தைக்கு மணலின் மீது ஓம் என்று எழுதி சொல்லித்தர ஆரம்பித்தனர். திம்மண்ணபட்டர், சமஸ்கிருதம், கன்னட மொழிகளைக் கற்பித்து வீணைவாசிக்கவும் பயிற்சியளித்தார். திம்மண்ண பட்டர் இறைவடி சேர்ந்ததால் வேங்கடநாதனின் தமையன் குருராஜன் இவருக்கு உபநயனம் செய்வித்து தன் தமக்கையின் கணவர் மதுரை ஸ்ரீலட்சுமி நரசிம்மாச்சாரிடம் குருகுலவாசத்திற்கு அனுப்பிவைத்தார். அங்கு வேதம், தர்க்கம், வியாக்கரணம், வேதாந்தம், மீமாம்ஸம் போன்றவற்றை நன்கு கற்றுத் தேர்ந்தார்.


திருமண வாழ்க்கை!

குருராஜன் தன் சகோதரன் வேங்கடநாதருக்கு சரஸ்வதி என்ற பெண்ணை 1614-ம் ஆண்டு திருமணம் செய்வித்தார். இவருடைய மேதா விலாசத்தை அறிந்த காவேரிப்பட்டின வாசிகள் தங்களின் குழந்தைகளை கல்வி கற்க அனுப்பி வைத்தனர். கல்வி கற்றுத்தர எந்தவித அன்பளிப்பையும் ஏற்காமல் வேங்கடநாதன் இருந்ததால் குடும்பத்துடன் இந்த சுமையும் சேர்ந்தது.

வெங்கடநாதனின் பாண்டியத்தில் அகம் மகிழ்ந்த சரஸ்வதி மற்ற சுமைகளை பெரிது படுத்தாமல் இன்பத்துடன் வாழ அவர்களுக்கு ஓர் ஆண்மகவு பிறந்தது. அக்குழந்தைக்கு லட்சுமிநாராயணன் என்று பெயர் வைத்தனர்.

சத் புருஷர்!

ஒரு தனவான் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சூக்த பாராயணம் செய்து கொண்டிருந்தபோது இவருடைய ஏழ்மையைக் கண்ணுற்ற புரோகிதர் அங்குள்ள பிராமணர்களுக்கு சந்தனம் அரைத்துக் கொடுக்க பணித்தார். வேங்கடநாதன் உளம் ஒன்றி சூக்த பாராயணம் செய்து கொண்டே சந்தனம் அரைக்க அந்த சந்தனத்தில் அக்னி ஆவிர்பவித்தது, அது தெரியாமல் இந்த சந்தனத்தை பூசிக்கொண்ட அனைவருக்கும் அக்னியால் எரிச்சல் உடம்பெல்லாம் பரவியது. அப்போது அந்த வீட்டின் உருமையாளர் யார் சந்தனம் அரைத்தது என்று கேட்டு விபரம் அறிந்து ஒரு சத் புருஷரை அவமதித்து விட்டதை அறிந்து வேங்கடநாதனிடம் மன்னிப்புக் கோர அக்னியால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டினார். மீதியுள்ள சந்தனத்தை வாங்கி வருண சூத்திரம் ஜபித்து சந்தனத்தை தர அதைப் பூசியதும் அவர்களின் எரிச்சல் அடங்கியது. எல்லோரும் வேங்கடநாதரின் பெருமையை உணர்ந்தனர். தனவான் இவருக்கு மரியாதை செய்து சன்மானம் அளித்தார். இந்நிகழ்விற்கு பிறகு எந்த நிகழ்ச்சிக்கும் போவதில்லை என்று உறுதி கொண்டார்.

வறுமையின் பிடியில்!

காலப் போக்கில் எல்லோருக்கும் உணவு அளிப்பது மிகவும் சிரமமாயிருந்தது. கணவன் மனைவி இருவருக்கும் ஒரே உடை மட்டும் அதுவும் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. சாப்பிட இலை இல்லாததால் தரையை கழுவி அதில் போட்டு சாப்பிட்டனர். சாலிக்கிராம நீரையே பாலாக தன் குழந்தைக்கு கொடுத்து வந்தனர். ஒருநாள் இரவு கள்வர்கள் வீட்டிற்குள் புகுந்து இருந்த ஒரிரு பாத்திரங்களையும் திருடிச் சென்றுவிட்டனர். இதையறிந்த வேங்கடநாதன் கோபப்படாமல் நம்மைவிட மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று வருந்தினார்.

ஸ்ரீமடம்-கும்பகோணம்!

திடிரென்று சரஸ்வதிக்கு ஒர் யோசனை தோன்ற அதன்படி இருவரும் கும்பகோணம் ஸ்ரீ மடத்தில் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரிடம் சரணடைவது என முடிவெடுத்தனர். அதன்படி இருவரும் கும்பகோணம் மடம் செல்ல இவர்கள் வருகையை சுசீந்திரர் எதிர்பார்த்து காத்திருப்பது போலிருந்தது.


சுசீந்தர் அறிந்த ரகசியம்!

ஸ்ரீ நாமநவமி உற்சவத்திற்கு ஸ்ரீ மடத்திற்கு பல்வேறு ஊர்களிலிருந்து சீடர்கள் வந்திருந்தனர். திம்மண்ணபட்டரும் தம் மகன் வேங்கடநாதனை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். சுசீந்திர தன் குரு விஜயீந்தருடன் இருக்கும்போது திம்மண்ணபட்டர் வந்து வணங்கினார். அவரை ஆசீர்வதித்த விஜயீந்தரர் அவர் மகன் வேங்கடநாதன் நமஸ்கரிக்கும்போது அவரை நமஸ்கரிக்க விடாமல் அப்படியே தூக்கி தன் மடிமேல் வைத்துக் கொண்டார். அது எல்லோருக்கும் ஆச்சரியத்தைக் கொடுக்க விஜயேந்திரர் அந்த ரகசியத்தைச் சுசீந்திரருக்கு சொன்னார். அதாவது தன்னுடைய குரு ஸ்ரீ வியாசராஜர்தான் மீண்டும் பிறவி எடுத்து வேங்கடநாதனாக வந்திருக்கின்றார். அதனால் தான் அந்தக் குழந்தை என் குருநாதர் என்னை நமஸ்கரிக்க விடாமல் எடுத்துக் கொண்டேன் என்றார். அதனால் உங்களுக்குப் பிறகு இந்த மடத்தின் ஆதிபத்யத்தை வேங்கடநாதருக்கே அளிக்க வேண்டும் என்றார்.

மஹாபாஷ்யாச்சார்யர்!

தன் குரு சுசீந்தருடன் ராஜ மன்னார்குடி சென்றபோது அத்வைத சன்யாசி ஒருவருடன் வ்யாகரண மஹாபாஷ்யத்தை வாதம் செய்து வெற்றி கண்டதால் மனம் மகிழ்ந்த சுசீந்திரர் பண்டிதர் சபையில் மஹாபாஷ்யாச்சார்யர் என்று பட்டம் அளித்து கௌரவித்தார். ஒருமுறை தன் குருவுடன் தஞ்சாவூர் சென்ற போது ராஜ சபையில் குருவின் சார்பில் வாதம் செய்து வெற்றி கண்டார். தஞ்சை மன்னர் இருவரையும் கௌரவித்தார். குருவின் விருப்பப்டி ஸ்ரீ நாராயண பண்டிதாச்சார்யர் இயற்றிய ப்ரமேய நவமாலிகா- என்ற அனுமத்வ விஜயம் என்ற க்ரந்தத்திற்கு வியாக்யானம் எழுதி அனைவரின் பாராட்டைப் பெற்றார்.

குழப்பத்தில் வேங்கடநாதர்!

குரு சுசீந்திரருக்கு உடல் நலம் சரியில்லமல் போகவே வேங்கடநாதனை அழைத்து பெறுப்பை ஏற்றுக் கொள்ளச் சொல்ல நான் இன்னும் சம்சார பந்தத்தில் இருப்பவன் என்னால் நீங்கள் வகித்த பதவியை வகிக்க முடியாது எனச் சொல்ல வேறு ஒருவருக்கு சன்யாச தீக்ஷை அளித்து ஸ்ரீ யாதவேந்த்ர தீர்த்தர் என்று ஆச்ரமப் பெயரைச் சூட்டினார். சில நாட்களில் சுசீந்திரரின் உடல் நலம்பெற ஸ்ரீயாதவேந்த்ர தீர்த்தரை பாரததேச தீர்த்த யாத்திரை அனுப்பி மதப் பிரசாரம் செய்யச் சொன்னார்.

சில மாதங்கள் சென்றபின் மீண்டும் குரு சுசீந்திரரின் உடல் நலம் குறைந்தது. சிஷ்யர் ஸ்ரீ யாதவேந்த்ர தீர்த்தர் யாத்திரையில் இருந்ததால் அவரை வரச் சொன்னாலும் அவர் வர நீண்ட காலம் ஆகும். அதுவரை ஸ்ரீமூலராமருக்கு பூஜை செய்வது தடைப்படும் என வருந்திய சுசீந்திரரின் கனவில் வேங்கடநாதனே பீடாதிபத்யத்தை ஏற்கத் தகுந்தவன். இம்முறை அவன் சரி எனச் சொல்வான். அவனுக்கு சன்யாஷ தீக்ஷை தந்து ஸ்ரீ ராகவேந்த்ரர் என்று பெயர் சூட்டு என அருளாசி கூறி மறைந்தார்.

காலையில் கண்விழித்த சுசீந்திரர் தன் கனவும் குரு விஜயேந்திரரின் விருப்பமும் ஒன்றாக இருப்பது கண்டு மகிழ்ந்தார். மாலை வேங்கடநாதனைக் கூப்பிட்டு தன் கண்ட கனவையும் குருநாதர் விருப்பத்தையும் கூறி பொறுப்பை ஏற்கச் சொல்ல வேங்கடநாதன் கட்டாயமாக மறுத்தார். மீண்டும் வற்புறுத்தினால் மடத்தைவிட்டு சென்று விடுவேன் என்றார். சுசீந்திரர் இறைவனின் விருப்பப்படி நடக்கட்டும் என விட்டு விட்டார்.

மந்திர உபதேசம்!

வீட்டிற்கு வந்த வேங்கடநாதர் தமக்கு பிடிக்காத விஷயமான குருவின் ஆணையை மீறுதலை எப்படிச் செய்வது. குருவின் ஆனையை ஏற்றால் தன்னை நம்பியிருக்கும் மனைவி குழைந்தைகள் நிலை என்னாவது என முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் உறங்கினார். அப்போது இரவில் திடிரென்று ஓர் ஒளி வீசியது. அங்கே சர்வாலங்கார பூஷிதையாக கையில் வீணையுடன் சரஸ்வதி காட்சி கொடுத்து குமரா, என்னை சரஸ்வதிதேவி என்று அறிவாயாக! உன் குரு சுசீந்திரர் விரிந்தாவனவாஸி ஆக இன்னும் சிலகாலம் இருப்பதால் மூலராமரை பூஜை செய்ய சன்னியாசி வேண்டும் நீயே அதற்கு தகுதியானவன். இப்பிறவி உனக்கு அதற்காகத்தான். உன் சம்சார பந்தம் ஒரு காரணத்தால் ஏற்பட்டது. அது உனக்கு நிரந்தரம் அல்ல. சன்யாசம்தான் உனக்கு சொந்தம்.பூர்வத்தில் சத்ய லோகத்தில் பிரம்மதேவருக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து வந்த சங்கு கர்ணன் கிருதயுகத்தில் ஸ்ரீப்ரஹலாதன், துவாபரயுகத்தில் பாஹ்லீக மன்னர் கலியில் வியாசராஜ தீர்த்தர். நீ சன்யாசம் பெற்று மக்களை நல்வழிப்படுத்த இப்பிறவி ஏற்பட்டது. இது உன் விதி. உன்னால் மாற்ற முடியாது. உன் மனைவி குழந்தையை காப்பாற்றுவது இறைவனின் பொறுப்பு என மந்திர உபதேசம் பெற்றார். மனத்தெளிவு அடைந்தார்.

சரஸ்வதி சம்மதம்!

காலையில் தன் மனைவியிடம் மனம் விட்டு பேசலானார். குரு தன்னிடம் கூறியதையும் பின் இரவில் சரஸ்வதிதேவி காட்சி கொடுத்ததைப் பற்றியும் விளக்கமாகக் கூறி தன்னை சன்யாசம் ஏற்க அனுமதிக்கும்படி கேட்டார். தலையில் இடி விழுந்ததுபோலான சரஸ்வதி புழுப்போல துடித்தார். கணவனின் விருப்பத்திற்கு மாறாக இதுகாறும் ஏதும் சொன்னதில்லை என்பதால் இப்போது தமக்கு எந்த துன்பம்வரினும் அவர் விருப்பப்படி நடக்கட்டும் என முடிவெடுத்து தன் துக்கத்தை வெளிக்காட்டாமல் தங்கள் விருப்பப்படி செய்யுங்கள் என்றார். தன் மனைவியின் எண்ண ஓட்டம் புரிந்ததால் காலத்தின் கட்டாயம் என்று இறைவன்மேல் பாரத்தைப் போட்டு சன்யாசம் ஏற்க தீர்மானித்தார்.

தன் குருநாதர் சுசீந்திரரிடம் நடந்தவைகளைக்கூறி தன் சம்மதத்தை தெரிவித்தார். ஆனந்தப்பட்ட சுசீந்திரர் அடுத்து நடக்க வேண்டிய காரியங்களை ஏற்பாடு செய்யலானார். வேங்கடநாதர் இருந்து அவர் மகனுக்கு உபநயனம் செய்ய வேண்டியதை முதலாவதாக முறைப்படி செய்வித்தார். கணவருடன் சேர்ந்து செய்யும் கடைசி விசேஷமாக இருந்ததால் சரஸ்வதியால் தன் கண்ணீரை அடக்க முடியவில்லை.

நிகழ்ச்சி முடிந்ததும் தன் அண்ணா குருராஜாவை அழைத்து தனக்கு சன்யாசம் உத்திரவு ஆகியிருப்பதால் தன் மனைவி மகனை பார்த்துக் கொள்ளக் கேட்டுக் கொண்டார். அவரும் அவர்கள் இருவரையும் தங்கள் இருப்பிடத்திற்கு கூட்டிச் சென்றார்.

ஸ்ரீ ராகவேந்தர தீர்த்தர்!

வேங்கடநாதர் சன்யாசம் தஞ்சாவூரில் நடத்த குரு சுசீந்திரர் முடிவு செய்தார். இந்த வேதாந்த சாம்ராஜ்ய பட்டாபிஷேக நிகழ்வை தஞ்சாவூர் மன்னர் சிறப்பாக செய்து முடித்தார். 1621 துர்மதி ஆண்டு பால்குண சுத்த த்விதியை அன்று சுசீந்திரர் ஸ்ரீ மத்வாச்சாரியார் பரம்பரை வழக்கப்படி தனது சீடரான வேங்கடநாதருக்கு பட்டாபிஷேகம் செய்வித்து ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் என்ற பட்டமளித்து மகாசமஸ்தானத்தின் விக்ரஹங்களான மூலராம, திக்விஜயராம, ஜயராமர் மற்றும் சாஸ்திர கிரந்தங்கள் போன்ற பொக்கிஷங்களை ஒப்படைத்தார். வெண் கொற்றக்குடை, சாமரங்கள், அம்பாரி, பல்லக்கு பொன்ற ராஜ கௌரவங்களையும் ஒப்படைத்து வழ்த்தினார் அன்றைய தினமே ஸ்ரீ ராகவேந்திரர் விக்கிரஹங்களுக்கு செய்த சமஸ்தான பூஜை சிறப்பாக அமைந்தது.

சரஸ்வதி நற்கதி அடைதல்!

தன் கணவரை இனிமேல் பார்க்க முடியாததால் உலகமே இருண்டு போய் விட்டதாக நினத்த சரஸ்வதி துக்கம் தாளாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். ஊழ்வினையால் தற்கொலை செய்து கொண்டதால் பிசாசு வடிவம் கொண்டு அல்லல் பட்டார். தன் குருவுடன் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் வந்ததும் இந்த செய்தி கேட்டு வருந்தினர். ஒரு நாள் காவிரிக் கரையில் ஜபம் செய்து கொண்டிருந்தபோது சரஸ்வதி தன் நிலைகுறித்து வருந்த அவர்மேல் இரக்கம் கொண்ட ஸ்ரீ ராகவேந்திரர் தன் கமண்டலத்திலிருந்து நீரைத் தெளித்து அவருக்கு நற்கதியருளினார்.

சுசீந்திரர் ஹரிபாதம்!

ஸ்ரீ ராகவேந்திர்ர் தன் குருவுடன் சஞ்சாரம் செய்கையில் ஆனேகுந்திதியில் சுசீந்திரர் ஹரிபாதம் அடைந்தார். அவருக்கு அங்கு விருந்தாவன் பிரதிஷ்டைதனை முறைப்படி செய்வித்து கும்பகோணம் வந்து சேர்ந்தார்.

கும்பகோணத்தில் ஸ்ரீயாதவேந்த்ரரை மடத்தின் பொறுப்பை ஏற்கச் சொன்னார். அவர் ஸ்ரீ ராமரே தங்களை தேர்வு செய்தபின் நான் அந்த பொறுப்பை ஏற்பது சரியில்லை எனக்கூறி அன்று மட்டும் மூல ராமருக்கு பூஜை செய்துவிட்டு தேச சஞ்சாரம் சென்று கிருஷ்ணா நதிக்கரையில் முதுமலே என்ற இடத்தில் தவம் செய்து அங்கேயே பிருந்தாவனஸ்தரானார்.

ஸ்ரீ ராகவேந்திரர் நித்ய அனுஷ்டானங்கள்!

தினமும் ப்ரம்ம முகூர்த்தத்தில் துயிலெழுந்து மூலராமர், வேதவ்யாசருக்கு நமஸ்காரம் செய்து துளசி செடியில் எழுந்துள்ள லட்சுமி தேவியை வணங்கி, ஆஞ்சநேயரை வழிபட்டு கஜேந்திர மோஷ துதி முதலிய ஸ்தோத்திரங்களைச் சொல்லிக் காவிரியில் சங்கல்ப விதிபடி ஆசமனம் செய்து மந்திரங்கள் ஜபித்து, மிருத்திகா ஸ்நானம், அகமர்ஷண ஸ்நானம் செய்து ஜபம் செய்வார்.

பின்னர் தன் பரமகுரு விஜயீந்தர தீர்த்தருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு ஸ்ரீ மடத்திற்கு வந்து பாட ப்ரவசனங்கள் செய்வார்.

மதியம் மீண்டும் ஸ்நானம் ஜபம் முடித்து சமஸ்தான பூஜை, பகவத் ஆவாஹனம் ஷோடசோபசார பூஜைகளினால் த்யானம் ஆவாஹனம் அர்க்ய பாத்யம் செய்து நைவேத்யம் படைத்து மஹா தீபாராதனை செய்து மந்திர புஷ்பங்களை சமர்பிப்பார். வாயு பூஜை, குருபரம்பரை பூஜை செய்து பக்தர்களுக்கு மூலராமர், திக்விஜயராமர், வாசுதேவ மூர்த்தியை தரிசனம் காட்டி பூஜையை முடிப்பார். பிஷை ஏற்று காத்திருக்கும் மாணவர்களுக்கு பாட ப்ரவசனம் செய்வார்.

மாலையில் தரிசனத்திற்காக காத்திருப்பவர்களுக்கு தரிசனம் தந்து ஆசி வழங்குவார். பின் ஸ்நானம் செய்து மாலை பூஜை முடித்து வந்தவர்களுக்கு ஆசிவழங்கி மடம் சம்பந்தப்பட்ட அலுவல்களை கேட்டுத் தெரிந்து கொள்வார். பின் இரவு நித்திரை செய்வார்.

ஸ்ரீ ராகவேந்தரின் யாத்திரை!

ஸ்ரீ ராகவேந்திரர் மதுரை வந்தபோது திருமலை நாயக்கரின் மந்திரி அப்பைய தீக்ஷிதரின் பேரன் நீலகண்ட தீக்ஷிதர் ராகவேந்தரர் உடன் வாதத்தில் ஈடுபட்டு, இவரது வாதத்திறமையை மெச்சி இவர் இயற்றிய ’பாட்ட சங்க்ரஹ’ எனும் கிரகந்தத்தை யானை அம்பாரிமீது வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று மரியாதை செய்தார்.

உடுப்பியில் பல நாட்கள் தங்கியிருந்து கிருஷ்ணனை பூஜித்தார். அப்போது தந்த்ர தீபிகா, ந்யாய முக்காவளி, சுதா பரிமளா ஆகிய கிரந்தங்களை இயற்றி கிருஷ்ணருக்கு சமர்ப்பித்தார். கிருஷ்ணருக்கு சிறிய தங்கத்திலான விக்ரஹம் செய்து ஸ்ரீ மடத்தின் பூஜையில் சேர்த்தார்.

உத்ர கர்நாடகாவில் கிரீடகிரி என்ற கிரமத்தில் இருந்த வெங்கடதேசாய் வீட்டில் மூலராமர் பூஜை செய்ய ஒப்புக் கொண்டார். வெங்கடதேசாயும் அவர் மனைவியும் பூஜைக்கும் விருந்திற்கும் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். அவர்களின் குழந்தை போஜனத்திற்கு வைத்திருந்த மாம்பழரச அண்டாவில் எட்டிப்பார்த்து தவறி உள்ளே விழுந்து இறந்து விட்டது. சிரிது நேரத்தில் குழந்தையைத் தேடிய குடும்பத்தினர் குழந்தை இறந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த விஷயம் தெரிந்தால் அந்தணர்களது போஜனம் தடைபடும் என்பதால் இருவரும் உண்மையை மறைத்தனர். பூஜை முடிந்ததும் தீர்த்தம் வாங்க அனைவரையும் வரச் சொன்னவர் வெங்கடதேசாயை குடும்பத்துடன் குழந்தையை எடுத்து வரச் சொன்னார். வெங்கட தேசாய் தீர்த்தம் வாங்குவதை தவிர்க்கும் விதமாக கடைசியில் வாங்குகின்றேன் என்றார். சூழ்நிலையை அறிந்த ஸ்ரீ ராகவேந்திரர் மூலராமர் உன் வீட்டில் எழுந்தருளியிருக்கும்போது எந்த அசம்பாவிதமும் நடைபெறாது. உன் குழந்தையை தூக்கிவா என்றார். தன் கமண்டலத்திலிருந்த நீரை ஜபித்து குழந்தையின் மேல் தெளிக்க குழந்தை தூக்கத்திலிருந்து எழுவதுபோல் எழுந்தது. வெங்கடநாதர் ஆனந்தமடைந்து அந்த கிராமத்தையே ஸ்ரீ ராயருக்கு தானமாக அளித்தார்.

கிரீடகிரியிலிருந்து பீஜப்பூர் செல்லும் வழியில் ஒரு தோட்டத்தில் களைப்பாற அருகில் இருந்த மேடையில் அமர்ந்தார். தோட்டக்காரன், சுவாமி நேற்றுதான் சாவனூர் நவாபின் மகன் பாம்பு தீண்டி இறந்தபின் சவ அடக்கம் செய்யப் பட்டுள்ளது. அதன் மீது தாங்கள் அமரக்கூடாது என்றான், சிறிது யோசித்த ஸ்ரீராயர், அந்தக் குழந்தை இறக்கவில்லை. மேடையை தோண்டி அச்சிறுவனை வெளியே எடுங்கள் என்றார். நாவாப் தன் ஆட்களுடன் வந்து தோண்டி உடலை வெளியே எடுத்து வத்தனர். பலகன் மேல் கமண்டல நீரைத் தெளிக்க உயிர் பெற்றான். மகிழ்வடைந்த நவாப் பல பரிசுகள் அளித்து கௌரவித்தார்.

பீஜப்பூரின் சுல்தான் ஸ்ரீ ராயருக்கு ஜகத்குரு என்ற பட்டமும், மரியாதைக்குரிய பரிசாக வெண்கொற்றக் குடையும் அளிக்க அங்கிருந்து பண்டரிபுரம் சென்றார்.

யாத்திரை செல்லும் வழியில் உடன் வந்த சிஷ்யரின் மனைவிக்கு பிரசவ வலி எடுக்க அந்த இடத்தில் குடிக்க நீரில்லாமல் இருக்க தன் தண்டத்தால் பூமியில் தட்ட நீரூற்று தோன்றியது. இது தண்ட தீர்த்தம் எனப்பட்டது.

அங்கிருந்து புறப்பட்டு பண்டரிபுரம்- பாண்டுரங்கன், கோல்ஹாபூர்- மஹாலட்சுமி, ராய்ச்சூர்-மாணவி கிராமம்- ஆஞ்சநேயரை தரிசித்தார். அங்கு வந்த முதியவர் நற்கதி அருள வேண்ட நாளை மூல ராமருக்கு முடிந்த சேவை செய் என்றார். அடுத்தநாள் அவர் தன்னால் இயன்ற கடுகு கொண்டுவர சாதுர்மாஸ்ய மாதத்தில் சேர்க்க கூடாது என்ற நியதி இருப்பதால் தயங்கிய சிப்பந்திகளுக்கு மூலராமர் ஏற்றுக் கொண்டார். அதனால் சமையலில் சேர்த்தலாம் என்றும் இனி சாதுர்மாஸ்ய மாதத்தில் கடுகு சேர்ப்பதில் தவறில்லை என ஆணை வழங்கினார். நைவேத்தியம் முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது. முதியவர் முக்தியடைய ஸ்ரீராயர் இவர் முன் ஜன்மத்தில் ஸ்ரீகனகதாஸர். இப்பிறவியில் என்மூலம் முக்திபெற காத்திருந்தார் என பெரியவரின் பெருமைதனை சொன்னார்.

ஸ்ரீனிவாச்சார் என்ற அறிஞர் தான் இயற்றிய நூல்களை ஸ்ரீராயரிடம் காட்டி பாராட்டுப் பெற்றார். மந்த்ராக்ஷதை பெற்று ஸ்ரீமடத்தில் பிரசாதம் உட்கொள்ளும் போது அதில் கடுகு சேர்ந்திருக்க கண்டவர் உணவை ஒதுக்கினார். குருராஜரின் ஆணையின் பேரில் வேறு உணவு அவருக்கு பரிமாறப்பட்டது. ஊர் திரும்பிய அவர் அவர் தமையனாருக்கு மந்த்ராக்ஷதையை கொடுக்க எடுத்தபோது அது கறுப்பாயிருக்க, அவர் தமையனார் நடந்த விஷயங்களைக் கேட்டு, தம்பி நீ தவறு செய்து விட்டாய், ஸ்ரீராயர் பெரிய மகான், அவர் ஏதோ ஒரு காரணத்திற்காக மாற்றம் செய்தால் அதை ஏற்றுக் கொள்வதே சிறப்பு. அவரிடம் மன்னிப்புகேள் என்றார். உடன் குருராஜரை சந்தித்து தன் தவறுக்காக வருந்தினார். மூலராமருக்கு நைவேத்தியம் செய்ததை உதாசீனம் செய்ததால் இது நடந்தது. நீங்கள் இன்று ஸ்ரீமடத்தில் பிரசாதம் உட்கொள்ளுங்கள் என்றார். ஸ்ரீ ராயரிடம் உத்திரவு பெற்று ஊர் திரும்ப நினைத்து கருப்பான மந்த்ராக்ஷதை காண்பிக்க எடுக்க அது சிவப்பாக மாறியது கண்டு தான் மன்னிக்கப்பட்டதை உணர்ந்து ஆனந்தித்தார்.

கந்தனாடி என்ற ஊருக்கு வந்தபோது தாய், தந்தையை இழந்தவனின் சொத்துக்களை அனுபவிக்கும் மாமன், மாமியால் கல்வி அறிவில்லாதவனாக வளர்க்கப்பட்டு ஆடு மாடுகளை மேய்ப்பவனாக கொடுமை படுத்தப்பட்ட வெங்கண்ணா என்ற அந்தணச் சிறுவன் ஸ்ரீராயரைச் சந்தித்து தனக்கு நல்வழி காட்ட வேண்டினான். “ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம” என்று ஜபம் செய். நல்லது நடக்கும் என்றார். சிலமாதங்கள் கழித்து அவ்வழிவந்த அதோனியின் அரசன் சித்தி மசூத்கானிடம் ராஜங்க சேவகன் இரு கடிதங்களைக் கொடுக்க அவற்றை படிக்க எப்போதும் படிக்கும் உதவியாளன் இல்லாததால் வேறு ஆள் தேடி வெங்கண்னாவிடம் கொடுக்க படிப்பறிவில்லாதவன் ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் நினைத்து தியானித்து அக்கடிதத்தைப் பார்க்க அதிலுள்ள எழுத்துக்கள் அவனுக்குப் புரிய விளக்கத்துடன் சொன்னான். அரசனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது என்றும், பல காலமாக முற்றுகையிட்ட ஒரு கோட்டை அவன் வசமானது என்ற இரண்டு செய்தியை விளக்கமாக கூறியதால் அரசன் மகிழ்ந்து வெங்கண்ணாவை ராஜாங்க அதிகாரி அந்தஸ்தில் தன் ஆலோசனையாளராக நியமித்தான்.


“ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நம” என்ற மந்த்ரத்தை ஜபித்தால் அது மகாலட்சுமியையும், ராமசந்திர மூர்த்தியையும் குறிக்கும். அது ராமஜபத்திற்கு இனையானது என்பதால் ஆஞ்சநேயர் மகிழ்வார். நரசிம்மரை பூஜித்தால் ப்ரகலாதனை பூஜிப்பதற்கு சமம். பிரகலாதனே ஸ்ரீ ராகவேந்த்ரராக பிறந்திருப்பதால் நரசிம்மரை பூஜித்த பலனும் கிட்டும்.

தஞ்சையில் பஞ்சம்!

கந்தனாடியை விட்டு புறப்பட்டு திருப்பதி, காஞ்சிபுரம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய ஷேத்திரங்களில் தரிசனம் செய்து கும்பகோணம் வந்தார். தஞ்சை மன்னன் விஜயராகவநாயக் பீஜப்பூர், மைசூர், வேலுர் அரசர்கள் படையெடுப்பால் தோல்வியுற்றதால் பெரும் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு தஞ்சை பஞ்சத்தில் சிக்க ஸ்ரீ ரகவேந்த்ரரை அழைத்து அவரிடம் ஆலோசனை கேட்டான். அரசனின் தான்ய களஞ்சியத்தில் பீஜாட்க்ஷர மந்திரத்தை எழுதி மக்களுக்கு வழங்க களஞ்சியத்தில் தானியங்கள் அள்ள அள்ள குறையாமல் இருந்தது. பின்னர் மழை வேண்டி யாகம் செய்து மழையை தருவிக்க நீர் நிலைகள் நிறைந்து பஞ்சத்திலிருந்து தஞ்சை மீண்டது. தன் மகிழ்வைத் தெரிவிக்க தன் வைரமாலையை ஸ்ரீ ராயருக்கு அன்பளிப்பாக கொடுக்க அவர் அதை யாகத்தீயில் போட்டுவிட மனம் வருந்திய மன்னன் ராயர் தன்னை உசாதீனப்படுத்தி விட்டாரென நினைத்தான். யாகம் முடியும்போது அந்த மாலை யாகத்தீயிலிருந்து வெளிவர அதை மன்னனிடம் கொடுக்க தன் தவறை உணர்ந்த மன்னன் அதை மீண்டும் ஸ்ரீராயரிடம் அன்புடன் கொடுத்தான்.

காஷாய வஸ்திரம். பிருந்தாவன் பூஜை உரிமை!

கன்னட தேசத்திலிருந்து வந்த மூன்று அந்தணர்கள் காவிரிக்கரையில் குளிக்கும்போது ஸ்ரீராயரை சோதிக்க எண்ணி ஒவ்வொருவரும் ஒரு இனிப்பை மனதில் நினைத்து அது தனக்கு பரிமாறப்பட்டால் ஸ்ரீராயர் மாகன் என ஒப்புக்கொள்வது என முடிவு செய்தனர். அப்போது ராகவேந்த்ரர் கஷாய வஸ்திரத்தை துவைப்பவன் நீங்கள் நினைத்தபடி இனிப்பு பரிமாறப்படும் என்றான். பின்னர் வஸ்திரத்தை கல்லின்மேல் வைத்துவிட்டு குளிக்கச் சென்றான். அப்போது நாங்கள் நினைத்தது உனக்கு எப்படித் தெரியும் எனக் கேட்டனர். அவன் உங்களிடம் நான் ஒன்றும் சொல்ல வில்லையே என்றான். பின் கரையேறி வந்து வஸ்திரத்தை எடுத்துக் கொண்டு நீங்கள் நம்பிக்கையுடன் ஸ்ரீமடத்திற்கு வாருங்கள் நீங்கள் விரும்பியது கிடைக்கும் என்றான். வஸ்திரம் கையில் வைதிருக்கும்போது இவர்கள் மனதில் உள்ளதை அறிகின்றான் என புரிந்த அவர்கள் ஸ்ரீராயரின் வஸ்திர மகிமையை உணர்ந்தனர்.
பின்னர் ஸ்ரீமடத்தில் பூஜையில் கலந்து கொண்டு உணவருந்தச் சென்றனர். அவர்கள் எண்ணியபடி இனிப்புகள் பரிமாறப்பட்டது. போஜனம் முடிந்தபின் குருராஜர் நீங்கள் நினைத்தபடி பஷணங்கள் பரிமாறப்பட்டனவா என்றார். அவர் கால்களில் விழுந்து தங்களை மன்னிக்க கோரினர். அவர்களை மன்னித்த குருராஜர் தன் பிருந்தாவன் பூஜை செய்யும் உரிமை இவர்களுக்கும் இவர்கள் சந்ததியினருக்கும் என சாசனம் எழுதி தந்தார்.

மிருத்திகை மகிமை!

ஸ்ரீ மடத்துச் சிப்பந்தி ஊருக்குச் சென்று மணம் செய்ய விரும்பி சமயம் வரும்போது தனிமையில் ஸ்ரீராயரிடம் சொல்லி அனுமதிபெற்று பொருளுடன் ஊருக்குச் செல்ல விரும்பினான். தனிமையான சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. ஸ்ரீ ராகவேந்த்ரர் மிருத்திகா சௌசம் சுத்தி செய்யும்போது சந்தர்ப்பம் கிடைக்க தன் எண்ணத்தைச் சொன்னான். உடன் ஸ்ரீராயர் தன் கையிலிருந்த மிருத்திகாவை கொடுத்து நீ ஊருக்குப் போகுமுன் உனக்குப் பொண்ணும் பொருளும் கிடைக்கும் என ஆசி வழங்கினார்.

வழியில் இரவு நேரமானதால் அருகிலிருந்த ஊரின் வீட்டுத் திண்ணையில் படுத்தான். அந்த வீட்டில் குழந்தை பிறந்திருப்பது அறிந்து அவர்களுக்கு தொந்தரவு செய்யக் கூடாது என்றெண்ணி ஓரமாக அமைதியாகப் படுத்துக் கொண்டான். நடு இரவில் ஓர் பிரம்ம ராஷஸன் எழுப்ப விழித்து பார்த்தவன் அவன் உருவத்தைப் பார்த்து பயந்தான். அப்போது அந்த உருவம் உள்ளே இருக்கும் குழந்தையை சப்பிடப்போகின்றேன். உன்னிடம் இருக்கும் ஒன்று என்னைத் தடை செய்கின்றது. அதை மறைத்து வை என்றது. அப்போதுதான் அந்த பிரம்ம ராஷஸன் சொல்வது ஸ்ரீராயர் தன்னிடம் கொடுத்த மிருத்திகை என உணர்ந்தான். ராஷ்ஸனிடம் நீ எனக்குப் பொன்னும் பொருளும் தந்தால் நான் நீ கூறியவாறு செய்கின்றேன் என்றான். ராஷஸன் ஒரு குடம் நிறைய தங்க காசுகளை கொடுத்தது. உடன் அந்த மிருத்திகையை எடுத்து ஸ்ரீராயரை நினைத்து அந்த ராஷஸன்மேல் போட அவன் எரிந்து கந்தர்வனாக மாறினான். தன் சாபம் தீர்ந்ததற்கு நன்றி சொன்னான். இவற்றையெல்லாம் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர் இவரைப் பற்றி விசாரித்து அவர் சொந்தத்தில் உள்ள ஒர் பெண்ணைக் காட்ட திருமணம் நடைபெற்றது. மிருத்திகை மகிமையால் பொன்னும் பொருளும் கிடைத்தது

பிருந்தாவன பிரவேசத்திற்கு சூசகம்!

கும்பகோணத்தில் சீடர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது ஸ்ரீ ராகவேந்த்ரர் திடிரென்று எழுந்து வானை நோக்கி கை கூப்பி வணங்கினார். அப்போது ஆகாயத்தில் இரண்டு விரல்கள் மூன்று முறை தெரிய அதைப் பற்றி விளக்கும்போது தனக்கு பிருந்தாவன வாஸம் செய்ய 2வருடங்கள், 2மாதங்கள், 2நாட்கள் இருப்பதாகவும் முக்திக்குச் செல்லும் ஸ்ரீகிருஷ்ண த்வைப்பாயனர் இதைக் குறிப்பால் உணர்த்தியதாகவும் கூறினார். அனைவரும் வருத்தப் பட்டாலும் ஸ்ரீ ராகவேந்திரர் கும்பகோணத்தை விட்டு புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

மடத்தின் நிர்வாகத்தில் இருந்த கும்பேஸ்வரர், சக்ரபாணி, சாரங்கபாணி கோவில்களை காமகோடிபீடம், வைணவ மடங்களுக்கு மாற்றினார். விஜயீந்த்ரர் பிருந்தாவனம் பாடசாலைகளை பூர்வாசிரம பந்துக்கள் வசம் ஒப்படைத்தார். பின் இங்கிருந்து புறப்பட்டு ஆனே குந்தி சென்று தன் குரு மார்களை பூஜித்து விட்டு அதோனி நோக்கிச் சென்றார். தனக்கு வாழ்வளித்து தன்னை உயர் நிலைக்கு உயர்த்திய குரு ஸ்ரீராகவேந்த்ரர் வரவேற்பிற்கான சகல ஏற்பாடுகளையும் பூர்ண கும்ப மரியாதையுடன் வெங்கண்னா திவான் செய்தார். பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்.


பிருந்தாவனத்திற்குரிய இடம் தேர்வு!

அரசர் சித்தி மசூத்கானை மூலராமர் பூஜையில் கலந்து கொள்ள வெங்கண்ணா கேட்டுக் கொண்டார். பூஜைக்குமுன் சந்திக்க வந்த சித்திமசூத்கான் ஒரு வெள்ளித் தட்டில் மாமிசத் துண்டுகளை வைத்து அதை ஒர் பட்டுத் துணியால் போர்த்தி ஸ்ரீ ராகவேந்த்ரரிடம் கொடுத்தான். பூஜை முடிந்ததும் தன் கமண்டல நீரைத் தெளித்து துணியை விலக்க உள்ளே பழங்களும் பூக்களாகவும் இருக்கக் கண்ட சித்தி மசூத்கான் ஆச்சர்யம் கொண்டு சாஷ்டாங்கமாக காலில் விழுந்து மன்னிப்புக் கோரினான். ஸ்ரீராயர் இந்த விஷயம் யாருக்கும் தெரியாது, மூல ராமர் நீங்கள் கொண்டு வந்ததை பழங்களாகவும் பூக்களாகவும் ஏற்றுக்கொண்டார். நீங்கள் வருந்த வேண்டாம் என்றார். எனினும் அரசரின் மனம் தான் அபசாரம் செய்து விட்டதாக வருந்தியது. அதற்கு பரிகாரமாக இரண்டு கிராமங்களை தானமாகத் தர ஸ்ரீ ராகவேந்த்ரர் அந்த கிராமங்கள் மக்கள் பயன் பாட்டிற்கு இருக்கட்டும். மாஞ்சால கிரமம் மட்டும் வேண்டும் என்றார். மாஞ்சால கிராமம் முன்னதாகவே காஜிக்கு தானமாக தரப்பட்டிருந்தாலும் காஜிக்கு அந்த இரண்டு கிரமங்களைக் கொடுத்து மாஞ்சாலக் கிராமத்தை மீட்டு ஸ்ரீமடத்திற்கு தானமாகக் கொடுத்தார் மன்னர்.

பிருந்தாவனம்-இடத்தின் சிறப்பு!

ஒர் நல்ல நாளில் வெங்கண்ணா உதவியுடன் மாஞ்சால கிரமத்தில் ஓர் இடத்தில் குழி தோண்டச் சொன்னார். அங்கு கொஞ்சம் யாகம் செய்ததற்கு அடையாளமாக சாம்பலும் அதற்கு கீழ் பலிபீடமும் இருந்தது. கிருத யுகத்தில் தான் பிரஹலாதனாக இருந்தபோது பலமுறை இந்த இடத்தில் யாகங்கள் செய்திருக்கின்றேன். ஸ்ரீராமர், லட்சுமணர் சீதையைத் தேடி வந்தபோது இந்த இடத்தில் இளைப்பாறியுள்ளனர். திரேதாயுகத்தில் பாரத யுத்தத்திற்குப்பின் அசுவமேதயாகம் செய்தபோது அனுஸால்வனை எதிர்த்து அர்ச்சுனன் சண்டையிட நேர்ந்தபோது அனுஸால்வனை அர்சுனனால் வெல்ல முடியவில்லை. அதற்கு காரணம் அவன் இந்த யாகம் செய்த இடத்தில் இருந்து சண்டையிட்டதுதான். இதை அறிந்த ஸ்ரீ கிருஷ்ணர் அர்சுனனை சிறிது பின்னே செல்ல வைத்தார். பின்னர் அனுஸால்வனை அர்ச்சுனன எளிதாக வென்றான். விபுதேந்திர தீர்த்தர் என்ற மகானும் இங்கு பலகாலம் தவம் செய்துள்ளார். எனவே இந்த இடம் மிகவும் புனிதமானது. இந்த இடத்தில்தான் தான் பிருந்தாவன பிரவேசம் செய்யப்போவதாக அறிவித்தார்.

பிருந்தாவன பிரவேசம்!

மாஞ்சால கிராமத்தின் தேவதை மாஞ்சாலம்மனைப் பிரார்த்தித்து அந்த இடத்தில் தன்னுடைய பிருந்தாவன பிரவேசத்திற்கு அனுமதி அளிக்க வேண்டினார். மாஞ்சாலம்மன் தன் சன்னதிக்கு அருகிலேயே பிருந்தாவனப் பிரவேசம் செய்யும் படியும் பிருந்தாவன் சன்னதிக்கு எதிரே பன்னிரண்டு ஆட்டுத் தலைகளை கல்லில் செதுக்கும்படியும் அதன் மூலம் தான் குருராஜருக்கு அனுகிரஹிப்பதாயும் உறுதியளித்தாள். தன் குலதெய்வமான வெங்கட்ரமண சுவாமிக்கு ஓர் கோவில் கட்டினார். பூஜை செய்பவர்கள் சிப்பந்திகள் தங்குவதற்கு வீடுகள் கட்டினார். வெங்கண்ணாவிடம் பிருந்தாவனம் தயார் செய்யச் சொன்னார். அருகிலுள்ள மாதவரம் கிராமத்தில் ஸ்ரீராமர் 7நாழிகை நேரம் அமர்ந்திருந்த கல்லை அடையாளம் காட்டி அதை வைத்து பிருந்தாவனம் செய்யும்படி பணித்தார்.

அருகிலுள்ள கணதாளம் என்ற இடத்தில் உள்ள குன்றின்மேல் தவம் செய்தார். அங்கு ஸ்ரீ பஞ்ச முக ஆஞ்சநேயர் உருவம் சுயம்பாக தோன்றியது.

தனது பூர்வாசிரம அண்ணன் பேரர்களில் ஒருவர் வெங்கண்ணாச்சார்யார் என்பவரை தனக்குப்பின் பீடாதியத்யம் ஏற்க அனுக்ரஹித்தார். அவருக்கு ஸ்ரீயோகீந்த்ர தீர்த்தர் என ஆச்ரமப் பெயர் சூட்டினார். தன் பாதுகையை ஸ்ரீ யோகீந்த்ர தீர்த்தரிடம் கொடுத்து அதை பூஜித்து வரப் பணித்தார். அது ஸ்ரீ மடத்தின் பூஜையில் உள்ளது.

விரோதிகிருது வருடம்-1671 ஸ்ராவண மாதம் கிருஷ்ணபக்ஷ் த்விதை வெள்ளிக்கிழமை பூர்வத்தில் ஸ்ரீபிரஹலாதனாக இருந்தபோது யாகம் செய்த இடத்தில் கிழக்கு நோக்கி பத்மாசனத்தில் அமர்ந்து துளசிமாலை கையில் எடுத்துக் கொண்டு கையைத் தூக்கி அனைவரையும் ஆசீர்வாதம் செய்தார். பின் கண்களை மூடி மாலையை உருட்டி ஜபம் செய்ய ஆரம்பித்த சிறிது நேரத்தில் ஜபமாலை உருட்டுவது நின்றது. குருராஜர் நிர்விகல்ப சமாதி அடைந்தார்.

ஸ்ரீ குருராஜரை சுற்றி பிருந்தாவனம் ஸ்தாபனம் செய்து தலைக்குமேல் வந்ததும் 700 லக்ஷ்மிநாராயண சாலிக்ரமங்களைக் கொண்டு நிரப்பினர். அதற்குமேல் வெள்ளிப் பலகை வைத்து மூடி அதன்மேல் மிருத்திகையைப் பரப்பி பிருந்தாவன பிரதிஷ்டை செய்து ஸ்ரீயோகீந்த்ர தீர்த்தர் பிருந்தாவனத்திற்கு பூஜை செய்தார்.

அப்பண்ணாச்சார்யர்!

ஸ்ரீ ராகவேந்தரிடம் பக்தி கொண்ட சீடர் அப்பண்ணாச்சார்யார் 25கி.மீ தொலைவில் உள்ள பிக்ஷாலாயாவில் குழைந்தகளுக்கு பாடம் சொல்லித்தரும்போது பிக்ஷையாக பெற்ற அரிசி மற்றும் தானியங்களை நீரில் நனைத்து துணியில் கட்டித் தொங்கவிட்டு பாடம் நடத்துவார், பாடம் கற்றுத் தந்தபின் மரத்தில் கட்டப்பட்ட அரிசி மூட்டையை எடுத்து பார்த்தால் அது வெந்து சாதமாக மாறியிருக்கும். அதை நிவேதனம் செய்து மாணவர்களுக்கு உணவாக வழங்குவார். வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால் சென்று விட்டு ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனப் பிரவேசத்திற்கு முன் அவரை சந்தித்து விடலாம் என நினைத்தார். பயணம் முடிந்து திரும்பி வந்தபோது துங்கபத்திரையில் வெள்ளம் கரை பிரண்டு ஓடியதால் உடன் மாஞ்சலா கிரமத்திற்கு வரமுடியவில்லை. வெள்ளம் வடிந்தபின் ஓடோடி வந்தார். அவர் வருவதற்குள் ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனத்தின் மேற்பகுதி மூடப்பட்டது. விக்கித்து நின்ற அவர் அழுது புரண்டார். வரும்போது அவர் புதியதாக இயற்ற ஆரப்பித்த ஸ்தோத்திரம் பாதியில் நின்றுவிட்டது. அப்போது அந்த ஸ்தோத்திரம் முடிவதற்கான வார்த்தையை குருராஜர் சொல்ல அனைவரும் கேட்டனர். அதுவே அப்பண்ணாச்சார்யருக்கு ஸ்ரீ ராகவேந்தரின் காட்சியாக கிடைத்தது.

ஸர்தாமஸ் மன்றோ!

19-ம் நூற்றாண்டில் மஞ்சால கிராமத்தையும் மற்ற இடங்களையும் அரசுடைமை ஆக்க பிரிட்டிஷ் அரசாங்கம் ஆணையிட அதற்கு பக்தர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவிக்க அப்போதைய பெல்லாரி கலெக்டர் ஆரய்ந்து முடிவு செய்ய ஸ்ரீமடத்திற்கு வந்தார். அங்குள்ள முறைப்படி காலணிகளை கழற்றிவிட்டு பிருந்தாவனத்தின் முன் நின்று வணங்கினார். ஸ்ரீராகவேந்த்ரர் வெளிப்பட்டு அவரிடம் அரசுடமை ஆக்கக்கூடாது என வாதிட்டார். சர்தாமஸ் மன்றோ கேட்ட கேள்விகளுக்கு திருப்தியான் முறையில் பதில் அளித்தார். அப்போது அவர் மீண்டும் வணங்க அவர் கையில் மந்த்ரக்ஷ்தை இருந்தது. வெளியில் வந்தவர் இதுவரை என்னுடன் பேசியதுதான் உங்கள் ஸ்ரீ ராகவேந்த்ரரா எனக் கேட்டபோதுதான் சிப்பந்திகள் ஸ்ரீராயர் தரிசனம் தந்து உரையாடியுள்ளார் என அறிந்தனர். பின்னர் இந்த அரசுடமை ஆணை ரத்து ஆனது.

#####

ஞாயிற்றுக்கிழமை, 08 April 2018 17:53

சனந்தனர்-பத்மபாதர்

Written by

ஓம்நமசிவய!

மூவாச் சாவா முத்தா போற்றி!
ஆவா எங்களுக்கு அருள்வாய் போற்றி!
தமிழ்ச்சுவைச்சார் திருச்செவியாய் போற்றி!
அமிழ்தாய் எம் அகத்தானாய் போற்றி!
மழவிளங்களிறே மணியே போற்றி!
குழவியாய்ச் சிவன் மடி குலவுவோய் போற்றி! போற்றி!

&&&&&

சனந்தனர்-பத்மபாதர்

சோழதேசத்தில் பிறந்த சனந்தனர் ஒரு மகானிடம் நரசிம்ம மந்திரத்தை உபதேசம் பெற்றார். அந்த மந்திரத்தைக் கோடிக் கணக்கில் ஜபித்து மந்திர சித்தி பெற்று நரசிம்ம மூர்த்தியை தரிசிக்க வேண்டி தனிமையில் இருக்க ஒரு மலை அடிவாரத்தை தேர்ந்தெடுத்தார். அருகில் உள்ள குகையில் தவம் செய்ய ஆரம்பித்தார்.

உருவைக் கண்ட வேடன் - குரலைக் கேட்ட சனந்தனர்

அந்தக் காட்டில் வேட்டையாடும் வேடன் ஒருவன் நாம் வேட்டையாட காட்டில் சுற்றித் திரிகின்றோம். இவர் எதற்கு இங்கு அமர்ந்திருக்கின்றார் என நினைத்து சனந்தரை அனுகி நீ எதற்காக இந்தக் காட்டில் உட்கார்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றாய் என்றான். சனந்தர் தன் நோக்கத்தை அவனுக்குப் புரிய வைக்க முடியாது என்பதால் நான் நரசிம்மத்தைக் கான வந்திருக்கின்றேன் அது இடுப்பிற்கு கீழே மனிதனாகவும் மேலே சிங்க உருவத்துடனும் இருக்கும் என்றதும், அப்படி ஒரு மிருகத்தை நான் இதுவரை இந்தக் காட்டில் கண்டதில்லை. உண்மையாக அப்படி ஒரு மிருகம் இருந்தால் நாளை மாலைக்குள் இந்தக் காட்டில் அது எங்கிருந்தாலும் கட்டி கொண்டு வருகின்றென் அதற்காக நீ சிரமப் படவேண்டாம் எனக் கூறிச் சென்றான். உன் விருப்பம் போல் செய் என்றார் சனந்தனர்.

வேடன், நரசிம்மத்தைத் தேடி காடு முழுவதும் சுற்றினான். குகைகள் மலை அடிவாரம் உச்சி எல்லா இடத்திலும் அது அவனுக்குத் தென்படவில்லை. அடுத்த நாள் மாலை வந்தது. அந்த அந்தணர் பொய் சொல்ல மாட்டார். நமக்குத்தான் திறமை போதவில்லை. அந்த அதிசய மிருகம் கிடைக்கவில்லை என்று தோல்வியை ஒப்புக் கொள்வதற்குப் பதில் உயிரை விடுவதுமேல் என்று காட்டுக் கொடிகளை எடுத்து தன்னைச் சுற்றிப் பிணைந்துக் கொண்டு உணவு உண்ணாமல் இறக்க முடிவு செய்தான். வேடனின் சத்ய நோக்கறிந்து நரசிம்மர் அங்கு தோன்றியதும் அதிசய மிருகத்தை கண்டமகிழ்வுடன் தன் கட்டுகளை அவிழ்த்து நரசிம்மத்தைக் கட்டி சனந்தனர் இருந்த குகைமுன் கொண்டு சென்று நிறுத்தி சனந்தரை அழைத்தான்.

சனந்தர் வந்த பார்த்தபோது அவருக்கு காட்டு கொடிகள்தான் கட்டுண்டு இருப்பது தெரிந்தது. ஆனால் சத்தம் கேட்டது. நரசிம்மத்தைக் கூட்டிக்கொண்டு நாட்டிற்குச் செல் இந்தக் காட்டில் இருக்காதே என்று வேடன் சொன்னது காதில் விழுந்த்தும் சனந்தனருக்கு உண்மை புரிந்தது. வேடனுக்கு காட்சி கொடுத்த நரசிம்மரே எனக்கு தரிசனம் அளிக்கக்கூடாத என வருத்தத்துடன் கேட்டார் சனந்தர்,

கோடி ஆண்டுகள் தவமியற்றி பெறும் சித்தியை வேடன் தொடர்ந்து இரண்டு நாளில் இடைவிடாத என் நினைவில் ஊண் உறக்கமின்றி இருந்து சித்தி பெற்று விட்டான். அவனுடன் உனக்கு தொடர்பு ஏற்பட்டதனால் என்னைக் காண முடியவில்லை என்றாலும் என் குரலைக் கேட்கும் பக்கியம் அடைந்தாய், உனக்கு மந்திரம் சித்தியாகிவிட்டது உனக்கு தேவையானபோது நான் உன்னிடம் வருவேன். நீ காசி சென்று உன் குரு சங்கரரை சந்திப்பாய் என அசரீரி கேட்டது.

சனந்தனர் - பத்மபாதர்

சோழநாட்டிலிருந்து சனந்தனர் காசிமாநகரில் சங்கரர் இருக்குமிடம் வந்து தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். உற்றுப்பார்த்த சங்கரர் தன் ஞான திருஷ்டியால் வந்திருப்பது விஷ்ணுவே என்றறிந்தார். சங்கரரும் சனந்தரும் நெருக்கமாக பேசிக் கொள்வது மற்ற சீடர்களுக்கு சனந்தனர்மேல் பொறாமையை ஏற்படுத்தியது. இதைப் போக்க நினைத்த சங்கரர் அக்கரையில் ஒரு வேலையை செய்ய சனந்தனரை பணித்தார். அன்றைய பாடத்தை ஆரம்பித்தார். அப்போது திடிரென்று சனந்தனரை இங்கே வா என்று சைகை செய்தார். அதைக் கண்டதும் குரு அழைக்கின்றார் என்பதை தவிர இடையே கங்கை இருப்பதையும் மறந்து நடக்க ஆரம்பித்தார். சீடர்கள் அவர் கங்கையில் மூழ்கி விடுவார் என நினைத்தனர். ஆனால் கங்கை அவர் வைக்கும் ஒரு அடிக்கும் ஒரு கமலத்தை வைக்க அதன் மேல் காலடிவைத்து சங்கரரை வந்தடைந்தார். சனந்தனரின் பெருமையை உணர்ந்த சீடர்களின் பொறாமை அகன்றது. அன்றுமுதல் சனந்தனர் பத்மபாதர் என்றழைக்கப்பட்டார்.

சங்கரரைக் காத்த பத்மபாதர்

தன் சீடர்களுடன் ஸ்ரீசைலம் சென்ற சங்கரர் மல்லிகார்ஜுனர் மேல் சிவானந்தலஹரி பாடல்களைப் பாடினார். அந்தப் பகுதியில் இருந்த கபாலிகர்கள் பைரவரை வணங்கி நரபலி கொடுப்பவர்கள். அதிகாலை நீராடி கொஞ்சநேரம் ஈசுவர தியானத்தில் தனியாக இருக்கும் சங்கரரைக் கொல்ல கபாலிகன் கையில் வாளுடன் வந்தான். சங்கரரைப் பார்த்து சம்மதமா எனக்கேட்க சம்மதம் சொல்லியவர் கண்மூடி அமர்ந்தார். கை வாளை ஓங்கியவன் ஐயோ என்று அலற கண் விழித்தவர் நரசிம்மர் அந்த கபாலிகனை நாராய் கிழித்து போட்டிருக்கக் கண்டார். உடனே காட்சியும் மாறியது அந்த இடத்தில் நரசிம்மருக்குப் பதில் பத்மபாதர் நின்றிருந்தார். பத்மபாதருக்கு நரசிம்ம மந்திரம் உபதேசமாயிருப்பதை சங்கரர் அறிந்தார். தன் குரு பயணம் செய்த எல்லத் தலங்களுக்கும் அவருடன் சென்று இறைவனை வழிபட்டார்.

பத்மபாதர் சங்கரருடன் சிருங்கேரியில் இருந்தபோது பிரம்ம சூத்திர பாஷ்யத்திற்கு விளக்க வுரை எழுத மண்டனமிஸ்ரர் விரும்ப சங்கரர் அதற்கு விளக்க வுரை தேவையில்லை என்றார். பத்மபாதர் சங்கரரிடம் அனுமதிகேட்க அவர் புன்னகைக்க பத்மபாதர் உரை எழுதி படித்துக் காண்பித்தார். அப்போதும் சங்கரர் புன்னகைப் புரிந்தார். பத்தமபாதர் தான் எழுதி உரையுடன் இராமேஸ்வரத்திற்குப் புறப்பட்டார். வழியில் தன் தாய்மாமன் வீட்டில் ஓலைச் சுவடிகளை வைத்துவிட்டு இராமேஸ்வாம் சென்று திரும்பி வருவதற்குள் அவர் தாய்மாமன் கர்ம மார்க்கத்தைப் பின் பற்றுபவர் வீட்டில் இப்படி ஒரு நூலா என அதை எரித்துவிட்டு அது வைத்திருந்த வீட்டையும் எரித்துவிட்டார். சங்கரரிடம் நடந்த விஷயங்களைச் சொல்லி பாதங்களில் வீழ்ந்தவருக்கு நீ படித்துக் காட்டிய பாடல்கள் எனக்கு நினைவிற்கு வருகின்றது நான் சொல்கின்றேன் நீ எழுதிக் கொள் என்றார். அதற்கு ‘பஞ்சபாதிகா’ எனப் பெயர்.

மண்டனமிச்சரரிடம் வாதிட்டபோது சரஸவாணி கேட்ட கேள்விக்கு ஒரு துறவியாக பதில் சொல்ல இயலாமையால் கூடுவிட்டுகூடு பாய்ந்து ஒர் அரசனின் உடலில் புகுந்து தன் ஆத்மாவிற்கு களங்கம் வரமல் பதிலை அறிந்து கொண்ட சங்கரர் மீண்டும் தன் உடலுக்கு வரும்போது அரசனின் மந்திரிகள் இட்ட தீயால் ஒரு கை கருகிவிட பத்மபாதர் விருப்பப்படி நரசிம்மர் துதிபாட கருகிய கை மீண்டும் ஒளிபெற்றது.

பின் தன் குரு சங்கரருடன், சிதம்பரம், திருவிடைமருதூர், திருச்சி, திருவானைக்கா, ஸ்ரீரங்கம், மதுரை, உப்பூர், திருவனந்தபுரம், திருக்கோகர்ணம், ஜயந்திபுரம்-திருச்செந்தூர், இராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருப்பதி, திரியம்பகேஸ்வரம், சோமநாதர் மற்றுமுள்ள எல்லா ஜோதிர்லிங்கத் தலங்களைத் தரிசித்துவிட்டு, கிருஷ்ணன் எழுந்தருளியுள்ள துவாரகை சென்றார். அங்கு காளிதேவியையும், சித்தேஸ்வரரையும் ஸ்தாபித்து காளிகாபீடம் நிர்மானித்த சங்கரர் அதன் முதல் ஆச்சார்யராக பத்மபாதரை நியமித்தார்.

$$$$$

ஞாயிற்றுக்கிழமை, 08 April 2018 16:47

ஜகத் குரு – ஆதிசங்கரர்

Written by

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

$$$$$

ஜகத் குரு – ஆதிசங்கரர்

பாரத தேசத்தில் தர்மத்திற்கு ஏற்பட்ட ஆபத்தை நீக்கவும், அழிந்து வரும் ஞானம், மோனம், அன்பு ஆகியவற்றைக் காப்பாற்றவும் அறியாமையில் உழலும் மக்களின் அஞ்ஞானத்தை நீக்கி அறியாமை இருளைப் போக்க ஈசனின் கால்களில் விழுந்து வெண்டுகோள் விடுத்த தேவர்கள், ரிஷிகளிடம், அஞ்சாதிர்கள் தென் தமிழகத்தின் ஒரு பகுதியான காலடியில் நானே அவதாரம் எடுத்து உங்கள் குறைகள் தீர்ப்பேன் என்றார். இது நடந்தது 2500 ஆண்டுகளுக்கு முன்னர்.

தத்தாத்ரேயரின் வம்சத்தில் தோன்றிய வித்யாதிராஜரின் மகன் சிவகுரு. மனைவி ஆர்யாம்பிகை. திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் தங்களுக்குப் பிறகு தங்கள் குலதெய்வம் சிவப்பேரூர் சிவனை வணங்க யாரும் இல்லாமல் போய்விடுமே என அஞ்சி காலடியில் இருந்து சிவப்பேரூர்(திருச்சூர்) நடந்து சென்று ஒரு மண்டலம் சிவப்பேரூர் ஆலயத்தில் தங்கி விரதம் இருந்து அப்பனை வணங்கி வழிபட்டனர்.

ஒருநாள் கனவில் தோன்றிய ஈசன், சிவகுரு எனப் பெயர் வைத்திருக்கின்றாயே நீ என்ன சிவனுக்கு குருவா என்று கேட்க விழித்த சிவகுருவிடம் மகன் வேண்டி வழிபாடு செய்கின்றாய் உனக்கு புத்திசாலியான அற்ப ஆயுளுடன் கூடிய குழந்தை அல்லது நூறு ஆண்டுகள் வாழும் முடனாக இருக்கும் குழந்தை இதில் எது வேண்டும் எனக்கேட்டார். விழித்தெழுந்த சிவகுரு மனைவியிடம் சொல்ல அவள் தானும் இதே கனவைக் கண்டதாகச் சொல்ல இருவரும் நமக்கு என்ன வேண்டும் என்று ஈசனுக்குத் தெரியும் என முடிவை ஈசனிடம் விட்டு விட்டனர். அன்று மீண்டும் கனவில் தோன்றிய பெருமான் அந்த ஆதர்ச தம்பதிகளை வாழ்த்தி எல்லாம் அறிந்த புத்திசலியான குழந்தை பிறக்கும் என ஆசீர்வதித்தார்

கர்ப்பவதியான ஆர்யா குழந்தை எட்டி உதைக்கின்றது எனச் சொல்ல அவள் வயிற்றில் காது வைத்துக் கேட்க ஓம் என்ற நாதம் கேட்டு அதிசயப்பட்டார் சிவகுரு. நந்தன வருஷம் வைகாச மாத சுக்லபஷ பஞ்சமி திதியில் வசந்த காலத்தில் சூரியன் உச்சியில் சஞ்சரிக்கும் நண்பகலில் ஐந்து கிரகங்கள் உச்சம் பெற்றிருக்கும் மங்களகரமான சுப வேளையில் ஆதிரை நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. சம் -சந்தோஷம், மங்களம். கரன் -தருபவன். என்பதால் சம்கரன் சங்கரன் எனப் பெயர் சூட்டினர்.

சிவகுரு பூஜை செய்யும் மணிமங்கலம் கோவிலில் தேரோட்டம். அதைப்போன்றே தேர் செய்யச் சொல்லி அடம் பிடித்த குழந்தைக்கு பொம்மை தேர் செய்து கொடுத்தார். தேர் வரும்போது சங்கரனை கையில் வைத்திருந்த சிவகுருவிற்கு தேரில் தன் குழந்தை சங்கரன் இருப்பது போன்றும் தன் கையில் தேரில் உள்ள சிவன் விக்ரகம் இருப்பது போன்று காட்சி கிடைக்க அதிர்ந்த சிவகுரு ஈசனே தன் மகன் என உணர்ந்தார். மேலும் தன்னை தேர் செய்யச் சொல்லியதால், சிவன் கோவிலுக்கு தேர் செய்தால் சிவலோகப் பதவி என சாஸ்திரத்தில் சொல்லியிருப்பது புலப்பட்டது அப்படியானால் இறைவன் தன்னை ஆட்கொள்ளப்போகின்றான் என்று உணர்ந்தார். அன்றிரவு சங்கரனைக் கட்டிப் பிடித்தபடியே இறைவனடி சேர்ந்தார்.

கனகதாரா

சங்கரனுக்கு ஐந்து வயதானபோது ஆர்யாம்பிகை பூனூல் கல்யாணம் செய்வித்து அருகில் உள்ள குருகுலத்திற்கு அனுப்பினாள். குரு குலத்தில் இருப்பவர்கள் உஞ்சவிருத்தி – பிச்சையில் கிடைப்பதைத்தான் உண்ண வேண்டும். உணவில் சுவை, கர்வம் கூடாது என்பதற்கான பயிற்சி அது. அதன் படி பஞ்சம் தாண்டவமாடிய அயாசகன் வீட்டின் முன் சங்கரன் சென்று ‘பவதி பிஷாம் தேஹி’ என்றான். தன் வீட்டின் முன் இந்தக் குரல் கேட்டு பல நாட்கள் ஆகியபடியால் அதிர்ந்த அயாசனின் மனைவி வீட்டில் பிச்சையிட ஒன்றும் இல்லையாதலால் சோர்ந்து நிற்க இரண்டவது முறையாக பவதி பிஷாம் தேஹி ஒலி கேட்க பதறிய அவளின் நினைவிற்கு ஊறுகாய் நினைவுவர அதிலிருந்த ஒரே நெல்லிக் காயை எடுத்துவந்து பிச்சைகேட்ட சங்கரின் பாத்திரத்தில் போட்டாள். அந்தப் பெண்ணின் சோகத்தையும் ஏழ்மை நிலையையும் கண்ட சங்கரன் மகாலட்சுமியை நினைத்து கனகதாரா ஸ்தோத்திரம் சொல்ல ஒரு நெல்லிக்கனி தந்த அந்த ஏழை வீட்டில் தங்க நெல்லிக்கனிகள் கொட்ட அவர்கள் வாழ்வு வளமாயிற்று.

கனகதாரா ஸ்தோத்திரம் தமிழில்
மணம் வீசும் முகுள மலர்களைத் தங்கநிற வண்டுகள் மொய்ப்பது போல மகாவிஷ்ணுவின் மார்பிலே தங்க மங்கையான மகாலக்ஷ்மியின் பார்வை உறைந்திருக்கின்றது. அதனால் பரந்தாமன் எல்லையில்லா ஆனந்தத்தில் திளைத்திருக்கின்றார். பொன்மகளே அத்தனை மகிமை வாய்ந்த உன் கடைக்கண் பார்வையை இந்தப் பக்கம் திருப்பி சகல சௌபாக்கியங்களையும் தருவாயாக!

தங்க நிறத்தில் தாமரைப் பூவை வைத்திருப்பவளே போற்றி!
உலகங்களின் நாயகியான என் தாயே போற்ரி!
தேவர்களுக்கும், கலைஞர்களுக்கும் கருணை காட்டும் தெய்வமே போற்றி!
திருமாலின் மகிமையால் எல்லா சக்திகளையும் பெற்றவளே போற்றி!

கருணை என்னும் காற்று நிறைந்த லக்ஷ்மிகடாக்ஷம் என்னும் மேகம் ஏழையான இந்த சாதகப் பறைவையின் தாபத்தை அகற்றி தனம் எனும் மழையைத் தரட்டும்!

பூஜிக்கத்தக்கவளே, உனக்குச் செய்யும் நமஸ்காரம் செல்வத்தை அளிக்கும். மகிழ்ச்சியைத் தரும். சாம்ராஜ்யத்தைக் கொடுக்கும். பாவங்களைப் போக்கும்.!

எனவே எப்போதும் உன்னை நமஸ்கரிக்கும்படி எனக்கு அருள்புரிவாயாக!

தாமரையில் அமர்ந்திருப்பவளே! கையில் தாமரையை வைத்திருப்பவளே! பட்டு ஆடை, சந்தனம், பூக்கள் ஆகியவற்றை அணிந்தவளே! பகவதியே! ஹரிபத்தினியே! அழகியே! மூன்று உலகங்களிலும் செல்வத்தை வாரி வழங்குபவளே! அருள் செய்வாயாக!

புளியம்பழஓடு

குருகுலத்தில் இருக்கும்போது சங்கரன் தன் அம்மாவை நினைக்க அவள் தன் மகனுக்கு குருகுலம் முடிந்ததும் திருமணம் நடத்த கனவு கண்பது புரிந்தது. தான் சன்னியாசம் ஏற்பதை அம்மாவிற்கு உணர்த்த கனவில் சந்நியாசி கோலத்தில் காட்சியளிக்க பயந்துபோன ஆர்யா குருகுலத்திற்கு வந்து மகனை கூட்டிக் கொண்டு போகும் வழியில் ஒரு புளிய மரத்தடியில் இளைப்பாரினர். அப்போது புளியைப் பார்த்து ஆசைப்பட்ட ஆர்யா ஒன்றை எடுத்துச் சாப்பிட்டு முகம் சுழிக்க தன் அம்மாவிற்கு பழுத்த பழம் ஒன்றை தந்து இது சுவையாக இருக்கும். பக்குவமாக இருக்கும். புளியம்பழத்தின் ஓடுதான் பந்தம், பாசம் புரிகின்றதா அம்மா என்றார்.

காலடி

தினமும் பூரணநாதிக்குச் சென்று நீராடி வழிபட்ட ஆர்யா ஓர் நாள் உடல் சோர்வால் ஆற்றங்கரையில் விழுந்து கிடந்தாள். அன்னையை வீட்டிற்கு கூட்டிவந்த சங்கரன் அன்னையை ஆற்றுக்கு அனுப்பாமல் தானே நீர் கொண்டுவர பூரணா நதிக்குச் சென்றார். குழந்தை வடிவான ஈசனைக் கண்ட பூரணா நதி அவரின் பின்னே வந்து அவர் வீட்டு வாசலைத் தொட்டுச் சென்றது. அவர் கால் அடிகளைப் பின்பற்றி நதி ஓடி வந்ததால் ஊர் காலடி எனப் பெயர் பெற்றது.

காலம் நெருங்கிவிட்டது

சங்கரனால் பூரணாநதி தன் வீட்டுப் பக்கம் வந்ததை நினைத்து ஆனந்தப்பட்டாலும் தன் மகன் தெய்வீக சக்தி உள்ளவன் என்பதால் தன்னை விட்டு போய்விடுவானோ எனப் பயந்தாள். தன் மகனுக்கு திருமணம் செய்ய விரும்பினாள். உணர்ந்த ஈசன் சப்த ரிஷிகளை வரவழைக்க அவர்களுக்கு மோர் கொண்டுவரும்போது காலம் நெருங்கிவிட்டது என அவர்கள் சொன்னது ஆர்யா காதில் விழ இறைவன் தந்த வரத்தைப்பற்றி நினைத்து துயரம் அடைந்தாள். இறைவன் அப்படி நிர்ணயித்திருந்தாள் யார் மாற்ற முடியும் என சங்கரன் ஆறுதல் சொன்னார்.

மறுபிறவி

அடுத்த நாள் சங்கரன் புரணா நதியில் குளிக்கும்போது ஓர் முதலை சங்கரின் காலை பற்ற அவர் அலற திரண்ட ஊர்மக்கள் ஒன்றும் செய்யமுடியாமல் திகைத்தனர். ஆர்யா பயத்தினால் கண்ணைமூட தாயே கடைசியாக உன் மகனைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றான் சங்கரன். ஒரு தாயால் தன் கண் முன்னே தன் உயிரினும் மேலான மகன் இறப்பதை எப்படி பார்க்க முடியும் அழுதாள். அரற்றினாள், பிதற்றினாள். அப்போது நீ நினைத்தால் என்னைக் காப்பாற்ற முடியும் எனச் சங்கரன் சொன்னான். அம்மா, இந்த ஜென்மத்திலே எனக்கு முதலையினால் சாவு என எழுதியிருக்கு. அதை மாத்த முடியாது. ஆனால் நான் சந்நியாசம் வாங்கி விட்டால் அது அடுத்த பிறவியாகும் அதனால் முதலையால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றான். அதற்கு ஆர்யா ஒப்புக்கொள்ள காலை கவ்விய தேவதூதன் விண்ணில் எழுந்து வணங்கி மறைந்தான். சங்கரன் சொந்த பந்தங்களை நீக்கிக் கொள்வதாக சங்கல்பம் செய்து புனித பூரணாநதியில் மூழ்கி சன்னியாசியாக எழுந்தார். அன்னையிடம் இறுதி காலத்தில் என்னை நினைத்துக் கொள்ளுங்கள் நான் வருவேன் என்று கூறி வணங்கி சங்கரராக புறப்பட்டார்.

தீட்சை

சங்கரர் தன் குருவைத்தேடி புறப்பட்டார். நர்மதை நதிக்கரையோரம் ஒரு குகையிலிருந்து வந்த ஓம் ஓசை அவரை ஆட்கொண்டது. வாசலில் நின்றார். மனதில் நினைத்தார். எண்ணங்கள் உள்ளேயிருப்பவருக்கு உணர்த்த தான் எந்த சீடனுக்காக, யாருக்காக காத்திருந்தோமோ அவர் வந்திருப்பதை உணர்ந்தார் குருதேவர் மகான் கோவிந்த பகவத் பாதர். யாரப்பா நீ! என்றார்.

சுகமோ, நோயோ எனக்குக் கொஞ்சமும் தெரியாது,
அறமோ, பாவமோ அதுவும் தெரியாது.
மந்திரம், வேதம், கோவில் எதுவும் தெரியாது,
நான் சாப்பிடுபவன் அல்லன், சாப்பிடப்படும் பொருளும் அல்லன்,
நான் நிரந்தரமான பேரின்ப உணர்வு நிலை
சிவன் நான்! சிவன் நான்!

மரணமோ, பயமோ எனக்குக் கிடையாது,
சாதி வேறுபாடுகளும் எனக்கில்லை,
அம்மா, அப்பா எனக்கு ஏது! பிறவிகூட எனக்கில்லை,
நன்பன்கூட கிடையாது, சீடன் இல்லை,
குருவும் இதுவரை இல்லை, நான் நிரந்தரமான பேரின்பம்,
என்பெயர் சிவம், சிவனே நான்!

எனக்கு உருவமில்லை, அரூபமும் இல்லை
எங்கும் இருப்பவன் நான்!
ஆனால் என்னை யாருக்கும் புரியாது,
விடுதலை இல்லை, அறியப்படுவதும் இல்லை,
நான் நிரந்தரமான பேரின்பம்!
நான் சிவன், சிவன் நான்!

இந்த வரிகளைக் கேட்டபடி வந்த கோவிந்தபகவத்பாதர் கையில் கமண்டலத்துடன் இருக்கும் பாலகனைப் பார்த்து உனக்காகத்தான் நான் காத்திருக்கின்றேன் என்றார். பின்னர் சங்கரரைப் பார்த்தபடியெ நர்மதை நதியையும் பார்த்தார். குருவின் பார்வையைப் புரிந்தகொண்ட சங்கரர் தன் கையிலிருந்த கமண்டலத்தை தண்ணீரில் அழுத்த சுழன்று சென்ற நர்மதா அந்த கமண்டலத்திற்குள் சங்கமம் ஆனது. ஈசனே சங்கரராக வந்திருப்பது கண்டு மனம் குளிர்ந்த பாதர் முறைப்படி அவருக்கு சிகை மழித்து செங்காவி உடை அணிவித்து தண்டம் தாங்க தீட்ஷை அளித்தார். சன்னியாசி ஆன சங்கரருக்கு அத்வைதம் போதித்தார்.

ஒரு சராசரி சிஷ்யனாக குரு கோவிந்த பகவத் பாதருக்குத் தொண்டு செய்து வந்தார் சங்கரர். ஒருநாள் பாதர் சங்கரரை நோக்கி நீ காசி செல்லும் காலம் வந்து விட்டது. அங்கே அத்வைத தத்துவத்தை போதிக்க ஆசி கூறினார். என்னுடைய குருமகான்கள் கூறியபடி என் பணியை முடித்துவிட்டேன் எனக்கூறி பத்திரிகாசிரமத்திற்குப் புறப்பட்டார் கோவிந்த பகவத் பாதர்.

காலடி சங்கர் கால்கள் காசி நோக்கி நகர்ந்தன. கங்கை கரையை அடைந்தார். விஷ்ணுவும், சிவனும் ஒன்றே! ஒன்றிலிருந்து தோன்றிய இரு வடிவங்களே என்ற அத்வைத கருத்தை கங்கை சொல்வதாக நினைத்தார். மாண்டவர்கள் காதில் ஈசன் மந்திரம் ஓதும் மணிகர்ணிகா படித்துறையில் அமர்ந்து அத்வைத தத்துவத்தை போதிக்க ஆரம்பித்தார். கோவிந்தபகவத்பாதர் கூற்றுப்படி பிரம்ம சூத்திரங்களுக்கும் உபநிடதங்களுக்கும் உரை இயற்றினார்.

சனந்தனர்-விஷ்ணு- பத்மபாதர்

ஒருநாள் சோழநாட்டிலிருந்து சனந்தனர் என்று ஒருவர் வந்து தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். உற்றுப்பார்த்த சங்கரர் தன் ஞான திருஷ்டியால் வந்திருப்பது விஷ்ணுவே என்றறிந்தார். சங்கரரும் சனந்தரும் நெருக்கமாக பேசிக் கொள்வது மற்ற சீடர்களுக்கு சனந்தனர் மேல் பொறாமையை ஏற்படுத்தியது. இதைப் போக்க நினைத்த சங்கரர் அக்கரையில் ஒரு வேலையை செய்ய சனந்தனரை பணித்தார். அன்றைய பாடத்தை ஆரம்பித்தார். அப்போது திடிரென்று சனந்தனரை இங்கே வா என்று சைகை செய்தார். அதைக் கண்டதும் குரு அழைக்கின்றார் என்பதை தவிர இடையே கங்கை இருப்பதையும் மறந்து நடக்க ஆரம்பித்தார். சீடர்கள் அவர் கங்கையில் மூழ்கி விடுவார் என நினைத்தனர். ஆனால் கங்கை அவர் வைக்கும் ஒரு அடிக்கும் ஒரு கமலத்தை வைக்க அதன் மேல் காலடிவைத்து சங்கரரை வந்தடைந்தார். சனந்தனரின் பெருமையை உணர்ந்த சீடர்களின் பொறாமை  அகன்றது. அன்றுமுதல் சனந்தனர் பத்மபாதர் என்றழைக்கப்பட்டார்.

சங்கரருக்கு ஞானம்- மதீஷா பஞ்சகம்-தரிசனம்

குறுகலான பாதை வழி சீடர்கள் பின்தொடர சங்கரர் விஸ்வநாதர் ஆலயம் சென்று கொண்டிருந்தார். எதிரில் சொறி பிடித்த நான்கு நாய்களுடன் குளித்து பல நாட்கள் ஆன ஒருவன் வந்து கொண்டிருந்தான் அவன் தங்களுக்கு வழி விட்டு விலகிச் செல்வான் என்று நினைத்தார் சங்கரர். அவன் விலகாததால் கொஞ்சம் விலகு என்றார்.

அவன் குதித்துச் சிரித்தான், சாமி என்ன சொல்றீங்க. விலகு விலகு என்று சொல்றீங்களே. எதிலிருந்து விலகனும்னு சொல்றீங்க எனக்குப் புரியலையே. நான் ஒரூ சோத்துப் பிண்டம். ஒரு சோத்துப் பிண்டத்தை இன்னொரு சோத்துப் பிண்டம் விலகச் சொல்வது சரியா என்றார். கூட்டுக்குள்ளே ஞான ஒளி இருக்குன்னு சொல்வாங்களே அப்படீன்னா ஒரு ஒளியைப் பார்த்து இன்னொரு ஒளி ஒளியனுமா என்றான். சாமி நீங்க தினம் தினம் சூரியனை கும்பிடறதைக் பார்த்தேன். அந்தச் சூரியன் கங்கைக்கும் சாக்கடைக்கும் வித்தியாசம் பர்க்காமல் தன் ஒளியை வீசுகின்றதே, என் கள் குடத்தைக் கொண்டு கங்கையில் நீர் மோர்ந்தால் அது நிரம்பும். தங்க கலசத்தில் நீர் மோர்ந்தாலும் அது நிரம்பும். என்று அந்த புலையன் சொல்ல சொல்லக் கேட்ட சங்கரர் அந்த அர்தத்தை அப்படியே உள்வாங்கினார்.

அந்த புலையனை அப்படியே உற்றுப் பார்த்தார். அவர் கண்களில் நீர் வழிந்தது. கை கூப்பினார். பரவசமானார். மும்முறை வலம் வந்து புலையனின் கால்களில் அப்படியே விழுந்து வணங்கினார். குருவே குருவே என்று உருகினார். அந்த பரவச உணர்ச்சியில் குருவைப் போற்றும் மதீஷா பஞ்சகம் பாடினார். அப்போது புலையன் நின்ற இடத்தில் விஸ்வநாதர் காட்சி கொடுக்க, கங்கை மற்றும் நான்கு வேதங்களும் காட்சி கொடுக்க சங்கரர் சங்கரனை மீண்டும் வணங்கினார்.

ஆயுள்- எட்டு- எட்டு- பதினாறு

தன் ஆயுள் எட்டு ஆண்டுகள் என்று சங்கரரே நிர்ணயத்தது. எட்டு ஆண்டுகள் முடிந்ததும் முதலை கவ்வ சன்னியாசியானதால் மறுபிறவியாகி அடுத்த எட்டு ஆண்டுகள் என பதினாறாகி அது நாளையுடன் முடிகின்றது என்ற நிலையில் வியாச பகவான் வந்து தான் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதி சங்கரருடன் சில விளக்கங்களை கேட்டு பலநாட்கள் விவாதித்து திருப்தியுடன் மறைந்திருந்த அத்தனை விடைகளையும் உன் உரையில் விளக்கியுள்ளாய் எனப் பாராட்டினார். என் கடமை முடிந்து விட்டது இன்றோடு இந்த பூவுலகைவிட்டுப் பிரியலாம் என நினைக்கின்றேன் என்ற சங்கரரை, பக்தி மார்க்கத்தை எளிமைப்படுத்தி சீர் செய்ய வேண்டும், எனவே நீ இன்னும் பதினாறு ஆண்டுகள் இந்த பூமியில் வாழ விருப்புகின்றேன் என்று மேலும் பதினாறு ஆண்டுகளுக்கு சங்கரரின் ஆயுளை நீட்டித்து ஆசி புரிந்தார் வியாசபகவான்.

வியாசபகவானின் ஆணைப்படி முதலில் விஷ்ணு சகஸ்ரநாமத்தின் தசோப நிஷத்துகளுக்கும் உரை எழுதி அவையெல்லாம் அத்வைத தத்துவத்தையே கடைசி தத்துவமாக எடுத்தியம்புகின்றன எனத் தீர்க்கமாக விளக்கினார். பின்னர் நரசிம்ம பூர்வதா பனீயம், சுவேதாஸ்வதார என தொடர்ந்து உரைகள் எழுதினார். பின் இந்து மதப் பிரசாரம் செய்ய கிழக்கு திசைநோக்கி வந்து பிரம்மன் சரஸ்வதியை திருமணம் புரிந்த சந்தோஷத்தில் யாகம் செய்ததால் பிரயாகை எனப்பட்ட திரிவேணி சங்கமம் வந்தார்.

மாறிய குமாரிலபட்டர்

குருவை தெய்வமாக மதிக்கும் மதத்தில் பிறந்த தான் பௌத்தத்தை தன்னை சீடனாக நம்பி போதித்த குருமார்களை ஏமாற்றி விட்டோமோ என்ற மனவேதனை பிரயாகையில் பிறந்த குமாரிலபட்டருக்கு இருந்தது. அது குருத் துரோகம் என நம்பினார். கடவுள் இல்லை கர்மாவே பலன் தரும் என்று போதிக்கும் நான் இப்படி போலியாக நடந்து கொள்ளலாமா என வருந்தினார், புத்த விஹாரத்தின் ஏழாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டபோது வேதத்தை சாட்சியாக வைத்து உயிர்பிச்சைக் கேட்டவர் எல்லா பௌத்தர்களையும் வாதில் வென்ற பிறகு தற்போது தன் உடலைத் தானே துன்புறுத்தி இறந்துபோகத் தலைப்பட்டு உமிக்காந்தல் தீயில் இறங்கினார்

அந்தத் தீ மெல்லப் பரவி அவர் கால்கள் கருகத் துவங்கியபோது பிரயாகை வந்திருந்த சங்கரர் பௌத்தரை வென்ற குமாரிலபட்டரைக் கண்டு கர்ம காண்டமே முக்கியம் எனும் மனிதரை வேதாந்தத்தின் பக்கம் திருப்பினால் ஞான காண்டத்தின் அவசியத்தை உலகுக்கு நன்றாக உணரவைக்கலாம் என்ற எண்ணத்தில் அவரைப் பார்க்க வந்தார், நிலைமை முற்றியிருக்கக் கண்ட சங்கரர் ஏன் இந்த முயற்சி எனக் கேட்க நான் செய்த பிழைக்கு தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி சிரமான முறையில் மரணத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

குமாரிலபட்டரின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் கடைசி நேரத்தில் அத்வைதிக முறைகளை அவருக்கு விளக்கினார். இறைவன் அணுக்கிரஹத்தால் மட்டுமே சுக பலன் நீடித்திருக்க முடியும், கர்ம காண்டத்தை மட்டும் அனுசரிப்பது போதாது அதன் நிரந்தர பலன் ஞானகாண்டத்தில் இருக்கின்றது அதுதான் வேதாந்தம் என விளக்கினார். உடலின் அடிப்பாகம் அக்னி கனலால் எரிய உள்ளம் சங்கரரின் அருட்கனலால் வெளிச்சமுற்றது, இருக்கும் ஓர் ஆத்மா அதைக் காரியத்தால் கட்டுப்படுத்த இயலாது, ஆத்மாவில் உறைவதே பிறப்பைக் கழிக்கும் பேரானந்தம் எனச் சங்கரர் கூறக் கேட்ட குமாரிலபட்டர் நெகிழ்ந்து போனார். உங்கள் கருத்தை மக்களுக்குச் செல்ல இயலாத நிலைக்கு ஆனேன் என வருந்தினார், உங்களை நான் குருவாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கின்றேன் என்றார்,

மாகிஷ்மதி நகரில் மீமாம்சக கொள்கை உடைய மண்டனமிஸ்ரர் என ஒருவர் என்னைவிட தீவிரமானவர் அவரை நீங்கள் வாதத்தில் வெல்லவேண்டும் என வேண்டுகோள் விடுத்து தன் ஆவியை அக்னிக்கு அர்ப்பணித்தார், சங்கரர் குமாரிலபட்டருக்காகப் பிரார்த்தனை செய்தார், மாகிஷ்மதி நகரை நோக்கி நடந்தார்.

மண்டனமிச்ரர்- சுரேச்வராசாரியார்

மண்டனமிச்ரர் வீடு பூட்டியிருந்தது. செருப்பு தைக்கும் தொழிலாளி உபதேசித்த ஒரு மந்திரத்தை ஜபிக்க நிமிர்ந்து நிற்கும் பொருட்கள் வளையும் என்ற முறையில் மண்டனமிச்ரர் வீட்டின் தென்னை வலைய அதை பிடித்துக் கொள்ள அம்மரங்கள் மீண்டும் உள்ளே வலைய இல்லத்தின் உள்ளே இறங்கினார் சங்கரர். வியப்புடன் சங்கரைப் பார்த்த மண்டனமிச்ரர் அன்னப்பிச்சை வேண்டுமா எனக்கேட்டதற்கு வாத பிட்சை என்றார். வாதபிட்சை ஆரம்பித்தது. சரஸவாணியின் ஆலோசனைப்படி இருவர் கழுத்திலும் மலர்மாலை சூட்டப்பட்டது. மண்டனமிச்ரர் தோற்றால் துறவறம் பூண வேண்டும். மண்டனமிச்ரர் வென்றால் சங்கரர் துறவறம் துறந்து இல்லறத்தில் ஈடுபடவேண்டும். 21 நாட்களுக்குப் பிறகும் போட்டி தொடர தோல்வியடைந்து விடுவோமோ என்ற நினைப்பில் வந்த உஷ்ணமூச்சால் மண்டனமிச்ரர் கழுத்தில் இருந்தமாலை வாடத் துவங்கியது. சரஸ்வாணி திகைப்படைந்தாள். முழுதும் வாடினால் தன் கணவர் தோற்றவராவர். எனவே குறுக்கிட்டு இல்லற தர்மப்படி எங்கள் இருவரையும் வென்றால்தான் நீங்கள் வென்றதாகும் எனக்கூறி கணவரை எழுப்பி அந்த இடத்தில் தான் அமர்ந்தாள். போட்டி தொடர்ந்தது.

வேதம், வேதாந்தம், சாஸ்திரம், சம்பிரதாயம், இதிகாசம், புராணம், கணிதம், ஜோதிடம் என்று ஆய கலைகள 64- கிலும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் இருபக்கமும் சரியாக வந்தன. 15 நாட்கள் முடிவில்லாமல் போட்டி தொடர சங்கரர் ஞானக்கண்ணால் தன் முன்னே அமர்ந்திருப்பது சரஸ்வதி என்பதை அறிந்தார். நெற்றியில் வியர்வை படர்ந்தது. போட்டியில் சங்கரர் வென்றால் தன் கணவர் துறவறம் ஏற்கவேண்டும் என்பதால் துறவியிடம் கேட்ககூடாத இல்லற இன்பம் என்றால் என்ன என்று கேட்டாள்.

திகைத்த சங்கரர் ஞானதிருஷ்டியால் பதில் சொல்லமுடியும். ஆனால் மக்களுக்கு அவரது துறவு நிலையில் சந்தேகம் வரும். பதில் சொல்லவிடில் வாதத்தில் தோற்றதாக ஆகும். ஒரு ஞான வித்திடம் சந்நியாசியிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டோமே, இது எத்தனை பெரிய பாவம் என நினைத்த சரஸவாணி ஒரு மாதம் தவணை தருகிறேன் அதற்குள் பதிலைத் தெரிந்து கொண்டு வாருங்கள் என்றாள். சங்கரர் சீடர் பத்மபாதர் மற்ற சீடர்களுடன் கானகம் சென்றனர்.

கானகத்தில் இறந்துகிடந்த அமருகன் என்ற மன்னனின் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து அரண்மனைக்குச் சென்று தன் ஆத்மாவின் தூய்மைக்கு பாதிப்பு இல்லாமல் அரசாண்டார். மதுவும் மங்கையுமாக இருந்த மன்னனிடம் மாற்றம் கண்டவர்கள் அதை வரவேற்றார்கள். அமைச்சர்களுக்கு தங்கள் மன்னன் முன்னைவிட அதி புத்திசாலித்தனமாக செயல் படுவது கண்டு சந்தேகம் வர ஒற்றர்களை அனுப்பி விவரம் சேகரித்து சங்கரர் உடல் இருந்த இடத்தைக் கண்டு உண்மை புரிந்து நாடு நலமுடன் இருக்க மன்னரின் உடலில் சங்கரர் இருப்பது அவசியம் என்று சங்கரரின் உடலுக்கு தீ வைத்தனர். சீடர்கள் அலறியடித்துக் கொண்டு வர, அதே சமயத்தில் மன்னன் உடலிலிருந்து தன் உடலுக்கு கூடுவிட்டு கூடு பாய்ந்தார் சங்கரர். அதற்குள் ஒரு கை தீயினால் வெந்து கருகியது. பத்மபாதர் விருப்பப்படி லஷ்மிநரம்மர் துதிபாட கருகிய கை மீண்டும் ஒளிபெற்றது.

ஒரு மாதத்திற்குள் சரஸவாணியின் கேள்விக்கு விடை அறிந்து திரும்பிவந்து கூற மண்டனமிச்ரர் நிபந்தனைபடி துறவியாகி சங்கரர் பின் சென்றார். மண்டனமிச்சர்ருக்கு சுரேச்வராசாரியார் என்று திரு நாமத்தை சூட்டினார் சங்கரர்.

கண்ணீர்மல்க கணவருக்கு விடைகொடுத்த சரஸவாணி தான் பிரம்ம லோகம் செல்வதகாச் சொன்னாள். சங்கரர், தாயே நான் பின்னாளில் சிருங்கேரியில் சாரதா மடம் நிறுவும்போது அங்கு நீ சாரதாதேவியாக அருள்பாலிக்க வேண்டினார். சரஸ்வாணி சந்தோஷத்துடன் பிரம்ம லோகம் சென்றாள்.

பத்மபாதர், சுரேச்சுவரர் இன்னும் பிற சீடர்கள் பின்தொடர பிரயாகை வந்தவர் நடு சாலையில் இறந்த தன் மகனைப் பார்த்து பெற்றோர்கள் அழுது கொண்டிருப்பதைக் கண்டு அந்த இளைஞனின் சவத்தின் முன் நின்று பார்க்க அவன் எழுந்து குருவே நமஸ்காரம் என சங்கரரைப் பின் தொடர்ந்தான். அந்தப் பகுதியில் கர்மவாதியாக புகழ்பெற்ற பிரபாகரனை வாதில் வென்று சீடராக்கினார்.

அட்சயவடம்.

அட்சயவடம் என்பது ஆலமரம். இதன் வேர்கள் பிரயாகை முழுவதும் பரவியிருப்பதாக ஐதீகம், மரத்தின் நடுப்பகுதி காசியிலும் நுனிப்பகுதி கயாவிலும் இருப்பதாக நம்பம்பபடுவதால் தன் சீடர்களுடன் ஆலமர தரிசனம் செய்தர் புனி மரத்தின் கிளையில் ஒரு தொழுநோய்க்காரன் தூக்கிலிட்டுக் கொள்ள முயற்சித்தான். அவனை தொட்டு தழுவி அவன் தொழுநோய் நீங்க அவனுக்கு உதங்கர் என பெயரிட்டு அவனை சீடராக்கிக் கொண்டார்.

பிரயாகைக்கு அருகே உள்ள பிரதிஷ்டானபுரியில் கலைவாணியின் அருள் பெற்ற அமரசிம்மன் நூற்றுக் கணக்காண ஜைன நூல்களை எழுதியிருந்தான். சங்கரருடன் வாதிடவந்தவன் சங்கரர் பாதத்தை பார்த்ததும் அவரை வெல்ல முடியாது என உணர்ந்து சரஸ்வதிதேவியின் உதவியை நாடி ஒரு கலசத்தில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்து இடையில் ஒரு திரை போட்டு வாதம் ஆரம்பிக்க எல்ல கேள்விகளுக்கும் பதில் சரியாக வர சந்தேகம் கொண்ட சங்கரர் ஞான திருஷ்டியில் உண்மை உணர்ந்து, கலைவணியே! அன்று சரஸவாணியாக சங்கடமாய் கேள்வி கேட்ட நீ இன்று மீண்டும் சோதிக்கின்றாய் என்றதும் திரை அற்று விழுந்தது. அதன்பின் பதில் சொல்ல திணறிய அமரசிம்மன் பின்புறம் சென்று தான் எழுதி ஜைன நூல்களை தீயிட்டு கொளுத்தினான். சங்கரர் விபரம் உணர்ந்து அவன் தலையில் கைவைக்க அவன் சுய நிலைக்கு வந்தான். அப்போது அமர கோசம் ஒன்று மட்டும் மிஞ்சியிருந்தது. அமரசிம்மனையும் தன் சீடனாக்கி கொண்டார்.

தன் சீடர்களுடன் ஸ்ரீசைலம் சென்ற சங்கரர் மல்லிகார்ஜுனர் மேல் சிவானந்தலஹரி பாடல்களைப் பாடினார். அந்தப் பகுதியில் இருந்த கபாலிகர்கள் பைரவரை வணங்கி நரபலி கொடுப்பவர்கள். அதிகாலை நீராடி கொஞ்சநேரம் ஈசுவர தியானத்தில் தனியாக இருக்கும் சங்கரரைக் கொல்ல கபாலிகன் கையில் வாளுடன் வந்தான். சங்கரரைப் பார்த்து சம்மதமா எனக்கேட்க சம்மதம் சொல்லியவர் கண்மூடி அமர்ந்தார். கை வாளை ஓங்கியவன் ஐயோ என்று அலற கண் விழித்தவர் நரசிம்மர் அந்த கபாலிகனை நாராய் கிழித்து போட்டிருக்கக் கண்டார். உடனே காட்சியும் மாறியது அந்த இடத்தில் நரசிம்மருக்குப் பதில் பத்மபாதர் நின்றிருந்தார். பத்மபாதருக்கு நரசிம்ம மந்திரம் உபதேசமாயிருப்பதை சங்கரர் அறிந்தார்.

ஸ்ரீசைலத்திலிருந்து அகோபிலம் வந்து ஸ்ரீ நரசிம்மரை வணங்கினார். அருகில் உள்ள ஸ்ரீபலி என்ற ஊரில் வாய்பேசாத உமையான மகனுடன் வந்த பெரியவர் சங்கரரிடம் தன் குறையைச் சொன்னார். நீயார் சொல்லுப்பா என்றார் சங்கரர். மடைதிறந்த வெள்ளம்போல் சுலோகத்துடன் பாட ஆரம்பித்தான். பேசும் தன் மகனை வீட்டிற்கு கூட்டிச் சென்றால் அங்கு அவன் ஒன்றும் பேசவில்லை. திடுக்கிட்ட தந்தை அவனை சங்கரரிடம் மீண்டும் கூட்டிவந்தார். சங்கரரைப் பார்த்ததும் பாட ஆரம்பிக்க தந்தை இவன் இனி உங்கள் பிள்ளை எனச் சொல்லி அவனை அவரிடம் விட்டார். சங்கரர் அவனுக்கு ஹஸ்தாமலகர் எனப் பெயர் சூட்டி தன் சீடனாக்கி அவன் பாடிய பாடல்களுக்கு குருவானே தாமே உரை எழுதினார். அது ஹஸ்தாமலகீயம் எனப்பட்டது.

கொல்லூரில் கோல முனிவர் வழிபட்ட லிங்கத்தினை சங்கரர் வழிபட்டார். மனக்கண்ணில் காட்சியளித்த அம்பிகையின் வேண்டுகோளின்படி மூகாம்பிகை சிலையை பஞ்ச லோகத்தில் வடித்து லிங்கத்தின் பின் பிரதிஷ்டை செய்தார். பூஜை முறைகளையும் ஆராதனைகளையும் லிங்கத்திற்கு என வரையறுத்துக் கொடுத்தார். தொடர் பயணத்தால் மயங்கிய நிலையில் இருந்தவரை நீ தேடியதால் நான் உன்னைத் தேடிவந்தேன் எனக்கூறிய மூகாம்பிகை எதிரே தோன்றி அமுதம் தந்தாள். அப்போது சங்கரர் அன்னையைப் பாடியது சௌந்தர்யலஹரி எனப்படும்.

கர்நாடக தேசத்தில் பயணம் செல்லும் வழியில் இருந்த பெருமாள் கோவிலினுள் சங்கரரை விட மறுத்தவரிடம் உள்ளே இருக்கும் சிவனும் ஹரியும் ஒன்றே என்ற பின் உள்ளே அழைத்துச் சென்றவர்கள் அங்கே இதுவரை மகாவிஷ்ணு மட்டுமே இருக்கக் கண்டவர்கள் சங்கரரும் நாராயணரும் இணைந்து ஹரிஹரமூர்த்தியாக இருக்கக் கண்டனர். அன்றுமுதல் அந்த ஊர் ஹரிஹரம் என்றானது.

சங்கரர் சிருங்கேரி வந்தார். சாரதா பீடம் ஏற்படுத்தி பிரம்ம விதயா ஸ்வரூபிணியான ஸ்ரீ சாரதாதேவியை பிரதிஷ்டை செய்தார், அங்கு படிப்பறிவில்லாத வேலைக்காரன் கிரி தானாக சுலோகங்களைத் தோடக விருத்தத்தில் பாடிக் கொண்டு வந்து சங்கரர் பாதங்களில் வீழ்ந்து வணங்க அதைக் கண்டு பத்மபாதர் ஆச்சரியப்பட சங்கரர் அவரை தோடகாச்சாரி என்றழைத்து தன் சீடனாக்கிக் கொண்டார்.

பத்மபாதர் சங்கரருடன் சிருங்கேரியில் இருந்தபோது பிரம்ம சூத்திர பாஷ்யத்திற்கு விளக்கவுரை எழுத மண்டனமிஸ்ரர் விரும்ப சங்கரர் அதற்கு விளக்கவுரை தேவையில்லை என்றார். பத்மபாதர் சங்கரரிடம் அனுமதிகேட்க அவர் புன்னகைக்க பத்மபாதர் உரை எழுதி படித்துக் காண்பித்தார். அப்போதும் சங்கரர் புன்னகைப் புரிந்தார். பத்தமபாதர் தான் எழுதி உரையுடன் இராமேஸ்வரத்திற்குப் புறப்பட்டார். வழியில் தன் தாய்மாமன் வீட்டில் ஓலைச் சுவடிகளை வைத்துவிட்டு இராமேஸ்வாம் சென்று திரும்பி வருவதற்குள் அவர் தாய்மாமன் கர்ம மார்க்கத்தைப் பின் பற்றுபவர் வீட்டில் இப்படி ஒரு நூலா என அதை எரித்துவிட்டு அது வைத்திருந்த வீட்டையும் எரித்துவிட்டார். சங்கரரிடம் நடந்த விஷயங்களைச் சொல்லி பாதங்களில் வீழ்ந்தவருக்கு நீ படித்துக் காட்டிய பாடல்கள் எனக்கு நினைவிற்கு வருகின்றது நான் சொல்கின்றேன் நீ எழுதிக் கொள் என்றார். அதற்கு ‘பஞ்சபாதிகா’ எனப் பெயர்.

சிருங்கேரியில் இருக்கும்போது தன்னைப் பெற்ற ஆர்யாம்பிகை அம்மாள் அந்திமக் காலத்தில் இருக்கின்றாள் என்பதை உணர்ந்து மகாவிஷ்ணுவிடம் தன் தாய்க்கு குட்டி கிருஷ்ணனாக காட்சி கொடுத்து அருள பிரார்த்தனை செய்தார். காலடி சென்று தாய் அருகில் அமர்ந்து வாஞ்ஜையுடன் போசினார். அம்மாவின் உணர்வுகள் மெல்ல மெல்ல அடங்கின. சொந்தங்கள் தகராறு செய்த நிலையில் அக்னி பகவானை அழைத்து தன் தாய்க்கு கொள்ளிவைத்தார். சிருங்கேரி வந்தர்.

பிருத்வீதவர் என்ற முற்றும் தெளிந்த சீடரை சரதா பீடத்தின் முதல் ஆச்சார்யராக நியமனம் செய்து அவருக்கு ஆலோசகராக மண்டன்மிஸ்ரர்-சுரேச்சுவரரை நியமித்தார். பின் சிதம்பரம் வந்தார். நடராஜரை தொழுதர்.

சிதம்பர ரகசியம்!

சிற்சபையின் அருகே உள்ள வாயிலில் திரைச் சீலை அகற்றப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்படும் அப்போது அங்கே காட்சியளிப்பது தங்கத்தால் ஆன வில்வ மாலை மட்டுமே. மூர்த்தி யில்லாமல் வில்வம் மட்டும் தெரியும். இதுதான் சிதம்பர ரகசியம். இறைவன் இங்கு ஆகாய வடிவில் இருக்கின்றான் என்பதன் பொருள் அது. அதைக் கண்டு களித்தார் சங்கரர். அன்னாகர்ஷண யந்திரத்தை ஸ்தாபித்தார். திருவிடைமருதூர் பயணமானார்.

அத்வைதமே சத்யம், அத்வைதமே நிஜம்

திருவிடைமருதூரில் முதல் மதிலின் உட்புறம் சங்கரர் வலம்- அஸ்வமேதப் பிரதட்சணம் செய்தார். பூஜித்ததும் நானே பூஜிக்கப்பட்டதும் நானே என்று விளக்கம் தந்த மகாலிங்கத்தை வணங்கினார். தான் செய்யும் அத்வைத பிரச்சாரம் சரியா என்ற மகாலிங்கத்திடம் கேட்க இடியோசை முழங்க லிங்கம் இரண்டாகி ஒரு கை வெளிவந்து அத்வைதமே சத்யம், அத்வைதமே நிஜம் என திருவாய் மலர்ந்து ஆசிபுரிந்தது. சங்கரர் கோவிலைச் சுற்றி வரும்போது பக்த சிரோன்மணிகள் கால் வலிக்கு ஓய்வாக ஓரிடத்தில் அமர்ந்திருக்க அது பிரமஹத்தி அமருமிடம் எனக்கூறி ஈசன் பார்வை படும்படி வாசல் புறத்தில் அமரச் சொன்னார்.

திருச்சி வந்த சங்கரர் தாயுமானவரையும் மட்டுவார் குழலம்மையும் வழிபட்டு திரிசரன் என்ற அரக்கனை மாய்த்து திரிச்சிராப்பள்ளி எனப் பெயர்தந்த மலைக் கோவிலைக் கிரிவலம் வந்தார். பின் யானைக்கும் சிலந்திக்கும் மோட்சம் தந்த திருவானக்கா சென்று சிவன் சித்தராக வந்து கட்டிய நான்காம் மதிலைத் தொட்டுப் பார்த்தார், தொழிலாளர்களுக்கு கூலியாக கொடுக்கப்பட்ட விபூதி அவரவர் செய்த வேலைக்கு ஏற்ப பொன்னாக மாறிய திருநீற்று மதில் அது. எப்போதும் நீர் சுரந்து கொண்டிருக்கும் ஜம்புகேஸ்வர லிங்கத்தை வழிபட்டார். உக்கிரத்துடன் இருந்த அகிலாண்டேஸ்வரி சன்னதிக்குள் நுழைந்தார். 43 கோணங்கள் கொண்ட தடாகங்களை –தோடு செய்து அம்பாளின் சக்தியை அதில் உறையும்படி செய்தார். அம்மனுக்கு நேர் எதிரில் பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து அம்மனின் உக்ரம் தனிய வைத்தார். ஸ்ரீரங்கம் வந்தார். பக்தர்கள் அனைவரும் தேடிவந்து தரிசனம் செய்யும் வகையில் ஜனாகர்ஷண யந்திரத்தை ஸ்தாபித்து ஸ்ரீரங்கநாதரை வணங்கினார்.

தன் தலையில் உள்ள சந்திரனிடமிருந்து மதுவைப் பொழிந்து நாகம் உமிழ்ந்த நஞ்சை போக்கி புனிதப்படுத்திய இடமான மதுரையில் மீனாட்சி அருளாட்சி புரியும் கர்பகிரகத்தின் முன் நின்று சங்கரர் ஸ்ரீமீனாட்சி பஞ்சரத்தினம் பாடி மகிழ்ந்தார். தொண்டி அருகில் இருக்கும் உப்பூர் சென்று கணேசர்மீது ஸ்ரீகணேசபஞ்சரத்தினம் பாடி வழிபட்டார். இங்கிருந்து திருவனந்தபுரம் சென்று பத்பநாதப் பெருமானை வழிபட்டார். அத்வைதத்தை எதிர்த்தவர்களை வாதிட்டு வென்றார்.

பாரதம் முழுவதும் நடந்து சென்றதால் சங்கரரின் உடல் நலிந்து காச நோய் பீடித்தது அந்த நிலையிலும் திருக்கோகர்ணம் வந்து ஈசனை வழிபட்டார். அன்றிரவு ஈசன் கனவில் தோன்றி நோய்பபற்றி கவலைப் படவேண்டாம் .ஜயந்திபுரத்தில் முருகனை சந்தித்தால் உன் நோய் நீங்கும் என விபூதி அளித்தார். திடுக்கிட்டு விழித்த சங்கரர் ஈசன் அளித்த விபூதி கையில் இருப்பது கண்டு பராவசமாகி அதனை உடற்முழுவது பூசிக்கொண்டார். முருகன் சிக்கலிலே வேல் வாங்கி சூரபதுமனை வெற்றி கொண்ட ஜயந்திபுரம்-திருச்செந்தூர் சென்றபோது ஆதி சேஷன் வழிபட்டுக் கொண்டிருக்க புஜங்கம்- பாம்பு நடையில் ‘சுப்ரமண்ய புஜங்கம்’ பாடி முருகனை வழிபட அவர் காசநோய் நீங்கியது.

திருச்செந்தூரிலிருந்து ராமேஸ்வரம் சென்று ராவணனைக் கொன்ற பிரம்ஹத்தி தோஷம் தீர அனுமன் கயிலையிலிருந்து கொணர்ந்த விஸ்வேஸ்வர லிங்கத்தை முதலில் தரிசித்தார். பின்னர் சீதை மணலால் செய்து ராமர் வழிபட்ட ராமநாதஈசுவரரை வழிபட்டார். பர்வதவர்த்தினியை வணங்கி பள்ளிகொண்ட பெருமாளை வணங்கினார்.

கன்னியாகுமரியில் பாணாசுரனை அழித்து கன்னிவடிவில் தவமிருக்கும் அம்மனை தரிசித்தார். பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயத்தை வலம் வந்தார். பின்னர் திருப்பதி சென்று திருக்குளம் அருகில் உள்ள ஆதிவராகரைத் தரிசித்தார். வெங்கடஜலபதியை அங்கம் அங்கமய் ரசித்து வழிபட்டார் விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்திரம் பாடினார். அங்கு தனாகர்ஷ்ண யந்திரத்தை பிரதிஷ்டை செய்தார். அலர்மேலு மங்கைத் தாயாரை வழிபட்டார்.

திரியம்பகேஸ்வரம் சென்று எவரை தரிசித்தால் 28 ஆகமங்களையும் கற்ற பலன் கிட்டுமோ அந்த ஐந்து முகங்களைக் கொண்ட திரியம்பகேஸ்வரர் முன் அமர்ந்து தியானித்தார். அங்கிருந்து சோமநாத் சென்று சோமநாதரை, பார்வதி தேவியை வணங்கினார். பின்னர் மீதமிருந்த ஜோதிர்லிங்கங்களையும் தரிசித்தார். இந்த பன்னிரண்டு துவாதச லிங்கங்கள் பற்றிய துவாதச லிங்க ஸ்தோத்திரங்கள் பாடினார்.

கிருஷ்ணன் எழுந்தருளியுள்ள துவாரகை சென்று காளிதேவியையும், சித்தேஸ்வரரையும் ஸ்தாபித்து காளிகாபீடம் நிர்மானித்தார் அதன் ஆச்சார்யராக பத்மபாதரை நியமித்தார். பின் காஷ்மீர் சென்றபோது இதுவரை மூன்று அறிஞர்களுக்கு மட்டுமே திறந்த சர்வக்ஞபீடத்தின் நான்காவது கதவு சங்கரருக்கு திறந்தது. அந்த பீடத்தில் அமர்ந்து அத்வைத உரையை போதிக்க அரம்பித்தார், காஷ்மீர மன்னன் சங்கர்ரை கவுரவிக்க அங்கிருந்த மலை ஒன்றிற்கு சங்கராசாரிய மலை எனப் பெயரிட்டான். அடுத்து சங்கரர் பதரிவனம் சென்றார்.

பதரிவனத்தில் விஷ்ணு காட்சி கொடுக்க அவர் பாதங்களை வணங்கி ‘ஷட்பதி ஸ்தோத்திரம் பாடினார். விஷ்ணுவின் வேண்டுகோளின்படி அலக்நந்த பகுதியில் புதையுண்டு கிடந்த நாராயணனின் சிலாரூபத்தைக் கண்டுபிடித்து பிரதிஷ்டை செய்தார். அந்த இடத்தில் ஜ்யோதிஷ்மதி பீடம் ஏற்படுத்தி அதன் முதல் ஆச்சார்யராக தன் சீடர் ஆனந்தகிரியை நியமித்தார். ஆச்சாரியார் தோடகாஷ்டகம் செய்ததால் ஆனந்த கிரியின் பெயர் தோடகாச்சாரியார் என அழைக்கப்பட்டார். அங்கு தன் சத்குரு கோவிந்தபாதரும், பரமகுரு கௌடபாதரும் தவத்தில் இருக்கும் காட்சியை மனதில் கண்டு ஆச்சரியப்பட்ட சங்கரர் அவர்களை தட்சிணா மூர்த்தியாகப் பாவித்து தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம் பாடினார்.

அங்கிருந்து புறப்பட்டு கைலாயம் சென்றர். அங்கு தேவர்கள், முனிவர்கள் பூதகணங்கள் அனைவரும் ஈசனை வழிபட தானும் வழிபட்டு பரவசமடைந்து பாட ஆரம்பித்தார். பஞ்ச ஸ்படிக லிங்கங்களையும், பார்வதி தேவி நினைவாக சிவன் செய்த ஸ்தோத்திரத் துதி அடங்கிய சுவடி ஒன்றையும் கொடுத்த இறைவன் இந்த லிங்கங்களை தகுந்த இடங்களில் பிரதிஷ்டை செய்து சுவடி- சௌந்தர்ய லஹரி யை பூலோகம் எங்கும் பிரசாரம் செய்துவிட்டு தன்னில் வந்து இனைய அருள் புரிந்தார். அவைகளைப் பெற்றுக் கொண்ட சங்கரர் ‘உமாமகேஸ்வர ஸ்தோத்திரம்‘ பாடினார். பஞ்சலிங்கங்களையும் சுவடியையும் எடுத்துக் கொண்டு வெளியில் சங்கரர் வருவதைப் பார்த்த நந்திகேஸ்வரர் இவைகள் அவரிடம் வந்தது பற்றிக் கேட்க பெருமானைப் பார்த்த ஆனந்தத்தில் வந்து கொண்டிருந்த சங்கரர் நந்தி கேட்டதைக் கவனிக்கவில்லை. சந்தேகப்பட்ட நந்தி அவர் கையிலிருநத சுவடியைப் பிடுங்க முதல் 41 பாடல்கள் மட்டும் சங்கரரிடம் இருக்க மற்றவை நந்திகேஸ்வரரின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்தன. அதற்காக சங்கர வருத்தப்பட ‘வருந்தாதே சங்கரா விடுபட்ட பகுதியை நீயே பூர்த்தி செய்’ என அசரீரி எழுந்தது.

சௌந்தர்ய லஹரி என்றால் அழகு அலைகள் என்று பொருள். லஹரி என்றால் சந்திரன் உதிப்பதால் கடலில் ஏற்படும் பொங்குதலைக் குறிக்கும். அதாவது மனிதனின் மனமாகிய கடலில் அம்பிகை எனும் அழகான சந்திரன் பிரகாசிக்கும் போது ஏற்படும் ஆனந்தமும் ஓர் அலை வரிசையே,

தன் கையிலிருந்த 41 ஸ்லோகங்களையும் படித்த சங்கரர் அவைகள் சாக்த தத்துவங்களை கூறும் மகோன்னத மந்திர சாஸ்திர சூட்சமங்கள், குண்டலினி, யோக தத்துவங்கள், ஸ்ரீவித்யா ஆராதனை பற்றிய ரகசியங்கள் என அறிந்து அதில் ஆனந்தமாக திளைத்திருந்தார். மீதம் 51 பாடல்களை அவரையே எழுதும்படி அசரீரி கூறியதால் தேவியை நினைத்து தியானித்து எழுத ஆரம்பித்து சௌந்தர்ய லஹரியை முடித்துவிட்டு நேபாளம் சென்றார்.

பசுபதிநாதர் ஆலயத்தில் ஈசன் தந்த ஸ்படிக லிங்கங்களில் ஒன்றை- வரலிங்கத்தை ஸ்தாபித்து, மகாதிரிபுரசுந்தரியையும் பிரதிஷ்டை செய்தார். அங்கிருந்து கேதார்நாத் சென்றார், சிவபெருமன் தன்னிடம் தந்த ஐந்து ஸ்படிக லிங்கங்களில் ஒன்றான முக்தி லிங்கத்தை கேதார்நாத்தில் ஸ்தாபித்தார், கேதர் ஆலயத்தை புதுப்பித்து வழிபாட்டு முறைகளை சீர் படுத்தினார். இங்கிருந்து சீடர்களுடன் காசிக்குச் சென்றார்.

சீடர்களுடன் விஸ்வநாதரை தரிசித்தார். அங்கு ஒரு முதியவர் இலக்கணப் பாடங்களை சூத்திரங்களை மனப்பாடம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தவர், ஆச்சாரியார்களுக்கு இறுதிக் காலம் வரும்போது கல்வி காப்பாற்றாது. கோவிந்தன்தான் காப்பாற்றுவான் என்று உபதேசித்தார். அவர் சீடர்களும் சில ஸ்லோகங்களைப் பாடினார். இவை அனைத்தும் சேர்ந்து வாழ்க்கையில் ஒரு தெளிவு பிறக்கும் புனித பஜகோவிந்தம் எனப்படும், மத்திய பாரதத்தின் பல பகுதிகளில் அத்வைத பிரச்சாரம் செய்தார்.

தேவியின் நாபி விழுந்த நீலாசலம், ஸ்ரீக்ஷேத்ரம், புருஷோத்ம க்ஷேத்ரம் எனப்படும் பூரி வந்தடைந்தார். பலராமர், சுபத்ரா, ஜகந்நாதர் ஆகியோரை தரிசித்தார். ஜகநாதஅஷ்டகம் பாடினர். இங்கு கோவர்த்தன மடம் நிறுவிய சங்கரர், விமலா பீடத்தை தோற்றுவித்து முதல் ஆசாரியராக ஹஸ்தமலகரை நியமித்தார்.

மீண்டும் சிருங்கேரி வந்த சங்கரர் சிவன் கொடுத்த ஸ்படிக லிங்கங்களில் ஒன்றான போக லிங்கத்தை சிருங்கேரியில் ஸ்தாபித்தார். அங்கிருந்து தொண்டை மண்டல திருவொற்றியூருக்கு வந்தார். ஈசனை வழிபட்டார் வட்டப்பாறை அம்மன் சன்னதியில் ஸ்ரீசக்ரம் பதித்து புனிதப் படுத்தி நரபலி கொடுக்கும் பழக்கத்தை நிறுத்தினார். திரிபுர சுந்தரி ஸ்தோத்திரம் பாடினார். எல்லா ஜனங்களும் புரிந்து கொள்லும் முறையில் வினா-விடை மணிமாலா எனப்படும் பிரச்னோத்ர ரத்ன மாலிகாவை சொன்னார். பூவிருந்தவல்லியில் தரிசனம் செய்துவிட்டு மாங்காடு சென்றார்.

ஈசனின் அனல்வழித் தீயும், உமையின் தவத்தின் உக்கிரத் தீயும் சேர்ந்த அளவற்ற வெப்பத்தால் வாடி வருந்திய மாங்காடு மக்களுக்கு ஆறுதல் தரும் விதமாக அபூர்வ அமைப்புக் கொண்ட அர்த்தமேரு எனப்படும் 43 திரிகோணம் அமையக் கூடிய ஸ்ரீ சக்கரத்தை யந்திரப் பிரதிஷ்டை செய்து மாங்காட்டின் வெப்பத்தை தணித்தார். சிவனையும் சக்தியையும் தரிசித்து காஞ்சிபுரம் சென்றார்.

வரதராஜ பெருமாளை தரிசித்தார். ஹரி சரணாஷ்டகம், ப்ராத ஸ்மரணஸ்தோத்திரம், ஸ்ரீவரமஹாகணபதி மந்திராக்ஷராவளி ஸ்தோத்திரம், ஸ்ரீ கணேச புஜங்கம். விஷ்ணு ஷட்பதி, ஸ்ரீலட்சுமி நரசிம்ஹ கருணாரஸ ஸ்தோத்திரம், ஆகிய ஸ்தோத்திரங்களைப் பாடினர். சிவகாஞ்சியில் உள்ள ஏகாம்பரேஸ்வரரைத் தரிசித்தார். சிவபஞ்சாட்சர துதி பாடினார். காமாட்சி சன்னதியில் ஸ்ரீ சக்கரத்தை ஸ்தாபித்தார். சக்கரத்தை சுற்றியுள்ள அமைப்பில் உள்ள வசினி, காமேசி, மோதினி, விமலா, அருணா, ஜயினி, சர்வேஸ்வரி ஆகிய எட்டு தேவிகளையுடைய ஸ்ரீ சக்ரத்திற்கு அர்ச்சனைகள் செய்ய வைத்தார். காமாட்சியின் இடதுபுறச் சுவரின் வெளிப்புறத்தில் உள்ள அரூப லட்சுமியையும், வலது புறத்தில் உள்ள சொரூப லட்சுமியையும் வணங்கினார்.

காஞ்சீபுரத்திலும் சர்வக்ஞபீடம் ஏற்படுத்தினார். அறிஞர்கள் பலருடன் வாதிட்டார். பிரம்ம தேசத்திலிருந்து வந்த சிறுவனுடன் 3நாட்கள் வாதிட்டார். அவனுக்கு சர்வக்ஞாத்மன் எனப் பெயரிட்டு தன் துறவியாக ஆக்கிக்கொண்டார். பாரதத்தின் நான்கு பகுதியிலும் நான்கு பீடங்களை ஏற்படுத்திய சங்கரர் ஐந்தாவதாக காஞ்சியில் காமகோடி பீடத்தை ஏற்படுத்தி யோக சந்திரமௌலீஸ்வரர் லிங்கத்தை ஸ்தாபித்தார்.

பரத நாட்டில் இருந்த 72 மதங்களைச் செம்மைப் படுத்தி நெறிமுறைகளை வகுத்து அவற்றை சைவம், வைணவம், காணாபத்யம், கௌமாரம், சௌரம், சாக்தம் என ஆறாகத் திருத்தி அவகளை நாடெங்கும் பரப்ப முறையே பரமதகாலானர், லட்சுமணன், கிரிஜாகுமார், வடுகநாதர், திவாகர், திரிபுராகுமார் ஆகியோரை அனுப்பிவைத்தார்.. அதனால் அவருக்கு ஷண்மத ஸ்தாபகர் என்ற பெயர் உண்டானது. இதனால் நாட்டில் இருந்த மதப் பூசல்கள் குறைந்தன.

அவருக்கு 32 வயது முடிந்து இறைவனுடன் இனையும் நாள் வந்தது. ஒரு சுபயோக சுபதினத்தில் காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியாக சுரேச்சுவரரை நியமித்தார் சங்கரர். சந்திரமௌலீசுவரரையும், திரிபுரசுந்தரியையும் பூஜை செய்ய சர்வக்ஞாதானரை நியமித்தார்.

வைகாசிமதம் சுக்லபட்ச ஏகாதசி தினம் தன் சீடர்களையும் பக்தர்களையும் ஒன்றுகூட்டி சந்திரமௌலீசுவரர் பூஜை செய்தார். தன் வாழ்நாள் முழுவதும் அருளிய தத்துவங்களை எளிய முறையில் ஐந்து பாடல்களாக-ஸோபான பஞ்சகம் பாடினார். ஈசனிடமிருந்து தான் பெற்ற ஐந்து ஸ்படிக லிங்களில் மீதமிருந்த ஒன்றை மோட்ச லிங்கத்தை சிதம்பரத்தில் ஸ்தாபிக்க அனுப்பி வைத்தார். பின் காஞ்சி காமட்சியம்மன் கர்பகிரகம் சென்றார். காமேஸ்வரரையும் காமாட்சியையும் கண்டு இன்பமுற்று ‘திரிபுரசுந்தரி வேதபாதஸ்தவம் என்ற தோத்திரம் பாடினார். காமேஸ்வரருக்குள் காமாட்சி கரைய தானும் ஒளிவடிவாகி அந்த ஜோதியில் மறைந்தார் சங்கரர்.-ஜகத்குரு ஆதிசங்கரர்.

$$$$$

ஞாயிற்றுக்கிழமை, 01 April 2018 13:16

குமாரிலபட்டர்

Written by

ஓம்நமசிவய!

அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலை அறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்து எனை ஆண்ட
வித்தக விநாயகன் விரைகழல் சரணே!

&&&&&

குமாரிலபட்டர்

மீமாம்சக கொள்கை

பிரயாகையில் பிறந்த குமாரிலபட்டர் முருகனின் அவதாரம் என புராணங்களில் சொல்லப் பட்டுள்ளது. வேதத்தின் ஒரு பிரிவான கர்ம காண்ட்த்தை ஆதரிக்கும் கொள்கையை கடைபிடிப்பவர். ஒரு செயலைச் செய்தால் தானாகவே அதற்கான பலன்கள் கிடைக்கும். அதற்கு இறைவன் அவசியமில்லை என்பதும், இறைவன் இல்லை, இறைவன் இருப்பது உண்மையானால் நல்லவர்களும் கெட்டவர்களும் ஏன் என்பதே அவர் வாதம். இது ஜைனி முனிவர் உருவாக்கிய கர்ம மார்க்கம் மீமாம்சக கொள்கை ஆகும். பூ உலகில் மனிதர்கள் போல் மேல் லோகத்தில் தேவர்கள் இருப்பதாக நம்பிக்கை உள்ளவர்கள். யாகத்தால் பலன் உண்டு என நினைப்பவர்கள்.

குமாரிலபட்டர் காலத்தில் பிரயாகையில் பௌத்த மதம் செழித்தோங்கியது. அவர்கள் வைதிக மதத்தைக் கண்டணம் செய்து வந்தனர். மீமாம்சக கொள்கையை ஆதரிக்கும் குமாரிலபட்டர் பௌத்தர்களின் நிலையை மாற்றி தம் கொள்கைகளை அவர்கள் உணரவைக்க வேண்டும் என விரும்பினார். ஒரு மதத்தை கண்டிக்க வேண்டும் என்றால் அம்மதத்தைப் பற்றி முழுமையாக தெரிந்திருக்க வேண்டும் என்ற கருத்தில் பௌத்த சந்தியாசி ஆகி பௌத்த மடத்தில் சீடராக சேர்ந்தார்.

பொதுவாக பௌத்தர்கள் தங்கள் சாஸ்திரங்களை மற்றவர்களுக்குச் சொல்லித் தரமாட்டார்கள். குமாரிலபட்டர் தன் சொந்த மதக் கடமைகளை ரகசியமாகச் செய்து கொண்டு பௌத்தத்தைக் கசடறக் கற்றுத் தேர்ந்தார், பௌத்தர்கள் பாடம் சொல்லும்போது இந்து மதம் பற்றி குறைகூறி திட்டும்போது மனதை அடக்கிக் கொண்டு கண்ணீர் சிந்துவார், அப்படி சிந்தும்போது பலநாள் அகப்பட்டு எதாவது சொல்லி மழுப்பி விடுவார். ஆனால் இறுதியில் அவர் அந்தணர் என்று கண்டுபிடிக்கப்பட்டார்.

ஓர் அந்தணன் இப்படி பித்தலாட்டம் செய்து நம் சாஸ்திரங்களை கற்றுக் கொண்டு விட்டானே என்பதால் கோபங்கொண்ட சிலர் அவரை அந்த கட்டிடத்தின் மேல் மாடிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து தள்ளி விட்டனர். அப்போது அவர் ‘நான் நம்பும் வேதம் உண்மையாக இருக்குமானால் எனக்கு ஒரு துன்பமும் ஏற்படாமல் காப்பாற்றட்டும்’ என கூறியபடி கீழே விழுந்தார். அவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்தும் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை ஆனால் ஒரு கல் பட்டு அவர் ஒரு கண் போய் விட்டது..

வேதத்தை எவ்வளவு முழுமையாக நம்பினேன் எனக்கு இந்த நிலைமையா என புலம்பினார். அப்போது ‘வேதத்தை நீ முழுமையாக நம்பவில்லை’, வேதம் உண்மையாக இருக்குமானால் அது என்னைக் காப்பாற்றட்டும்’ என்றுதான் கூறினாய். ‘வேதம் தான் உண்மை, அது என்னைக் காப்பாற்றட்டும்’ எனச் சொல்லவில்லை அப்படியானால் வேதத்தின் மீது உனக்கு சந்தேகம் இருக்கின்றது என்றுதானே அர்த்தம் என அசரீரி எழுந்தது. குமாரிலபட்டர் தன் தவறை உணர்ந்தார்.

மீமாம்சக மதப் பிரச்சாரம் ஆரம்பித்தார். அந்தக் கருத்தை வலியுறுத்துபவர்களின் தலைவர் ஆனார். கர்ம மார்க்கமே பிரதானமானது என்பதை வலியுறுத்தினார். பௌத்த மதத்தினர் அனைவரையும் வாதத்திற்கு அழைத்து அவர்களை வென்றார். தான் வந்த வேலை முடிந்ததாய் நினைத்தார்.

குருத் துரோகம்

குருவை தெய்வமாக மதிக்கும் மதத்தில் பிறந்த தான் பௌத்தத்தை தன்னை சீடனாக நம்பி போதித்த குருமார்களை ஏமாற்றி விட்டோமோ என்ற மனவேதனை இருந்தது. அது குருத் துரோகம் என நம்பினார். கடவுள் இல்லை கர்மாவே பலன் தரும் என்று போதிக்கும் நான் இப்படி போலியாக நடந்து கொள்ளலாமா என வருந்தினார், புத்த விஹாரத்தின் ஏழாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டபோது வேதத்தை சாட்சியாக வைத்து உயிர்பிச்சைக் கேட்டவர் தற்போது தன் உடலைத் தானே துன்புறுத்தி இறந்துபோகத் தலைப்பட்டு உமிக்காந்தல் தீயில் இறங்கினார்,

உமிக்காந்தல்

உமிக்காந்தல்-துஷாக்கினி தீ என்பது வடமொழியில் தூஷ-உமி. தன்னைச் சுற்றி நிறைய உமியைச் சேர்த்துக் கொண்டு கீழே தீயிட்டுக்கொள்வது. அந்த உமிக்காந்தல் அக்னி கொஞ்சம் கொஞ்சமாக சரீரத்தை வேகச் செய்யும், உயிரை வருத்திக் கொள்வதில் மிகவும் கொடுமையானது. உள்ளங்கால், விரல், முழங்கால், என உடலின் ஒவ்வொரு பகுதியாக வெந்து எரிந்து தீய்ந்து அழிந்து கருகி உயிர் போகும் பயங்கரமான தண்டனை.

மாறிய குமாரிலபட்டர்

அந்தத் தீ மெல்லப் பரவி அவர் கால்கள் கருகத் துவங்கியபோது பிரயாகை வந்திருந்த சங்கரர் பௌத்தரை வென்ற குமாரிலபட்டரைக் கண்டு கர்ம காண்டமே முக்கியம் எனும் மனிதரை வேதாந்தத்தின் பக்கம் திருப்பினால் ஞான காண்டத்தின் அவசியத்தை உலகுக்கு நன்றாக உணரவைக்கலாம் என்ற எண்ணத்தில் அவரைப் பார்க்க வந்தார், நிலைமை முற்றியிருக்கக் கண்ட சங்கரர் ஏன் இந்த முயற்சி எனக் கேட்க நான் செய்த பிழைக்கு தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளபடி சிரமான முறையில் மரணத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.

குமாரிலபட்டரின் வேண்டுகோளுக்கிணங்க அத்வைதிக முறைகளை அவருக்கு விளக்கினார். இறைவன் அணுக்கிரஹத்தால் மட்டுமே சுக பலன் நீடித்திருக்க முடியும், கர்ம காண்டத்தை மட்டும் அனுசரிப்பது போதாது அதன் நிரந்தர பலன் ஞானகாண்டத்தில் இருக்கின்றது அதுதான் வேதாந்தம் என விளக்கினார். உடலின் அடிப்பாகம் அக்னி கனலால் எரிய உள்ளம் சங்கரரின் அருட்கனலால் வெளிச்சமுற்றது, இருக்கும் ஓர் ஆத்மா அதைக் காரியத்தால் கட்டுப்படுத்த இயலாது, ஆத்மாவில் உறைவதே பிறப்பைக் கழிக்கும் பேரானந்தம் எனச் சங்கரர் கூறக் கேட்ட குமாரிலபட்டர் நெகிழ்ந்து போனார். உங்கள் கருத்தை மக்களுக்குச் செல்ல இயலாத நிலைக்கு ஆனேன் என வருந்தினார், உங்களை நான் குருவாக மனப்பூர்வமாக் ஏற்றுக் கொள்கின்றேன் என்றார்,

மாகிஷ்மதி நகரில் மீமாம்சக கொள்கை உடைய மண்டனமிஸ்ரர் என ஒருவர் என்னைவிட தீவிரமானவர் அவரை நீங்கள் வாதத்தில் வெல்லவேண்டும் என வேண்டுகோள் விடுத்து தன் ஆவியை அக்னிக்கு அர்ப்பணித்தார், சங்கரர் குமாரிலபட்டருக்காகப் பிரார்த்தனை செய்தார், மோட்சம் அருளினார்.

$$$$$

வெள்ளிக்கிழமை, 30 March 2018 09:51

கோவிந்த பகவத் பாதர்!

Written by

ஓம்நமசிவய!

நாரணன் முன் பணிந்தேத்த நின்று எல்லை நடாவிய அத்
தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே, என்பவர்க்கில்லை அல்லல்களே!

$$$$$

 

கோவிந்த பகவத் பாதர்!

நல்ல நித்திரையில் இருந்த மகாவிஷ்ணு தனக்குள் மெல்ல புன்னகைத்து ஆழ்ந்து சுவாசித்தார். இந்த சுவாசத்தால் பெருமாளின் எடை கூடவே பூபோன்று கணக்கும் பெருமாளின் எடை அதிகரித்ததால் அதை தாங்க இயலாமல் தவித்தான் ஆதிசேஷன். விஷ்ணு மீண்டும் புன்னகைத்தார். புஷ்பக் குவியல் போல் அவர் எடை ஆனது. இந்த மாயத்திற்கு காரணம் என்னவென்று ஆதிசேஷன் கேட்க, பெருமாள் சொன்னார், கையிலே சில பழங்களை எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் நடந்தால் அந்த பழங்களே மிகுந்த கனம் உள்ளதாக தெரியும். அந்த பழங்களை உண்டு விட்டால் அதன் பளு தெரியாது. கையில் இருந்த பழம் வயிற்றுக்குள் போய்விட்டது. ஆதனால் அதன் எடை தெரியாமல் போய் விடும். அதுபோல் என் உள்ளத்தில் வைத்து தினமும் ருசிக்கும் ஒரு பழத்தை நான் இன்று சற்று நேரம் வெளியே வைத்துப் பார்த்தேன் அந்த பாரம் உன்னை துயரத்தில் ஆழ்த்திவிட்டது என்றார். ஒன்றும் புரியவில்லை என்று ஆதிசேஷன் சொல்ல விஷ்ணு சிதம்பரம் நடராஜரைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

சந்தோஷத்தை தாங்க முடியவில்லை

ஆதிசேஷா, நான் எப்போதும் என்னுள் வைத்து அனுபவித்து வரும் ஈசனை, நடராஜப் பெருமானை தனியாகப் பிரித்து பார்த்து ரசித்தேன். அந்த சந்தோஷத்தைதான் உன்னால் தாங்க முடியவில்லை என்றார். அப்போது ஆதிசேஷன் உள்ளத்தில் எழுந்த ஆசையை அறிந்த பெருமாள் நீ சிதம்பரம் சென்று தவமிருந்து அவரை தரிசிப்பாய் என்றார். அவர் விரும்பினால்தான் நீ அவரைப் பார்க்க முடியும். உனக்கு அந்த ஆசை வந்திருக்கின்றது என்றால் அவர் உன்னை அழைக்கின்றார் என்று பொருள். அங்கு உனக்கு எதோ வேலை கொடுக்கப் போகின்றார் என நினைக்கின்றேன் என்று பூடகமாகச் சிரித்தார்.விஷ்ணுவை நமஸ்கரித்து கயிலை சென்று தவம் புரிய காட்சி கொடுத்த சிவன் ஆதிசேஷா பூலோகத்தில் உள்ள வியாக்ரபுரத்தில் வியாக்ரபாதன் என்பவன் என்னை பூஜிக்க வசதியாக இருக்க தனக்கு புலிக்கால் புலிக் கை வேண்டும் என விரும்பி வரம் பெற்றவன் என்னுடைய ஆனந்த தாண்டவத்தைக் காண திருமூலநாதரை பூஜித்து வருகின்றான். நீயும் அங்கு செல்வாயாக தை மாதத்தில் குரு வாரத்தில் பூச நட்சத்திரமும் பூரணையும் சேர்ந்த நாளில் உங்கள் இருவருக்கும் ஆனந்த தாண்டம் ஆடிக் காண்பிப்பேன் என அருளினார்.

ஆத்ரேயர்-பதஞ்சலி

சிதம்பரத்தில் அத்ரி முனிவர் தம்பதியினருக்கு பிறந்த குழந்தையின் உடல் கீழ்ப்பகுதி பாம்பைப் போல் இருந்தது. அத்ரி முனிவரின் குழந்தை என்பதால் ஆத்ரேயர் என்றனர். பதஞ்சலி என்றும் அழைத்தனர். வளர்ந்தார். சிவகங்கையில் நீராடி, சிவனை மனதில் இருத்தி வியாக்ரபாதருடன் சேர்ந்து திருமூலநாதரை பூஜித்த பதஞ்சலியின் பிறப்பிற்கான காரணம் அறிந்த ஈசன் காட்சியளித்து இருவருக்கும் ஆனந்த தாண்டம் ஆடிக் காண்பித்தார்.

ஆடலைக் கண்ட பதஞ்சலி மெய்சிலிர்த்துப் போனார் உடுக்கை ஒலிக்கேற்ப இறைவன் ஆடுவது கண்டு பதஞ்சலியும் மெய் மறந்து ஆடினார். ஆஹா என்ன ஒரு திரு நடனம் என்று ஆனந்தித்து பரவசப் பட்டார். இதை மனதால் பருகியதாலே விஷ்ணுவின் கனம் அதிகரித்தது என நினைத்த பதஞ்சலி தன் எடையும் அதிகரித்ததை உணர்ந்தார். வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத உலக இயக்கத்திற்கு காரணமான அந்த அற்புத ஆனந்த திருநடனத்தில் லயித்து இருந்தவரை ‘பதஞ்சலி’ என்ற அன்பு ஓசை அழைக்க சகஜ நிலைக்கு வந்த பதஞ்சலியிடம் ஈசன், மிக முக்கியமான மூன்று காரியங்களை (யோக சூத்திரம், ஆத்ரேய சம்ஹிதை, வியாகரண மகாபாஷ்யம்) பாரத மக்களின் விழிப்புணர்வுக்காக ஆற்ற வேண்டும் என்றார்.

யோக சூத்திரம்- எப்போதும் அலையும் சுபாவமுள்ள மனதைக் கட்டுபடுத்தி மேம்படுத்த உதவுவது,
ஆத்ரேய சம்ஹிதை- உடல் ஆரோக்கியத்திற்கு வழிகாட்டும் உன்னத நூல்
வியாகரண மகாபாஷ்யம்- பிழையற்ற சொற்களைச் சிந்தித்து சொல்ல உதவுவது. எதை எப்படி உச்சரிப்பது என்ற குழப்பத்தை நீக்கி ஒழுங்காக பேசும் வழிமுறைகளைக் கூறும் நூல். எல்லாவற்றிலும் மகத்தான இதை எழுதி எல்லோருக்கும் கற்றுக் கொடு அது உன்னால் மட்டுமே முடியும் என்று ஆசீர்வதித்தார்.
மகாபாஷ்யம்- பதஞ்சலி வியாகரணத்திற்கு மகாபாஷ்யம் எழுதியது நாடெங்கும் பரவ அதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆவலுடன் ஏராளமானவர்கள் சிதம்பரம் வந்தனர். இதைக் கற்க வந்த சீடர்கள் 1000 பேருக்கும் சொல்லிக் கொடுக்க பல வருடங்கள் ஆகும் என்பதால் பதஞ்சலி ஆதிசேஷன் உருவம் எடுத்து அனைவருக்கும் ஒரே சமயத்தில் உபதேசம் செய்ய முடிவெடுத்தார். தன் சக்தியை தாங்க முடியாமல் சீடர்கள் எரிந்து விடுவார்கள் என்பதால் தனக்கும் தன் சீடர்களுக்குமிடையில் ஒரு திரையை அமைத்து திரைக்கு உட்புறம் அமர்ந்து திரையை விலக்கி பார்க்கக்கூடாது, என் அனுமதியின்றி வெளியில் செல்பவர்கள் பிரம்ம ராட்சஸாக மாறிவிடுவீர்கள் என்ற நிபந்தனையுடன் பாடம் நடத்தினார். ஒரு சீடனுக்கு மட்டும் எப்படியாவது திரையை விலக்கிப் பார்த்துவிட ஆவல். அப்படிச் செய்தபோது அந்தோ அங்கிருந்த அனைவரும் ஆதிசேஷனின் நச்சு காற்று மற்றும் பார்வை பட்டு எரிந்து சாம்பல் குவியலாயினர். நிலைமையைக் கண்டு பதஞ்சலி வருந்த திரை மூடியிருக்கின்றது குருவிற்கு என்ன தெரியும் என்று வெளியில் சென்றுவிட்டு திரும்பி வந்த ஒருவன் மட்டும் 1000 பேரில் தப்பியவன். இறைவன் இட்ட ஆணையை நிறைவேற்றாமல் போய் விடுமோ என்று அஞ்சிய பதஞ்சலிக்கு ஒருவன் தப்பியது ஆறுதலைத் தந்தது.

கௌடர்-பிரம்ம ராட்சஸன்

அவன் சுமாரன மாணவன். மேற்கு வங்கம்-அன்றைய கௌட தேசத்திலிருந்து வந்ததால் அவனைக் கௌடர் என அழைத்தார். கௌடர் மந்த புத்தியுள்ளவரானதால் வாயால் போதிப்பதவிட முழுமையான அனுக்கிரஹமாக அவனுள் அத்தனையும் இறக்க நினைத்தவர் இறைவனை வேண்டி மனதை ஒருமைப் படுத்தி அவன் தலைமேல் கைவைத்து ஆசீர்வதித்தார். மின்னல் வேகத்தில் பதஞ்சலிக்குத் தெரிந்த அத்தனை ஞானமும் கௌடருக்குள் இறங்கின. அதே விநாடி கௌடர் பேயாக- பிரம்ம ராட்சஸாக மாற பதஞ்சலியின் காலில் விழுந்து மன்னிக்க வேண்டியது.

ஆச்சாரிய பக்தியில்லாமல் என் கட்டளையை மறந்து நீ வெளியில் சென்றதால் என் சாபம் பலித்து விட்டது. இதை உடன் நிவர்த்தி செய்ய முடியாது. உனக்கு நான் கற்றுக் கொடுத்த வித்தைகளை, எல்லாம் தெரிந்த ஒரு அறிஞனுக்கு நீ கற்றுக் கொடுத்தால் பேய் உருமாறி சுய உருவம் அடைவாய் என்றார்.

அந்த பேய் பறந்து சென்று நர்மதைக் கரையோரம் ஒரு மரத்தில் வசித்தது. பிரம்ம ராட்சஸனாக இருந்தாலும் பூர்வஞான வாசனையால் ஒரு புத்திசாலித்தனமான கேள்விகேட்டு அதற்கு பதில் சொல்லாதவர்களை கொன்று சாப்பிட்டு வந்தது. ஒருநாள் அந்த வழியில் ஓர் அழகான அந்தணச் சிறுவன் சந்திர சர்மா வந்தான். அவனிடம் பிரம்ம ராட்சஸன் கேள்வி கேட்க சரியான பதிலை அந்தச் சிறுவன் பகர்ந்தான்.

சந்திர சர்மா

கௌடருக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தாலும் பிரம்ம ராசஸனாக மாறிய அவரின் கேள்விக்கு எப்போது யார் சரியான பதிலைச் சொல்வது. அவர் எப்போது யாருக்குப் போதிப்பது என்ற கவலையில் பதஞ்சலி முனிவரே மறு பிறப்பெடுத்து சந்திர சர்மாவாக வந்துள்ளார்.

பிரம்ம ராட்சஸன் சிறுவனே உன்பெயர் என்ன என்று விசாரனை செய்ய, வேதியர் குலத்தில் உதித்த என் பெயர் சந்திர சர்மா, நான் பதஞ்சலி முனிவர் எழுதிய வியாகரண மகாபாஷ்யம் கற்க சிதம்பரம் செல்ல விருக்கின்றேன் என்பதைக் கேட்ட பிரம்ம ராட்சஸன். தானே அதைக் கற்றுத் தருவதாகச் சொல்லி. தன் இருப்பிடமான ஆலமரத்திற்கு வரச்சொல்லி சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தது.

சந்திரசர்மா! நான் எத்தனை நாள் பாடம் சொல்லித்தருகிறேனோ அத்தனை நாள் நீயும் என்னுடன் மரத்தை விட்டு கீழிறங்காமல் பாடம் கேட்க வேண்டும் என்ற கண்டிப்புடன் பாடம் ஆரம்பிக்கப்பட்டது. திடீரென்று பாடம் ஆரம்பிக்கப் பட்டதால் எப்படி குறிப்பெடுப்பது என்று குழம்பிய சந்திரசர்மா ஆலமரத்து இலைகளைப் பறித்து தன் தொடையை நகத்தால் கீரி வரும் ரத்தத்தில் தொட்டு எழுதினான். இடை விடாமல் பிரம்ம ராட்சஸன் சொல்லிக் கொண்டிருக்க ஆலமரத்தின் இலைகளைப் பறித்து தன் ரத்தத்தில் தொட்டு தொட்டு எழுதினான்.

சீக்கிரம் பாடங்களைக் கற்றுக் கொடுத்து விட்டால் தான் சுயரூபம் அடைந்து விடலாம் என்பது பிரம்ராட்சஸனின் எண்ணம். சீக்கிரம் எழுதி முடித்தால் பாரத மக்களுக்காக இறைவன் கொடுத்த பணியை செய்து முடித்து விட்டோம் என்ற எண்ணம் சந்திர சர்மாவாகிய பதஞ்சலிக்கு. ஒரு வழியாய் பாடங்கள் முடிந்தன. கௌடரின் சாபம் விலக பிரம்ம ராட்சஸ உருவம் விலக பிரம்ம ஞானத்தைத் பாரதத்திற்குத்தர கௌடர் இமயமலை நோக்கி சென்றார். அங்கே பிறவியிலே ஞானியாகிய சுகர் முனிவரைச் சந்தித்து வேத உபதேசம் பெற்று இறைவனின் பாதங்களே முக்திக்கு வழி என்று செயல்பட்டதால் கௌடபாதர் என்றழைக்கப்பட்டார்.

ஆலமரத்தின் இலைகள் அனைத்தும் தீர்ந்து போயிருந்தன. அந்த இலைகளை எல்லாம் ஒன்று சேர்த்து தன் இடையில் உடுத்தியிருந்த ஆடையால் சேர்த்து கட்டி விட்டு களைப்பு மிகுதியால் சந்திரசர்மா அயர்ந்து அந்த மரத்தடியிலேயே தூங்கி விட்டான். அப்போது பசியுடன் அப்பக்கம் வந்த ஆடு புல் பூண்டு எதும் கிடைக்காமல் தன் உணவிற்காக தேடி சந்திரசர்மாவின் மூட்டையிலிருந்த இலைகளை திண்ண ஆரம்பித்தது. சந்திரசர்மா உயிரைக் கொடுத்து ரத்தத்தில் எழுதிய இலைகளின் அருமை தெரியா ஆடு அந்த மூட்டையிலிருந்த ஆலமர இலைகளைப் பாதிக்குமேல் தின்று விட்டது.

திடுக்கிட்டு விழிப்படைந்தான் சந்திரசர்மா. நடந்ததை அறிந்தான். அழுது புரண்டான். ஆட்டை துரத்திவிட்டு மீதி இருந்த்தைக் காப்பாற்றினான். இன்று வரை மகாபாஷ்யத்தில் காணாமல் போனபகுதி ‘ஆடு தின்ற உரை’- ’அஜபட்சித பாஷ்யம்’ என்று அழைக்கப்படுகின்றது.

எஞ்சிய பாஷ்ய உரையுடன் உஜ்ஜயினிக்கு சென்றவன் அயர்வினால் ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்து விட்டான். உணவின்றி மயக்க நிலையில் கிடந்த அவனை அந்த வீட்டு வியாபாரின் மகள் பார்த்து அவனை மயக்கத்திலிருந்து மீட்டு அவன்பால் காதல் கொண்டாள். சந்திரசர்மா அந்தக் காதலை மறுக்க ராஜசபையில் புகார் அளிக்கப்பட்ட்து. அவனது தோற்றத்தைக் கண்ட அரசன் தன் மகளுக்கு அவளை மணமுடிக்க எண்ணினான். மந்திரியிடம் ஆலோசனை கேட்க அவர் தன் மகளுக்கு பொருத்தமானவன் என நினைத்தார். இந்த மூன்று பெண்கள் போதாது என்று அரசவையில் இருந்த மற்றொறு பெண்ணும் அவன் மேல் ஆசைப்பட அந்தக் கால வேதியர் குல வழக்கப்படி ஒரே முகூர்த்தத்தில் நான்கு பேரையும் மணம் புரிந்தான் சந்திரசர்மா.

மனைவிகள் நால்வருக்கும் குழந்தை பிறந்தது. அவர்கள் வரருசி எனும் வல்லப ரிஷி, விக்ரமாதித்தன், பட்டி, பர்த்ருஹரி ஆவார்கள். பின்னர் குடும்ப வாழ்க்கையிலிருந்து விலகி தன்னிடமிருந்த மகாபாஷ்யத்தை பாரதமெங்கும் பரப்பினார்,

இறுதியில் இமயமலை சென்று தன் முற்பிறவியில் தன்னிடம் சீடராயிருந்த கௌடபாதரிடம் சன்னியாசம் பெற்றார். அன்று முதல் சந்திரசர்மா கோவிந்த பகவத் பாதர் என்று அழைக்கப்பட்டார். பத்ரிகாஸ்ரமத்தில் தங்கி குருமார்களுடன் ஆன்மீகப் பணி ஆற்றி வந்தார்.

ஒருநாள் சுகரின் தந்தையும் குருவுமான வியாசர் அங்கு வந்தார். சுகர், கௌடபாதர், கோவிந்தபகவத் பாதர் ஆகிய மூவரும் அவரைச் சுற்றி அமர்ந்து ஆவலுடன் அவர் சொல்லப் போவதை கேட்க காத்திருந்தனர். கலிமலிந்த பாரதத்தைப் புனிதப்படுத்த மனிதப் பிறவியாக சந்நியாசியாக வந்து அறத்தை நிலை நாட்டி மனித தர்மத்தை உலகுக்கு உணர்த்த வரும் இறைவனுக்கு சன்னியாசம் அளிக்கும் பாக்கியம் உங்களில் ஒருவருக்கு கிடைக்கப் போகின்றது என்றார். அந்த புனித வாய்ப்பு தங்களுக்கே கிடைக்கவேண்டும் என மூவரும் வேண்டிக்கொண்டனர்.

வியாசர் மீண்டும் வாய் திறந்து கோவிந்தபகவத்பாதரே அந்த மாபாக்கியம் உங்களுக்கே. நீங்கள் இங்கிருந்து கிளம்பி நர்மதை நதிக்கரைக்குச் செல்லுங்கள். அங்கே தவம் மேற்கொள்ளுங்கள் இறைவன் உங்களை சந்திப்பார் என்றார். கோவிந்தபகவத்பாதர் வியாசரை வணங்கிச் சென்றார்.

சந்திரசர்மாவுக்கு இளமையில் உபதேசம் செய்த பிரம்மராட்சஸ் சாபம் நீங்கி கௌடபாதராகி சந்திரசர்மா துறவறம் ஏற்றதும் குருவாக உபதேசம் தந்தார். சந்திரசர்மா இளமையில் எந்த குகையில் எந்த ஆலமரத்தின்மீது அமர்ந்து பிரம்மராட்சஸிடம் வியாகரண விளக்கம் கேட்டாரோ அதே மரத்தின் அடியில் அமர்ந்து சிஷ்யனாக வரப்போகும் சிவபெருமானுக்காக காத்திருந்தார் கோவிந்த பகவத்பாதர். அங்கு வந்த சங்கரருக்கு முறைப்படி சன்னியாசி தீட்ஷை அளித்து அத்வைத்த்தை போதித்தார். காசி நகரம் சென்று அங்கே அத்வைத தத்துவத்தை போதிக்க வேண்டும் என சங்கரரை வழிஅனுப்பி வைத்துவிட்டு, இறைவன் தனக்கு இட்ட பணியை செய்துவிட்ட திருப்தியுடன் மீண்டும் பத்ரிகாஸ்ரமத்திற்கு சென்றார் கோவிந்த பகவத்பாதர்.

$$$$$

வெள்ளிக்கிழமை, 16 March 2018 10:23

மகான்கள்

Written by

ஓம்நமசிவய!

அகரமென அறிவாகி உலகம் எங்கும்
அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்
பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப்
போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!

$$$$$

மகான்கள்

பூ உலகின் மானிடராய் பிறந்து உயிர்கள் மேல் நிலையடைய பந்தங்கள் துறந்து பணியாற்றிய மகான்கள் பற்றிய தொகுப்பு.

1. ஆதிசங்கரர் !
2குமாரிலபட்டர்!
3. கோவிந்த பகவத் பாதர்!
4. சனந்தனர்-பத்மபாதர்!
5. தாயுமானவர்!
6. துளசிதாசர்!
7. மண்டனமிச்ரர்!
8.ராகவேந்திரர்!
&&&&&

வெள்ளிக்கிழமை, 16 March 2018 10:10

மண்டனமிச்ரர்

Written by

ஓம்நமசிவய!

தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்றகோட்டது குறையென்றெண்ணிப்
புழைநெடுங்கரத்தாற் பற்றிப் பொற்புற இனைந்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.

$$$$$

மண்டனமிச்ரர்- சுரேச்வராசாரியார்


தேவலோகத்தில் துர்வாசர் வேதம் சொல்லியபோது உச்சரிப்பில் சிறிது தடுமாறினார். கோபம் கொண்டால் சபித்து விடுவாரென அஞ்சி அனைவரும் அமைதியாயிருக்க கலைவாணி மட்டும் சிரித்துவிட்டாள். பிரம்மாவும் அமைதியாக இருந்தார். சீற்றமடைந்த துர்வாசர் மானிடராய் பிறந்து இருவரும் சிலகாலம் வாழவேண்டும் எனச்சாபமிட்டார்.

ஒருவரின் அறியாமையை எள்ளி நகையாடியது தவறு என வருந்தினாள் சரஸ்வதி. கனிவுடன் சொல்லி சரி செய்வதற்குப் பதிலாக தவறு செய்துவிட்டோமே என்று நினைத்து துர்வாசரிடம் பணிவுடன் சாப விமோசனம் வேண்டினாள். சிவன் ஆதிசங்கராக அவதரிக்கும்போது அவர் மூலம் சாப விமோசனம் கிடைக்கும் என்றார். துர்வாசரால் சாபம் பெற்ற பிரம்மாவும் சரஸ்வதியும் மண்டனமிச்ரர், சரஸவாணியாக மாகிஷ்மதி நகரில் பிறந்திருந்தனர். மண்டனமிச்ரரைப்பற்றி குமாரிலபட்டர் சொல்லக் கேள்விப்பட்டு அவரது மீமாம்ச தத்துவத்தை வென்று அத்வைதத்தை ஸ்தாபிக்க சங்கரர் அங்கு வந்தார்.

மண்டனமிச்ரர் வீடு பூட்டியிருந்தது. செருப்பு தைக்கும் தொழிலாளி உபதேசித்த ஒரு மந்திரத்தை ஜபிக்க நிமிர்ந்து நிற்கும் பொருட்கள் வளையும் என்ற முறையில் மண்டனமிச்ரர் வீட்டின் தென்னை வளைய அதை பிடித்துக் கொள்ள அம்மரங்கள் மீண்டும் உள்ளே வளைய இல்லத்தின் உள்ளே இறங்கினார் சங்கரர். வியப்புடன் சங்கரைப் பார்த்த மண்டனமிச்ரர் அன்னப்பிச்சை வேண்டுமா எனக்கேட்டதற்கு வாத பிட்சை என்றார். வாதபிட்சை ஆரம்பித்தது. சரஸவாணியின் ஆலோசனைப்படி இருவர் கழுத்திலும் மலர்மாலை சூட்டப்பட்டது. மண்டனமிச்ரர் தோற்றால் துறவறம் பூண வேண்டும். மண்டனமிச்ரர் வென்றால் சங்கரர் துறவறம் துறந்து இல்லறத்தில் ஈடுபடவேண்டும். 21 நாட்களுக்குப் பிறகும் போட்டி தொடர தோல்வியடைந்து விடுவோமோ என்ற நினைப்பில் வந்த உஷ்ணமூச்சால் மண்டனமிச்ரர் கழுத்தில் இருந்தமாலை வாடத் துவங்கியது. சரஸ்வாணி திகைப்படைந்தாள். முழுதும் வாடினால் தன் கணவர் தோற்றவராவர். எனவே குறுக்கிட்டு இல்லற தர்மப்படி எங்கள் இருவரையும் வென்றால்தான் நீங்கள் வென்றதாகும் எனக்கூறி கணவரை எழுப்பி அந்த இடத்தில் தான் அமர்ந்தாள். போட்டி தொடர்ந்தது. வேதம், வேதாந்தம், சாஸ்திரம், சம்பிரதாயம், இதிகாசம், புராணம், கணிதம், ஜோதிடம் எனறு ஆய கலைகள 64- கிலும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் இருபக்கமும் சரியாக வந்தன. 15 நாட்கள் முடிவில்லாமல் போட்டி தொடர சங்கரர் ஞானக்கண்ணால் தன் முன்னே அமர்ந்திருப்பது சரஸ்வதி என்பதை அறிந்தார். நெற்றியில் வியர்வை படர்ந்தது. போட்டியில் சங்கரர் வென்றால் தன் கணவர் துறவறம் ஏற்கவேண்டும் என்பதால் துறவியிடம் கேட்ககூடாத இல்லற இன்பம் என்றால் என்ன என்று கேட்டாள்.

திகைத்த சங்கரர் ஞானதிருஷ்டியால் பதில் சொல்லமுடியும். ஆனால் மக்களுக்கு அவரது துறவு நிலையில் சந்தேகம் வரும். பதில் சொல்லவிடில் வாதத்தில் தோற்றதாக ஆகும். ஒரு ஞான வித்திடம் சந்நியாசியிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டோமே, இது எத்தனை பெரிய பாவம் என நினைத்த சரஸவாணி ஒரு மாதம் தவணை தருகிறேன் அதற்குள் பதிலைத் தெரிந்து கொண்டு வாருங்கள் என்றாள். சங்கரர் சீடர் பத்மபாதர் மற்ற சீடர்களுடன் கானகம் சென்றனர்.

அமருகன் என்ற மன்னனின் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து அரண்மனைக்குச் சென்று தன் ஆத்மாவின் தூய்மைக்கு பாதிப்பு இல்லாமல் அரசாண்டார். மதுவும் மங்கையுமாக இருந்த மன்னனிடம் மாற்றம் கண்டவர்கள் அதை வரவேற்றார்கள். அமைச்சர்களுக்கு தங்கள் மன்னன் முன்னைவிட அதி புத்திசாலித்தனமாக செயல் படுவது கண்டு சந்தேகம் வர ஒற்றர்களை அனுப்பி விவரம் சேகரித்து சங்கரர் உடல் இருந்த இடத்தைக் கண்டு உண்மை புரிந்து நாடு நலமுடன் இருக்க மன்னரின் உடலில் சங்கரர் இருப்பது அவசியம் என்று சங்கரரின் உடலுக்கு தீ வைத்தனர். சீடர்கள் அலறியடித்துக் கொண்டு வர, அதே சமயத்தில் மன்னன் உடலிலிருந்து தன் உடலுக்கு கூடுவிட்டு கூடு பாய்ந்தார் சங்கரர். அதற்குள் ஒரு கை தீயினால் வெந்து கருகியது. பத்மபாதர் விருப்பப்படி லஷ்மிநரம்மர் துதிபாட கருகிய கை மீண்டும் ஒளிபெற்றது.

ஒரு மாதத்திற்குள் சரஸவாணியின் கேள்விக்கு விடை அறிந்து திரும்பிவந்து கூற மண்டனமிச்ரர் நிபந்தனைபடி துறவியாகி சங்கரர் பின் சென்றார். மண்டனமிச்சர்ருக்கு சுரேச்வராசாரியார் என்று திரு நாமத்தை சூட்டினார் சங்கரர்.

கண்ணீர்மல்க கணவருக்கு விடைகொடுத்த சரஸவாணி தான் பிரம்ம லோகம் செல்வதகாச் சொன்னாள். சங்கரர், தாயே நான் பின்னாளில் சிருங்கேரியில் சாரதா மடம் நிறுவும்போது அங்கு நீ சாரதாதேவியாக அருள்பாலிக்க வேண்டினார். சரஸ்வாணி சந்தோஷத்துடன் பிரம்ம லோகம் சென்றாள். 

சிருங்கேரியில் பிருத்வீதவர் என்ற முற்றும் தெளிந்த சீடரை சரதா பீடத்தின் முதல் ஆச்சார்யராக நியமனம் செய்து அவருக்கு ஆலோசகராக மண்டன்மிஸ்ரர்-சுரேச்சுவரரை நியமித்தார் சங்கரர்.

பின்னர் தன் 32வது வயதில் (கடைசி காலத்தில்) ஒரு சுபயோக சுபதினத்தில் காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியாக சுரேச்சுவரரை நியமித்தார் சங்கரர்.

$$$$$

வெள்ளிக்கிழமை, 16 March 2018 10:08

துளசிதாசர்

Written by

ஓம்நமசிவய!

முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்
மிக்க வெண்கோடொன்று மேசிதையா நிற்கும் வெள்ளறிவை
உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்
புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே

$$$$$

துளசிதாசர்

தத்துவஞானி ஆத்மாராமின் குழந்தை ராம்போலாவிற்கு பிறந்தபோதே 32 பற்கள் இருந்தன. பிறந்ததிலிருந்து அழவே இல்லை. திடிரென்று ராம் ராம் எனச் சொன்னது அக்குழந்தை. அதனால்தான் ராம்போலா எனப்பெயரிட்டனர். வலிப வயதை எட்டியவுடன் தாசி வீடுகளுக்குச் செல்ல ஆரம்பித்தான். அவனைத்திருத்த ரத்னாவளி என்றபெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்குப்பின் மனைவியை ஒருகணமும் பிரியாமாலிருந்தான். அவன் தந்தை பாதுஷாவிடம் சொல்லி ஏற்பாடு செய்த வேலைக்கு யார் சொல்லியும் செல்லாமல் மனைவியுடனே இருந்தான். பக்தனாகப் பார்க்க விரும்பிய மகன் மனைவி பக்தானாக மாறிவிட்டானே என மனம் வருந்திய ஆத்மாராம் தவம் செய்ய கானகம் சென்றார். அப்போது பாதுஷா கட்டாயம் அவனைக் கூட்டி வர ஆள் அனுப்பியதால் பாதுஷாவை பார்க்கச் சென்றான் ராம்போலா. அதுசமயம் ரத்னாவளியின் மாமியார் அவளை கொஞ்சநாள் அவளின் தந்தை வீட்டில் இரு, ராம்போலா ஒழுங்காக வேலைக்கு சென்றுவரட்டும் என்றாள்.

ரத்னாவளியின் பெற்றோர் விபரம் அறிந்தனர். ரத்னாவளி அம்மாவிடம் நான் மேலே சென்று ஒய்வு எடுக்கின்றேன். அவர் வந்தால் நான் இல்லை எனச்சொல்லி கட்டாயம் திருப்பி அனுப்பிவிடு என்றாள். வெளியில் காற்றுடன் கனத்த மழைபெய்து கொண்டிருந்தது. திடிரென்றுகதவு தட்டும் சப்தம் கேட்டது. யாரும் கதவு திறக்கவில்லை. அதுநின்றதும் மாடியில் ஜன்னல் தட்டப்பட்டது. எரிச்சலுடன் யார் எனக்கேட்டுத் திறக்க ஜன்னல் வழி ராம்போலா உள்ளே வந்தான். மனைவியைப் பிரிந்து அவனால் இருக்க முடியவில்லை. ரத்னாவளி துயருற்றார். குழந்தைபோல் அடம்பிடிக்கும் ராம்போலா நல்லவர். ஆனால் பெண்பித்து பிடித்து அலைவது கஷ்டமாயிருந்தது.

எப்படி மாடிக்கு வந்தீர்கள் என்ற ரத்னாவளிக்கு ஒரு கயிறை கட்டியிருந்தது. அதை பிடித்து வந்தேன் என்பதை நம்ப முடியால் விளக்கு ஒளியால் அதை பார்க்க இருவருக்கும் ஆச்சரியமாய் இருந்தது அது ஒரு மலைப்பாம்பு. நல்லவேளை தன்னுடைய தாலி பாக்யத்தால் தப்பித்திருக்கின்றான் என நினைத்தாள். அதுசரி ஆற்றை எப்படி தாண்டி வந்தீர்கள் இந்நள்ளிரவில் என்றாள். ராம்போலா படகு ஏதுமில்லை. ஒரு கட்டை மிதந்தது. அதைபிடித்துக்கொண்டு வந்தேன் என்றாள். அங்கு சென்று பார்த்தபோது அது ஆற்றில் மிதந்து வந்த ஒரு பிணமாக இருக்கக் கண்டு மிகவும் வேதனைகொண்டு தன் கணவனை மனம் போனபோக்கில் கடும் வார்தைகளால் திட்டினாள். என்றாவது இறக்கும் இந்த உடல்மீது இவ்வளவு ஆசை கொண்ட நீங்கள் இதில் ஒரு பகுதியாவதை ராமர்மேல் வைக்கக்கூடாதா எனக்கூறி அழுத அழுகை ராம்போலாவின் மனதை என்னவோ செய்தது. ரத்னாவளியின் கால்களில் வீழ்ந்து நீயே என் குரு. என்ஞானக்கண்ணை திறந்தாய் எனக்கூறி விடுவிடு என்று நடந்தான்.

கணவன் திருந்தவேண்டும் என நினைத்த ரத்னாவளி அவன் தன்னை விட்டு நிரந்தரமாய் போய்விடுவான் என நினைக்கவில்லை. அன்று சென்றவன் காசியில் ராமப்பித்து பிடித்து துறவியாய் அலைவதை தெரிவித்தார்கள். அவன் தந்தை மிகமகிழ்ந்து ராம ஸ்மரணையில் இருந்த அவனை கட்டித் தழுவிய அடுத்த கணம் அவரின் ஆவி பிரிந்தது. கணவனின் இறுதிக் கடன்களை நிறைவேற்றிய பின் அவன் தாய் கங்கையில் குதித்து மறைந்தாள். நிறையச் சொத்து வந்தது ரத்னாவளிக்கு. அதைக் கொண்டு காசியில் ஓர் மடம் நிறுவி அன்னம் பரிபாலித்து வந்தாள். துறவிகளுடன் வரும் கணவனுக்கும் அன்னம் பரிமாறி கண்களைத் துடைத்துக் கொள்வாள். கொஞ்ச காலத்தில் அவளும் காலமானாள்.

ரத்னாவளியை குருவாகக்கொண்டு துறவியான ராம்போலா, கவிஞராக மாறி ராமசரிதமானஸ் காப்பியம் எழுதியதையோ துளசிதாசர் என்ற மகானாய் போற்றப்பட்டதையோ அவள் அறிய வாய்ப்பில்லாமல் கடைசி காலத்தில் கணவனுக்கு அன்னமிட்ட திருப்தியுடன் விண்ணில் மறைந்துவிட்டாள் ரத்னமாலா.

$$$$$

வெள்ளிக்கிழமை, 16 March 2018 10:05

தாயுமானவர்

Written by

ஓம்நமசிவய!

அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்

$$$$$

தாயுமானவர்

வேதாரண்யம் என்ற திருமறைக்காட்டில் கேடியப்ப பிள்ளையின் இராண்டாவது மகனாகப் பிறந்தார். மிகவும் பேரழகு கொண்ட இவர் கவிதை இயற்றும் ஆற்றலுடன் பக்தியில் நாட்டமும் கொண்டிருந்தார். திருச்சியை ஆண்ட நாயக்க மன்னன் கேடியப்ப பிள்ளையின் மறைவிற்குப்பின் அவர் மகனை அதே பெருங்கணக்கர் பணியில் அமர்த்தினார். சில காலத்தில் மன்னர் இறக்க அரசி பொறுப்பேற்றுக் கொண்டார். ஓர் நாள் மாலை அரசி அவரிடம் வந்து தாயுமானவரிடம் தன் உள்ளக்கிடங்கை எடுத்துறைத்தாள். என்ன சொல்லியும் அரசியை சமாதானப்படுத்த முடியவில்லை. தான் அழகாக இருப்பதால் வந்த தீவினை என நினைத்து அங்கிருந்து நல்லூர் சென்று தவமிருந்தார். விபரம் அறிந்த அரசி மந்திரவாதி ஒருவரின் உதவியுடன் அவரின் தவ நிலைக்கு இடையூறு செய்து வசியம் செய்ய முனைந்தாள். தாயுமானவர் அந்த மந்திரவாதியின் மனதை தம்பால் திருப்பி அரசிக்கு அறிவுரை சொல்ல வைத்தார்.

தாயுமானவரின் உறவினர்கள் வந்தனர். திருமணம் புரிய வற்புறுத்தினர். தவறான உறவிற்கு இந்த தர்மமான உறவு எவ்வளவோ மேல் என்று நினைத்தார் தாயுமானவர். தாய் அவர் மனதை மாற்றி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தாள். திருமணம் முடிந்து ஓர் ஆண்டில் ஓர் ஆண்மகன் பிறந்ததும் மனைவி இறந்தாள். மகனை கனகசபாபதி என நாமமிட்டு வளர்த்தார். அவரின் தாயும் இறைவனடி சேர்ந்தாள். சில நாட்கள் சென்றன. தன் மகனை வரவழைத்து தனக்கு துறவில் நாட்டம் என்றும் எந்த உறவும் நிலையானதில்லை, இனி நீ உன் வழி நட என அமைதிப்படுத்தினார். அப்போது அவரின் வீட்டிற்கு, முன்பு ஒரு சமயம் தாயுமானவர் துறவு வேண்டி நின்றபோது, நீ திருமணம் வேண்டாமென்றாலும் உனக்குத் திருமணம் நடைபெறும். உனக்கு ஒரு மகன் பிறப்பான் .அதன் பின்னரே உனக்கு துறவு எனக்கூறிய மௌனகுரு வந்தார். அவரின் பின்னே தாயுமானவர் அமைதியாகச் சென்றார் தன் துறவுப் பணியினை தொடர…

$$$$$

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26929658
All
26929658
Your IP: 34.203.242.200
2024-03-28 18:39

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg