gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

வியாழக்கிழமை, 04 October 2012 12:51

6-1.கல்பகவிருஷம்!

கல்பகவிருஷம்!                                                                                                    

ஒவ்வொரு மனித ஆன்மாவின் உடலும் சிறப்பான தன்மைகளைக் கொண்டது. பஞ்ச பூதங்கள் எனக் கூறப்படும், நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய அனைத்தின் தன்மைகளை உள்ளடக்கியது ஆன்மாவின் உடல். அந்த ஆன்மாவின் மூளை பலசிறப்புக்களைக் கொண்டது.
ஒரு வெற்றிக்குத் தேவையான சிந்தனை, செயலாக்கத் திட்டம், மேற்பார்வைத்திறன் ஆகிய மெச்சத்தக்க, ஒரு தலைவனுக்கு வேண்டிய அனைத்தையும் கொண்டுள்ளது. ஒரு தொடர்ச்சியான வெற்றிகூடிய ஆன்மாவாக இருக்கவிரும்பினால் அதன் செயல்பாடுகள் சிறப்பாக இருத்தல் வேண்டும். நேர்மறை எண்ணங்களை கொண்டிருத்தல் அவசியம்.
காலம் கனிந்துவரக் காத்திருந்து அந்தச் சந்தர்ப்பத்தில் தனது நினைவு திறனைத் தீட்டி செயல் வெளிப்பாடுகளை கவனமாக, நேர்மையாக வெளியிட்டு வெற்றிகாண முயலவேண்டும். வெற்றிக்காண வழிகளைக் கையாண்டு, தொடர்ந்து முயற்சி செய்தல் நன்று. படிப்படியாக திட்டம் நன்கு செயல்பட்டால் வெற்றியின் கனியை விரைவில் ருசித்து ஆனந்தம் அடையலாம்.
சந்தர்ப்பங்களை குறிவைத்து. திட்டங்களை வரிசைபடுத்தி, செயல் துரிதமாக, கடின உழைப்புடன், சூழ்நிலையின் மாற்றங்களுக்கு ஏற்றவாறு, திறந்த மனதுடன் நேர்மையாக செயல்பட்டால் பாதை, வெற்றியின்பாதை தெளிவாக புலப்படும். கடுமையான உழைப்பிலும் தடைகள் தாண்டி பெற்ற வெற்றியே ஆனந்தமானதாகும்.
இந்த வெற்றியை நாம் பெற்று ஆனந்திக்க நம் மூளையின் பல பகுதிகள் நமக்கு ஒன்பது வகை குணாதிசயங்களாக இயங்கி செயலாற்றம் காண்கிறது.
1.ஒரு செயலுக்காண உரிய, நல்ல தருணத்தை கண்டுபிடிக்க உதவும் திறமை. அந்த தருணம் எது என்பதை பகுத்து ஆராயும் பகுதி. இது ‘முத்து’ -ன் தன்மையைக் கொண்டது.
2.வாழ்வின் போட்டிக் களத்தை சீர்படுத்தி சுறுசுறுப்பாகக் குவியும் மையப்புள்ளியாக உறுதியாக தீர்மாணிக்கும் இந்தப்பகுதி ‘மரகதம்’ -ன் தன்மையைக் கொண்டது.
3.தொழிலின் நிலைகளை முதன்மையாக வரிசைப்படுத்தி சரியாக தயார் நிலையில் கண்ணுக்குப் புலப்படும் பார்வையில் வைப்பது. இது ‘புஷ்பராகம்’ -ன் தன்மையாகும்.
4.சமர்த்தியமான ஒழுங்கான விழிப்புணர்வுடன் அருகில் நெருங்கி நடை முறைப்படுத்தி விருத்தி செய்தல். இது ‘கோமேதகம்’ -ன் தன்மையாகும்.
5.தீவிர உணர்ச்சியுடன் வெற்றியடைய ஆவல்கொண்டு, பெருவிருப்பத்துடன் பண்படுத்தி விருத்தி செய்தல். இதுவைடுரியம்’ -ன் தன்மையாகும்.
6.தீர்க்கதரிசிபோல உந்துசக்தியை இயங்கவைத்தல். இது ‘நீலம்’ -ன் தன்மையுடையது.
7.எவ்வளவு தடைகள் வந்தாலும் தொடர்ந்து உறுதியாக முன்னேற்றம் காண மீண்டும் மீண்டும் முயற்சித்தல். இது ‘பவளம்’ -ன் தன்மையாகும்.
8.முழு வெற்றிக்காக தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொள்வது. தலைமையேற்று உறுதி எடுத்துக்கொள்வது. இது ‘வைரம்’  -ன் தன்மையாகும்.
9.இந்த எல்லா செயல்களையும் முன்னின்று நடத்தி வெற்றிகொள்ளும் தன்மை. இது ‘மாணிக்கம்’ -ன் தன்மை. மனிதனை, மனித ஆன்மாவை மனிதருள் மாணிக்கம் எனக்கூறும் வண்ணம் இந்தப் பகுதியின் செயல் இருக்கும்.
இப்படி ஒன்பது நவரத்தினங்களின் தன்மைகளை உள்ளடக்கிய, ஒன்பது ஒப்புயர்வற்ற செயலாற்றல்களால் ஆன்மா தனித்தன்மை பெறக்கூடியப் பகுதிகளை நம்முள்ளே, நம் மூளை கொண்டு செயல்படுவதால் அதை ஏன் கற்பக விருஷம் எனக் கூறக்கூடாது.
இந்த ஒன்பது குணாதிசயங்களை ஒன்றுகூட்டி செயல் பட்டால் மனித ஆன்மாவின் உடலே நீயும் ஓர் கற்பகவிருஷமே.
எந்த மரத்திலோ, செடியிலோ தோன்றிய விதை காற்றால், நீரினால் எங்கோ கொண்டு செல்லப்பட்டு, பலநாட்கள் புதையுண்டு, காத்திருந்து, முளைவிட்டு கிளர்த்தெழுகின்றது போல மனித ஆன்மாவே! நீ எங்கு தோன்றினாலும், எங்கு இருந்தாலும் உன்னுள் ஓர் அபரிதமானசக்தி இருக்கின்றது. அதை உணர், புரிந்துகொள். அதை வெளிக்கொணர முயற்சிசெய். மேன்மையடைவாய். வெற்றி கொள்வாய் வாழ்வில்.
ஒன்பது குணாதிசயங்களை தன்னுள்ளே கொண்டுள்ள உடலில் ஒன்பது துவாரங்களும் உள்ளது. இத்தனை ஓட்டைகள் உள்ள பாத்திரமாயிருந்தால் அனைத்தும் வெளியேறியிருக்கும். ஆனால் உடலில் உயிர் உடன் போகாமல், ஆன்மாவின் செயலுக்காக தங்கி இயங்குவதுதான் ஆச்சரியம். அது முற்றிலும் அருளாளனின் செயல்-குருஸ்ரீ பகோரா.

வியாழக்கிழமை, 04 October 2012 12:49

6.இறுதி உரை:

6. இறுதி உரை:
6.1. கல்பகவிருஷம்
6.2. இறுதியானஉரை
6.3. பூக்கள் பூத்த பூமி

 

 

நிலையாமை-காலத்தை-வீணடிக்காதீர்                                                            

இயற்கையின் கருணை நம்மை வாழவைக்கும். இயற்கையிலிருந்து நாம் பல நிகழ்வுகளை கற்றுக்கொள்ளலாம். அழகை ரசிக்கலாம். மனம் ஆனந்தப்படலாம். மணத்தை நுகர்ந்து அனுபவித்து பரவசப்படலாம். பலநிகழ்வுகளிலிருந்து வாழ்க்கைக்குப் பல பாடங்களை கற்றுத்தரும் முன்னுதாரணமாக திகழ்வதை கண்டு அதிசயிக்கலாம். எல்லாம் வீண் என்ற பொருளில் மண் என்கின்றோம். ஆனால் அதனுள் என்ன? என்ன? பிரமிப்புக்கள் இருக்கின்றன தெரியுமா?
மண்ணுக்குள்தான் ஓர் செடி, மரம், முளைவிட்டு உயிர்பித்து வளரமுடிகிறது. விதைக்குரிய ஈரம் உஷ்ணம் தந்து விதைக்கு உயிர் தந்து முளைத்து உலகில் வளர உதவிபுரிகின்றது. ஊர்வன, பறப்பன முதலியவற்றிற்கும் இந்தமண்ணே, மண்ணில் தோன்றியவையே ஜீவாதாரம். களிமண் என்கிறோம். அதிலிருந்து பாணை செய்கிறோம். அது உடைந்தால் மண்ணாகி மீண்டும் பாணை செய்யப் பயன்படுகின்றது.
ஆனால் மனிதா நீ தோன்றி வளர்ந்து வாழ்ந்து பின் இறந்தால் மண்னோடு மறைகிறாய். சாம்பலாய் கரைகிறாய். மீண்டும் உன் உடலிருந்து உடல் தோன்றுவதில்லை. மண் எல்லாவற்றையும் தன்னுள் வாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் பயன் தருகின்றது.
இயற்கையின் அனைத்து அங்கங்களும் நடத்தும் பாடங்களை நாம் புரிந்து கொண்டு, நம்மைச் சுற்றியுள்ள இயற்கையின் எழில்மிகுந்த, வர்ணணைக்குள் கட்டுக்கடங்காத அழகை வாரி இறைத்திருக்கும் அதன் கருணையை நன்றியுடன் போற்றி புரிந்து ஏற்றுக்கொண்டால் மண்ணில் இருக்கும்வரை வளமாக வாழ நம் எண்ணங்கள் உதவும்.
அகன்ற வானம், பரந்தகடல், வீசும் தென்றல், சுடர்விடும் ஓளி, உஷ்ணம்தரும் நெருப்பு, பாயும்நதி, கனிதரும் மரங்கள், பூத்துக்குலுங்கும் செடிகள் எல்லாவற்றையும் ஊன்றிப்பார்த்து உள்ளத்தோடு உறவாடினால் எத்தனையோ வாழ்வியல் பாடங்களை அங்கிருந்து நம்மால் பெறமுடியும்.
ஓர் சுணையிலிருந்து உற்பத்தியாகும் நீர் தன்வாழ்வுப் பாதையில் பிரவாகமாக ஓடும் நதியாக மாறிவிடுகின்றது. ஒவ்வொரு அடியாய் நகர்ந்து முன்னேறி பலசுனைகள், ஓடைகள், நீர்நிலைகளை தன்னுடன் சேர்த்து வளர்ந்து ஓரிடத்தில் சங்கமம் ஆகின்றது.
செல்லும் வழியெல்லாம் வளமளிக்கின்றது. தன் கடமையை செய்து தடையின்றி பயணிக்கின்றது. மலையும், மடுவும் சோதனையாக வந்தபோதும் அதைத்தாண்டி பிராவாகமாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கின்றது. தன் ஆற்றலை பயணத்தில் அதிகரித்துக் கொண்டு தடைகளை கடந்து தன் வழி பயணம் தொடர்கிறது.
எந்த நதியும் தடைகளைக்கண்டு திரும்ப நினைப்பதில்லை, தாண்டத்தான் முயலுகின்றது. முடிவு எனும்போது கடலில் ஐக்கியமாகிறது. மனிதனும் நதியைப்போன்றே பயணத்தை தொடர்கின்றான். வழியில் ஏற்படும் தடைகளைகடந்து சங்கமத்தை குறிக்கோளாகக் கொண்டு இலக்கையடையும் வரை தயங்காமல் பயணிக்கவேண்டும். நதியின் பயணத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பலப்பல.
நதியில் ஓரிடத்தில் நாம் நின்றால் நம்மை கடந்து நீர் சென்று கொண்டேயிருக்கும். நாம் நிற்க ஆரம்பித்தபோது இருந்த நீர் மீண்டும் கண்களுக்கோ, கைக்கோ வரா! பார்த்த நீரை எடுத்தால் அது அப்போதைய நீர், அவ்வளவுதான்.
அதை கீழேவிட்டால் மீண்டும் அதே நீர் கிடைக்காது. நதியின் போக்கில்வேறு நீர் கிடைக்கும். சென்ற நிமிடத்தில் எங்கோ ஓர் இலை உதிர்ந்திருக்கும், ஓர் விதை முளைத்திருக்கும், ஓர் பூ பூத்திருக்கும் அதை இந்த நிமிடத்தில் உணர இயலாது. கடந்தது கடந்ததுதான். இதுவே வாழ்வில் உணரவேண்டியது.
கடந்த அல்லது இறந்த கால நினைவுகளை நிகழ்காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தால் காலம் நிழல் காலமாகிவிடும். நிகழ்வுகள் இறந்த காலத்தினுடையதாக இருக்கும். இறந்தகாலத்தை நினைத்து இல்லாத ஒன்றுக்கு உயிர்கொடுக்க முயற்சித்து உயிரோடு இருப்பதை உயிரற்றதாக்கி விடாதீர்கள்.
அந்த காலத்தின் ஆன்மாக்கள் இப்போது இருக்கமாட்டார்கள். நம்மால் எதையும் செயல்படமுடியாது. அதன் தாக்கம் நம்மை வெகுவாக பாதிக்கும். இந்த முறன்பாட்டில் மனம் இயங்கினால் செயலாக்கம் சரிவராது. செயல்களில் குழப்பம் ஏற்படும். வெற்றிகள் வெகுதூரம் போய்விடும்.
கையில் கிடைத்த நேரங்கள், சந்தர்ப்பங்களை வீணடித்து விடாதீர்கள். அதை உங்களுக்கு, உங்கள் எண்ணங்களுக்கு, நண்பர்களுக்கு, உற்றார் உறவினர்களுக்கு, மனித சமுதாயத்திற்கு உதவும்படி செய்யுங்கள். அந்த நேரத்தை விட்டு விட்டால், நதியில் நம்மைக் கடந்த நீரைப்போல அது கடந்த காலமாகிவிடும். மீண்டும் அந்தநேரம் வரா. வேறுகாலம் தான் வரும். அதே பயனைத் தருமா என்பது யாருக்குத் தெரியும்!
அழகான ஓர் பெண். அவளை பலர் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் ஏதாவது ஓர்குறை கண்டு தவிர்த்துவிட்டாள். தான் மிகவும் புத்திசாலி. தான் செய்தது சரி என்றும் நினைத்தாள். காலம் கரைந்தது. அழகு குறைந்தது. உலகில் தனித்து இருப்பதாக உணர்ந்தாள்.
ஓர்காலத்தில் அழகால் எல்லோரையும் வசீகரப் படுத்தியிருந்த அவளுக்கு, தற்போது தனக்கு மட்டுமே அழகாகத் தோன்றினாள். அவளுக்குத் தெரிந்த அவள் அழகோ, புத்திசாலித்தனமோ எந்த வகையிலும் அவளுக்கு உதவவில்லை. மற்றவர்களிடமிருந்து பிரித்துதான் வைத்துவிட்டது.
ஓர்நாள் அவள் தோழியை சந்தித்தாள். கணவன், குழந்தைகளுடன் சந்தோஷமாக இருப்பது கண்டு அதிசயப்பட்டாள். அதுபற்றி அவள் தோழியிடம் கேட்க, ‘உன் வாழ்வில் யாரைச் சந்தித்தாலும் அவர்களின் நிறைவுகளைப் பார். குறைகளைத் தேடாதே! அவர்களிடம் அன்பு கொண்டு நட்புடன் பழகு! மற்றவர்களை வசீகரிப்பாய்! வாழ்வு ஆனந்தமயமாகும்,’ என்றாள்!
அதன் பிறகு அவளை அவள் திருத்திக் கொண்டாள்! ஆனால் அவள் இழந்தது இழந்ததுதான்! கரைந்த காலம் இறந்தகாலம், அது நிகழ்காலமாகாது! இனிவராது!
அதைப்போல நாளைப் பார்த்துக் கொள்ளலாம் எனவும் இருந்து விடாதீர்கள். நாளை என்பது நிச்சயமில்லா ஒன்று. எதுவும் இடையில் நடக்கலாம். அது யாருக்குச் சொந்தம்! உங்களால் உறுதியாக கூறமுடியுமா? மகாபாரத நிகழ்வு ஒன்று. தருமனிடம் வந்த பிச்சைக்காரனை நாளை வா எனக்கூறி அனுப்பினான். இதைக்கண்ட பீமன் முரசையறைந்து “என் தமையன் தருமன் காலத்தை வென்றுவிட்டான்” என்றான்.
தருமன் அவன் செயலுக்கு விளக்கம் கேட்க, ‘அண்ணா, நாளை நீ நிச்சயம் இருப்பாயா? பிச்சைக்காரன் நிச்சயம் இருப்பானா? உன்னைச் சந்திப்பானா? நாளை அந்த பிச்சையிடும் மனோபாவம் உன்னிடம் இருக்குமா? நாளைவரை அந்த பிச்சைக்காரன் அப்படியே பிச்சைக்காரனாக இருப்பான் என்பது என்ன நிச்சயம்? நீ இருப்பதும், பிச்சைக்காரன் அப்படியே இருப்பதும் உன் கூற்றினால் உண்மை என்றால், நீ காலத்தை வென்று விட்டாய் என்றுதானே பொருள்” என்றான். தர்மன் தன் தவறை உணர்ந்து அந்த பிச்சைக்காரனை வரவழைத்து இயன்றதை அப்போதே கொடுத்து அனுப்பினான்.
நாளை என்பது நம் கையில் இல்லை. எனவே இன்றே இப்போதே செய்ய வேண்டியதை செய்க என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும். “உறங்கும் போது விடுகின்ற மூச்சு சுழி மாறிப்போனாலும் போச்சு” என சித்தர்கள் நிலையாமை குறித்து சொன்னது, நிகழ்காலத்தில் ஒவ்வொரு கணமும் முறையான எண்ணங்கள் முறையான செயல்பாடுகளுடன் நம் வாழ்வுப் பாதையை அமைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
மூச்சுக்காற்றாக உள்வாங்குகின்றோம். வெளியே விடுகின்றோம். வெளியே போன மூச்சுக்காற்று உள்ளே திரும்பவும் வரவேண்டும். உள்வாங்கும் நிகழ்வு இல்லையெனில் மரணம் என்கின்றோம். ஒவ்வொரு சுவாசத்திற்கும் மூச்சுக்காற்று உள்ளேயும் வெளியேயும் சென்று வருகின்றது. அப்படியானல் உயிர் இருப்பதற்கு அறிகுறியான அடிப்படை உள்ளேயும் வெளியேயும் நீக்கமற எங்கும் நிறைந்துள்ளது.
ஒரு மனிதனின் வாழ்நாள் என்பது “ஒரு மூச்சு விடும் நேரம்” என புத்தர் சொல்லியுள்ளார். அதாவது வாழ்வில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் மனிதனின் வாழ்வை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என உணர்த்தியுள்ளார். நாளை பலா கிடைக்கும் என, கிடைத்த களாவின் ருசியை உதறிவிடாதீர்கள்! நாளை கிடைக்கும் பலா, கஞ்சி பலாவாகக் கூட இருக்கலாம்.
எனவே எதையும் நாளை என்றோ, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றோ ஒத்திப் போடாதீர்கள். கிடைத்ததை எப்படி சந்தோஷமாக அனுபவிக்கலாம் என்ற விழிப்புணர்வுடன் இன்றே, இப்போதே, இக்கணமே, இந்த நொடியிலிருந்து வாழ்வின் பயண ஓட்டத்தில் சுவைகளை அனுபவிக்க துடிப்புடன் செயல்பட்டு சந்தோஷம் காண முயலுங்கள்.
நீங்கள் இப்போது அமைதியாக இருந்துவிட்டால் எதையும் காணமுடியாது. தெரிந்தாலும் புரிந்து கொள்ள இயலாநிலையில் இருப்பீர்கள். நடப்பவை நடக்கட்டும் என சாதாரணமாகவும் விட்டுச் செல்லமுடியாது.
அப்படிச் சென்றால், ஓர் நிலையில் வாழ்வில் எல்லாம் அலுத்து கசப்பாகி போகும், அப்போது இது என்ன வாழ்க்கை, தேடிவந்த சந்தோஷங்களை இழந்து விட்டோமே என குமுறி நீங்கள் திசைமாறி செல்வீர்கள். அதில் என்ன பயன்!
பதவி, பெண் போகமும், சுகங்களும் உண்மையான சந்தோஷத்தை தொடர்ந்து தருவதில்லை. வேதனையைத்தான் விட்டுவைக்கின்றன. அதற்காக இவற்றை விட்டுவிடுவது சரிஎன்று அர்த்தமில்லை. வாழ்வில் ஈடுபட்டு அனுபவிக்கும்போது உங்களை, உங்களின் உள்ளே தேடிப்பாருங்கள்.
உண்மையை உணருங்கள். எல்லா நிகழ்வுகளுக்கும், எண்ணங்களுக்கும் அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என நினைவுகூறுங்கள். நீங்கள் ஒவ்வொரு நிலையிலும் சந்தோஷமாக இருந்தால்தான் உங்களுக்குள் சீராண எண்ண ஓட்டம் நடைபெறும்.
ஓர் நிகழ்வுக்குப்பின் நீங்கள் இருக்கமாட்டீர்கள் என்ற உண்மையை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இதுதான் பயணத்தின் கடைசி என நினைத்து அந்த நிகழ்வை செய்ய முயலுங்கள்! அந்த பக்குவம் தோன்ற வேண்டும். அடுத்த ஒவ்வொரு நிகழ்வையும் கடைசி என நினைத்து செய்யுங்கள். நீங்கள் பக்குவப்படுவீர்கள். உண்மையை உணர்வீர்.
நேற்று இருந்த ஒருவன், இன்று இல்லாமல் போனான் என்று நிலையாமை பெருமைதனை உடையது இப்பூவுலகம். மனித வாழ்வின் நிலையாமைபற்றி குண்டலகேசியில், ‘நமக்கு நாமே தினந்தோறும் செத்துக் கொண்டிருக்கின்றோமே, நாம் ஏன் அழவில்லை என்கிறது’.
‘பாளயாம் தன்மை செத்தும், பாலனாம் தன்மை செத்தும், காளையாம் தன்மை செத்தும், காமுறும் இளமை செத்தும் மூப்பும் முதுமையும் வருவதற்குள் ஒர் உடலில் எத்தனை சாவுகள்! குழந்தைப்பருவம், வாலிபப்பருவம், நடுவயது பருவம், என நம் வாழ்க்கைப்பயணத்தில் நாம் இறந்து கொண்டுதான் இருக்கின்றோம்.
விஞ்ஞான ரீதியில் பார்த்தால் உடலில் ஒவ்வொரு கணமும் ஆயிரக்கணக்காண செல்கள் இறப்பைச் சந்திக்கின்றன். புதிய செல்கள் பிறக்கின்றன. மாற்றங்கள் உனக்குத் தெரிவதில்லை மனிதா. தெரியாமல் எத்தனையோ மரணங்கள் உடலில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. தெரியும் மரணத்திற்கு ஏன் பயம் கொள்கின்றாய்.
கடவுளுடன் மனிதன் கொள்ளும் உறவைத்தவிர மீதி எந்த உறவும் நிரந்தரமல்ல. உறவுகள் என்றால் பிரிவு என்பது நியதி. உறவு தோன்றும் போதே அந்த உறவை பிரிவது என்பதும் தோன்றிவிடும்.
ஒரு உடல் மற்றொரு உடலை என்றேனும் பிரிந்தாக வேண்டும் இதுவும் நியதி. உங்கள் உள்ளே ஓர் ஒளி, ஓர் சக்தி தெரியும். அதைப் புரிந்துகொண்டு செயல்படுவீர். ‘தன்னை அறிதல்நிகழ்ந்து விட்டால் எது குறித்தும் அச்சமில்லை. பயம் என்ற சொல்லுக்கு இடமில்லை.
என்றும் உங்களிடமிருக்கும். உங்களுக்குள் ஓர் மறு மலர்ச்சி ஏற்படும். நீங்கள் உங்களை அறிந்ததால் மரணம் என்ற பயமில்லை. உயிரின் தன்மை புரிந்துகொள்ள வேண்டும்.
விழிப்புணர்ச்சியுடனிருந்தால் உங்களுக்குள்ளே பிறப்பும், இறப்பும் நிகழ்வதை அறியமுடியும். எந்த கணத்தில் உயிர் பிரியும் எனத்தெரிந்தாலும் ஆனந்தமாக ஓர் ஆன்மாவால் இருக்கமுடிந்தால், அது அந்த ஆன்மா மேன்நிலையை எட்டியுள்ளது என அறியப்படும்.
என்றென்றும் கடலுக்குள்ளே உள்ள மீன் தண்ணீரில்தானே இருக்கிறோம். கடல் எங்கே என்று தேடியதைப்போல், நம் உள்ளே அருள் உருவத்தை வைத்துக்கொண்டு அதை தேடிக் கொண்டிருக்கின்றோம்.
பார்வையற்றவனுக்கு சூரியனும், சந்திரனும் ஒன்றுதான். எந்த ஒளியும் தெரியாது. ஆன்மா உடலுடன் சேர்ந்து உலகைப் பார்க்கின்றது. அருள்பற்றி தெரியவேண்டும் என்ற உணர்வு இல்லை. அருட்கண் தானாக தோன்றுவதில்லை.
ஆன்மா படிப்படியாக பக்குவமடைந்து அருள் ஒளிபெற வேண்டும், காணவேண்டும் எனத்தீவிரமாக விரும்பும்போது திருஅருள்சேர்ந்து அருள் அனுபவத்தை அனுபவிக்கின்றது.
சம்பந்தர் பெருமான், “உள்ளத்தே அருள் புகுந்த காரணத்தால் கிரகங்களும், யமனும், கொடியவிலங்குகளும், நோய்களும், காலமும், நேரமும், எல்லாமும் நல்லதே செய்யும்,” எனப் பாடியுள்ளார்.
மனிதன் தனக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம் இவைகளைச் சேகரித்தபின் தன் குடும்பத்திற்கு, தன் எதிர்காலத்திற்கு, தன்னை சார்ந்தவர்களுக்கு எனச் சேகரித்தான். இவ்வளவு செய்த மனிதன் தான் எப்போதும் இறப்பதில்லை. தன் உடம்புதான் இறக்கின்றது. என்ற நினைவுடன் தான் எப்போதும் ஆனந்தத்துடன் இருக்க எதையும் செய்வதில்லை.
இறந்தபின் என்ன சரணாகதி ? உடலில் உயிர்கொண்டு சேகரித்த பணம், உடலைவிட்டு உயிர் சென்றபின் எவ்வளவு தூரத்திற்கு உதவும். சற்று நிதானமாக சிந்தியுங்கள்.
நமக்கு தற்போதுள்ள திறமை, பண்பு, மனம், சக்தி இவைகளைவைத்து நம் உற்றார் உறவினர் குடும்பத்தினர் எல்லோருக்கும் பாதுகாப்பாக உபயோகமான காரியங்களைச் செய்து கொண்டதுபோல் நமக்கும் செய்து கொள்ளவேண்டும். நமக்கு என செய்யும் செயல்கள் அநாவசியமாக தோன்றும், ஆனால் அவைகள் அவசியமான செயல்களாகும். இறப்பு ஒரு ஆன்மாவிற்கு தூக்கம் போன்றது. பிறப்பு உறங்கி விழித்தலைப் போன்றது. பிறப்பு, இறப்பின் தன்மைகளை உணர்ந்தவராயிருந்தால் உங்களுக்கு அழுகை வராது. ஆனால் இறப்பின் தன்மை அதிர்ச்சி தரும். இதுபோன்ற வேதனை ஒவ்வொரு மனித உயிருக்கும் தேவையா! இறைவா! என்ற கேள்வி எழும்.
அவரது நினைவுகள் காலப்போக்கில் கரைந்திருந்தாலும், நீங்கா நினைவுகள் எழுந்து உங்கள் நினைவுகளில் குடிகொள்ளும். ஏதோவொரு துக்கம் வேதனை உங்கள் நெஞ்சை பிசையவைத்து துன்பம் தரும்.
இந்த ஜென்மத்தில் அவரின் சந்திப்பு முடிந்தது. மீண்டும் அவரை எந்த ரூபத்தில் எப்போது பார்க்கப்போகிறோம் என்ற நினைவு அழுந்தும். ஆன்மாக்கள் ஒரு வயப்பட்டிருந்தால் எந்த ரூபத்திலாவது மீண்டும் மீண்டும் சந்திப்புகளும் பிரிவுகளும் நடந்து கொண்டேயிருக்கும். உலகின் மாயை இது.
“ஊனாலும், உயிராலும் உள்ள பயன் கொளல்” என்று நாவுக்கரசர் சொல்லியருளியுள்ளார். உடம்புக்கும் பயன் உண்டு. உயிருக்கும் பயன் உண்டு. உயிரை நீங்கள் தனியாக காணமுடியாது. உடலோடு சேர்ந்து இருக்கும் போதுதான் உணரமுடியும்.
உயிருடன் கூடிய உடலைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளின் தாக்கங்களை உடல் உள்வாங்கி உயிராகிய ஆன்மாவிற்கு அளித்து அதை செயல்படவைக்கின்றது. உடலிலிருந்து உயிர் நீங்கினால் அது ஜடமாகிறது. சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை உணரமுடியா நிலையில் இருக்கிறது. அதைபிணம் என்று மண்ணுக்குச் சமர்பிக்கின்றோம். மண்ணோடு மண்ணாகிறது.
மூச்சுக் காற்று என்கின்றோம். மூச்சு நின்றுவிட்டது என்கின்றோம். உயிர் உடலை விட்டு நீங்கியதா என்பதை அறிய மூச்சு இருக்கின்றதா என சோதனைச்செய்கின்றோம். அதனால் மூச்சு காற்றுதான் ஆன்மாவா! இல்லை உயிரா! ஏதுமில்லை.
உயிர் போனபின்னும் உள்ளே சென்ற மூச்சு காற்று உடலில் நிரம்பிதான் இருக்கின்றது. ஆனால் வெளியே வந்து உள்ளே செல்லும் செயல் இல்லை. இந்த செயல் ஆன்மாவினுடையது. ஒரு கருவியாக காற்று மூச்சாக வந்து செல்வது ஆன்மா இயக்கத்தில் இருக்கின்றது என நம்மை உணரவைப்பதற்காக. ஆன்மா செயல்பட ஓர் கருவியாக துனைபுரிவது காற்று.
நிகழ்வுகளின் சாதகபாதகங்கள் உயிரின் ஆன்மாவிற்கே! உயிரால் உடம்பு இயங்குகின்றது. உடம்பால் உயிர் உணர்ச்சிகளையும், எழுச்சியும் பெறுகின்றது. எனவே ஆன்மாவின் உயிர் என்றும் எப்போதும் நல்லநிலையில் உலவ நல்ல எண்ணங்கள் நல்ல செயல்கள் செய்து ஆன்மாவின் நலம் பேனுங்கள்.
ஆன்மாவின் ஆதாரம் உயிர். அந்த உயிர் தங்குவதற்கு, உடல் ஆரோக்கியம் வேண்டும். ஆரோக்கியத்திற்கு மௌனம் அவசியமானது. சலனமற்ற மௌனம் பல அர்த்தங்கள் கொண்டது-குருஸ்ரீ பகோரா

வியாழக்கிழமை, 04 October 2012 12:46

5-8.ஆத்மஞானம்!

ஆத்மஞானம்!                                                                                                          

ஒரு விதிக்குட்பட்டு அண்டசராசரமே இயங்குகின்றது என்ற ஞானம் வேண்டும். பேரண்டத்தின் இயக்கத்தை மாற்றமுடியும் என நினைப்பது அஞ்ஞானம். ஒரு பேராற்றலின் நியதிப்படி எல்லாம் நடக்கின்றது. யாரும் அதில் குறுக்கிட முடியாது. ஆசை அடங்கிய மனதிலிருந்துதான் ஒளி பிறக்கின்றது. ஞானம் தெரிகின்றது. ஆசையில்லை எனில் பாவச் செயல்களில்லை.
உடலைவிட்டு ஆன்மா சென்றபின் என்ன ஞானம் வேண்டியிருக்கின்றது! ஒருவன் உயிரோடு இருப்பதே ஞானம் பெறத்தகுதியாகும்! ஞானம் பெற நல்லவனாக இரு! நன்மை செய்! மனிதநேயம் கொண்டிரு! அனைவரிடமும் அன்பாயிரு! அன்பான, மிருதுவான, இனிய, ஆறுதல் தரக்கூடிய எளிய பேச்சுக்கள் பேசு!
கர்வம் கொள்ளாதே! கடுமையான, கோபமான இழிந்த சொற்களைப் பேசாதே! எல்லா உயிர்களிடமும் கருணை உள்ளவனாயிரு! கருணை ஒரு தெய்வீக உயர் குணம். அந்த நற்குணத்தை உயிர்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம் கொண்டிரு! உண்மையைத்தவிர வேரொன்றிலும் ஆசை வைக்கக்கூடாது. உண்மைக்காகவே உண்மையை விரும்பவேண்டும்.
இவையெல்லாம் ஒருவன் ஞானம்- அத்வைத ஞானம் - ஆத்ம ஞானம் அடைவதற்கு போதுமான படிகள். எல்லா தீர்க்கதரிசிகளும் இதைத்தான் சொல்லி இருக்கின்றார்கள் அவர்தம் பாணியில். மற்றவரின் கருத்துக்கள், ஆலோசனைகள், நம் கையில் கட்டும் கடியாரம்போல மற்றவரின் கடியாரத்துடனும், கருத்துக்களுடனும் ஒத்துப்போக வேண்டும் என்று அவசியமில்லை. நம் கையில் உள்ள கடியாரம் காட்டும் காலம் சரியானது என நாம் நினைப்பதுபோல், நம் கடியாரத்துடன் ஒத்துப்போகும் கடியாரம்போல், நம்மோடு ஒன்றிய கருத்துக்கள், ஒத்துப்போகும் மனிதர்களை கண்டு கொள்! வாழ்வு சுவராஸ்யமாகும்.
ஞானத்திற்குரிய லட்சணங்கள் எட்டாகும். 1.சொல்வதை, கேட்பதை, பார்ப்பதை உடனே கிரகிப்பது, 2. அதை உடனே புத்தியில் நிலை நிறுத்துவது, 3.அதை என்றும் மறவாமல் இருப்பது, 4.கிரகித்ததை பிறருக்கு எடுத்துரைத்தல், 5.அதை புதிய யுக்திகளுடன் சிறப்புடன் கூறுவது, 6.அடுத்தவரின் யுக்திகளை மறுப்பது, 7.ஒருவரின் பேச்சின் பின்னனியில் உள்ள உண்மைகளை புரிவது, 8.அதன் உண்மை நோக்கத்தை உணர்வது என்பனவாகும்.
ஒருவனுக்கு ஞானமடைய நிறைய பயிற்சிகள் தேவைப்படுகின்றது. அதற்கு பல காலம் ஆகலாம். ஆனால் பலகாலம் பயிற்சி என்பது அவரின் உள்ளத்தின் கண்களைத்திறக்க கொடுக்கப்படும் பயிற்சிதான். ஏனெனில் விழி இமைகளை திறந்துவிட்டால் பார்ப்பது என்பது ஒரு கணத்தில் நடந்துவிடும். ஞானம் உதிக்கும்போது உருவங்கள் மறையும். பிரபஞ்சத்தின் உருவமற்ற நிலைகள் உணரப்படும்.
இவ்வுலகில், “அடைவதற்கு ஏதுமில்லை என்பதே ஞானம்! இழப்பதற்கு ஏதுமில்லை என்பதே அறிவு!” அறியாமை சிறிதும் கலக்காத அறிவுதான் ஞானம்.
ஒருவர் இறப்பது எப்படி! அந்த நிகழ்வு எப்படி இருக்கும்! அனுபவித்தவர் யாருமில்லை! அவர்தம் அனுபவத்தை உங்களுக்குக்கூற. உடலிலிருந்து உயிர் எப்படி, எப்போது, எங்கிருந்து பிரியும், யாருக்கும் ஒன்றும் தெரியது. அது புரியாத புதிர்.
இறந்தபின் ஏற்படும் அசையாதன்மை கொண்டுதான் நாம் உணர்கிறோம். எல்லாம் கொண்டிருந்த உடல், அது ஏதுமற்ற நிலையில் இருக்கும்போதுதான் அறிகிறோம். எந்தவித பந்தபாசமும், துயர துக்கங்களும் இல்லா நிலை. சும்மா இருத்தலில், கிடத்தலில் ஓர்சுகம் என்று உயிர்போகும் தருணம் எது? யார் அறிவார்!
நடப்பதை முன்கூட்டி சொல்வது மட்டுமல்ல ஞானம். அதனால் பாதிப்புகள் ஏதும் நடக்காமல், விதியின் வலியை குறைத்து முன்னெச்சரிக்கையாக வேதனையை அகற்ற முயலுதலே ஞானம்.
பந்தயத்தில் ஓடுகின்ற அனைவரும் முதலாவதாக வருவதில்லை. வரவும் முடியாது. யாராவது ஒருவர்தான் வரமுடியும். தேடுபவர்கள் அனைவருக்கும் தெரிவதில்லை. அதற்காக தேடாமலும் இருக்க முடியாது. ஆகவேதான் “தேடுங்கள் கிடைக்கும்” என்றார்கள். தேடுபவர்களுக்குத்தான் தேடல் புரியும், தெரியும், கிடைக்கும். ஞானதாகம், வேட்கையில் வெற்றி என்பது சாதனை அருள்.
எதையெல்லாம் விரும்புகின்றீர்களோ அதையெல்லாம் வெறுத்து ஒதுக்குங்கள். எதையெல்லாம் வெறுக்கின்றீர்களோ அதையெல்லாம் விரும்புங்கள். அப்போதுதான் ஞானம் பிறக்கும், உண்மையில் எதை நேசிக்கின்றீர்கள், எதை வெறுக்கின்றீர்கள் என்று.
உன்னோடு இருக்கும் உயிருள்ள, உயிரற்ற எல்லாவற்றையும் உன்னுடையது என்று நீ நினைக்கும் வரை எதையும் விட்டுக்கொடுக்க நீ தயாரில்லை என பொருள். உலகில் உள்ள எதுவும் உங்களது இல்லை என்று உணரும் நிலையை நீங்கள் அடைந்தால், அந்த பக்குவம் வரும்போது, நீங்கள் விட்டுக்கொடுக்க ஏதும் இருக்காது.
மனிதன் சுயநினைவு, மற்றும் சிந்தனைகளையிழந்து, அவனது கர்மபலன்கள் பிரதானமாகி துன்பம், துயரம், நோய், நொடி, அகாலமரணம் போன்ற அனுபவங்களால் ஒரு சாரமும் இல்லா வாழ்க்கையில் உழன்றுகொண்டு இருக்கின்றான். இது அவனின் வாழ்க்கைப் பயனத்தில் வெளிச்சம் அல்லாத அதாவது ஒரு துளியும் சந்தோஷம் இல்லாத இருண்ட வாழ்க்கைப் பகுதியாகும்.
தன்னைப்பற்றிய உண்மைகளை மனித வாழ்வின் பயணத்தின் முடிவுகளை புரிந்தும் புரியாமலும், அறிந்தும் அறிந்து கொள்ள முயலாதவனாகி வாழ்கின்றான். இந்த அறியாமை எனும் இருள் அகற்றி வாழ்வில் மீண்டும் அல்லது மீதமிருக்கும் பகுதியை அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையாக வாழ முயற்சிக்கவேண்டும். மனித பிறப்பின் நோக்கங்களை சந்தோஷங்களை அடைய வேண்டும்.
அமைதிக்கு அடிப்படை மனதை ஓர் நிலைப்படுத்துதலே. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு மனதை அலை பாயவிடாமல் நிலைப்படுத்தப் பழகிக் கொள்ளவேண்டும். அப்போதுதான் உருவமில்லா மனம் உருவத்தின் உள்ளே உள்ள ஆன்மா ஞானம் பெற உதவும்.
இருள் நீங்கி வெளிச்சம் நிறைந்த ஞானம் பெற்ற ஆன்மா- ஆத்மஞானம் அடைய முன்னேறி இறுதியில் அந்த ஆத்மார்த்தமான ஞானம், ஒளிமயமான மகிழ்வுடன்கூடிய அற்புத ஆனந்த சந்தோஷத்தை அடைகின்றது. அதுதான் எல்லை. அதற்குமேல் வேறு என்ன வேண்டும், இந்த பூ உடலின் ஆன்மாவிற்கு! ஒன்றுமில்லை!
சுதந்திரமான உணர்வு நிலைகளுடன், மரணபயமின்றி, எல்லாம் நிறைந்திருக்கின்ற இச்சைகளே இல்லாத சீரான செழிப்புமிகுந்த வளமையுடன் கூடிய வாழ்க்கையில் சந்தோஷம்தவிர வேறு என்ன வேண்டியிருக்கின்றது. தன்னிடமுள்ள அசுர குணங்களை தன் ஞான அறிவால் பஸ்பம் செய்து, அன்பையும், அஹிம்சையையும், அமைதியையும் கொண்டு பிறருக்கு வழிகாட்டியாக விளங்கும்போது அந்த பூத உடலின் ஆன்மா சிறப்படைகின்றது. பூத உடலை நீக்கும்போது அதன் முழுபயனும் அந்த ஆன்மாவிற்கு கிடைக்கின்றது.
ஞானமில்லா மனதையே அசுர பழக்கவழக்கங்கள் ஆக்ரமிக்கின்றன. இந்த தேகசுகங்களை. தேகதர்மத்தை கடந்து வெற்றிபெற முயலுங்கள். எப்படியும் இந்த தேகம் பூமிக்குப் போய்விடும். அப்போது உடலிலிருந்த ஆத்மா நல்வழிக்குச் செல்ல இப்போதிருந்தே உங்கள் உணர்வுகளை விழிப்படையச்செய்து உரிய பாதையை கண்டுகொள்ளுங்கள்.
தனிமை என்ற ஓர் நிலையில்தான் ஓர் ஆன்மா மௌனம் என்ற நிலையை அடையும். அப்போதுதான் மனம் சிறிது சிறிதாக வாழ்வு குறித்த ஞானத்தை அடைய வழிகிடைக்கும். காற்றுக்கு செடி, கொடி, மரங்கள் அசைந்து அதன் பலவீனத்தை காட்டுகிறது, மலை அசையாது உறுதியை காட்டும்.
அதிகம் பேசுபவன் அவனது பலவீனத்தை எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறான். மௌனியாக இருப்பவன் அவனின் உறுதியை பலத்தைக் காண்பிக்கிறான். பேசாமல் இருப்பது பெரும் திறமையாக இருந்தாலும், தேவைக்கு சுருங்கச் சொல்லி தெளிவுபடுத்தி பெருமையடைகிறான். ஞானிகள் கூறும் சிறு விஷயங்கள்கூட வாழ்வின் ஆதாரமாகிவிடும்.
மரணம் என்ற நிகழ்வை ஏற்றுக் கொள்பவர்களால்தான் இருக்கும் வாழ்வை முழுமையாக ரசிக்கமுடியும். எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற ஞானநிலை புரிந்திருந்தால் அந்த ஆன்மா அதன் ஒவ்வொரு சுவாசத்தையும் அதன் மதிப்பையும் உணர்ந்து அனுபவிக்கமுடியும். உண்ணும் உணவையும், அருந்தும் நீரையும், அதை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் அதனால் ரசிக்க முடியும்.
இந்த நிமிடத்தில் நடந்தது, கிடைத்தது, அடைந்தது  எதுவும் நிலையானது இல்லை என்று புரிந்தால்தான் கிடைத்ததை அனுபவித்த ரசனையின் ஆழம் புரியும். நீங்கள் வாழும் வீடு, சுற்றியிருக்கும் சுற்றம், நடக்கும் பாதை, தழுவும் காற்று, மேல்படும் வெயில், மழை, பார்த்து ரசிக்கும் சூரிய, சந்திர இயற்கையெல்லாம் இந்த ஆத்மாவின் உடலுக்கு தற்காலிகமானதுதான். அதுபுரிந்தால்தான் அந்த உணர்வு வாழ்வு பயணத்தில் சந்தோஷத்தைக் கண்ட ஆனந்தத்தை ஏற்படுத்தும்.
கரும்பிலிருந்து பெறவேண்டிய நண்மைகள் அனைத்தும் பெற்றுவிட்டால் அதன்பின் கரும்பு சக்கை எனப்படும். அது எரிந்தால் உரியவனுக்கு நஷ்டம் ஏதுமில்லை. அதைப்போன்றே இந்த ஆத்மாவின் உடம்பின் மூலம் பெறவேண்டியதை, ஞானத்தை ஓர் ஆத்மா பெற்றுவிட்டால் அல்லது உணர்ந்துவிட்டால் இந்த உடம்பு என்ன ஆனால் என்ன!
அதற்கு மரண பயமிருக்காது. தன்னை உணர்ந்து கொண்டவன் மரணத்திலிருந்து விடுதலை பெறுகிறான். அவன் இறந்தான் என்றால் அவனின் உடம்பு அசைவற்றுவிட்டது. ஆன்மா இறக்கவில்லை என்பதாகும்.
ஞானம் பெறாதவர்கள்தான் பயப்படுகின்றார்கள். அஞ்சி துடித் துடிக்கின்றனர். மரணம் என்பது முற்றுப்புள்ளியல்ல. ஆன்மா அடுத்து வேறு ஓர் உடலைத் தேடுகின்றது. பலபிறவிகளின் தொடர்ச்சி இப்பிறவி. புதிய சூழலில் தொடர்ச்சி தொடரத்தான் போகிறது. மரணம் துக்கமில்லை. அதில் துயரமில்லை, அது ஒரு புதிய வாசல், வழியோடு காத்திருக்கின்றது, இதில் வருத்தப்பட, துக்கப்பட என்ன இருக்கின்றது.
மரணம் ஓர் உருமாற்றம். உடலின் உயிர்- ஆன்மா வேறு உடலைத் தேடும் நிகழ்வு. ஒரு மார்பிலிருந்து பாலூட்டுதலை தாய் நிறுத்தியதும் அழும் குழந்தைக்கு அடுத்த மார்பைக் காட்டுகின்றபோது அதன் அழுகை நின்றுவிடுகின்றது. இதைப்போன்றதே மரணம். அதன் துயரம். இங்கு ஒர் சிறு இடைவெளியில் எல்லாம் மறந்த நிலையில் மீண்டும் பிறப்பு. அங்கு ஆனந்தத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால் பிறப்பு எங்கு என்பதுதான் யாருக்கும் தெரிவதில்லை.
எந்த நிலையிலும் மனம் கலங்காமல் மகிழ்ச்சியாக வாழும் ஞானமே உண்மையான ஞானம். மனித மனம் ஞானம் என்ற பக்குவத்தை அடையவேண்டும். நீர் நிரம்பிய குடத்தை கிணற்றுள்ளிருந்து இறைக்கும்போது கணம் தெரிவதில்லை. தண்ணீர் மட்டத்திற்குமேல் வந்தபின் அதன் கணம் நம்மால் உணரப்படுகின்றது. இதுபோன்றே நமது துக்கங்களை ஞானம் என்ற கிணற்றில் அமுக்கிவிட்டால், நமது துக்கம் நீரினுள் இருக்கும் குடத்தைப்போல் கணம் தெரியாமல் பரமலேசாகிவிடும்.
பொதுவாக எல்லோரும் என்றாவது ஓர்நாள் ஓர் விலாசத்தை தேடி அலைந்தவராகத்தான் இருப்பர். அவர்களுக்கு தாங்கள் எங்கிருந்து வந்திருக்கின்றோம், எங்கு இருக்கின்றோம், எங்கு செல்ல வேண்டும் என்பது அனைத்தும் தெரிந்தும் போகுமிடத்திற்கு வழிதெரியாமல் தவிப்பர். ஒரே உண்மை என்னெவெனில் எல்லாம் தெரிந்த அவருக்கு எதோ ஓரு காரணத்தினால் அவர் செல்லும் வழிதான் எது என்று புரியவில்லை.
எந்த வழியில் சென்றால் ஒரு பிரயோஜனமும் இல்லையோ, அந்த வழியில் தெரிந்தே செல்வது கூடாது என்பதுதான் ஞானம். ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் சுய அறிவு ஒளிர்ந்து பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. கண் புலனால் பார்ப்பதை ஆத்மாவிற்கு ஏற்றதா என ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. அதைக் கவனம் என்ற ஞானமின்றி விட்டு விடுகின்றனர். காண்பது அறிவூட்டும், அந்த அறிவு நமது அனுபவம் மூலமாக, ஆத்மாவின் உணர்வுகளை, செயல்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. அறிவால் ஞானத்தை பெறலாம்.
இறையைத்தேடி அலையும், அடைய நினைக்கும் ஆன்மாக்கள் வழியை தொலைத்து விட்டுத்தான் விழித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் வழியேதும் தவறி விடவில்லை. அவர்கள் வழிகாட்டப்பட வேண்டியவர்கள்! தண்ணீரில் பார்த்து தன்னை தெரிந்து கொள்பவன் தான் என்ற எண்ணமுடையவன். அவனால் விரைவில் ஞானம் அடைய முடியாது. தண்ணீரில் பார்த்தால் அதனுள்ளே ஜீவராசிகளைப் காண்பவனே ஞானம் விரைவில் அடைவான்.
அருள் பெற பக்தனாக இருப்பது சிறப்பு. அந்த பக்தியே அகங்காரமாகித் தன்னைத் தவிர வேறு சிறந்த பக்தர் இல்லை என நினைப்பது ஆணவத்தின் அறிகுறி. எல்லோரையும் போற்றுவதும், நம்மைவிடச் சிறந்த பண்புகள் அவர்களிடம் இருக்கும் என பணிவு கொள்வதுதான் ஞானத்தின் ஓர்நிலை.
ஒருவன் ஞானியாக, யோகியாக ஆகிவிட்டன் என்றால் அவனுக்கு துக்கம் என்று எதுவுமில்லை. இது வேண்டும் அது வேண்டும் என்ற நிலையில்லா ஆனந்த நிலை.அது. எது செய்தாலும் தான், நான், எனக்கு என்ற எண்ணங்களில்லா செயல்பாடுகளை அடைந்திருப்பர். எல்லா செயல்களிலும், பரம காருண்ய உணர்ச்சி, மனிதநேயம் தென்படும். எனவே நிம்மதியற்ற மனித வாழ்வில் உழலாமல் ஒரு ஞானியாக, யோகியாக மாற முயற்சியுங்கள். சமுதாயத்தில் துன்பத்தில் உழலும் மக்களுக்கு உதவி புரியுங்கள். உள்ளத்தில் உண்மையை புரிவதற்கு வழிகாட்டியாக செயல்படுங்கள். மனிதநேயம் மிக்கவராக மாறுங்கள்.
சாஸ்திரங்கள் விவேகம், வைராக்யம், சமம், தமம், முமுக்ஷுத்வம் முதலியனவற்றை ஆத்ம ஞானம் கிடைக்க அடிப்படைத் தகுதிகளாகச் சொல்கின்றன. ஞானம் ஓர் இயல்பான நிலை. புலி வேஷமிட்டவன் புலியைப்போல் நடித்துக் காண்பிப்பான். நிஜப்புலி அதன் போக்கில் செல்லும். ஞானியாக நினைப்பவனின் செயல்கள் மாறுபட்டிருக்கும். உண்மையான ஞானி எந்த ஆர்பாட்டமும் இன்றி உணர்வுமயத்துடன் இயங்குபவராக இருப்பர்.
அந்த ஊர் மக்களின் குறைகளை எல்லாம் தீர்த்து வைக்கப் போவதாக கூறிய ஞானியை சந்தித்தார் யோகி, ஞானியிடம் சுவாமி நீங்கள் நிறைய தவம் செய்து சித்திகள் அடைந்ததாகக் கேள்விப்பட்டேன். அதனால் உங்களைப் பார்த்துப் போக வந்தேன் என்றார். ஞானி உற்சாகத்துடன் என்னைப் பற்றி இந்த ஊருக்கே தெரியும் என தற்புகழ்ச்சி கொண்டார்.
சுவாமி, எதிரே வரும் அந்த மாட்டை கொல்ல முடியுமா! என்றதைக் கேட்ட ஞானி தன் கமண்டலத்திலிருந்து சிறிது ஜலத்தை எடுத்து மந்திரம் உச்சாடனம் செய்து அந்த மாட்டின் மீது தெளிக்க அது அப்படியே சுருண்டு வீழ்ந்தது. யோகி, உங்களுக்கு நிறைய சக்தி உள்ளது, இப்போது அந்த இறந்த மாட்டை உயிர்ப்பிக்க முடியுமா! என்றவுடன் மீண்டும் மந்திரம் உச்சரித்து நீர் தெளித்து அந்த மாட்டை உயிர்ப்பித்தார்.
அப்போது யோகி ஞானியைப் பார்த்து கேட்டார், சுவாமி, நீங்கள் ஒரு மாட்டை இறக்க வைத்தீர், பின்னர் அதையே உயிர் பிழைக்க வைத்தீர், அபரிதமான சக்தியைக் கொண்டுள்ள நீங்கள் அடைந்த பலன் என்ன! மாடு, இந்த மக்கள் அடைந்தது என்ன! என்றதை கேட்டவுடன் ஞானிக்கு சாட்டையால் யாரோ அடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. தற்புகழ்வுக்காக தன் சக்திகளை விரயமாக்கியது விளங்கியது. ஞானி என்பவர் கூட்டம் சேர்ப்பவராக இருத்தல் கூடாது. வழிகாட்டுபவராக இருத்தல் வேண்டும் என மீண்டும் தெளிவு கொண்டார்.
பொதுவாக சத்தியத்தை எப்போதும் நினைத்துப்பேசி, தர்மங்களை ஆதரித்து, பரமத்தை அறியமுயலுதலே மனிதனில் தேவன் எனச்சொல்வதற்கு உரியவன். பரந்து விரிந்து நிற்கும் அருளின் தன்மையை உணர்ந்தவன், ஞானம் தெளிந்தவன், அதில் இறங்கி நீந்தத் தொடங்கினால் ஆனந்தம். என்றும் எப்போதும் ஆனந்தம். ஆனந்தமான சந்தோஷம்.
அதை புரிந்துகொள்ள, அந்த ஞானத்தை நம்முள் நிலைநிறுத்த பாவனை அவசியமானது. எங்கும் எல்லாமுமாய் காணப்படுகிறான். எல்லாமுமாய் இருக்கின்றான். உணர்வுகளின் உள்ளே புலன்களினால் காணமுடியா நிலையில் இருக்கின்றான். உயிருடன் சாட்சியாக இருக்கின்றான். இப்படி பாவனை செய்தால் இறைவனை அடையலாம் என்கிறது திவ்யபிரபந்தம். இதை பிரம்ம பாவனை என்பர் வேதாந்திகள்.  
இந்துமதத்தில்  இறைவனை தாய், தந்தையாக பாவித்து, பாவனை செய்து ஞானமடைய வழிகாட்டியுள்ளனர். அபிராமியின் மைந்தனாக தன்னை பாவனை செய்து வழிபடுகிறார் அபிராமிபட்டர். ஞானயோகம் பயின்றுவிட்டால் இன்பம்தரும் மயக்கமும், துன்பம் தரும் துக்க கலக்கங்களும் ஒரு ஆன்மாவை விட்டு விலகிவிடும் என்கிறது பகவத்கீதை.
வேதசாஸ்திரங்களில் தேர்ந்தவரும், தவசீலருமான அந்த குரு தன் சீடர்களிடம், காசியைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லி, தான் காசியில் இறக்க விரும்புவதாகவும் தன் அந்திமக் காலம் நெருங்கிவிட்டது எனவும் கூறினார். உடனே சீடர்கள் அவரை ஒரு பல்லக்கில் தூக்கிக் கொண்டு காசி செல்லும் வழியில், ஓர் ஊரின் பெயரைக் கேட்டவுடன் அவரின் உயிர் பிரிந்தது. அதன் பலனாக மறுபிறவியில் அந்த ஊரில் பறையறைபவனின் மகனாகப் பிறந்தார்.
முன்ஜன்ம பலன்களால் நல்லறிவுடன் குழந்தை வளர்ந்தது வயது 10ஐ அடைந்தது. அந்த ஊர் வழக்கப்படி வீட்டிற்கு ஓருவர் அரண்மனைக்கு பறையறைந்து ஓர் இரவு காவல் காக்கச் செல்ல வேண்டும். அன்று அவர்கள் முறை. அவனின் தந்தை வெளியில் சென்றபோது மழை பெய்து ஆற்றில் வெள்ளம் பெருகவே வீட்டிற்கு வரமுடியவில்லை. தந்தை பணிக்குச் செல்ல வில்லை என்றால் அது, அரண்மணைக் குற்றம் ஆகும் என்பதால் சிறுவன் பணிக்குச் சென்று பறையுடன் சுலோகங்களையும் பாடினான். நடுநிசியில் அதைக்கேட்ட மன்னரின் மனம் மகிழ்வுற்று, அவனுக்கு அரசாங்கவேலை தர ஆனையிட்டார். அச்சிறுவனோ மரணதண்டனை நிறைவேற்றும் பணியைக் கேட்டு, மேற்கொண்டு, தண்டனை பெறும் கைதிகளை இறை படங்களுக்குமுன் நிறுத்தி தெய்வச் சிந்தனைப் பாடல்களைப் பாடும்போது, அவர்கள் மெய்மறந்திருக்கும் வேளையில் தண்டணையை நிறவேற்றி விடுவான்.
தெய்வச் சிந்தனையில் இருக்கும்போது உயிர் நீத்தவரெல்லாம் சொர்க்கம் சென்றனர். இதனால் நரகத்தின் வேலைப்பளு குறைந்தது. எமன் மும்மூர்த்திகளிடம் முறையிட, அவர்கள் சிறுவனிடம் அவன் செயலுக்குக் காரணம் கேட்க அவன், தன் முற்பிறவியில் இறக்கும்போது இறை சிந்தனையின்றி ஓர் ஊரின் பெயரைக்கேட்டபடி இறந்ததால் அந்த ஊரில் பிறக்க நேர்ந்தது. அதுபோன்ற நிலை இவர்களுக்கு வேண்டாம்,
இறக்கும் தருவாயில் இறை நாமங்களைக்கேட்டு நற்கதியடையட்டுமே என்பதால்தான் இப்படிச்செய்தேன் என்றான். மும்மூர்த்திகள் அவனுக்கு மேட்சம் அளித்தனர். வாழ்வில் ஞானம் ஏற்படவில்லை என்றாலும் இறக்கும்போதாவது ஒருவன் இறையை நினைத்தால் அதன் பலன் அந்த ஆத்மாவிற்கு கிடைக்கும்.
நாம் அனைவரும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை பார்த்திருப்போம். எப்படி சாய்த்தாலும் அது நிமிர்ந்துவிடும். அதன் அமைப்பு அப்படி. அதுசரி. அதில் நாம் தெரிந்து கொள்ள ஓர் உண்மை மறைந்து இருக்கின்றது. உலகம் எவ்வளவு உருண்டாலும், அதை யார் எப்படிக் கவிழ்த்தாலும், எவர் உதவியும் இன்றி நிமிர்ந்து தன் நிலைக்கு திரும்பிவிடும் உண்மையது. நிலையானது, நிலையில்லாதது, நடுநிலையானது என மூன்று நிலைகளிலிருந்தாலும் முடிவில் ஓர் சமநிலைக்கு வரவேண்டும்.
அதைப்போன்றே யார் எப்படிக் கவிழ்த்தாலும், துன்ப துயரங்களை அளித்தாலும், எப்படிப்பட்ட பாதிப்புகள் இருந்தாலும், அதிலிருந்து விடுபட்டு, ஆன்மாவின் மனமும், எண்ணங்களும் சமநிலைக்கு வரவேண்டும். மனதினை ஓர் நிலைப்படுத்தவேண்டும் என்ற தத்துவம் அதில் உள்ளது.
எரியும் தீக்குச்சிமேல் பெரிய மரக்கட்டையை வைத்தால் தீ பற்றாது. அனைந்துவிடும். ஆனால் ஒருகாடே பற்றி எரியும்போது அதில் வாழை மரம் கூட எரிந்துவிடும். அப்படித்தான் ஒருவரிடம் ஆன்மீக ஞானம் மலரும்போது உணவில் இருந்து எல்லா விஷயங்களிலும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். விதிமுறைகள், குரு, அனுஷ்டானம் ஆகியவைகளை மதித்து கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் தீக்குச்சிமேல் மரக்கட்டை விழுந்ததுபோலாகிவிடும். ஆன்மீகதாகம் மலர்ந்து இறை ஒளி பிழம்பாக ஒளிரும்போது எல்லாம் மறைந்துவிடும். பாரம்பர்ய பழக்க வழக்கங்களைக் கடைபிடிக்க வேண்டியிருக்காது. ஞானம் இறையை காண்பதற்கு மட்டும், அதற்குப்பின் அருளாளனின் பொறுப்பு உனக்கு என்ன வேண்டும் என்பது.

ஒருவர் அவரின் செய்கையால் அவரே தனக்குத்தானே ஏற்படுத்திக் கொள்ளும் நிலைதான் விதி எனப்படும். இதை அறியும் ஞானமே ஞானத்திலெல்லாம் உயர்ந்த ஞானம்! இந்த ஞானத்தை பெற்றபின் ஒருவர் இனிமேலும் அடைய வேண்டிய ஞானம் வேறு இல்லை என்பது திண்ணம். எனவே உங்கள் செயல்கள் செயல்பாடாக மாறுமுன் சிந்தியுங்கள்-குருஸ்ரீ பகோரா.

வியாழக்கிழமை, 04 October 2012 12:45

5-7,பிரார்த்தணை!

பிரார்த்தணை                                                                                                           

பிரார்த்தனை மூலம் எதையும் கேட்டுப்பெறுவது அன்று, சுற்றுச்சூழலால் குழம்பியுள்ள மனம் அமைதி தேடுவதாகும். குழப்பத்திலிருந்து விடுபட மன உளைச்சலற்ற உறுதியான எண்ணங்கள், செயல்களுக்கு பிரார்த்தனையானது நம்பிக்கைதனை, வலிமைதனை தரும், அதிர்வுகள் எல்லா இடங்களிலும் பரவியுள்ளன.
கடந்த, நிகழ், எதிர்காலம் என அதிர்வுகள் நிறைந்துள்ள மண்டலத்தில் நம் மனம் ஓர் நிலைப்பட்டால்தான் நமக்கு தேவையான நம் பிரச்சனைக்குரிய சரியான அதிர்வுகள் முறையான செய்திகளாக நமக்கு கிடைக்கும். நம்மனம் சிந்திக்க செயல் வடிவம் பிடிக்கும்.
பொதுவாக கோவில்களை அதிர்வுகள் அதிகமுள்ள இடங்களாக நம் முன்னோர்கள் அமைத்துள்ளனர். கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்வதால் மனம் அமைதி பெறும். அப்போது நமக்கு வேண்டிய அதிர்வுகள் நம்மை வந்தடையும்.
நாம் செயல் பட நிம்மதியும் அதனால் சந்தோஷமும் கிடைக்கும். மனிதகுலத்திற்கு தேவையான இந்தப்பணி கோவில்களில் சிறப்பாக நடைபெறுவதால்தான் “கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என பகன்றுள்ளனர்.
முன்செய்தவினைகளின் தீயகர்மபலன்களை, நானே அனுபவிக்க வேண்டும், அந்த பலன்கள் என் சந்ததியினருக்கு செல்ல வேண்டாம், அதன் தாக்கங்களின் வேதனையை குறைத்து, அதை தாங்கும் சக்தியை அளிக்கவேண்டும் என உளமொன்றி பிரார்த்தனை செய்தால் அதற்குரிய பலன் கிடைக்கும்.
ஒரு விவசாயி விநாயகப் பெருமானிடம் வந்து 'பகவானே, மழையை நம்பி பயிர் விதைத்திருக்கின்றேன். மழை பெய்யச் செய்யுங்கள். மழை பெய்தால் தேங்காய் உடைக்கின்றேன்' என வேண்டினார்.
சிறிது நேரத்தில் இன்னெருவர் வந்து 'பகவானே செங்கல் சூளை போட்டிருக்கின்றேன், மழைபெய்தால் என் வியாபாரம் கெட்டு விடும், ஒரு வாரத்திற்கு மழை பெய்யக்கூடாது, மழை பெய்யாவிடில் உங்களுக்கு தேங்காய் உடைக்கின்றேன்' என வேண்டினான்.
இருவிதமான வேண்டுகோள்கள். பிள்ளையார் யாருக்கு சாதகமாகச் செய்வார். அவர் மனைவி சித்தி, புத்தி இருவருக்கும் கருத்துவேறுபாடு. ஆளுக்கு ஒருவரை சார்ந்து பேசினர். பிள்ளையார் மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் எனக்கு எப்படியும் தேங்காய் கிடைத்து விடும் எனச் சிரித்தார்,
கடவுளை பொதுவானவராக அன்றி, தன்னைச் சுற்றியிருக்கின்ற கூட்டத்திற்கு வேண்டியது செய்யும் கட்சித்தலைவராக நினைக்கக் கூடாது. 'எல்லோரையும் வாழ்விக்க ஒருபொது நியதி உண்டு, விவசாயி சம்பாதிக்க மழைக்காலம் உள்ளது. சூளைக்காரன் சம்பாதிக்க வெய்யில் காலம் உள்ளது.
அந்தந்த காலத்தை அவரவர்கள் பயன்படுத்தாமல் பேராசையினால் காலமற்ற காலத்தில் காரியங்கள் நடைபெற கடவுளின் துணை நாடுவது சரியன்று, 'எல்லோருக்கும் பொதுவானவர் கடவுள்' என்ற உண்மையை புரிந்து பிரார்த்தனைகளும் வேண்டுகோள்களும் நியாயமானவைகளாக இருக்க வேண்டும்.
என்றைக்கு உண்மையான பிரார்த்திக்கும் திறமை உங்களுக்கு வந்துவிடுகிறதோ, அப்போது நீங்கள் கோயில் தேடிப்போவதில்லை, நீங்கள் இருக்குமிடத்தில் கோயில் இருக்கும். கோவில் உங்களைச் சுற்றி சுழன்று, உங்களுக்கான ஒளிமண்டலமாகத் திகழும். உண்மையான பக்தன் கால்பதிக்கும் இடம் இறை இல்லமாக மாறும். மனதிற்குள் கடவுள் இருக்கிறார் என்று உணர்ந்தால் உங்கள் சக்தி புலப்படும்.
யுத்தமோ! விளையாட்டோ! போட்டி என வந்துவிட்டால் இரண்டில் ஒன்றுதான். ஒருவெற்றி! அடுத்து இரண்டாம் இடம். முதலிடத்தினின்று தோல்வி! வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டால் பிரார்த்தனையின் ஆழம், ஈடுபாடு, நீடித்தநேரம் ஆகியவற்றின் அடிப்படையிலோ, எளிய வேண்டுதலின் அடிப்படையிலோ, படோபடமான ஆரவார பிரார்த்தனையிலோ அருள் கிடைப்பதில்லை. பிரார்த்தனை செய்பவரின் நிலைப்பாடு குறித்து ஆராய்ப்படுகின்றது. அவரின் நியாயம், தர்மங்களின் படி தராசின் முள் சாய்ந்து தீர்ப்பு பிரார்த்தனைதாரர்களுக்கு அருளப்படுகின்றது.
எனக்கு அதைக்கொடு, இதைக் கொடு, என்று கோரிக்கைகள் வைத்து பிரார்த்தனையின்போது வேண்டுவது உண்மையான பிரார்த்தனை இல்லை. அது தன்னலம் கருதி பிச்சை எடுப்பதற்கு சமம். மனிதநேயத்துடன் மற்றவர் நலம், மனநலம் கேட்டு மணமுருகி வேண்டுவது தான் பிரார்த்தனை. இறைவனிடம் பக்தி கொள். யாசிக்காதே. உலக உயிர்களின்மேல் அன்பை பொழிவதே பிரார்த்தனையின் சிறப்பு.
ஸ்ரீ கண்ணனை, நடக்கும் போரில் தங்கள் பக்கம் இருக்க வேண்டும் எனகேட்டுக் கொள்வதற்காக, துரியோதணன் சார்பில் துரியோதனும், தருமன் சார்பில் விஜயனும் சென்றனர். முன் சென்ற துரியோதணன் கிருஷ்ணன் துயில் கொண்டிருப்பதால் முழித்ததும் தன்னைதான் முதலில் பார்க்கவேண்டும் என்ற நினைவில் தலையருகில் அமர்ந்திருந்தான். பின் சென்ற பார்த்திபன் காலடியில் அமர்ந்து கொண்டான். மாயக் கண்ணன் இதை உணர்ந்து துயிலில் இருந்து எழுந்து அமருவதுபோல் அமர்ந்து முதலில் அர்ச்சுனனை நோக்கினார். பின்னர் துரியோதணனை நோக்கினார்.
நான் கண்டது முதலில் அர்ச்சுணனை எனவே, அர்ச்சுணா வந்த விபரம்சொல்! என்றார். அவனும் போரில் தாங்கள் எங்களுடன் இருக்க வேண்டும் என்றான். ஆனால் துரியோதணன் அவரின் பலம் பொருந்திய சேனைகளைத் தந்து உதவுமாறு கேட்டான்.
இருவரின் கோரிக்கைகளையும் ஏற்று சம்மதம் சொன்னார் ஸ்ரீகிருஷ்ணர். போரில் ஸ்ரீகிருஷ்ணரது சேனைகளைவிட அவரது பிரசண்ணம் எந்த அளவிற்கு பாண்டவர்களுக்கு பயன்பட்டது, தர்மங்களும், நியாயங்களும் வெற்றிபெற உதவியது என்பதை ‘மகாபாரதம்நமக்கு புரியவைக்கின்றது. எனவே உங்கள் பிரார்த்தனைகளில் உண்மை, நியாயங்கள் இருக்கவேண்டும். அப்போதுதான் பிரார்த்தனைகளின் பலன் கிட்டும்.
ஒருவரின் வளர்ச்சியில் பொறாமைகொண்டு நாம் பிரார்த்தனையில் ஈடுபாடு கொள்ளக்கூடாது. ஒருவரின் வளர்ச்சிக்குப் பின்னால் எத்தனையோ காரணகாரியங்கள் நிகழ்வுகள் அவரின் வெற்றிக்கு வழிவகுக்கின்றன. அவைகளை ஆராயாமல் போட்டியின் காரணமாக பொறாமைகொண்டு நோக்கினால் உண்மைகள் புலப்படாது. அவரின் வெற்றியின் ரகசியம் புலன்களுக்கு புரியாமல் போய்விடும்.
ஒருவரின் நல்லெண்ணங்கள், தீவிர சிந்தனைகள், கர்மபலன், செயல்பாடுகளில் தீவிரமுனைப்பு எனப்பல காரணங்களால் வெற்றிகள் கிடைத்திருக்கலாம். அந்த வெற்றிக்காண வழிமுறைகளைப் பற்றி யோசனை செய்து அதைப் பின்பற்ற முயற்சி செய்யவேண்டும். அதற்குப்பின்தான் பிரார்த்தனையில் ஈடுபாடும் அதன் பலாபலன்களும்.
பிரார்த்தனை என்பது அருளாளரை நம் பக்கம் ஈர்ப்பது என்று நினையாமல், நாம் கடவுளின் அருகில் இருக்க பிரார்த்திக்க வேண்டும். மேலும் பிரார்த்தனையில் இது வேண்டும் அது வேண்டும் என கோரிக்கைகள் வைப்பதைவிடுத்து, மரணத்திற்கு நான் தயார், அதுவரை எனக்கு வேண்டியதை நீயே கொடு எனக்கேட்பது சிறப்பு. உன்கையினால் பொருள்களை அள்ளும்போது உன்கைக்குள் இருப்பதைவிட, ஒருவர் அதே பொருளை அள்ளி உன்கைநிறைய வைப்பது, கொடுப்பது உன்கையில் அதிகமாக இருக்கும். அதேபோன்றுதான் அருளாளர் அருள்வதும். உனக்கு தேவையானது தேவையான சமயத்தில், ஏன் தேவைக்கு அதிகமாகவே கிடைக்கும்.
நீங்கள் விழித்திருக்கும்போது கனவுகள் பொய்யாகிறது. கனவு கானும்போது விழிப்பு பொய்யாகிறது. ஆழ்ந்த தூக்கத்தில் கனவு, விழிப்பு இரண்டுமே பொய்யாகிறது. பொதுவாக வாழ்வு பொய்மையில் மெய்மைகான விழைகிறது. மெய்யான உண்மைகளைக் காண அனுபவிக்க தினமும் பிரார்த்தனை உதவும். பிரார்த்தனை மெய்யான வாழ்வுக்காக முழு நம்பிக்கையுடன் நடை பெறவேண்டும். அப்போதுதான் அதன் பலன் தெரியவரும்.
துன்பங்களும், சோதனைகளும் நெருங்கும்போதும், உங்கள் உணர்வுகள் கோபத்தின் வயப்படும்போதும், பிரார்த்தனை செய்யுங்கள். முக்கியமாக நீங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு நன்றி செலுத்தி, சந்தோஷம் மீண்டும் மீண்டும் கிடைத்திட வணங்குங்கள்.
மூடநம்பிக்கை: மனிதனை மனிதன் வணங்குகின்றான். ஏன்! மதிப்புள்ள பெரியோர்களை ஞானிகளை வணங்குதல் முறையே! எல்லோரிடமும் வணக்கம்கூறி பணிவுடன் இருத்தலும் நன்றே! ஆனால் மறைமுக எண்ணங்களுடன் தன் சுயலாபத்துக்காக ஒருவரைத் துதிப்பதால் தனக்கு பெரும் நன்மை கிடைக்கும் என்றநோக்கில் மனிதனை மனிதன் வணங்குதல் கூடாது! அது முற்றிலும் தவறு.
ஓர் அரசன் ஓர் ஞானியின் காலில் விழுந்து தன்தலை அவர் பாதத்தில் படியும் படி வணங்கினான். ஏதும் புரியாத சேனாபதி இதைப்பற்றி கேட்க, மன்னர் தனக்கு ஓர் ஆட்டின் தலை, ஓர் புலித்தலை, ஓர் மனிதத் தலை கொண்டுவர பணித்தார்.
ஆட்டின் தலை சுலபமாகக் கிடைத்தது. புலியின் தலையை வேட்டையாடி பெற்றார். மனிதத்தலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மயானத்தில் இறந்து கிடந்த ஓர் உடலிலிருந்து தலையைப் பெற்றார். அதை மன்னரிடம் காட்ட அவர் அவைகளை விற்று வரும்படி கூறினார்.
ஆட்டுத்தலை விரைவில் உணவுக்காக விற்றது. புலியின் தலை அலங்காரத்திற்காக வாங்கப்பட்டது. மனிதனின் தலையை யாரும் வாங்கவில்லை. இத்தகவலை அரசனிடம் கூற அவர் அதை வாங்குபவருக்கு பணம் என அறிவித்தும் யாரும் வாங்க முன் வரவில்லை. மன்னர், சேனாதிபதியாரிடம், ‘யாரும் வாங்க முன்வராத மதிப்பில்லாத இந்த மனிதத் தலை மாபொரும் துறவிகளின், ஞானிகளின் காலடியில் வைத்து வணங்குவதே அதற்குரிய சிறப்பு’ என்றார்.
அழியும், மண்ணாகிப்போகும் மனித உடலை வணங்கும்போது அதிர்வுகளைக் கொண்ட ஓர் கல்லை வணங்குவதில் தவறில்லை. அதுவும் அந்த அதிர்வுகள் மனிதனுக்கு மிகவும் பயனுள்ளவையாக நன்மைகள் பயப்பனவாக இருக்கும்போது அங்கு சென்று அந்த கல்லுருவை மதித்து வணங்குவதில் தவறில்லை.
ஒரு மன்னர் இந்து மதத்தில் பக்தி கொண்டிருந்தார். ஆணால் அவருக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கையில்லை. ஒரு சமயம் பக்திமான் ஒருவர் மன்னரின் அரன்மணையில் தங்க வேண்டியிருந்தது. அவரிடம் விக்ரக ஆராதனையைக் கண்டித்து பேசினார் அரசர். பொறுமையாகக் கேட்டார் பக்திமான்.
மறுநாள் பக்திமானை பார்க்க வந்த ராஜவிசுவாசிகளிடம் என் மீது அன்பு வைத்திருக்கின்றீர்கள், எனக்காக எதுவும் செய்வீர்களா என்று கேட்டு அவர்களிடம், என் மீது காறி எச்சிலை உமியுங்கள் என்றார். அவர்கள் நீங்கள் அரசரின் மரியாதைக்கும் எங்கள் மரியாதைக்கும் உரியவர், நாங்கள் அவ்வாறு செய்ய முடியாது என்றனர். அவ்வாறு எனில் மனித உருவத்தை மதிக்கின்றீர்கள் மகிழ்ச்சி!
உருவமற்ற காகிதத்தில் துப்புவீர்களா எனக் கேட்டார். சரி! என்ற அவர்களிடம் மன்னரின் படம் உள்ள ஒரு பேப்பரில் உமிழச்சொல்ல அவர்கள் திகைத்தனர். அதில் அரசர் உருவம் உள்ளது. அதை அவமதிப்பதாகும் என்றனர். இதுகூடத் தெரியாமல் எப்படி கூறுகின்றீர்கள் என்றார்கள். அழியும் பேப்பரில் உள்ள உருவத்திற்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை பற்றி உங்கள் மன்னரிடம் கூறுங்கள் என்றார். இச்செய்தி கேட்ட மன்னர் அன்று முதல் உருவ வழிபாட்டை மனதார ஏற்றுக்கொண்டார்.
எங்கும் நிறைந்திருக்கும் இறைவனுக்கு ஆலயங்கள் எதற்கு! நிம்மதிக்காக சொத்து, மனைவி, நிலம், வீடு, பொருள் சேர்த்தாலும், மனிதனுக்கு தன் மனதை ஓர்நிலைப்படுத்த ஓர் இடம், தன் துயரங்களைப் பொறுமையாகக் கேட்க ஓர் உருவம் தேவைப்படுகின்றது. நிலத்தின் நீரோட்டங்கள் எல்லா இடத்தில் இருந்தாலும், ஒரு இடத்தின் வழியாக ஊற்றாக வெளிப்படுகின்றது, தாய்ப்பால் சுரக்கும் உடம்பில் இரத்த ஓட்டமிருந்தாலும் மடிவழியே வரும்போதுதான் பாலாக வெளிவருகின்றது.
அன்பு, கருணை சுரக்குமிடம் ஆலயங்கள். எல்லா மதத்திலும் இந்த பொது கொள்கை பின்பற்றப் படுகின்றது. புனிதம் எனக்கருதி ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து, ஓர் உருவத்தை நிலைநிறுத்தினால், மனித சமுதாயத்தின் அங்கங்கள் தன் மனம் குழம்பியபோது தெளிவுபெற, ஆறுதல் அடைய அந்த புனிதத்தை நாடுகின்றது. அது ஒரு புகழிடமாகிவிடுகிறது.
எந்த கோணத்தில் இருந்தாலும் மனித ஆன்மாவிற்கு பயணம் முடியும்வரை துன்பமாகத் தெரிகின்றது. அதிலிருந்து விடுபட ஓர் புகழிடம் தேடுகிறான். தனக்கு அடைக்கலம், ஆறுதல்தர யாராவது இருக்கின்றார்களா எனத் தேடுகின்றான்.
தன்னை சுற்றியுள்ள ஆன்மாக்களிடமிருந்து ஏதும் கிடைக்காது என்ற ஓர் நிலையில் அவன் இறையைத் தேடுகின்றான். அங்கு அவன் குறைகளை சொல்லி விடுதலிலேயே நிம்மதி காண்கின்றான். மூடநம்பிக்கை என்றும், மதபேதங்கள் என்றும் இதில் ஏதுமில்லை. எல்லாம் ஓர் நம்பிக்கையே! உடலும் மனமும் உள்ளத்தின் சக்தியோடு கூர்ந்து சிந்தித்து செயல்படும்போது வேறுபரிமாணத்திற்கு சென்றுவிடுவீர்கள்-குருஸ்ரீ பகோரா.

வியாழக்கிழமை, 04 October 2012 12:44

5-6.தவம்,பக்தி!

தவம்,பக்தி!                                                                                                              

ஒரு சாலையில் ஆடுமாடுகளை வழிநடத்தி கட்டுக்கோப்புடன் செல்வது போல சிரமமானது தவம் செய்வது! அதே சாலையில் ஒர் பசுமாட்டை எவ்வளவு சுலபமாக அழைத்துச் செல்லமுடியுமோ அதைப் போன்றது பக்தி மார்க்கம்! அன்பான இறைவனை அடைய பக்தி மார்க்கமே சிறந்தது! மழையையும், காற்றையும், வெய்யிலையும் ரசிக்கத் தெரிய வேண்டும். நான் எந்த இடத்திற்கும் யாருக்கும் சொந்தமில்லை என எண்ணத் தொடங்குதலே பேரின்ப பேற்றின் முதல்படி. நாம் (ஆன்மா) வாழ்ந்த வீடு (உடல்) விட்டு அகலும்போது வீடு (பேறு) நமக்கு கிடைக்கின்றது.
தாய்ப்பூனை தன் குட்டிகளை அவ்வப்போது சூழ்நிலைக்கு தகுந்தவாறு இடமாற்றம் செய்யும். எங்கிருந்தாலும் தன் குட்டியின் அழைப்புக்கு வந்துவிடும். அதைப்போலவே இறைவன் நம்மை ஆங்காங்கே வைத்துள்ளான். நாம் நம் கடமையைச் செய்து இறைவனை மனத்தால் ஒன்றி அழைத்தால் நிச்சயம் அந்த குரலுக்கு பலன் உண்டு!
மனுசாஸ்திரம் மனித ஆன்மாக்கள் செய்ய வேண்டியது 1.தேவயக்ஞம்- இறைவனுக்கு பூஜை, 2.ரிஷியக்ஞம்- சாஸ்திரங்களைப் படித்து போதித்தல், 3.பித்ருயக்ஞம்- முன்னோர்களுக்கு தர்பணம், 4.நரயக்ஞம்- மனிதத்தொண்டு, 5.பூதயக்ஞம்-பிற உயிர்களுக்கு உதவுதல் என பட்டியலிட்டுள்ளது.
வேதங்களை படித்தவர்களால், உண்மையை உணர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டது வழிபாட்டு முறைகள், அனுஷ்டானங்கள். அவைகள் பொய்யன்று. ஒருவர் சொன்னார் என்பதற்காக வழிபாட்டினை விருப்பப்படி மேற்கொள்ளக்கூடாது. சாத்திர பூர்வமற்ற சம்பிரதாயம் தவறிய வழிபாடுகள் உருவாகி விடுகின்றது. சரியான வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி தூய்மையான அன்புடன் கடவுளை நெருங்குவது, அறிந்து கொள்வது ஒவ்வொருவர் கடமை. எல்லா உயிர்களுக்கும் இந்த தாக்கம் ஓர் நிலையில் ஏற்படுகின்றது.
எல்லா உயிர்களிலும் உள்ளது ஆன்மாவே! அவைகள் ஓர்நிலையில் அருள் பெற விரும்புகின்றன. அதை நாடி அருள் பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆந்தை-கூகையூரிலும், ஆமை-காஞ்சியிலும். உடும்பு-மாகறலிலும். எறும்புகள்-திருவெறும்பூரிலும், ஒட்டகம்-நெடுங்களத்திலும், கரிக்குருவி(வலியன்)-திருவலிதாயத்திலும். கிளி-சேலத்திலும், குதிரை-மங்கலக்குடியிலும். குயில்-திருக்கோழம்பத்திலும், குரங்கு-தென்குரங்காடுதுறை, குரக்குத்தளி, குரங்கனில் முட்டம், வடகுரங்காடுதுறையிலும், கீரி-ஈழநாட்டிலும் (கீரிமலை). சக்ரவாகப்பறவைகள்-சக்கரப்பள்ளியிலும்,சிலந்தி+ யாணை+ பாம்பு-திருக்காளத்தியிலும். சேவல்-உறையூரிலும். தேனீக்கள்-நன்னிலத்திலும், நண்டு-திருந்துதேவன்குடியிலும். பறவைகூட்டம்-புறவார் பனங்காட்டூர், திருவோத்தூர், எறும்பூரிலும். முத்துசிப்பி- காஞ்சியிலும், மான்- மப்பேட்டிலும், மீன்-காஞ்சியிலும், மயில்-மயிலாப்பூரிலும், யாணையும், சிலந்தியும் திருவாணைக்காவிலும் வழிபட்டு அருள் பெற்றதாக வரலாறு தெரிவிக்கின்றது.
உயிர்கள் எல்லாவற்றிலும் கடவுளின் அம்சம் உள்ளது. உடலில் உள்ளே கடவுள் இருப்பதால் அவரின் அம்சம் நம் உடலில் இருப்பது சரிதானே! முன்னோர்களின் அம்சம்போல! இதைப் புரிந்துகொள்ள நாட்கள் ஆகின்றது. “புகை தெரிந்தால் அங்கு நெருப்பு இருக்கவேண்டும் என்பது நியதி.” அதைப்போன்றே ஓர் அனுமானம் கடவுளைப்பற்றி தெரியவரும்.
ஆனால் அனுஷ்டானங்களை, வழிபாட்டு முறைகளை அறியாமல் அவற்றிற்கு முற்றிலும் எதிர்மறையாக செயல்பட்டு இறைவனை அடைந்துள்ளார்கள் என்பதற்கு கண்ணப்பநாயனார் சரித்திரம் சான்று. எந்த விதமான பக்தி உயர்ந்தது என உண்மையான பக்தி சோதித்து பார்க்காது. பக்தி என்பது சத்யத்தின் வாசல். குழைந்து, கனிந்து, பரமானந்தமாக நிற்கின்ற நிலை. அந்த நிலையில் கண்ணப்பருக்கு இறை தரிசனம் கிடைத்தது. இறைவனுக்கு கொடுக்கின்ற பொருள் முக்கியமல்ல. கொடுக்கின்ற மனோநிலை மிகமிக முக்கியமானது.
அங்கே தூய்மையான தன்னலமற்ற அன்பு, மனிதநேயம் தெரிந்தது. அந்த சரித்திரம் போல் எல்லோரும் கடைபிடிக்கமுடியுமா? என்பது சந்தேகமே! எனவேதான் வழிமுறைகள் படிப்படியாக இறைவனை நெருங்க அனுஷ்டானங்கள் தோன்றியது எனலாம். ஆசார அனுஷ்டானங்களைப் புரிந்து என்ன செய்கின்றோம் என உணர்ந்து, எதைச் செய்தாலும் மனம் ஒன்றிச் செய்தல் சிறப்பாகும்.
சிறுதொண்டநாயனாரும், அவர் மனைவி திருவெண்காட்டு நங்கையாரும் தங்கள் மகனை அரிந்து கறிசமைத்து அடியவராக வந்து பிள்ளைக்கறிக்கேட்ட பெருமானுக்கு படைத்தது யாராலும் மறக்கமுடியாத நிகழ்வு. உலகத் தந்தையான இறை தங்கள் குழைந்தையையும் காப்பான் என நம்பினார்கள். நம்பினோர் கைவிடப்படார். சொந்தக் குழந்தை பாலகனை அரிந்து சமைக்கும் செயல் எவ்வளவு பெரிய அரிய பக்தி நம்பிக்கை இறைமேல் என்பதை விளக்குகின்றது.
அறிவினால் சாதனை படைக்கும்போது, மகிழ்ச்சியும் பெருமையும் தோன்றுவது இயற்கை. ஆனால் நமக்கு வேண்டுவது நிறைவும் அமைதியும் தரும் இன்பம். கவர்ச்சியை மனம் நாடக்கூடாது. நம் அனுபவத்திற்கு அப்பால் உள்ள ஒன்றை நாம் தேடக்குறிக்கோள் கொள்ளவேண்டும். நமக்கு அருகில், நம்மைச்சுற்றியுள்ள நிகழ்வுகளிருந்து வெற்றிபெருவது மட்டும் குறிக்கோள் அல்ல. வெகுதூரத்தில் நாம் அடையமுடியாத நிலையில் இருப்பதை அடைய முயற்சி செய்வதுதான் சிறந்த குறிக்கோளாகும்.
உலகப் பொருள்களை எல்லாம் உங்கள் முயற்சியால் எளிதில் அடையலாம். எளிதில் அடையமுடியாதது இறையருள். அதற்காக முடியவே முடியாது என்று அர்த்தமில்லை. முயற்சி, கடினமான முயற்சிகளால் சாதனை படைக்கமுடியும். இறக்கை முளைக்காத பறவைக் குஞ்சுகள் தாய் பறவைக்காகவும், கட்டிப்போட்ட இளங்கன்றுக்குட்டி தாய்ப் பசுவின் மடிக்காகவும் காத்திருப்பதுபோல் அருளாளின் அருள் கிடைக்க எதிர்பார்த்திருப்பதே ஞானத்தை தேடலின் அறிகுறி.
மந்திர, யாகங்கள் செய்ய முடியாதவர்கள் எளியமுறையான, உயிர்களிடத்தில் இரக்கம் காட்டுதல், எளிமையாக வாழுதல், பொய் பேசாதிருத்தல், சுத்தமாக இருத்தல், சுறுசுறுப்பாக இயங்குதல், பிறருக்கு உதவி நன்மை செய்தல், பொருளில் பற்றற்று இருத்தல் ஆகிய செயல்களினாலும் இறையை அடையலாம் என அக்னிபுராணம் கூறுகின்றது.
“எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான்” எனப் பிரகலாதன் கூறியபோது இந்தத் தூணில் உள்ளானா? என இரண்யன் கேட்டது அறிவோம். பின் இரண்யவதம் நடந்ததும் அறிவோம். எங்கும் உள்ள இறைவன் ஏன் உன்னுள்ளும் இருக்கின்றார். நம் அனைவரின் உள்ளேயும் இருக்கிறார். அதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஆன்மீகம் என்பது ஆன்மாபற்றியது. உடலின் உயிரை முழுமையாகப் புரிந்து கொள்ள உள்நோக்கி பார்த்தால்தான் தெரியும்.
உடலையும் மனத்தையும் புரிந்தால் மட்டும் வாழ்க்கை வாழ்க்கையல்ல! உடலையும் மனதையும் இயக்கும் சக்தி எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். “நம்முள்ளே இருக்கும் இறைவனை நாம்தான் தேடிக்கண்டு கொள்ளவேண்டும்” ‘என்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேனே’ என திருநாவுக்கரசர் பெருமான் கூறுகிறார். அறிவினால் கடவுளை அறிந்து கொள்ளமுடியாது, உணர்வினால்தான் புரிந்து கொள்ள முடியும். நாம் தேடுவதற்கு வழிமுறைகள் உண்டு. அதற்கான உணர்வுகளை நாம் வழி முறைகளிலிருந்து அடையவேண்டும். அந்த அறிவுப்பூர்வமான செயலை செய்வதற்குத்தான் வழிமுறைகள், அனுஷ்டானங்கள்.
சீன மூங்கில்கள் விதைபோட்டு தண்ணீர் ஊற்றினால் ஒருவருடத்தில் ஒரு அங்குலம் தான் வளரும். இப்படி ஐந்து வருடங்கள் வளர்ந்த பின் ஆறாவது வருடத்தில் 90 அடிக்கு வளர்ந்துவிடும். ஒருவருடத்தில் 90அடி வளரும் மூங்கில் அந்த உயரத்தை தாங்க ஐந்து வருடங்களுக்கு வேர்பரப்பி தன்னை தயார் செய்து கொள்கின்றது. இதுபோல் மனம் தளராமல் அமைதியுடன் ஆனால் உறுதியுடன் இருந்து நீங்களும் தயாராகுங்கள் உங்கள் மனம் அருள் வயப்பட்டு பேரானந்தம் அடைய.
“உன்னை உணரும் அறிவைக் கொடு” என அப்பர் பெருமான் இறைவனிடம் இறைஞ்சுகின்றார். தேடும் அறிவினால் மீண்டும் மீண்டும் முயற்சித்து எண்ணங்களை, செயலை, கருத்தை, நினைவை ஒருமித்து உள்ளே இருக்கும் அருளைத்தேடிக் கண்டுபிடித்து வெற்றி பெற்றவர் திருமூலர் பெருமான் அவர்கள்.
“எங்கேயல்லாம் ஓடித்திரிந்த என் அறிவை, முயற்சிசெய்து என்னோடு ஒன்றாகி நிற்கவைத்த அறிவை உள்ளே செலுத்தி, பரம்பொருள் அனுபவம் கண்டேன், திருவருள் தன்மை புலப்பட்டது, இந்த உணர்வு உடனே எனக்கு கிடைக்கவில்லை. இதற்காக நான் பலபிறவிகள் எடுத்ததாக நினைக்கிறேன்.” என்றார் திருமூலர்.
‘பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்’ என்கிறது ஓர் பழமொழி. பிள்ளைகள் பாசமின்றி ஓர் கல்லைப்போல் நடந்து கொண்டாலும், அவன் தாய் குற்றம் செய்த மகனை மன்னித்து அவன் வளமுடன் ஆயுளுடனும் வாழவேண்டும் என நினைக்கின்றது. செய்த குற்றங்களை பெரிதுபடுத்தாமல் மன்னித்து வாழ்த்துகின்ற கருணைதனைக் கொண்டிருப்பவரை பித்து எனக்கூறுதல் வழக்கம்.
ஆன்மாக்கள் புரிகின்ற பல பிழைகளைத் தாயுள்ளம் கொண்டு பொறுத்து அருள் புரிகின்ற அருளாளனும் பித்தன்தான். எனவேதான் “பித்தா பிறைசூடி பெருமானே அருளாள” என சுந்தரர் தேவாரத்தில் பாடியுள்ளார். இறைவனும் அதை ஏற்றுக்கொண்டு சுந்தரரிடம் வழக்கு தொடுத்தபோது காட்டிய பத்திரத்தில் பித்தன் எனக்குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகின்றது. பிரபஞ்சம் ஓர் நியதிக்குட்பட்டு இயங்குகிறது. நியதிக்கு ஆதாரம் திரு அருள்தான். இது அதிசயம், அற்புதமும்கூட.
அதிசயம், அற்புதம் இரண்டுமே வியப்பின் மேலீட்டால் தோன்றும் உணர்வாகும். நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஓர் நிகழ்வை பார்க்கும் போதும், நினைக்கும் போதும் வியப்பு ஏற்படுகின்றது, நாம் அதிசயிக்கிறோம். அற்புதம் என மகிழ்கின்றோம். உலக இயக்கத்தில் அதிசயப்பட்டு, பல அற்புதங்களை நாம் உணரலாம்.
வறுமையின் உச்சத்தில் இருந்த குசேலர் தன் நண்பனை பார்க்க அவலோடும் ஆவலோடும் போனார். அவலை உரிமையோடு எடுத்து உண்டார் கிருஷ்ணர். குசேலர் கிருஷ்ணனிடம் எதுவுமே கேட்கவில்லை. கிருஷ்ணரும் ஏதும் தரவுமில்லை. வறுமையுடன் சென்றவர் கிருழ்ணரை பார்த்து வெறும் கையராய் திரும்பியதற்கு வருத்தப்படவில்லை. ஏனெனில் அவரின் நோக்கம் தன் நண்பன் கிருஷ்ணனை பார்க்க வேண்டும் என்பதே! பார்த்தார். கிரிஷ்ணனின் அருள் பெற்றார். எதையும் கேட்காமலே எல்லாம் அடைந்தார்.
ஓர் சூழலில் நாம் அனைவரும் அருள்பெற விழைகின்றோம். அதற்காக நாம் பல இடங்களுக்குச் செல்கின்றோம். அங்கெல்லாம் இருக்கும் உண்டியலில் நம் வேண்டுதல் முடிந்து காணிக்கை செலுத்துகின்றோம். இதுதவறு? செய்யாதீர்கள் என யாராவது கூறியிருக்கின்றார்களா! இல்லை! ஏன்? நமக்கு எதற்கு இந்த வம்பு என ஒதுங்கி கொள்கின்றார்கள். ஏன்?
அருள்தரும் இறை நம் கோரிக்கைகளில் நியாயம் தர்மம் பார்த்து அருள் புரிதல் நடைபெற்று வருகின்றது. அது அவர் கடமை. தன்னை நாடி வருபவர்களுக்கு அருளச்செய்வது தான் அருள். பொருள் பெற்றுக்கொண்டு அருளுவதும், அருளியபின் பெற்றுக் கொள்வதும் ஓருவகை வியாபாரம். வியாபாரமாக நடைபெற்றால் அது அருள் இல்லை. பின் ஏன் இவ்வாறு உண்டியல் போட்டு வசூலிக்கின்றார்கள். அருள் தரும், பெரும் இடங்களை சீர்படுத்தி சுத்தமாகப் பேணி பாதுகாக்க பெருள் தேவைப் படுகின்றது. அதற்கான நிதியை சேர்த்தவே உண்டியல்கள். அந்தநோக்கில் உள்ள உண்டியல்களை நிரப்ப முன்வரலாம். உண்டியல்களில் பணம் செலுத்துமுன் அது உங்கள் பிரார்த்தனை பலிக்க வேண்டும் என்ற நோக்கில் செலுத்தாதீர்கள்.
உண்டியல்கள் இருக்கும் சூழல் கண்டு நம் செயல்பாடு இருக்க வேண்டும். ஏதோ ஓர் மரத்தில் கட்டிய உண்டியல்களுக்கு எல்லாம் மதி மயங்கி ஆதரவு தந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டாம். பொதுவாக நம் கோரிக்கைகளை நிறைவேற்ற, எந்த முறையானாலும் வழிபட்டு அருள்பெறவேண்டி அதற்கு ஈடாக நம்மால் முடிந்தது எனக்காணிக்கை அளிப்பது அருள் புரிபவருக்கு ஊதியம் அளிப்பது போலாகும்.
அவர் உங்களிடம் சம்பளம் அல்லது வேறு ஏதும் பெறும் ஊழியரில்லை. உங்கள் பாவங்களிலிருந்து, செயல்களின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து நல்வழியில் மனம் செயல்பட மட்டும் உதவுபவர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். வேண்டுதல் நிறைவேறாவிடின் ஏமாற்றம் அடைந்து கோபமும் வெறுப்பும் அடைகிறோம். இது தவறு. “வேண்டுதல் வேண்டாமைக்கு அப்பாற்பட்டவன் அருள்புரிபவன்.” உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற பக்தியை கருவியாக நினைக்கக்கூடாது.
தவம், ஜபம் காம்யார்த்தமாயின்றி (காரணங்களை உத்தேசித்தவை) ஆத்மார்தமானவையாக இருக்கவேண்டும். வேண்டுபவர்கள் நல்லதை மட்டும் வேண்டுவதில்லை. ஆசையினால் எல்லாவற்றிற்கும் அருள் பெறவிரும்புகின்றோம். ஒவ்வொன்றிற்கும் ஓர் நியதி உண்டு. கர்மபலன் உண்டு. அந்த வினைகளைச் செய்து அதற்கான பலன்களை அனுபவிக்க வேண்டும். நீங்கள் அந்த பலன்களை அனுபவிக்காவிடில் அது உங்கள் சந்ததியினரைத் தொடரும். அதற்காக வெறுமனே வணங்கி வேண்டுதல் விடுத்து காணிக்கை செலுத்தி கர்ம பலன்களை அடையவோ, அதன் பாதிப்புகளை நீக்கவோ முடியாது.
சந்தோஷமும், துக்கமும் அவரவர் கர்ம வினையின் பலன்கள். வினைகளை நாம் செய்திருந்தாலும் பயன்கள் சேருமிடம் வேறுஓர் இடத்தில். அங்குதான் கர்மபலன்கள் நிர்ணயக்கப்படுகின்றன. உடலில் இருக்கும் உயிர், ஆன்மா உடலின் வழியாக அதன் வினைப்பயன்களை அனுபவிக்கவே நிகழ்வுகள் நடைபெறுகின்றன். அருள் நம்பிக்கை சந்தோஷத்தை அதிகமாக அனுபவிக்கவும், துக்கங்களை தாங்கும் மனவலிமைதனையும் தரவல்லது. நம்பிக்கையில்லாதவர் சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் அவர் நியாயத்தையும் நேர்மையையும் கடைபிடிப்பவராக இருக்கக் கூடும்.
உண்மையில் தவம் என்பது எளிமையான வாழ்க்கைமுறையைக் கொண்டதாகும். ஏழ்மை வேறு, எளிமை வேறு. மனை, வாசல் என்றில்லாமல் சாலை ஓரத்திட்டுகளில் வாழ்ந்திருப்பது ஏழ்மையாக இருக்கலாம். சோம்பேறித்தனத்தினால் வந்திருக்கலாம். உழைத்து எல்லா வசதிகளுடன், அனுபவிக்க இருந்தபோதும், ஒன்றும் இல்லாதவன் போன்று ஆடம்பரமின்றி, சமூக கௌரவம் பற்றி கவலையின்றி, மாய சிந்தனைகளில் உழலாமல், உங்களுக்காக, உங்கள் சந்தோஷத்திற்காக தேவைகளைக் குறைத்து அளவுடன் அனுபவித்து, எளிமையுடன் பிறர் நலன் காத்து வாழ்வதே உண்மையான தவம்.
தனக்கு ஏற்பட்ட துன்பங்களைப் பொறுத்துக் கொண்டாகிலும், மற்ற உயிர்களுக்குத் துன்பம் தராச் செயல்களை செய்யாதிருப்பது தவத்தின் மகிமையாகும். தவவலிமையுடைய ஆன்மாவின் உடலை மற்ற ஆன்மாக்கள் தொழும். சுட்ட தங்கம்போல், தவம் செய்வோரை துன்பங்கள் அடையாமல், மேலும் மெய்யுணர்வு அடைவர். ஆத்மாக்களில் தவம் செய்பவரே ஆற்றல் மிக்கவர்.
எது அதுவாகும்: நாம் என்ன நினைக்கின்றோமோ அதையே மீண்டும் மீண்டும் நினைத்து செயல்பட்டால் நாம் அதுவாகவே ஆகிவிடுவோம். அந்த செயலுடன் ஒன்றிவிடுவோம். இந்த நிகழ்வுகள் இராமாயணத்திலும் சொல்லப் பட்டுள்ளது. இலங்கேஸ்வரனால் சிறை பிடிக்கப்பட்டு அசோக வனத்தில் இருந்த சீதை அங்கு தன்மீது பரிவுகொண்ட திரிசடை என்பவளிடம் ராமனையே எப்போதும் நினைக்கும் நான் இராமனாகி விடுவேனோ! என்கதி என்ன! அப்போது நான் எப்படி அவருக்கு உபயோகமாகுவேன். நான் சீதையாகவே இருந்தால்தானே நல்லது என வருந்தி புலம்புகின்றாள்.
அப்போது திரிசடை, அம்மா! கவலைப்படாதீர்கள். தாங்கள் இராமனை எண்ணி, எண்ணி ராமர் ஆனாலும் கவலையில்லை. ஏனெனில் ராமரும் உங்களை எண்ணி எண்ணி சீதையாக மாறியிருப்பார். எப்படிப் பார்தாலும் ஒரு ராமர், ஒரு சீதைதான். என சீதைக்கு ஆறுதல் சொல்லியதாக கூறப்படுகின்றது.
இந்த நிகழ்வு இந்து மதத்தின் அழகான தத்துவத்தை, “எதை எண்ணுகிறாயோ! அதுவாகவே ஆகிறாய்” என்பதை உணர்த்துகின்றது.
காந்தத்தில் இனைந்த இரும்பு, காந்த தன்மையைப் பெற்று காந்தம் ஆகிறது. கடவுளை நினைத்து இனைந்த ஆன்மா கடவுளாகிறது. இனைதல் என்பது இடைவிடாது நினைத்தல் என்பதை புரிந்து கொள்ளல் வேண்டும். அப்போதுதான் எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பதன் உண்மை புரியும்.
கோவில் உபன்யாசத்திற்கு சென்ற யாரும் அவர் கூறியதை அப்படியே நினைவு கொள்ளமுடியாது. அந்த குறிப்பிட்ட நேரங்களில் அவர்கூறியதை மனம் ஒன்றிக் கேட்டாலும் ஒரு சில நிகழ்வுகளில் மனம் லயித்துவிட்டால் அது ஓர் ஆனந்த அனுபவம். மொத்தமாக நன்றாயிருந்தது எனத்தான் சொல்கின்றோம். என்ன நினைத்து அந்த நிகழ்விற்கு சென்றோமோ அதன் தாக்கம் நம்மை அடைகின்றது. கூடையில் தண்ணீர் பிடித்தால் சில நிமிடங்களில் சல்லடைவழியாக வெளியேறி கூடை சுத்தமாகி விடுவதுபோல உபன்யாச செய்திகள் நம் உள்ளே தங்காவிடினும், அதைக்கேட்ட அந்த நேரங்களில் நம் மனது லயித்திருந்த நிமிடங்கள் நம் மனது, ஆத்மா சுத்தமாகி ஆனந்தம் அடைகின்றது.
கருனை: கடவுளின் கருணை சிறிதளவு கிடைத்ததும், அகங்காரம் கொண்டு மனம்போனப் போக்கில் தாறுமாறாக நடந்துகொள்கின்றனர். தொடர்ந்து அவ்வாறு நடக்கும்போது கடவுளின் கருணையை முற்றிலும் இழந்து பழையநிலைக்கே திரும்பி விடப்படுகின்றார்கள்.
ஒரு சக்தி மிக்க முனியின் ஆசிரமத்தில் ஓர் எலி வாழ்ந்தது. அங்கிருந்த பூனையினால் அடிக்கடி தொந்தரவு ஏற்பட அது முனிவரை நாடியது. அவர் அதை பூனையாக மாற்றினார். பூனைவெளியில் சென்றபோது நாய்கள் அதை துரத்திவர, முனிவர் உதவியை நாட, அவர் அந்தபூனையை ஓர் நாயாக மாற்றினார். அந்த நாயை பசியுடன் இருந்த சிறுத்தைபுலி வேட்டையாட துரத்த முனிவரிடம் ஓடிவர, அவர் அதை புலியாக மாற்றினார். புலியாக மாறிய எலிக்கு பசிஎடுக்க அது முனிவர்மேல் பாயத்தயாரானது. அந்தப்புலி எலி-பூனை-நாய்-புலி ஆகிய மாற்றங்களை மறந்திருந்தது. புலியின் நிலையிலிருந்து அது பாயத்தயாராகவே அதை மீண்டும் எலியாகவே மாற்றினார்.
இந்த கதை நிகழ்வு, கருணை நமக்கு கிடைத்தால் அதை சரியாக உபயோகித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நம்மையடைந்த கருணை நம்மைவிட்டு விலகிவிடும். நாம் மீண்டும் பழைய நிலையடைந்து வருந்துவோம் என்பதை உணர்த்துகின்றது.
பள்ளியில் படிக்கும் மாணவர்களில் ஒருவன் வேறொரு மாணவனின் பொருளைத் திருடி விட்டான். அவனை ஆசிரியன் முன் நிறுத்த அவர் அவனைத் தடவிக் கொடுத்து "திருட்டு தவறு" என அன்புடன் உரைக்கிறார். புரிந்ததா? எனக் கேட்டு இனி இவன் திருடமாட்டான்! என மற்ற மாணவர்களிடம் சமாதானம் கூறி அனுப்பி விட்டார்.மீண்டும் இதே தவறை அவன் மீண்டும் செய்ய மற்ற மாணாக்கர்கள், அவனைப் பள்ளியை விட்டு வெளியேற்ற விரும்பினார்கள். அவனுக்கு ஆசிரியர் மீண்டும் அறிவுரை கூற, இந்த அனுகுமுறையை இம்முறை ஏற்கத்தயாராக இல்லாத மாணவர்கள் அவனை வெளியேற்றாவிடில் அனைவரும் வெளியேறி விடுவதாக கூறினார்கள். சரி போங்கள் என அமைதியாக சொன்னார் ஆசிரியர்.
ஏன் திருடக்கூடாது என்பது உங்களுக்கு நன்கு புரிந்து விட்டது. நீங்கள் எங்கு சென்றாலும் சரியாக இருப்பீர்கள். உங்களுக்கு நான் அவசியமில்லை. இவனுக்கு நல்லது கெட்டது தெரியவில்லை. அதைப் புரியவைப்பதுதான் எனது கடமை. இவனுக்கு இதை நன்கு புரியவைக்க நான் அவசியம் தேவை. வெளியே அனுப்ப முடியாது என்ற ஆசிரியரின் கருணை அன்பைக் கண்ட மாணவர்கள் மன்னிப்பு கேட்டனர்.
திருட்டு மாணவனின் மனதை ஆசிரியரின் மனிதநேய கருணை மாற்றியது. ஆசிரியர் எல்லாம் போதிப்பவராக மட்டுமல்லாமல், கண்டிப்பும், கனிவும், கருணையும் காட்டத் தெரிந்தவராக இருந்தால் தான் நல்ல உள்ளம் கொண்டவர்களை உருவாக்க முடியும். அவரே உண்மையாண ஆசிரியர், போதகர், குரு, ஞானி எல்லாம்-குருஸ்ரீ பகோரா.

வியாழக்கிழமை, 04 October 2012 12:44

5-5.உள்ளேகட!

உள்ளேகட!                                                                                                              

பிரமாண்டம் என்றால் அளவிடமுடியாத அளவிற்கு பெரியது. எந்தவித அளவுகோளும் இதற்கு இல்லை. நீங்கள் நினைப்பது போல பலமடங்கு பெரியது. பிரமாண்டம்- பிரம்மம்+ அண்டம். அண்டம்- உலகம் அனைத்தையும் தன்னுள் அடக்கிய பிரம்மம்- ஆண்டவன்- கடவுள். எதிலிருந்து இந்த உலகம் உண்டானதோ, எதற்குள் இந்த உடலும் உயிரும் சங்கமிக்கின்றதோ அதுவே பிரம்மம்.
ஓர் விதையுனுள் ஓர்மரம் அடங்கியிருப்பதால் விதையே பெரியது, மரத்தைவிட. ஆனால் ஓர் மரத்தில் இது போன்று எத்தனை விதைகள் உருவாகின்றது. உற்பத்தியாகின்றது. எனவே விதையைவிட மரமே பெரியது. புரியாத ஆனால் உணரும் பெரிய தத்துவம் இது. இந்த வித்தையை புரிந்தவன், அறிந்தவன் கடவுள். அதனால்தான் பிரமாண்டவனாய் இருக்கின்றான்.
ஆலயம் என்பது ஆன்மாக்கள் ஆண்டவனிடம் ஒன்றி லயிக்குமிடம். கோவில் உயிர்களின் தலைவன் தங்குமிடம். ஆலயம் கோவில் வடிவானது. கோவில் கர்பகத்தினுள்ளே இறைவன் குடியிருப்பு. நம் உடலே ஆலய அமைப்பு. ஆக இந்த உடலின் கர்ப்பகத்துள்ளே இறைவன் குடியிருக்கின்றான்- ஆன்மாவாக- உயிராக. ஆன்மா உடலைச் சார்ந்து இருப்பதால் அந்த உடலின் ஆசாபாசத்திற்கு ஏற்ப நல்ல, தீய செயல்களில் ஈடுபட வைக்கின்றது.
எனவே நம் எண்ணங்கள் நல்லவையாக இருந்தால், அதனால் ஆன்மா புனிதப்பட்டு அது பாவங்கள் நீங்கி முற்றிலும் இறை குடியிருப்புக்கு ஏற்றதாகி விடும். நம் பாவச்செயல்கள் காரணமாக மனம் இருண்டுவிடுவதால் நாம் நம் உள்ளே இருக்கும் இறைவனைக் காணமுடிவதில்லை. அந்த இடத்தை இருட்டடைப்பு செய்து விடுகின்றோம்.
வாழ்வின் மூலத்தை தேடுவது, தொடுவது என்பது இன்னொரு பரிமாணத்திற்குள் நுழைவதாகும். இறைவன் ஜோதிவடிவமானவன். எனவே மாயை எனும் அந்த இருட்டை நீக்கி மனதில் ஒளிகொண்டு இறையைக் கணமுயலுங்கள். இருண்ட இடத்தில்தான் ஒளி பரவமுடியும்.
ஒளி வந்தபின் இருண்டபகுதி என எதுவும் இருக்காது. அஞ்ஞானம் உள்ள இடத்தில் ஆண்டவன் வந்து ஒளி நிரம்பினால் முழுமையான ஞானம் நிறைந்து விடும்.
நமக்குள்ளே அவன் ஒளிர வேண்டும். இருளை அகற்ற ஞானம் என்ற அகல் விளைக்கை ஏற்றுங்கள். மனம், மூச்சு, பார்வை, சொல், கேள்வி, உணவு ஆகியவன எங்கிருந்து பிறக்கின்றனவோ, எங்கு போய் சேர்கின்றதோ அதுதான் அருளின் பிறப்பிடம். முதலில் நாடுங்கள். பின்னர் தேடுங்கள். ‘தேடுங்கள் கிடைக்கும்’.
ஒரு ஆன்மாவின் உடலின் நிழல் அதனோடு எப்படி ஒன்றியிருந்து ஓளிபட்டால் மட்டும் நம் கண்களுக்கு தெரிகின்றதோ, அப்படியே நம் உள் இருக்கும் இறையும் உள்ளேஒளி பரவினால் மட்டுமே காணமுடியும்.
கண்ணனே! உன் கால்களால் என் மார்பில் மிதி. உன்கால்களில் மிதிபட்டு விஷப் பாம்பு மடிந்ததை அறிவேன். அதேபோன்று என் மனதில் உள்ள காமம், குரோதம், மோகம், மதம், போகம் ஆகிய பாம்புகள் நீ உதைத்தால் அழிந்துவிடும். என் மனம் சுத்தமாகிவிடும். அப்போது இறையை நான் காணமுடியும் என, தன்நிலை மறந்து ஒரு கோபிகை கூறியதாக புராணத்தில் உள்ளது.
எரிகட்டுகளை பற்றவைத்தால் புகைவருகின்றது. அது கண் எரிச்சலையும், மூச்சுத் திணரலையும் ஏற்படுத்தும். நமக்கு நெருப்பு வேண்டும். நமது நோக்கத்தில் உறுதியாக இருப்பதால் எரிச்சலையும் திணரலையும் பொறுத்துக்கொண்டு மூச்சுக்காற்றால் ஊதி ஊதி நெருப்பு பற்ற உதவி செய்கிறோம்.
நெருப்பு எரிய ஆரம்பித்தால் புகையில்லை, கண் எரிச்சலில்லை, மூச்சுத்திணரலில்லை. அங்கே ஒளியையும் அதன் வெப்பத்தையும் உணருகிறோம்.
இதேபோன்றுதான் ஆன்மீகப் பாதையில் ஆரம்பத்தில் ஏற்படும் இடர்பாடுகள். தடங்கல்களைத் தவிர்த்து நாம் இறைஓளி காணும் கொள்கையில் உறுதியுடன் செயலாக்கம் நடைபெற்றால் அந்த வெளிச்சத்தை காணமுடியும், அதில் ஒளியை உணர்வீர்.
அந்த ஜீவஒளி நம்மைச் சுற்றியுள்ள எல்லா ஜீவன்களுக்கும் நன்மை பயப்பதாக இருக்கும். எனவே தடைகள் கண்டு ஒதுங்காமல் தொடர்ந்து பயணித்து இன்ப ஓளியை காணுங்கள்.
தலைமைத் துறவி ஓர் சிலையை எடுத்து தன் சீடர்களிடம் கொடுத்து, இது சாதாரண சிலை என நினைத்துவிடாதீர்கள், மிகவும் சக்தி வாய்ந்தது. பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் வைத்திருங்கள் என்று அறிவுறுத்தினார். அப்போது திருடர் தொல்லை அதிகம் இருந்ததால் அவர்களால் சிலை சேதப்படமல் இருக்க, சீடர்கள் முழு முயற்சி எடுத்து அதை பாதுகாத்தனர். அதைத் தொடர்ந்து பாதுகாப்பதில் சிரமும் இருந்தது. அந்த சிலையை வைத்திருந்த இடத்தில் மழைநீர் வழிந்து, கூரையிலிருந்து ஒழிகி களிமண் கரைந்து விடவே அச்சிலை பொற்சிலையாக காட்சி தந்தது. மண்சிலை பொன்னாகவே தங்கள் குருவிடம் சென்று விபரத்தை கூறினார்கள். உண்மையில் அது பொன் சிலைதான், திருடர்களிடமிருந்து காப்பாற்றவே அதற்குமேல் களிமண் பூசிவைத்தேன் என்றார்.
வெளியே உள்ளமண் கரைய உள்ளே உள்ள பொன் தெரிந்தது, மனித உயிரின் உடல்களும் களிமண் சிலைபோலவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் உள்ளே உள்ள அவர்களின் பொன்ஆன்மாவை அடையாளம் தெரியாமல் வாழ்வில் பயணித்து கொண்டிருக்கின்றனர்
பயம், ஆசை, பேராசை, கோபம், ஆணவம், கர்வம், பொறாமை இவைகளிலிருந்து விடுபட்டால் வெளிச்சம் உள்ளே வரும், அப்போது உள்ளே இருக்கும் உண்மைகள் புரியும். அது ஆன்மீக உணர்வுகளினால்தான் தோன்றும் என்றார்.
எந்தவித அசைவும் இன்றி வெறுமனே இருக்கும் மரக்குச்சியை தண்டம், என்பதால் அதேபோன்ற நிலையில்உள்ள ஓர் ஆன்மாவின் உடலை நாம் தண்டச்சோறு என்கின்றோம். ஆனால் கரியாகி மண்ணில் மறைந்த அந்த தண்டம்கூட ஓர்நாள் வைரமாகி ஒளிர்கிறது.
ஆன்மாக்களே! இப்போது உலக்கை தண்டமாக ‘முசலகிசலயம்’ ஆக பலரால் நினைக்கப்பட்ட நீங்களும் என்றாவது ஓர்நாள் மனிதர்களுள் மாணிக்கமாக பிராகாசிக்க அறிவு அருள் பெற விழையுங்கள். வெற்றி பெற்று ஒளிர்விடுங்கள். உள்ளே இருக்கும் இருளில் ஒளியை கண்டு ஆனந்தப்படுங்கள்.
நம் ஆன்மாவின் நல்ல உணர்வுகொண்ட செயல்களை ஆங்கே நாம் காணமுடியும். இதைத்தான் ஞானிகளும், புராணங்களும் “உனக்கு உள்ளே கட, உன்னை உன் மனதின் உள்ளே கடந்து செல்” என்றார்கள். அப்போது தெரிவான் உள்ளே உள்ள “கடவுள்”. அதாவது ‘உள்ளே கட, கட உள்ளே’ என்றநிலையில் கடவுளின் தரிசனம் காணமுடியும். நீ பந்த பாசங்களையெல்லாம் கட, உனக்குள்ளே கடவுள் இருப்பார் என்பது பொருள்.
சூரிய ஒளியின் மூலம் பகலிலும், சந்திர ஒளியினால் இரவிலும், மற்றும் செயற்கை ஒளியினாலும் எந்நேரமும் பொருட்களைப் பார்த்து அறிந்து கொள்ளமுடிகின்றது, எந்த ஒளியில்லா நிலையிலும், மனதில் பொருட்களை பார்த்து பழகிய அளவில், கற்பனை செய்து கண்டு கொள்கின்றோம்.
அதுபோன்றே நம் உணர்வு, மன எண்ணங்கள் கொண்டு நமக்குள்ளே கடவுளைத் தேடினால் காணமுடியும். எதைத் தேடுகிறாயோ அது உன்னுள்ளேயே இருக்கின்றது.
கடவுள் உன் வாழ்க்கைப் பயணத்தில் உனக்குத் தெரியாமலே உன்னுடன் பயணம் செய்யும் அனுபவசாலி. வாழ்க்கையின் ரகசியங்களை நீ உணர்ந்து புரிந்து கொள்ள உதவுபவர். அவரை நாடுவதால் உனக்கு அமைதி, நிம்மதி, சந்தோஷம், இன்பம் எல்லாம் கிடைக்கும்போது அது உனக்கு நன்மை என்பதால் அவரை நீ வணங்குவதில் எந்த தவறுமில்லை. நீ வணங்குவதாலும், வணங்காததாலும் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை.  
“அகம் ப்ரம்மாஸ்மி ”  என்றால் இதயத்தின் நடுவே வாசம் செய்பவன் என உபநிடதங்கள் கூறுகின்றன. இறைவன் அங்கே கட்டைவிரல்/ அங்குள அளவில் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
அப்படியென்றால் நாம் கடந்து உள்ளே சென்றால் நிச்சயம் அங்குலபிரமான இறைவனைக் காணமுடியும். அளவிடமுடியாத பிரமாண்டமானவன் உலக நன்மைக்காக ஒவ்வொரு உடலிலும் இந்த அளவிற்கு வெளிப்படுகின்றான்.
ஹிருதி (இதயம்)+ அயம் (பரமன்)- ஹிருதயம். அதனால் தான் பரமன் இருக்குமிடம் “இருதயம்” என்பர். இதை புரிந்து செயல் படுதல் நன்று. அதனால் தான் சித்தர்களும், முனிவர்களும் தங்கள் உடலைக் கடந்து மனதுள் பிரவேசித்து, அதாவது கடந்து உள்ளே சென்று, அங்குல பிரமானமுள்ள இறைவனை கண்டு தரிசித்து பூஜித்தும் விடுகின்றனர்
உலகில் உள்ள ஜீவராசிகள், தாவரங்கள் அனைத்தும் ஓர் அளவுகோளுக்கு உட்பட்டே படைக்கப் பட்டிருக்கும்போது இவை அனைத்தையும் படைத்த இறைவன் எந்த அளவு கோளின் அளவுகளுக்கும் எட்டாமல், அகப்படாமல் இருப்பதன் அளவு என்ன?
உலகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றான். “விஸ்வவியாபி” என்று அதனைக் கூறுவர். அனைத்திலுமுள்ள ஒருவன் நம்முள்ளும் இருப்பது சரிதானே! அதை நாம் உணரவேண்டும்.
‘மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்து பாண்டிய மன்னிடம் பிரம்படி பட்ட’ நிகழ்வு அறிவோம். சிவனின்மீது பட்ட அடி எல்லோர் முதுகிலும் பட்டதென்றால் இந்த நிகழ்வின் உண்மை என்னவெனில், அடித்தவனும், அடிபட்டவனும், உயிர்குலமெல்லாமும் சிவனின் அம்சம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவே.
கண்களைமூடி கருவரையை-கழுத்து என்றும், விமானம்-சிகரம்-தலை என்றும், கலசம்-சிகை என்றும் நினைத்துப் பாருங்கள். கோவில் கர்பகிரகமே ஒர் இறை உருவமாகக் காணப்படும். அதனால்தான் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கப் படாவிடினும், கருவரைக்கு மேல் விமானச் சிகரம், கலசம் வைத்து கட்டுகின்றனர்.
ஆகமவிதிப்படி கட்டப்பட்ட ஆலயத்தில், மனித உடம்பின் பாதங்கள்- ராஜகோபுரம், முழங்கால்- ஆஸ்தான மண்டபம், துடை-நிருத்த மண்டபம், தொப்புள்- பலிபீடம், மார்பு- மகாமண்டபம், கழுத்து- அர்த்த மண்டபம், சிரம்-கர்பக்கிருகம், சிரத்தின் உச்சி-விமானம். என்ற அமைப்பில் கட்டப்படுகின்றது.
திருப்பாதம்- பூவுலகம் என்றும், சிகை-பிரம்மலோகம் மற்றுமுள்ள புவர்லோகம், ஸுவர்லோகம், ஜனோலோகம், தபோலோகம், மஹாலோகம் ஆகிய 7 உலகங்களும் இறைவனின் உடலில் அடங்கிய பகுதிகளாகும். எனவே கோவிலை வலம் வருவது என்பது வெறும் வழிபாடு மட்டுமின்றி ஏழு உலகங்களையும் வலம் வருவதற்குச் சமமானது என்றால் இந்த செயல் எவ்வளவு புனிதமானது. ஆகவே இறைவழிபாட்டிற்குப்பின் வலம் வரவேண்டும்.
அந்தராலம், அந்தர்மண்டலம்: “அந்தராலம்” என்பது இறைவனின் கழுத்துப்பகுதி. இந்தப்பகுதியில் வலம் வரக்கூடாது. “அந்தர்மண்டலம்” என்பது கழுத்திற்கு அடுத்த பகுதி. இது தான் நாம் வலம் வரவேண்டிய பகுதி. ஏனெனில் படுத்துக் கொண்டு கழுத்தில் கைவைத்தால் நம் மூச்சுக்காற்று கைமேல் படுவதில்லை. கையை சிறிது நகர்த்தி நெஞ்சின் மீது வைத்தால் மூச்சுக் காற்று படுவதை உணரலாம்.
இதைப்போலவே கழுத்துப் பகுதியான ‘அந்தராலத்தில்’ அதிர்வலைகள் இருக்காது. கழுத்தை அடுத்துள்ள ‘அந்தர்மண்டலத்தில்’ இறை அதிர்வுகள் அதிகமாக கிடைக்கும்.
நாம் எவ்வளவு பெரியமலை, ஆறு, கடல், என பெரியவைகளையெல்லாம் பார்த்து மகிழ்ந்து பெரியது என அளவிடுகிறோம். இவ்வளவு சிறிய கண்ணால் அவ்வளவு பெரிய நிலைகளை கண்டு அளவிட முடியும்போது, சிறிய மனத்தில் ஏன் மிகப்பெரிய இறைவனை இருத்தமுடியாது. காணமுடியாது. கண்டிப்பாக முடியும். ஒருமுனைப்புடன் நினைவு கொண்டால் நம் இதயத்தில் இறை குடியிருக்கும். அதை உணரமுடியும்.
தோண்டிய குழியிலிருந்து எடுத்த மண்ணை மீண்டும் குழியினுள் நிரப்பினால், 1.முழுவதும் குழி நிரம்பினால் அது உத்தமமான இடம், 2. மண் உபரியாக இருந்தால் மத்தியமான இடம், 3.மண் பற்றாமல் போனால் அதமமான இடம். என நிலத்தின் தன்மைக்கு அளவு கோல் உள்ளது. அதுபோல மனம் உத்தமமானதாக இருக்க வேண்டும்.
மனதில் கெட்ட, தீய, வேண்டாத எண்ணங்களை எடுத்து, அழித்துவிட்டு நல்ல உயர்வான மனதின் தன்மை கெடாமல், எப்போதும் நல்ல எண்ணங்களை இட்டு நிரப்புங்கள். நல்ல செயல்களைச் செய்ய விழையும் நல்ல மனமாக இருக்கட்டும். அந்த உத்தமமான இடத்தின் இருளை நீக்கி ஒளியை பரப்புங்கள்.
உள்ளே கடந்து செல்லுங்கள். ‘கட உள்ளே’ என்று சென்று கடவுளைக் கானுங்கள். அந்த உத்தமமான நல்ல உள்ளத்தை உருவாக்க எளிமையான சிந்தனைகளை மேற்கொள்ளுங்கள். உன்னுள்ளேயும் கடவுள் இருப்பதனால்தான் கடவுளுக்கு படைத்து நெய் வேத்தியம் செய்தவைகளை மனிதனை உட்கொள்ள வைத்துள்ளார்கள்.
ஒருவரால் வாடிய பயிருக்காக வாடவும், வற்றிய வயிற்றுக்காக வருந்தவும் முடியுமானால் அவரால் உள்ளே இருக்கும் இறையை உணரமுடியும். புல்லில், பூவில், நீரில், நெருப்பில், பறவையில், மற்ற உயிரினங்களில் உள்ள ஆன்மாக்களை உணரத் தொடங்கினால் நீ இறையை நோக்கி பயணம் செய்கின்றாய் என்று அர்த்தம்.
அப்படி உள்ளே கடந்து கடவுளைக் கண்டால் அந்த நல்ல உள்ளத்தின் அதிர்வுகள் உங்களைச் சுற்றியிருக்கும். உங்களால் அதை உணரமுடியும். ஏன் உங்களைச் சுற்றியுள்ள அனைவராலும் அது உணரப்படும். உங்கள் சொல், வார்த்தைகள் அவர்களை மெய்மறக்கச் செய்யக்கூடும்.
இந்த அதிர்வுகளை கரு குடிகொண்டுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலும் உணரலாம். இயற்கையோடு நாம் ஒன்றியிருந்தால் அதை எப்போதும் உணரலாம். நம் முன்னோர்கள் கிரகங்களை ஆரய்ந்து கணக்கிட்டு பல அரிய, பெரிய விஷயங்களைச் சொல்லி இருக்கின்றார்கள். விஞ்ஞான உலகத்தின் பல ஆரம்ப நிலை செயல்கள் பண்டைக் காலத்தில் முன்னோர்களால் தெரிவிக்கப்பட்டவை.
இது எப்படி சாத்தியமாயிற்று? அவர்கள் இயற்கையை மதித்தார்கள். வணங்கினார்கள். அதனோடு ஒன்றிப் போனார்கள். உண்மைதனை உணர்ந்தார்கள். நினைத்தபோது அதை உபயோகித்தார்கள். உலகுக்கு உபதேசித்தார்கள். அதன் பயன்களை இன்றும் நாம் அனுபவிக்கின்றோம். எனவே இயற்கையை மதித்து வழிபட்டு, ஒன்றி உணருங்கள், நீங்களும் உன்மைகளை உணரலாம்.
நதி தன்னிடமுள்ள நீரை அருந்துவதில்லை. ஓர் மரம் தன்னிடம் உற்பத்தியான பழங்களை உண்ணுவதில்லை. ஓர் செடி, கொடி தன்னிடம் பூத்த மலர்களை ரசிப்பதோ, நுகர்வதோ இல்லையே! பூ, கனி தரு மரம், செடிகள் எல்லாம் பிற உயிர்களுக்குப் பயன்படுகின்றன.
அவைகள் அப்படியே மற்ற ஜீவராசிகளுக்கு அளிப்பதுபோல மகாத்மாக்களும், சாதுக்களும் மற்ற ஆன்மாக்களுக்கு உதவுவதற்காக வாழும் உயர் ஆன்மாக்கள். அவர்களைவிட அவர்களின் போதனைகள், பாதைகள், வழிகாட்டுதல்கள் முக்கியமானவை.
அந்த ஊரில் அவரே பெரிய செல்வந்தர். தனவான். அவர் ஒருநாள் ஒரு ஞானியைச் சந்தித்தார். சுவாமி, என்னைக் காப்பாற்றும்படியான ஒரு உபதேசம் கூறுங்கள் எனக் கேட்டுப் பெற்றார். அவர் சொன்னது, ‘எதைச் செய்தாலும் அதன் விளைவுகளை ஒருமுறைக்கு மூன்றுமுறை தீர ஆலோசித்து, உன் மனசாட்சிக்கு சரி என்று தோன்றினால் மட்டும் அதைச் செயல்படுத்து’ என்பதாகும். செல்வந்தருக்கு அந்த வாக்கியம் மிகவும் பிடித்திருந்தது. அதை அவர் தன் படுக்கை அறையில் எழுதிவைத்தார்.
அந்த ஞானியின் தர்மசெலவினங்களுக்கு சில லட்சங்களை நிதியாக அளித்தார். செல்வந்தர் இப்படி செலவு செய்வது அவசியமில்லை, பணத்தை விரையம் செய்கிறார் என அவரின் சொத்துக்குக்கு வாரிசுகளில் ஒருவர் நினைத்தார். தன் பங்கில் பணம் குறைகிறதே என்ற வருத்தம் அவரை ஓர் தீச்செயல் செய்ய தூண்டியது. சந்தர்ப்பத்தை எதிர் பார்த்து காத்திருந்தார்.
அப்போது செல்வந்தர் நோய்வாய்ப்பட்டார். நோய் குணமாகாததால் அடிக்கடி வைத்தியரை மாற்றினர். ஒரு வைத்தியர் செல்வந்தருக்கு மருந்து கொடுக்கும்போது சுற்றும் முற்றும் பார்த்து இடுப்பில் மறைவாக வைத்திருந்த குப்பியை எடுத்து கலக்கினார். செல்வந்தருக்கு கொடுக்க நினைக்கும்போது அவர் அறையில் எழுதப்பட்ட வாசகத்தைப் படித்தார்.
அதைப் படித்ததும் தன்னை யாரோ கவனிக்கின்றார்கள் என்ற பயம் வந்தது. தன் செயல் பாட்டின் விளைவுகளை யோசிக்காமல் செய்து விட்டோமோ என்ற நினைவு வந்தது. மனசாட்சிப்படி ஒரு வைத்தியர் இப்படி செய்வது சரியில்லை என்ற நினைவும் சேர பதட்டத்துடன் சென்று முன் தான் கலந்து வைத்திருந்த மருந்தை எடுத்துக் கொட்டிவிட்டு, வேறு மருந்தைச் செல்வந்தரிடம் கொடுத்தார்.
இவர் செயல்களைக் கவனித்த செல்வந்தர், எதையோ கலந்து பின் அதை கொட்டி விட்டு வேறுமருந்தை கொடுக்கின்றீர்கள் என்றார். பதறிய வைத்தியர் உண்மையை உலறி விட்டார். செல்வந்தரின் உறவினர் ஒருவரின் பேச்சைக் கேட்டு தான் தவறு செய்ததாகவும், நீங்கள் எழுதிவைத்திருந்த இந்த உபதேசம்தான் என்னை திருத்தியது என்றும், தன்னை மன்னிக்கும் படியும் கூறினார்.
உறவினர் தண்டிக்கப்பட்டார். மகான்களின் உபதேசங்கள் வெறும் வார்த்தைகளல்ல. அந்த சொற்களின் அர்த்தங்களை உணரத் தொடங்கிய உயிர்களுக்கு உலக வாழ்வு ஆனந்தம்.
மனிதன் மட்டும்தான் தனக்கு என்றும் தன் இனத்திற்கு என நினைத்துச் செயல் படுகின்றான். படைப்பின் தன்மை, சில உயிர்கள்வாழ மண்ணில் பல உற்பத்தி செயல்கள் நடைபெறுகிறது. நீ சேமிக்கும் பலாபலன்கள் உனக்கு நன்மையாகின்றதோ அல்லது தீமையாகின்றதோ! கண்டிப்பாய் உன் வாரிசுகளுக்கு அதன் பலன் உண்டு.
நீ சேர்க்கும் செல்வங்கள் எவ்வாறு அவர்களுக்கு பாத்தியதையாகின்றதோ அதுபோன்றே உன் செயல்களின் நன்மை, தீமைகளிலும் பாத்தியதை உண்டு. இதைப்புரிந்து கொள்ளுங்கள். தீயவழி சென்று தீமைகள் புரிந்து செல்வங்களைச் சேர்த்து நீங்கள் அனுபவித்தும் அனுபவிக்காமலும் சென்று உங்கள் குலவாரிசுகளுக்கு ஏன் தீமைகளை விட்டுச் செல்லவேண்டும். சற்று நிதானமுடன் சிந்தியுங்கள். உங்கள் செயலில் மாற்றம் ஏற்படும்.  
ஒரு ரிஷியின் மகள் மணப்பருவம் அடைந்தாள். வேதநெறியிலும், ஒழுக்கத்திலும் சிறந்த ஒருவனை மணமுடிக்க ரிஷி விரும்பினார். ஆனால் அவள் தனக்கு வரும் மாப்பிள்ளை, ‘குருடும், குருடு இல்லாதவருமான’ ஒருவரை மணக்க விருப்பம் தெரிவித்தாள். ஒரே நேரத்தில் குருடாகவும், குருடற்றவனாகவும் எப்படி ஒருவன் இருக்க முடியும், அவனை எப்படி தேடுவது. எப்போது மகளுக்கு திருமணம் என கவலை கொண்டார் ரிஷி. காலம் கடந்தது.
ஒருநாள் வேறு ரிஷியின் மகன் ஒருவன் முறைப்படி வந்து பெண் கேட்டான். அவனிடம், மகளின் குருடும், குருடற்ற மணமகனையே மணக்க விருப்புவதாகக் கூறிய நிபந்தனைகளைக் கூறினார்.  அவன் அந்தப் பெண்ணிடம் சென்று, எந்தக் கண்ணால் மனம் நினைக்கின்றதோ, புத்தி உண்மையை அறிகிறதோ, உலகம் ஞானம் எனச் சொல்லுகின்ற அந்த ஞானக்கண் எனக்கு இல்லை. அது ஒருவகைக் குருடே!
தினமும் நான் செய்யவேண்டிய கடமைகளைச் செய்கிறேன். காரியமான இயற்கையான பிரபஞ்சத்தையும், காரணகர்த்தாவாகிய பரம்பொருளை நெஞ்சில் நிறுத்தி செயல்படுவதால் என் செயல்களில் கடவுளைக் காண்பதால் நான் குருடு அல்லாதவனாகவும் இருக்கின்றேன், என்றதைக்கேட்ட அந்த பெண் அவனை கணவராக ஏற்க சம்மதித்தாள். இறக்கும் தருவாயில் பீஷ்மர், தருமருக்கு சொல்லிய அறம். அதுபோலவே நம்மில் ஒவ்வொருவரும் குருடாகவும், குருடற்றவருமாக இருத்தல் சிறப்பு-குருஸ்ரீ பகோரா

வியாழக்கிழமை, 04 October 2012 12:43

5-4.பண்பு!

பண்பு!                                                                                                                            

பண்பு எல்லா உயிருக்கும் ஆன்மாவிற்கும் இன்றியமையாத ஒன்று. பிறர் மனம் நோகாமல் சொற்களை கையாள்வது ஓர் பண்பு! செயல்படுவது ஓர் பண்பு!
திருமணம் என்றபின் பெண்களுக்கு தாய்மை என்ற உயர்வு வேண்டியதாயிருக்கின்றது. உண்மையில் தாய்மை உயர்வு ஓர் பெண்ணுக்கு இல்லை என்றாலும் தாய்மை உணர்வு கொள்ளுதல் அவசியம். அதுதான் மற்ற உயிர்களிடம் நேசம் கொள்ளச் செய்யும். அதுவே அன்பின் சிகரம். சிறந்த பண்புகளையும் காணமுடியும்.
தாய்மையடையாமல் சில ஆண்டுகள் கழிந்தால், ஒரு பெண் எவ்வளவு பேச்சுக்கும், ஏச்சுகளுக்கும், கேலிகளுக்கும் ஆளாகி விடுகின்றார் என்பதை நாம் நடைமுறையில் காண்கின்றோம். இந்த பேச்சுக்களும். கேலிகளும் அதே பெண் இனத்திலிருந்துதான் வருகின்றது. இது கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
ஒருவர் மனதை அறிந்தும், அறியாமலும் பல சொற்களால் காயப்படுத்தி விடுகின்றோம். அந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லையென்றால் என்ன! அது அவர்கள் பிரச்சனை! அவர்கள் கர்மவினைப்பலன்! என்ற நிலையில் அனைவரும் சிந்திக்க வேண்டும்.
வாழ்வில்  சந்தோஷம்காண மழலையும் ஓர் வழிதானே ஒழிய அது ஒன்றே அன்று. தாய் தந்தையரற்ற குழந்தைகள் மழலைக் காப்பகத்தில் நிறைந்துள்ளன. அவர்களுக்கு இவர்கள் உதவலாம். ஏன் நல்ல பண்பு இருந்கும் அனைவருமே உதவலாம்.
எந்த வழியிலாவது நிம்மதியாக சந்தோஷமாக ஜீவன் நடத்தி ஆனந்தம் அடையவேண்டும் என்பதே ஆன்மாவின் குறிக்கோள். இதைப் புரிந்து கொள்ளாமல் ஒருவரின் குறைகளையும், குற்றங்களையும் அவரைச் சுற்றியுள்ளவர்களிடம் வஞ்சகமான சொற்களால் மிகைப்படுத்திக் கூறி அதன் மூலம் ஒருவரின் மனதைப் புண்படுத்துதல் நல்ல பண்புள்ள செயலாகாது.
அவ்வாறு சுட்டிக்காட்டுவதால் அவரின் மனம் இறுகி, அதன் தாக்கத்தில் அவர் வேறு தவறு செய்ய ஏதுவாகும். அது அவர்கள் வாழ்வில் வசந்தத்தை வரவழைக்காது. துயரத்தைதான் தொடர்ந்து கொடுக்கும். இது நல்ல பண்பாளருக்கு அழகல்ல! மேலும் உங்கள் கர்மத்தில் தீயபலன்களைச் சேர்த்து கொள்கின்றீர்கள்
எல்லோரும் சந்தோஷத்துடன் வாழ, குறையுள்ளவரின் குறைகளை அவர் மனம் வருத்தப்படும்படியாக சுட்டிக் காட்டாமல் இருக்கப் பழகவேண்டும். அவர்கள் சந்தோஷமாக இருக்க ஆலோசனை அறிவுரை என்ற பெயரில் அவர்கள் குறை சம்பந்தப்பட்ட பேச்சுக்களையே பேசுதலைத் தவிர்க்க வேண்டும்.
அது சம்பந்தமான பொது விஷயங்கள் நடந்தாலும் பேச்சின் தன்மை உணர்ந்து, பேச்சின் போக்கை மாற்றிக் கொள்வதே சிறந்த பண்பு. அரக்கியின் மூக்கை அறுத்ததால் அவள் அலற அந்த சத்தம் கேட்ட ராமர், லட்சுமணா அரக்கியைக் கொன்று விட்டாயா? எனக் கேட்கிறார். “பெண்ணைக் கொல்வேனா?” எனச் சொல்லலாம் என லட்சுமணன் முற்பட்டபோது, அண்ணன் தடாகையை கொன்றது ஞபகம் வரவே, அப்படிச் சொன்னால் அது அண்ணணின் செயலை சுட்டிக்காட்டுவதுபோல் இருக்கும் என நினைத்து, “அலறினாள், விட்டுவிட்டேன்” எனக்கூறியதாக இராமயணம் கூறுகின்றது. எவ்வளவு உயர்ந்த பண்பு!
ராமன்மீது இலக்குவன் மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் கொண்டவராததால், தான் சொல்லும் சொற்கள் தன் அண்ணனைக் காயப்படுத்தக்கூடாது என ஒருகணம் சிந்தித்து சொற்களைக் கூறுகின்றான்.
இந்த எண்ணம் நமக்கும் வேண்டும். மனம் நோகும் கடுஞ்ச் சொற்களை விட்டு இதமான சொற்களைச் சொல்லப் பழகவேண்டும். அதற்கு நாம் அவர்களிடம் நேசமான அன்பு கொண்டிருக்க வேண்டும். எனவே அன்புதான் சிறந்த பண்பைத் தரும். அன்புதான் பிறர் மனதை புண்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்தின் மூலம் பண்பை நாம் கொண்டிருக்க உதவுகின்றது. ஒருவரின் குறை, குற்றங்களை சொல்லுமுன் அவர்மீது அன்பு கொள்ளுங்கள். அவர் செய்த அன்புச் செயல்களை நினைவு கூர்ந்து நீங்கள் செயல் பட்டால், உங்களால் அவரின் குறைகள் குறைந்து அவரின் அன்பு மிகுதியாக தெரியும்.
அன்பு உலகம்! ஆனந்த உலகம்! பண்புகூடிய உலகம்! சந்தோஷம் நிறைந்த உலகமாகும்! அன்பு, கருணை, இரக்கம், சாந்தம், அடக்கம் இவைகள் மனிதகுலத்தின் நலனுக்கு ஏற்ற நற்பண்புகள். நம் ஆன்மாவின் எண்ணத்தில் செயலில் இவைகள் இடம் பெறவேண்டும்.
‘எங்கெல்லாம் தர்மமும் நற்பண்புகளும் நிலவுகிறதோ அங்கே வெற்றி கிடைக்கும்’ என்கின்றனர் அருள் நிறைந்தோர். எல்லா உயிர்களிடத்தும் அன்புடனிருத்தல், குறைகளையும், தவறுகளையும் கண்டு உணர்ச்சி வயப்படாமல் கருணைகொள்ளல், எந்தசூழல் அவர்களை இவ்வாறு செய்ய வைத்தது என இரக்கம் காண்பித்தல், எந்த நிலையிலும் அடக்கம் காத்து நின்றல், எப்போதும் பணிவுடன் இருத்தல் ஆகிய பண்புகள் மனிதனின் நிலையை மேம்படுத்தும்.
மற்றவரது உணர்வுகளையும், மனோ நிலையையும் எந்த அளவுக்கு உணர்ந்து செயல்படுகிறோமோ அந்த அளவுக்கு நாம் பண்பு உடையவர்களாகிறோம். அந்த புரிந்துணர்வு பண்பாட்டில் நாம் பூரணத்துவம் அடைய உதவும்.
பொறுத்தார் பூமி யாழ்வார், பொறுமை கடலினினும் பெறிது என்பன வழக்கிலிருக்கும் வார்த்தைகள். பொறுமை என்பது ஒரு சிறந்த பண்பாகும். பூமி எல்லாவற்றையும் தாங்குவதுபோல தன்னை இகழ்ந்து பேசுதலையும் பொறுத்துக் கொள்வது தலையாய பண்பாகும். பிறர் செய்த தீங்கை பொறுத்தல் சிறப்பு.
நான், எனக்கு: நாம் எல்லோரும் நான், எனக்கு என்று அதிகமாக ஆட்படுகின்றோம். நம் செயல்களில் நான், எனக்கு என்ற எண்ணம் நிரம்பி வழிகின்றது. ஒர் செயல் வெற்றிபெற நம்மால் இது முடியும் என்ற எண்ணம் வேண்டும். முடியும் என்ற மன உறுதிவேண்டும். வெற்றி பெற்றால் மகிழ்வு கொள்ளலாம். அகந்தை கொள்ளக்கூடாது.
நான், எனக்கு என்ற எண்ணமுடையவர்கள் ஆடம்பரப் பிரியர்கள். தங்களிடம் உள்ளதை வெளியில் கூறி பெருமை கொள்வார்கள். நான் என்பது அகந்தை மிகக் கொண்டது. அங்கே அன்பு இருக்காது. உண்மை நிலவாது. “நான்” “எனது” என்னும் உணர்வுகள் நம்மை ஆட்டிப்படைக்கும் தன்மைகொண்டது.
அது உங்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்தும் எண்ணத்தை தோற்றுவிக்கக் கூடியது. நான் என்று உச்சரிக்கும்போது நீங்கள் அனைவரையும் விட்டு விலகிச் செல்கின்றீர்கள். அது ஆணவத்தின் ஆரம்பம். ஆணவம் கொள்பவர் யாராயிருந்தாலும் அவனியில் தனித்திருந்து தவிக்கநேரிடும் சூழலில் இருப்பர்.
நான் இல்லை என்றால் இது நடக்காது, என்ற எண்ணம், ஓர் மமதையை, ஓர் மயக்கத்தில் ஆழ்த்தும் எண்ணமாகும். இதைத் தவிர்த்தல் உங்கள் முன்னேற்றத்திற்கு நன்மை பயக்கும். பெரியவரோ, சிறியவரோ ஓரு செய்தியை, நிகழ்வை சொல்கிறார் என்றால், அவர் கூறிமுடியும் வரை அமைதியாக கேட்டுக் கொள்ளுங்கள்.
எனக்குத் தெரியும் என்ற நினைவில் இடையில் ஏதாவது கூறி அவரின் பேச்சை தடை செய்யாதீர்கள். தெரிந்த நிகழ்வாயிருந்தால் முடிவில் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். அவர் மனம் நோகாமல் இதமாகக் கூறுங்கள். உங்களுக்கு தெரியாத விஷயமாக இருந்தாலும் முடிவில் சந்தேகங்களை கூறி விளக்கம் பெறுங்கள்.
இது உங்களுக்கும் அவருக்குமிடையில் நல்ல சுமூகமான உறவை ஏற்படுத்தும், மேம்படுத்தும். உங்கள் செயல் உங்கள் பண்பின் தன்மைதனை உயர்த்தும். இந்த பண்பு பலவகையில் உங்கள் வாழ்வை வளப்படுத்தும். சந்தோஷிக்க வைக்கும்.
இந்த உலகை திருத்த முயலாதீர். முதலில் நீங்கள் திருந்துங்கள். நாம் நடக்கும் பாதை கரடுமுரடானது என்றால் நம் வசதியால் அந்த பாதையை சீர் செய்ய நினைப்பதைவிட முதலில் நம் கால்களுக்கு பாதுகாப்பு செய்வதே சிறப்பு. பாதைக்கு தோலிடுவதைவிட பாதத்திற்கு தோலிட்டுக்கொள். வாழ்வதற்கு ஏற்ற உலகமாக மாற்ற முதலில் நாம் நம்மை மாற்றிக் கொள்ள வெண்டும். அதிகமான கர்வம் உடைய நாம் என்ற நினைவு நம்மை நம் திறமையை அழித்துக் கொன்றுவிடும்.
பீமனின் வலிமையினால் ஏற்பட்ட கர்வத்தை, அனுமன் போக்கியதாக புராணங்களில் அறிகிறோம். இந்தக்கர்வம் ஓர் மத மதப்பானது. இந்த மதம் ஒருவருக்கு வேண்டாத ஒன்று என இந்துமதம் சாஸ்திரங்கள், புராணங்கள் வாயிலாக அறிவுறுத்துகின்றன.
ஒருவனுக்கு நிறைய வசதிகள் இருக்கலாம். பசி எடுத்தபோது உண்ணாமலிருக்கப் பழக வேண்டும். அது நம்மைச்சுற்றி இயங்கும் இயக்கத்தில் இயங்காமை ஆகி, யோகத்தன்மை கிட்டும். பதவி வரும்போது அதைத்தூக்கி எறியும் எண்ணங்களின் தைரியம் வேண்டும். நமது எண்ணங்களை அடக்க முடியும் என்பதே யோகமாகும்.
எனக்கு வேண்டும் என எதற்கும் அலைந்து திரிதல் கூடாது. நம்மைவிடத் தாழ்ந்தவர்கள், அவர்களை உயர்வாக கருதும்போது அது தெரிந்து சிரித்து ஒதுங்குவது உயர்ந்தவர்களுக்கு யோகமாகும். ஒர் செயலை பார்த்தவுடன் மோசம், சரியில்லை, தீங்கானது என கண்டுகொள்கிறவனே யோகி.
எந்தச் செயல்களுக்கான எண்ணங்களாயிருந்தாலும் அதன் முடிவில் நான் என்ன ஆவேன்! எனக்கு என்ன பலன்! என்று நினையாமல் முழுத் திறமையுடன் செயல்பட்டால், ஆதாயம் இன்றி வாழ்க்கையின் நோக்கம் அமைந்தால் உங்கள் செயல்களின் முடிவில் நீங்கள் பெருமைக்கு உரியவராகிவிடுவீர்!
காந்தியடிகள் தனக்கு பெருமை சேரும் என நினைத்து எதையும் செய்யவில்லை. பொது நலன்கருதி அவர் போரட்டங்கள் நடத்தி வெற்றி பெற்றார். பெருமை அடைந்தார். உங்களைச் சுற்றியுள்ள சூழலை கவனித்தால் உங்களால் என்ன செய்யமுடியும் என்பதை உணர்வீர்.
உங்கள்முன் உங்களால் செய்யக்கூடிய ஆயிரம் விஷயங்கள் தெரியவரும். அவைகளில் கவனம் செலுத்தி செயல்படத் தொடங்கினால் நீங்கள் பிரகாசிப்பீர்கள்! ஓர்நாள் வீட்டளவில், பிரிதொருநாள் ஊரளவில், மற்றொருநாள் உலகலவில் என்று உயர்வடைவீர்!
தெளிவுடன் யோசித்தால் ஓர் ஆன்மா கர்வம் அடைய எதுவுமே இல்லை என்பது புரியும். உலகத்தில் உன்னைக்கேட்டு எதுவும் நடக்கவில்லை. நடக்கும் நிகழ்வுகளில் நீ பங்கு கொள்கிறாய். நீ கலந்து கொள்ளாவிடினும் நடப்பது நிச்சயம் நடக்கும். இதில் நீ, நான், எனக்கு என்பதெல்லாம் ஒன்றுமில்லை. ஆம் ஒன்றுமேயில்லை.
எல்லோரையும் விட தானே உயர்ந்தவன் என எப்போதும் நினைவுகளை கொண்டிருந்த மாணவன் ஒரு நாள் தன் ஆசிரியரைப் பார்க்க சென்றான். அவன் வந்தது அறிந்தும் கவனியாததுபோல் மேஜைமேல் சில மனித மண்டை ஒடுகளை வைத்து அவைகளை தீவிரமாக ஆரய்ந்து கொண்டிருந்தார். நீண்ட நேரம் ஆனதால் எரிச்சலுற்ற மாணவன் ஐயா நான் வந்துள்ளேன். பார்த்தும் பார்க்காதுபோல் இருக்கின்றீர்களே என வருந்தினான்.
அதற்கு ஆசிரியர், அன்பனே இங்கிருக்கும் மண்டை ஓடுகள் எல்லாம் அவர்கள் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர்களுடையது. இதில் உனது தந்தையுடையது எது என்று தேடிக் கொண்டிருக்கின்றேன் என்றார்.
மாணவனுக்கு அப்போதுதான் உண்மை புரிந்தது. தான் இன்று எப்படியிருந்தாலும் ஒருநாள் இதைப் போன்றே யார் என அறியா நிலை ஏற்படும் எனத் தெளிந்தான். அவனின் தான் என்ற செருக்கு, ஆணவம் ஒழிந்தது.
ஆத்மாக்களே இவ்வுலகில் எதுவும் உங்களுடையதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதுவே ஆனந்த பயனத்தின் முதல்படி.
‘என்னுடையது’ என்ற நினைவுகள் இருக்கும்வரை எதையும் விட்டுக் கொடுக்க நீங்கள் விரும்பவில்லை என்றாகும். அப்படி எதுவும்  என்னுடையது அல்ல, இயற்கையிலிருந்து, இறைவனிடமிருந்து பெறப்பட்டது என்ற பக்குவம் வரும்போது, உங்களிடம் இருப்பது எல்லாம் பொதுவாகிப் போனதால், விட்டுக்கொடுக்க உங்களிடம் ஏதும் இருக்காது. மனம் தெளிவாக குழப்பமின்றி அமைதியாக எதையும் எதிர் நோக்கும்.
கீதா உபதேசத்தைவிட சிறப்பு என்னவெனில், தேரில் அமர்ந்து பவனிவர எல்லோருக்கும் நன்றாயிருக்கும், ஆனால் பாரத போரின் செயல் கர்மங்களை நிகழவைக்க அருளாளன் கண்ணபிரான் எல்லாம் விட்டு எளிமையாக, அமைதியாக தேரோட்டியாக அமர்ந்து கொண்ட பணிவு என்ற பண்பு நம் அனைவருக்கும் வேண்டும். அந்த பணிவு கொண்டதனால் அவர் எப்படி பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடித்தந்தார் எனப்புராணம் வாயிலாக அறியலாம்-குருஸ்ரீ பகோரா.

வியாழக்கிழமை, 04 October 2012 12:42

5-3.அழிவு!

அழிவு!                                                                                                                        

அழிவு என்பது இயற்கையின் இயற்கையான நியதி. எனவே நாம் எதையும் அழித்தல் கூடாது. அந்த உரிமையும் நமக்கு வழங்கப்படவில்லை.
தேவியின் மூலமந்திரத்தில் அழிவை குறிக்கும் கணக்குக்கு சிறிதும் இடமில்லை எனக்கூறப்படுகின்றது. அப்படி என்றால் தெய்வங்கள் எப்படி துரோகிகளை, எதிரிகளை, துன்புறுத்துபவர்களை அழிக்க முடியும். அவதாரங்கள் எல்லாம் உண்மையை உலகுக்கு புரியவைக்க! எத்தகைய செயல்களை செய்யக் கூடாது என்பதை வலியுறுத்த!
ஆனால் அவர்கள் அழித்ததாகச் சொல்லியிருப்பது பொது மக்களின் பகைவர்களை, விரோதிகளை, கொடியவர்களை, அன்பின் எதிரிகளை. அழித்தல் என்பது அந்த சமூக விரோதிகள், கொடியவர்கள், அன்பில்லாதவர்கள் மக்களின் மேல் வைத்திருந்த காழ்ப்பு உணர்ச்சிகளை, பகைமை எண்ண உணர்ச்சிகளை அறவே அழித்து அவர்களின் செயல்களால் நிகழவிருக்கும் நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்தி அவர்களுக்கும் உண்மை நிலையை உணர்த்துவதேயாகும் அந்த அழித்தல் செயல்.
அதனால் தான் கொடியவர்களான அவர்களின் மிகையாண உணர்ச்சிகள் அழிக்கப்பட்டவுடன், அவர்கள் உண்மைதனை புரிந்து மன்னிக்க வேண்டிய பின் அருள் கொண்டு ஆசி வழங்கி அவர்களுக்கு மன்னிப்புகள் வழங்கப் பட்டுள்ளது.
இப்படி கொடியவர்களுக்கெல்லாம் மன்னிப்பு வழங்கப்படும் போது நல்லவர்களுக்கு மன்னிப்புகள் ஏதுமில்லை. சோதனைகள்தான். மன்னிக்கும் வகையில் ஏதும் செயல்கள் இல்லை. நான் என்ன குற்றம் செய்தேன் என பலர் வேதனைப் படுவதுண்டு. பட்டை தீட்ட தீட்டத்தான் வைரத்தின் ஒளி மிகையாகின்றது. நம் செயல்களை பட்டை தீட்டி உறுதியுடன் வழிமுறைப் படுத்தவே அந்தச் சோதனைகள்.
எதிரி என்று எவருமில்லை! அனைவரும் இவ்வுலக உயிர்களே! உலகில் வாழ தகுதி உள்ளவர்கள்! உரிமையுள்ளவர்கள்! அவர்கள் வாழ்வதற்காக எடுக்கும் முறைகளை செயல்படுத்துதலால் வேறுபடுகின்றனர். வாழ எடுக்கும் முறைகளை நெறிப்படுத்தினால் அனைவரும் பேரன்பு உள்ளவர்கள் ஆவார். மனிதநேயம் மிக்கவர்களாகி விடுவார்கள்.
அவர்கள் சொல் செயல் ஏதனாலும் மற்றொருவருக்கு தீங்கு நேராது. சொல்லுமுன், செயலுக்கு முன் சிறிது யோசித்து, ஒருமுறைக்கு இருமுறை, மும்முறை யோசித்து சொல்லப்பட்டால், செயல்பட்டால் அந்தச் சொல்லால், செயலால் யார் ஒருவருக்கும் பாதிப்புகள் இருக்காது. அப்படியே இருந்தாலும் அது குறைவாகவே இருக்கும்.
அப்போது அங்கு அன்பு மலரும்! ஆனந்தம் தோன்றும்! அனைவரும் சந்தோஷமாய் இருக்கலாம்! சந்தோஷத்தை சந்தோஷிக்க வாழ்வு சந்தோஷமயமாகும். இன்னல்களை சந்திக்க, இடர்பாடுகளை உறுதியுடன் தாண்ட நாம் கொண்ட சந்தோஷமே உதவும்.
உந்துதல் அழிவு: நாம் கொண்ட சந்தோஷம் உடலில் பயணித்து எல்லா அவயங்களுக்கும் சென்று ஓர் உந்துதல் நிகழ்வை ஏற்படுத்தும். இந்த உந்துதலின் காலம், அளவைப்பொறுத்து அதன் சக்தி நமக்கு கிடைக்கின்றது. நமது பயணத்தில் ஓர் துக்கம் ஏற்படும் போது இந்த உந்துதல் சக்தி அதைப் போக்க செயல் படுவதால் அதன் சக்தி அளவு குறைகின்றது.
எனவே மீண்டும் மீண்டும் நம்மிடையே உந்துதல் ஏற்பட்டு அதன் சக்தி இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு ஏற்படும் பாதிப்பு நிகழ்வுகளால் அழியும், குறையும் உந்துதல் சக்தி அழியாமல், உந்துதல் அழிவின் பாதிப்பு நிகழாமல் இருக்கும்.
உதிர்தல்: மரங்கள், செடிகள் பூக்களை மலர்வித்து தங்கள் அழகை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்த அழகை, மணத்தை எல்லோரும் பார்ப்பதுமில்லை. கவனம் செலுத்தி ரசிப்பதும் இல்லை. இருப்பினும் இயற்கை தன் கடமைதனை செய்கின்றது.
எல்லாப் பூக்களும் சூல் கொண்டு காய்களாவதில்லை. காய்கள் ஆன எல்லாம் கனிகளாவதில்லை. நாம் நினைக்கலாம், எல்லா மலர்களும் காயாகி கனிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று. நீங்கள் நினைக்கும் இந்த நியதி நடப்பதில்லை. நிறையப் பூக்கள் உதிர்ந்து விடுகின்றன. பிஞ்சுகளும், காய்களும்கூட உதிர்ந்து விடுகின்றன. எஞ்சியவையே கனியாகின்றது.
இந்த நியதி யாருடையது. அது கர்மபலன்களின் செயல். சூரியன் ஒளிகண்டு குளத்தின் மலர்கள் அல்லி, தாமரை எல்லாம் மலர்வதில்லை. அன்று அப்போது தயாராக இருப்பவை மட்டுமே மலர்கின்றன. மற்றவை நாளை. அல்லது அடுத்த நாள் என்று நியதி உண்டு. இதுபோன்றே மனிதனுக்கும் நியதி உண்டு. கர்மபலன்களுக்கேற்ப நடக்கும் நிகழ்வுகளை ஏற்க பழகிக் கொள்ளவேண்டும்.
நான் திடீர் என்று இறந்துவிட்டால், உயிர் உடலிலிருந்து நீங்கிவிட்டால் என் கணவன்/மணைவி என்ன ஆவாள்! என் குழந்தைகள் என்ன ஆகும்! நான் நினைத்தது, செய்யவிருந்தது எல்லாம் என்ன ஆகும்! என நீங்கள் நினைத்தால் ஒன்றும் ஆகாது என்பதுதான் பதில். எது எப்படி நடக்க வேண்டுமோ அது அப்படியே நடக்கும். இது போன்ற புலம்பல்களால்தான் குழப்பங்கள் துன்பங்கள் நிகழ்கின்றன.
ஓர் பிறப்பிற்கு சந்தோஷப்படும் நாம், ஓர் இறப்பிற்கு பலவித எண்ணங்களை கொண்டுள்ளோம். வயது முதிர்ந்த இறப்பு என்றால், எல்லாம் அனுபவித்து விட்டார், கடமைகளைச் செய்துவிட்டார் இனிஎன்ன! நல்ல சாவு என்கின்றோம். ஒரு ஆன்மா உடல் நோய்வாய்பட்டு துன்பத்திலிருந்தால் அதைப் பார்க்கச் சகியாத பலர், அவர் இறந்தால் பறவாயில்லை என பிரார்த்தனை செய்வதுமுண்டு. செய்த பாவங்களுக்கு அனுபவிக்கிறது எனவும் சொல்வோர் உண்டு. அகால மரணம் என்றால், அந்த ஆன்மாவைப்பற்றி தெரிந்தவையெல்லாம் சொல்லி அவைகளையெல்லாம் அனுபவிக்காமல் சென்று விட்டாயே என வருத்தமுறுகின்றோம்.
இவ்வாறு எல்லாவற்றையும் சொல்லி புலம்பி வழியனுப்பும் நாமும், ஓர் நாள் மற்றவர்கள் புலம்பலுக்கிடையே வழியனுப்பப் படுவோம் என்பதை ஒவ்வொரு ஆன்மாவும் நினைவில் கொள்ளல் வேண்டும்.
நடப்பன எல்லாம் கர்மபலன் என்ற உணர்வுவேண்டும். அப்போதுதான் உதிர்வு/மறைவு நிகழ்வுகளும் ஓர் நியதிக்குட்பட்டது என்ற உண்மை புரிந்து அதன் தாக்கம் உங்களை பாதிக்காது. இல்லையெனில் இழப்பின் வேதனை மிக அதிகமாகி நிலைகுலையச் செய்துவிடும். உங்கள் கைகளில், எண்ணங்களில் ஏதுமில்லை, கர்மத்தின் முடிவுதான் என்றாலும், நல்ல எண்ணங்கள், நல்செயல்கள் கர்மத்தின் தாக்கம் அதிகம் பீடிக்காமல் இருக்க உதவும். சிந்தியுங்கள் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
தேடல்: நமக்கு தெரிந்த நிகழ்வுகள் பிறருக்கு பயனுள்ளவையாக மாற மற்றவருக்கு சொல்வதும் நமக்கு தெரியாத நிகழ்வுகளை மற்றவர்களிடமிருந்து தெரிந்து நடப்பதில்தான் வாழ்க்கையின் ஆரோக்கியம் அளவிடமுடியாத அளவிற்கு இருக்கின்றது. ஆகவே தேடலும், பரஸ்பர பகிர்வு மனப்பான்மையுமே வாழ்க்கையின் சிறப்பு.
மனிதா! நீ சுவாசி! அப்போதுதான் உனக்குத் தேவையான பிராணணைக் காக்க வாயு கிடைக்கும்! மனிதா! நீ தேடு! அப்போதுதான் உனக்கு நீர் கிடைக்கும்! மனிதா! நீ சுறுசுறுப்பாகு! வேலைசெய்! உனக்கு உணவு கிடைக்கும்! மனிதா! மற்றவர்களை மகிழ்வித்தால் உனக்கு சந்தோஷம் கிடைக்கும்!
இது எல்லோருக்கும் புரிந்த ஒன்று, ஆனால் தேடினால்தான், நாடினால்தான், செயல் பட்டால்தான் அன்பு கிடைக்கும். இதற்கும் நீ ஒன்று செய்ய வேண்டும். ஒன்று செய்தால்தான் அந்த மற்றொன்று கிடைக்கும். உன் முயற்சி, செயலின் தன்மை, ஆழம் இதைப் பொறுத்தே நீ தேடும் பொருளின் மதிப்பீடு அளவிடப்படும்.
எனவே உண்மையாக தேடு, உள அன்போடு தேடு, மனித நேயத்துடன், மாசற்ற உள்ளத்துடன் தேடு. தேடி விரும்பியதை அடையும் வரைத் தேடு. தேடல்...அன்பைத் தேடல் ஓர் சுகமான முயற்சி.. வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் செயல்.
மனதை அடக்கியவர்கள், மயக்கத்தைக் கொன்றவர்கள், நிஜத்தில் நிற்பவர்கள், எங்கும் நிறைந்திருப்பவர்கள்- சித்துவேலை தெரிந்த சித்தர்கள், மனிதர்களில் மேம்பட்ட மகான்கள், அரசர்களை ஆட்கொண்ட ரிஷிகள்,  முற்றும் துறந்த முனிபுங்கவர்கள், பீடங்களை தலைமையேற்கும் மடாதிபதிகள், சுவாமிகள் -இவர்களை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.
ஆனால் அவர்கள் சிந்தனை தவ வாழ்க்கையாகத்தான் இருக்கும்.  உயர்ந்த சிந்தனையுடன் எளிய வாழ்க்கையை மேற்கொண்டு, அதிலிருந்துதான் அவர்களின் தேடல், தெய்வ சிந்தனைகளைத் தொடங்குகின்றனர்-குருஸ்ரீ பகோரா.

வியாழக்கிழமை, 04 October 2012 12:41

5-2.ஆன்மா!

ஆன்மா!                                                                                                                           

ஆனந்தமான முகமும் ஆரோக்கியமான உடலும்தான் ஓர் ஆன்மாவிற்கு தேவை! ஓர் குழந்தை தனக்கு அறிமுகமானவர்களிடமிருந்து ஒர் பொருளைப் பெற்றுக் கொண்டவுடன் அந்த பொருளின் தன்மை அறியாமலேயே அதன் முகத்தில் ஓர் மலர்ச்சி, ஆனந்தம், ஓர் புன்முறுவல், சந்தோஷம் தோன்றுகிறது. இதைப் போன்றே என்ன! ஏது! என்று ஏதும் அறியா நிலையில் இந்தப் பூவுலகில் ஆன்மாவிற்கு ஓர் உடல் கிடைத்து உயிர் மூச்சை சுவாசிக்க ஆரம்பிக்கும் போது குழந்தையாகத்தான் தோன்றுகிறது.
இதுபோன்றே ஒர் பொருளை மூடிவைத்தால் அதைக்காண, அதைப்பற்றி அறிந்துகொள்ள நாம் மிகுந்த ஆவாலாய் இருப்பது இயற்கையான இயல்பு. இந்த உள்ளுணர்வு எல்லா உயிரினங்களுக்கும் உண்டு. இந்த உணர்வுதான் நம் உள்ளே மறைந்திருக்கும் ஆன்மாவையும் தேட ஆரம்பிக்கும்.
அந்த உணர்வு ஆன்மீகத்திற்கு அடிகோலும். நடந்த ஒரு நிகழ்வை மறந்துவிட்டு, அதைப்பற்றிய விபரங்களை நினைவுக்கு கொண்டு வரமுடியாமல் விட்டு விட்டாலும், நமது உள்ளுணர்வு செயல்படத் தொடங்கி, அந்த நிகழ்வு பற்றிய செய்திகளை நமக்கு பிறகு தெரியப்படுத்துதலை நாம் பலதடவை அறிந்திருப்போம். அன்று ஞாபகம் வரவில்லையே என நினைத்திருப்போம்.
இதுபோன்றே ஆன்மா தனது ஆன்மீக எண்ணங்களை என்றாவது ஓர்நாள் உள்ளுணர்வுகள் மூலமாக உங்களுக்கு தெரிவிக்கும். அன்று அது ஆன்மீக உணர்வாகப் புரியும். அதுமுதல் உங்கள் தேடல் தொடரும். ஆன்மாவின் பசியை தீர்க்க முயலுவீர்கள்.
ஒரு குழந்தை மட்டுமே எப்போதும் காரண காரியமின்றி சிரிக்க முடிகின்றது. என்ன செய்கின்றோம் என அறியாமல் விளையாட முடிகின்றது. துள்ளி குதிக்க முடிகின்றது. தன் வாழ்நாளில் நிகழ்காலத்தை புரியவில்லை என்றாலும் ஆனந்தமாக ரசித்து மகிழ்கின்றது. சந்தோஷப்படுகின்றது. ஆனந்தமடைகின்றது. இதுதான் வாழ்வின் அடிப்படைத் தத்துவம்.
அந்தக் குழந்தையின் நிலையில் உங்களை இறுத்திப் பாருங்கள். சந்தோஷப்படுங்கள். இவ்வுலகில் இயற்கையாக பல்வேறு விஷயங்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்றவகையில் கண்டு அனுபவிக்க, சந்தோஷிக்க நிறைந்துள்ளது. அவைகளை கண்டு ஏற்று ரசித்து அனுபவித்து சந்தோஷப்படுங்கள்.
நாளை என நினைத்து, அன்று அந்த பொழுதில் கிடைக்கும் சந்தோஷத்தை விட்டு விடாதீர்கள். பின் எப்போதும் அந்த வேளை கிடைப்பது எப்படி அரிதோ, அப்படியே அந்த சந்தர்ப்பம், சந்தோஷம் கிடைப்பதும் அரிது.
நீங்கள் குழந்தையாயிருக்கும் போது கற்கத் தவறிவிட்ட வாழ்க்கையை உங்களுக்கு ஒரு குழந்தை உங்களின் மேற்பார்வையில் வளர்ப்பில் வந்தால், அதன் வாழ்க்கை முறைகளை கட்டளையிட்டு, கண்டிப்புகாட்டி, சட்ட திட்டங்கள் போட்டு இருட்டடிப்பு செய்து விடாதீர்கள்.
இயற்கை பலப்பல இனிப்பான செய்திகளை, செயல்களை தன்னுள்ளே பொதிந்து வைத்துள்ளது. அவ்வப்போது அதைப் பெறமுயற்சி செய்து, அதைப் பெற்று தன் வாழ்வில் மலர்ச்சி, ஆனந்தம், சிரிப்பு, சந்தோஷம் ஆகியவற்றுடன் மகிழ்வுடன் வாழ்நாட்களை சிறப்பாக அமைத்து வாழ வேண்டும். அதுவும் ஆன்மாவின் வாழ்நாள் முடியும் வரை என்பதே இறையின் நியதி.
இதைப் புரிந்து கொள்ளாமல் சட்ட திட்டங்களை ஏற்படுத்தி மூடத்தனமாக வெறியுடன் பின்பற்றிக் கிடைக்கும் இனிய சந்தர்ப்பங்களை வீணடித்து விட்டு மிகுதியான வாழ்நாட்களில் சந்தோஷ சாயல் சிறிதுமின்றி உலவும் உடல்களே, உடலின் உயிரே, ஆன்மாவே உனக்கு.... உன்சிந்தனைக்கு... உன்செயல் பாட்டிற்கு....
ஆன்மா-மேல்நிலை: இயற்கை தோற்றுவித்த பொருட்கள், உயிர்கள் அனைத்திற்கும் அந்தந்த சூழ்நிலைக்கேற்ப இயற்கையான குணம், விசேஷம் உண்டு. அது அவ்வப்போது வெளிப்படுகின்றது. இவ்வாறு எல்லாப் பொருட்களும், மரம், செடி, கொடிகள், உயிர்கள் எல்லாம் தம் தம் குணங்களை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றது. இவைகள் ஒன்றுக்கொன்று சந்தித்தும், விலகியும் பரம்பிக்கிடக்கின்றன.
உலகில் தோன்றிய உயிர்களுக்கும், உடலின் ஆன்மாவிற்கும், கர்மத்தின்படி குணநலன்கள் இருக்கும். எப்படியிருப்பினும் பிறப்பிற்குபின் ஏற்படும் சூழல்காரணமாக, படிப்பு, நட்பு, பழக்கம் ஆகியவற்றால் அவற்றின் குணநலம் மாறவாய்ப்புண்டு. தவறு செய்யப் போகின்றோம் என்றால் நம்மை நாமே தடுப்பது போன்ற உணர்வு தோன்றுகின்றது. இதை நாம் மனத்தின் சாட்சி அதாவது    ‘மனச்சாட்சி ’ என்கிறோம்.
தவறான பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட விரும்புகின்றோம். நமக்குள்ளே இருக்கும் பல நல்லவைகளை பாதுகாக்கவேண்டும். இடை பழக்கவழக்கங்களால் அதைமாற்ற நினைத்து மனம் பேதலித்து மாறிவிட விட்டுக் கொடுத்துவிடக்கூடாது.
ஆகாயம் என்பது வெளியாகும். அதிலும் வஸ்து இருக்கின்றது. ஒரு குடத்திற்குள் வேறு பொருள் இல்லையென்றால் அதனுள் ஒன்றுமில்லை என அர்த்தமில்லை. அந்த குடத்தினுள் ஆகாயம் வெளி இருக்கின்றது. அந்த குடத்தினுள் உள்ள வெளியானது எப்படி  அண்டைவெளியான ஆகயத்தில் கலக்கின்றதோ அதே மாதிரி நம்முள் இருக்கும் ஜீவாத்மாவை பரமாத்மாவில் ஒன்றச் செய்யவேண்டும். ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற நிலை மோனத்தில் புரியும்.
கண்ணுக்கு புலப்படாத ஆன்மா, மனம் ஒன்றின் மூலமாக உடலை இயக்கி பலன்களை அனுபவிக்கின்றது. ஆத்மா சக்தி மிகுந்தது. தன்னை மறந்து உடலில் ஐக்கியமாகியுள்ளது. தன் நிலை உணர்ந்து இந்த உடல் சிறைக்குள்ளிருந்து மீளும்போது ஞானம் பெற்றதாக இருக்க வேண்டும்.
அதற்காக உடலுடன் இருக்கும்போது அதன் செயல்பாடுகளால் ஞானம் அடைய முயலவேண்டும். ஆத்மா விழிப்படையவேண்டும். நமது விருப்பமும், செயல்பாடுகளும் இணக்கமுடன் இருக்கவேண்டும். சரீரம் தன் செயல்பாட்டிற்கு அளிக்கப்பட்டது என ஆன்மா நினைத்து செயல்படும் போது மனத்தை சமநிலையில் இருத்தி வைக்கமுடியும்.
மனதில் இணக்கம் கொண்டால் வெளியில் நல்லிணக்கம் ஏற்படுவது இயல்பாகிவிடும். பிரச்சனையின் காரணங்களுக்கு நிவாரணம் அளிக்கவேண்டும். மேலும் காரணங்களைச் சேர்த்து பிரச்சனையின் தன்மையை கடினமாக்கி விடக்கூடாது. தயாராகும் எல்லா பூட்டுகளும் சாவியுடன்தான் தயாரகின்றது. அதைப்போன்றே எல்லாக் காரணங்களும், பிரச்சனைகளும் நிவாரணம், தீர்வு காணக்கூடியவைகளே! மனதின் மானசீக சக்தி அந்த காரணங்களுக்கு தீர்வுகாணும்.
ஆன்மாவின் உடலுக்கு உறவுகள் இருப்பதைப்போல ஆன்மாவிற்கும் உறவுண்டு. அதுதான் ஆன்மீக உறவு. அதை ஏற்படுத்திக்கொள்ள முயலுங்கள். அது ஆன்மாவிற்கு நன்மையான உறவாகும்.
இந்த உறவை வாழ்வின் காலத்தில் சிலர் புரிந்தும், சிலர் புரியாமலும் நெருங்க முயலுகின்றனர். எப்படியிருந்தாலும் எல்லா ஆன்மாவும் இந்த உடலைவிட்டுச் செல்லுமுன் கண்டிப்பாகத்தன் ஆன்மாவின் உறவை நினைத்துக் கொள்கின்றது. இதை யாரும் மறுக்க முடியாது.
நீங்கள்யார்! உங்களின் அடையாளம் என்ன! என்றால் அனைவரும் ஏதாவது ஒன்றை சொல்வீர்கள். ஆனால் எல்லாமே ஒருநாள் குழந்தை, இளைஞன்/இளைஞி, ஆண்/பெண், கணவன்/மனைவி, தாத்தா/பாட்டி என மாறூதலுக்குட்பட்டது.
ஆனால் ஆன்மா என்றுமே ஒன்றுதான். அதுதான் நிலையானது. அது உன்னுள்ளே உள்ளது. இதைச்சொன்னால் தத்துவம் பேசுவதாக சொல்வார்கள். உண்மையில் ‘தத்துவம்’ என்பதில் உள்ள ‘தத்’ என்றால் அது என்றும் ‘த்வம்’ என்றால் ‘நீ’ என்றும் அர்த்தம். எனவே தத்துவம் என்றால் ‘நீயே அது’ எனப் பொருள்.
நீங்கள் யார்! என்ற கேள்விக்கு இன்னார் பேரன், இன்னார் மகன், தாய் தந்தையர் இவர் என்றுதான் கூற முடிகிறதே அன்றி உங்கள் உடம்பில் உள்ள ஆன்மா எங்கிருந்து வந்தது எப்படிவந்தது! ஏன் வந்தது! யாருடைய மகன்/மகள் எனக் கூற முடியுமா! முடியாது! இப்படி எதுவும் சொல்ல முடியா ஆத்மா எவ்வளவு நாள் உடலை இயக்கும், எப்போது அது செல்லும் எனவும் கூறமுடியாது
அப்படி எதுவும் ஆன்மா பற்றி அரிதியிட்டுக் கூறமுடியா நிலையில், அது உடலில் இருக்கும் காலம் இனிமையானதாக இருக்க வேண்டும் என்பதே அருளாளனின் அவா! இந்த இனிமை கர்மத்தின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு இயங்கும் தன்மையுடையது.
கர்மத்தின் தாக்கங்களை குறைத்து, இருக்கும் இனிமைக்கு வளமை சேர்க்க முயல வேண்டும். அதுவே அந்த ஆன்மாவின் கடமை. தன் நிரந்தர உறவின்முறை நினைத்து தற்காலிக உறவின்முறையை வழிநடத்தப் பழகவேண்டும். படைப்பின் பகுதியாகிய ஆன்மாவின் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் உச்சநிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம்.
எல்லா பரிமாணங்களுக்கும் மேற்பட்ட ஓரு உச்ச பரிமாணத்தை, நிலையை அடைவதுதான் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் சிறப்பு. அந்த ஆன்மாதான் உடலின் இயக்கத்திற்கு காரணம் என்பதை புரிந்து கொள்ள மறந்து விடுகின்றனர்.
புராணங்களில் பலருக்கு ஒர் நிலையில் அவரவர்கள் விரும்பியது வேண்டியது நடந்துள்ளது என்ற உண்மைதனை உணருங்கள். அது எதனால் நடந்தது! எப்படி நடந்தது! அவர்களின் வழிபாட்டு முறையினாலா! அப்படியென்றால் இன்னல்களின்போது எப்படி வழிபடமுடியும்! அப்போது எப்படி நிகழ்வுகள் நடந்தது என கேள்விகள் எழலாம்!
காந்த ஊசியானது அதன் ஈர்ப்புத் தன்மையினால் வடக்கு நோக்கி திசை காட்டுவதுபோல அருளால் ஈர்க்கப்பட்டிருக்கும் ஆன்மாவின் மனம் உலக வாழ்வில் திசை தப்பி போகாது சரியான பாதையில் செல்லும். அதாவது அவர்களின் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. ஓர் நிலையில் அந்த வழிபாடுகள் வேண்டுதல்கள் ஓர்முனைப்பட்டு மையமாக குவிந்திருந்த காலம் அவர்கள் வேண்டியதை பெற்றுள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களது சக்தி என்ன! உங்களுக்குத் தெரியாது. ஆன்மாவின் பலம் என்ன! புரியாது. ஆனால் உங்களிடம் உள்ள விழிப்புணர்வு மனதையும் உணர்வுகளையும் ஒரு நோக்கில் செலுத்தி மையப்படுத்தப் பழகுங்கள். நீங்களும் அதைப் போன்ற வெற்றியை, வேண்டியதை ஓர்நாள், நீங்கள் மையப்படுத்தும் நாளன்று பெறுவீர்கள்.
உங்கள் உணர்வுகள் அகலக் கால் வைப்பதுபோல் இருக்கக்கூடாது. பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு எண்ணங்கள் சிதறுண்டு போகக்கூடாது. இது செயல், யோகம், தியானம் எல்லாவற்றிற்கும் பொதுவானது.
பாவபுண்ணியத்திற்கு அப்பாற்பட்ட நிலையையடைந்த ஆன்மாவும் வெற்றி, தோல்வி, தூற்றுதல், போற்றுதல், சாதனைகள், வேதனைகள், நடந்த நடந்துகொண்டிருக்கும் வாழ்வு, நடக்கவிருக்கும் சாவு ஆகிய யாதொன்றாலும் எந்த ஆன்மா சமநிலையை கொள்கின்றதோ அந்த ஆன்மாதான் உண்மையான மேன்மைநிலையை உணரமுடியும்.
அடைந்த மேன்மைதனை கெடுக்கவோ, எடுக்கவோ முடியாது. மேலும் மேலும் வளர்த்து தன் உறவிடம் ஒப்படைக்க முடியும். உங்களைச் சுற்றியுள்ள சக்திகளால் நீங்கள் யாரென்று தீர்மானிக்க முடியாத நிலை உங்களின் மேன்மைநிலை. உலகின் உயிர்களை அந்த நிலையில், உங்களில், உங்களின் உணர்வின் ஒரு பகுதியாக பார்க்க முடிவது அந்த மேன்மைநிலை. அதுவே ஆன்மாவின் மேல்நிலை.
பலர் வழ்வில் ஏற்பட்ட துயரங்கள், சலிப்புகள், வேதனைகள், கசப்புகள் இவற்றிலிருந்து விடுபட ஆறுதல் வேண்டி ஈடுபடுகின்றனர். ஆன்மீக நிலை கேலிக்கூத்தாக மாறக்கூடாது. வாழ்வின் மிகஉயர்ந்த பரிமானம் ஆன்மீகம். ஆன்மீகத்தின் பேரால் ஆறுதல் தேடக்கூடாது. உண்மையை புரிந்து உணர்வுகளுடன் ஆன்மா மேன்மையடைய ஆன்மீகத்தை நாடவேண்டும். பல வருடங்கள் உண்மையாக உழைக்க வேண்டும். உடனடியாக எதுவும் நடந்துவிடாது. உழைப்பிற்கு பதில் காலம் சொல்லும்.  
ஒருவர் நாய்க்கு உணவிடும்போது தடியால் அதை அடிப்பது வழக்கம். அந்த நாய் வலியின் மிகுதியால் நாளை உணவருந்தக்கூடாது எனநினைத்தாலும், அடுத்தநாள் அந்த நேரம் வந்தவுடன் வாலையாட்டி அங்குவந்து அடியுடன் உணவருந்தி செல்கின்றது. அடியின்றி உணவில்லையா என நாய் சிந்திப்பதில்லை.
அதுபோல வாழ்வும், துக்கமில்லா இன்பம் என்றில்லாமல், துக்கத்திற்குப்பின் இன்பம் என மாறிமாறி வரும் தன்மையுடையது. துயரமில்லா ஆனந்தவாழ்விற்கு ஏங்கும் மனம் கடைசியில் தான் ‘ஆன்மீக வாழ்க்கை’ என்ற உண்மையை உணருகின்றது.
ஆன்மீகம் பற்றி பேசுவது, யோசிப்பது, உணர்ச்சி வசப்படுவது எல்லாம் உடனடியாக நடக்கக்கூடியது. இன்று அற்புதமானதாக தோன்றியது ஓர்நாள் மிக மிக அல்பமானதாக தோன்றும். புத்திசாலித்தனமான செயல் சிந்தனை என்பது சிறிது காலத்திலேயே முட்டாள்தனம் நிறைந்ததாகத் தோன்றும். காலத்திற்கு இந்த சக்தியுண்டு. அந்த சக்தியை அடைந்த ஆன்மாவே மேல்நிலையை உணரமுடியும்.
நீங்கள் உணர்வது சிந்திப்பது முக்கியமல்ல. உலக வாழ்க்கைக்கு உங்கள் சிந்தனை, உணர்வு உறுதுணையாக இருக்கலாம். ஆன்மீகத்தைப் பொறுத்தவரை நீங்கள் நினைக்கும் சிந்தனைகள் உணர்வுகள் உங்களை எங்கும் கொண்டு சொல்லாது. உங்கள் சிந்தனைகள் பாதைகள் வகுக்கலாம். அங்கே செல்ல நீங்கள் முயற்சிக்க வேண்டும்.
ஓர் நிலை கொண்டு சக்தியை அடைய முயல வேண்டும். அது நீங்கள் உருவாக்கியது இல்லை. எப்போதும் இவ்வுலகில் இருந்து கொண்டிருக்கின்றது. அந்த நம்மைச் சுற்றியுள்ள சக்தி நிலைகளை ஈர்க்க வேண்டும். அவைகளை கிரகித்து சக்திநிலை கொண்டு நம் சிந்தனைகள் செயல்படும்போது நாம் எல்லா எல்லைகளையும் கடந்து பரிமாணத்தை உணரமுடியும்.
அமைதியாக அமர்ந்து தியானம் செய்வது மட்டுமல்ல. அவர்களுக்குள் சலனமற்ற தன்மை உணர்ந்திருக்க வேண்டும். உள் நினைவுகளிலோ, வெளி நினைவுகளிலோ சிக்கி சலனத்துடன் செயல்படக்கூடாது. உங்களால் கிரகிக்கப்பட்ட, உங்களுக்குள் ஏற்பட்ட சக்தி நிலையை முழுமையாக உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.
உண்மையைச் சொன்னால் மனித குலத்தின் மேலான குணநலன்கள் நாளுக்கு நாள் தாழ்வுகொண்டு குறைந்து வருகின்றன. அவ்வாறு குறைந்து வருவதன் எதிரொலியாக உலகின் நிலையும் அதில் பயனிக்கும் மனிதர்களின் நிலையும் அவ்வாறே இருக்கின்றது. உண்மையான சுகங்களும், மனச்சாந்தியும் இல்லை. ஒவ்வொரு ஆன்மாவும் சந்திக்கும் பிரச்சனைகளும், துன்பங்களும், துயரங்களும் கண்டு, இதற்கு காரணம் எல்லோரிடமும் குறைந்துவரும் மேலான நற்குணநலன்களே காரணம் என்பதை உணரமுடியும்.
இதைக்கண்டும், அனுபவித்தும், ஆன்மாக்கள் வெறுப்பின் எல்லையை அடைகின்றனர், அவைகளை களைவதற்கு முற்றிலும் நீக்குவதற்கு யாராவது வரமாட்டார்களா! என மனம் ஏங்குகின்றது. அது தவறாகும். உங்கள் சகஆன்மாக்களால் ஏற்பட்ட சம்பவங்கள் அதன் விளைவுகள், அதன் தாக்கங்கள் உங்களையும் சார்ந்தவர்களையும் பாதிக்கும்போது அவரவர்களே அதை தீர்த்துக்கொள்ள வேண்டும். அது தங்களால் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்.
எவருக்கும் இவ்வுலகில் பரிசுத்தமான சாந்தியை உருவாக்கும் திறமையும் ஞானமும் இல்லை, அருள் ஒன்றைத்தவிர. ஆன்மாவின் உறவைத்தவிர. எனவே ஆன்மாவின் உறவின் மீது நம்பிக்கை வையுங்கள். செயல் படுங்கள். அந்த ஆன்மீக உறவே உங்களை காப்பாற்றி கரையேற்றும்.
அதற்கு ஒவ்வொரு ஆன்மாவும் 1.நம்பிக்கையுடன், 2.சிந்தனை, செயல்முறை, நடைமுறைகளை சீர்படுத்தி, 3.தன்னைச்சுற்றியுள்ள அதிர்வுகளை கிரகித்து, 4. அந்த அதிர்வுகளை மேன்மைப்படுத்தி, 5. மேன்மையான அதிர்வுகளை ஓர் முகப்படுத்துதலே!  வேண்டியதை வேண்டியபோது வேண்டிய நிலையில் அடைய வாய்ப்பாக அமையும்.
உடலின் இயக்கத்திற்கு காரணமான உணர்வுபூர்ணமான உயிர்சக்தியை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். புரிந்து நடக்கவேண்டும். அதுதான் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும். உண்மையான சந்தோஷத்தையும் சாந்தியையும் அனுபவிக்கமுடியும்.
பிறந்த உடலின் ஆன்மா தன்னைச் சுற்றியுள்ளவர்களின் கூற்றைக்கேட்டு உறவுமுறை கண்டு, உறவுகளை, உரிமைகளை புரிந்து கொள்கின்றது. ஓர்நிலையில் வளர்ந்த ஆன்மா தன் தற்கால உரிமைகள் இது என்பதை புரிந்து நிரந்தர உறவு தன் ஆன்மாவிற்கு எது என சிந்தித்து அந்த உறவின் பிறப்புரிமைகள் முழுத்தூய்மையையும், சாந்தியையும் புரிந்து வழிநடந்து பூர்ண சுகம் பெறமுடியும்.
இதில் நாம் முதலாவதாக முழுமையான நம்பிக்கை கொள்ளவேண்டும். நம்பிக்கைதான் அச்சானி. நம்பிக்கை இருந்தால்தான் வெற்றிகிட்டும். நீங்கள் என்பது இந்த உடல் மட்டுமல்ல (அது செயல்படும் கருவி) ஆன்மாதான் நீங்கள் என உணரவேண்டும்.
இந்த உடம்பு ஓர் நாள் மறையும். ஆன்மாவின் உறவின் முறையில் என்னிடம் முழுமையான தூய்மையும், முழுசாந்தியும் உள்ளன என ஆன்மா என்னும் வகையில் செயல்பாடுகள் இருக்கவேண்டும். அப்போதுதான் அது புகழுடம்பாக இருக்கும். இதுகாறும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பிழைகள் தீங்குகள் எது என்பதை உணர்ந்து, அது சம்பந்தமான உணர்ச்சிகள் என ஆன்மாவுடன் இனியும் ஒட்டியிருக்க விடமாட்டேன் என எண்ண வேண்டும்.
மீதமிருக்கும் வாழ்நாட்களை பிரகாசிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். தேவையற்றவைகளில் நாட்களை வீணாக்க முயலமாட்டேன் என உறுதியுடன் செயல்பட்டு தியானத்தில் அமர்ந்து ஆனந்தமடைய வேண்டும். பலகாலம் வீணடித்து விட்டோம். அழியும் உடலுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஆட்பட்டு வாழ்வின் பலபகுதிகள் வீணாகிப்போனதை புரிந்து கொள்ளுங்கள். ஆன்மா மேன்மையடைய உங்களுக்கும் ஏனையோர்க்கும் நன்மையானவற்றை செய்ய முற்படுங்கள்.
இந்த உண்மையை, உணர்வுகளை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உணர்த்துங்கள். மற்ற உடல்களையும் ஆன்மாக்களாக பாவித்து பழகுங்கள். சொல் செயலில் முழுமையான கவனம் செலுத்துங்கள். எச்சரிக்கையாக கையாளுங்கள். அப்படியில்லை என்றால் எல்லாம் கெட்ட சொற்கள், செயல்களாகிவிடும். பலன்கள் எப்படியிருப்பினும், அதில் அதிக நாட்டமின்றி தள்ளி இருப்பது சிறப்பு. அப்போதுதான் அதன் தாக்கம் ஆன்மாவை அதிகம் பாதிக்காது.
சரியான செயல்கள் சந்தோஷம் அளித்தாலும், தவறான செயல்கள் கர்மபலனை நிச்சயம் ஏற்படுத்தும். தவறான செயல்கள் எனத்தெரிந்தால் தெரியாமல் நடந்தவற்றிற்கு வருத்தமுற்று மீண்டும் அதை செய்யாமலிருப்பதுதான் ஆன்மாவிற்கு சிறப்பு. செயல்கள் செய்யும்போது நான் செய்கிறேன், என்னுடையது என்ற நினைவுகள் அற்று ஆன்மா செயல்படுகின்றது, இது என் நிலை என உணர வேண்டும். சந்தர்ப்பங்கள் சூழ்நிலை சரியில்லை எனக்கு அனுகூலமாக நடக்கவில்லை நான் என்ன செய்வது! என சொல்லித் திரிவதுகூடாது.
பல பழக்க வழக்கங்களுக்கு அடிமையான நாக்கும் உடம்பும் அவ்வப்போது அதே பழக்க வழக்கங்களை, நேரம் காலம் தவறாது கடைபிடிக்கும்போது, மனத்திற்கும் ஆன்மாவிற்கும் நேரம் ஒதுக்கி பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆழ்ந்த சிந்தனை என்பது அகம்- உள்ளே நோக்குதல் என எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் சரீரத்திற்குள் இருப்பது ஆன்மா என்பதை உணரமுடியும். ஆத்மாவின் மேன்மைக்கு செவிமூலமாக ஞானம், கண்மூலமாக ஞானம், வாய்மூலமாக ஞானம் பெறலாம். தீமைகள் செய்தாலும், குரோத எண்ணத்துடன் யார் செயல்பட்டாலும் ஆழ்ந்த சிந்தனையிலிருப்பவன் அதை பொருட்படுத்தமாட்டார்.
ஆழ்ந்த சிந்தனை தீயவற்றை சிந்திப்பதுமில்லை, கேட்பதுமில்லை, சொல்வதுமில்லை. இக்குணம் சகிக்கும் தன்மை, பொறுமை, பணிவு, எளிமை, இனிமை, மனவலிமை முதலிய பண்புகளை அளிக்கின்றது. ஆத்மாவிடமிருந்து நற்குணங்களையே மற்றொரு ஆத்மா கிரகிக்க வேண்டும். கெட்ட குணங்களுக்கு ஏற்ப கர்மபலன் மூலம் தண்டனைகள் இருக்கும்போது அதை ஏன் கிரகித்து தண்டனையை அடையவேண்டும். எல்லா ஆன்மாவும் இனியத் தன்மை உடையதாக வேண்டும்.
நல்சிந்தனைகள் மனதிற்கு உணவாகும். புதிய எண்ணம் உணவாகுவது மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கு தேவையான சக்தியை தருவதாக இருக்கவேண்டும். குழப்பமும் சச்சரவும் நிறைந்த வாழ்வில் அவை நீங்க மனம் தேவையான பலத்தினைப் பெற்றிருக்க வேண்டும். நம்முடைய அறிவு சொல்கிறபடி மனம் கேட்கவேண்டும்.
மனம் குதிரையாக இருக்கவேண்டும். அறிவு அதன் முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டும். அதுதான் சுகமான வாழ்க்கை. ஆனால் பலரின் அறிவு குதிரையாக இருக்க மனம் அதன் முதுகில் ஏறி சவாரி செய்கின்றது. இது சரியில்லை.
ஓர் ஆன்மா மேன்நிலையடைய அஞ்சாமை, தூய்மை, ஈகை, புலனடக்கம், நேர்மை, உண்மை, கோபம் தவிர்த்தல், அமைதி, பற்றற்று இருத்தல், உயிர்களிடம் இரக்கம், இனிமையான குணம், நாணம், சலிப்பின்மை, சாஸ்திர தெரிவு, சலிப்பின்மை, வலியவனாக இருந்தும் பிறரை தண்டிக்காமல் இருப்பது, கர்வமின்மை, வஞ்சகமின்மை ஆகிய இயல்புகளுடன் ஞானம் கொண்டவனாகவும், பகட்டு, தற்பெருமை, கோபம், கடுகடுப்பு, திமிர், அகங்காரம், அஞ்ஞானம் ஆகிய அசுர குணங்கள் இல்லாதவனாக இருக்க வேண்டும்.
தெய்வீக குணங்கள் நாம் செல்லும் பாதைகளை சீர்படுத்தி வெற்றி இலக்கை அடைய உதவும். அசுர குணாதிசயங்கள் நம்மை துன்பத்தில் சிறைபடுத்தக் கூடியவை-குருஸ்ரீ பகோரா.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27066907
All
27066907
Your IP: 18.220.154.41
2024-04-24 03:58

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg