gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

வியாழக்கிழமை, 16 July 2020 12:22

சத்திய ஞானானந்தம்!

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#####

சத்திய ஞானானந்தம்!

2825. பிரகிருதி மயை தூவாமாயை தூய மாயை ஆன யாவும் சூனியத்தை அடைய ஆன்மா தத்துவங்களின்றும் நீங்கி சமஷ்டி நனவு கனவு உறக்கம் என்னும் நிலைகளையும் கடந்து துரியத்தை அடையவே, இந்த துரிய நிலையும் சூன்யமாக அந்நிலை இன்ன இயல்புடையது என்று விளக்க ஒண்ணாத இன்பத்தில் தற்பரன் என்ற சிவன் ஆன்மாவில் நிலை பெற்ற போது ஆன்மா சிவத்தன்மை எய்தும். ஆனந்தமாய்ப் பொலியும்.

2826. தொம்பதம் தற்பதம் சொன்ன சிவதுரியம் பரதுரியம் போல் நம்பத்தகுந்த சிவதுரியம் பரதுரியம் கடந்து விளங்கும் சிவதுரியத்தில் ஆனந்தம் ஏற்படும். ஆன்மா பிரகிருதியை நோக்கி நினைக்காத அந்த நிலையில் செம்பொருளாக இருந்து சீவர்களைப் பக்குவம் நோக்கி ஆட்கொள்பவன் சிறப்புமிக்க சிவனே ஆகும்.

2827. பொருந்தும் சத்திய ஞான ஆனந்தத்தை மாணிக்க ஒளியின் பிரகாசத்துடன் ஒப்பாய் உரைத்தல் பொருந்தாது. அந்தச் சத்திய ஞானானந்தம் கண்ணுக்கு இனிய நீல மலரும் தூய்மையும் நாதமும் நிறமும் மணமும் பிரகாசமுமாகக் கூறப் பெற்ற ஆறும் போன்று இனிமை உடையதாகும்.

2828. சத்தி சிவம் மேலான ஞானம் ஆகியவற்றைச் சொல்லுமிடத்து எல்லா உயிர்களின் சமஷ்டி இன்ப நிலையே சிவத்தின் உயர்ந்த ஆனந்த நிலை. கூறப்பெற்ற சிறந்த வடிவத்தையுடைய சத்தியை விட்டு அகலாமல் நிற்கும் சிவம் நீல மலரை விட்டு அகலாமல் நிற்கும் அதன் பண்புகளைப் போன்றதாகும்.

2829. அழகான நீலமலரில் நிறமும் மணமும் அழகும் கலந்திருப்பதுபோல் சீவன் சிவனோடு வேறுபாடு இன்றி கலந்து நிற்க சிவம் என்ற தத்துப் பெருவாக்கியப் பொருளானவன் சத்திய ஞானாந்தம் விளங்க நின்றருளினான்,

2830. செல்லும் அளவு உள்ளம் நெகிழும்படியாகச் சிவபெருமானை வணங்கி பாடல்களீனால் துதிப்பின் அவனை உள்ளத்தில் அமைக்க முடியும்.. என்னையும் அப்படி எளிய தலைவனான நந்தி அவனது அருளுடன் சேர்ப்பித்து மறவாமல் நினைக்கின்ற அளவு எனக்கு அவனிடம் பற்று உண்டாகும்படி செய்தான்.

2831. பாலுடன் தேனும் பழச் சாறும் தூய அமுதத்தின் சுவையும் போல் விளங்கும் துரிய நிலையைச் சீவன் கடந்தபோது சிவன் சீவனுள் புகுந்து மயிர்க்கால்களீல் எல்லாம் இன்பம் பெருகும்படி நிறைந்திருப்பான்.

2832. அழியாத இயல்புடைய சீவனையும் அது பொருந்தியிருக்கும் அண்ட கோசத்தையும் கடந்து நாத தத்துவத்தைக் கடந்து தனித்து நிறபவன் சிவன் ஆவான். பவளம் போன்ற உதடுகளும் முத்தைப் போன்ற பற்களூம் தன்மையுடைய பனி போன்ற மொழியும் உடைய பெண்டிரின் கவர்ச்சியில் தளராத சோதியான அப்பெருமான் பலரிடத்தும் திரிந்த செல்வனாக உள்ளான்.

2833. முப்பத்தாறு தத்துவங்களையும் விட்டு மலத்தால் ஏற்படும் வாதனை நீங்கித் தூய துரியா நிலைக் குற்றங்களைக் கடந்து பெத்தநிலை மாறிச் சிவத்தை நோக்குவதாகி உண்மையான ஞானானந்தத்தைப் பொருந்தியிருப்பவன் ஞானி.

2834. சீவன் சிவத்தை அடைத்து சிவமாகியபோது பிறவியைத் தரும் ஆணவம் முதலிய மூன்று மலங்களும் நீங்க குற்றம் பொருந்திய பிரகிருதி மாயை அசுத்த மாயை சுத்த மயை ஆகிய மூன்றையும் கெடுத்து அவற்றில் பற்றும் நீங்கும்படி நீங்கி நின்றால் தவத்தால் உண்டாகும் உண்மை ஞானானந்தத்தில் சீவனும் சிவனும் பொருந்துவதில் துரியாதீதம் அடைந்து சிவ வடிவம் அமையும்.

#####

வியாழக்கிழமை, 16 July 2020 12:20

ஞானோதயம்!

ஓம்நமசிவய!

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

#####

ஞானோதயம்!

2813. மனமானது மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐந்து பொறிகளுடன் பொருந்தி உலகப் பொருளைத் துய்த்தல் சாக்கிரம். இனிப் பொறிகள் நீங்கிய போது அந்தப் பொருளைக் கனவில் அறிதலில் நனவு போல் ஆனந்தம் ஏற்படும்.. இப்படி நனவு கனவு நிலைகளில் உண்டாகும் ஆனந்தத்தை வினவில் இவற்றுக்கு மேல் சுட்டறிவு நீங்கிய நிலையில் ஓர் ஆனந்தம் உண்டு. இப்படியாய் இனமாக உள்ள நந்தியான இறைவன் சீவர்களுக்கு அருளிய ஆனந்தம் விஷயானந்தம் என்றும் சிவானந்தம் என்றும் இரண்டாம்.

2814. எம் தலைவன் யானையின் தோலை உரித்து அதைப் போர்த்துக் கொண்டவன். நான்முகனின் கபாலத்தை கையில் ஏந்தியவன். விளங்கும் பிறைத்திங்களை அணிந்தவன். இத்தகையவனை அரிய செயலைச் செய்தவன் என்றும் பெருங்கருனையைக் காட்டியவன் என்றும் அவனிடம் அடிமை பூண்டதல்லாமல் அவன் கருமை நிறம் கொண்டவன் என்றோ செந்நிறம் உடையவன் என்றோ நான் ஆராய்ந்து பார்த்ததில்லை.

2815. செருக்கில் மிக்க வானவர் திருபாற்கடலில் வெளிப்பட்ட அமுதத்தை உண்ணும்படி அருளி நஞ்சை உண்ட மேலான சிவனைத் தக்கவர் உரை செய்த தவநெறியில் போய் அடைந்தான். பொன்னான ஞானத்தை அவன் அளித்திடுவான். எனவே சிவத்தின் நாத வழியைத் துணையாகக் கொண்டு நீங்கள் சாதனையைச் செய்க.

2816. ஆன்மா ஒளிமயமானது எனக் குருவால் உணர்த்தப்பெற்று அந்த வழியில் நின்று அறிவைப் பெருக்கி ஆன்ம அறிவுப் பேரொளியில் சிவ ஞானத்தைத் தூண்டிச் சிவத்தின் அகண்ட ஒளியில் சிவஒளி அடங்கக் காணும் ஆற்றல் உடையவர்க்கு ஒளியைத் தந்த சிவபெருமானின் திருவடியைப் பொருந்தி வாழ முடியும்.

2817. அறிவு மயமான ஆன்மா தத்துவங்களோடு கூடியபோது அத்தத்துவங்கள் அறியப்படு பொருளாக இருந்தது. எங்குத் தத்துவம் அறியப்படுவது இல்லையோ அங்கு அந்த தத்துவத்தை அறியும் ஆன்மாவின் நிலையும் இல்லை. தத்துவ ஞானத்தால் உடல் முதலியவை தான் அல்ல, அறிபவன் என்பதைக் காணில் ஆன்மா அப்போது சிவத்தை நாடிக் கூடிச் சிவமாகிய தன்மையைப் பெற்றுவிடும்.

2818. வான் மயமான ஒன்று எல்லாவற்றையும் தாங்கிய வண்ணம் இருக்கின்றது. என்ற உண்மை ஞானம் வந்த போது சேற்று நிலமான சுவாதிட்டான மலரினின்றும் உடலில் பரவிய சத்தியே ஒளி மயமான அமுதம் ஆகும். அது பசும் பொன்னின் ஒளி கொண்டு தலையில் பரவிப் பொருந்தி ஒளிரும் செந்நிறம் உடைய சுவாதிட்டான மலரில் பொருந்திய சிவனே இப்படி விளங்குவான்.

2819. முத்து வயிரம் கடலில் தோன்றிய பவளக் கொத்து பசும் பொன்னின் தூய ஒளி மாணிக்க ஒளி ஆகிய இவை கலந்து விளங்குபவன். தலையில் மேல் உள்ள அண்டத்தில் சோதியாகவும் உடலில் சோதியாகவும் விளங்குபவன். இத்தகைய ஒருவனை எந்த தன்மையை எண்ணி உங்களுக்கு வேறானவன் என்று கூறுவீர்.

2820. நான் வேறு சிவன் வேறு என்று நாடினேன். அவ்வாறு நாடியபோது நான் வேறு தான் வேறு இல்லை என்ற இருபொருள் இல்லை என்பதை என்னை விழுங்கித் தானே ஆய் நின்ற ஞான மூர்த்தியே அருளினான். அப்போது நான் ஒரு பொருள் என்ற எண்ணமும் நீங்கி நான் இருந்தேன்.

2821. இறைவனை அடைவதற்குரிய நல்ல வழி சிவஞானத்தை அடைந்து நாதம் கைவரப் பெற்று நாதாந்தம் என்பதே ஆகும். ஞானத்தின் நல்ல நெறியானது ஆன்மாவானது அறிவுரு என்று அறிவதே ஆகும். ஞானத்தில் நல்ல யோகம் என்பது சீவபோதத்தை விட்டுச் சிவபோதத்தில் அடங்கியிருப்பதாகும். ஞானத்தினால் நல்ல பிரணவப் பொருளை உணர்ந்து நாதாந்தம் அடைவதே ஆகும்.

2822. பிறவியினின்று விடுபட விரும்புகிறவர்க்கு உயிர் போன்று இன்றியமையாமை உடையது சிவஞானம். அவர்கட்கு உயிர் போன்றது சிவமே ஆகும். அவர்களுக்கு ஒடுங்கும் இடம் பிரணவம் ஆகும் அவர்களது அறிவுக்கு அறிவாய் விளங்குவது சிவம் ஆகும்.

2823. அருள்வழி போய் நின்று காணும் பேறு பெற்றவர்க்கு சிவன் கண்மணி போல் உடனாய் இருந்து தன்னைக் காணும்படி காட்டுவான். அத்தகையவர்க்கு அவன் திருப்பாற்கடலில் தோன்றிய அமுதத்தை போன்று வாழ்நாளை அளிப்பவன் தன்னை வழிபடுபவரை நந்தியம் பெருமான் தவறாமல் காப்பான். அன்பு மிக்கவர்க்கே அவன் தக்க துணையாய் நின்று உதவுவான்.

2824. ஓம் என்ற பிரணவத்தை விட்டு நீங்காத நாதம்போல் வானுலகத் தேவர் விரும்புவது செம்பொருளாகும், மனம் வாக்குக்கு எட்டாதுள்ள செம்பொருளான அச்சிவத்தின் திருவடிகளை வணங்கி நிற்கின்ற தேவர்கள் உம் உள்ளத்தில் விளங்குவர்.

#####

வியாழக்கிழமை, 16 July 2020 12:19

ஆகாயப்பேறு!

ஓம்நமசிவய!

ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!

#####

ஆகாயப்பேறு!

2804. வான் மண்டல்த்தில் ஓங்காரமாய் நின்ற ஈசானான ஒருவனும் அங்கு அக்கினி போல் ஒளிரும் ஒருவனும் அங்கு நீதி மயமான ஒருவனும் ஆகியவனைக் கொண்டு விளங்கும் மன மண்டலம் சூழ்ந்த உடம்பு வானம் ஆகும்.

2805. பெரு நில மயமான உடலாகவும் உடலைச் சூழ்ந்த அண்ட கோசமாகவும் அதற்கு அப்பால் உள்ள ஒளியாகவும் நிற்கும் இயல்பு கொண்டவன் சிவன். அவனே வடிவ நிலையில் பெரிய நிலமாய் இருந்து தாங்கும் அருளை உடையவன். அவனே அருள் நிலையில் விளங்கும் ஆதிப்பிரானான சிவம்.

2806. மானிடர் உடம்பைச் சூழ்ந்துள்ள அண்ட ஒளியானது உலகில் வான மண்டலத்தில் விளங்கும் ஒளியுடன் உடலில் உள்ள உட்கருவிகளின் அறிவால் பிதற்றும் வீணான பெருமையை விழுங்கி உடல் கடந்துள்ள பரமகாய வெளியில் திகழும் ஒளியுனுள்ளே மறைந்தது அதனால் உடலின் அமைப்புகள் காணாமல் போகும். உடலும் ஒளியாகத் திகழும்.

2807. சிற்றின்பத்துக்குப் பயனாகும் மங்கையிரிடம் அனுபவிக்கும் இன்பத்தின் உள்ளே காமாக்கினி விளங்கிய நிலையில் ஆதியான பரஞ்சோதி இன்ப வடிவாய்த் திகழ்ந்தான். அப்பெருமானே சீவனிடம் சிவன் அன்பு கொண்டபோது நான்முகனும் திருமாலும் அறிய முடியாதபடி விளங்கி மேன்மையான நெறியாகச் சீவ ஒளியில் சேர்ந்து நின்றான்.

2808. தலையின் மேல் விளங்கும் சீவ ஒளிக்கு அறிவு தரும் அகண்ட ஒளியாகச் சிவ ஒளியும் பிரியாத இடத்தில் சந்திரன் சூரியன் அக்கினியான மூன்று ஒளிகளும் விளங்காமல் அடங்கி நிற்கும் அங்ஙனம் சிவனது திருவடியைப் பொருத்தி இருக்கும் பேறு கிட்டினால் சீவன் உடலோடு சேர்ந்து நீண்டகாலம் வாழலாம்.

2809. சிவபெருமான் தேவர் கூட்டத்துக்கு அறிவுப் பெருவெளியாயக் கொழுந்து போல் விளங்குபவன் பெருமலைப் பாமபை மேலாடையாய் அணிந்தவன். அவன் வான் மயமாய் விளங்கி நின்று பின் அறிவுப் பேரொளியாயும் விளங்குபவன்.

2810. உடலில் உயிர்ப்பாக விளங்குகின்ற பிராண நெறியும் உலகம் முழுவதும் அசைவுக்குக் காரணமான சோதி மயமான பிராண சத்தியும் கூடும் போதில் மூலாதாரத்தில் உள்ள சத்தி நாதத்தை எழுப்பி உடல் முழுவதும் பரவி ஒளியாக என் மனத்தில் பொருந்தி நுண்ணுடலைத் தனித்து வெளியாகுமாறு செய்தது.

2811. சிவ நினைவில் உயிர்கள் இருக்கும் போது சிவன் அவற்றைவிட்டு நீங்குவது இல்லை. அகலாமல் பொருந்தி அவற்றில் விளங்குவான். உயிர்கள் உலக நிலையில் உறைப்புண்டு நின்றால் அப்பெரும்பதியான சிவன் விலகி நிற்பான். ஆனால் அகலாமல் விளங்கும் மின்னுகின்ற ஒளியாய் உள்ள பரவெளியை அறிந்து வழிபட்டால் சிவானந்தத்தைப் பெறலாம்.

2812. வெளியே காணப் பெறும் ஐவகை வானவெளிகளும் இருநூற்று இருபத்து நான்கு புவனங்களையும் உல்கங்களையும் தாங்குகின்ற ஒளியாகும். சீவரின் முதல் நிலையான ஆன்மாவின் அறிவே அகமாகிய உள்ளத்துக்கு வானம் ஆகும். வளம் மிகுந்த சுடரும் பேரொளியும் கூடிய சிவம் என்ற பேரறிவு விளங்கும் வானமாகும். சிவ ஒளியில் பொருந்திச் செயல் அற்றிருக்கும் இடமே பூமியில் உள்ள உயிர்களுக்குத் தகுந்த வானப் பேறாகும்.

#####

வியாழக்கிழமை, 16 July 2020 12:13

திருக்கூத்து தரிசனம்!

ஓம்நமசிவய!

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!

#####

திருக்கூத்து தரிசனம்!

(சிவானந்தக் கூத்து!, சுந்தரக் கூத்து!, பொற்பதிக் கூத்து!,பொற்றில்லைக் கூத்து!, அற்புதக் கூத்து!)

2722. சிவம் அகண்டமாய் எங்கும் வியாபித்துள்ளது போல் அதன் சத்தியும் அகண்டமாய் உல்லது. அஃது எங்கும் பரவியுள்ள அறிவாகாயத்தில் நிறைந்து எங்கும் அசைவை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றது. சிவம் எங்கும் அகண்டமாயும் எங்கும் வியாபித்துள்ளமையால் சிவன் யாவற்றிலும் சேர்த்து படைப்பு முதலிய ஐந்தொழில்களைத் தன் சத்தியாகச் செய்கின்றான்.

2723. சிவானந்தத்தை உண்டாக்கும் கூத்தனும் சொல்பதமான பிரணவத் தொனியில் விளங்கும் அழகிய கூத்தனும் தலையின்மேல் வானில் பொன்னொளியில் விளங்கும் கூத்தனும் சொல்ல முடியாத பரவசநிலையை அளிக்கும் கூத்தனும் ஆன அறிவு வடிவான பேரொளிப் பிழம்பான சிவனை யாரால் அறிய இயலும்.

#####

சிவானந்தக் கூத்து!

2724. தனக்கு அழிவில்லாத ஒர் சத்தான ஆனந்த சத்தியின் இடமாய் இன்பமான தேனை வெளிப்படுத்தும் ஆனந்தத்தை விளைக்கும் பெரிய கூத்தைக் கண்டவர்களே சிவபோதம் கடந்து விளங்கும் கூத்தினை இயற்றும் நம்பியான சிவபெருமானுக்கு அவ்விடத்து ஆனந்தமே திருக்கூத்து ஆட இடமாகியது.

2725. வான ஒளி அணுக்களின் நடனம் ஓர் ஆனந்தமாகும். வானில் உள்ள ஒளி ஆனந்தமாகும். வனம் ஒன்றுடன் ஒன்று உரசுவதால் ஏற்படும் ஒளியும் ஆனந்தமாகும். வானப் பொருளாக விளங்கி ஆனந்தத்தை உண்டாக்கும் தோத்திரங்களின் ஞனமும் ஆனந்தம் ஆகும். அங்ஙனமாக ஆனந்தத்திலிருந்து நடிக்கும் சிவபெருமானுக்கே அசைவனவும் அசையாதனவும் உள்ள யாவும் ஆனந்தமாகும்.

2726. அறிவுப் பெரொளியாய் விளங்கும் சிவமும் தத்துவங்களை விட்ட நிலையில் உள்ள ஆன்மாவின் பரமும் ஆருயிருக்கு அன்பு காட்டும் சிவகாமியான இன்பம் பொருந்திய சத்தியான பரமும் என்ற இம்மூன்றும் கருத்தில் உறைகின்ற அந்த ஆனந்த எல்லையே சிவானந்த நடனத்தின் பயன் ஆகும்.

2727. வடிவம் இல்லாத பெருமான் வடிவினை எடுத்துக் கொண்டு உயிர்களின் பொருட்டுச் செய்யும் நடனம் ஐந்து. அத்தகைய நடனத்தைச் செய்து ஐந்தொழிலை நிகழ்த்துவதற்காக அத்தொழிலைத் தன் சத்தியினால் படைப்பு முதலியவற்றைச் செய்து தேன் போன்ற சொல்லையுடைய உமைபாகன் கூத்தைச் செய்தருளுகின்றான்.

2728. ஐம்பூதங்களான அண்டம் வெவ்வேறு வகையானப் பூதங்கள் கலத்தலால் ஆகும் அண்டம் நல்வினை தீவினைக்கேற்ப அனுபவங்கலை அடையும் அண்டம் யோக பலத்துக்கு ஏற்ப யோகிகள் நிலைபெறும் அண்டம் புனர் உற்பவ காலத்துச் சீவர்கள் பிறப்பெடுக்கும் பழைய அண்டம் சிவப்பேறு பெற்றுள்ள மீளாது உறையும் முத்தர்கள் இருக்கும் அண்டம் ஆசையுள்ள உயிர் உடல் விட்ட பின்பு இருக்கும் அண்டம் பூத உடலுடன் சீவர்கள் வாழும் அண்டம் ஆகிய ஒன்பது அண்டங்களும் ஐந்தொழிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் சிவத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஏகாந்தமாகும். இவை தனியாக் இருக்க கூடிய பிரமாண்டத்தில் உள்ளவையாகும்.

2729. வேதங்களின் அறிவு ஆட ஆகமங்களின் அறிவு ஆட கீதங்களின் அறிவு ஆட ஆதர சக்கரங்களினால் வரும் ஏழுவகை அறிவும் ஆட ஐந்து பூத காரிய அணுக்களின் அறிவு ஆட ஞானத்தை அளிக்கும் ஆனந்தக் கூத்தை சிவன் நாத சத்தியைக் கொண்டு ஆடினான்.

2730. ஐந்து பூதங்களிலும் ஐம்பொறிகளிலும் ஐம்புலன்களிலும் ஐந்து வேதங்களிலும் மிக்க எண்களையுடைய ஆகமங்களிலும் ஓதுவதற்குரிய பல காலம் ஊழிகளுடன் பலவகை அண்டங்களீல் உள்ள ஐவகை அறிவுகளிலும் கலந்து சித்தமூர்த்தியான சிவன் அவற்றின் இடையே ஆடிக் கொண்டிருக்கின்றான்;.

2731. ஒளி உடலில் உலவுவோர் வானுலக வாழ்நர், மனிதர், சித்தர், கந்தருவர், நான்முகன், திருமால், உருத்திரன், பன்னிரண்டு ஆதித்தர், பதினொரு உருத்திரர் எட்டு வசுக்கள் மருத்துவர் இருவர், தவத்தவர் ஏழு முனிவர்கள் ஆகியவர் சமயம் இயங்கும் உயிர் இனம் இயங்கா உயிர் இனம் என்னும் யாவும் என் இறைவன் ஆடும் இடங்கள் ஆகும்.

#####

சுந்தரக் கூத்து!

2732. மூலாதாரம் முதல் சகசிரதளம் வரை உள்ள ஏழு அண்டங்களுக்கு அப்பால் சதாசிவத்தின் உச்சியின்மீது விளங்கும் சத்தியின் இடமாய் நீலகண்ட பெருமான் அருளே வடிவாய்க் கொண்டு அவ்விடத்தில் தன்னில் பிரிந்த சத்தியான உமையம்மை காணத் திருக்கூத்தை விரும்பி ஆடுகின்றான்.

2733. கொடிகொட்டி, பாண்டரங்கம், கோடு, சிங்காரம், என்பன வற்றையும் எட்டுவகையான நடனத்துடன் ஐந்துவகை நடனத்தையும் ஆறுவகையான நடனத்தையும் இடைகலை பிங்கலை சுழுமுனை வழியாகக் கண்டு அறியவும் இனித் தேவதாருவனம் தில்லைவனம் ஆலவனம் ஆகியவற்றிலும் கூத்தப் பெருமான் சிறந்து விளங்குகின்றான்.

2734 .உயிர்களிடம் பொருந்திய மேலான் அண்ட கோசத்து உச்சியில் பராசத்தியின் திருவடிக்ள் உள்ளன. அங்கும் படர்ந்து வீசும் ஒளியில் இறைவன் நிறைந்துள்ளான். அந்த அண்ட கோச ஒளியினுடே படரும் நல்ல நாதமும் இருக்கின்றது/. அந்த நாதத்தின் ஊடே சிவனான பரன் நடிக்கின்றான்.

2735. அங்குசத்தைப் போல் எழும் நாத சம்மியத்தால் சீவ அறிவில் பொருந்திய தொம் தீம் எனத் தட்டும் ஒத்தினில் சங்கரன் சுழுமுனையான மூல நாடியில் நிலை பெற்று ஆடல் செய்யும் காலத்தில் மனம் வெளிப் போதலை விட்டு அடங்கி விடும்.

2736. சிவன் உயிர்களின் அறியாமையைப் போக்க எண்ணி விரும்பி ஆடி அறிவு பெற்ற பின்பு உயிர்களிடம் ஒன்பது வகையாய்ப் பொருந்தி ஆடி மூன்று நாடிகளும் பொருந்தும் இடமான சுழுமுனையிள் ஆடி எல்லையில்லாச் சிவஞானத்தில் ஆடல் பொருந்தி என் உயிர் அறிவைக் கெடுத்து அருள் செய்தான்.

2737. சக்திகளான பிராமி, வைணவி, ரௌத்திரி காளி மனோன்மணி சிவனின் பேதமான ஐந்திலும் நான்முகன் திருமால் உருத்திரன் மகேசுவரன் சதாசிவன் என்ற ஐந்திலும் எட்டு மூர்த்திகள் இலயம் அடையும். நிலை எட்டிலும், அந்நிலையில் அறிவு குன்றாமல் நிற்கின்ற எட்டிலும் அனிமா, இலகிமா, முதலிய நிலை எட்டிலும் எட்டு மூர்த்தத்தில் மூன்றுக்கு ஒன்று மேலான அறிவு பொருந்திய நிலை எட்டிலும் நிரீட்சணம், புரோக்கணம், தாடணம், அப்யுக்கணம் தாளத்திரியம், திக்கு பந்தனம் , அவ குண்டனம், தேனு முத்திரை என்ற சத்திகள் எட்டிலும் இறைவனான சிவன் நடனம் செய்கின்றான்.

2738. மேகங்களான ஆவர்த்தம், புட்கலம், சங்காரம், ஆசவனம், நீர்க்காரி, சொற்காரி, சிலாவருடம் என்னும் ஏழும்., உப்புக் கடல், கரும்புச் சாற்றுக்கடல், மதுக் கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், தூநீர்க்கடல், என்னும் ஏழுடன் நாவலத்தீவு, இறவித் தீவு, குசைத் தீவு, திரெஞ்சத் தீவு, இலவந் தீவு, தெங்கத்தீவு, புட்கரத்தீவு என்னும் தீவுகள் ஏழும்,, தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பன்வற்றின் உடல் ஏழும், நாள்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவம், நாதம் விந்து என்ற ஏழும், ஏழு நாக்குகளை உடைய தீயும், ஏழுவகை அடக்கமும், எல்லாமுமாய் சிவபெருமானின் திருவடியின் கீழ் அடங்கும்.

#####

பொற்பதிக் கூத்து!

2739. சதாசிவனின் திருமேனியில் அகோரம், வாமதேவம், தத்புருடம், சத்தியோசாதம் ஈசானம் என்னும் வியக்கத்தக்க ஐந்து முகங்களிலும் ஒப்பில்லாத பேரின்பத்தைத் தரவல்ல உருவம். அருவுருவம் அருவம் ஆகிய நலம் தரும் பேதத்துள்ளும் மேலான சிவன் பொருந்தி ஒப்பில்லாத் நடனம் செய்கின்றான்.

2740. சிவானந்தத்தைத் தனக்குள் கண்டவ்ரே சிவத்துக்கு அடிமையாவார். சிவபெருமானிடத்தில் அடங்கி நிற்பவரே அடியவர் ஆவார். திருவடி இன்பத்தில் திளைத்திருப்பவரே சிவனடியாராகும் சகசிரதளத்துக்கு மேல் பொன் ஒளி தடம் கண்டவரே அடியவர் ஆவர்.

2741. ஐம்பொறிகளின் வயப்பட்டு மனம் அடங்காதிருந்தேன். நான் இத்தகைய என்னைச் சிவன் அடங்கும்படியாகத் தன் திருவடியைப் பதிப்பித்தான். சீவ சத்தியைப் பெருக்கும் ஒளியை அளித்தான். அதனால் என்னைப் பேரின்பத்தில் திளைக்கச் செய்தான். அந்த ஒளியில் நிலைபெற்று நன்மையைத் தரும் ஞான நடனத்தைச் செய்யும் கூத்தன் ஓவிய்ன் போன்று என்னை அசைவற்று இருக்கச் செய்தான். என் உள்ளத்தில் நிலைபெற்று விளங்கினான்.

2742. வானத்தில் நடனம் செய்பவனை உத்தமரிடத்தில் நடனம் செய்பவனை செம்மையான பொன் ஒளி விளங்க்கும் வானத்தில் பிரப்ஞ்சம் போர் நடத்தும் சீவனுக்குத் துணை வீரனாகி நடிப்பவனை தத் என்னும் சொல்லுக்குப் பொருளாய் ஆன்மாவில் நடிப்பவனை இன்பம் பெற வேண்டி என் அன்பில் பொதிந்து வைத்தேன்.

2743. மூலாதாரம் சுவாதிட்டானம் ஆகிய சக்கரங்களில் செவ்வொளியில் நடிப்பவனும், செறிந்த அஞ்ஞான இருளில் அநாகத்ச் சக்கரத்தில் ஒளிக்கதிருடன் கூடி நடிப்பவனும் துவாதசாந்த வெளியில் பேரொளியாய் விளங்கிச் சிவானந்தத்தை விளைக்கும் கூத்தனும் அங்கு மாற்றுக் குறையாத பொன் ஒளியில் விளங்குபவனும் ஆகிய நடராசப் பெருமானை யார் முழுவதும் உணர்ந்து சொல்ல முடியும்,.

2744. நன்மை பொருந்திய மேல் முகமான சகசிரதளத்தில் விளங்கும் நடனத்தில் அத்திருவடிக் கமலத்துக்கு அன்பு பூண்டவர்க்கு காதலால் மிகுதியான மகிழ்வு ஏற்படும். பின்பு அச்சம் ஏற்படும். பத்தியால் விழுதலும் எழுதலும் ஏற்படும். உடல் தளரும். தம் ஐந்து பொறிகள் அறிவு கெட்டுத் தம் நினைவானது அற்றுப் போகும். அதனால் த்ம் நிறமும் குறைந்து போகும்.

2745. திருவம்பலத்தில் சிவக் கூத்தை காணவே வெளியே போய் ஒன்றைத் தேட வெண்டும் என்ற எண்ணம் கெடும். நாடுகின்ற சிந்தை ஒன்றைச் சீர் தூக்கிப் பார்க்கும் செயலை விட்டு நிற்கும். உடல் நினைவு இல்லாது உடலால் வரும் தளர்வு அகலும். மூச்சு பிரமப்புழையை நோக்கிப் பாய்வதில் உண்டாகும் உணர்வில் அறிவு செம்மையாக இருக்கும். அதனால் ஐம்புல அறிவும் பொருந்தா. ஆசை அகலும். உள்ளத்தில் ஆனந்தம் பெருகும். உயிரில் சிவ நடனத்தை காண விருப்பம் மேலும் முதிர்ந்து விளங்கும்.

2746. சிவன் காளியோடு ஆடி பொன்மலையில் கூத்து ஆடி பேய்களுடன் கூத்து ஆடி பூமியில் நடனம் ஆடி நீண்டு கிடக்கும் நீரிலும் தீயிலும் காற்றிலும் பரந்த வானிலும் நடனம் ஆடி சீவர்கள் நீண்ட வாழ்நாள் பெற வானத்தில் இருந்து நடனம் செய்பவன்.

2747. சகசிரதளமான மேருவில் சுழுமுனை நாடியும் மேல் விளங்கும் இடைகலை, பிங்கலை நாடியும் என்ற மூன்றும் மிக்குள்ள வானத்தில் புவியின் தொடர்பு இல்லாது விளங்கும் தீவான இலங்கைபோல் உடம்பின் தொடர்பு இல்லாது திகழும் இடைகலை பிங்கலை என்னும் இரண்டு நாடிகளும் இதயமான தில்லைவனத்தை வளைத்துக் குளிர்ச்சி பொருந்திய சகசிரதளமான மலை உச்சியில் ஏறிச் சுழுமுனையுடன் விளங்கும். ஆதலால் இதயமும் சகசிரதளமும் என்னும் இரண்டும் சிவபெருமான் விளங்கும் இடமாகும்.

2748. புவியும் மேரு மலையும் அதன் புறத்தே உள்ள தென்பாகமும் சொல்லப்படும் இடைநாடியும் பிங்கலை நாடியும் ஒளியுடைய சுழுமுனை நாடியும் ஆகும்.. இச் சுழுமுனை நாடியே அர்த்தசந்திரனை அணிந்த சிவபெருமான் நடிக்கும் திருவம்பலம் ஆகும். பூத அண்டத்தில் எல்லையும் இதுவே ஆகும்.

#####

பொற்றில்லைக் கூத்து!

2749. மூலாதாரம் முதல் சகசிரதளம் முடியவுள்ள அண்டங்களும் அழகிய பொன்னம்பலமாக பழைய ஐவகை வானங்களும் அப்பெருமான் நடிக்கும் இடமாக, அக்கினி கலையில் விளங்கும் சத்தியே திருவம்பலமாய்க் கொண்டு மேலான சோதி வடிவான பெருமான் கூத்தை விரும்பி நடிக்கின்றான்.

2750. குருவால் உணர்த்தப் பெற்று இன்பமாய் விளங்கும் சந்திர மண்டல ஒளியாய், மிக்க நன்மையைத் தரும் மேலான ஆனந்தத்தைப் பெருக்கி சந்திர கலையில் விளங்கும் சிவம் வலப்பால் சூரியக் கலையை அடைந்து உடலில் இன்பம் அளிப்பவனாய்ச் சத்தியுடன் இருந்து நித்திய இன்பத்தை விளக்கும் கூத்தை ஆடியருள்கின்றான்.

2751. சிவன் ஆட சுழுமுனையில் விளங்கும் திங்கள் மண்டல ஒளி அசைய புகழ்ந்து பேசப்படும் ஒளிக்கற்றைகள் விளங்கி அசைய சீவர்கள் தம் செயலற்று ஆட அர்த்தசந்திரனில் உள்ள நீல ஒளி அசைய உடல் தத்துவத்துக்கு மேல் விளங்கும் வான் அணுக்கள் ஆட தன் நாத சத்தியால் நாதாந்த நிலையை அடைவிக்கும் கூத்தை ஆடினான்.

2752. அடியவர் வணங்கி உய்யுமாறு அவரவர் சிதகாய மண்டலத்தில் ஆடிய மேலான நடனம் அழகிய சிவபரன் அகில அண்டங்களிலும் ஆடும் நடனமாகும். இதுதான் செம்பொருள் நிலையான. இந்த நிலையைப் பொருந்தினால் உம்பர நிலையில் மோனம் கைவரப் பெற்று ஞானத்தின் முடிவாம் பேறு உண்மையாகும்.

2753. சூரியன் சந்திரன் அல்லது இடைபிங்கலையான ப்ரனது இரண்டு திருவடிகள் புறத்தே உள்ள இருபத்தோரு உலகங்களையும் இவற்றிலும் மிக்க உடம்பில் உள்ள ஏழு ஆதாரங்களையும் இவற்றுக்குச் சாதகமாயுள்ள நூற்றெட்டுச் சமயங்களையும் இவற்றின் சுருக்கமான நாதம் நாதாந்தம் நடனம் நடனானந்தம் என்று நான்கு பகுதிகளையும் சிவசத்தியுடன் ஆடி இயக்கும்.

2754. உடலுல் உள்ள இடைகலை பிங்கலை என்னும் இரண்டும் தலையில் இடப்பக்கம் பனிப்படலம் போன்று விளங்கும் இமயமும் வலப்பக்கம் தீவு போல் விளங்கும் இதய வானமான தில்லை வனமாகும். இத்துணையும் பரவி மேல் போகிறவன் பரன் என்னும் சிவமே ஆகும்.

2755.. பாரத நாட்டின் தென் கோடியான் கன்னியாகுமரி காவிரி இவற்றுக்கு வேறான ஒன்பது தீர்த்தங்கள் ஏழு மலைகள் ஆகிய இடங்களில் அடைவதற்கரிய வேதங்களூம் ஆகமங்களும் தோன்றுவதல் நிலையான புவியின் தென்பகுதி தூய்மை உடையதாகும்.

2756. தேவையே இல்லாத தேவதேவனாகிய சிவன் நாதத்தொனியில் ஆடி சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நான்கு பாதங்களிலும் ஆடி வேதத்தில் ஆடி அக்கினி கலையின் மீது ஆடி சீவரின் அறிவினில் நின்று ஆடி இருநூற்று இருபத்து நான்கு உலகங்களிலும் பொருந்தி ஆடினான்.

2757. சிவன் தேவர்களின் அறிவில் ஆடி அறிவாகாயத்தில் ஆடி நான்முகன் திருமால் உருத்திரன் ஆகியவரிடம் நின்று ஆடி முனிவருடன் ஆடி செய்யுள் பொருளில் ஆடி மேலான பராசத்தியிடம் அடி ஆன்மக்களிடம் அறிவினில் விளங்கி நடிப்பவனாய் உள்ளான்.

2758. ஐந்து முகங்களுடன் அதோ முகத்தையும் சேர்த்து ஆறு முகங்களுடன் கூடிய சிவனார் தாம் எனவும் சமயம் கூறும் குருவும் தானே எனவும் தலையின் தென் பக்கத்தில் உள்ள வானத்தில் ஆன்ம வடிவத்தைப் பயிற்சியாளர் அறிந்தனர். இந்த உண்மையை அறிபவரிடம் சிவபெருமான் வேறின்றி உடனாய் உணரப்படுபவனாக இருக்கின்றான்.

2759. வானை நாடக மேடையாக கொண்டு அதன் மேல் எம் இறைவன் ஆடுவான். சூரியன் சந்திரன் ஆகிய இரு திருவடிகளின் ஒளி அணுக்களின் கூட்டமே வான் ஆகும். இந்த வானில் அகர, உகர, மகர, விந்து, நாதம் ஆகிய ஐவகையும் பொருந்தி விளங்கும் சந்திர கலையில் தாம் நிலையாய் பொருந்தி சிவன் ஒளியாக அருள் செய்வான்.

2760. இடை நாடியான தூக்கிய திருவடியும் அந்த இடை நாடியில் தோன்றும் ஒலியும் அங்குக் கேட்கும் பல ஓசையும் பலவகை அசைவும் பொருந்திய ஓசையுடன் ஒளிமயமான சிவன் நடிப்பதை என் உள்ளத்தில் பார்த்து ஐயம் அகற்றி நின்றேன்.

2761. இதயத்தினின்று மேல் எழுந்து விளங்கிய உயிர் உடம்பெல்லாம் ஒளியுருவாய் நிறைந்து விளங்கும்படியாய் செவ்வொளியுடன் கூடிய மூலாதாரமான இடத்தில் காமாக்கனியாக விளங்கிய கூத்தன் ஒளி வடிவாய் உடலிலும் உடலைக் கடந்தும் விளங்கினான்.

#####

அற்புதக் கூத்து!

2762. ஞானகுருவின் திருமேனியே அல்லாது தியானிக்கும் வடிவம் ஒளிமயமான சிவம் ஆகும். அந்த அருவப் பெருளே திரிபுரை பராசத்தியாகவும் உருவமாயும் அருவமாயும் உமையம்மையாகவும் விளங்குபவள் ஆவாள்.

2763. ஞானத்தை அடைவிக்கும் நெறியாவது தலையின்முன் உள்ள வான் மண்டலத்தில் ஒளியின் உள்ளே தியானிக்கும் வடிவமே. அப்போது அவ்வடிவமே மறைந்து அருவமாவதும் அங்குப் பொருந்தி ஞான நெறியில் செல்பவர்க்கு அருள் பதிவதும் அந்த நெறியே ஆகும்.

2764. தலையின் மீது பன்னிரண்டு அங்குல உய்ரத்தில் துவாத சாந்த வெளியில் கீழ்ச் செல்லும் உயிர் மேலே போகும்படி இறைவனைத் தியானம் செய்யுங்கள். நாதம் ஒடுங்கிய நாதாந்த நிலையில் விளங்கும் நம் பெருமான் விரும்பி நடிக்கும் திருவம்பலம் இதுவே.

2765. வான்மானது காற்றுக்கும் மேகத்துக்கும் மின்னலுக்கும் வான வில்லுக்கும் இடி ஓசைக்கும் இடம் தந்து தானும் தெளிந்த வானமாய் விளங்குவதுபோல் இறைவனும் ஆனந்தத்தை விளைக்கும் ஆறுவகை ஒளியாகவும் அவற்றுடன் கலந்தும் வேறாயும் ஒளிவடிவாக உயிர்களுக்குப் புலப்படாமல் மறைந்து விளங்குகின்றான்.

2766. ஐந்து பூத ஒளி அணுக்களீலும் எட்டுத் திக்குகளிலும் கீழும் மேலும் அறிவைக் கடந்தும் சிவானந்தம் இலங்குகின்றது. அது மாயையும் சுத்த மாயையும் கடந்து நின்றவர் காணும்படி எம் தலைவன் நிலைபெற்று நடனம் செய்யும் முறையாகும்.

2767. சகசிர தள வட்டத்தில் கூத்தன் கலந்து விளங்குவான். அப்பொருமான் குற்றம் அற்ற ஆனந்தத்தைச் சீவர்களுக்கு அங்கு விளைவித்துக் கொண்டிருப்பான். அவன் அவரின் குற்றம் அற்ற ஞானத்தில் நிலையாய் விளங்குவான். பல ஒளிகளாக விளாங்கும் சத்தியும் வெண்மை நிற ஒளியாக விளங்கும் சிவனும் சகசிரதளம் நிமிர்ந்து எழுவதில் விளங்கும்.

2768. உயிர்களை இடமாகக் கொண்டு நல்வழிப்படுத்தும் சத்தியும் அவளைப் பிரியாத என் தந்தை சிவமும் என் உயிர் ஒளியில் கலந்து விளங்குவதை நான் அறிந்தேன். மல மறைப்பை உடைய பல உயிர் இனங்கள் அனைத்துக்கும் மல மறைப்பு நீங்கச் சிவசத்தி ஆடுகின்றமையை அறிந்தேன்.

2769. உயிர்கள் அடையத் தோன்றும் சகல வடிவமும் சத்தியின் வடிவமே ஆகும். உயிரின் அறிவில் சத்தாகவும் சித்தாகவும் ஆனந்தமாகவும் நிலை பெற்ற ஆனந்தமே உமையம்மையின் திருமேனியாகும். சத்தியின் வடிவம் உயிர்களிடத்தில் விளங்கி சீவனும் சிவனும் கலப்பதில் ஏற்படும் ஆனந்தமே ஒரு நடனமாகும்.

2770. நெற்றியின் முன் புருவத்து நடுவில் பொருந்திச் சாதனம் செய்தால் எண்ணிய மந்திரம் ஒளியாய் விளங்கும். எனவே சீவன் பற்றுவதற்குரிய பற்றுக் கோடாகப் பரமன் விளங்கும் இடமான அறிவாகாயம் என்று யான் சேர்ந்து கொண்டேன்.

2771. அண்டங்கள் யாவும் நுண்மையய் அமைந்து நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னும் ஐந்தும் வீணாத்தண்டில் உள்ள குண்டலினியான சத்தியும் பார்வதியான சம்புவின் சத்தியுமான இரண்டும் இருக்கையாகும். இந்த ஏழையும் முறையாய் நடனத்துக்குரிய இடமாகக் கொண்டு சுடர் போன்ற சிவன் தன் நடனத்தை விரும்பி ஆடியருளினான்.

2772. சிதாகாயப் பெருவெளியில் ஒளியாய் விளங்கும் சகசிரதள மலர் நன்மை அளிப்பது. இதுவே நான்கு இதழ்களுடன் நூறு இதழ்களாய் விரிந்து அஃது இறுநூற்றுப் பத்து உலகங்களிலும் போய் விளங்குவதாயிர்று. இவ்விதம் நிமிர்ந்து உய்ர்ந்து நின்ற மண்டலமே சிவபெருமான் நடனத்துக்கு தக்க இடமாகும்.

2773. வான் கூறான ஆதாரங்கள் ஏழு தேவர், மனிதர், விலங்கு, நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, தாவரம் எனப் பிறப்பு ஏழு, தூய வான அலைகள் மோதும் ஆதாரங்களின் வகையும் ஏழு எட்டுத் திக்குகளும் பொருந்தி விளங்கும் அடையாளங்களும் நானமுகன் திருமால் உருத்திரன் மகேசன் சதாசிவன் விந்து நாதம் என்பவை ஏழு அண்டங்களுத் தலைவனான சிவன் இவை யாவற்றையும் நடனம் ஆடும் இடமய்க் கொண்டுள்ளான்.

2774. சிவபெருமான் உடல் வான் மயமாய் விளங்குவது அந்த வானத்தில் உள்ள கருமையான இருளே முயலகன் ஆகும். மேலாடை போல் காணாப்படும் எட்டுத் திக்குகளிலும் அவனுடைய கைகள் உயிர்கள் மீது விருப்பத்தைக் காட்டும். மூன்று கண்களும் சூரியன் சந்திரன் அக்கினியாகும். இங்ஙனமாக விளங்க கூத்தப் பெருமான் அறிவுப் பெருவெளியில் கூத்தாடுபவனாக விளங்குகின்றான்.

2775. அனைத்துலகில் காணப்படும் இயங்குதிணைப் நிலைத்திணைப் பொருள்கள் யாவும் சிவன் கூத்தாடும் அம்பலம் ஆகும். அதுவே ஆதியான பெருமானின் திருவடியாகும். அது ஐந்து பூதங்களையும் நுண்மையாகக் கொண்டுள்ள பொன் ஒளியுணர்வு நிலையாகும். அதுவே திருவைந்தெழுத்து ஆகும்.

2776. தக்க நிலையான முழலும் குழலும் ஓம் என்று ஒலிக்க அதில் பொருந்திய ஞானியர் அந்நாத ஒலியை ஆதிப்பெருமான் என்று உணர பெருமானை விரும்பி நிற்கும் கூட்டமாகவுள்ள நால்ல தேவகணங்களும் பல பூதப்படைகளூம் போற்றிப் பாட அமைந்திருப்பது திரிபுரச் சங்காரக் கூத்தான பாண்டரங்க கூத்தாகும்.

2777. அண்டத்தின் உள்ளே உள்ள தேவர்களும் அதன் வெளியே உள்ள தேவர்களும் தெளிந்த அலைகளையுடைய கடலால் சூழப்பட்ட உல்கத்தில் வாழும் தேவர்களும் தலையின் மீது விளங்கும் பொன்னிற ஒளியில் நடிக்கும் தூக்கிய திருவடியைப் பர்த்து வணங்கி நற்கதியை அடைவர்.

2778. புளியைக் கண்டவர்க்கு நாவில் நீர் ஊறும். அதுபோல் சிவானந்தத்தைக் தரும் திருக்கூத்தை தலையின் மீது கண்டவர்க்கு எல்லாம் இன்பக் கண்ணீர் முத்து முத்தாக விழும். சோர்வுடைய நெஞ்சமானது அன்பால் உருகும் உள்ளத்தில் உணரும் ஒளியாய்ச் சிவம் இன்பத்தைப் பெருக்கி நிற்கும்.

2779. திருநடனத்தைக் கண்டவர் கால்களில் பலம் அற்றுத் திண்டாடி வீழ்வதே சிவானந்தத்தால் ஆவதாகும். அங்ஙனம் சிவானந்தத்தைப் பருகியவர்க்கு அக ஒளியில் பார்வை பதியும். பதிந்து தன்னை மறந்த நிலை கிட்டும். யாவராலும் கொண்டாடப்படும் அறிவாகாயத்தில் நடைபெறும் நடனத்தை அறிந்தவரின் அரிய இயல்பு பிரணவத் தொனியைக் கேட்டு நாதாந்தம் சென்றவர்க்கும் பொருந்தும்.

2780. தீச்சுடர் உடுக்கை உருத்திராட்ச மாலை கயிறு தோட்டி முத்தலை வேல் மண்டையோடு என்பனவற்றுடன் பரஞானம் அபரஞானம் என்பனவற்றைத் தரும் நீல ஒளியாகவுள்ள சத்தியும் உடனாக உமயை ஒரு பாகத்தில் கொண்ட கூத்தன் மாண்புடைய நடனத்தை ஆடுவான்.

2781. கூத்துக்குரிய பதினோர் உறுப்புகளும் முறையாய் பொருந்துமாறு காலில் சிலம்பும் கையில் உடுக்கையும் கொண்டு நடிப்பதில் உண்டாகும் ஒலி சீவனை மேலானவற்றுக் கெல்லாம் மேலான பொருளிடையே செலுத்திய கூத்தப் பிரான் வெளியிலும் உள்ளேயும் விளங்குகின்றான்.

2782. உருவம் நான்கு, அருவுருவம் ஒன்று, அருவம் நான்கு ஆகிய ஒன்பது பேதங்களும் ஆட எட்டுத் திசைகளும் அவற்றின் உள்திசை எட்டுமாக பதினாறு கோணங்களில் உள்ள திசைகளும் ஆட பத்தி வழிகளான காணாபத்தியம் கௌமாரம் சாத்தம் சௌரம் களாமுகம் சைவம் ஆகிய ஆறும் உடன் ஆட இன்பத்தை அளிக்கும் ஏழு ஆதாரங்களும் எழுவகைத் தோற்றமும் ஐம்பத்தாறு தேசமும் ஆட எழுத்து வடிவாக உள்ள ஐம்பது சத்திகளிடமாகச் சிவானந்தக் கூத்தை ஆடினாள்.

2783. குரல் துத்தம் கைக்கிளை விளரி தரம் உழை இளி ஆகிய இசைவகை ஏழில் ஏழாயும் அவ்வேழும் குறுகி வரும் ஏழ் எழுத்துக்களையும் அவை மேலும் ஒன்றாய் குறுகி விளங்கும்போது ஒரே ஒலியாய் அமைந்து பிரணவமாய் விளங்குகின்றான்.. இப்படியாக ஏழினும் நல்வழியில் விளங்கும் பேரொளி இறைவன் ஏழ் இசையுடன் கூடிய நாடகத்திலும் இசைத்தருள் செய்தான்.

2784. மூன்று மண்டலங்களில் ஐந்தெழுத்து வடிவாய் முந்நூற்று அறுபது கலைகளாய் மூன்று மண்டலங்களில் உள்ள ஆறு ஆதாரங்களாய் நுட்பம் பருமம் ஆகிய பன்னிரண்டு ஆதாரங்களுக்கும் மூலமாய் அகர உகர மகரம் என்ற மூன்றும் ஒன்றாய் இந்த மூன்றால் ஆன பிரணவத்தில் விருப்பம் தரும் கூத்தை ஆடியருளினான்.

2785. அழியும் இயல்புடைய தேவர்களின் திருமுடிமேல் விளங்குகின்ற வெண்ணீற்று ஒளியில் விளங்கும் ஈசனின் மலர் போன்ற திருவடிகள் அழகு பொருந்திய அன்புடையவரின் மனத்தில் விளங்குவனவாம். அப்படி விளங்கிக் கற்பக மரத்தைப் போன்று வேண்டியவர்க்கு வேண்டியவற்றைத் தருகின்ற இறைவன் புவியைக் கடந்து வானத்தில் விளங்குபவனாக உள்ளான்.

2786. எல்லாம் அறிந்த சிவன் ஆடினால் சிவத்துக்குக் கீழாக உள்ள இருநூற்று இருபத்தேழு புவனங்களும் ஆடும். எம் தியான ஆற்றலுக்கு ஏற்ப அவன் எங்கள் உள்ளத்தில் ஆடுவான். அவன் விருப்பத்துடன் உள்ளத்தில் ஆடினால் அவனுக்குக் கீழான பல பூதங்கள் ஆடித் தத்தம் எல்லையினின்று விலகும். பேரொளி வடிவான சிவக் கூத்தைக் கண்டு அன்பன் இன்பம் அடைந்த முறை இதுவாகும்.

2787. கூத்தன் நடனம் செய்தவன் என்று அறிவற்றவர் உரைப்பர். அவன் அங்ஙனம் நடனம் செய்ததைப் பார்த்தவர் எவரும் இலர். ஆதியான சிவன் அவரவர் உள்ளத்தில் நடிப்பதை அறிந்த பின்பு அருட்சத்தியே அவ்வாறு துணை செய்து காணுமாறு செய்கிறது என்பதை அறிவர்.

2788. சிவ்ன் ஒன்பது பேதமாகவுள்ள தத்பதம் தொம்பதம் என்ற இரண்டுள் இன்பத்தை உண்டாக்குகின்ற இடமான அசிபதத்தில் ஆடுவதற்காகவே சீவர்களுக்குத் துன்பத்தைத் தரும் காளியான சத்தியில் விளங்கி ஆட சீவரிடம் அன்புடைய சிவன் நடனம் ஆடுகின்றான்.

2789. சிவ நடனத்தால் சகலதத்துவங்களும் ஆட பிரமன் முதலானவர்க்கு மேலாக உள்ள சதாசிவ மூர்த்தியும் ஆட எல்லா வாசனைகளும் பொருந்திய சித்த மண்டலம் ஆட சிவசத்தியும் ஆட இவை பொருந்தும்படி வைத்த அசைவன அசையாதன ஆகிய யாவும் ஆட மறைவடிவான மூலாதாரத்தில் உள்ள ஒளி ஆட சிவன் ஆனந்தக் கூத்தாடினான்.

2790. பதஞ்சலி வியாக்ரபாதர் என்னும் இருவரும் காணும்படி அழகிய வானத்தில் அருவம் உருவம் அருவுருவம் ஆகத் திருவருள் சத்தியுள் அறிவு மயமான ஆனந்தன் அருள் உருவமாய் நின்று ஆடியருளினான்.

2791. கூத்தப் பெருமான் கூத்து நிகழ்த்துவதால் பிரிவில்லாது நிற்கும் சத்தியும் ஆட அசைவற்ற வானம் ஆட உருவம் அருவுருவம் அருவம் என்ற ஒன்பது தத்துவங்களும் அவற்றைக் கடந்து நிற்கும் நாதாந்தமும் ஆட வேதாந்த சித்தாந்தத்துள் சிவம் ஆடுவதைக் காணலாம்.

2792. நாதத்தின் முடிவான நாதாந்தம் அறம் பொருள் இன்பம் வீடு என்பனவற்றின் முடிவு வேதாந்த முடிவும் உண்மையான சிவானந்தத்தை தரும் சித்தாந்த முடிவு ஆகிய எல்லாம் குற்றம் அற்ற நனமை அளிக்கும் நாதானு சந்தானத்தில் விளங்கும் நாதமே சிவநடனம் ஆகும்.

2793. நான்முகன் திருமால் உருத்திரன் மகேசுவரன் சதாசிவன் என்னும் ஐவரும் சீவர்களைப் பிறவியில் செலுத்திய செயல்முடிய தவம் பொருந்திய சீவனானது பாசம் நீங்க தவத்தின் விளைவான சிவானந்தத்தில் ஞானம் என்ற கூத்தைத் தவத்தால் அடையப் பெறும். சிவன் எங்கும் நீக்கம் இல்லாமல் நிறைந்து ஆடுவான்.

2794. சிவன் என்னை ஆட்கொண்டபோது என்னுடனே கூடி நின்றான். சிறு தெய்வ ஆளுகையினின்று என்னை மீட்டான். விகிர்தா என்று அழைத்தபோது வெளிப்பட்டு நின்றனன். சூரியன் சந்திரன் அக்கினி என்னும் மூன்று ஒளிகளும் ஆடுமாறு நிற்கின்ற சிவன் என்னை ஆட்கொண்டான்.

2795. நாத தத்துவம் கடந்த நாதந்த நிலையில் விளங்கும் ஆதிமறை நம்பியான சிவன் சுவாதிட்டான மலரை ஒளிரும்படி செய்தபோது சீவர்கள் அங்கே பொருந்தி உலக இன்பத்தை அனுபவித்தனர். ஆனால் அவன் பிரிக்கப்பட வேண்டிய தத்துவங்களில் பொருந்திப் பிரிப்பவனாகவும் சீவர்களுடன் வேறுபடாதபடி கலந்து விளங்கினான்.

2796. அறிவற்றவர் ஆனந்தம் என்று சொல்வர், ஆனந்தம் பொருந்தும் பெருமையுள்ள கூத்தை யாரும் அறியவில்லை. ஆனந்தமான சிவ நடனத்தை எல்லாரும் அறிந்த பின்புதான் எனது ஆன்மாவுக்குத் தத்துவக் கூட்டு முடியும் இடமே உண்மை ஆனந்தமாகும்.

2797. திருந்திய சி கரத்தின் நீட்சியான சீ என்ற உடுக்கையை உதறிய கையும் அரிய தவத்தவரை வ என்று அணைந்த மலர் போன்ற இடக்கையும் பொருந்துமாறு அமைந்த ய கரமாகிய பொன் போல் விளங்கும் கையும் திருந்துகின்ற ந கரமான அக்கினியை உடைய இடக்கையும் ம கரமான மலத்தை அடக்கி ஊன்றிய திருவடியும் கூத்தனுக்கு ஆகும்.

2798. உடுக்கையுடன் பொருந்திய வலக்கையும் வீசுதலை உடைய இடக்கையும் அருள் பொருந்திய அபயக் கையும் அக்கினி பொருந்திய இடக்கையும் பிறப்பை அழுத்தும் ஊன்றிய காலும் வடிவம் அற்ற சிவயநம என நினைத்துத் துதிப்பாயாக.

2799. எல்லாத் தத்துவங்களையும் ஒடுக்கி நிற்கும் சிவன் உடுக்கையால் தோற்றத்தை படைக்கின்றான். அபய கர்த்தால் காத்தலைச் செய்கின்றான் தீயை ஏந்திய இடக்கையால் அழித்தலைச் செய்கின்றான். ஊன்றிய திருவடியால் மறைப்பைச் செய்கின்றான். அவனது தூக்கிய திருவடியால் அருளைச் செய்கின்றான்

2800. தீப்பிழம்பய் சீவ ஒளிக்குள் ஒளியாயும் உள்ள சிவத்தைக் கண்டு அந்தச் சிற்சத்தி நான்முகன் திருமால் உருத்திரன் என்னும் மூவரின் செயலும் முடிந்து சிவத்திடம் ஒடுங்கியதைப் பார்த்தால் தலையின்மீது வேத வடிவான நாதம் ஒலித்தது.

2801. நந்தி பெருமான் என் தந்தை ஆவான். அவன் ஞானத் தலைவன். ஓம் என்னும் பிரணவத்துள் பொருந்தியவன். அதைக் கடந்த உடல் பற்றற்ற வானத்தில் விளங்கும் அழகிய கூத்தன் இத்தகைய முறையில் அப்பொருமானைப் போற்றுவதே அல்லாது வேறு எப்படி விளக்குவது. விளக்குதல் இயலாது.

2802. சிங்கத்தைப் போன்ற குரு நந்தியினது அறிவாகாயத்தில் விளங்கும் ஆராய்த் தக்க திருமேனியை இன்ன தன்மை கொண்டது என்று எவரும் அறியவில்லை. அப்பொருமானின் திருமேனி மூலாதாரத்தில் அக்கினி போன்று சிவந்தது. தலையில் மேல் வெள்ளை நிறம் வாய்ந்தது. இத்தகைய தன்மையை ஆராய்ந்து ஒளிவடிவாகக் காணின் அது சீவர்களுக்குப் புகும் இடமாகும்.

2803. சிவத்தினது சத்தியே தற்பரையாய் நின்று செயல்படும். ஆகவே பரனுக்கும் உயிருக்கும் தொடர்பை ஏற்படுத்துவது அதுவே. உயிரிடத்தில் இச்சை ஞானம் கிரியையாய் விளங்கிப் பக்குவப்படுத்தும் அங்ஙனம் பக்குவப்படுத்தி அருள் மயமாக்கினால் உயிர் அரனிடம் அன்பினால் ஒன்றி அறிவு வடிவாகும்.

#####

ஓம்நமசிவய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

#####

சூக்கும பஞ்சாக்கரம்!

2709. எம்பெருமானான சிவனை எள்ளி நகையாடி அவனது இயல்பைப் பற்றி வாதிடுபவர் அறியாதவர் ஆவார். அப்படியின்றி அப்பொருமானை ஒளிமயமாய் நினைந்து உருகும் மனம் உடையவராய் அவனே ஒளியாய் வெளிப்படுவான் என்று எண்ணிச் சிவயநம என்று ஓதுங்கள். அப்போது இரசவாதிகள் குளிகையையிட்டுச் செம்பை பொன் ஆக்குவதைப் போல் அவன் மலக் குற்றத்துடன்கூடிய உடலைப் பொன்னொளி பெறச் செய்வான்.

2710. சிவயநம் என்னும் ஐந்தெழுத்தில் முறையே சிவன் சத்தி சீவன் அடுகின்ற மலம் மாயை என்பன உள்ளன, அதைச் செபித்தால் துன்பத்தைத் தரும் ஆணவம் கன்மம் மாயை மாயேயம் திரோதாயி என்னும் ஐந்து மலங்களும் நீங்கச் சிகர வகரத்தால் உணர்த்தப்படும் சிவன் சத்தியுடன் ய ஆகிய சீவன் பொருந்தத் துன்பத்தை தரும் பாசம் சீவனைப் பற்றாமல் அகலும்.

2711. சிவசத்தியின் சிவயநம என்ற ஐந்தெழுத்தானது சிவன் சத்தி ஆன்மா திரோதாயி மாயா மலம் என விளங்கும் சீவன் சிகாரத்தை முதலாக ஓதும் முறையில் வினைகளை நீங்குதலுடன் பிறப்பு நீங்கிப் பரசிவனாகும்.

2712. சிவயநம என்று எண்ணுவதில் நம என்பதால் குறிக்கப்படும் மலமான இருள் அகன்று ஆதி சத்தியான குண்டலினி சத்தியை விட்டுச் சித்சத்தியாய் ஒளிமயமாய்ப் பிரகாசிப்பதில் தீமை இல்லாத சிவஞானயோகம் கைகூடும். அப்போது சிவய என்ற ஒளியை வழிபடுங்கள். இதுவே மலம் நீங்கிய உண்மை நிலையாகும்,

2713. நகரம் முதல் முறையாகவுடைய சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆஞ்ஞை ஆகிய ஆதாரங்களில் நனவு முதலிய நிலைகளில் தொழிற்படும் உணர்வு மறைப்பும் சத்தியால் இயங்கிச் சீவரின் ஆதிசத்தியினது நிலையான ஒளியில் பொருந்த நனவாதி நிலைகளில் பொருந்திய உண்ர்வு முடிவடையும். முடிவடைந்து சுத்த வித்தியா தத்துவம் தலையின்மீது விளங்கித் துரிய நிலையைத் தம்மிடம் பெற்று மூலாதாரம் முதல் பேரொளியாக விளங்குவதில் சமாதியுற்றுச் சிவயநம் என நினைப்பதில் சிவமாவர்.

2714. அருளின் வேறுபட்டவையான சத்திக் கூட்டமும் அத்தனாகிய சிவமும் கலப்பதில் ஆன்மாவை உடலுடன் பொருந்தும்படி செய்தவர் ஆவார். அந்த உடல் மாயையில் தங்கும் ஆயின் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்களும் விலகச் சிவய என்று ஒளி உருவாக வழிபாடு செய்யுங்கள். அப்போது நீங்குதற்குரிய வினைக் கூட்டங்களைப் போக்குவது சிவய எனபதாகும்.

2715. வாய் பேசாத மௌனிகளும் சிவசிவ என்று எண்ணுவதில் உள்ள நன்மையை அறிகிலர். சிவசிவ என்று எண்ணுவதுடன் மூச்சின் கதியும் இயங்காமல் இலயம் அடையும். அடையச் சிவமும் சத்தியும் ஆகிய மகாமனுவைத் தெளிந்தவர்கள் திருவருள் பெற்றுச் சிவசத்தியாகவே அமைவர்.

2716. முறபிறவியில் செய்த தீவினையின் கரணமே சிவசிவ என்று ஓதாமல் இருக்கின்றனர். எத்தகைய தீவினையளரும் சிவசிவ எனச் சொல்வாராயின் தீய வினைகள் யாவும் கெட்டுப் போகும். மேலும் அவர்கள் தேவவுடல் பெற்று விளங்குவர். சிவசிவ என்று கணிப்பதால் சிவகதி உணடாகும்.

2717. சிவயநம என்ற ஐந்தெழுத்தை உச்சரிக்கும் முறையில் நம என்ற எழுத்துக்களை நாவுள் கழுத்த்ப் பகுதியில் நிறுத்திச் சிவ என்ற திருப்பெயரை தலையின்மீது மனமண்டலத்தில் நினைக்கப் பாவம் நீங்கும் தனமையும் அதுவாகும். அதனால் அஞ்ஞானம் நீங்கும் பிறவியும் நீங்கும்.

#####

அதி சூக்கும பஞ்சாக்கரம்!

2718. சிவயநம என்று உள்ளத்தி வெளியே சொல்லாது அந்நிலையதாக்கி மலத்தால் ஆன துன்பத்தை நீக்கிச் சிவத்துக்கு அடிமையாக்கிச் சிவய சிவசிவ என்று பலமுறை சித்தத்தில் எண்ணின் அச்சம் நீங்க் ஆனந்தம் உண்டாகும்.

2719. மிக நுண்மையான ஐந்தெழுத்துத் தரிசனத்தால் மூலாதாரத்தில் உள்ள அக்கினி கதிர மண்டலாத்தைப் பேதித்துச் சென்று தோளுக்குமேல் விளங்கும் சந்திரன் மண்டல ஒளியில் ஐயறிவுகளும் பொருந்தும் முறையில் சென்று யோக நித்திரையில் பொருந்தியிருக்கும் அவன் உலகை மறந்திருக்கும் அச்சமயத்தில் சிவத்தை நெஞ்சிடம் எனக் கொண்டு பிரியாமல் இருக்கும் நிலையைப் அடையலாம்.

2720. வேதம் ஆகமம் வேதாங்கம் என்பனவற்றை முறையாக ஓதினாலும் அவை எல்லாம் சிவபெருமான் எழுத்து ஒன்றான சி காரத்தில் இருப்பவையாகும். ஐயம் நீங்கி அவ்வெழுத்தின் உண்மையினை உணர்ந்து சாதனை செய்தால் அதுவே முத்திக் கரையை அடைவதற்குரிய அரிய தோணியாகும்.

2721. பழைய மறையில் சிரசில் உள்ள ஐந்தெழுத்துக்களான கனி முதிர்ந்து கிடக்கின்றது. ஆனால் அக்கனியை உண்பதற்கு அதனைச் சிந்தித்து அறிநெறியில் கொள்ளும் செயல் அறிபவர் இலர். மூடர்கள் அதன் பெருமையை அரியாமல் அஃது எழுத்துக்களானவைதானே என்று கூறுவர். அஃது அவர் தலையெழுத்தை மாற்றிப் படைக்கும் எழுத்து என்பதை அறியார்.

#####

வியாழக்கிழமை, 16 July 2020 12:09

தூல பஞ்சாக்கரம்!

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

#####

தூல பஞ்சாக்கரம்!

2698. ஐம்பது எழுத்துக்களால் வேதங்கள் எல்லாம் கூறப்பெற்றுள்ளன. அப்படியே எல்லா ஆகமங்களும் ஐம்பது எழுத்துக்களால் கூறப் பெற்றுள்ளன. ஐம்பது எழுத்துக்களும் உடலுள் பொருந்தியிருக்கும் முறையை அறிந்தால் ஐம்பது எழுதோசையால் அடையக்கூடியதை நமசிவய என்ற ஐந்து எழுத்தால் அடையலாம்.

2699. எழுத்துக்கள் அ முதலாக ஐம்பத்தோர் எழுத்துக்களாகி உ காரம் முதலாக நிலைபெற்று நின்று மகரத்தால் இறுதி அடைந்து தேய்ந்து தேய்ந்து மேல் போய் நகாரத்தை முதலாக உடைய நந்தியின் பெயர் நமசிவய என்பதாகும்.

2700 அ முதலான உயிர் எழுத்துக்கள் பதினாறுடன் கலந்த பரை என்ற சிவசத்தியுடன் பரையில் பிரிந்து மற்ற மெய்யெழுத்து முப்பத்தைந்தையும் இயக்கும் பிராமி முதலிய எட்டு சத்தியுடன் கலந்து ஒளியாய்த் திகழும் சிவம் அதனது கைவசமாம் கண்ட சிவயநம என்ற மகாமந்திர அங்குசமாகும். இதை அறிந்தவர்க்கு வேதம் கூறும் ந முதலிய நமசிவய என்ற உணர்வு மூலாதாரம் முதல் உடலிலே பொருந்தும்.

2701. வாயால் கூறப்படும் இறைவனின் ஐந்து எழுத்தான சிவயநம என்பது வாய், கழுத்து இதயம் உந்தியுடன் இலிங்கம் என்ற ஐந்து இடங்க்ளிலும் பொருந்தி மேலிருந்து வான் மயமாய் படர்ந்து மூலாதாரத்தை அடைந்து முதுகுத்தண்டின் வழியாய் நேரே வான் வீதியான உச்சியில் உள்ள சகசிரதளத்தை அடைந்து முடிவதில் நமசிவய என்ற பேரொளி வடிவம் மேற்கூறிய ஐந்து இடங்களிலிருந்து எழும்.

2702. ஏழு நிறக் கதிர்களும் தலையின்மீது ஒளிமயமாக விளங்கிக் கருவிகளை விட்டு யோகியின் உயிர் தலைக்குமேல் போகும் போதும் இயல்பாக இறப்பு வந்து கருவிகளை விட்டு உயிர் பிரியும் போத்ம் பாதுகாவலாய்த் துணை செய்வது ஐந்தெழுத்தாகும்.

2703. கதிரவனும் சந்திரனும் மிக்கு மேல் எழும்போது அழகுடைய ஒளியாய் விளங்கும் மந்திரத்தை எவரும் அறிய்வில்லை. செம்மை நிறமுடைய குண்டலினி அம்மைக்குரிய ஐந்தெழுத்தை வாய்க்குள் மென்மையாக உச்சரித்தல் கூடும்.

2704. தெளிந்த அமுதமயமான ஒளி உண்டாகச் சிவயநம் என உள்ளே ஒளிபெற ஒருமுறை எண்ணுங்கள். இவ்வாறு வெள்ளம்போல் பெருகி வரும் சீவ ஒளியை விரும்பிப் பெறாதவர் துல்லிய நீர் மீண்டும் நீரிலேயே விழுந்து கெடுவதுபோல பிறவிச் சக்கரத்தில் மீண்டும் வந்து விழுவர்.

2705. ஒளி நெறியின் இயல்பை உணர்ந்து நின்று பிறவிக்குக் காரணமான வினைகளை ஒழிக்க அப்பிறவி வரும் வழியைத் தடை செய்யும் திறன் உடையவர்க்கு அருள் நெறியைக் காட்டுவது ஐந்தெழுத்தகும்.

2706. உள்ளம் தடுமாற்றத்தை அடையும்படி தீவினையால் ஏற்படும் துயரம் வந்தபோது உன்னிடம் பொருந்தியுள்ள சிவத்தை ஒளிரச் செய்ய ஐந்தெழுத்தை ஓதுக. உன் விருப்பத்தை அறிந்து ஒலிக்கின்ற திருவடியால் உனக்கு உறுதுணையாக இருப்பதை உணர்த்துவான்,. இத்தகைய் குறிப்பை அறிபவரது தவம் சிவ வடிவத்தை உருவாக்கும்.

2707. நாள் தோறும் உறங்குவதற்ம் திருவைந்தெழுத்தை நினைத்து தம் தொண்டை வழியாகப் பிரமரந்திரம் போகும் மேல்முகமான கதியை எழுப்பிச் சிவனது திருவடியில் அடைக்கலம் புகுவதாக எண்ணியிருப்பின் பனிப்படலம் போன்ற வெண்மையான சகசிரதளத்தில் விளங்கும் அஞ்செழுத்தில் விளங்கும் சிவபெருமானின் அருளைப் பெறலாம்.

2708.பரவியுள்ள பூமித்தத்துவம் முழுவதும் கீழோடு எல்லாவற்றையும் தாங்கும் குண்டலியான பம்பை உள்ளும் புறமுமாய் இயக்குபவனே சிவன். அத்தகைய இ/றைவன் அருளீய ஐந்தெழுத்தின் பெருமையை உண்ராமல் ஞானச் செல்வம் பெறாத ஏழை மக்கள் அவர்களிடம் பொருந்திய அஞ்ஞானமான இருளை அகற்ற முடியாது.

#####

வியாழக்கிழமை, 16 July 2020 12:08

ஒளி!

ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுகட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

#####

ஒளி!

2681. ஆன்ம ஒளியை அறிந்து நின்றால் உருவமான உடல் நினைவு மறைந்து போகும். மறைந்து போகும் உடல் நினைவு இருக்குமானால் மீண்டும் பிறப்பு வரும். ஆனம ஒளியில் உள்ளம் உணரின் ஒளிமயமாகத் தோன்றும். ஒளியில் தோய்ந்து நிற்க அந்த ஒளி உருகிச் சீவன் விளங்குவான்.

2682. ஆன்மப் பேரொளியை அறிந்து அதில் நிலைபெறும் ஆற்றல் உள்ளவர்க்கு உலகத்தில் உள்ள எட்டுத்திசைகளிலும் தங்கு தடை இல்லாமல் போகும் ஆற்றால் கைவரப்பெறும். அன்னாரின் உள்ளத்தில் அகண்ட ஒளி பரவும். அந்த ஒளி வெளி இருளையும் மாற்ற வல்லது. அது சகசிரதளத் தாமரையில் விளங்கிக் கதிரவன் போன்ற ஒளியைச் செய்யும். மாறான மல இருளைப் போக்கி ஒளியைத் தந்து எம் பெருமான் அவ்விடத்தே பொருந்தி நின்றான்.

2683. பேரொளி மயமான சிவன் ஆனமாவில் விளாங்க ஒளிமயமான அக்கினியும் விரிந்த கதிர்களையுடைய சூரியனும் சந்திரனும் வளம் உடைய ஒளிகளாய் ஆன்மாவில் ஒளிர்ந்தன. வளமை உடைய ஒளிமயமான ஆன்மா அடைந்தது என்ன என்றால் பேரொளியான சிவன் ஆன்மாவை இடமாய்க் கொண்டு கலந்து விளங்கியதே காரணம்.

2684. விளங்கும் ஒளியையே திருமேனியாகக் உடைய சிவன் ஒரு போதும் பிறவி எடுக்காதவன். விளங்கும் ஒளியையுடைய சூரியனும் சந்திரனும் அவனுடைய க்ண்கள். வளம் மிக்க ஞான ஒளியை வீசுவதான அக்கினியும் அவனது மூன்றாவது கண்ணான நெற்றிக் கண் ஆகும். இப்படி விளக்கமான ஒளியைத் தரும் மூன்றும் ஞானியர் உடலில் அமையும்.

2685. தலையின்மேல் உள்ள வானம் ஒளிமயமானது. அதன் கீழ் உள்ள காற்று ஒளிமயமானது. பால் உணர்ச்சியை தரும் மூலாக்கினி கீழே இருக்கின்ற வானத்தில் பரந்த ஒளியாக உள்ளது. நீரை முகமாக உடைய அபானனை நீண்டு உணர்ந்து போகும் வீணாத்தண்டின் ஊடே சுழுமுனைக்குச் செலுத்தினால் மேலான நிலஒளி நீர் ஒளி நெருப்பொளி தீயான காற்றொளி வான் ஒளி என்னும் ஐந்தும் ஒரே ஒளிமயமாய்த் திகழும்.

2686. மின்னலைப் போன்ற தூய ஒளி மாட்சிமையுடைய செந்நிற ஒளி வேதங்களால் புகழ்ந்து பேசப்படும் ஆன்மாவின் ஒளி ஆறு ஆதாரங்களில் பொருந்திய ஒளி என்னும் இவற்றை தூய மொழியான சிற்சத்தி நாள்தோறும் சீவனின் விருப்பத்துக்கு ஏற்றவாறு ஒரே பேரொளியாய் அமைத்துத்தருவாள்.

2687. விளங்கும் ஒளி மின்னல் ஒளிபோல் ஆன்மாவில் மறைந்து ஒளிர்கின்ற ஒளியான ஈசனை இடைவிடாமல் சிந்தியுங்கள் அப்போது உள்ளத்தை இடமாகக் கொண்டவன் உடலில் விளங்கிப் பிராண சத்தியாய் வளத்தைத் தருபவனாய் எங்கும் பொருந்தி நின்று அருள் செய்வான்.

2688. விளங்கும் ஒளியான ஆன்மா தன் உண்மை அறியாது அறியாமையான இருளில் அழுந்தும், பிரகாசமான ஒளியுடைய சிவன் வழிபடுபவர்க்கு ஒளியைப் பெருக்கி விளங்குவான். உப்பு நீர் பாயும் வழியில் வெளிப்படுத்தும் நஞ்சை அமுதமாய் ஏற்றுப் பொருந்தும் சுழுத்தை இடமாகக் கொண்ட இறைவனின் இயல்பு அப்படி மாறச் செய்வதேயாகும்.

2689. இயல்பாய் பேரொளியாய் விளங்கியது எதுவோ அதுவே சிவம் ஆகும். சிவத்தின் சத்தியும் அங்ஙனமே ஒளிமயமாய்ச் சிவத்தின் விருப்பத்துக்கு ஏற்பச் செயலை செய்து முடிப்பாள். சத்தி ஆற்றலில் விளங்கும் நீங்கள் சூரியன் சந்திரன் அக்கினி என்ற மூன்றும் விரிந்த சுடராக விளங்கி மனத்தில் அவை ஒன்றாகி அந்த ஒளியில் சிவனும் உடன் நின்று அருள் செய்தான்.

2690. உள்ள மண்டலத்தில் விளங்கும் ஒளி எனது நுண்னுடலில் உள்ள சீவனேயாகும். அந்த ஒளிக்குள் ஒளியாய் விளங்கும் சீவனை விட்டு விலகாத மாணிக்கம் போன்ற பேரொளி மின்னல் ஒளிபோல் மின்னி வானத்தை அடைந்து அங்கு வளம் செய்யும் ஒளியாம் சீவ ஒளிக்கிரணச் சமூகத்துடன் கலந்து நின்றான்.

2691. விளங்கும் ஒளியுடைய விகிர்தனான சிவன் முன்பு மிக்க ஒளியுடன் கூடிய மாயையுள் வலிய இருள் பொருந்தாதபடி களங்கத்துடன் கூடிய இருளில் சிவன் நடிக்க விளங்கும் ஒளியிலே மன மண்டலத்தில் விளங்கி நின்றான்.

2692. ஞானப் பயிற்சியால் ஆதியான பரம் பொருளைத் தேவர் தலைவனான உருத்திர சோதியுடனும் தலையின் உச்சியில் விளங்கும் சகசிரதள மலரில் போய் அடைந்தவர் ஆன்மப் பேரொளியும் அண்டத்தில் அப்பால் உள்ள பேரொளி பிழம்பும் ஆவர். இம்முறையில் ஆதியான பரம் பொருள் சீவர்களை மாயையினின்று கடக்கச் செய்யும்.

2693. உலகுக்குக் காரணமானவன் ஒருவன் உண்டு என்றும் இல்லை என்றும் சொல்லும் கொளகை உடையவர் உலகத்தில் உண்டு. ஆன்மாவுக்கு மேலான ஒன்று பழமையில் இல்லை. எனக் கூறுபவர்க்கு மேலான சிவகதி இருக்கக் கூடுமோ. அங்ஙனம் இருப்பதைக் கண்டதில்லை என்று கூறுபவருங்கூட அறிய வேண்டும் என்று எண்ணம் ஏற்படின் வான்மயமான தில்லையான மனமண்டலத்தில் விளக்கமான ஒளியாய் இறைவன் விளங்குவதைக் காணலாம்.

2694. சுடர் பொருந்துமாறு உயர்வான் ஒண்மையான ஒளிவடிவாய்ப் பயிற்சியாளனின் அக நோக்கத்தில் படர்ந்து விரிந்து சூரியன் போல் இறைவன் காட்சி தருவான். அந்த ஒளியால் அடர்ந்துள்ள மாயையின் இருளை வேறுபடுத்தினால் உடலுடன் கூடியிருந்து ஞானத்தால் பயிற்சியாளன் உலகைத் துறந்தவன் ஆவான்.

2695. ஒளியைத் தரும் பவளம் போன்ற மேனியை உடையவனும் அதன்மேல் வெண்னிற ஒளி படிந்தவனும் புவனம் போன்ற செம்பொன் நிறமுடைய ஆதிப் பிரானும் ஆன சிவன் மூலாதாரத்திலிருந்து களிப்பைத்தரும் பவள நிறத்தவனாக விளங்கிக் கரிய பாச இருளை அகன்று ஒளி பெற்ற பவள நிறம் உடையவனாய் என்னுடன் இருந்தான்.

2696 வான் மண்டலத்தில் இறைவன் இருந்தான். அங்கேயே தேவரும் இருந்தனர். அப்படியிருப்பினும் அவர்கள் ஒளியின்றி மக்களைப் பூமியை நோக்கிச் செலுத்துபவராய் இருக்கின்றனர். இருவினை ஒப்பு வரவே இறைவன் அருளால் பழைய வினையுடன் புதுவினையும் அடியோடு நீங்க மலர் பக்குவமானபோது வெளிப்படும் நறுமணம் போன்று சிவன் வியாபகம் அடைவான்.

2697. தேவர்கள் மக்களை உலகத்தில் செலுத்துபவர் ஆயினும் தேவர்களுக்கும் தலைவனாய்ச் சிவன் உள்ளான். சீவர்களுக்கு முத்தியை அளித்துத் தன்னுடன் பொருந்துமாறு செய்பவன் அவன். அல்லாமல் வேறு எவரும் இல்லை. இந்தப் பெரிய உலகத்தில் அச்சிவமே வான் வடிவில் நிலைபெற்றுள்ளது. அப்போது சீவன் பரவாய் இருக்க எங்கும் பரவுதலும் கூடும்.


#####

வியாழக்கிழமை, 16 July 2020 12:06

பிரணவ சமாதி!

ஓம்நமசிவய!

அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!

#####

பிரணவ சமாதி!

2675. அ, உ, ம என்ற மூன்றால் ஆகியது ஓம். இது தூலப் பிரணவம். இது பருவுடலுக்கு இன்பத்தைத் தரும். மறைகளால் பாதுகாக்கப்பட்ட விந்து நாதமான நுண்மைப் பிரணவம் மேலான பராசத்தியின் வடிவம். களிப்பைத் தரும் நேரத்தில் செய்யப்படும் செயலே நுண்பிரணவத்துக்குக் காரணமாகும். இந்தச் சூக்கும பிரணவத்தை அறிவதே வேதாந்த நெறியாகும்.

2676. ஓம் என்ற பிரணவ மொழிக்குள்ளேயே உபதேசத்துக்குரிய ஒரு மொழி தோன்றும். அஃது உருவையும் அருளையும் தனக்குள் கொண்டது. அதில் பல வேறுபாடுகள் உள்ளன. இத்தகைய ஓம் என்னும் பிரணவத்தை அறிவதில் மேலான சித்தியும் முத்தியும் உண்டாகும்.

2677. அகண்டமான பிரணவத்துள் மண் முதலிய ஐந்து பூதங்கள் உண்டாயின. இதனின்றும் ஐந்து பூத மாற்றத்தால் அசையும் உயிர்களும் அசையாத உயிர்களும் உண்டாயின. பிரணவத்தைக் கடந்த அதிதீதத்தில் சகலர், பிரளயகலர், விஞ்ஜானகலர் என்னும் மூவகை உயிர் இனமும் உள்ளன. அதனால் பிரணவம் உயிர் வாழ்பவையான சீவர்களுக்கும் மற்ற ஆன்மாவின் தொகுதிக்கும் சிவனுக்கும் உரிய நிலையாகும்.

2678. அ, உ, ம, என்ற எழுத்துட்ன் கூடிய ஓங்கார இறுதியில் உள்ள நாதப் பிரமம் இன்ப வடிவனதும் வியாபகமானதுமாகும். அதனுடைய சுருங்கிய நிலையே சரமாகவும் அசரமாகவும் உலகில் உள்ளன. பெரியதான் உலகம் எல்லாம் நாதப் பிரமத்தின் படிவம் ஆகும். இந்த உண்மையை ஞானம் கைவரப்பெற்றவர் ஆறிவர்.

2679. மயக்கத்தையுடைய உள்ளத்தால் பிராணன் இயக்கம் நடைபெற்று உள்ளம் அலைவதாகும். மயக்கம் தெளிந்த நிலையில் ஞான குருவால் உணர்த்தப் பெறுவது ஒளி நெறியாகும். இதற்கு இடமும் கூட்டமும் தவமும் சீவர்களது சித்தம் ஆகும். இவ்வாறு சன்மார்க்க உபதேசத்தால் நன்மை ஏற்படும்.

2680. பதினாறு கலை பிராசாத நெறி கூறும் சன்மார்க்கத்தில் உள்ளவர்களுக்குத் தலையின் மேல் விளங்கும் துவாத சாந்தவெளியின் இறுதியும் பதினாறு கலைகளின் இறுதியுமான உன்மனையின் முடிவும் பிரணவமான வில்லையும் கடந்து மேல் சென்று ஞானநிலையில் நேயப் பொருள் முடிவில் இருக்க முடியும்.

#####

வியாழக்கிழமை, 16 July 2020 12:04

ஞான குரு தரிசனம்!

ஓம்நமசிவய!

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.

#####

ஞான குரு தரிசனம்!

2656. முப்பத்தாறு தத்துவங்களும் ஆன்மாவில் ஒடுங்கினால் சிவன் வெளிப்பட்டு ஆன்மாவைத் தன்னுள் அடக்கிக் கொள்ளும். அந்நிலை அமைந்த பின்பு மேலான சிவப்பேறு கிட்டப்பெறும். இதன் பயனாய் ஆன்மா உலக இன்பத்தை விட்டுச் சிவானந்தத்தில் நிளைத்துச் சிவபோகத்தை அடையும்.

2657. சீவ துரியம் பரதுரியம் சிவ துரியம் என்னும் மூன்றும் கடந்து விளங்கும் அறிவுப் பேரொளியான அரிய பரசிவம் யாவுமாய்ப் போக்கும் வரவும் இல்லாத இடத்தில் இருக்கும் பெருமை மிக்க குருபதத்தின் இயல்பைப் பேச முடியாது.

2658. தாய் போன்ற அருளை யுடைய நந்தியை என் மீது பெற்றேன். வாய் போன்ற கோபுர வாயிலில் விளங்கும் நந்தியை வாழ்வதற்கு வாயைப் பெற்றேன். உலகத்துக்கே பீசமாய் விளங்குகின்ற சிவத்தை ஞான சாதனையால் காண்பதற்குப் போதுமான அறிவைப் பெற்றேன். என்வுணர்வுக்கும் அப்பாற்பட்ட நந்தியை உணர என்னுடைய சிந்தையைப் பெற்றேன்.

2659. கருட மந்திர உபாசனை செய்பவன் தன் ஆத்ம ஆற்றலால் கருட மந்திரத்துக்குரிய கருடனை நினைத்தவுடனே நாகத்தால் கடியுண்டவன் மிக்க நஞ்சு தீர்ந்து மரணப்பயம் நீங்கி எழுவான். அதைப் போன்று ஞானப் பயிற்சியாளன் பேரொளிப் பிழம்பான ஞான குருவைத் தியனித்தவுடனே மும்மலங்களும் நீங்கிடப் பேரொளிப் பிழம்பாய் விளங்குவான்.

2660. சிவபெருமான் நிலையாய் உள்ள இருப்பிடம் எது என்பதை உலகத்தவர் எவரும் அறிந்து கொள்ளவில்லை. அவனது இருப்பிடம் சீவனிடந்தான் என்பதை ஞான விசாரனையால் அறிந்து கொண்டவர்க்கு அவனும் நிலையாக அவர்களது உள்ளத்தில் அமர்ந்து விடுவான். அவ்வாறு தம்மிடம் சிவகுருநாதனைப் பார்ப்பவர் சிவமாய் விளங்குவர்.

2661. முகத்தின் முன் தோன்றிய ஒளியை அறிவதும் அறிந்தும் அறியாதிருப்பதும் ஆன மயக்க அறிவு மாறிவரும் நனவு கனவு சுழுத்தியால் ஆகும். சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் என்ற மூன்றையும் கடந்தபோது நனவு முதலிய மூன்று நிலைகளும் நீங்கும். அப்போது திருவடியைப் பதிப்பித்த நந்தியான குருநாதன் பிரணவ உடலில் மாணவனை விளங்குமாறு அருள் செய்வான்.

2662. சந்திர மண்டலம் விளங்கும் இரண்டு புருவங்களுக்கும் இடையில் மணத்தை அறியும் நாசியின் மேல் பாகத்தில் இரண்டு இதழ்த் தாமரையில் உள்ள சத்தி பந்தம் ஒன்றும் இல்லாத பளிங்கு போன்ற உருவத்தை உடையவள். இவளே பந்தங்களை அறுக்கும் குருவடிவுடையவள். ஆதலால் இவளைப் பற்றித் தியானத்தை தொடங்குக.

2663. புருவ நடு தியனத்தினால் உடம்பில் உள்ள மூலாதரம் முதலான ஏழு இடங்களும் வளர்ச்சி பெற உள்ளத்தில் பரமகுரு எழுந்தருள்வான். அவன் வானமயனாய்த் தலையிடை விளங்கிப் பிருதுவியைச் செலுத்திபவனாகச் சுவாதிட்டானமான நிலத்தை அடைந்தான். பின்பு அவன் தலையைச் சூழவுள்ள அட்டதிக்குப் பாலர்கள் குறுப்பு நீங்கும்படி அருள் செய்தான். அங்ஙனம் அஞ்ஞானமான தத்துவங்களைக் கடந்து மேல் சென்றவனது ஊர் வடக்கு ஆகும்.

2664. சீவன் அன்னமய கோசம் முதலிய ஐந்து கோசங்களையே தான் என்று எண்ணி இருந்தது. அவை சீவனாகிய பறவை தங்குவதற்குரிய காடு என்று கூறத்தக்கவையாம். ஆனால் இவை தானல்ல தான் வேறு என்று சோடசகலை மார்க்கத்தினால் தன் உண்மை நிலை உணரலாம். இஃது அன்றி இந்தவுண்மை உணர்வதற்குத் தசகாரியம் விளக்குகின்ற வேறு நெறியும் உள்ளது.

2665. சீவர்களின் பக்குவத்தைக் கண்டு கலந்த பின்பு பிரியாத எம் தலைவனான சிவபெருமானது தன்மையினை நினைப்பவருக்குச் சிவபேதம் கெடும். அவனது பேரொளியில் கலந்து உள்ளத்தில் உணர வல்லவர்க்கு இங்கு அவரைச் சுற்றியுள்ள அரிய வினைகள் கெட்டொழியும். இவ்வினைகளுக்கு ஈடான மாயையும் அழியும்.

2666. சிவஞானத்தை உணர்த்தும் சிவபெருமானை வாழ்க்கையில் உணரலாம். அதனால் பலமாய்ப் பற்றியுள்ள பாசத்தைத் தளிர்க்க விடாதபடி அறுத்துப் பாச வழியில் செல்லாது சிவத்தை இடைவிடாமல் சிந்தித்து நிலைபெறச் செய்தால் சிவநெறியில் போய்ப் பேணுதல் முடியும்.

2667. குருவானவர் காட்டிய வழியில் சிவனை நினைத்திருப்பாரானால் சிவபெருமானும் அவனை நினைத்தருள்வான். அப்படி அருள்புரியும் பொருட்டுப் புருவ நடுவில் விளங்கும் ஒளிப் பொருளைச் சாதியாலும் அறிவாலும் தினையைப் போன்ற சிறியவராய் இருந்தாலும் இடைவிடாது சிந்திக்கும் மனத்துடன் அடைந்தால் அவர் பெருமையுடையவர் ஆவார்.

2668. சிவபெருமானை வணங்குதற்குரிய சாதனை செய்யும் காலத்தில் அவ்வழிபாடு தடைபட்டால் அது தீய வினையினால் உண்டானது என்று அறிக. எனினும் எல்லாவற்றுக்கும் காரணமாயுள்ள ஆதியான சிவத்தை தளர்ச்சியில்லாமல் சிந்தித்திருப்பவர் அவனது அன்பைத்தேடிக் கொள்வர்.

2669. சிவபெருமானை இடைவிடாமல் நினைந்து மெய்யுணர்வு பொருந்தப் பெற்றவர் அப்பெருமானுடன் பிரியாதிருபார். அவர்கள் எம் தலைவனுடன் பொருந்தி உலகியலில் எடுபடாமல் இருப்பர். உலகியலைப் பற்றாதபடியால் உலகச் சிறப்பை விரும்பாதவர் ஆனார். அங்ஙனம் அவர்களுக்குப் புகழத் தக்க மெய் உணர்வைத் தந்து பெருமான் அவருடன் ஒன்றாக விளங்கினான்.

2670. பசைக் கல்லின்மீது சிகப்புக் கல்லைப் பொருந்தினல் மற்றோர் ஒளி வரும். அதுபோல் தக்க குருவால் உபதேசிக்கப்பட்ட சன்மார்க்கத்தில் மாணவனிடம் வேறோர் தகுதி வந்து சேரும். இப்படிச் சேர்வதில் உண்டாகும் ஒளி நெற்றியின் அடிப்பகுதியான புருவ நடிவில் அழகிய சீவ ஒளிக்குள் விளங்கும் ஒளியாகும்.

2671. ஞான குருவிடம் சிவம் உண்ணும் வாயாகவும் உடலாகவும் உயிராகவும் பார்வையாகவும் விளங்கும். மண் நீர் தீ வாயு வானமாகவும் வானமற்ற அறிவு உருவாகவும் உடல் இயல்பை விட்டு நிற்கும் ஞான குருவின் நிலை உள்ளது.

2672. உலகம் முழுவதும் தலைவன் என்று போற்றிப் புகழும் சிவபெருமானின் ஆணை வழிச் சிவசக்தியாய் இவ்வுலகம் நடைபெறும். அவன் பெரிய வானத்தில் விளங்கித் தன்னை வணங்கும் அடியார்க்கு தகுதியான வான் வண்ணத்தையும் இவ்வுலகத்தில் அளித்து விளங்கினான்.

2673. விரிந்தும் உயர்ந்தும் உலகங்கள் எல்லாம் ஞானத்தில் விளங்கும் சிவபெருமானின் அருளால் நடைபெறுகின்றன். அங்ஙனமின்றித் தாம் வெறொன்றும் அறியவில்லை என்று அறிஞர் சொல்வர். இனி வான் மண்டலத்தில் வாழ்பவரான தேவரும் அசுரரும் இத்தன்மையைக் கண்டவர் அல்லர். ஆனால் எம்பெருமானின் அருளைப் பெற்றவரே அவனைக் கண்டவர் ஆவார்.

2674. பசுத்தண்மை உடைய ஆன்மாக்களை மற்றவர் வணங்கும்படியான தலைவர் ஆக்கி பின் மற்றவர் நாவால் துதித்து வணங்குமாறு குருநாதன் அருள் செய்தான். ஆதலால் நாம் இனிமேல் மற்றத்தெய்வத்தை வணங்கமாட்டோம். சிவம் ஒன்றாலேயே மற்றத் தெய்வங்கள் அதிகாரம் பெற்றுள்ளன. என்பதை தெளிந்தோம். இனி நாமே மக்களால் வணங்கும் கடவுள் ஆனோம்.

#####

வியாழக்கிழமை, 16 July 2020 12:02

குருமட தரிசனம்!

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

#####

ஒன்பதாம் தந்திரம்

குருமட தரிசனம்!

2649. படைக்கப்பட்டவையும் தீயில் இடும் ஆகுதியும் பரந்த ஓமத்தீயினின்று கிளம்பும் புகையும் வேத ஒலியும் என்னும் இவை எல்லாம் எம் சிவபெருமானைக் கருதிச் செய்வனவே என் எண்ணிக் குவிந்த மனத்துடன் குருவடிவாய் விளங்கும் ஒளியைத் தரிசித்தவர் இறைவனின் திருவடியைப் பொருந்த்தி நின்று உலகியல் வெம்மையை விட்டு நின்றவர்.

2650 அடியவனின் உள்ளத்தை விட்டு உறைவதற்கு வேறு இடம் இல்லை. உண்மையை ஆராயின் சீவனுக்கு வேறு இடம் உண்டோ. அங்ஙனம் அவனுக்கு இவன் உள்ளம் ஆகும் என்பதை நன்றாக அறிந்திருந்தும் அவன் சிவன் வேறாக இருக்கின்றான் எனக் கூறுகின்றனரே. என்னே அறியாமை.

2651. அறிஞரால் விரும்பபடும் சகசிரதளத்தை நான் அறிந்து கொண்டேன். பின்பு ஆராய்ந்து அறியப்பட்ட சிவபெருமானின் ஒளி ஒலியான திருவடிகளை என்னுள் கண்டு கொண்டேன். தேடிக் காண ஒண்ணாதவனும் மனமண்டலத்தைக் கோயிலாகக் கொண்டவனும் ஆகிய என் இறைவன் எப்போதும் மாறிக் கொண்டிருக்கும் உலகமாகவும் உயிராகவும் இருப்பதை உணர்ந்தேன்.

2652. இறைவன் எழுந்தருளி இருக்கும் இடம் எது மலை எது என்று கூறுவேன். சித்தமாகிய குகையும் குகையுள்ள இடமும் எனச் சொல்வோர் ஆறு ஆதாரங்களுடன் அஞ்ஞானமான காடு எது எனச் சொல்வேன். இவற்றைப் பதினான்கு உலகத்தில் உள்ளவர்க்கும் சொல்வேன்.

2653. ஞானியர் பொருந்தியிருக்கும் இடம் முகம் ஆகும் பெருமையுடைய மடம் முன் உள்ள ஒளியாகும். உள்ளத்தில் உண்ட்டாகும் நல்ல எண்ணங்களே அடியார் கூட்டமாகும். பிறர்க்கு நன்மை செய்வதை எண்ணியிருப்பதே நல்ல காட்சியாகும். நுண்ணுடம்பே மேலான ஆசனம் ஆகும். அருவுருவான ஈசனின் திருப்பெயரைக் கணித்தல் செயலாகும். அறிவு வானமே அவர் பொருந்தியிருக்கும் குகையாகும் இவையே அவரைத் தாங்கி நிற்பனவாகும்.

2654. அகநோக்குட்ன் ஆராயும் ஞானியர்க்கு அகமுகத்தில் விளங்கும் ஆன்மாவான பீடமே எல்லாத் தத்துவங்களுக்கும் ஆதாரம். உலக சொருபமான சத்தியே எல்லாவற்றிற்கும் இருக்கை. உலக காரணமாகிய தெய்வமே அனைத்தையும் இயக்கும் சிவம்.

2655. தூமாயை துவா மாயை என்னும் இரண்டும் ஆன்மாவை மறைக்க அதன் அறிவு விளங்காது நிற்கும். அன்னமய கோசம் பிராணமய கோசம் மனோமய கோசம் விஞ்ஞானமய கோசம் ஆனந்தமய கோசம் என்ற ஐந்து திசைகளும் நீங்கிட அந்த ஆன்ம ஒளியில் நிலைபெற்று ஆராயும் ஞானியர் காண்பான் காணப்படுவான் காண்கின்றான் என்ற மூன்றையும் கடந்து மேலான பிரணவ யோகத்தை அறிவர்.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26929871
All
26929871
Your IP: 52.54.103.76
2024-03-28 19:08

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg