குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
சிவ சமகம் / ருத்ர சமகம்! (13)
ஓம்நமசிவய!
தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!
#*#*#*#*#
சிவ சமகம் / ருத்ர சமகம்!
ஸ்ரீருத்ர பாராயணம் சமக பாராயணத்துடன் சேர்ந்தால்தான் அது முழுமையான பலனை அளிக்கும் ஸ்ரீருத்ர ஜபத்திற்கு ஐந்து வடிவம் உள்ளது. ஸ்ரீருத்ரத்தையும் சமகத்தையும் பாராயணம் செய்வது சாதாரணரூபம். முதலில் ருத்ரத்தை 11 முறை ஜபித்து பின் சமகத்தின் முதல் அனுவாகத்தையும், இரண்டாவது முறை ருத்ரத்தை 11 முறை ஜபித்து பின் சமகத்தின் இரண்டாவது அனுவாகத்தையும், அப்படியே பதினோரு முறை ருத்ரத்தை ஜபித்துப் பதினொன்றாவது அனுவாகத்தையும் பாராயணம் செய்தால் அது 'ருத்ரைகாதசினீ'' என்று அழைக்கப்பெறும். பதினொரு லகுருத்ரம் ஒரு மகாருத்ரம். பதினொரு மகாருத்ரம் ஒரு அதி ருத்ரம்
ஸ்ரீருத்ரத்தின் முதல் அனுவாகத்தில் ஈசுவருனுடைய கட்டளையை மீறுபவர்களை அவர் தண்டிப்பதால் அவரின் கோபக்கனைகளை குறைத்து, அமைதி பொழிபவராக வேண்டுமென்றும், சமகத்தில், நாம்வாழத் தேவையான, பலதரப்பட்ட பொருட்களும், சந்ததிகளும், செல்வங்களும், பலதரப்பட்ட உலோகங்களும், பொன்னும், கல்வியும், ஞானமும், குறைவில்லா வாழ்வும், இனிமையான தூக்கமும் மற்றும் வாழ்விற்கு தேவையானவையும் ஸ்ரீருத்ரனிடம் கோரி வேண்டப்படுகின்றது
சிவனை ஆராதிப்பதால் மட்டுமே அவர் மனம் குளிரவைக்க முடியும்.. "வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால் மாளாத காதல் நோயாளன் போல்" – என்ற சொற்றொடருக்கிணங்க மருத்துவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது அவர் மீது நாம் கோபம் கொள்வதில்லையோ, அது போன்று துன்பம் வரும்போதும், இன்பம் வரும்போதும், ஈசுவரனிடத்தில் மனத்தை செலுத்தினால், அவர் நம்மிடத்தில் ஈடில்லா அன்பைப் பொழிவார். பற்று இல்லாத (எந்த ஆசையுமேயில்லாத) ஈசுவரனின் கால்களை இறுக்கமாகப் பிடித்து நம் துன்பங்களை அவனிடம் அர்ப்பணித்துவிட்டு அவன் மேல் உள்ள பற்றை (கால்களைப்) பிடித்துக் கொண்டோமேயானால், நமக்கு பேரின்பம் கிட்டும் என்கிறார். வள்ளுவர்.
அண்ட சராசரங்களிலெல்லாம் வியாபித்து இருக்கும் சிவன், திருநீரை பூசிக்கொண்டும், பிறைச்சந்திரனை தலையில் சூடியும், புலித்தோலை இடையில் உடுத்தியும், கண்மணிமாலையை (ருத்திராக்ஷத்தை) அணிந்தும், மயானத்தில் தியானத்தில் அமர்ந்தும், தனக்கென்று எதுவும் வேண்டாதவராய் ஆயிரம் கதிரவனைப்போல் ஒளிர்கின்ற உன்னத கருணாமூர்த்தியை வேண்டுபவர்களை 'வாழ்க்கை' என்ற துன்பக் கடலிலிருந்து கரையேற்றுவார்.
இருப்பினும், உலக வாழ்வில் 'பொருள்' இல்லாமல் வாழ்வதென்பது இயலாது, அதனால், எல்லா செல்வங்களையும் கொடுக்க வேண்டி ஈசனிடம் வழிபடுவதே சமகப் பாட்டு. திருடர் முதலியவர்களுடைய உடம்பில்கூட இரண்டு வடிவில் உயிர் உருவமாகவும், ஈசுவர உருவமாகவும் இருக்கும் அம்பிகா நாதனை மனதார வழிபட்டு வேண்டிய பொருட்களைப் பெற்று, நற்கதி அடைய அனைத்து உயிர்களுக்கும் இந்த சமகம் உதவட்டும்.
ஸ்ரீருத்திரனின் போர்கருவிகளும், கோபமும் தன்னை துன்புறுத்த வேண்டாம் என்று முதலில் வேண்டி பின், வாழ்வியல் இன்பத்திற்குத் தேவையான செல்வங்களை வேண்டுவதே சமகம். அதன் பொருட்டு, உலோகங்களையும், அடக்கி ஆளும் திறனையும், நீண்ட ஆயுளையும், வீடு, நிலம், மரம், செடி, புலன்கள், கையாளும் திறன், இன்பம், குதுகூலம், எதிரிகளினால் ஏற்படும் தொல்லைகளை களைந்தெடுக்கும் திறன், இன்ன பிற வாழவியல் இன்பங்கள் ஆகியவற்றை வேண்டிப் பெறுவதே சமகப் பாட்டின் கருத்தாகும்..
தூய்மையான வெண்மை நிறமுடையவரும், முக்கண்ணரும், ஐந்து முகமுடையவரும், கங்கையின் இறுமாப்பை அடக்கி சிரசில் தாங்கியவரும், பத்துக் கைகளுடையவரும், எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பெற்றவரும்; சந்திரனைச் சிரசில் அடையாளமாகக் கொண்டவரும், நாகப்பாம்பைப் பூணூலாய்த் தரித்தவரும், 'உருவம்' - 'உருவமில்லாமை' என்ற இருநிலைகளைக் கொண்டவரும், புலித்தோலைப் போர்த்தியவரும், உமாதேவியயைப் பாதி உடலாகக் கொண்டவரும் இந்த சமகத்தை படிப்போரையும் பாடுவோரையும் எம்மையும், என்னைச் சுற்றியுள்ள எல்லா உயிர்களையும் மற்றும் உலகத்திலுள்ள அத்தனை உயிரினங்களையும் அன்பு கொண்டு கர்மவினைத் தாக்கங்களிலிருந்து காக்க வேண்டுகிறேன்.
எல்லாம் வல்ல இறைவனும், உமையை இடப்பாகம் தாங்கியவனும், தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாதவனுமாகிய சிவபெருமானின் அருட்பெரும் கருணையுடன் தமிழ் பேசும் ஆன்மீக அன்பர்கள் புரிந்து கொள்ளக்கூடிய முறையில் சமகம் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது. சமகம் என்றால் சமாதானம் எனப் பொருள். கர்ம வினைகளல் ஏற்பட்ட பிறப்பின் வாழ்கைதனை சமாதானமாக இறைஞ்சி கேட்டு ஈசுவரக் கருணையினால் நல்வாழ்வாக சீர்படுத்திக் கொள்ள உதவுவதே சமகப் பாடல். அனைத்து 'இக''பர' இன்பத்தை அளிக்கும் சமகப்பாட்டின் கருத்து தொகுப்பில் ஏதாவது தவறு இருப்பின் அது அடியேனுடையது. அதைக் குறிப்பிட்டுச் சொன்னால் திருத்தப்பட்டு அது எல்லோருக்கும் பயனாய் அமையும் உங்கள் செயல் சிறப்பானதாகும். அடியார்க்கு அடியேன் குருஸ்ரீ பகோரா.
ஒவ்வொரு மறைப்பாட்டின் முடிவிலும் "ஓம் ஷாந்தி" என்று மூன்றுமுறை பண் பாடப்படுவது - மனிதனை மூன்று ஆபத்திலிருந்து காக்கவே, அவையாவன:-
1. "அதியாத்மா" - எனும் "தன்னால் உருவாக்கப்பட்ட ஆபத்து
2. ” அதிபௌதிகம்" -எனும் இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட கெடுதல்
3. ”அதிதெய்வீகம்"-எனும் கடவுள்களாலும், தேவதைகளாலும் ஏற்படுத்தப்பட்ட ஆபத்து
இம்மூன்று ஆபத்துகளிலிருந்தும் நாம் காப்பாற்றப்பட்டு, இவைகளில் சிக்காமல் தாண்டிப்போய் 'பரப்ப்ரம்ம" நிலை எனும் முழுமுதற்கடவுளிடம் ஒன்றிவிட வேண்டும் என்ற குறிக்கோளைக் உறுதியாக கொண்டு வேண்டிக்கொள்ள வேண்டும்..
வழிபாடு!
முதல் வேண்டுதலாக 'கர்ம காண்டம்' என்று அழைக்கபெறும் 'சமகப்பாட்டில்' முதலில் இரண்டு கடவுள்களை சேர்த்து வேண்டப்படுகின்றது. தினமும் விதிக்கப்பட்ட செயல்பாட்டு ஆணைகளை செவ்வெனே செய்து முடிக்கவும், அலம்பித் தெளிவு படுத்தவும், வேள்வியில் ஈடுபடும் பொருட்டு, தொடர்ந்து வேள்வித்தீயில் மூங்கில் பட்டை கொண்டு நெய் ஊற்றப்படும் போதும் (வாஸோர்த்தரா) சமகம் ஓதப்படுகிறது. பொதுவாக 'கடவுள்' என்று வேண்டப்படுவதால், அக்னி, விஷ்ணு அல்லது ருத்திரனை வேண்டுவதாக பொருள்கொள்ள வேண்டும்.
சமஸ்கிருதம்::
ஓம் அக்னாவிஷ்ணு சஜோஷஸேமாவர்த்தந்து வாம் கிர: த்யும்னைர்வாஜேபிராகதம் ||
ஓம் அக்னியும் விஷ்ணுவும் ஆகியவர்களே| எங்களிடம் ஒருமித்து அன்பு கனியும் மனமுடையவர்களாக நீங்களிருவரும் இருக்க வேண்டும். உங்களை வணங்கும் எங்கள் வார்த்தைகள் உங்களை மகிழ்விக்கட்டும். நீங்களிருவரும் எல்லாவித பொன், பொருட்களுடனும், உணவுப் பொருள்களுடனும் எங்களுக்கு கொடுத்து வாழ்த்த எழுந்தருள வேண்டும்.
கீழே பதினோரு அனுவாகமாகப் சமகப் பாடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பராயாணம் செய்து பயன் அடைந்து உயிர்கள் இன்புற ஆசீர்வதிக்கும் அடியார்க்கு அடியேன் குருஸ்ரீ பாகோரா.
1. உடம்பும், உடம்பு சார்ந்தவைகளும்.
2. அழகான உடம்பும், கவர்ந்திழுக்கும் ஆளுமையும்,
3. ஆசை, இச்சை, நிறைவேற வேண்டும்
4. "உணவுப்பொருட்களும் நீர்பண்டங்களும்"
5 "நிலமும், அதைச்சார்ந்த மதிப்பிடமுடியாத பொருட்களும்"
6. "இந்திரனும், மறைக் கடவுள்களும்"
7. "ஸோம வேள்வி நடத்த தேவையான பாண்டங்களை வேண்டுதல்”
8. "வேள்வியில் ஈடுபடுவதற்கு தேவையான நுணுக்கமான பொருட்கள்”
9. "வேள்வியின் அர்பணிப்பு மூலம் உயர்ந்த நிலையை அடைதல்”
10. "வீட்டிற்கும், விவசாயத்திற்கும் தேவையாவற்றை வேண்டுதல்”
11. "எல்லாம் வல்ல இறைநிலையை உணர்த்தும் "வாழ்த்தும், வேண்டுதலும்"
11- (அ) "நல்லதையே கேட்டு, செய்து, முடிக்க வேண்டும்"
#####
(அ) "நல்லதையே கேட்டு, செய்து, முடிக்க வேண்டும்!
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
#*#*#*#*#
11-(அ) "நல்லதையே கேட்டு, செய்து, முடிக்க வேண்டும்!
நல்லதையே கேட்டு, நல்லதையே பார்த்து, நல்லதையே நினைக்கவேண்டி வழிபட கடைசியாக வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. இப் பகுதி எல்லாவித செயல் பாட்டிலும் இனிமையை, வேகத்தை, நன்மையை புகுத்தச்சொல்லி ஒழுக்கத்தை அறிவுருத்துகிறது. நமது மூதாதயர்கள் நம்மை வாழ்த்தட்டும், நாம் பேசுவது நன்மை பயப்பதாக இருக்கட்டும் என்று கூறப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, நம் சனாதான நெறியின் பரந்த மனப்பான்மை வெளிப்படுகிறது.
சம.ஸ்கிருதம்::
இடா தேவஹுர் மனு யஜ்ஞனீர்ப்ருஹஸ்பதி ருக்தா மதானி ஷகும்சிஷத்விஷ்வேதேவா: ஸூக்தவச:ப்ருதிவி மாதர்மா மா ஹிக்ம்ஸீர் மது மனிஷ்யே மது ஜனிஷ்யே மது வக்ஷ்யாமி மது வதிச்யாமி மதுமதீம் தேவப்யோ வாசமுத்யாசக்ம் ஷுஷ்ரூஷேன்யாம் மனுஷ்யேப்யச்டம் மா தேவா அவந்து ஷோபாயை பிதரோனுமதந்து || ஒம் ஷாந்தி: ஒம் ஷாந்தி:ஒம் ஷாந்தி |
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!
கடவுள்களின் அன்பைப் பொழிய எழுப்பப் பாடப்படும் மறைப்பாடல்கள் இறைத் தன்மை பொருந்திய "காமதேனு" பசுமூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதில் மனு அர்ப்பணிக்கப்பட்டவர். மகிழ்ச்சியை ஊட்டும் 'மதக்கோட்பாட்டு பாடலை ப்ரஹஸ்பதி நமக்கு அளித்தார். 'மறைப்பாடல்களில்' கூறப்பட்டுள்ள விஷ்வ தேவாஸும், பூமாதேவியும், எனக்கு துன்பம் தரவேண்டாம். என் எண்ணங்கள் இனிப்பானதாக இருக்கட்டும்; என்னுடைய செயல் திறன் இனிமையானதாக இருக்கட்டும்; அதன் முடிவு இனிமையானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கட்டும்; என்னுடைய படைப்பு இனிமையானதாக இருக்கட்டும்; என்னுடைய பேச்சும், பாராட்டுதலும் இனிமையானதாக இருக்கட்டும்; நான் பேசும் ஒலிவடிவான பேச்சு கடவுள்களுக்கு இனிமையைத் தரட்டும்; யார் நான் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்கிறார்களோ, அவர்களுக்கு என் பேச்சு இனிமையானதாக இருக்கட்டும்; கடவுள்கள் எனக்கு பேச்சுத்திறனின் ஒளியை என்னுள் படரச் செய்து, என் வார்த்தையை சுவையுள்ளதாக மாற்றட்டும். மூதாதையர்களும், பித்ருக்களும், மனநிறைவோடு என்னை வாழ்த்தி அருள் புரிவார்களாக.
ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி
#####
"எல்லாம் வல்ல இறைநிலையை உணர்த்தும் "வாழ்த்தும், வேண்டுதலும்"!
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!
#*#*#*#*
11. "எல்லாம் வல்ல இறைநிலையை உணர்த்தும் "வாழ்த்தும், வேண்டுதலும்"!
41 பொருட்களும், இயற்கையின் கொடையை இறைவனின் அன்பின் வடிவமாய்ப் பாவித்து வேண்டப்படுகின்றன
இப்பகுதியை "வாழ்த்தும் பிரிவு" என்று கொள்ளலாம். 41 பொருட்களில், ஒன்றிலிருந்து 17 வரையுள்ள ஒற்றைப்படை எண்களும், 18 முதல் 29 வரை உள்ள இரட்டைப்படை எண்களும், மேலும் முதல் பிரிவில் உணவுப்பண்டங்களின் கோரிக்கையை அடுத்து, அதே சுழற்சியில் வரிசையாக மீண்டும் கோரப்படுகின்றது. ஏன் எண்கள் கேட்கப்படுகின்றது? ஒற்றைப்படை எண்கள் கடவுள்களுக்கு உகந்தது (காயத்ரி மந்த்ரம் 33 வார்த்தைகளைக் கொண்டது); இரட்டைப்படை எண்கள் மனிதனுக்கு உகந்தது (மனிதனுக்கு ஜகதி அளவை 48 வார்த்தைகளைக் கொண்டது). ஆனால், இங்கு முன்மாதிரி சுருக்கமாக முடிக்காமல், விரிவாக வைக்கப்படுவதோடுமட்டுமல்லாமல், தூண்டித்துருவி அதன் அடிப்படைக் காரணங்களை ஆராய்கின்றது. எனக்கு உணவுப்பண்டங்களும் அதன் சாகுபடியும், மீண்டும், மீண்டும் வளரும் பயிர்களும், வருணக்கடவுளின் கருணையினால் பெய்யும் மழையும், அம்மழையினால் ஏற்படும் செழிப்பும், அர்ப்பணிக்கப்படும் பொருட்களைக் கொண்டு கதிரவன் எப்படி கருணையினால் முகில்களாக மாற்றி மழை பெய்யச்செய்கிறானோ அந்த ஒளியின் செயலும், மேலுலகவீதியில் உலாவும் கதிரவனின் அழகும், காலத்தினூடேயும், வானத்தினூடேயும் உலாவும் முழுமுதல் இறையும் (பரப்ப்ரம்மமும்) அவன் கருணையும், யார் கடைசியாக பிறப்பானோ, எல்லோரும் இறந்த பின்னும் உயுரோடு இருப்பானோ அந்த 'முழுமுதல் இறையின் அன்பும், நம்மைக் காப்பவனும், உள்ளேயும், வெளியேயும் எல்லாமாகவும் இருந்து 'முழுநிறைவாக எவன் ஒளிர்கிறானோ அவனுடைய அன்பும் என் மீது கொட்டப்படட்டும் - என்று வேண்டப்படுகிறது. சுருக்கமாக, நம்மைக் கட்டுப்படுத்தி வாழ்வின் மயக்கத்திலிருந்து கரைசேர்ப்பவனும், எல்லாவித துரும்பிலும், செயலிலும், உலகிலும் இருப்பவனும், நினைத்துப் பார்க்கமுடியாத உருவத்தை உடையவனுமாகிய அந்த 'முழுமுதல் கடவுளின்' அன்பைக் கோருகின்றது.
சமஸ்கிருதம்::
ஏகா ச மே திஸ்ரச்ச மே பஞ்ச ச மே ஸப்த ச மே நவ ச ம ஏகாதச ச மே த்ரயோத ச மே பஞ்சதச ச மே ஸப்ததச ச மே நவதச ச ம ஏகவிக்கும்சதிச்ச மே த்ரயோவிக்கும்சதிச் ச மே பஞ்சவிக்கும் சதிச்ச மே ஸப்தவிகும்சதிச்ச மே நவவிக்கும்சதிச்ச ம ஏகத்ரிக்கும்சச்ச மே த்ரயஸ்த்ரிக்கும்சச்சமே சதஸ்ரச்ச மேSஷ்டௌ ச மே த்வாதச மே ஷோடச ச மே விக்கும்சதிச்ச மே சதுர்விக்கும்சதிச்ச மேSஷ்டா விக்கும்சதிச்ச மே த்வாத்ரிக்கும்சச்ச மே ஷ்ட்த்ரிக்கும்சச்ச மே சத்வாரிக்க்கும்சச்ச மே சதுச்சத்வாரிசச்ச மேSஷ்டா சத்வாரிக்கும்சச்ச மே சதுச்ச த்வாரிக்கும்சச்ச மேSஷ்டாசத்வாரிக்கும்சச்ச மே வாஜச்ச ப்ரஸவச்சாபிஜச்ச க்ரதுச்ச ஸுவச்ச மூர்தா சவ்யச்னியச்சாந்த்யாயனஷ்ச பௌவனஷ்சபுவனஷ்சாதிபஷ்ச ||
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!
ஒன்றாயுள்ள தத்துவமும் ஒற்றைப்படை எண்களான மூன்றாயுள்ளதும், ஐந்தாயுள்ளதும், ஏழும், ஒன்பதும், பதினொன்றும், பதின்மூன்றும் பதினைந்தும், பதினேழும், பத்தொன்பதும் இருபத்தொன்றும், இருபத்து மூன்றும், இருபத்தைந்தும், இருபத்தேழும், இருபத்தொன்பதும், முப்பத்தொன்றும், முப்பத்து மூன்றும் மற்றும் இரட்டைப்படை எண்களான நான்கும், எட்டும், பன்னிரெண்டும், பதினாறும், இருபதும், இருபத்து நான்கும், இருபத்தெட்டும் முப்பத்திரண்டும் முப்பத்தாறும் நாற்பதும், நாற்பத்து நாலும், நாற்பத் தெட்டும், உணவும், அதன் உற்பத்தியும் அதன் படிப்படியான வளர்ச்சியும், அதனை ருசித்து, ரசித்து சுவைக்கும் கொடுப்பிணையும், மற்றும் எல்லவிதமான உற்பத்திக்கு முதன்மையானவனும், தவிர்க்க முடியாதவனுமான கதிரவனும், மேலுலகமும்; அதன் தலைவரும், யார் வானம், காலம், செயல் இம்மூன்றையும் கடந்து ஒளிர்கிறானோ அந்த 'முழுமுதற் கடவுளின்' அன்பும், மற்றும், யார் எல்லாப் பொருட்களுக்கு பின்னால் கடைசியாக பிறக்கிறானோ, யார் எல்லாப் பொருள்கள் அழிந்தபின்னும் சலனமில்லமால் நிற்கிறானோ "அவனுடைய கருணையும்", யார் இந்த நிலத்தில் நிலமாகவே ஊடுருவி நின்று தாங்குகிறானோ, யார் எல்லாவிதமான அசையும், அசையாப் பொருட்களில் ஊடுருவி, மனமாகவும், திறனாகவும், செயலாகவும், சிந்தனையாகவும், காத்து வழிநடத்தும் ஆசானாகவும் அழிந்தும் அழியாமல் நிற்கிறானோ அந்த 'முழுமுதல் இறையான ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்குக் கிடைக்கட்டும்.
ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி
#####
"வீட்டிற்கும், விவசாயத்திற்கும் தேவையாவற்றை வேண்டுதல்”
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!
#*#*#*#*#
10. "வீட்டிற்கும், விவசாயத்திற்கும் தேவையாவற்றை வேண்டுதல்!
31 விதமான தேவைகள் சிவனிடம் கோரப்படும் உச்சக்கட்டம்
"மறைக்காலத்தில்" வாழ்வு முறையின் தேவை இருகூற்றுச் சுழற்சியான விவசாயத்திலும், அர்ப்பணிப்பிலும் வட்டமிட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது; விவசாயமும், வீட்டைப் பராமரிக்கும் பணியும் குறிப்பாக காளைகளையும், பசுக்களையும் பராமரப்பதில் சுற்றி வந்துள்ளது. ரிக் வடமொழியில் 20 விதமான பசு இனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, கருவிலிருக்கும் கன்றில் தொடங்கி, பெரிய காளை வரை, இப்பொழுது ஈன்றெடுத்த கன்றுக்குட்டி (தேனு) வரை, விரிவாகக் கூறப்பட்டுள்ளது. காமதேனுவை, புனிதமான தாயை, இந்துக்கள் போற்றி வணங்குகிறார்கள். அது நாம் கேட்டவற்றை எல்லாம் அன்பொழுகக் கொடுக்கும் இறைநிறைந்த பிறவி. முதல் பிரிவில் திடமான உடம்பு உறுப்புக்களை வேண்டும் சமகம், இங்கு வரும்போது அர்ப்பணிப்பு வாழ்விற்கு தேவையான செல்வங்களை கோருவதும், 'யாக கல்பனா" அதாவது'என் வாழ்க்கை, உணர்ச்சிகள், மனது, மூளை, ஆன்மா - இவைகள் நான் செய்யும் அர்ப்பணிப்புகளால் தெளிவாக அலம்பப்படட்டும், ஏதாவது தவறாக ஏவப்பட்டலோ, நான் செய்யும் வழிபாட்டில் அழுக்கு புகுந்துவிட்டதாலோ, அவைகள் என் வேண்டுகோளினால் நீக்கபெறட்டும்" என்று கோருவதும் சிறப்பேயாம்.
சமஸ்கிருதம்::
கர்ப்பாச்ச மே வத்ஸாச்ச மே த்ர்யவிச்ச மே த்ர்யவீ ச மே தித்யவாட் ச மே தித்யௌஹீ ச மே பஞ்சாவிச்ச மே பஞ்சாவீ ச மே த்ரிவத்ஸச்ச மே த்ரிவத்ஸா ச மே துர்யவாட் ச மே துர்யௌஹீச மே பஷ்டவாட்ச மே பஷ்டௌ ஹீ ச ம உக்ஷா ச மே வசாச ம ருஷபச்ச மே வேஹச்ச மேsநட்வாஞ்ச மே தேனுச்ச ம ஆயுர் ய்ஜ்ஞேன கல்பதாம் ப்ராணோ யஜ்ஞேன கலபதா-மபானோ யஜ்ஞேன கல்பதாம் வ்யானோ யஞ்ஞேன கல்பதாம் சக்ஷுர்யஞ்ஞேன கல்பதாக்கும்ச்ரோத்ரம் யஜ்ஞேன கல்பதாம் மனோ யஜ்ஞேன கல்பதாம் வாக் யஞ்ஞேன கல்பதா-மாத்மா யஜ்ஞேன கல்பதாம் யஜ்ஞோ யஜ்ஞ்ஞேன கல்பதாம்||
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!
பிள்ளைப் பேறாகாத கருவாயுள்ள கன்றுகளும், புதியதாகப் பிறந்த கன்றுக் குட்டிகளும், த்ரயாவஹி - ஒன்றரை வயதுக் காளைகளும், த்ரயாவீச - ஒன்றரை வயது கடாரிகளும், இரண்டு வயதுக் காளைகளும், இரண்டு வயதுக் கடாரிகளும், பஞ்சாவி -இரண்டரை வயது ஆண் காளைகளும், பஞ்சாவீ - இரண்டரை வயதுக் பெண் காளைகளும், த்ரிவட்ச - மூன்று வயது ஆண் காளைகளும், மூன்று வயது பெண் கன்றுகளும், துர்யவாட் - மூன்று வயதுக் காளைகளும், மூன்றுவயது பெண் கடாரிகளும், துயௌஹி - நாலு வயது ஆண் காளைகளும், நாலு வயதுப் பெண் கன்றுகளும், பஷ்டவாட் - ஐந்து வயது ஆண் காளைகளும், பஷ்டௌஹீ - ஐந்து வயதுப் பெண் கன்றுகளும்; ரிஷபா - பெருங்காளைகளும், வேஹா - கருச்சிதைவு ஏற்பட்ட வந்திப் பசுக்களும், அனட்வாண் - வண்டிக் காளைகளும், தேனு - புதியதாக கன்று போட்ட பசுக்களும் மேலும் கீழ்க்கண்ட பலதரப்பட்ட செயல்களுக்கு பயன்பெற எனக்கு கிடைக்கப் பெறட்டும். நீண்ட ஆயுளும், ப்ராணா - உயிர் மூச்சும், அபாணா – உயிர் மூச்சின்மையும், அர்ப்பணிப்பினால் கிடைக்கும் கண்ணும், காதும், மூளையின் திறனும், பேச்சுத்திறனும், வாக்கின் திறனும், உடம்பின் திறனும், இனி பின்பற்றப்போகும் வேள்வியின் பயனும், 'நான்' என்ற திமிரும், வேள்வியின் அர்ப்பணிப்பின் மூலம் எனக்கு தங்கு தடையின்றி கிடைக்கப்பெறட்டும்
ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி
#####
"வேள்வியின் அர்பணிப்பு மூலம் உயர்ந்த நிலையை அடைதல்”!
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!
#*#*#*#*#
9. "வேள்வியின் அர்பணிப்பு மூலம் உயர்ந்த நிலையை அடைதல் “
21 பண்டங்கள் சிவனிடம் வேண்டப்படுகின்றன
"வேள்வியின் அரசன்" என்றழைக்கப்படுகிற அஷ்வமேத வேள்விக்கு முன் ஐந்து அர்ப்பணிப்புகள் மூலம் தொடங்கபடும் "ப்ராவர்க்ய" என்ற ஸோம வேள்வியில், ஆறு கடவுள்களையும், மறை, பாட்டுப் பாடுதல், வேள்வியின் கடைசிக்கட்டத்தில் நீராட்டுவது போன்றவை இடம்பெறுகிறது. இப்பிரிவு சமகத்தின் பாதையை கோடிட்டுக் காட்டுகின்றது; அதாவது, தனக்கும், இவ்வுலக இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்று வேண்டியது முடிந்து, ஒரு படி மேலே போய் வானுலக கடவுளாகவே தான் மாறவேண்டும் என்று வேண்டுவது மனிதனை விலங்குநிலைச் சிந்தனையிலிருந்து, ஆண்டவன் நிலைக்கு தன்னை உயர்த்திக்கொள்ள துடிக்கும் சிந்தனை முயற்சியாகும்.
சமஸ்கிருதம்::
அக்னிச்சமே கர்மச்ச மேர்க்கச்ச மே ஸுர்யச்ச மே ப்ராணச்ச மே sச்வமேதச்ச மே ப்ரதிவீ ச மேsதிதிச்ச மே திதிச்ச மே யஜ்ஞேன கல்பந்தாம் ருக்ச மே ஸாம ச மே ஸ்தொமச்ச மே யஜுச்ச மே தீக்ஷா ச மே தபச்ச ம ருதுச்ச மே வ்ரதஞ்ச மேsஹோராத்ரயோர் வ்ருஷ்ட்யா ப்ருஹத்ரதந்தரே ச மே யஜேஞன கல்பேதாம்||
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!
நெருப்பும், ஸோம யாகத்துக்கு முன் செய்யப்படும் "ப்ரவர்க்கியும்" "அர்க்கயாகம்" எனப்படும் செயல்களும், கதிரவனுக்குச் செய்யும் வேள்வியும், கடைசியில் நெருப்புக் கடவுளுக்கிடும் எல்லாவித அர்ப்பணிப்புகளும் (பூர்ணாஹுதியும்) அசுவமேத வேள்வியும், ப்ராண வேள்வியும், அர்ப்பணிப்பிலேயே சிறந்த தான குதிரை அர்பணிப்பும், பூமிக் கடவுளும், அதிதி கடவுளும், திதி கடவுளும், ஸ்வர்க்க கடவுளும், கை விரல்கள்போல் விரிந்திருக்கும் கால்பகுதியே தெரியும் விராடபுருஷனான முழுமுதற் கடவுளின் அருளும், இவ்வகையான பொருட்களும், சேற்கைப் பொருட்களும், இவ்வகை அர்ப்பணிப்பினால் ஏற்படும் எல்லவிதமான நன்மைகளும், குறிக்கோளும், ரிக் மறை போன்ற புனித ஒலி நூல்களில் கூறப்பட்டுள்ள போற்றிப்பாடலும், ஸாம மறை போன்ற புனித ஒலி நூல்களில் கூறப்பட்டுள்ள போற்றிப்பாடலும், அதர்வன மறை போன்ற புனித ஒலி நூல்களில் கூறப்பட்டுள்ள போற்றிப்பாடலும், யஜுர் மறை போன்ற புனித ஒலி நூல்களில் கூறப்பட்டுள்ள போற்றிப்பாடலும், வேள்வியின் அர்ப்பணிப்பிற்கு போகும் முன்பு செய்யப்படும் "திக்ஷா' எனப்படும் உடம்பை நீரால் தூய்மைபடுத்தும் சடங்கும், தவத்தால் என் பாவங்களைக் கழுவும் திறமையும், சரியான நேரத்தில், உரிய காலத்தில், ஒவ்வொரு தன்மையைப் பொருத்து செய்யப்படும் பலவகை வேள்வித்தீயும், மற்றும் தொடர்புடைய செய்கைகளும், கடினமானதும் நடைமுறையில் இல்லாத திடமான சூளுரைகளும், பசுவின் ஒரு முலைக் காம்பின் பாலை மட்டும் பருகும் பட்டிணி முதலியனவும், அவற்றை சிறப்பாக, கடைபிடிக்க கூறப்பட்ட அறிவுரையும், தொடர்ந்து பகலிலும் இரவிலும் பெய்யும் மழையால் விளையும் பயிர்களின் செழிப்பும், "ப்ரிஹட்" மற்றும் "ரதந்தர' என்ற போற்றுதலுக்குறிய ஸாம மறைப்பாட்டுக்களும் நான் நடத்தும் அர்ப்பணிப்பில் எனக்கு நன்மை பயக்கட்டும்.
ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி
#####
"வேள்வியில் ஈடுபடுவதற்கு தேவையான நுணுக்கமான பொருட்கள்”!
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!
#*#*#*#*#
8. "வேள்வியில் ஈடுபடுவதற்கு தேவையான நுணுக்கமான பொருட்கள்!
22 ஆதரவுப்பொருட்கள்/பாண்டங்கள் சிவனிடம் வேண்டப்படுகின்றன
வேள்வி நடத்தத்தேவையான உபகரணங்கள் வேண்டப்படுகின்றன இவ்வகையான பாண்டங்களின் துணையின்றி நாம் வேள்வியை செவ்வனே செய்ய முடியாததுமட்டுமின்றி, அவற்றின் முழுப்பயனையும் பெறமுடியாது. சித்திரம் எழுத தேவையான நிறச்சாந்து சரிசமமாக இருப்பின் ஓவியம் எழுதுவது எளிது.அதேபோல், நேர்த்தியான பாண்டங்களின் துணைகொண்டு செய்யப்படும் வேள்வியால் "ஸோமச்சாறு" கிடைக்குமென்ற நோக்கில் இப்பகுதியில் வேண்டப்பட்டுள்ளது.
"ஸோமச்சாறு" கிடைக்கச் செய்யப்படும் வேள்வி அவ்வளவு எளிதானதல்ல; பலவித பண்டங்களின்/ பாண்டங்களின் துணைகொண்டே அதைப் பெற முடியுமமென்பது தின்னமாகிறது இங்கு. அதேநேரத்தில், ஒழுக்கத்துடன் கையாளப்படவேண்டிய ஒன்று இவ்வகை முறை என்பதும் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.
சமஸ்கிருதம்::
இத்மச்ச மே பர்ஹிச்ச மே வேதிச்ச மே திஷ்ணியாச்ச மே ஸ்ருசச்ச மே சமஸாச்ச மே க்ராவாணச்ச மே ஸ்வரவச்ச ம உபரவாச்சமேsதிஷவணே ச மே த்ரோணகலசச்ச மே வாயவ்யானி ச மே பூதப்ருச்ச ம ஆதவனீயச்ச ம ஆக்னீத்ரஞ்ச மே ஹவித்தானஞ்ச மே க்ருஹாச்ச மே ஸதச்ச மே புராடாசாச்ச மே மே பசதாச்ச மேவப்ருதச்ச மே ஸ்வகாகாரச்ச மே ||
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!
காய்ந்த சருகும் (ஸமித்தும்), காய்ந்த புல்லும் (தர்ப்பையும்), வேள்வி செய்யும் மேடையும், இரண்டு வேள்வித் தீக்குண்டங்களுக்கு நடுவே ஏற்படுத்தப்படும் குறுகிய பாதையும், ஹோதா முதலானவர்களின் எழுந்தருளப்பெறும் திண்ணைகளும், 'புரஸ' மரத்தினால் செய்யப்பட்டு 'இஷ்டி' வேள்விக்கு பயன்பெறும் நீண்டகரண்டிகளும், 'சமஸா' என்றழைக்கப்படும் மரத்தினால் செய்யப்பட்டு "ஸோமச்சாறை" விட்டுக் குடிப்பதற்கான தட்டும், ஸோமக் கொடியை இடிக்கும் கற்களும், 'யுபா' வேள்விக் கொடியில் (அர்ப்பணிக்கும் பொருட்டு) கட்டப்படும் "ஸ்வரவஸ்" எனப்படும் மரக்கத்திகளும், நிலத்தில் "ஹவிர்தானா" எனப்படும் நான்கு முழக்கணக்கில் தோண்டப்படும் நான்கு குழிகளும், அரசமரத்தைச் செதுக்குவதால் விழும் சிராய்த்துண்டுகளும், மாம்பழ வடிவில் செதுக்கப்பெற்ற ஆலமரத்தினால் ஆண பாண்டமும் (துரோண கலசமும்) மற்றும் அதில் வைக்கப்பெற்ற பிழிந்தெடுத்த ஸோமச்சாறும், மரத்தினாலான பாண்டங்களும், மண்ணால் செய்யப்பெற்ற பாண்டங்களும், 'சாமசாஸ்" என்ற வகை மண்ணினால் செய்யப்பெற்ற 'ஸோமச்சாறு' வைக்கபெறும் பாண்டங்களும், "ஆதவனீயம்" என்ற இன்னொருவகை மண்ணினால் செய்யப்பெற்ற 'சுத்தகரிக்கப்பட்ட ஸோமச்சாறு' வைக்கபெறும் பாண்டங்களும், "ஆக்ணீத்ரம்" என்ற வேள்வி எறியூட்டப்படும் புனிதமான இடமும், "ஹவிச்ஸ் ஸுக்களை" வைக்கும் மண்டபமும்,"க்ருஹாஸ்"எனப்படும் வேள்வி நடத்தும் முதலாளிகளின் மனைவிகள் எழுந்தருளும் இடமும், "உதகதா" போன்ற ஆன்றோர் வேள்வி நடத்தும் பொருட்டு இறைப்பாட்டில் பயன்படுத்திய "மஹாவேதி" எனப்படும் மிக உயர்ந்த மேடையும், அரிசி நொய்யாலான பண்டங்களும், ஹவிஸ் தயாரிக்கப்படும் இடமும், பலிபீடங்களும், வேள்வியின் முடிவில் செய்யும் குளியலும், காய்ந்த சருகுகளின் (ஸமித்துக்களின்) தகனமும் ஆகிய உயர்ந்த பொருட்களும் ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்குக் கிடைக்கட்டும்
ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி
#####
"ஸோம வேள்வி நடத்த தேவையான பாண்டங்களை சிவனிடம் வேண்டுதல்!
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
#*#*#*#*#
7. "ஸோம வேள்வி நடத்த தேவையான பாண்டங்களை சிவனிடம் வேண்டுதல்!
ஸோமச்சாறை பொழியவேண்டும் வேள்விக்கு பயன்படும் 29 பாண்டங்களை அளிக்கக் சிவனிடம் கூறுதல்.
மறைகளில் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ள ஸோம அர்ப்பணிப்பு இந்தப் பிரிவில் விரிவாக்கச் சொல்லப்பட்டுள்ளது. வேள்வி செய்யும் பொருட்டு, சரியான பாண்டங்களை பயன்படுத்தினால் மட்டுமே அதன் வெற்றி உறுதிப்படும். இந்தப் பாண்டங்கள் வேள்வி செய்யப்படும் தன்மையை வெளிக்கொணர்கிறது. ஒவ்வொரு பாண்டத்திற்கும் ஒருபாங்கும், தனித்தன்மையும் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாண்டமும் ஒரு குறிப்பிடத்தக்க கடவுளுக்கோ, குறிப்பிட்ட வழிபாட்டிற்கோ கோரப்படுகிறது. இதில், 'அதிபதி' மட்டும் விதிவிலக்கு. 'அதிபதி' என்பது தயிர் வைக்கப்படும் ஒர் பாண்டம். 'அதிபதி'க்கு மிக உயர்ந்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது. சோதனைக்கூடத்தில் எப்படி ரசாயனக் கலவைகளை கவனமாக கையாளவேண்டுமோ, அதே போல் இங்கும் வழிபாட்டு முறையைக் கையாள வேண்டும். தவறாக கையாண்டால், நாம் செய்யும் வழிபாடு வீணாகப் போய்விடும். ஒவ்வொரு கடவுள்களுக்கும் பயன்படும் பாண்டங்களை கொடுக்கக் வேண்டுவது சிறப்பு.
சமஸ்கிருதம்::
அகும்சுச மே ரச்மிச்ச மேதாப்யச்ச மேதிபதிச்ச ம உபாகும்சுச்ச மேந்தர்யாமச்ச ம ஐந்த்ரவாயவச்ச மே மைத்ரா வருணச்ச ம ஆச்வினச்ச மே ப்ரதிப்ரஸ்தானச்ச மே சுக்ரச்ச மே ம்ந்தீ ச ம ஆக்ரயணச்ச மே வைச்வதேவச்ச மே த்ருவச்ச மே வைச்வாநரச்ச ம ருதுக்ரஹாச்ச மேதிக்ராஹ்யாச்ச ம ஐந்த்ரரக்னச்ச மே வைச்வதேவச்ச மே மருத்வதீயாச்ச மே மாஹேந்த்ரச்ச ம ஆதித்யச்ச மே சாவித்ரச்ச மே ஸாரஸ்வதச்ச மே பௌஷ்ணச்ச மே பாத்னீவதச்ச மே ஹாரியோஜனச்ச மே ||
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!
அம்சு பாண்டமும், ரஸ்மியும், அதப்யமும், தயிரைத் தாங்கும் "அதிபத" பாண்டங்களும், ஸோமச் சாறைத் தாங்கிடும் ஊபம்சுவும், அந்தர்யாமமும், ஐந்த்ர வாயவாஸ்வமும், இரட்டைக்கடவுள்களான மித்ரனும், வருணனும், ஆச்வினமும், ப்ரதிப்ரஸ்தானமும், ஷுக்ரமும், மந்தியும், ஆக்ரயனமும், வைச்வதேவமும் த்ருவமும், வைச்வாநரமும், ரிது க்ரஹாசமும், அதிக்ரஹாசமும், இரட்டை கடவுள்களான இந்தரனுக்கும், அக்னிக்கும் பயன்படுத்தப்படும் பாண்டமும், விஷ்வதேவாசுக்கு பயன்படுத்தப்படும் பாண்டமும், மாருத்துகளுக்கு பயன்படுத்தப்படும் பாண்டமும், மற்றும் கடவுள்களில் அரசனான இந்தரனுக்கு பயன்படுத்தப்படும் எல்லாவிதமான் பாண்டங்களும், கதிரவக் கடவுளான ஆதித்தனுக்கு பயன்படுத்தப்படும் பாண்டங்களும், சவிதாவிற்கு பயன்படுத்தப்படும் பாண்டங்களும், சரஸ்வதிக்கு பயன்படுத்தப்படும் பாண்டங்களும், பூஷாவிற்கு பயன்படுத்தப்படும் பாண்டங்களும், பத்னேவதஸுக்குபயன்படுத்தப்படும் பாண்டங்களும், ஹரியோஜனாஸுக்கு பயன்படுத்தப்படும் பாண்டங்களும் - ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்கு கிடைக்கட்டும்.
ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி ||
#####
ஓம்நமசிவய!
உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.
#*#*#*#*#
6. "இந்திரனும், மறைக் கடவுள்களும்" !
20 வகையான மறைக் கடவுள்களும் (இந்திரனுடன் சேர்த்து), செய்யவேண்டிய வழிபாட்டு முறைகளும் கூறப்படுகின்றது
இரண்டு, இரண்டாக கடவுள்களை பிரித்து, 21 "மறைக் கடவுள்களை" போற்றும் இந்தப்பகுதியில், முதலில் முழு முதற்கடவுளும், பின் ஒவ்வொரு 'மறைக் கடவுளும்' 'இந்திரனை சேர்த்து போற்றப்பட்டுள்ளது. ஒரே பாட்டில் இரண்டு கடவுள்களை சேர்த்தற்கு காரணம், நாம் செய்யும் வேள்வியில் அவர்களை எழுந்தருளச்செய்தலும், பின் ஒருங்கே கிடைக்கும் நற்பேறுகளுமேயாகும. சமக அறிமுகத்தில் அக்னி தேவனும், விஷ்ணுவும் பாடப்பட்டுள்ளனர். ஏன் இந்திரனை ஒவ்வொரு கடவுள்களுக்கும் பின்னால் சேற்கப்பட்டுள்ளது? சமகம் 6வது பிரிவை 'அர்தேந்த்ரம்' என்று 'ப்ராஹ்மணம்' குறிப்பிடுகிறது, அதாவது 'பாதி' இந்திரன் என்று, ஏனென்றால், பிற்பகுதியில், ஒவ்வொரு கடவுள்கூட இந்திரன் சேர்க்கப்படுகிறான். இதற்குக் காரணம், நாம் அர்ப்பணிக்கும் பொருட்களில் முக்கால் பங்கு இந்திரனால் பெறப்படுகிறது. இந்திரன் 'கடவுள்களின் அரசன்', அதனால் ஒவ்வொரு அர்பணிப்பிலும், பாதி பகுதியை அவன் பெறுகிறான். 'கடவுள்களுக்கு, இந்திரனைச் சேர்த்து, வழிபடும் இப்பகுதியை 'அர்தேந்த்ரம்' என்று குறிப்பிடுவது சிறந்தது.
சமஸ்கிருதம்::
:
அக்னிச்சம இந்த்ரச்ச மே ஸோமச்ச ம இந்த்ரச்ச மே சவிதா ச ம இந்த்ரச்ச மே சரஸ்வதீச ம இந்த்ரச்ச மே பூஷா ச ம இந்த்ரச்ச மே ப்ருஹசஸ்பதிச்ச ம இந்த்ரச்ச மே மித்ரச்ச ம இந்த்ரச்ச மே வருணச்ச ம இந்த்ரச்ச மே த்வஷ்டா ச ம இந்த்ரச்ச மே தாதா ச ம இந்த்ரச்ச மே விஷ்ணுச்ச ச ம இந்த்ரச்ச மேச்விநௌ ச ம இந்த்ரச்ச மே மருதச்ச ம ச ம இந்த்ரச்ச மே விச்வே ச மே தேவா இந்த்ரச்ச மே ப்ருதிவீ ச ம இந்த்ரச்ச மேந்தரிக்ஷஞ்ச ம இந்த்ரச்ச மே த்யௌச்ச ம இந்த்ரச்ச மே திசச்ச ச ம இந்த்ரச்ச மே மூர்த்தா ச ம இந்த்ரச்ச மே ப்ர்ஜாபதிச்ச ம இந்த்ரச்ச மே
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!
இரட்டை கடவுள்கள் எனக்கு கருணைகாட்டட்டும், அக்னியும், இந்திரனும்; ஸோமனும், இந்திரனும்; மேலும் சவிதாவும் இந்திரனும்; சரஸ்வதியும், இந்திரனும்; பூஷாவும் இந்திரனும், ப்ருஹஸ்பதியும் இந்திரனும்; மித்ரனும், இந்திரனும்; வருணனும், இந்திரனும்; மேலும் த்வஷ்டாவும், இந்திரனும்; விஷ்ணுவும், இந்திரனும்; இரட்டையர்களான அஷ்வினிகளும், இந்திரனும்; மருத்துகளும், இந்திரனும்; விஷ்வ டேவர்களும், இந்திரனும்; நிலமும், இந்திரனும்; சொர்க்கத்திற்கும் - நிலத்திற்கும் - இந்திரனுக்கும் உள்ள இடைவெளியும், இந்திரனும்; வாணவருலகமும், நான்கு திசைகளும், இந்திரனும்; மேல்திக்கும், இந்திரனும்; ப்ரஜாபதியும், இந்திரனும் எனக்கு கருணை மழை பொழியட்டும்.
ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி
#####
"நிலமும், அதைச்சார்ந்த மதிப்பிடமுடியாத பொருட்களும்" !
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
அறிவின் வரம்பை அகன்றாய் குறிகுணங் கடந்த
குன்றே எட்டு வான் குணத்தெந்தாய் கட்டறு
களிற்று முகத்தோய் மலரில் மணமாய்
வளர்ந்தாய் அலர் கதிர் ஒளியின் அமர்வோய் போற்றி!
#*#*#*#*#
5"நிலமும், அதைச்சார்ந்த மதிப்பிடமுடியாத பொருட்களும்" !
நிலத்தில் வசிக்க 31 வகை தேவையானவை சிவனிடம் வேண்டப்-படுகின்றன
ஐந்தாவது பிரிவில், நிலத்தில் வாழத் தேவையானவற்றையும், ஆன்மீகத்தில் வாழ்வை ஈடுபடச்சொல்லி, நம்மைக் கடவுளை நோக்கி திருப்பும் இப்பகுதி பெரும் திருப்புமுனையாக உள்ளது. இதுவரை உலகில் தொந்தரவின்றி வாழ்வதற்கும், இன்பங்களைச் ரசித்துச் சுவைக்கவும், வேண்டப்பட்டு வந்த வேண்டுதல் படிப்படியாக மாறி நாம் எப்படி கடவுளுக்காகச் செய்யப்படும் வேள்வியிலும், அதற்கு நம்மை அர்ப்பணிப்பதிலும் மனதைச் செலுத்தவேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகிறது வேள்வியாலும், இன்ன பிற வழிபாட்டு முறைகளாலும் மட்டுமே இறைவனை அடைய முடியுமென்று 'பூர்வ மீமாம்சை' நூல் தெரிவிக்கிறது. வேள்வி செய்ய வேண்டிய பொருட்களும், நெருப்பு, தண்ணீர், பயிர்கள், பசுக்கள், உலோகங்கள் போன்றவைகளும், தேக்கி வைக்க போதுமான அளவு பண்டங்களும் வேண்டப்படுகின்றன.
சமஸ்கிருதம்::
:
அஷ்மா ச மே ம்ருத்திகா ச மே கிரயச்ச மே பர்வதச்ச மே ஸிகதாச்ச மே வனஸ்பதயச்ச மே ஹ்ரண்யஞ்ச மேயச்ச மே ஸீசஞ்ச மே த்ரபுச்ச மே ச்யாமஞ்ச மே லோஹஞ்ச மேக்னிச்ச ம ஆபச்ச மே வீருதச்ச ம ஓஷதயச்ச மே க்ருஷ்ட பச்யஞ்ச மே க்ருஷ்டபச்யஞ்ச மே க்ராம்யாச்ச மே பசவ ஆரண்யாச்ச யஜ்ஞேன கல்பந்தாம் விதஞ்ச மே வித்திச்ச மே பூதஞ்ச மே பூதிச்ச மே வஸூ ச மே வஸதிச்ச மே கர்ம ச மே சக்திச்ச மேர்தச்சமஏமச்ச ம இதிச்ச ம கதிச்ச மே.
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!
கல்லும், மண்ணும், எங்கே தண்ணீர் உற்பத்தியாகிறதோ அந்த குன்றுகளும், மலைகளும், மணல்களும், மலர் மலராமலே கனியைச் சொரியும் சிறந்த மரவகைகளும், பொன்னும், எஃகும், ஈயமும், துத்தநாகமும், இரும்பும், தாமிரமும், இதர உலோகங்களும், நெருப்பும் தண்ணீரும், கொடிகளும், மூலிகைகளும், உழுது பயிரிட்டு விளைந்தவைகளும், உழுது பயிரிடாமல் விளைந்தவைகளும், சிற்றூரில் உள்ளவைகளும், வேள்வியில் அரப்பணிக்கப்பெறும் விலங்குகளும், அதனால் ஏற்படும் நன்மைகளும் எனக்கு கிடைக்கட்டும், மற்றும், மூததையர்களின் சொத்தும் என்னுடைய உழைப்பால் கிடைக்கப்போகும் சொத்துக்களும், மனநிறைவான குழந்தைச் செல்வங்களும், சொந்தமாக தொழிலில் ஈட்டும் சொத்தும், நாலுகால் விலங்குகளும், பசுக்களும், அசையாச் சொத்துக்களும், வசிக்க வசதியான சொத்துக்களும், 'நெருப்பினால் வேள்வி' செய்யக்கூடிய கொடுப்பிணையும், இது போன்று புனிதமான இறை செயல்களை திறம்படச் செய்யும் தகுதியும், அதற்கு போதிய படிப்பும், அதனால் அடையக்கூடிய இன்பமும், மகிழ்ச்சியும், அதை அடையும் குறிக்கோளும், எண்ணங்களும், முடிவான இலக்கை அடையக்கூடிய 'ஒரே நோக்கும்' ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்கு கிடைக்கட்டும்
ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி ||
#####
ஓம்நமசிவய!
அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!
#*#*#*#*#
4. "உணவுப்பொருட்களும் நீர்பண்டங்களும்"!
38 உணவுப்பொருட்கள் சிவனிடம் வேண்டப்படுகின்றன
வாழ்க்கை வாழ்வதற்கு மனிதனுக்கு முதல் தேவை உணவும், தண்ணீரும். இவை இல்லாவிடில் வாழ்வது கடினம், அதனாலேயே, இவற்றைத் தேடி எங்கெல்லாமோ அலைகிறான். மனிதனின் உழைப்பும், ஆண்டவனின் கருணையாலும் மட்டுமே இவற்றைப்பெற முடியும். நாம் உழுது செப்பனிட்டு, நிலத்தை சீராக்கி, விதை தூவி வைத்திருக்கும் போது, ஆண்டவன், மழை வடிவத்தில், கருணை புரிந்து உணவை வளரச்செய்கிறான். பாலும், நெய்யும் பருப்பும், அரிசியும், தேனும், எல்லோருடனும் சேர்ந்து உணவருந்துதலும், பயிர்களும், கோதுமைகளும், பருப்பு வகைகளும் மற்றும் அனைத்து வகையான உணவுப்பொருட்களும் இப்பகுதியில் கோரப்படுகின்றன. அதாவது முழுநிலையும், அதற்கு மேலான 'பரம் பொருளை' அடைந்து பேரின்பம் என்ற பேறைப் பெற முயற்சிக்கும் வேண்டுதல்கள் சீர்மிக்க சிறப்பு.
சமஸ்கிருதம்::
ஊர்க்சமே ஸுந்ருதா ச மே பயச்ச மே ரஸச்ச மே க்ருதஞ்ச மே மது ச மே ஸக்திச்ச மே ஸபீதிச்ச மே க்ருஷிச்சமே வ்ருஷ்டிச்சமே ஜைத்ரஞ்ச ம ஔத்பித்யஞ்ச மே ரயிச்சமே ரயச்சமே புஷ்டஞ்சமே புஷ்டிச்சமே விபு ச மே ப்ரபு ச மே பஹு ச மே பூயச்ச மே பூர்ணஞ்ச மே பூர்ணதரஞ்ச மேக்ஷிதிச்ச ம கூயவாச்ச மேன்ன்ஞ்ச மேக்ஷுச்ச மே வ்ரீயஹயச்சமே யவாச்ச மே மாஷாச்ச மே திலாச்ச மே ம்த்காச்ச மே கல்வாச்ச மே கோதூமாச்சமே மசுராச்ச மே ப்ரியங்கவச்ச மேணவச்ச மே ச்யாமாகாச்ச மே நீவாராச்சமே.
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!
சாதமும், இதமான வார்த்தைகளும், பாலும், அதன் சுவையும், நெய்யும், தேனும், உற்றார்களுடன் கலந்து உணவருந்துதலும், கூடி அருந்துதலும், பயிர்த் தொழிலும், சரியான நேரத்தில் பொழியும் மழையும், செழிப்பான நிலமும், மரம் செடி கொடிகளின் உற்பத்தியும், வேகமாக விளையும் மூலிகைச் செடிகளும், பொன்னும், விலைமதிக்க முடியாத கற்களும், மணிகளும் செல்வத்தின் செழிப்பும், குறையில்லா குழந்தைகளும், நிறைவான உறவினர்பால் ஏற்படும் பாதுகாப்பும், நன்றாக பராமரிக்கப்பட்ட திடகாத்திரமான உடம்பும், சிறந்த பயிர்களும், அதன்பால் விளையும் உணவுப் பண்டங்களும், அதனால் ஏற்படும் மேன்மையும் அதன் பலவகை இன்பம் தரும் சுவைகளும், மேலும், மேலும் வளர்ச்சியும், முழுநிலையும், முழுநிலைக்கு மேலாக உள்ள உன்னத நிலையும், உணவும், உணவினால் பசி நீங்குதலும், சிறந்த நெல் வகைகளும், வால் கோதுமை வகைகளும், உளுந்து வகைகளும், எள் வகைகளும், பாசிப்பயறுகளும், தட்டைப்பயறுகளும், கோதுமைகளும், நரிப்பயருகளும், தினனகளும், ஊசிச்சம்பா நெற்களும், சாமைகளும், செந்நெற்களும் ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்கு கிடைக்கட்டும்.
ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி !!
#####
More...
ஓம்நமசிவய!
வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.
#*#*#*#*#
3. ஆசை, இச்சை, நிறைவேற வேண்டும்!
36 வகையான 'இன்பங்கள்' சிவனிடம் வேண்டப்படுகின்றன.
உலகவியலில் மனிதன் குறுகிய வாழ்வில், அவனுக்கு பலவகையான இன்பங்கள் தேவைப்படுகின்றது. இந்தப் பகுதியில், வார்த்தைகள் மிகவும் நுணுக்கமாக இரண்டு இரண்டாக கோர்க்கப்பட்டு போது மனிதனின் மனக்கண்ணாடியும், என்ன ஒட்டங்களும் தெளிவாகப்பட்டுள்ளன. முதலில் இன்பத்தை விரும்பிக் கேட்கும் மனித மனம், பின் நல்ல சந்ததியினரைக் கோரி, சுவையான வாழ்வைக் கொடுக்கச் சொல்லி, இவற்றையெல்லாம் அடையத் தேவையான செல்வச் செழிப்பை வேண்டி, ஆளும் திறனையும் கூட்டி, கடைசியாக மேலுலக இன்பத்தை நாடுவதாக கோரப்படுவது சிறப்பான சிகரமாக அமைந்துள்ளது. இவ்வுலக இன்பங்களையும் மேலுலக இன்பங்களையும் ஒருங்கே வேண்டும் மனிதனின் ஆசை இயல்பாக சித்தரிக்கப்பட்ட இப்பகுதி ஒரு 'வைர மகுடம்' எனலாம்.
சமஸ்கிருதம்::
சஞ்ச மே மயச்ச மே ப்ரியஞ்ச மேனுகாமச்ச மே காமச்ச மே காமச்ச மே ஸொமனஸச்ச மே பத்ரஞ்ச மே ஸ்ரேயச்ச மே வஸ்யச்ச மே யசச்ச மே பகச்ச மே த்ரவிணஞ்ச மே யந்தா ச மே தர்த்தா ச மே க்ஷேமச்ச ம த்ருதிச்ச மே விச்வஞ்ச மே மஹச்ச மே ஸம்விச்சமே ஜ்ஞாத்ரஞச மே ஸூச்ச ம ப்ரசஸூச்ச மே ஸீரஞ்ச மே லயச்சம ருதஞ்ச மேம்ருதஞ்ச மேயக்ஷ்மஞ்ச மேநாமயச்ச மே ஜீவாதுச்ச மே தீர்க்காயுத்வஞ்ச மேநமித்ரஞ்ச மேபயஞ்சமே ஸுகஞ்ச மே சயனாஞ்ச மே ஸூஷா ச மே ஸுதினஞ்சமே ||
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!
இவ்வுலக இன்பமும் மேலுலக இன்பமும் அன்பும் அதனால் ஏற்படும் ஆசையும் அவ்வாசையின் அனுபவமும் மனதிற்கினிய உற்றாரும், சீரான இவ்வுலக வாழ்வும், மங்களமும் உயர் நலமும் நல்ல இருப்பிடமும், புகழும், பொன்னும் செல்வமும், தவ வலிமையும், அதனால் கிடைக்கப்பெற்ற பலனை பாதுகாக்கும் திறனும், வழிகாட்டும் ஆசிரியரும், தந்தை போன்று தாங்குபவனும் -மேன்மை பொறுந்திய பெரியவர்களும், நல்லொழுக்கத்தை போதிப்பவனும் -என்னை சரியான பாதையில் வழிநடத்திச் செல்பவனும், மனஉறுதியும், எல்லோருடைய உதவியும், வெகுமானமும், வேள்வியும் வேள்வியின் பாதையில் செல்ல வழிகாட்டும் நூலும், அதன் அறிவும், நான் கற்றரிந்தவற்றை கற்றுக்கொடுக்கும் திறனும், மக்களை ஏவும் திறமையும், பணியாட்களையும் மற்றவர்களையும் நடத்தும் திறமையும், மேழிச் செல்வமும், பயிர்த்தொழிலில் ஏற்படும் இடையூறுகளின் ஒழிவும், வேள்வி முதலிய நற்கருமமும், அதன் பலனும், நீடித்த குடல் முதலிய நோயின்மையும் குறுகிய காய்ச்சல் முதலிய நோயின்மையும், நோயற்ற வாழ்வுக்குரிய மருந்தும், என்வாழ்வின் நாட்களை கூட்டும் மூலிகை மருந்துவகைகளும், நீண்ட ஆயுளுடன் கூடிய எதிர்பாராத மரணமின்மையும், நண்பர்களில்லாதமையும், அச்சமின்மையும், நன்னடத்தையும், நல்ல தூக்கமும், கடவுளின் திருவுள்ளத்துடன் கூடிய விடியற்காலையும், வேள்வி, மறைஒதுதல், வேள்வி பயிலுதல் முதலிய நல்ல செயல்களினால் ஒளிரும் பகற்பொழுதும், ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்கு கிடைககட்டும்.
ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி !!
#####
அழகான உடம்பும், கவர்ந்திழுக்கும் ஆளுமையும்!
Written by குருஸ்ரீ பகோராஓம்நமசிவய!
பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.
#*#*#*#*#
2. அழகான உடம்பும், கவர்ந்திழுக்கும் ஆளுமையும!
உடல் உறுப்புக்களின் நேர்த்தியும்.38 வகையான பொருட்களும் வேண்டப்படுகின்றன
அழகான உடம்புறுப்புகளை வேண்டும் முதல் பகுதியிலிருந்து விலகி, வாழ்க்கையை மேம்படுத்தவும், செல்வத்தைப் பெறுக்கவும், விரும்பியதை அடையவும், இலக்கை நிர்ணயத்து அதை அடையவும் முற்படும் மனித வாழ்வு பற்றி இப்பகுதியில் சிந்திக்கப்படுகிறது. ஒழுங்கான உறுப்புகள் தனது உடம்பில் ஒருமனிதனுக்கு கிடைக்குமாயின், அடுத்தது அதிகாரத்தை நோக்கியும், ஆளும் திறனை நோக்கியுமே அவன் மனம் செல்லும். பரந்து விரிந்த நாட்டையும், நிலத்தையும் அடக்கி ஆளும் வேட்கையும் அவன் மனதில் கனல்போல் எறிவதற்கு அவனுக்கு சரியாக அமைந்த உடல் உறுப்புகளே காரணம். கோபப்படும் இடத்தில் கோபம் வரவேண்டுமென்று வேண்டப்படுவது இப்பகுதியின் சிறப்பு. ஹிந்துமதம் ஒருபோதும் முழுகொல்லாமையை கடைபிடிக்க அறிவுறுத்தியதில்லை. "சரியான நேரத்தில் சரியான காரணத்திற்கு கோபம் கொள்ளாதவன் கோழை" என்றார் தத்துவஞானி அரிஸ்டாட்டில். வால்மீகி ஸ்ரீ ராமரை அவர் கொண்ட "யுக்த க்ரோதத்திற்காக" பாராட்டுகிறார். கடலைத்தாண்ட வேண்டி, "கடல்கடவுளுக்கு" தன் உரிய வணக்கத்தையும், அர்ப்பணிப்புகளைச் செய்தும், சமுத்திரராசன் வராது போகவே, கோபம் கொண்டு கடலை அழித்துவிட துணிந்த இச்செயல் பாராட்டப்படுகின்றது. உலகவியலை விட்டு விலகிப்போகச் சொல்வதாக ஹிந்துமதம் ஒருபோதும் சொன்னதில்லை. "சம்ச மே, மயச்ச மே" என்று இவ்வுலகிலும், மேலுலகிலும் எது நன்மை பயக்குமோ அவைகள் உயிர்க்கு கிடைக்கட்டும் என்று வேண்டப்படுகிறது. உடலுக்கு நன்மை பயக்கும் விளயாட்டுக்களும், உன்னிப்பாக கவனத்தை செலுத்துதலும், கடந்து போன இனிமையான வாழ்வும், நடக்கவிருக்கும் ரம்மியமயமான நாட்களும், வேண்டப்படுவதை பார்க்கும்போது, சாதாரண விருப்பத்திலிருந்து படிப்படியாக உயர்ந்து சிந்தனையின் வளர்ச்சியை அடைந்துள்ளது புரியும்.
சம.ஸ்கிருதம்::
ஜ்யைஷ்ட்யஞ்ச ம ஆதிபத்யஞ்ச மே மன்யுச்சமே பாமச்ச மேமச்ச மேம்பச்ச மே ஜேமா ச மே மஹிமா ச மே வரிமாசமே ப்ரதிமா ச மே வர்ஷ்மா ச மே த்ராகுயா சமே வ்ருத்தஞ்ச மே வ்ருத்திச் சமே சத்யஞ்ச மே ஸ்ரத்தா ச ம ஜகச்ச மே தனஞ்ச மே த்விஷிச்ச மே க்ரீடா ச மே மோதச்ச மே ஜாதஞ்ச மே ஜநிஷ்யமாண்ஞ்ச மே சூக்தஞ்சமே ஸுக்ருதஞ்ச மே வித்தஞ்ச மே வேத்யஞ்ச மே பூதஞ்ச ம ருத்தஞ்ச ம ருத்திச்ச மே க்லுப்தஞ்ச மே க்லுப்திச்ச மே மதிச்ச மே சுமதிச்ச மே ||
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!
மனிதர்களில் மேன்மையாகப் போற்றப்படுவதும், தலைமையை ஒளிரச் செய்பவராயும், ஏற்கத்தகுந்த உட்பகைகளில் கோபமும், அளவிர்க்குட்பட்ட வெளிப்பகைகளின் கோபமும், ஆழங்காணமுடியாத மனமும், அதைச் சார்ந்த எண்ணமும், இனிமையான குளிர்ந்த தண்ணீரும், எதிரிகளை வெல்லும் திறமையும், தளராத ஆளுமையும் வெற்றியினால் கிட்டும் செல்வமும், பெருமையும், உள்ள பொருட்களிலேயே மிகவும் உயர்ந்த பொருளாக எல்லோராலும் மதிக்கப்பட்டதும், வீடு, நிலம் முதலிய செல்வமும், மேலும் கணக்கிடமுடியாத செல்வங்களும், உயர்ந்த படிப்பினால் ஏற்படும் எண்ணங்களும், ஆளுமையும், உண்மையும், "மறை" போன்ற உயர்ந்த "எழுதாக்கிளவி" நூலில் முழு ஈடுபாட்டுடன் கூடிய நாளைய வாழ்வும், அசையும் சொத்தும், அசையாச் சொத்தும், பலவித தங்கம் போன்ற சொத்தும், வெள்ளியும், மயக்கும் ஆளுமையும், சுண்டியிழுக்கும் ஆணத்தமும், உடம்பின் பெருமையும், எண்ணச் சிதறல்களை உண்டாக்கும் விளையாட்டுக்களும், அதனால் ஏற்படும் கேளிக்கையும், மக்கட்செல்வமும், பேரப்பிள்ளைகளினால் ஏற்படும் தலைமுறை பெருக்கமும், அழியாத தலைமுறையும், செல்வப் பெருக்கும், நன்னம்பிக்கையும், மரம், செடி போன்ற பொருட்களும், பணமும், உண்டானதும், உண்டாகப் போவதும், பலன்களும், சேமித்த பொருளும், இனி கிடைக்கக்கூடிய பொருளும், சேமித்த நிலம் முதலிய சொத்தும் எளிதில் சென்றடையக்கூடிய ஊரும், நல்ல வழியும், இறந்த பின் நான் கொண்டுபோகும் நற்பயனும், இனிமையான பொழுது போக்கிறக்கு தேவையான சொகுசு வீடுகளும், என் வாழ்வை துன்பமின்றி நடத்த தேவையான இயற்கை வளங்களும், சேமிப்பும், அவற்றைச் சரியாக பயன்படுத்தும் வழிமுறைகளும், கைகூடவிருக்கும் நற்பயனும், ஒழுங்காகத் திரட்டிய பொருளும், ஒரு செயலை திறமையாக செய்யக்கூடிய பண்பும், ஊகித்தறியும் திறமையும், நிர்வாகம் முதலியவற்றைப் பராமரிக்கக்கூடிய மனஉறுதியும், இக்கட்டான நிலையை கையாளும் திறனும், ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்கு கிடைக்கட்டும்.
ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி
#####
ஓம்நமசிவய!
ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.
#*#*#*#*#
1. உடம்பும், உடம்பு சார்ந்தவைகளும்!.
36 வகையான பொருட்கள் சிவனிடம் வேண்டப்படுகின்றன
சமகத்தின் ஒவ்வொரு பிரிவும் ஒரு தனித்தன்மையுடன் எல்லாப் பிரிவுகளும் உச்சக்கட்டத்தில் ஒரே வழிபாட்டு நோக்கின் இலக்கை அடைய வழிகோலுகின்றது. "உடம்புதான் நேர்மை என்ற வேரின் தொடக்கம்" என்று ஒரு வடமொழி வழிபாட்டு நூல் குறிப்பிடுகிறது. இப்பகுதி முழுவதும் 'உடம்பு' சார்பாகவே சொல்லப்பட்டுள்ளது உணவுப்பதார்த்தங்களும், அர்ப்பணிப்பதினால் கிடைக்கும் உணவுப்பொருள்களும், உடம்பும் அதன் உறுப்புகளும், அவற்றின் அமைப்புகளும் சொல்லப்பட்டுள்ளன.
சமஸ்கிருதம்::
வாஜச்ச மே ப்ரஸவச்சமே ப்ரய்திச்ச மே ப்ரஸிதிச்ச மே தீதிச்ச மே க்ரதுச்சமே ஸ்வரச்ச மே ச்லொகச்ச மே ச்ரவச்ச மே ஜ்யோதிச்ச மே ஸுவச்ச மே ப்ராணச்ச மேSபானச்சமே வ்யானச்சமேசுச்சமே சித்தஞ்சம ஆதீதஞ்ச மே வாக்சமே மனச்சமே சக்ஷுச்ச மே ஸ்ரோத்ரஞ்சமே தக்ஷச்ச மே பலஞ்ச ம ஓஜச்ச மே சஹச்ச ம் ஆயுச்ச மே ஜராச ம ஆத்மா ச மே தனூச்சமே சர்ம ச மே வர்ம ச மேங்கானி ச மேஸ்தானி ச மே பரூக்ம்ஷி ஷி ச மே சரீராணி ச மே.
ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி ! ஓம் ஷாந்தி !!
உணவுப் பொருள்களும், உணவளிக்கும் மனதும், தூய்மையான உணவும், உணவு உட்கொள்ளும் கொடுப்பிணையும், உணவளிக்கும் வேட்கையும், உணவைச் செறிக்கவைக்கும் தன்மையும், உணவை சம்பாதிக்கும் வேள்வியும், வேள்வி செய்யும் போது பாடப்படும் பாட்டை சரியாக உச்சரிக்கும திறனும், குயில் போல இனிமையான குரலும், புகழும், சொற்களை கையாளும் திறமையும், கேள்வித்திறமையும், நன்றாக கேட்டுத் தெரிந்து கொள்ளும் திறனும், உள்ளொளியும், சொர்க்கமும், உடம்பில் சீரான மூச்சுக்காற்றும், மூச்சுக்காற்றின்மையும், மேலும், அறிவினால் ஏற்படும் ஞானமும், அந்த ஞானத்தினால் துரிதமாக அறியப்படும் செய்திகளும், சுவையான பேச்சும், திடகாத்திரமான மூளையும், கூர்மையான பார்வையும், துல்லியமான காது கேட்கும் திறனும், உயிரும், எண்ணங்களும், எண்ணத்தினால் அறியப்பட்ட பொருளும், அறிவொளியினால் அறியப்படும் உந்துதலும், செயல்பாட்டின் திறனும், மூச்சுக்காற்றின் திறனும், எதிரிகளை வெல்லும் திறமையும், நீண்ட ஆயுளும், மதிக்கப்படும் முதுமையும், தேவையான அளவு திமிரும், உள்ளொளியும், செதுக்கினாற்போன்ற உடல்வாகும், நலமும் உடலைக்காக்கும் கவசம் முதலியனவும், திடமான உறுப்புக்களும் எலும்புகளும் கணுக்களும் - திடமான மூட்டுகளும், மறுபிறப்பால் உயர்ந்த தலைமுறையில் பிறவிக் கொடுப்பிணையும் - ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்கு கிடைக்கட்டும்
ஓம் அமைதி || ஓம் அமைதி || ஓம் அமைதி
#####
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.