gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

வியாழக்கிழமை, 04 October 2012 11:57

2-7.புலனின் பூக்கள்!

புலனின் பூக்கள்!


பணம் இல்லாதவன் அதை அடைய நினைக்கின்றான். அதற்காக தன் செயலை திட்டம் தீட்டுகின்றான், செயல்படுகின்றான். அப்பணத்தை அடைய வரும் துன்பங்களை ஏற்றுக் கொள்கின்றான். பணத்தை அடைந்தபின் அதை அதிகமாக்கும் ஆசையினால், தீய வழிகளைக் கையாண்டு பணத்தை இழந்து அளவிடமுடியாத துன்பத்திற்கு ஆளாகின்றான்.

இதைப் போன்றே, உடல் உணர்வு கொண்ட இளைஞன் தனக்கு பெண்ணின் சுகபோகம் கிடைக்கவில்லை என வருத்தமடைகின்றான். அதனால் அவன் மிகவும் வருத்தத்தில் வேதனைப்படுவதாக நினைக்கின்றான். ஆனால் ஒரு பெண்ணை மணந்தவன் சுகபோகத்தில் திளைத்திருந்தாலும், காலம் செல்லச் செல்ல அந்த சுகபோகத்திற்கு காரணமான மனைவி, மக்கள், குடும்பம் அவனுக்கு துன்பத்தை தருவதாக நினைத்து வருத்தப்படுகின்றான்.
எந்த வகையில் பார்த்தாலும் பணமும், சுகபோகமும் இல்லாத நிலையில் அதை தேட வேண்டிய ஆவல் இருந்தாலும், அவற்றை அடைந்தபின் அவைகளின் தாக்கங்கள் நாளடைவில் ஒர்வகையான சோர்வை உண்டாக்கி மனித ஆத்மா மிகுந்த வருத்தமடைந்து மாற்றுவழிதேடி, அதிலிருந்து விடுபட நினைக்கின்றது.
அப்போது அந்த ஆன்மா ஆலயங்கள், கோவில்கள், மசூதிகள், சர்ச்களுக்கு சென்று அமைதிகாண விழைகின்றது. நாளடைவில் ஈடுபாடு மிக்ககொண்டு விரும்பி நாடுவது ஆன்மீக வழியாகவே இருக்கின்றது. அதற்கு புலன்களின் அடக்கம் தேவை! நம் மனம் பொய்மையை நினைக்கலாம். அதனால் வாய் பொய்பேசலாம். ஆனால் கண்ணால் பார்ப்பதில் எந்தவித மாற்றமும் இருக்காது. உண்மையை நடக்கும் நிகழ்வை மட்டும் பார்க்கும் புலன் கண்ணாகும்.
புலன்கள் கொள்ளும் கட்டுப்பாடே ‘தமா’ என மனுதர்ம சாஸ்திரம் கூறுகின்றது. அதாவது அறியும் திறனால் புலன்களைக் கட்டுப்படுத்தி நல்ல செயல்களை செய்வதாகும். கட்டுப்படுத்துவது என்றால் புலன்களின் அடக்கமான ஆரோக்கிய நல்வழிகளில் செயல்களைக் கொண்டிருக்க வேண்டும். புலன்கள் கட்டுப்பாடின்றிருந்தால் மனம் அலைபாய்ந்து அலைக்கழிக்கும். அவையே ஒருவருக்கு எதிரியாகும். அலைபாயும் மனதை கட்டுப்படுத்திவிட்டால் ஒவ்வொருவரும் நிதானமாக எல்லா காரியங்களையும் செவ்வனே செய்து முடிக்க முடியும். பல ரகசியங்களை கொண்டு ஓர்வெற்றி பெறும்போது கிடைக்கும் மகிழ்ச்சி புலன்களினால் அடையும் மகிழ்வைவிட சந்தோஷத்தைவிட சிறப்பானதாக இருக்கும்.
நமது புலன்கள் எவ்வளவு அனுபவித்தாலும் முழுமையான திருப்தியடைவதில்லை. போதும் என்ற மனம் பொன் செய்யும் மருந்து என்பர்! நமது பகுத்தறிவை உபயோகித்து நம்மை நாமே ஒழுங்குபடுத்தி நம் மனதை கட்டுப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கும்போது நம்மிடம் சிறப்பான தனித்தன்மை உருவாகும்.
ஆசைபடுபவன் ஒருவகையில் புலனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவனாவான். ஆனால் பித்தன், ஞானி, பக்தன் இயக்கப்படுகின்றான் யாரென்று தெரியாமலே! எதனாலோ ஈர்க்கப்படுகின்றான். இரும்புத்துண்டு கனமானதாக இருந்தாலும், மெலிதாக இருந்தாலும், காந்தம் அதை ஈர்க்கும் சக்தி கொண்டது. அப்படித்தான் அருள் எல்லோரையும் ஈர்க்கும் தன்மைகொண்டது.
நாம் சாப்பிடும் மருந்து நம் உடம்பின் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று சேர்கின்றது. நம் உணவின் சக்திகள் உடலின் எல்லா பாகங்களுக்கும் செல்கின்றது. ஆனால் மனம் நம் உடலில் இருந்தாலும் அதன் தேவை ஆற்றல் தேவைப்படும் போதுதான் அந்த இடத்தில் உதவும். மனம் என பொதுவாகச் சொன்னாலும் உணவுவகைகள் வித்தியாசப்படுதல் போல் வேறு வேறு மனங்களின் ஆற்றல் தன்மைகளும் மாறுபடும்.
சூரிய ஒளியை குவிஒளிக் கண்ணாடி மூலம் குவியச்செய்தால் அங்கு வெப்பச்சக்தி தீப்பற்றும் அளவிற்கு தோன்றும். அதேபோல் நமது எண்ணங்களையும் புலன்களையும் கட்டுப்படுத்தி ஒன்று சேர்த்தால் மனதில் சக்திகள் குவியும். அது அளவில்லா சக்தியாகும். நீங்கள் எல்லா நிகழ்வுகளையும் நிகழ்த்துவீர்கள். உங்களால் சாதனையாளாராக முடியும்.
புலன்கள் விரும்புகின்றன என்பதற்காக நியாமற்ற முறையில் செயல்படுவது சரியன்று. ஐம்புலன்களுக்கும் கட்டுப்பாடு வேண்டும். மனம் எனும் குதிரை, புலன்கள் நோக்கில் சொல்லாமல், புலன்களை அடக்கி ஆளத் தெரிந்திருக்க வேண்டும்.
தன் ஐம்புலன்களையும் அடக்கும் ஒருவனால் எதையும் சாதிக்க முடியும் என மக்களுக்கு உணர்த்தவே கிருஷ்ணர் கூர்ம அவதாரம் எடுத்ததாக புராணம் பகர்கின்றது. கூர்மம்- ஆமை தன் தலை, தன் கைகள், கால்கள் என ஐந்தையும் ஓட்டுக்குள் அடக்கி அமைதி காக்கும் தன்மையுடையது. அதன் இயக்கம் நியாமானது. உறுதியானது.
உயர்வு வரும்போது ஒடுங்குவதும் அதாவது மமதை கொள்ளாமல் இருப்பதும், தாழ்வு வரும்போது மனம் தளராமல் இருப்பதும் புலனடக்கதால்தான் முடியும். அதுவே மன நிம்மதிக்கான வழி. அது நம்மைச் சார்ந்துள்ளோருக்கும் சாராதிருப்போருக்கும் நன்மை தரும்.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய் குயவனைவேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, அதைக் கூத்தாடி கூத்தாடிப் போட்டு உடைத்தாண்டீ என்பதை நம்மில் பலர் கேட்டிருப்பீர். மேலோட்டமாக இதன் அர்த்தம் புரிந்தாலும் உள் அர்த்தம் என்னவென்றால், நமது ஆன்மா ஜீவன் பிரம்மதேவன் என்ற குயவனிடம் 10மாதங்கள் வேண்டி உடம்பு என்ற கலசத்தை ஆன்மாவிற்காக பெற்று அதை முறைகேடாகப் புலனடக்கமின்றி பயன்படுத்தி அழித்துக் கொள்வதைப் பற்றிக் கூறுகின்றது.
உடம்பின் அருமையை தெரிந்து கொள்ள வேண்டும். அது இறைவன் உறையும் கோவில். அவர்தம் உடலுக்கு நன்மை செய்யாதவர்கள் எவ்வாறு அடுத்தவர் நலன் தேட விழைவார்கள் என்பது சிரமானது. ஆசையில் கட்டுண்டவனுக்கு ஆனந்தம் இல்லை என்பதை அனுபவத்தில்தான் உணரமுடியும். புலனடக்கம் இல்லாதவன் அலைக்கழிகப்படுவான். இன்பம் மின்னல் போல் தோன்றி மறையும். கடைசியில் இன்னல்கள் என்ற துன்பத்தை மட்டுமே தருமாதலால் ஆன்மாவின் உடலுக்கு புலனடக்கம் தேவை. புலனடக்கம் கொள்ள பற்றற்றவராக இருத்தல் அவசியம்.
ஜார்ஜ் ஆர்வெல் என்பவர், ஒரு குளவி தேனை சுவைத்து பருகிக் கொண்டிருக்கும் போது அதன் ஒரு புற இறக்கைகளை வெட்டினாராம். அப்போதும் அது தன் இழப்பை அறியாமல் தேன் அருந்துவதிலேயே கவனமாக, விழிப்புணர்வு இன்றி இருந்துள்ளது. தேன் குடித்ததும் அதனால் பறக்க முடியாத போதுதான் அது தன் இறக்கைகளுக்கு பங்கம் வந்திருப்பதை உணர்ந்துள்ளது. குளவி போன்றே புலனடக்கமின்றி  போகங்களில் மூழ்கி, பல ஆண்டுகள் ஆனாலும் தங்கள் இழப்பை காலதாமதமாகத்தான் புரிந்து கொள்கின்றனர்-குருஸ்ரீ பகோரா.

வியாழக்கிழமை, 04 October 2012 11:56

2-6.கோபப் பூக்கள்!

கோபப் பூக்கள்!  


ஆற்றின் இரு கரையிலும் ஆசிரமங்கள். ஓர் இளைஞன் அக்கரையில் உள்ளவரிடம் ஆசி வாங்க விரும்பினான். அவனைப் பார்த்த இக்கரையில் இருந்தவர் அக்கரைக்கு செல்லும் காரணத்தைக் கேட்டார். அந்த இளைஞன் அவரை என் குருவாக மதிக்கின்றேன் அதனால் அவரிடம் ஆசிபெறச் செல்கின்றேன் என்றான்.

உடனே இந்தக்குரு அந்தக் கரையில் இருப்பவன் ஒரு குருவே அல்ல. அவனுக்கு ஒன்றும் தெரியாது. என்னைப்போல் நீரில் நடக்க முடியாது. வானத்தில் பறக்க முடியாது. அங்கே போய் அவனிடம் நீ என்ன கற்றுக் கொள்ளப்போகிறாய் என சினத்துடன் கூறினார். நீ முட்டாளாக இருந்தால் அங்கே போ என்றார்.
அந்த இளைஞன் நீங்கள் சொல்வது எல்லாம் சரி. அவரால் சாதனைகள் ஏதும் செய்ய முடியாது. ஆனால் அவர் கோபப் படமாட்டார். அது உங்களால் செய்ய முடியாதது. எனவேதான் நான் அவரை குருவாக ஏற்றுள்ளேன் என்றான். குரு சிந்தனையிள் ஆழ்ந்தார். நீரில் நடப்பதைவிட, வானில் பறப்பதைவிட கோபப்படாமல் இருப்பதுதான் அதிசயம் எனக்கூறி அக்கரைக்குச் சென்றான்.
கோபம் என்பது என்ன! சினம் என்றால் என்ன! அது உன் இயலாமையின் அச்சத்தின் வெளிப்பாடு! அது ஏன் நீ கொள்ளல் வேண்டும்! அது நம்மை, நம் உடலை, உடலின் ஆன்மாவை எந்த அளவிற்கு வருத்துகின்றது எனத் தெரியுமா! கோபத்தை அடக்குவதும் தவறு, வெளிக்காட்டுவதும் தவறு. வேறு என்ன செய்ய வேண்டும். கோபப்படாமல் இருப்பதுதான் ஒரேவழி. அதற்கு பற்றற்று இருத்தல் சிறப்பு.
கோபம் ஏற்பட்டால் அதிலிருந்து உன்னை விடுவித்துக் கொள்ள முயல வேண்டும். கோபத்தை அடக்கி மன உறுதியை வளர்க்க வேண்டும். அந்த நிகழ்விலிருந்து விலகி இருத்தல் வேண்டும். இல்லையெனில் அந்த நிகழ்வு உங்களைத் தாக்கத் தொடங்கி உங்களை ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தால், நீங்கள் உங்கள் நிலை, சூழல் மறந்து அந்த நிகழ்வின் ஈடுபாட்டினால் செயல் வழிபட்டு, அதற்கு ஆட்படுகின்றீர்கள். தவறு செய்து திருத்துவதைவிட தவறு செய்யாமல் இருப்பது சிறப்பு.
இது உங்களின் மனதில் ஓர் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, உடல் உறுப்புகளில் ஒர் தேவையற்ற கவலை, கிளர்ச்சியை உண்டு பண்ணி உடலின் தன்மை நிலையை நீங்கள் எப்போதும் இயல்பாக இருக்கும் நிம்மதி நிலையிலிருந்து மாற்றி வைக்கின்றது.
அப்போது உங்கள் எண்ணம் செயல் எல்லாம் மாறுபட்டிருக்கும். நீங்கள் அன்பு கொண்ட செயல் நினைவுகள் மீது கூட ஓர் வெறுப்பு, சலிப்பு தோன்றும். அதன் பாதிப்புகள் தாக்கம் நீங்கள் கொண்ட அன்பின் தன்மையை குறைக்க காரணமாகும். இந்த தூண்டுதல் உங்களது உடம்பில் உள்ள சக்தியின் ஒரு பகுதியை விரயமாக்குகின்றது.
பல நல்செயல்களால் சேர்த்துவைத்த அமைதி, நிம்மதி போன்ற தன்மைகள், கோபத்தினால் விரையமடைந்தபின், அவைகள் நம்மை வந்தடைய நாம் மீண்டும் கடினமாக செயல்பட வேண்டியுள்ளது. ஆகவே ஒவ்வொருவருக்கும் இந்த கோப உணர்ச்சி தேவையற்ற ஒன்று.
எதனால் இந்த நிகழ்வு என அமைதியுடன் நோக்குங்கள். பிரச்சனையின் மூலகாரணத்தைப் பற்றி ஆராய்ந்து, என்ன பயன் என்ற சலிப்பில்லாமல், அந்த செயல் காரணத்தை கூர்ந்து நோக்குங்கள். உண்மைக் காரணத்தை நீங்கள் உள்வாங்கிக் கொள்ளுங்கள். அந்தச்செயல் காரணத்தின் நிலைகளைப் புரிந்து கொண்டு, அதன் சூழ்நிலைகள் எவ்வாறு தோன்றின என நீங்கள் உணர்ந்து கொண்டால், அப்போது உங்கள் மனம் கோபத்தின் தன்மைக்கு போகாமல் நீங்களே தடுக்கலாம். அதனால் உங்கள் உணர்வு மிகுதியினால் உடம்பில் ஏற்படும் தாக்கமும் அதன் பாதிப்புகளும் குறையும்.
அந்த நிகழ்வின் உண்மை அடிப்படை காரணங்கள் தெளிவுடன் புரிந்து கொண்டால், நிகழ்வுக்கு காரணமானவர்களை நாம் இனம் கண்டு அதற்கு தக்க செயல்களைச் செய்து அவர்களுக்கு உதவியாகவும், நமக்கு பாதகமில்லாமலும் செயல்பட வழிவகுக்கும். இந்த நிலை ஏற்பட உங்கள் மனம் அமைதியுடன் சந்தோஷமாக இருக்கவேண்டும்.
அமைதியாயிருக்கும் மன உணர்வுகளைத் தூண்டி உங்களை கோபமடையச் செய்யும் நிகழ்வுகள் தோன்றினால் முதலில் நீங்கள் உங்களுக்குள் ஓர் தீர்மானத்தை நினைவில் கொள்ள வேண்டும். நான் கோபம் கொள்வதில்லை! எந்தக் காரணத்தினாலும் கோபம் கொள்வதில்லை! கோபத்தினால் எந்தவித பயனும் இல்லை! தீவிர சிந்தனைகள் செய்து நல்வழி காணமுடியாது! கோபத்தின் பதற்றத்தினால் பயனில்லை! என்று உங்கள் மனதிற்குள் கூறிக் கொள்ளுங்கள். மனஅமைதியைக் கைவிடவேண்டாம்! இந்த தூண்டுதலுக்கு காரணமானவர்கள் மீது வெறுப்பு காட்டவேண்டாம்.
மனதிற்குள் வெறுப்பை வைத்துக்கொண்டு இருக்காதீர்கள். வெறுப்பு குரோத உணர்ச்சியின் ஆரம்பம். அது பழிவாங்க நினைக்கும். உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களுக்கும் தங்கள் வாழ்வை சுவைத்து மகிழ உரிமை உண்டு. தான் படைத்ததை அழிக்க படைத்தவனுக்கூட உரிமையில்லை என்கிறது தர்ம சாஸ்திரம். அப்படியெனில் ஒருவரை பழிவாங்கி அழிக்கும் நோக்கில் செயல் இருக்கக் கூடாது. அது மறைவதுமில்லை. தொடரும் கொடுமை அது. முடிவில்லாத துயரம் தரும். உங்களை துச்சமாக நடத்துபவரிடம், நல்லெண்ணம் கொண்டு அவரோடு பேசி புரியவையுங்கள். அது ஓர் உன்னத செயலாகும். அவருக்கு புரியவைக்க முடியவில்லையானால் அவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். பொறுமையுடன் செயல்படுங்கள்.
தர்மரின் மாளிகையின் தரையில் நீர் இருப்பது பொன்ற நிலை தோன்ற துரியோதனன் தன் ஆடைகள் நனையாமலிருக்க தூக்கிபிடித்து சென்றான். இதைக் கண்ணுற்ற திரௌபதி சிரிக்கக் கண்ட துரியோதனன், தான் அவமானம் அடைந்ததாகக் கருதி, அவளை பழிவாங்கத் துடித்தான். அதன்முடிவு துச்சாதனன் துகிலுரிப்பு, மகாபாரதப் போர், துரியோதனின் அழிவு. எப்போதும் ஓர்வேகத்தில் வெறியில் தோன்றும் பழிவாங்குதல் எண்ணங்கள் நன்மை பயத்ததாக சரித்திரத்தில் கூறப்படவே இல்லை.
நோயின் தீவிரத்தை தாங்காத நோயாளியோ, அதை பார்க்க சகிக்காத அவரின் உறவினர்கள் துயரத்தாலோ, எது கூறினும், எந்த நிலையிலும் ஓர் மருத்துவர் தன் கடமையிலிருந்து நிலைபிறழாமல் பொறுமை காக்கவேண்டும். அவர்கள் கூற்று என்னவாயிருந்தால் என்ன! அதைக்கவனித்து மருத்துவர் தன்கவனத்தை இழக்கக்கூடாது. காயமடைந்தவர், நேயுற்றவர் குணமடைந்ததும், என்ன தீமைகள் அல்லது நன்மைகள் இந்த சமூகத்திற்குச் செய்யப் போகிறார்கள் என்ற விளைவு குறித்து கவலைபடாமல் தெடர்ந்து பணியாற்றுவதே அவரின் கடமையாகும். இந்த நிலையை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதே மனுதர்ம சாஸ்திரம் கூறும் ‘க்ஷமா’ என்பதாகும். அதாவது க்ஷமா என்றால் ஒரு செயல் நிகழ்வுக்கு கோபம் கொள்ளாமல் மன்னித்தல் அல்லது பொருத்துக் கொள்ளுதல் என்பதாகும்.
நீங்கள் பெரியவராக எல்லோருக்கும் நன்மை செய்ய விரும்பினால் இரண்டு வகை வலிமைகளை நீங்கள் அடைந்திருக்க வேண்டும் ஒன்று உடல்வலிமை! அது உங்களுள் உறையும் ஆத்மபலத்தின் வலிமை! நற்பண்பே அந்த உடல் வலிமைதனை தரும்! மற்றொன்று தார்மீக வலிமை! அதாவது மனதின், ஆன்மாவின் வலிமை! தார்மீக வலிமைகூடக்கூட கோபம், வெறுப்பு மற்றும் பழிவாங்கும் தன்மை இவைகளை நீங்கள் கட்டுப்படுத்த பழகிவிடுகின்றீர்கள்.
நம்முன்னால் நம் குடும்பத்தினரோ, உற்றார் உறவினரோ, நண்பர்களோ நம் அலுவலக அன்பர்களோ ஓர் செயலைசெய்தால் அதைக் கண்டு உணர்ச்சி வயப்பட்டு ஒன்று சிரிக்கின்றோம் அல்லது கோபப்பட்டு நம்மை இழக்கின்றோம். சில சமயங்களில் அழுகை ஏற்படுவதும் உண்டு. சிரிப்பதாலும், அழுவதாலும் தப்பு ஒன்றும் இல்லை. மேலும் ஆரோக்கியத்திற்கு உகந்தது.
கோபப்படும்போது உணர்ச்சி மேலீட்டால் நம் செயல் திறன் குன்றி விடுகின்றது. நாம் என்ன செய்கின்றோம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை அறியமுடியாத அளவிற்கு நம்மை இழந்து விடுகின்றோம். சினத்தின் உச்சத்தில் நாம் படப்படபுடன் செயலாற்ற முனைகிறோம். கோபம் தனிந்தபின் அதன் சாதக பாதக பலன்கள் நமக்கு தெரியவரும்போது ஏன் கோபம் கொண்டோமென்று வருத்தமடைகிறோம். இந்த சினத்தை, படபடப்பை ‘அக்ரோதம்’ என்று மனுதர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. அதை நம்மிடமிருந்து நீக்குவதற்கு முயலவேண்டும்.
பல ஆண்டுகள் தவம் செய்த யோகி ஆன்மீக கேள்விகளுக்கு பதிலலித்துக் கொண்டிருந்த போது ஒருவர் ஆன்மிகத்தை கேலிசெய்யும் விதமாகப் பேசவே மிகுந்த கோபமடைந்தார். சினம் தனிந்த போது தன் செயலுக்கு வருந்தினார். எத்தனை தவம் விரதம் இருந்தும் என்னபயன். என்னிடம் மாற்றம் இல்லையே என வருந்தினார். தனது தவம் பூரணத்துவம் அடையவில்லை, மனம் பக்குவம் பெறவில்லை, சினத்தை அடக்க அதற்கு தெரியவில்லை என்று அந்த ஆசிரமத்தைவிட்டு வெளியேறி, மீண்டும் மனதை ஒர் நிலைப்படுத்த தவம் மேற்கொள்ள சென்றார்.
நாமும் கோபம் அடையக்கூடது. பிறரையும் கோபம் அடையும்படி தூண்டக்கூடாது. நீங்கள் அடையும் கோபத்தின்மீது உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டால் நீங்கள் அதை கட்டுப்படுத்த நினைக்கின்றீர்கள் என்று பொருள். சற்று நிதானமாக நாம் கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது, நம் ஆரோக்கியம்தான் குறைகின்றது, மற்றவர் முன்னிலையில் இவன் கோபக்காரன், அவசரக்காரன் என்ற நிலைப்பாட்டை ஏன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்? என நினையுங்கள். கோபத்தை விடுத்து அந்த செயலின் தன்மையை அடிப்படையை கவனித்து கோபமின்றி சம்பந்தப்பட்டவர்களிடம் கூறினால் அவர்கள் அந்த தவறை புரிந்து உணர்வார்கள். அதனால் அந்த தவறு மீண்டும் நேராவண்ணம் அவர்கள் செயல்பட வாய்ப்புண்டு. இது அனைவருக்கும் நன்மைபயக்கும்.
உங்கள் நேயமான செயல் அவரையும் மற்றவர்களையும் ஆச்சரியம் கொள்ள வைக்கும். உங்கள் மேல் ஓர் அன்பு கலந்த சிநேகமயமான உணர்வுகள் மேம்பட்டு, எதிர்காலத்தில் பலவகைகளில் உதவியாகக் கிடைக்கும். இது உங்கள் வாழ்வின் சந்தோஷ நினைவாக அமையும். இது போன்ற பல செயல்களை நீங்கள் சந்தோஷ நிகழ்வாக மாற்றமுடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். தொடர்ச்சியான மகிழ்வைக்கொண்ட சந்தோஷம் வாழ்க்கையை சீராக்கி நல்வழிப்படுத்தும்.
கண்ணால் கண்டாலோ, காதால் கேட்டாலோ நீங்கள் அந்த நிகழ்வால் உணர்ச்சி வசப்படாமலிருக்க ‘மூக்கின்மேல் கோபம்’ என வழக்கிலிருக்கும் உங்கள் நாசியின் நுனியைப் பாருங்கள். அது உண்மைதான என நினையுங்கள்!
அண்டத்திலிருந்து வரும் அந்த சுத்த காற்றை நாசியினால் உள்ளே இழுத்து, வெளியேவிட்டு செல்லும் செயலை கவனித்து, ஒரே சீராக சிலமுறை செய்யுங்கள். உங்கள் செயல் சீரான சுவாசத்திற்கு வந்தால் உங்கள் மனம், உணர்வு எல்லாம் சீராகிவிடும். அந்த நிகழ்வின் தாக்கம் உங்களை ஒன்றும் செய்யாது.
நீங்கள் அந்த நிகழ்வின் செயலுக்குள் அமைதியாக உறுதியாக ஊர்ந்து உண்மையை உணர்ந்து செயல்பட முடியும். எனவே கோபம் கொள்ளும் நிகழ்வுகளின் போது உங்கள் மூச்சை சீராக வைத்துக்கொள்ளப் பழகுங்கள். அது நன்மை பயக்கும்.
சீரான மூச்சு, சீரான சிந்தனைகள், சீரான செயல்கள் எல்லாம் சந்தோஷத்தை நோக்கிய நம் பயணத்தின் தூரத்தைக் குறைக்கும் உபகரணங்கள்.
நாம் ஏன் கோபம் கொள்கின்றோம்? ஓர் செயலை செய்யும்போது தவறு ஏற்பட்டால், செயலில் வெற்றி எதிபார்த்து தோல்வி கண்டால், நம் தவறை நாமே உணர்ந்தால், மற்றவர் நம் தவறைச் சொன்னால், நம் விரோதிகள் என நினைத்துக் கொண்டிருப்பவர்கள் நம் தவரை சுட்டிக் காட்டினால், நம்மைவிட சிறியவர்கள் நம்மிடம் குறை கண்டால் வருகின்றது. நமக்கு பிடிக்காத நிகழ்வுகள் நடைபெற்றாலும் நமக்குள் ஓர்வித எரிச்சல் உணர்வு தோன்றி அது கோபமாக மாறிவிடும். சரியான தூக்கமின்மையும் ஒர் காரணமாகும்.
சரியான நிம்மதியில்லா தூக்கமின்மையும் கோபம் ஏற்படக் காரணமாகின்றது. ஆகவே ஓவ்வொரு ஆன்மா உடலுக்கும் நிம்மதி வேண்டும். அதற்கு போதிய ஒய்வு தூக்கம் வேண்டும். அப்போதுதான் உடலும் மனமும் தன் இருக்கத்திலிருந்து தளர்ந்து பக்குவமான நிலைக்கு வந்தடையும். போதிய ஓய்வும், தூக்கம் பெற்ற உடம்பும், மனமும்தான் நன்றாக செயலாற்ற முடியும்.
முன்பு சொன்னதுபோல் இந்த கோபம் ஓர் இயலாமை! ஆற்றாமை! செயல்கள் நம்மால் முடிந்தால் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. முடியவில்லை என்றால் அதை ஏற்றுக்கொள்ளும் தன்மை வேண்டும். நம் உடலை, மனதை, உணர்வுகளைப் பக்குவப்படுத்தி வைத்துக் கொள்ளப் பழகவேண்டும். இயலாமை, ஆற்றாமை பயத்தினால்கூட வரலாம். ஆக பயமும் கோபம்வர ஒரு காரணமாகும். ஆனால் பயத்தினால் நம் உடலுக்குள் ஓர் கலக்கம் ஏற்படும் அது அவயவயங்களின் செயல் தன்மையை பாதிக்கும். ஜீரணத்தின் தன்மைதனை குறைக்கும். நாளடைவில் உடலில் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பாகும். அடிக்கடி உணர்வின் வயப்பட்டு கோபம் வரலாம். எனவே எதற்கும் பயம் கொள்வதைத் தவிர்க்கவும்.
தவறு, தோல்வி, ஆற்றாமை ஆகியவைகளின் தன்மை புரிந்து உள்வாங்கிக் கொண்டால் அதன் தாக்கம் நம் உணர்வைப் பாதிக்காது. உணர்ச்சிகள் பொங்கி வராது. அமைதி காக்கும். தன்மை புரிந்து உள்வாங்கினால் அது ஓர் பாடமாக, ஓர் முன் உதாரணமாக, நாம் அடுத்து செய்யும் செயலுக்கு, தொய்வில்லாத வழிவகுக்க உதவி புரியும்.
அப்போது நமக்கு தோல்வி இல்லை. ஆற்றாமை என்பதும் இல்லை, வெற்றி மட்டும் உண்டு. வெற்றி வழி நிம்மதி, புன்னகை, சந்தோஷம் தோன்றி வாழ்வில் என்றும் சந்தோஷம் ஏற்படும்.
ஒருவர் கோபம் கொண்டவுடன் அவரின் உணர்வுகள் உணர்ச்சி மிகுதியால் விரைவாக செயல்படுவதால் செயலில் ஏற்படும் குறைகள் தெரிவதில்லை. ஆனால் தவறு பின்னால் கண்டு பிடிக்கப்பட்டபோது வருத்தம் ஏற்படுகின்றது. இந்த வருத்தம் மனதிற்கும், உடலுக்கும் சோர்வைத்தான் தரும். மனம் நிம்மதியின்றி செயல்படும். அதனால் நல்ல செயல்கள் திட்டமிட்டு செயல்பட முடியாத நிலை ஏற்படும்.
தவறுகள் நிறைந்த குழப்பமான செயல் பாடுகளில் எப்படி ஓர் வெற்றியையும் அதன் மூலம் சந்தோஷத்தையும் எதிர்பார்க்க முடியும். எனவே கோபம் வேண்டாம். குழப்பத்தில் சிந்திக்க வேண்டாம். குழப்பமிருந்தாலும், கோபம் வந்தாலும் உங்கள் உடலுக்கு உங்கள் மனம்தான் எஜமான்.
கோபத்தில் இருப்பவனுக்கு தாம் கோபத்தில் இது செய்ததால்தான் இந்த தவறு என ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. எந்த பைத்தியம்தான் தான் பைத்தியம் என ஒத்துக் கொண்டிருக்கின்றது. தங்களின் திறமையான பேச்சால் தான் செய்தது சரி என்று சொன்னாலும், அவரின் கோபத்தின் விளைவை புரியவையுங்கள். தன்னால் நடந்தது எனப் புரிந்துகொண்டலே அந்த செயல் நிகழ்வு, கோபத்தின் தன்மை, அதன் தாக்கம் புரிந்துவிடும்.
எந்த காரியங்கள் நடைபெற்றாலும், அதன் பாதிப்புகள் நம்மை வந்தடைந்தபோது அதன் காரண காரியங்களை நாம் யோசித்து கண்டு கொள்ள முடியவில்லை என்றால், அதனால் கோபம் கொள்வதைத் தவிர்த்து நிகழ்வுக்கு காரணம் விதி என முடிவு கட்டுங்கள். பழி விதியின் மீதிருப்பதால், உங்கள் தாக்கங்கள் கோபமாக மாற வாய்ப்பு குறைந்துவிடும். ஒருவரின் செயலால் வஞ்சம் தீர்த்துக் கொள்ள முயன்றார்கள் என எண்ணி அவர்மீது கோபம் கொள்ளாமல், விதியின் விளையாட்டு என்ற முடிவால் கோபத்தின் அஸ்திவாரம் தகர்க்கப்பட்டு விடும். ஒன்றிற்காக ஒன்றின்மீது கோபம் கொண்டால் நிம்மதி இழப்பீர்.
உங்கள் மனதிற்கு உங்கள் எண்ணங்கள்தான் வழிகாட்டி. சற்று நேரம் உங்கள் செயல் பாட்டை நிறுத்தி பொறுமையுடன் இருங்கள். அமைதி காத்திடுங்கள். செயலின் நிகழ்வை அறிந்தபின் அதன் தன்மையைப் பொறுத்து, சிறிது காலம், சில மணித்துளிகள், சில நிமிடங்கள் செல்லட்டும் என அமைதியாயிருங்கள்.
பாதிப்பான குழப்பத்திலிருந்த மனம் தெளிவடையட்டும். அதற்கு கண்களை மூடியபடி எண்களை 1,2,3,4......என எண்ணுங்கள். அல்லது உங்களுக்கு பிடித்தமான இறையின் பெயர்களைத் திரும்பத் திரும்ப மனதிற்குள் கூறிக்கொண்டிருங்கள் அல்லது உங்களுக்கு பிடித்த மகிழ்வுதரக்கூடிய இனிய பழைய நினைவுகளை மனத்திறையில் கொண்டுவந்து மகிழ்வுறப் பாருங்கள்.
மனம் அமைதியடையும். பிறகு சிந்தியுங்கள். நடந்த நிகழ்வின் தாக்கமின்றி அதில் கவனம் செலுத்தி காரணத்தை ஆராயும் மனநிலைப் பக்குவம் உங்களை வந்தடைந்திருக்கும். பின் விவேகத்துடன் சிந்தித்து செயல்பட்டால் சந்தோஷம் காணலாம்.
ஓர் கூர்மையான கத்தியினை குழந்தையிடம் காண்பித்தால் அது அதன் தன்மை புரியாது அதை பிடிக்க முயலும். ஆனால் நாம் அந்த குழந்தையின் நிலை கடந்து அந்த கத்தியின் கூர்மை பற்றிய தன்மை அறிவோம். அதை எப்படிக் கையாழ்வது என உணர்ந்துள்ளோம்.
இதே போன்றுதான் வாழ்வின் எல்ல நிலைகளிலும் ஏற்படும் பிரச்சனைகளின் தன்மைகளை புரிந்து செயல்பட்டால் இனிமை, என்றும் இனிமை, பின்னும் இனிமை. தோல்வியில்லை! இங்கு ஆற்றாமை, இயலாமையில்லை! கோப உணர்வுகள் இல்லை! களிப்பான இன்ப உணர்வுகள் சந்தோஷத்தை தரும் உணர்வுகள் மட்டுமே!
நமது நண்பரோ, உறவினரோ, மாற்றுக் கருத்துக் கொண்டவரோ எவராயிருந்தாலும் அவர் செய்த செயல் சரியில்லாமலிருந்தால், அதனால் நல்ல முடிகள் ஏற்படாமலிருந்தால், அவர் நமக்கு பிடிக்காத வகையில் செயல் பட்டிருந்தால் அவர்மீதும், அவர் செயல் மீதும் நமக்குள் ஓர் விருப்பற்ற உணர்ச்சி ஏற்படுகின்றது.
அதே நபர் மீண்டும் வேறு ஓர் செயலை செய்யும்போது இதேபோன்று முடிவுகள் ஏற்பட்டால் நாம் கோபம் கொள்கின்றோம். இவன் இப்படித்தான்! எனக்கு அப்பவே தெரியும் என கூறமுற்படுகின்றோம். கோபம் அடைகின்றோம். அவரின் செயல் மிக மிகச் சிறியதாகக் கூட இருக்கும். அதனால் அதிகமான பாதிப்பு ஏற்படாது. இருப்பினும் நாம் கோபம் கொள்கின்றோம். ஏனெனில் அவர்மீது நாம் ஓர் நிலைப்பாட்டை முன்பே மனதில் பதிந்து வைத்துள்ளோம். அதன் விளைவு அவர் செயலின் முடிவு தோல்வி தந்தால் அது எவ்வளவு சின்ன விஷயமாக இருந்தாலும் நாம் அவர் மீது கோபம் கொள்கின்றோம்.
இது போன்ற கோபங்களைத் தவிர்க்க, அவர் முதலில் செய்த செயலின் முடிவால் அவரைப்பற்றி நம் மனதில் கொண்ட நமது முதல் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். தெரியாமலும் செய்திருக்கலாம். தெரிந்து செய்தாலும் அடுத்தமுறை சரி செய்து கொள்வார். இல்லை என்றாலும் அவருக்கு அதை புரியவைத்து உதவிகள் செய்யலாம் என எண்ண வேண்டும். இந்த எண்ண அலைகளை நம் நினைவில் வைத்துக் கொண்டால், அவர் மீண்டும் அந்த தவறு செய்தால் கூட நாம் நமது மனதைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் நாம் கோபம் கொள்ளமாட்டோம். அவர் செயல் சிறக்கசெய்ய வழி வகுக்கலாம். அல்லது அமைதியாகவும் இருக்கலாம். நாம் கோபம் கொள்ளாமலிருப்பதால் நம் சக்திதனை விரையம் செய்யாமல் நாம் ஆரோக்கியமாக சந்தோஷத்துடன் இருக்க உதவும்.
கோபம் கொண்டு உணர்ச்சி மயத்தில் கடின வார்த்தைகளைப் கொட்டியபின் உணர்ந்து, இனிமேல் உணர்வு வயப்பட்டு கோபம் கொள்ளக்கூடாது என கட்டுப்படுத்திக் கொள்ளும் போது நம் உள்ளே ஓர் நம்பிக்கை சந்தோஷம் எழும். எல்லா விஷ ஜந்துக்களும் தங்கள் கோபத்தை வெளிக்காட்டும் விதமாகவே அதன் விஷத்தை வெளியிடுகின்றது. மனித ஆன்மாக்களுக்குள் கோபத்தினால் தோன்றும் விஷ எண்ணங்கள் எதிரியை அழிக்கப் பயன்படுகின்றதோ இல்லையோ உங்கள் நலவாழ்விற்கு அது எதிரியாகும். அது உங்கள் வாழ்விற்கு தேவையில்லா ஒன்று.
ஒருவன் கோபத்தால் நம்மைத் தீய வார்த்தைகளால் திட்டினால், அதை உங்கள் மனம் ஏற்று கொண்டால், உங்கள் முகத்தில் அதன் பிரதிபலிப்பு தெரியும். அழுத்தமான உளைச்சல் ஏற்படும். உங்கள் நடையுடை பாவனைகள், நீங்கள் மீண்டும் அமைதியடைந்து இயல் சூழலுக்கு வரும் வரை மாறி இருக்கும். அதைப் பொருட்படுத்தாமல் புன்னகையுடன் இருந்தீர்களானால் அந்த தீச்சொற்களை நீங்கள் ஏற்கத் தயாரகவில்லை என்பதால் அது எங்கிருந்து வந்ததோ அவருக்கே போய்ச்சேரும். எனவே இன்முக புன்சிரிப்பு உங்களுக்கு நன்மைதனை பயக்கும்.
ஒருவன் கோபவசத்தால் செய்யும் செயல்களால் பொருள் நாசம், பிறரின் ஆதரவு கிடைக்காமை, மனக்கொதிப்பு, அவமானம், பகை, உடல் சோர்வு ஆகியன அடைகின்றான். புலன்களின் தன்மையும் கெட்டு உறவினர்களையும் இழக்கின்றான். கோபத்தால் தன் வளர்ச்சிக்கு உதவியவர்களையே விலகும்படி தூண்டுகின்றான்.
அதேசமயம் கோபம் கொள்ளவேண்டிய சமயத்தில், கோபம் கொள்ளாமல் எல்லா சமயங்களிலும் பொறுமையைக் கடைபிடிப்பவனிடம் அனைவரும் அவமதிப்பு காட்டுவர். அற்ப எண்ண சிந்தனைகளையுடையவர்கள் பொறுமையாளனை ஏமாற்றி அவனின் பொருள்களை அபகரிக்க விருப்புடன் செயல்படுவர். அவனின் கீழ் செயல்படும் ஆன்மாக்கள் அவர்கள் இஷ்டப்படி நடக்க முயல்வர். எனவே கோபம் கொள்ளாமல் அந்த நேரத்தில் கண்டிப்பு கலந்த பொறுமையுடன் செயலாற்றுதல் சிறப்பு.
ஒரு மனநல டாக்டரிடம் வந்தவன் தனக்கு மனோ வியாதி இருப்பதாக எல்லோரும் கூறுகின்றனர் என்றான். பார்த்தால் தெரியவில்லை. எதை வைத்து நீ அப்படி கூறுகிறய் என்றார். நோயாளி, பார்த்தால் தெரியாது டாக்டர், பழகினால்தான் தெரியும் என்றான். சரி, கவலைப்படாதே, நான் உன்னை குணப்படுத்தி விடுகிறேன் என்று நம்பிக்கையூட்டும் வண்ணம் பேசினார். உனக்கு என்ன பிரச்சனை என்றார்.
எனக்கு திடீர் என்று கோபம் வருகின்றது. அப்படி வந்தகோபம் சும்மா போவதில்லை என்றான். டாக்டர், எல்லோருக்கும் தான் கோபம் வருகின்றது. சிறிது நேரத்தில் போய்விடும் என்றார். அவன் ஆமாம் சார், அந்தகோபம் ஒரு காதோடு போகின்றது. என்றான். டாக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் சொல்வதைக் கவனித்துக் கொண்டிருந்தார். யார் எனக்கு கோபத்தை உண்டு பண்ணுகின்றார்களோ அவர்களது காதை நான் கடித்து விடுகிறேன் என்றான். டாக்டர் அது தவறு என்று உனக்குத் தெரியவில்லையா என்றார். அவன் கடித்தபின்புதான் அது எனக்குப் புரிகின்றது என்றான்.
அதுசரி இதற்கு முன் யாரைக் கடித்தாய், ஏன் கடித்தாய் என்றார். ஒருமனநல டாக்டர் என்னைக் குணப்படுத்த பணம் கேட்டார். எனக்கு கோபம் வந்தது அவர் காதைக் கடித்து துப்பிவிட்டுதான் இங்கே வந்திருக்கின்றேன் என்றான். இதைக் கேட்டபின் அந்த டாக்டர் தன்காதைக் காப்பாற்றிக்கொள்ள மருத்துவ மணையிலிருந்து ஓடினார்.
கோபங்கள் ஒருவரது மனநிலையை, செயல்களை முற்றிலும் மாற்றும் தன்மை கொண்டது. தன்னைவிட வலியவர்களிடத்திலோ, மெலியவர்களிடத்திலோ சினம் ஏற்பட்டாலும், அதைவிடத் அந்த ஆன்மாவிற்குத் தீமைகள் வேறில்லை.
கோபம் உண்டாக்கக்கூடிய நிகழ்வுகளை தளையறுந்த ஓர் படகாக நினைவு கொள்ளுங்கள். உன்னிலையறிவீர். உன்னதம் பெறுவீர்-குருஸ்ரீ பகோரா.

வியாழக்கிழமை, 04 October 2012 11:55

2-5.முயற்சிப் பூக்கள்!

முயற்சிப் பூக்கள்! 


மூன்று சீடர்கள் குருவிடம் உபதேசம் பெற்று காட்டு வழியாக ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். வழியில் புலி ஒன்று இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. நாம் குருவிடம் கற்றதெல்லாம் யாருக்கும் உபயோகப்படாமல் போய்விடும். அந்தபுலி நம்மை கொன்று தின்னப் போகிறது என்று திகைத்து நின்றான் ஒருவன். நாம் தரையில் படுத்துக் கண்ணை மூடியபடி கடவுளை நினைப்போம். அவர் காப்பாற்றுவார் என இரண்டாவது சீடன் படுத்துக் கொண்டான். மூன்றாவது சீடன் புலி நம்மிடம் வருவதற்குள் ஏதாவது முயற்சி செய்து நம்மை காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்போம், முடியாத பட்சத்தில் கடவுளிடம் வேண்டுவோம் என அருகில் இருந்த மரத்தில் எற எல்லோரையும் கூப்பிட அவர்கள் வராததால் தான் மட்டும் மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். தன்னம்பிகை யில்லாதவனையும், மூடநம்பிக்கை வைத்தவனையும் புலி அடித்துக் கொன்றது. தன் முயற்சியில் நம்பிக்கை வைத்த பக்தன் தப்பித்தான்.

முயற்சிக்காமல் முடியவே முடியாது. எள்ளின் உள்ளே எண்ணெய்யும், பசுவின் மடியில் பாலும் உண்டு எனச் சொல்வதால் எண்ணெய்யும், பாலும் கிடைத்துவிடாது. அதற்கான முயற்சி வேண்டும். வெறும் முயற்சி மட்டும் போதாது. மனம் உடல் இரண்டும் இனைந்து முயற்சிக்க வேண்டும். மனதில் எண்ணி உடல் ஒத்துழைக்காவிடில் அது உபயோகமில்லை. எனவே நம் உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். மனதின் எண்ண ஓட்டங்களுக்கு ஈடுகொடுத்து உடல் துவண்டு போகாமல் வேகத்துடன் செயல் படவேண்டும். அப்போதுதான் நீங்கள் வெற்றியை விரைவாக ருசித்துப் பார்க்கமுடியும். உங்கள் குறிக்கோள்களை அடைய முடியும். சந்தோஷம் காணமுடியும்.
பல மருந்துகளை நீரில் கலந்து வைத்தியர் குடிக்கச் சொல்வதால் மருந்தில் ஒன்றுமில்லை! தண்ணீரின் சக்திதான் என்று அர்த்தமில்லை. பார்த்தலில், கேட்டலில் ஒன்றுமில்லை. நம்பிக்கையுடன் முயற்சி செய்து செயல் படவேண்டும். ஒற்றுமையும் உழைக்கும் மனப்பான்மையும் வளரவேண்டும்.
வாழ்வில் கிடைப்பதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளும் பழக்கம் வேண்டும். உங்களுக்கு கிடைத்ததை நீங்கள் அதிருப்தியடைந்து ஒதுக்கிவிட்டு வேறுஒன்றை நாடினால், இதன் சுவை, இனிமை தெரியாமல் போய்விடும். ஒருவேளை அடுத்தமுறை இதுகூட உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். எனவே கிடைத்ததை நுகர்ந்து அனுபவியுங்கள். பின் வேண்டுவனவற்றிற்காக முயற்சியுங்கள். வாழ்க்கை வளம் பெறும்.
இந்த உலகை எட்டிப்பார்க்கும் எல்லா உயிர்களும், தங்கள் கருவிலிருந்து, கூட்டிலிருந்து முயற்சி செய்து உந்திதான் வெளிவருகின்றது. வெளிவரும்பாதை சிறியது என்றாலும் அங்கிருந்து வெளிஉலகைக்காண முயற்சி செய்து உந்தி வெளியே வருவதால்தான் அதனிடம் தன்னம்பிக்கை ஏற்படுகின்றது. முயற்சித்தால் தன்னால் எதுவும் முடியும் என நம்புகின்றது. அவ்வாறு முயற்சிக்காத உயிர்கள் அப்படியே இறந்து விடுகின்றது.
முழு வளர்ச்சி, முதிர்வு அடைந்த பூரண வளர்ச்சிக்குப்பின் எந்த உயிருடன் கூடிய உடலும் தான் வளர்ந்த கருவுக்குள் முடங்கி கிடப்பதில்லை. முட்டை ஓட்டை முட்டி குஞ்சுகளும், கூட்டை கிழித்து பட்டாம் பூச்சிகளும், ஏன் நாமும், கரு முழு உருவானதும் உந்தி முயற்சி செய்துதான் வெளிப்படுகிறோமோ அன்றி உள்ளேயே அடங்கி கிடப்பதில்லை. இந்த உந்துதல் முயற்சிதான் நமக்கு வாழ்நாள் பயணத்தில் அதிகம் தேவைப்படுகின்றது. பலர் அதை மறந்துவிடுகின்றனர். எனவே எதற்கும் முயற்சி தேவை. கஷ்டங்களை மறந்த முயற்சி தேவை.
எவ்வளவு சீக்கிரம் மலைசிகரம் ஏறுகிறாய் என்பது முக்கியமல்ல! அங்கே எவ்வளவு காலம் இருக்கின்றாய் என்பதுதான் அவசியமானது. எவ்வளவு பெரியமலை என்று மலைத்துவிடாதே! முயன்று ஏறினால் அம்மலைச்சிகரம் உன் காலடியில். கைகளில் தொடலாம். எவ்வளவு முயற்சி செய்து, எவ்வளவு உயரம் ஏறினாலும், சிகரத்தின் உச்சியில் நிலையாக இருக்கமுடியாது. ஏணியில் ஏறியவன் எப்படியும் மீண்டும் படியிறங்கித்தான் ஆகவேண்டும் என்பதுபோல, மலையிலிருந்து கீழிறங்கி விடவேண்டியிருக்கும். எந்த உயர்வும் நிலையானதில்லை. அதற்காக சிகரத்தை அடையும் எண்ணத்தை விட்டுவிடாதே!
சிரமங்கள்தான் நமக்கு பலத்தை, கஷ்டங்கள்தான் நம் வலிமையை நமக்கு உணர்த்தும். துயரங்கள் நம்மை பண்பட வைக்கின்றது. எதிர்பாராமல் வரும் இன்னல்களை எதிர்கொள்ள, தவிர்க்க, எதிர்பார்த்துவரும் துன்பங்களை ஏற்றுக்கொண்டால் வெற்றிப்பாதை புலப்படும். சந்தோஷம் அடையமுடியும்.
சில விஷயங்கள் நமக்கு அதிசயமாயிருக்கும். நமதுவாழ்வின் நோக்கம் என்ன! நாம் ஏன் இங்கு வந்தோம்! பிறந்தோம்! நமது வாழ்வின் லட்சியம், குறிக்கோள் என்ன! சிலரை மட்டும் ஏன் பெரிய மனிதர்களாக நினைக்கின்றார்கள். அவர்கள் அவ்வாறு முன்னேறுவதற்கு யார் வாழ்வின் நோக்கம் பற்றி புரியவைத்தார்கள்! என்பதை ஆரய்ந்தால் நாம் புவியில் இருப்பதன் காரணம் நோக்கம் புரியும். நாம் எவ்வாறு செயல்பட்டு, முயற்சி செய்து வெற்றி கொள்ளவேண்டும் என்பதும் புரியும்.
ஒர் ஞானியிடம், தான் எத்தனை முயற்சிகள் செய்தாலும் வெற்றி கிடைப்பதில்லை என சொல்லி வருந்தினான் ஒருவன். அவன் வீட்டிற்கு ஒரு நாள் சென்று அவனை சிறிது நேரம் வெளியே இருக்கச் சொல்லி வீட்டினுள் சில பெருட்களை இடம் மற்றி வைத்தார் அந்த ஞானி. பின் அவனை வீட்டினுள் வரச் சொல்லி வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
நன்கு இருட்டவே அவனிடம் விளக்கு ஏற்றி வைக்கச் சொன்னார். வீட்டினுள் வழக்கமாக தான் வைத்த இடத்தில் பெருள்கள் இல்லாததால் தடவி தடவி கண்டு பிடித்து விளக்கை ஏற்றினான். அப்போது அந்த பெரியவர் நீ எப்போதும் வைக்குமிடத்தில் பெருள்கள் இல்லையெனினும் வீட்டில் கண்டிப்பாக இருக்கிறது என்ற உறுதியில் முயற்சி செய்து விளக்கை ஏற்றினாய். எதை நோக்கிப் போகிறோம் என்பதை உறுதியாக தீர்மானித்துக் கொண்டால், நீ எடுக்கும் சிறிய முயற்சி கூட, இருள் போன்ற தடைகளைமீறி பலன் கொடுக்கும். இதை புரிந்து செயல்படு. வெற்றி நிச்சயம் என்றார்.
எண்ணங்களில் உள்ள அறிவின் செயல்கள், செயலாக்க அறிவை, நடைமுறை சாத்தியத்திற்கு ஏற்ற உறுதியை அடையவேண்டும். அந்த திருதி எனப்படும் உறுதி இல்லை எனில் நீங்கள் கேட்டவைகளோ, நினைத்தவைகளே மனதில் பதியாமல் போய்விடும்.
மன உறுதிப்பாடு என்பதே விடாமுயற்சியாகும்! அதைதிருதி’ என மனுதர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு செயலை செய்து முடிக்க வேண்டுமென நினைத்து விட்டால் என்ன பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளித்து வெற்றியடையும்வரை முயன்று வெற்றிகாணும் செயலே திருதியாகும்.
ஓர் இளவரசி தன் அறிவுக் கூர்மையினால் அறிஞர்களையும் புலவர்களையும் வென்றுவிட, அவர்கள் இளவரசிக்கு பாடம் புகட்டும் வகையில் ‘நுனிக் கிளையிலிருந்து அடிமரத்தை வெட்டிய’ ஓர் சர்வமுட்டாளை, தங்களது திறமையால் மணம் முடித்தனர். உண்மை தெரிந்ததும் இளவரசி அவரை வெளியேற்றினாள்.
மனம் வெதும்பிய அவர் கிணற்றில் தற்கொலை செய்து கொள்ள சென்றபோது, தண்ணீர் இறைக்கும் போது மேலும் கீழும் சென்றதால் கயிற்றின் தாரைகள் சுவற்றில் பதிந்திருக்கக் கண்டு, நாமும் ஏன் தெடர்ந்து முயற்சி செய்து அறிஞனாகக் கூடாது என நினைத்தார். தொடர்ந்து முயற்சிகள் செய்தார். கல்விமான் ஆனார். காளிதேவியின் அருளும் கிடைத்தது. வாழ்வில் உலகம் புகழும் வெற்றி கண்டார் ‘கவிகாளிதாஸ்’ என்றழைக்கப்பட்டார்.
நாம் காலத்தை விரயம் செய்யக்கூடாது. மற்றவர்கள் எப்படி நடந்து கொள்கின்றார்கள் என ஒவ்வொன்றிற்கும் பார்த்து பார்த்து நம் செயல்பாடுகள் இருக்கக் கூடாது, நாமே முயற்சி செய்து பார்க்க வேண்டும். எந்த மனிதனும் கொள்கைகளுடனும், திறமைகளுடனும் எல்லாம் தெரிந்தும், புரிந்தும் பிறந்ததில்லை. வாழ்வில் போராடி, முயற்சி செய்து வெற்றிகொண்டதே அவர்களை வாழ்வில் பெரிய மனிதனாக்கியதாகும். நாம் நம்மை வேறெருவர் தூக்கி முன்னேற உதவுவார் என நினைத்து நம் செயலோடு அடுத்தவர் செயல்திறனை ஒற்றுமைப் படுத்தக்கூடாது.
நாம் கேள்விப்படுவதையெல்லாம் ஒருகாதின் வழிவாங்கி மற்றொரு காதின்வழி விட்டு விடும் பழக்கத்தை மேற்கொள்ளும் மந்த புத்திக்காரராக இருக்கக்கூடாது. நாம் கேட்டவைகளைப் பற்றி தொடர்ந்து அளவில்லாமல் பேசும் மத்திம புத்திக்காரராகவும் இருக்கக்கூடாது. நாம் கண்டவை கேட்டவைகளை மனதில் இருத்தி தூய்மையுடன் ஜீரணித்து உங்களுக்கு பயன்கள் தருமாறு ஆக்கும் ஞானமுடன்கூடிய உத்தமபுத்திக்காரராக இருத்தல் வேண்டும்.
கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் வில் வித்தையை பயிற்றுவித்து வரும்போது, ஆசிரியர் துரோணர் பாண்டவர்களுக்கு நன்கு பயிற்றுவிக்கிறார் என துரியோதனன் சொன்னதைக்கேட்ட பீஷ்மர் நேரில் விசாரிக்க வந்தபோது, துரோணர் அர்சுனனை ஒரு வேலையாக அனுப்பிவிட்டு, நிலத்தில் ஓர் மந்திரத்தை எழுதி துரியோதனனை அழைத்து அந்த மந்திரத்தை படித்து அம்பு எய்தச் சொல்ல அந்த மரத்திலிருந்த இலைகளை எல்லாம் அது துளைத்தது. பின்னர் அனைவரையும் நீராட அழைத்துச் சென்றார்.
அனைவரும் நீரடி திரும்பவரும்போது அர்ஜுனனும் வந்து சேர்ந்தான். அந்த மரத்தடிக்கு வந்து பார்த்தபோது அந்த மரத்திலிருந்த இலைகளில் எல்லாம் இரண்டு துளைகள் தென்பட்டது. இது எப்படி என பீஷ்மர் கேட்டபோது, அர்ஜுனன் நான்தான் அம்பெய்தினேன் என்றான். துரோனர் அந்த மந்திரத்தை எழுதியபோது நீ இங்கு இல்லையே என்றார். குரு சொன்ன வேலையை செய்து திரும்பும்போது இந்த மரத்தில் இலைகளில் எல்லாம் துவாரம் இருக்க கண்டேன். அப்போது கீழே ஓர் மந்திரம் இருக்க கண்டு இரண்டுக்கும் ஓர் ஒற்றுமை இருக்க வேண்டும் எனக்கருதி மந்திரம் ஜபித்து அம்பெய்தினேன் என்றான்.
பீஷ்மர் அர்ஜுனனை மிகவும் பாராட்டியதை கண்ட துரியோதனன் கேலிசெய்ய, துரோனர் துரியோதனா மீண்டும் அம்பெய்தி இலைகளை துளையிடு என்றார். துரியோதனன் மந்திரம் எழுதிய இடத்திற்கு வந்தபோது அங்கு அது காணப்படவில்லை. யார் காலிலும் மிதிபடக்கூடாது என அர்ஜுனன் அதை அழித்துவிட்டன்.
அதைக் காணது துரியோதனன் மந்த புத்திகாரனாக மருங்கி நின்றான். துரோனர் அர்ஜுனனை அம்பெய்த அழைத்தபோது உத்தம புத்திகாரனான அவன் அந்த மந்திரத்தை நினைவு கொண்டு மூன்றாவது துளையை இலைகளில் பதிவு செய்தான்.
துரோணர் பயிர்ச்சியில் ஆர்வமும், முயற்சியில் நம்பிக்கையும் இருந்தால் வெற்றி பெறலாம் என்றார். பீஷ்மர் உண்மை உணர்ந்து அமைதிகாத்து திரும்பினார்.
வாழ்க்கையில் ஆனந்தமாக வாழத்தெரிந்து கொள்ளவேண்டும். வாழ எப்போதும் முயற்சி செய்யவேண்டும். அனுபவத்தால் எதுஎது ஆனந்தம் அளிக்கக்கூடியது, எது துயரம் அளிக்கக்கூடியது என கண்டு கொள்ளலாம். “முயற்சி திருவினையாக்கும்” முயற்சிக்காவிடில் ஏதும் நிகழாது.
முயற்சியின்றி வாழ்வது மனிதனின் மிகப்பெரிய குற்றமாகும். தானே நடக்கும், விதிப்படி நடக்கும் என்று சும்மா இருப்பது வீண். உனக்கு கிடைத்திருக்கும் வாழ்நாளை சுவைக்காமல், அனுபவிக்காமல் சோம்பேறியாய் இருந்து வாழ்நாளை வீணடிப்பதில் என்ன பயன்?
தீயின் சூடு, தண்ணிரின் குளிர்ச்சி, சூரியனின் வெம்மை கதிர்கள், சந்திரனின் நிலவொளி இவைகளை அறிந்து கொள்ள முடியாதவர்கள் வாழ்க்கையில் ஏனோதானோ என்று வாழ்பவர்கள். சூரியன் உதிக்கின்றது, வெய்யில் அடிக்கின்றது, மழை பெய்கின்றது, தீ சுடுகின்றது, இரவில் சந்திரன் தெரிகின்றது என ஒவ்வொன்றையும் சாதாரணமாக நினைப்பவர்கள், நீரின் குளிர்ச்சி, நிலவின் இதமான ஒளி இவைகளின் தன்மைகளை புரிந்து கொள்ளமுடியாதவர்கள், வாழ்க்கையில் ஏற்றதாழ்வுகளை அறியாதவர்களாகி விடுகின்றனர்.
ஒருவரை சில முயற்சிக்குப்பின் சந்திக்க செல்கின்றோம். அங்கே சந்திக்க முடியாவிடில் என்ன உபயோகம். நம் முயற்சிகள் எல்லாம் வீண். அதைப்போல உங்கள் உடம்பில் உள்ள உயிரின் ஆன்மாவை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதைத் தெரியாவிடில் “எழும்பு போர்த்திய கூடாகும்”.
உடலில் இருக்கும் ஆன்மாவை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நீங்கள் உங்களை உணர்ந்து கொள்ளல் அவசியமானது. தேடினேன் தெரியவில்லை எனக்கூறாதீர்கள், முயற்சி செய்து தேடுங்கள், “தேடினால் தெரியும்”.
பறவைகளைப் பார்த்த மனிதன் விமானம் படைத்து பறத்தலை கற்றுக்கொண்டான். பறவைகளின் மழை, வெயில் தாண்டிய இடைவிடாத பயணம், தடைகளினூடே செல்லும் லாவகம், சுறுசுறுப்பு, முயற்சி ஆகியனவற்றையையும் கற்றுக் கொள்ளவேண்டும்.
பறைவைகளில் கழுகு தன் வாழ்நாளில் எல்லா திறமைகளும் எப்போதும் தம்மிடம் இருக்க வேண்டும் என்பதற்காக தன் வயதின் பாதியில், வலிமை குன்றிய அலகை பாறையில் மோதி உடைத்துவிட்டு, மீண்டும் உறுதியாக புதிய அலகு வளரும் வரை காத்திருப்பதாக சொல்லப்படுகின்றது.
அதன்பிறகு அந்த புதிய வலிமை மிகுந்த அலகினால் தன் கால் நகங்கள் மற்றும் இறக்கையின் சிறகுகளை பிய்த்து விட்டு, புதியன வளர பொருத்திருந்து மீண்டும் புதிய பிறவிபோல் பலவருடங்கள் வலிமையுடன் வாழ்கிறது.
தானே தனது பிறவியை வலிமைப்படுத்தும் கழுகின் இந்த கடுமையான முயற்சி போற்றத்தக்கவையே. அந்த பிறவியில் அது எவ்வளவு கஷ்டங்களை தானே சந்தித்து வெற்றி அடைகிறது. எதிர்காலம் வலிமையுடையதாக இருக்க நாமும் அது போன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
முன்னேற வேண்டும் என்ற நினைவுடன் உழைப்பவனுக்கு, மிகவும் கடினமாக முயற்சிப்பவனுக்குத்தான் ஒய்வின் அவசியம் புரியும், முயற்சியின் உண்மையான அர்த்தம் புரியும். மீண்டும் உழைக்கும் ரகசியம் தெரியும். நம் வெற்றிக்கு முயற்சி, மேலும் முயற்சி, தவறுகள் தவிர்த்த முயற்சி என முயற்சிகளாகவே அமையவேண்டும். மேலும் பல முயற்சிகளுக்கு மற்றவர்களின் ஆதரவு வேண்டியதாயிருக்கின்றது. தெய்வ பலம் மிகுந்த ஆதரவானது சிறப்பு.
பாண்டவர்கள் வேட்டைக்கு சென்றபோது திரௌபதியை, ஜயத்ரதன் கடத்திசெல்ல, அறிந்த பாண்டவர்கள் அவனை வழிமறித்து படைகளை அழித்து அவளை மீட்டனர். ஜயத்ரதனை தலைமுடி அகற்றி அவமானப்படுத்தினான் பீமன். தவம் செய்து அர்ஜுனனைத்தவிர மற்றவர்களை கொல்ல வரம் பெற்ற ஜயத்ரதன், போரில் அபிமன்யு இறக்க காரணமானான். போரிலிருந்து வீடுதிரும்பிய அர்சுனன் செய்தி கேட்டு ஜயத்ரதனை அழிக்க சபதம் மேற்கொண்டான்.
இதை அறிந்த துரோணர் வியூகம் அமைக்கையில் அர்சுணன் பார்வைக்கு படாத நிலையில், ஜயத்ரதனை ஒளித்து வைக்க, கண்ணன் இருள் சூழ்ந்த நிலையை மாயமாக உருவாக்க, அந்தி சாய்ந்ததாக நினைத்து வெளிவந்த ஜயந்திரனை, கண்ணன் அடையாளம் காட்டி ஜயந்திரனின் தலையைக் கொய்து அர்சுணன் சபதத்தை நிறைவேற்றக் கூறினார். மேலும் அந்த தலை அவன் தந்தையின் மடியில் விழச்செய் என்றார். கன்னனின் வழி காட்டுதலின்படி அந்த தலை விருத்தக்ஷத்திரர் மடியில் திடிரென்று விழ, அவர் பதறி எழுந்ததால் அது மடியிலிருந்து மண்ணில் விழுந்தது. விருத்தக்ஷத்திரருக்கு மகன் பிறந்தபோது மகன் தலை அறுந்து பூமியில் விழும் அழிவுக்கு காரணமாணவனின் தலை சுக்கு நூறாகும் என்று சபித்தார். அதன்படி அறுந்து அவர்மடியில் விழுந்த தலையை அவர் கீழே போட்டதால் அவரின் தலையும் சுக்கு நூறாகியது.
அர்ச்சுணனின் சபதம், நிறைவேறவும், அதேசமயம் ஜயத்ரதனின் தந்தை சாபத்திலிருந்து அர்சுணனை காப்பற்றவும் கண்ணன் ஒருவரால் மட்டுமே முடிந்தது. அதுவே தெய்வ பலம். வெறும் சபதங்களினால் ஏற்படும் முயற்சிகளுடன் தெய்வபலமும் அர்சுனனுக்கு இருந்ததால் தான் அவனால் பலவெற்றிகளை அடையமுடிந்தது-குருஸ்ரீ பகோரா. 


வியாழக்கிழமை, 04 October 2012 11:54

2-4.உண்மைப் பூக்கள்!

உண்மைப் பூக்கள்!


உண்மை சக்தி வாய்ந்தது. ‘சத்தியம் ஜெயிக்கும். வாய்மையே வெல்லும்’. யாரும் உண்மையை மறைக்க முடியாது. காலத்தால் அழியாதது. சூழ்நிலையில் அப்போது மறைந்தாலும், காலப்போக்கில் பிறிதொருநாள் வெளிப்படும் அதிசயமானது உண்மை! உண்மை எப்போதும் இனிமையானது அல்ல! கசப்பானதும் கூட!

அந்த உண்மையை ‘சத்யா’ -‘நியாயம்’ என்கின்றது மனுதர்ம சாஸ்திரம். நேர்மையும் நாணயத்தையும் கொண்ட பண்பே சத்தியமாகும். உண்மை அழிவற்றது. எல்லாவற்றிலும் உயர்ந்தது, எப்போதும் மாறாதது என்கிறது உபநிடதம். சத்யமே பரம்பொருள் என்கிறது வேதம். சத்யத்தைத்தேடி தெரிந்துகொண்டு அங்கேயே நிலைத்துவிடு என்கின்றன புராணங்கள்.
சத்யத்தை கடைபிடிப்பவன் எப்படியும் வாழ்வின் நிறைவை அடைவான். சத்தியமில்லா அசத்திய வாழ்வு ஆன்மாவிற்கு அல்லலைத்தான் தரும். இன்றைய சூழல் பொய்யின் பிரதிபலிப்பாக உள்ளது. பொய்யின் கலப்பு எங்கும் தெரிகின்றது. எல்லா இன்னல்களுக்கும் பொய்யே மூலகாரணம். சத்யத்தின் மூலம் அரிச்சந்திரனும்,  இராமனும், நல்லறத்தினால் தர்மரும் உயர்வடைந்துள்ளதாக புராணங்கள் நமக்கு தெரிவிக்கின்றன.
உண்மையை பேசுங்கள். அவைகள் மற்றவர்களை காயப்படுத்தவேண்டாம். சில உண்மைகள் உங்களுக்கோ, உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கோ பல இடங்களில் இனிமையானதாக இருக்காது என்ற நிலையில் அதைத் தவிர்ப்பதே சாலச் சிறந்தது. உண்மையைச் சொல்லாமலிருப்பதா? மறைத்து விடுவதா? என்பது போன்ற  குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். உண்மைபேசிய பிதா காந்தியின் உயர்வு அனைவருக்கும் தெரிந்தது. உண்மையை நேசிப்பவன் சமூகத்திற்கு அற்புதமானவன்.
நீங்கள் கூறும் உண்மையினால் பல சிக்கல்கள் தீரும் என்றால் அதை எல்லா இடத்திலும் எப்போதும் கூறலாம். அதுவே பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்றால் அதன் தாக்கம் உங்களுக்கு தெரிந்திருந்தால் நீங்கள் அந்த உண்மையை வெளிப்படுத்தாது மறைத்தலே அப்போது செய்யவேண்டிய செயல். பொய்யை நிமிர்ந்து நிற்கச்செய்ய 1000 காரணங்கள் வேண்டும். ஆனால் உண்மைக்கு ஒன்று போதும்.
மறைத்த உண்மையும், தெரிந்த உண்மையும் எப்போதும் சுடும். அதைச் சொல்லியே தீருவேன் எனச் சொல்லி அனைவரையும் காயப்படுத்தக் கூடாது. உண்மை அரியது, சிறப்பானது, இனிமையானது என்பதற்காக எல்லா நேரத்திலும் எல்லாரிடத்திலும் சொல்லிக் கொண்டிருக்கவும் கூடாது. கசப்பானது, சுடும் என்பதற்காக சொல்லாமலும் விட்டு விடக்கூடாது. தேவையானவற்றை தேவையான போதுதான் பயன் படுத்தவேண்டும்.
இயற்கை ஒர் பிரம்மாண்டமான உண்மை. நீ அதன் செயல்களில் நாட்டம் கொண்டு ஏற்றுக் கொள்கின்றாயோ இல்லையோ, அது உனக்கென்று இல்லாமல் பொதுவாக தன் கடமையைச் செய்யும். இது நிஜம்! நம்மால் எதையும் மாற்ற இயலாது. அதன் விருப்பப்படி நம்மைச் சுற்றி நிகழ்வுகளை செயல்படுத்தி நம்மை சூழ்நிலையின் கைதியாக இயங்க வைப்பது எதுவோ அதுவே சத்தியமானது! விதி! கர்மா! இயற்கை! எல்லாம். அந்த நியதிகளுக்கேற்ப நம்மை, நம் எண்ணங்களை, செயல்களை பழகிக் கொள்ள வேண்டும்.
உண்மையை ஒப்புக் கொள்ளும் பக்குவம் வேண்டும். நீ செய்த செயல் உனக்குச் சரியானதாக படலாம். மற்றவர்கள் அதை தவறு என்றபோது, உங்கள் பிடிவாதம் தளர்த்தி நிதானமாக, உங்கள் நிலையிலிருந்து விடுபட்டு, மற்றொருவன் அதை செய்திருந்தால் நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்றமுறையில் சிந்தித்தால் உங்கள்செயல் எவ்வாறு மற்றவர்களுக்கு தவறாக தோன்றுகிறது என்பது புரியும்.
அப்போதும் தவறு தெரியவில்லை, உங்கள் பக்கம் நியாயம் இருகின்றது என்றால் சரி. நீங்கள் செய்தது தவறு எனச்சிறிது சந்தேகம் வந்தாலும். அது புரிந்தவுடன் அக்கணமே அல்லது அடுத்துவரும் நிகழ்வுகளில், உங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு செயல்பட்டால் மனமே நீ வெற்றியடைந்துவிட்டாய்.
இனிவாழ்வில் இதுபோன்ற ஒருதவறு நீங்கள் மீண்டும் செய்யமாட்டீர்கள். எவ்வளவு பெரிய அனுபவம் கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள் உங்கள் வாழ்வில். உண்மைகளை, தவறுகளை ஒப்புக்கொள்ளும் இந்த மனப்பக்குவம் உடல் நலத்திற்கு ஏற்றது. வாழ்வில் பொறுமையாக நல்லமுடிவுகளை நிதானமாக எடுத்து வெற்றிகாணும் நிலை உருவாகும்.
காவல்பணி செய்து கொண்டிருந்தவனுக்கு தோட்டத்தில் சப்தம் கேட்கவே, அவசரமாக அங்கு வந்தவன் ஒரு மாடு மேய்ந்து கொண்டிருக்க கண்டான். அதை பிடித்து கட்டிப்போட முயன்றான். மாட்டைபிடிக்க முடிவில்லை. கையில் வால்தான் சிக்கியது. அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அந்த மாடு இவனை இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்து பின் பறக்க ஆரம்பித்தது. விட்டால் கீழே விழுந்து விடுவோம் என்ற பயத்தில் கெட்டியாக பிடித்துக் கொண்டான். அது அவனை கயிலாயம் கொண்டு சென்றது. சிவனைக் கண்டவன் அவரிடம் மாட்டைப்பற்றி முறையிட்டான். தோட்டத்தில் விளைந்த பயிரெல்லாம் நாசம் என்றவனிடம், சிவன் அதற்கு ஈடாக பொற்காசுமுடிச்சு ஒன்றை தந்தார். நந்தியின் உதவியுடன் பூமிக்கு வந்தான். அவனுக்கு ஒருசந்தேகம் தோன்றியது. உண்மையில் அந்த மூட்டை முழுவதும் தங்கம்தானா என்று.
ஒரு காசை எடுத்துக்கொண்டு நண்பனிடன் சென்றான். அதை சோதித்த அவன் அது சொக்கத் தங்கமாக இருக்கக் கண்டான். இருந்தாலும் நண்பனுக்கு எப்படி அது கிடைத்தது என அறியும் ஆவலில், இது பித்தளை உனக்கு இதை யார் கொடுத்தது என்று கேட்டான். நடந்ததைக் கேட்டவன் அன்று இரவு நண்பனின் தோட்டத்தில் பதுங்கியிருந்தான். நந்தி வந்தது. பித்தளை கொடுத்து ஏமாற்றி விட்டீர்களே இது சரியா எனச் சிவனிடம் கேட்க நினைத்து நந்தியின் வாலைப் பிடித்தான். அது விர்ரென்று உயர கிளம்பியது. மறைந்திருந்த நண்பன் இவன் காலை இறுக்கிப் பிடிக்க இருவரையும் மேலே கொண்டு சென்றது நந்தி.
அப்போது காலைப்பிடிந்திருந்த நண்பன் உனக்கு எப்படி இவ்வளவு காசுகள் கொடுத்தார் என்றான். ஆர்வமிகுதியில் இவ்வளவு என்று இருகைகளையும் விரித்துக் காட்டினான். கைகளை விரித்ததால் வாலைப்பிடித்தபிடி நழுவ இருவரும் பூமியில் விழுந்தார்கள். அடிபட்டார்கள்.
உண்மையைச் சந்தேகப்பட்டவன் வாலைப்பிடிக்க, பேராசை கொண்டவன் காலைப் பிடிக்க இருவருக்கும் உடலில் காயம், துன்பம், துயரம். எனவே உண்மையை எப்போதும் சந்தேகப்படாதீர்கள்.
ஞானி ஒருவர் மரத்திலிருந்து இலைகளை பறித்து கையில் இலைகள் அதிகமா! மரத்தில் அதிகமா! என்றார். மரத்தில் அதிகம் என்றவர்களைப் பார்த்து, மரத்தின் இலைகளின் அளவு உண்மைகள் பூமியில் இருந்தாலும், என் கையில் உள்ள அளவிற்கு நீங்கள் உண்மைகளை அறிந்து கொண்டாலே துன்பங்களிலிருந்து விடுபடமுடியும். உண்மையைப் பொறுத்த வரையில் நீங்கள் விழித்துக் கொள்ளும் நேரமே வாழ்வின் விடியல். எனவே இயல்பாக, எளிமையாக இருங்கள் என்றார்.
எளிமை சிக்கனம் என்றதும் காந்திஜி பற்றி ஒர் நிகழ்வு. தன் ஆசிரமத்தில் காந்திஜி நடந்து சென்றுகொண்டிருந்தபோது பஞ்சு சுருள் ஒன்று இருக்கக் கண்டார். அன்று அவர் மௌனவிரதம். தன் கூட வருபவர்களிடம் அதைச் சுட்டிக் காண்பித்தார். சுற்றுப்புறத் தூய்மை குறித்து குறிப்பிடுகிறார் என நினைத்து உடன் வந்தோர் அந்த பஞ்சை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டனர்.
மௌன விரதம் முடிவுற்றபின் காந்திஜி அந்த பஞ்சு பற்றி கேட்டார். குப்பையில் போட்டவர் பதறிவிட்டார். இதுவே காசாக இருந்தால் இப்படி செய்திருப்பாயா எனக்கேட்டார். பருத்தி பயிரிடுவதிலும் பஞ்சாக்குவதிலும் எவ்வளவு உழைப்பு செலவாகி இருக்கின்றது தெரியுமா! அந்த உண்மையை புரிந்து முதலில் பஞ்சை தேடி எடுத்துவா என்றார். பஞ்சை திரும்ப பெற்றதும், பஞ்சு அழுக்கானால் நூல்நூற்று அழுக்கை அகற்றலாம் எனக்கூறியவரின் எளிமை மற்றும் சிக்கனத்தை ஆசிரமத்தில் உள்ளோர் தெளிவாக புரிந்தனர்.  உண்மை உழைப்பின் அருமையை உழைத்தவர்தான் உணர்வர். உண்மையில் அவருக்குத்தான் எளிமையும் சிக்கனமும் கைவரும்.
தன் நெஞ்சம் அறிய, ஒரு நிகழ்வு குறித்துப் பொய் சொல்லாமல் உண்மை பேசவேண்டும். அப்படிப் பேசுபவன் அனைத்து ஆன்மாக்களினாலும் பேசப்படுவான். பொய் இல்லா வாழ்வில் எல்லாப் புகழும் வந்து சேரும்-குருஸ்ரீ பகோரா.

வியாழக்கிழமை, 04 October 2012 11:52

2-3.காலப் பூக்கள்!

காலப் பூக்கள்!


காலம் பார்த்து செயல் செய்தால் எதையும் விலைக்கு வாங்கலாம். காலங்களே நம் நண்பர்கள். காலங்களே நம் பகைவர்கள். காலங்கள் நமக்கு எல்லாம் தந்தும் பறித்தும் விடுகின்றன. அழவைக்கிற அதுவே சிரிப்பையும் தருகின்றது. ஒவ்வொருவர் வாழ்விலும் காலம் இன்றியமையாதது. காலத்தின் இயல்பு மாற்றத்தை தருவது. அந்த மாற்றம் இன்பத்தையும், துன்பத்தையும் சேர்ந்து தரவல்லது. எவ்வளவு துன்பம், எவ்வளவு இன்பம் என்ற அளவில்லாமல் அவரவர் கர்மவினைகளுக்கு ஏற்ப தரப்படுகின்றது. பெறப்படுகின்றது. எப்படித் தந்தாலும் அதை கர்மவினைகளின் பாதிப்பை குறைத்து அதில் இனிமை காண முயலவேண்டும்.

நல்ல சிந்தனைகள், நற்செயற்கள் கொண்டு கர்மவினையினால் பாதிக்கப்பட்டவன் இயங்கும் போது அதன் தாக்கம் குறைகின்றது. அதற்குறிய மனோபலத்துடன் செயல் படவேண்டும். முன்வினையின், முன்செய்த தீவினையின் வேகத்தை புதிய நல்வினையால், செயல்களால் தணிக்கலாம். சத்தியத்தை கடைபிடித்தால் தாழ்வு என்பது என்றுமில்லை. அவ்வப்போது ஏற்படும் தாழ்வுகளும் நிரந்தனமானதுமில்லை. நிச்சயம் ஏற்றம் வரும். சத்தியத்தை எந்த கொடிய சக்தியும் அழிக்கமுடியாது. அழிவில்லாத உன்னதமான சக்தி சத்தியம்.
ஓர் செயல் வீழ்ச்சிக்கு வித்து பொய்மையாகும். பொய்மை நீண்டநாள் வாழ்ந்ததில்லை. மகிழ்ச்சிக்கு வித்து அன்புடைமையாகும். நீ விதைத்த பொய் காலத்தினால் உருமாறி உன்னையே தாக்கும். விதைத்த அன்பு என்றும் எப்போதும் மகிழ்வை தரும். உண்மை நீண்டநாள் தாழ்ந்திருப்பதில்லை. உண்மைக்காக எதையும் விடலாம். ஆனால் உண்மையை விட்டு விடக்கூடாது.
“காலம் பதில் சொல்லும்” என்பர். அவ்வப்போது உணரா அன்புகூட பிரிதொரு நாளில் தெரிந்து நீர்மல்க கனிவு பிறந்து அன்பின் ஆனந்தம் புரியும். நம் முன் வினையால் நம் உறவினர்கள், சுற்றத்தார்கள் அமைகின்றனர். அதில் அவர்களின் கர்ம பலன்களும் உண்டு. எப்படியிருப்பினும் நல்செயல்கள் எல்லா பலன்களிலும் நன்மைபயக்கும். மீண்டும் அமையும் சுற்றம் நன்மை பயக்கும். மாற்றங்கள் நிகழும். அனுபவங்கள் நம் நன்மைக்கே!  காலத்தின் அனுபவங்களை ஒதுக்கி செயல் படுதல் சரியன்று.
‘காலம் பொன் போன்றது’ என்ற பழமொழிக்கு ஏற்ப கிடைக்கும் சிறிய நேரத்தைக்கூட வீணடிக்காமல் பயன் படுத்துங்கள். ஓர் பயணத்தின்போது கிடைக்கும் நேரங்களை உபயோகித்துக் கொள்ளுங்கள். விரைவாக பயணித்துக் கொண்டிருக்கும்போது சிக்னல் தாமதம் என்றால்கூட அந்த கணநேரத்தை பயன்படும் விதமாக சிந்தியுங்கள். உங்கள் நலனுக்காகவோ, உற்றார், உறவினர், நண்பர்கள் நலனுக்காகவோ, பிரச்சனைகளிலிருந்து விடுபடவோ சிந்திக்க பயன்படுத்துங்கள்.
உடலின் உயிர்கள் அனைத்தையும் அடக்கி விழுங்கி விடுவதும், என்ன நடந்தாலும் எது அழிந்தாலும் அதன்பிறகு இருப்பதும், எல்லாம் கடந்து போவதற்கு காரணமாயிருப்பதும், எதனாலும் வெல்ல முடியாததுமான ஒன்றுதான் ‘காலம்’ -இது இயற்கையின் சிறப்பான நியதி. அதிர்ஷ்டம் என்பது நம்மை நோக்கி வரும் காலத்தை சரியான முறையில் பயன் படுத்துதலே!.
கிடைத்தற்கரிய காலம் வரும் வரை, கொக்கு போன்று பொறுமையுடன் காத்திருந்து, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, செய்தற்கரிய செயல்களை உடனுக்குடன் செய்ய வேண்டும்.

வியாழக்கிழமை, 04 October 2012 11:51

2-2.அனுபவ-அறிவுப் பூக்கள்!

அனுபவ-அறிவுப் பூக்கள்!


ஆன்மாக்கள் நல்ல விஷயங்களைக் கேட்கின்றன. படிக்கின்றன. ஆனால் அதன் சாதக பலன்களைப் புரிந்து விஷயங்களின் தன்மை உணர்ந்து பார்ப்பது இல்லை. அந்த படித்த, பார்த்த, கேட்ட நிகழ்வுகளை மறந்து ஒதுக்கி விடுகின்றனர். அவ்வாறு செய்யாமல் பார்த்த, கேட்ட, படித்த விஷயங்களின் பலன்களை கண்டு அதை நம் வாழ்வில் சிறிதளவேனும் உபயோகிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டால் இந்த விஷயம் பின் ஒருநாள் நம் செயலுக்கு வழிகாட்டியாய் உதவும்.

இதைத்தான் நாம் அனுபவ அறிவு என்கிறோம். நாம் அனுபவித்த அனுபவமட்டுமில்லை, நாம் பார்த்து கேட்டு உணர்ந்த அனுபவம்.
வாழ்வில் உணர்வு, உணர்ச்சி முக்கியம். ஆனால் அறிவுதான் உணர்ச்சியை கூட்டிக்கொண்டு வழி நடத்திச் செல்ல வேண்டும். உணர்ச்சி வயப்பட்டால் அறிவின் வழி புரியாது. சரித்திரம், பூகோளம், அறிவியல், கலை, கணிதம், விஞ்ஞானம் போன்ற உலக விபரங்களைத் தெரிந்துகொள்ளும் அறிவு ‘அபரவித்யா’ எனப்படும். வாழ்வில் தொழில், வேலைவாய்ப்பு என்பதற்காக இவைகளைப்பற்றி நாம் பள்ளி, கல்லூரிகளில் கற்று தேர்வு அடைகிறோம்.
வாழ்க்கைப் பயணத்தில் நாம் சந்தோஷ வெற்றியடைய வேறு நிலை அறிவு வேண்டியதாய் உள்ளது. வாழ்வில் ஏமாற்றங்களை சந்தித்து சமாளிப்பது எப்படி, ஏற்படும் சங்கடங்களை எப்படி போக்கிக்கொள்வது, சோதனைகளை எப்படித் தாண்டுவது, செயல்களில் தோன்றும் தோல்விகளிலிருந்து வெற்றியை அடைவது எப்படி என்பது போன்ற பல்வேறு உயர் நிலை பிரச்சனைகளைப் பற்றிய அறிவை பெறுதல் ‘பரவித்யா’ என மனுதர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. முடிவில் இந்த அறிவுதான் ஆத்மா புண்ணிய நிலையான முக்தியடையும் வழிகளை நாம் உணர்ந்துகொள்ள உதவுகிறது..
நாம்போய் சேரவேண்டிய இடத்தின் வழி தெரியாமல் தவிக்கும் நாம், பொதுவாக அதை தெரிந்து கொள்ள முயலுவதில்லை. முடிவான இடம் எது என்பதை புரிந்து கொள்ளுங்கள். வழிமுறைகளைத்தேடி தெரிந்து கொள்ள விருப்பப்படும்போது இதுதான் சரியானவழி எனக்கூற அனுபவஸ்தர்களில்லை.
தெரிந்தவர்கள் முன்வரும்போது தங்களுக்கு தெரிந்த வழிகளைத்தான் கூறுவார்கள். அது அனுபவப்பட்டு கூறிய வழியாக இருப்பதில்லை. உண்மையான அனுபவ அறிவு பெற்றவர்கள் அதைப்பற்றி பேசுவதில்லை. மனம் எனும் குதிரையை, அறிவு எனும் கடிவாளம் போட்டு அடக்கி கோபத்தைக் கைவிடு, உன்னுள்ளே தெளிவு தானே வரும்.
உற்று நோக்குங்கள். கூர்ந்து கவனியுங்கள். உங்களைச்சுற்றி, உங்கள் சம்பந்தப் பட்டவர்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என ஆழ்ந்து கவனியுங்கள். வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கைகள் வழி உள்ளும் வெளியும் நடக்கும் நிகழ்வுகளை கவனியுங்கள். பல ஆயிரக்கனக்காண நிகழ்வுகளில் சில உங்களுக்குப் புரியும். ஏன் எப்படி என்ற கேள்வியுடன் உற்று நோக்குங்கள்.
கூர்ந்து கவனித்து அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அந்த நிகழ்வின் சாதக பாதகங்கள் புரியவரும் அது ஓர் அனுபவத்தை உங்களுக்குள் ஏற்படுத்தும். சுகத்தின்மேல் அமர்ந்துதான் துக்கம் வரும் என்பது அனுபவ அறிவு.
ஒவ்வொரு நிகழ்விற்கும் உங்கள் கவனத்தினால் ஆழமான ஓர் புதிய அனுபவம் மனதில் படரும். இனிமையான ஆந்த அனுபவம் ஓர் சூழலில் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ, நண்பர்களுக்கோ அவர்களின் செயலுக்கு உதவும். அந்தச் செயல் வெற்றிபெற இன்னுமொரு அனுபவம் உதவிபுரியும், இந்த உற்று நோக்குதலால் கிரகித்த அனுபவ அறிவுவால் மற்றவர்களைவிட உங்கள் செயல்பாடுகள் சிறப்படையும். உங்களின் இந்த தனித்தன்மை, முக்கியத்துவத்தை உங்களின் சொல்லுக்கு, முடிவுக்கு முதலிடம், என முதன்மைபடுத்தப் படுவது உங்களுக்கு சிறப்பு.
பெற்றோர்கள் தங்கள் மகளுக்கு மணமுடிக்க வரன் பார்த்தனர். ஒரு இளைஞனை தேர்வு செய்தனர். அந்தபெண் எல்லோரிலும் சிறந்தவன், உயர்ந்தவனைத்தான் மணந்து கொள்வேன் என கூறிவிட்டாள். அப்படி ஒருவனைத் தேடமுற்பட்டாள். அரசன் பல்லக்கில் வர அவனே உயர்ந்தவன் என நினைத்தபோது, அரசன் பல்லக்கிலிருந்து இறங்கி அவ்வழிவந்த துறவியை வணங்க, துறவியே சிறந்தவன் என நினைத்து அவரைத் தொடர்ந்தாள். வழியில் ஆலமரத்தடியில் இருந்த பிள்ளையாரை துறவி வணங்க, பிள்ளையாரே உயர்ந்தவர் என நினைத்தாள்.
அப்போது அவ்வழி வந்த ஓர் நாய் சிலைமீது காலத்தூக்கி சிறுநீர் கழிக்க, பிள்ளையாரை விட தெருநாய் உயர்வா என சிந்திக்க, அந்த நாயை ஒரு சிறுவன் கல்லெடுத்து அடிக்க, அச்சிறுவன் சிறந்தவனா என யோசிக்கும் போது, ‘நாயை ஏன் அடித்தாய்’ என ஓர் இளைஞன் அச்சிறுவனை மிரட்ட, சிறுவன், ‘இனிமேல் இது போன்று செய்ய மாட்டேன்’ எனக்கூறி ஓட, அந்த இளைஞனே சிறந்தவன் என முடிவு கொண்டாள்.
அரசன்- துறவி- பிள்ளையார்- நாய்- சிறுவன்- இளஞன் என முடிவு கொள்ள ஓர் ஆரய்ச்சி அனுபம் அவளுக்கு கிடைத்தது. அவளின் பெற்றோரிடம் அந்த இளைஞனை மணந்து கொள்வதாகக் கூறினாள். பெற்றோர்கள் தங்கள் அனுபவதால் அந்த இளஞனைத்தான் அவளுக்கு மணமகனாக தெரிவு செய்திருந்தினர். ஆக அனுபவத்தின் முடிவு ஒன்றாகவே சரியாக இருக்க வாய்ப்புண்டு. அனுபவ அறிவின் கூற்றுகளை செவி கொடுத்து கேட்டு செயல் படுங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள்.    எப்படி வெற்றி பெற்றவருக்கு பரிசுகள் மட்டுமல்லாமல் சிறப்பு பாரட்டுகள் கிடைக்கின்றன்வோ, அது போன்றே வாழ்வில் போராடி அனுபவங்களைப் பயன்படுத்தி வென்றவனுக்கும் மகிழ்வும் பெருமையும் உண்டு-குருஸ்ரீ பகோரா.

வியாழக்கிழமை, 04 October 2012 11:50

2-1.மனப் பூக்கள்!

மனப் பூக்கள்!


உயிர்கள் தனது கர்ம வினைகளுக்கு ஏற்ப வடிவமும் குணமும் பெறுகின்றன. அந்த குணங்கள் சத்வம்-சாந்தம், ரஜோ-கோபம்/மூர்க்கம், தமஸ்-மந்தம் என மூவகைப்படும். உலகில் தோன்றிய அனைத்தும் இந்த மூன்றுவகைகளில் அடங்கும். இந்த குணங்களில் ஒன்று அதிகமானால் மற்றதை அடக்கியாளும் தன்மை கொண்டவை. மனம் இந்த மூன்றின் கலவை. நாம் சமநிலை தவறுவதற்கு இது ஒரு காரணம்.

ஒவ்வொருவரும் நமது உடலையும், மனதையும் தூய்மையுடன் வைத்துக் கொள்ள வேண்டும். உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருத்தலை ‘ஷௌச’ எனக்குறிப்பிடுகின்றது மனுதர்ம சாஸ்திரம். ஆரோக்கியத்துடன் உடலை தூய்மையாக வைத்துக் கொண்டாலும், ஆரோக்கியமில்லா உணவை உற்கொண்டால் உடலின் ஆரோக்கியம் கெட்டுவிடும்.                                                                            உடலை தாக்கும் நோய்களிலிருந்து காக்க நல்ல முறையான உணவை உட்கொண்டு உடல் சுத்தத்தை பேண நினைக்க வேண்டும். முறையான தேகப்பயிற்சி, நல்ல சீராண உணவு, போதுமான ஓய்வு கொண்டு வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.
இரண்டு நண்பர்கள். ஒருவர் எப்போதும் எதையாவது உண்ணுபவர்- குண்டானவர். இன்னொருவர் தேவைபடும்போது அளவாக உண்ணுபவர்-ஒல்லியானவர். இருவரும் பயணம் மேற்கொண்டனர். யாத்திரை சென்றபோது உளவாளிகள் என்று சந்தேகப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். உணவின்றி சிறையில் அடைக்கப்பட்டனர். உண்மை விபரம் தெரிந்து விடுவிக்க வந்தபோது எப்போதும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர் ஏதுமின்றி சில நாட்கள் இருந்ததால் இறந்து விட்டார். தேவைப் படும்போது அளவாக உண்ணுபவர் உயிருடனிருந்தார். உணவில் ருசியை சீராகத் தேடி அளவாக உண்பவர்கள் வாழ்வில் சலிப்படைவது இல்லை.
அதற்கு நம் மனத்தை செம்மையாக தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். உனது மனம்தான் உனக்கு எதிரி, நண்பன் எல்லாம். நல்ல மனம் கொண்டவன் பார்ப்பது செய்வது எல்லாம் நன்மையானதாகவும் தீய மனம் கொண்டவன் செயல்கள் தீமை நிறைந்ததாகவும் தோன்றும். மேலும் நம் கர்மாவால், தீய எண்ணங்கள், அதன் செயல்களால், மற்றவர்களுக்கு தீங்கு இழைத்தலாலும் ஏற்படும் தாக்கங்கள் உங்கள் உடலுக்கு பலவித தீங்கு விளைவிக்கும். தீய எண்ணங்கள் மனநோய்க்கு அடிப்படையாகும்.
ஒரு பலூனுக்குள் கற்றை நிரப்பினால் அது நிலத்தைவிட்டு உயர்கின்றது. அதே பலூனில் நீரை நிரப்பினால் அது நிலத்துடன் இருக்கும்.  இரும்பு கப்பலாக வடிவமைக்கும்போது அதன் வடிவமைப்பு அதை நீரில் மிதக்கச்செய்கின்றது. இதைப்போன்றே நம் மனதையும் வடிவமைக்கவேண்டும். நல்ல எண்ணங்கள் உங்களை உயர்த்தும். தீய எண்ணங்கள் உங்களின் நலனுக்கு உதவாது. எதிர்மறையான செயல்கள் நடைபெறும்.
எதிர் மறை எண்ணங்கள் இல்லா மனமாகவும், நேர்மறை எண்ணங்கள் நிரம்பிய மனமாகவும் இருத்தல் சிறப்பு. மனதில் தோன்றிய தீய எண்ணங்களை, நம்மைவிட மேலானவர்கள், அறிஞர், ஞானியர் உதவியுடன் அழிக்க முயற்சிக்க வேண்டும். அவர்களின் அறிவுரைகளை படித்தோ, கேட்டோ மனம் தெளிவுறச் செய்யலாம்.
கண்ணபிரான் ஒர் சமயம் துரியோதனன், தர்மர் இருவரையும் நல்லவன் ஒருவரையும், தீயவன் ஒருவரையும், அழைத்து வரச்சொன்னார். சில நாள் கழித்து அவர்கள் கிருஷ்ணரைச் சந்தித்தபோது துரியோதனன் கூறினான், “இவ்வுலகில் நல்லவன் ஒருவன்கூட அகப்படவில்லை, எல்லோரும் ஒருவகையில் தீயவரே!” என்றான், தருமர், “ஒரு தீயவர்கூட தெரியவில்லை, எல்லோரும் ஒரு வகையில் நல்லவரே!” எனக் கூறியதாக புராணம் தெரிவிக்கின்றது.
இதிலிருந்து தீய எண்ணம் கொண்ட துரியோதனனுக்கு, எல்லோரும் தீயவராகவும், நல்ல எண்ணம் கொண்ட தருமருக்கு, எல்லோரும் நல்லவராகவும் தெரிகின்றனர் என்றால் அது உண்மையில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். இருந்தும் தருமருக்கும், துரியோதனனுக்கும் எப்படி அவ்வாறு தோன்றியது என்றால் அது அவர்தம் மனநிலையைப் பெறுத்த எண்ணங்கள்.
உலகம் கண்ணாடி போன்றது. கண்ணாடி தன் முன்னே உள்ள உருவத்தைப் பிரதிபலிப்பது போல உங்கள் மனம் நல்ல எண்ணம் உடையவராக நீங்கள் இருந்தால் அதில் உலகில் நீங்கள் சந்திக்கும், மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாகவும் நன்மை செய்பவர்களாகவும் தெரிவர்!
உங்கள் மனம் தீய எண்ணங்கள் நிறைந்தவையாக இருந்தால் அதில் இவ்வுலகில் நீங்கள் சந்தித்த, சந்திக்கப்போகும் மனிதர்கள் எல்லாம் உங்களுக்கு சந்தோஷம் தந்து உங்கள் தீயசெயல்களுக்கு உதவி செய்யும் நல்லவர் (கொடியவர்) களாகவும், நன்மை(தீமை) செய்பவராகவும் தெரிவர்! அவையெல்லாம் சந்தோஷம் என நீங்கள் நினைத்தால் அது உங்கள் கர்மபலன். அதிலிருந்து விடுபட முயற்சியுங்கள்.
தரமான விதையை வளமான நிலத்தில் விதைத்து விட்டோம் என எந்த விவசாயியும் சும்மா இருந்துவிடுவதில்லை. அவ்வப்போது உரமிடுதல், களை எடுத்தல், பாதுகாப்பாக வேலியிடுதல் போன்று செய்து கொண்டேயிருந்தால்தான் விளைச்சலில் வெற்றி காணமுடியும். அதேபோல் மனதில் தோன்றும் வேண்டாத தீய எண்ணங்களை களையெடுப்பதுபோல் அவ்வப்போது களைந்துவிட்டால்தன் மனம் வெற்றிக்கு வழிகாட்டும்.
மனதில் துவேஷமும், சுயநலமும் நிறைந்திருந்தால் உங்கள் மனம் என்றும் சுத்தமானதாக இருக்காது, உடலும், உள்ளமும் தூய்மையுடனிருந்தால் மனமும், உடலின் ஆன்மாவும் இசைந்து வாழ்தல் இனிதாகும். உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையே ஓர் அதிசய உறவு உண்டு. சரியாக கவனித்தீர்களானால் உங்கள் மனதிற்குள் எதிர்மறை செய்திகள் புகும்போது உடலிருந்து ஓர் அதிர்வலை உண்டாகி அந்த செய்திதனை ஏற்க மறுக்கும்.
உடலின் இந்த சக்தி ஒன்றை எதிர்க்கும்போது உங்கள் உணவுகூட ஜீரணமாகமல் போகும் வாய்ப்புண்டு. உடலுக்குள் ஆரோக்கியமான சக்திகள் தடம் புரண்டு இடம் மாறி ஏற்றதாழ்வுகளுடன் செயல்பட்டால் உடலில் எந்த பகுதியிலும் எந்த கோளாரும் ஏற்படும். உடல் நலமும் மனநலமும் ஒன்றினைந்து பேனப்படல் வேண்டும்.
பெரும்பாலான மனிதர்கள் தங்களின் பிறவியின் பயனை புரிந்து கொள்வதில்லை. அவர்கள் தானாக செயல்பட முடிவதில்லை. பெற்றோர்கள், சுற்றத்தினர் அவர்களை அலைக்கழிப்பதால், அவர்கள் வாழ்வில் ஒர்ப்பிடிப்பின்றி அடுத்தவர் போக்குக்கு செயல்பட பழகிவிடுகின்றனர்.
அதனால் இப்பிறவியில் அவர்கள் யாராக இருக்கின்றார்களோ அதில் அவர்களுக்கு வெறுப்பும் சலிப்பும் ஏற்படுகின்றது. அப்பிறவி நினைத்தபடி வாழ விடாமல் இந்த சமூகம் சுற்று சூழலுக்கு அவரை மாற்றுவதால் அதற்கு சுயசந்தோஷம் இருப்பதில்லை. இந்த வெறுப்பு அவர்மீதும், சமூகத்தின்மீதும் விழுகின்றது. அதனால் அவர்கள் ஜடமாக உலவுகின்றனர். மனதில் எந்த அமைதியும் இல்லை. சந்தோஷமும் இல்லை. எனவே ஆன்மாக்களை சுயமாக செயல்பட அனுமதியுங்கள்.
அலைமோதும் கடலில் எப்படி அல்லி வளரமுடியாதோ, அதைப்போல அலைபாயும் மனதில் அமைதி நிலவாது. தீய, பிறருக்கு தீமை விளைவிக்கும் கொடிய எண்ணங்கள் மனதில் அமைதியை ஏற்படுத்தாது. அந்த எண்ணங்களின் கொந்தளிப்பில் நல்ல எண்ணங்கள் அமுங்கிவிடும். நம் மனதை சுத்தப் படுத்தி, தூய்மையாக வைத்திருங்கள். அங்கு நிம்மதியும், சந்தோஷமும் நிரம்பி வழிய மிகமிக அதிக வாய்ப்புண்டு. மனதில் தோன்றும் கவலைகளும் வருத்தங்களும் பறவைபோல நம் மனத்திலிருந்து பறந்துவிட வேண்டும். அவைகளை அங்கே தங்கவிட்டால் பறவைகள்போல கூடுகட்டி குஞ்சு பொறித்துவிடும்.
மனத்தில் தோன்றிய வேண்டாத எண்ணங்களை வலுக்கட்டாயமாக நீக்கமுடியாது. அதற்கு முயற்சி செய்தால் அந்த எண்ணங்களே அதிகமாகி அளவில் பெருக வாய்ப்புண்டு. அது வீண்முயற்சி. ஒன்றை நீக்கின் புதியதாய் ஒன்று சேரும். எனவே வேண்டாத எண்ணங்களை நீக்கவேண்டும் என்பதற்காக சிந்தித்து காலத்தை விரயம் செய்வதைத் தவிர்த்து, முற்றிலும் புதிய நல்லெண்ணங்களை, உயர்ந்த ஒன்றில் கவனம் செலுத்துங்கள்.
பழையது முற்றிலும் மறந்து காணாமல் போய்விடும். மனிதனின் இயல்பான மனநிலை இது. செயலில் முழுக்கவனம் இருந்தால் மற்றது மறக்கப்படும். உற்சாகமோ சலிப்போ எதுவாக இருந்த போதும் அது மனதின் பிரதிபலிப்பேயாகும்!
பொதுவாக ஒருவர்மேல் மற்றவர் கொண்ட பொறாமைகள், தோஷங்கள் நீங்க திருஷ்டி சுற்றி போடுகின்றோம். அது சுண்ணம்பு மஞ்சள் கலந்த சிகப்பு நிறமாக இருக்கும். அந்த நிறம், அதனுடன் சேர்ந்த மற்றபொருட்கள் ஆன்மாக்களின் மனத்தில் ஓர் கலவரமான எண்ணத்தைத் தோற்றுவிக்கும். அந்த எண்ணமானது இதற்குமுன் அவர்பால் கொண்ட பொறாமை எண்ண அதிர்வுகளை பின்னுக்குத் தள்ளிவிடும். அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்துவிடும். நமக்கும், காவல் தெய்வங்களுக்கும் தோஷம் நீங்கவே நாம் பலி கொடுக்க நினைக்கின்றோம்.
வாழ்க்கையில் ஆனந்தம்தான் முக்கியம் என நினைக்கும் ஆன்மாக்களே! அதுபற்றிமட்டுமே உங்கள் மனம் சிந்திக்கட்டும்! செயல்படட்டும்! வெறுப்பு, போராசை, கோபதாபங்கள் இன்றி மனம் சுத்தமாக இருக்கட்டும்! மனம் ஆசை குப்பைகள் நிறைந்து கனமாகிவிட்டால், நீரில் மூழ்குவதுபோல வாழ்வின் துயரங்களில் மூழ்கும். தெளிவுடன் இருந்தால் கணமின்றி நீரில் நீச்சலடிப்பதைப்போல் வாழ்வில் வெற்றிகரமாக முன்னேறலாம்.
வேதங்கள், புராணங்கள், இலக்கணங்கள், சாஸ்திரங்கள், வித்தைகள், மந்திரங்கள் எல்லாம் அறிந்திருந்தாலும் மனதும் மனதின் எண்ணங்களும் பெரியது. மனதால் நினைத்துதான் செயலில் இறங்குகின்றோம். மனமே நம் உலகம். அதை நேசியுங்கள். சுத்தமாக வைத்திருங்கள். ஓர் ஆன்மாவின் உடல் பெறக்கூடிய சுகங்களில் உயர்ந்தது, சிறந்தது மனத் திருப்தி.
எங்கே மனம்:  நாம் மனதை நம்பி வாழ்கிறோம். அதுசரி! அந்த மனம் எங்கே இருக்கின்றது? உடலில் எந்த உருப்பு மனம் எனச் சொல்லப்படுகின்றது? நம் எண்ணங்கள் தோன்றும் இடமா? தோன்றிய எண்ணங்களை அலசிப்பார்க்கும் இடமா? மனம் என்பது என்ன? நினைவுகளைத் தக்கவைக்கும் இடமா? இல்லவே இல்லை? மூளையின் பதிவுகளால்தான் இந்த மனம் என்பது உருவாக்கப்படுகின்றது. புலன்களால் உந்தப்பட்ட விசயங்களை புத்தியால் நினைவுகூறி மனம் வாழ்கின்றது.
நினைவுகளை நீக்கிப் பார்க்கும் போது மனம் என்ற சொல்லுக்கு பொருளே கிடையாது. அது வெற்றிடமாகிறது. ஆன்மாவின் மறைவிடமாகி நினைவுகளின் சொரூபமாகிறது. உடம்பின் அசைவுக்கு இதயம். இதயத்தின் அசைவுக்கு உயிர்துடிப்பு. மூளையின் அசைவே மனம். சூட்சமம் மிக்கது. மிக்காருமில்லை!  ஒப்பாருமில்லை! எனலாம், மனம் ஆன்மாவின் உறைவிடம் உடல் செயல் பாடுகளுடன் இருக்கும்வரை.
எவ்வளவு சிறப்பாக அழகாக பெரிதாக அரண்மனை போன்ற வீட்டைக்கட்டினாலும் நாம் உபயோகிப்பது அதனுள்ளே உள்ள வெற்றிடங்களைத்தான். அறைகள் சுத்தமில்லாவிடில் வெளிஅழகினால் பிரஜோனமில்லை. அதுபோலவே நமது உடல் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும், அழகாக இருந்தாலும், நமக்கு ஆற்றல், நம்பிக்கைத் தருவது உள்ளிருக்கும் மனம்தான். அதில் தோன்றுகிற எண்ணங்கள், அதன் மூலம் நடைபெறும் செயல்களைப் பொறுத்தே நம் குணம் எடைபோடப் படுகின்றது. சமூகத்தால் மதிப்பீடு செய்யப்படுகின்றது.  
அந்த மனம் எங்கே இருக்கின்றது. நம் உடலில் இல்லாத ஒன்று. முளையின் எண்ணங்களை பிரதிபலிக்கும் ஓர்மாயத்திரை. அது ஓர் அறை. மூளையின் நினைவுப்பகுதியில் தோன்றும், உருவாகும் எண்ணங்களுக்காக, உருவாக்கப்பட்ட ஓர் மாயஅறை. நாம், என் மனது கேட்கமாட்டேன் என்கிறது என்றும், என்மனது சொல்கின்றது என்றும் கூறுகிறோம். ஆனால் மனம் என ஒன்று நம் உடலில் இல்லை. இல்லாத உறுப்பைத்தான் நாம் பிரதானப்படுத்திச் சொல்கின்றோம். அழகிய வீட்டின் உள்ளே சுத்தமாக வைத்திருப்பதுபோல் நம் உடலின் மனதை சுத்தமாக்கி செயல்படவேண்டும் அதுவே நன்மைபயக்கும்.
மனம், ஆன்மா இரண்டும் உடலின் எங்கும் யாராலும் காணமுடியாதது. உணர்ந்துதான் கொள்ளமுடியும். ஆனால் உடல் உறுப்புகளைப்போல் பயிற்சி மூலம் மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியும். அந்தக் கட்டுப்பாடு நம் விருப்பத்திற்கு ஏற்ப மனதை செயல் படவைக்கும். ஆனால் நம் கட்டுப்பாட்டில் உள்ள மனம் தறிகெட்டு ஓடும் காளையைப் போன்றது. எப்போதும் சரியான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மனதின் எண்ண ஓட்டங்களை எப்படி கையாள்வது என புரியாத ஓர் ஆன்மாவின் உடலுக்கு உணரமுடிவதெல்லாம் சந்தோஷமற்ற நிலைதான். மனம் பல அற்புதங்களைச் செய்விக்க வல்லது. அது வேதனைகளையும், துயரங்களையும், துன்பங்களையும் தோற்றுவிக்கிறது என்றால் அதற்கு முதன்மையான காரணம் நீங்கள்தான்.
மனித வாழ்வு என்பது தென்றலில் மட்டுமல்ல, காற்றில் கூட வரும் மலர்களின் வாசம் போன்று சுகந்தமானது. அதை ரசித்து அனுபவிக்க வேண்டும். அதை விடுத்து காற்றில் மிதக்கும் நாற்றங்களைப் போல் வேதனைகள மட்டும் அனுபவிக்கத் தெரிந்தவர்களாக இருந்து என்ன பயன்! வேதனை நீக்கி விழிப்புடன் செயலை எதிர்கொண்டால் ஆனந்தத்தை ருசித்து உணர்வீர்!
எண்ணங்கள்: இந்த மனம்தான் ஓர் ஆன்மாவை, ஆன்மா கூடிய உடலை, நம்மை எண்ணங்கள் கொண்டு நல்லவனாகவும், கெட்டவனாகவும் நமக்குள்ளே சிக்கலை ஏற்படுத்தி, நம்முள்ளே ஓர் குருஷேத்திரத்தை உருவாக்கி நம் வாழ்வில் போராட்டங்களை சந்திக்க வைக்கின்றது. ‘தானே தனக்கு பகைவனும் நண்பனும்’ என்கிறார் திருமூலர். கோபம், துக்கம், பொறாமை, போட்டி, சிரிப்பு, மகிழ்வு, சந்தோஷம், ஆனந்தம் ஆகிய எல்லாவற்றிற்கும் இதுதான் காரணம். எண்ணங்கள் ஆரம்பிக்கின்ற, உதிக்கின்ற இடத்தில் மனது உருவாகின்றது. அதற்கென்று ஓர் இடமில்லை.
மனதில் கருணை, அன்பு, அடக்கம், பொறுமை, தூய்மை, பற்றற்றல் முதலான நல் எண்ணங்களுடன் கோபம், குரோதம், பொறாமை, பேராசை, அறியாமை போன்ற தீய எண்ணங்களும் செழித்து வளர்ந்த பயிர்களைடையே களைகள் தோன்றுவதுபோல் தோன்றினால் அவற்றை களைஎடுத்து பயிர்களைக் காப்பதுபோல் நல்லெண்ணங்களை பாதுகாக்க பழகவேண்டும்.
பச்சை நிறப்பேனாவில் சிகப்பு மையிட்டு எழுதலாம். எழுத்தின் நிறத்தை பேனாவோ அதன் நிறமோ நிர்ணயிப்பதில்லை. அதில் ஊற்றும் மையின் நிறம்தான் உணர்த்துகின்றது. அப்படித்தான் நாம் செய்யும் செயல்களும் நம் மனத்தில் தோன்றும் எண்ணங்களின் தன்மையைப் பொறுத்து நல்லவை என்றும் தீயவை என்றும் நிறமாகிறது.
நிலையான மனம் என்பது நிலையான உறுதியான எண்ணங்கள். எண்ணங்களில் உறுதியின்றி சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தால் அந்த சலனம் செயல்களில் பிரதிபலிக்கும். எதைத் தொலைத்தோம், எனத் தெரியாமல் தேடுவீர். எதை அடைய வேண்டும் என்பதும் அரியாதவராகிவிடுவீர். தேடுதலில் உங்கள் காலம் விரையமாகும். உறுதியான திடமான இறுதியான எண்ணங்களே வேண்டும் அதற்கு மன அமைதி மிக மிக உதவி புரியும்.
நம் உடலில் உறுப்பாக இல்லாத மனமும், அதில் தோன்றும் எண்ணங்களும், நம்பிக்கைகளும் ஒன்றோடு ஒன்றாக இனைந்தால்தான் நன்மை பயக்கும். நடக்காது என்ற நம்பிக்கையுடன் எண்ணங்களை வளரவிட்டு பயனில்லை. நடக்கும். நடக்கவேண்டும் என்ற உறுதியுடன் எண்ணங்களை கோர்த்து செயல்படுத்தத் துவங்கினால் காற்றாடி போன்று உயரப்பறக்கலாம்.
வெறும் காகிதம், நூல், குச்சி இவைகள் காற்றடித்தால் சிறிது தூரம் நகர்த்தப்படும். ஆனால் இவைகளை ஒன்றாக்கினால் பட்டமாகி உயரப்பறக்கும். அதுபோன்றே நமது நம்பிக்கையும் எண்ணங்களும், சொல்களும், இதைப்புரிந்து கொண்டார் வெற்றி கொண்டவராவர். வாத்தியங்களையும் இசைக்கருவிகளையும் யார் தட்டினாலும் ஒலி எழும்பும். ஆனால் அந்த ஒலியை இனிய இசையாக மாற்றத் தெரிந்தவனே கலைஞன். அப்படித்தான் மனதில் தோன்றும் எண்ணங்களை முறைப்படுத்தி செயலாக்கம் கொள்ளும்போதுதான் அதன் சக்தி தெரியவரும். வெற்றிக்கனி கிட்டும்.
உலகில் நமது தெளிவான சிந்தனை அறிவினால் தான் எல்லாவற்றையும் புரிந்து பிர்ச்சனைகளை கடந்து வாழமுடிகின்றது. அப்படிப் புரிதல் இல்லாதவர்கள் பிரச்சனைகளில் சிக்கி வாழ்வின் போராட்டத்தில் தவிக்கின்றார்கள். ஒர் மனித உடலில் அறிவு எனப்படுவது அவனின் சிறந்த எண்ணங்களாகும். அதனால் அதன் வெற்றியுமாகும். அதை ‘ தீ ’ அறிவின் தூய்மை என்கிறது மனுதர்ம சாஸ்திரம். அது நமக்குள்ளே இருக்கும் தீயாகும். ஓர் ஒளியாகும். அது நம்மின் பெரிய சக்தியாகும்.
அந்த சக்தியை ஆசை, கோபங்கள் சூழாமல் சுத்தமாக வைத்துக் கொண்டால் உலகின் எல்லவற்றையும் விரைவாக புரிந்து, தெளிவாக செயல்படமுடியும். தோன்றும் பிரச்சனைகளை எளிதில் சமாளிக்கலாம். செய்யமுடியாது என நினைத்ததை இலகுவாக செய்யமுடியும். அறிவுடன் தூய்மையும் இனைந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் மனதின் எண்ணங்கள் அமைதிடன் இனைந்து பிரபஞ்சத்தின் உண்மைகளை உணர்ந்து செயல்படும்.
ஒரு கண்ணாடி ஜாடியில் கொஞ்சம் மணலைவிட்டு, பின் கற்களைப் போட்டு பின் நீர் ஊற்றினால் அது நிரம்பிவிடும். ஆனால் கொஞ்சம் யோசனை செய்து செயல்பட்டால் இன்னும் கொஞ்சம் மணல், கற்கள், நீர் ஆகியவைகளை அந்த ஜாடி ஏற்றுக்கொள்ளும் என்பதுதான் சிறப்பு. இது எப்படி சாத்தியமாகும்.
முதலில் பெரியகற்களையும் பின் சிறியகற்களையும் அதன்பின் மணலைபோட்டு குலுக்கினால் குறுகிய இடைவெளிகளில் மணல் நிரம்பும். பின் நீர் ஊற்றினால் மணலும் கற்களும் முடிந்த அளவு நீர்கொள்ளும். இப்போது அளவிட்டால் முதலில் செய்ததைவிட இரண்டாம் முறையில் மணல், நீர், கற்கள் அதிகம் பிடித்திருக்கும். இதன்மூலம் ஓர் உண்மையை புரிந்து கொள்ளவேண்டும்.
நம் உள்ளே தோன்றும் எண்ணங்களை வரிசைப்படுத்தி அதில் முதலில் எதை செய்வது என முறைப்படுத்தி தீர்மானத்துடன் செயல்பட்டால், நம் எண்ணங்கள் செயலாக்கத்தில் சிறப்பான வெற்றியை காணும். அது நமக்கு மனநிறைவு தந்து மகிழ்ச்சிதரும். மகிழ்ச்சியை அடைவதுதான் நம் வாழ்வின் குறிக்கோள். ஆகவே கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தி நன்முறையில் செயல்பட்டு வெற்றி கொண்டு மகிழ்வது உங்களின் செயல்களில்.
எண்ண அலைகளுக்கும் ஆற்றல் உண்டு. எண்ணங்கள் அலைகளாக மாறி நம் உடலிருந்து வெளியேறி நம்மை சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் கலந்து அப்படியே எங்கும் பரவி விடுகின்றது. யாரைப்பற்றி நினைத்தோமோ, சிந்தித்தோமோ, திட்டினோமோ, மகிழ்வுற்றோமோ அனைத்தும் அந்தந்த நபரின் ஆன்ம உடலைச்சுற்றி பரவிக்கிடக்கின்றது. அந்த ஆன்ம உடல் சமநிலையடையும்போது அது தன்னைச்சுற்றியுள்ள அலைகளை கிரகித்து அந்தந்த அதிர்வுகளுக்கு ஏற்ப தாக்கம் கொள்கின்றது. உணர்வு பூர்வமாக இதை உணரமுடியும்.
“மன்னன் ஒருவன் வீதியுலா வரும்போது மக்கள் அனைவரும் வணங்கினர். சந்தன வியாபாரி ஒருவனும் வணங்கினான். அவனிடம் நிறைய சந்தனமரங்கள் விற்பனையின்றி இருந்தன. அந்த வருத்தத்தில் யாராவது பெரியமனிதர்கள் இறந்தால்கூட எரிப்பதற்கு சந்தன மரங்கள் வாங்குவர் என வருந்திக்கொண்டே வணங்கினான். அதன் தாக்கம் அவன் வணங்கியபோது மன்னருக்கு என்னவோ போலிருந்தது. அவனைப் பார்த்து எரிச்சலடைந்தார்.
ஓரு நீதிமான் காரனமின்றி கோபம், எரிச்சல் கொள்ளக்கூடது என்ற நினைவிலிருந்து, இது பற்றி அமைச்சரிடம் கூறினார். உண்மைகளை விசாரித்து அறிந்த அமைச்சர் வியாபாரியிடமிருந்த சந்தனமரங்களை அரசரின் பிறந்த நாள்விழா யாகத்திற்கு என வாங்கினார்.  

மகிழ்வுற்ற வியாபாரி அடுத்தநாள் அரண்மனைக்கு சென்று, அரசரின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் சந்தனமரங்கள் விற்பனையாகவேண்டும் என்ற நினைப்பில், அரசர் பல்லாண்டு வாழ்க! என வணங்கினான். அன்று அவனைப் பார்த்ததும் அரசருக்கு எரிச்சலுமில்லை, கோபமும் வரவில்லை. இனிய புன்முறுவல் கொண்டார். இது பற்றி அமைச்சரைக் கேட்டபோது அவர் நடந்ததைக் கூறினார்.”
எனவே நம்மைப்பற்றிய பிறரது நல்ல எண்ணங்கள் நமக்குள் மகிழ்ச்சியும் தீய எண்ணங்கள் வருத்தத்தையும் ஏற்படுத்தும். அந்தளவிற்கு எண்ணங்களின் அலைகள் நம் மனதை பாதிக்கின்றன. மற்றவர்களையும் பாதிக்கும். சொற்களில், செயல்களில் வன்முறையுடன் வாழ்பவர்கள் தாங்கள் சைவம் என்று சொன்னால்கூட பின்னாளில் அவர்கள் கூறிய சொற்களை அவர்களே உண்ண வேண்டி இருப்பதால் அவர்களும் அசைவம்தான். சைவம் அசைவம் என உணவில் இல்லை. சிகப்பு நிறம் கொண்ட இரத்தம் ஓடும் உயிரினங்கள் மற்ற உயிர்களைப் பிடித்து தின்ன ஆர்வம் காட்டுகின்றன. அது வக்ர எண்ணங்களை அதிகம் தூண்டுகிறது.
மான், குரங்கு, முயல் போன்றவைகள் சிகப்பு ரத்த ஓட்டத்துடனிருந்தாலும் அவை சைவ உணவுகளை அதாவது சிகப்பு இரத்தம் இல்லா பொருட்களை உணவாக கொள்கிறது. ஆனால் மரம், செடி, கொடிகளுக்கும் இரத்த ஓட்டம் கொண்டுதான் அவைகள் உயிர்வாழ்கின்றன. ஆனால் அந்த இரத்தம் வெண்ணிறமுடையது.
பொதுவாக இரத்த ஓட்டங்கள் வெள்ளை அல்லது சிகப்பு நிறம் கொண்டுள்ளது, அவ்வளவுதான். உயிர் உள்ள இரத்தம் ஓடும் மரம், செடி, கொடிகளின் பொருட்களை சைவம் எனக்கூறினாலும் அதுவும் அசைவம்தான். அவை உயிர் உள்ளவற்றின் அங்கங்கள். அந்த பொருட்களும் வக்ர எண்ணங்களைத் தூண்டுபவையே! அதனால் மனிதன் உண்ணும் உணவில் ஏதுமில்லை. அவன் எண்ணும் எண்ணங்கள், அது நடைபெற முயற்சிக்கும் வழிமுறைகள்தான் வக்கிரமானவையாக இருக்கின்றது.  
அதனால் நல்ல வக்ரமில்லாத எண்ணங்களுக்காக மனதை பக்குவப்படுத்திக் கொள்ளல் வேண்டும். அதற்காக மனதை காலியாக வைக்க வேண்டும். தீய எண்ணமின்றி நல்லெண்ணங்களை நிரம்பி வழியச்செய்வோம். நல்லவண்ணம் வாழ உன்னை உன்னுள் தேடு.
தன் எதிர்கால பலன் பற்றித் தெரிந்து கொள்ள நினைத்தவன் ஓர் ஜோசியரிடம் சென்று தன் ஜாதகத்தினை கொடுத்தான். அதைப் பார்த்த ஜோதிடன் திகைத்து, நான் உன் ஜாதகத்தைக் கணித்து வைக்கிறேன். நீ இரண்டு நாள் கழித்து வா. எனக்கூறி அனுப்பினான். வேலைத் தேடி சென்றவன் வேலை ஏதும் கிடைக்காததால் சலிப்புடன் ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
புழுதிக்காற்று வீசவே அருகிலிருந்த பாழடைந்த மண்டபத்திற்குள் சென்று ஒளிந்தான். அங்கு ஓர் சிவலிங்கம் இருக்கக் கண்டவன், அடடே, ஒரு கோவில் இப்படி பாழடைந்து விட்டதே. என்னிடம் பணம் வசதியிருந்தால் இந்தக் கோவிலை சீர்படுத்துவேன் என எண்ணினான். மனதில் கோவிலை சீரமைக்க திட்டம் போட்டான். அப்போது மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. மின்னலடித்தது.
அப்போது மண்டபத்தின் மேல் பகுதியில் பாம்பைப் பர்த்து பயந்தவன் நிலை தடுமாறி வெளியே விழுந்தான். எதிர்பாரா விதமாக மண்டபமும் சரிந்தது. இவன் ஒதுங்கியிருந்த இடத்திலிருந்து ஓர் கொடிய நாகம் ஊர்ந்து சென்றது. ஒருகணம் நிலைகுலைந்து போனான். இன்னும் சிறிது நேரம் இருந்தால் பாம்பு கடித்தோ, அல்லது மண்டபத்தின் இடிபாடுகளில் சிக்கியோ மரணம் அடைந்திருக்க வேண்டும் என நினைத்து அங்கிருந்து அகன்றான்.
மறுநாள் இவனைக்கண்ட ஜோதிடருக்கு பேயைக்கண்டது போலாயிற்று. இவனிடம் நேற்று நடந்தது என்ன எனக் கேட்டார். விளக்கமாக கேட்டவர், உனக்கு நேற்றுடன் ஆயுள் முடிந்துவிட்டது. அதை எப்படி உனக்குச் சொல்வது என்பதால்தான் உன்னை இன்று வரச்சொன்னேன். நீ ஒளிந்திருந்தபோது உண்மையாகவே கோவிலை கட்ட நினைத்த நல்ல எண்ணங்களே உன்னை காப்பாற்றியிருக்கின்றது என்றார். நல்லது நினைத்தாலே போதும் நன்மை பெறுவீர்.‘அகில உலக உயிர்களும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும்’ என்பதே அறத்தின் முத்திரையான வாக்கியம்.
நீலகண்ட தீட்சதர் சிறந்த சிவபக்தர். எப்போதும் எந்நிலையிலும் சிவநாமம் சொல்ல விரும்பினார். அந்த எண்ணம் அவரை முற்றிலுமாக ஆட்கொண்டது. அதை பரிட்சித்து பார்க்க, சிந்தையை கலக்கும் ஊமத்தங்காயை உட்கொண்டதன் விளைவாக, மனநலம் பாதித்து சுய நினைவின்றி இருந்தபோதும் சிவ நாமத்தை சொல்லும் பழக்கத்தைவிட வில்லை. அந்நிலையில் சிவதுதி ஒன்றை இயற்றியுள்ளார்.
அவர் மேல் அன்பு கொண்டவர்கள், மாற்று மருந்து கொடுத்து சிந்தை தெளியவைத்துள்ளனர். எதற்காக இந்த நிகழ்வு என்றால் உங்களை ஆட்கொள்ளும் சிந்தனை எண்ணங்கள் நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் உங்களை செயல்படவைக்கும். இது போன்றதே மனநிலை பாதிக்கப் பட்டோரின் செயல்கள், அவர் அடிமனதில் பதிந்த எண்ணங்களின் வெளிப்பாடேயாகும்.
நமது மனதில் தோன்றும் எண்ணங்கள் வலிமையடைந்து பதிந்து விட்டால், அது என்றும் அந்த ஆன்மாவை, ஆன்மாவின் உடலை ஆட்டிப் படைக்கும் தன்மை கொண்டவை-குருஸ்ரீ பகோரா.

வியாழக்கிழமை, 04 October 2012 11:42

1-9.கர்ம-பயணம்!

கர்ம-பயணம்!  


எல்லாவகையிலும் உறுதியான ஓரு வீடு ஒர் காலத்திற்குப் பின் ஓர்நாள் இடிந்து விடும். கடந்த இரவு மீண்டும் திரும்புவதில்லை. வேறு இரவு வரும், ஆனால் அது கடந்த இரவாக இருக்காது, அமையாது. ஓடும் நதிகள் உற்பத்தியான இடத்தை சேர்வதேயில்லை. எங்கு புறப்பட்டாலும், எப்படிச் சென்றாலும் அது சேருமிடம் கடல்! நதியின்பயணம் வாழ்க்கை பயணத்திற்கு உதாரணமாகும்.

சூரியனின் வெப்பக் கதிர்கள் ஒருபுறம் பூமியின் ஜீவராசிகளின் இயக்கத்திற்கு உதவி புரிந்தாலும், இன்னொருபுறம் பூமியில் நீரை வற்றச் செய்வது போல, காலச்சக்கரம் புது ஆன்மாக்களை உருவாக்கினாலும், மனிதனின் ஆயுள் நாட்களை குறைத்துக் கொண்டிருக்கின்றது.
கடந்த காலத்தை பற்றியும், இறந்தவர்களைப் பற்றியும், இருப்பவர்கள் நினைத்தும், சிந்தித்தும் என்ன பயன்? எதிர் காலம் பற்றி நினை. உன் வாழ்வின் காலச்சக்கரம் பற்றி நினை. கடந்த இரவு, கடலில் சேர்ந்த நீர் இவை பற்றி சிந்தியாதே! எங்கு எதை நோக்கி பயணம் செய்கின்றாய்! அதன் பலனை அடைய முயற்சி செய். நீ முயற்சிக்காவிடினும் காலத்தின் முடிவு பதில் ஒன்றுதான்.
அதை அடைய உன் பயணம் சிறப்பாக இருக்க, பயணத்தில் உன் செயல் பாடுகளால் உன் கர்ம வினைகளின் கடினதன்மை குறைய என்ன வழி என்பதைப் பற்றி நினை. அந்த வழிகளைத் தெரிந்து கொண்டு அதன் படி நடக்க முயற்சி செய். முடிவு ஒன்றாகவே இருந்தாலும், தெரிந்திருந்தாலும் பயணம் சிரமமின்றி சிறப்பான பயணமாக வெற்றியடைய செயல்படு.!
சூரிய உதயம் கண்டால் இன்னொருநாள் குதூகலமாக இருக்கலாம் என்றும், சூரிய அஸ்தமனத்தில் இன்று ஒருநாள் போய்விட்டது, நாளைப் பார்க்கலாம் என்றும் கணக்குப் போட்டு நாட்களைத் தள்ளாதே! இருக்கும் நாட்கள் உனக்குடையது. காலம் பொன் போன்றது. உன் எதிர்கால செயல்களுக்கு உபயோகமாக மாற்ற நினைத்து செயல்படு. நீ இழந்த நாட்களும் நேரமும் திரும்பக் கிடைக்காது. இழந்தது இழந்ததுதான்.
ஒருவனின் கர்மம் முடிந்தபின் அவனைப்பற்றி நினைத்து வருத்தப்படாமல், நிகழ்காலத்தில் உன் கர்மவினையின் பாதிப்புகள் உன்னை அதிகமாக தாக்காமலிருக்க உன் எண்ணங்களைத் தீட்டு. அதற்காக செயல்படு. நீ இப்போது நின்று கொண்டிருக்கும் இடத்தை, சூழ்நிலைகளைத் தாண்டி உன் முன்னோர்கள், பாட்டனார், முப்பாட்டனார் என அனைவரும் சென்றவர்கள்தாம்.
28வது சதுர்யுக சுழற்சியில் கலியுகம்வரை அவர்கள் காட்டிய வழியில் எத்தனையோ உனக்கு பிடித்தமானது, உன் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாய் உள்ளது, அதைத் தேடு! கண்டுபிடி! வழிநட! அது உனக்கு நல்லது. உன் கர்ம வினைகளின் செயல் வேகத்தை தடுத்து ஓரளவாவது உனக்கு நன்மை கிடைக்க வழிவகுக்கும். வல்லவனாக ஆவாய்! சுதந்திர எண்ணங்களும், தேடுதல்களும் இல்லா மனிதனை அவன் வினைப்பயன் வழிநடத்தி அலைக்கழிக்கும்!
அதிலிருந்து தப்பிக்க உனக்கு ஓர் வழித்துணை, முன்னுதாரணம், வெளிச்சம், ஒளிவட்டம் வேண்டும். அதைக் கண்டுபிடி! தேடு! தேடிக்கொண்டேயிரு அதைக் கண்டுபிடிக்கும் வரை.. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், வெற்றிபெறுவர். இது என் செயல். இது என் கர்மம். எவ்வளவு துயரங்கள் நேரிடினும் பின்வாங்கமாட்டேன். வெற்றியை அடையப்போகிறேனா! தோல்வி காணப்போகிறேனா! எனக்குத் தெரியாது. எதைப் பற்றியும் கவலையில்லை. இதுதான் சரி, இதுதான் என் கர்மம், இது என் கடமை, இது என் செயல்பாடு, என்று நியதிகள் வகுத்துக் கொள்ளுங்கள்.
அந்தப் பாதையில், சீரிய வழி என நீங்கள் நினைத்த வழியில் செல்லுங்கள். செயல் உங்களுடையது. முடிவை கர்மத்திடம் விட்டுவிடுங்கள். இது தான் கீதையில் சொல்லப் படுகின்றது. செயலை செய், பலனை கர்மத்திடம் விட்டுவிடு. எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு. செய்வது என தீர்மானித்து விட்டால், அதை செய்துவிடு. யாருக்கு, எதற்கு, ஏன் என்றெல்லாம் சிந்திக்காதே! அதேசமயம் எப்படிப் பட்டவனுக்கு செய்கிறாய் என்று கவனிக்கவும். அதாவது உன் உதவி உண்மையாக வேண்டுபவனுக்கு, தேவைப் படுகிறவனுக்கு செய்யப்பட வேண்டும்.
அவன் நன்றியுள்ளவனா? இல்லையா! என்பது பற்றி எல்லாம் நீ கவலைபட வேண்டாம். உன் கர்மத்தின் பலனால் ஒருவனுக்கு நல்லது செய்யவேண்டிய நிலை ஏற்பட்டால் அதை யாருக்கு வேண்டுமானாலும் செய். அவன் நல்லவனா! கெட்டவனா! என யோசனை செய்யாதே!
நீ செய்யும் நன்மை ஓர் நிலையில் ஒரு காலத்தில் உனக்கு மிகுந்த பலனோடு உன்னை வந்தடையும். அல்லது அது உன் சந்ததிக்கு பயனாகும். அதேபோல் அவர்கள் செய்யும் தீமைகள் அவர்களுக்கு கர்மபலனாக சேர்ந்துவிடும். எப்போது எப்படி என்பதுதான் உனக்குப் புரியாது. தெரியாது. தெரியவேண்டிய அவசியமும் இல்லை.
அடுத்தவர் துன்பப்பட்டு, துயரப்படுவதால் உன் கர்மம் தீர்ந்து விடுமா? இல்லை குறைந்து விடுமா? உன் கர்மபலனால் நீ செய்த நன்மைகளின் கர்மம் உன்னை வந்து சேர்ந்தால் அதனால் ஏற்படும் நன்மைகள் போதும்.
உன் கர்ம யோகங்கள் உன்னோடு முடிந்தால் பரவாயில்லை. உன்னால் அனுபவிக்க முடியாத கர்ம பலன்கள் உன் சந்ததிகளை அடையும். குறைந்த பட்சமாக ஏழு தலைமுறை சந்ததிகள் இந்த சாதக பாதக பலன்களை அவரவர் கர்ம வினைளோடு சேர்ந்து அனுபவிப்பர். இதை உணர்ந்து உன் கர்மபலனின் செயல்பாடுகளை நீ வகுத்துக்கொள். உன் பாதக கர்மபலன்கள் உன் சந்ததிக்கு சென்று சேராமல் பார்த்து செயல்படு.
செய்ய முடிந்த ஒன்றை செய்ய விரும்பாதவன் சமூகத்துரோகி. செய்ய விரும்பியும் செய்ய முடியாதவர்கள் பரிதாபத்திற்கு உறியவர்கள். இப்படி முடியாதவனாகவும், விரும்பாதவனாகவும் இருந்து உனது கர்மத்தை மேலும் மேலும் அதிகப்படுத்திக் கொள்ளாதே! இவ்வாறு விரும்பாததாலும், முடியாததாலும் நடக்கும் நிகழ்வுகளின் கர்மங்கள் பலருக்கு பலவகையான பலன்களை ஏற்படுத்தும்.
எனவேதான் முன்னோர்கள் நீ எவ்வளவு பெரிய செயலை செய்ய நினைத்தேன் முடியவில்லை என வருத்தப்பட வேண்டாம். எவ்வளவு செய்ய முடியுமோ, அவ்வளவு செய். அதுவே உன் கர்மம் என்றனர். வள்ளுவர் “அறஞ்செய விரும்பு” என்றுதான் கூறியுள்ளார். விருப்பத்துடன் ஓர் செயலைச் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த கர்மத்தின் நல்ல பலன்களை நீ அடைய முடியும்.
விரும்புவது என்றால் நல்ல செயலை என்று அர்த்தம் கொள்ள வேண்டும். அடைவது என்றால் தான் அதில் ஆசை, மோகம் எல்லாம் நிரம்பிய கர்மமாகிவிடும். ஆகவே கர்மம் செய்ய விரும்பு! அதை அடைய நினைக்காதே! செயலின் விளைவு நன்மை மட்டும்தான் பயக்கும் என எதிர்பார்த்து செயல் படாதே! இல்லாத ஒன்றை செய்யவில்லை, முடியவில்லை என்றால் பரவாயில்லை. உங்கள் பயணத்தில் உங்களால் முடியக் கூடிய ஒன்றை செய்யாமல் விட்டு விடாதீர்கள். அது துயரமான மிகமிக துயரமான ஒன்று!
அடுக்கு மாடி வீட்டின் கீழ்த் தளத்தில் நீச்சல் குளம். மொட்டை மாடியிலிருந்து அந்த பகுதியின் வனப்பை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, கீழே இருந்து ஒருவர், அப்புசாமி உன் மகன் நீச்சல் குளத்தில் விழுந்து விட்டான் என்ற அலறும் சப்தம் கேட்ட உடன் ஏதும் சிந்தியாமல் கீழே குளத்தை நோக்கி குதித்தான்.
சில மாடிகள் கடந்தபின் கீழே விழுபவன், திடிரென்று சிந்தனை வயப்பட்டான். நமக்குத்தான் மகனே கிடையாதே, நாம் ஏன் கீழே குதித்தோம் என நினைத்தவனுக்கு, உதயமானது திருமணமே தனக்கு ஆகவில்லை என்ற நினைவு. அதன்பின் சப்தம் போட்டவன் அப்புசாமி என்றுதானே சப்தம் போட்டான். நம் பெயர் அப்புசாமி இல்லையே, பின் ஏன் நான் குதித்தேன் என நினைக்கும்போது திடிரென்று கண்விழித்துப் பார்த்தான்.
அது கனவானதால் அவன் நீச்சல் குளத்தில் இல்லை. தன் படுக்கையில் இருப்பதை உணர்ந்தான். இன்னும் சிறிது நேரம் கழித்து விழித்திருந்தால் குளத்தில் விழுந்திருப்பான். அதற்கு முன் அவனுக்கு விழிப்பு ஏற்பட்டது. தான் அப்புசாமி இல்லை என்பதும் தான் யார் என்பதும் புரிந்தது.
விடியல் காலையில் பலருக்கு விழிப்பு வருகின்றது. விழிப்பு இன்றி பலர் வாழ்வு பயணங்களை முடித்துக் கொள்கின்றனர். உலகில் விடியும் நேரமே விழிப்பு மிக்கதாகும். உண்மையைப் பொறுத்தவரையில் நீங்கள் விழித்துக் கொண்டு நீங்கள் யார் என புரிந்து கொள்ளும் நேரமே விடியல்.
சூரியன் பிரகாசித்தால் அது பகல். சந்திரன் குளிர்ந்தால் அது இரவு. சூரியன் கோலோச்சும் பகல் காலத்தில் சந்திரன் அமைதியாய் இருந்தும், சந்திரன் கோலோச்சும் காலத்தில் சூரியன் அமைதி காத்தும், ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுத்தும், உலகின் இயக்கத்திற்கு இரண்டும் தமது கடமைகளைச் சரிவர செய்கின்றது.
வாழ்க்கைப் பயணம் இதைப்போன்றதே. ஆண்கள் சூரியனாக ஒளிர்ந்து, பெண்கள் சந்திரன் போல குளிர்ந்து மனம் ஒன்றி பயணித்தால் இரவு, பகல் கழிவது போன்று வாழ்க்கையின் நாட்கள் இனிதாக கழியும். ஒரு கண் பார்வைவிட இருகண்களால் நோக்கின் அகன்ற பார்வை படலம் தோன்றும். அது இயற்கையின் நிறைந்த பார்வை. எல்லாம் அங்கு தெரியும், புரியும். கர்ம காரணமாய் இனைந்த ஆணும், பெண்ணும் இரு கண்களாக செயல்பட்டு ஒருவர்மீது ஒருவர் அன்பின் மேலீட்டால் ஆத்ம நண்பர்களாய் செயல் பட்டு வாழ்வில் வெற்றியுடன் முன்மாதிரியாய் திகழமுடியும்.
ஜீவாதாராம்: உலகில் படைக்கப்படும் உணவுப் பொருட்கள் பன்னோக்கில் படைக்கப்படுகின்றது. நீ விரும்பினால் அதை சுவைத்து உண்ணலாம். யாரும் விரும்பாவிடில்கூட அந்த பொருள் பல ஜீவராசிகளின் பசியைத் தீர்க்கும் உணவாகிறது.
உற்பத்தியாகி காய்க்கும்போது ஓர் சுவை, கனியாயிருக்கும் போது ஓர் சுவை. சுவை கண்டவர் சுவைக்காவிட்டாலும் காலத்தின் கனிவால் கனி கனிந்து பருவம் கடந்து அழுகியநிலை ஏற்பட்டாலும் அதுவும் பல உயிர்களுக்கு உணவாகி தான் தேன்றிய காரண கர்மத்தை பூர்த்தி செய்கின்றது. ஒரு உயிருக்கு அழுகிய ஒன்று மற்றொன்றுக்கு ஜீவாதாரம். இதுவும் இயற்கையின் நியதி.
இயற்கையின் சத்தையும் சாரத்தையும் நாம் இருக்கும்வரை உறிஞ்சியுள்ளோம். அதனால் நம் ஆன்மா உடலைவிட்டு அகன்றபின் அந்த உடல் இயற்கைக்கு இறையாகி கரைகின்ற நியதியும் சரியே.
கடமை: மனித ஆன்மாவே! உலகம் ஓர் சக்கரம். விருப்பு வெறுப்பு இல்லாதது. ஆனால் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. சமம் என்ற நிலையை எல்லோருக்கும் எப்போதும் வழங்கிக் கொண்டிருப்பது. வெய்யிலின் வெப்பமும், நிலவின் குளிர்ச்சியும் மழையின் ஈரத்தையும், தென்றலையும் எல்லோருக்கும் பொதுவாக வழங்க சுற்றிச் சுற்றி சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அது அதன் கடமை.
என்ன நடந்தாலும், இறந்தாலும், பிறந்தாலும், அழிந்தாலும் ஒரு மாற்றமும் இன்றி இயங்கிக் கொண்டிருக்கின்றது. இவைகளை கண்ட மனித மனம்தான் பேதலித்து தவிக்கின்றது. இகழ்ந்தாலும், புகழ்ந்தாலும் ஒன்றே! மனம்தான் ஏற்றதாழ்வுகளை சந்தித்து சஞ்சலம், சந்தோஷம் என மாறுபாட்டை காண்கின்றது.
வெள்ளநீரில் எப்படி எல்லாம் அடித்து செல்லப் படுகின்றதோ, அக்னியில் எரிந்து சாம்பலாகின்றதோ அதுபோல எல்லாமும் கால ஓட்டத்தில் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவையே. இடையில் அவரவர் கர்மவினைக்கேட்ப நல்லது கெட்டது நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
நமது பந்தம்- நமது குழந்தை, நம் செல்வம், நம் புகழ் இன்னபிற எல்லாம் இருந்து ஓர் நாள் என்ன ஆயிற்று! என்ன ஆகும்! என என்னிப்பார் மனமே! எதுவும் நிலையில்லாதது என்பது புரியும். இயற்கையின் சுழற்சியில் வேறு இடம் தேடும், நாடும். நம் புலன்களுக்கு எட்டாத நிலையில் இருக்கும், இதில் நாம் ஒன்றின் மீது பாசம், பந்தம் வைத்து, நமது நினைவுகளை அதிகமாக அதனுடன் சேர்த்து இருத்திக் கொண்டால் நமது உடல், மனம் அதனுடன் ஒன்றிவிடுகின்றது.
ஏதாவது ஓர் நிலையில் பந்தபாசம் குறையும்போதும், மாறுபடும்போதும் நம் மனம் நாம் செலுத்திய பந்தபாசத்தின் விளைவாக மாறுதலை ஏற்றுக்கொள்ள மறுத்து மயங்குகின்றது. அதன் காரணமாக தன்னையே வருத்திக் கொள்கின்றது. மாறுதல்களை புரிந்து கொள்ளல் வேண்டும்.
ஒருவர் கைபிடித்து நடந்த நீ, ஓர்நாள் தனியாய் நடக்கின்றாய்! தனியாய் நடக்கும் நீ வேறொருவர் கைபிடித்து அழைத்து செல்கின்றாய்! ஆனல் மீண்டும் உன்னை ஒருவர் கைத்தாங்கலாக அழைத்து செல்லும் நிலை உருவாகின்றது. இது காலத்தின் சூழ்ச்சி! கட்டாய மற்றங்கள்! இது இயற்கையின் நியதி! புரிந்து கொள்வீர்! அந்தந்த காலத்திற்கேற்ப உங்கள் கடமைதனை செய்யுங்கள்! பலனை எதிர்பாராதீர்கள்!
செடிகள், மரங்கள் நடுகின்றோம். இதில் எத்தனை நட்டவர்களுக்கு பயன் தருகின்றது. வாரிசுகளுக்கு, உறவினர்களுக்கு என்ன பயன் தருகின்றது. நாம் நட்டு வளர்த்த மரங்களைவிட தாமாக வளர்ந்த மரங்கள், வனங்கள் எண்ணிக்கையும் வனப்பும் அதிகம். இயற்கையே அமுதசுரபி. அள்ள அள்ள அருள்கின்றது. தோண்டதோண்ட துலங்குகின்றது. வாரவார வழங்குகின்றது. ஓர் சூழலில் முற்றிலும் சம்பந்தப்படாத வேறு நபர்கள் அதை ருசித்து பலன்களை அனுபவிக்கின்றனர். இது நியதி. சிந்தனை கொள்ளுங்கள்.
பறவைகளைப் பார். அவை தமக்கு வேண்டும் என விதைப்பதில்லை, அறுப்பதுமில்லை, சேர்த்துவைப்பதுமில்லை. நீ எதுவும் கொண்டுவரவில்லை. கொண்டு செல்வதும் இல்லை. இடைப்பட்ட காலத்தில் நீ செயல்படுவது உன் கர்மத்தின் பலன்படி. உனக்கோ, உன்னைச் சார்ந்தவர்களுக்கோ பயன் படலாம். வேறு ஒருவருக்கும் பயன் படலாம். இது உன் முடிவில் செயலில் இல்லை. உனக்கு விதிக்கப்பட்டிருக்கும் நியதியின் முடிவில் இருக்கின்றது.
ஆகவே இந்த நிகழ்காலத்தில் நீங்கள் சந்தோஷமாக இருக்க, உங்கள் செயல்களால், உங்கள் உறவினர், சொந்தங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணங்கள் மட்டுமின்றி, இது எனது கடமை, இதை நான் செய்தாக வேண்டும், பலன் யாருக்கு என்பது என் கவலையில்லை, ஆகவே இதை கட்டாயம் செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படுங்கள்.
உங்கள் கர்மவினைகள் உங்கள் செயல்பாட்டை நிர்ணயத்தாலும் உங்கள் அன்பும், நல்ல எண்ணங்களுடைய செயல்களும், உங்கள் வினைகளின் போக்கை, தீவிரத்தை சிறிதளவாவது குறைத்து மாற்றி செயல் படவைக்கும் தன்மை உடையவை. அது ஓர் சக்தியலை.
உங்களுக்குத் தோன்றும் நல்ல செயல் எண்ணங்களை பிரதியுபகாரம் கருதாமல், யாருக்கு என எண்ணாமல், கடமை உணர்வுடன் செயல்படுத்துங்கள். இவ்வுலகில் உள்ள எல்லாம், உனக்குத் தரப்பட்ட எல்லாம் உன்னுடையது அல்ல! வாழ்க்கைப் பயணத்தில் நீ சந்தோஷத்தைக்காண உன் உபயோகத்திற்கு கொடுக்கப்பட்ட ஒன்று. வாழ்வின் முடிவில் அதை உன்னுடன் சேர்த்து எடுத்து செல்ல முடியாது.
இத்தனை நாட்கள் பயன் படுத்திருந்தாலும், இனைபிரியாமல் இருந்திருந்தாலும் உயிர் உள்ள, உயிர் இல்லா எல்லாவற்றையும் விட்டுத்தான் சென்றாக வேண்டும். உன் பயணத்தின் இடையில் கிடைத்த அதை நீ முழுமையாக அன்பு காட்டி ஆனந்தப்பட்டு, சந்தோஷிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று.
ஆனும், பெண்ணும் இந்த நியதிக்கு உட்பட்டவர்கள். உலகில் மரம், செடி, கொடி, ஊர்வன, பறப்பன, விலங்குகள் என பல உயிரினங்கள் இருந்தாலும் அவற்றிலும் எல்லாவற்றையும் நீ பயன் படுத்த முடியாது. விலக்கிவைக்க வேண்டியதும் உண்டு. நாற்றமும், நறுமணமும், கலந்தது. விஷத்தன்மை கொண்டதும் உண்டு. படைப்பில் எல்லாம் உண்டு என்பதை நீ புரிந்துணர்தல் வேண்டும்.
மலர்கள் மலர்ந்து மணம் வீசும்போது ஆனந்திக்கும் நாம், துர்நாற்றத்தை சுவாசித்து முகம் சுழித்தல் இயல்பு. அதைப்போல் வாழ்வில் நல்லவைகளைப் பற்றிக்கொண்டு முட்கள், விஷம் போன்றவற்றை விலக்கிப் பழகிக் கொள்ளவேண்டும்.
உலகில் எல்லாம் நீக்கமற நிறைந்திருந்தாலும் அன்பே ஜீவன். ஜீவதாரம்! என்பதை புரிந்து கொள். மனிதன் தவிர்த்த புண்ணாக்கு, புல், கழுநீர் ஆகியன உண்டு பசு அவர்கள் உபயோகத்திற்கு பால் தருவதை போற்றுகிறோம். மாதா என வணங்குகின்றோம். யார் என்ன செய்தாலும், எந்த குற்றங்கள் புரிந்தாலும் சூழ்நிலையின் கைதி அவர்கள் என்ற பரிவுடன், பாசத்துடன் அனுகி அன்பு செலுத்த கற்றுக் கொள்ளுங்கள்.
முடிவுகளை நீங்கள் மன எண்ணங்களில் நிறுத்தி கைகளில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலைப்பட்டு அமைதியை அடையட்டும். வாழ்க்கையை சுவைத்து மகிழுங்கள். வாழ்க்கைப் பயணத்தில் நம்மீது குற்றங்கள், நம்மை அவமானப்படுத்த கடுஞ்சொற்கள் சேரலாம். அவை உங்கள்மேல் விழுந்து, உங்களைத் தாக்கி, உங்கள் மனத்தில் இருக்கும் வரை ஒர் சுமை.
அது உங்கள் பயணத்திற்கு இடையூறு விளைவிக்கும். அந்த சுமையை மனதில் இருந்து நீக்கி உங்கள் உடம்பில் அதன் பாதிப்புக்களை நீக்க கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக் கொள்ளும் இந்த செயல், உங்கள் மேல் வீசப்படும் குற்றக்கனைகள், கடுஞ்சொற்கள் உங்களை அவமானப்படுத்தாமல், ஏற்றப்படியாய் உந்தி, ஊக்கமளித்து உயர்வுக்கு வித்திடும்.
நாம் மனிதர்கள். அன்பை பொழிய கடமைப் பட்டவர்கள். கழுநீர் ஊற்றி வளர்த்தாலும் செடியின் பூக்கள் நிறம் மாறுவதில்லை. நாம் எப்படி வளர்ந்திருந்தாலும் எந்த சூழலிலும் அன்பின் நிலையிலிருந்து மாறாமல் இருக்க நாமே பழகிக் கொள்ளவேண்டும்.
எவ்வளவு கொடியவனாக இருந்தேன், என்ன என்ன பாதகங்கள் புரிந்தேன் என எவரும் வருத்தப்பட வேண்டியது இல்லை. உன் செயல்களை உணர்ந்து நீ நிலைமாறினால், அன்பின் வயப்பட்டால், உன்னை உலகம் அங்கீகரிக்கும். உலகம் அன்பு சங்கிலி கொண்டு இயங்குகின்றது. புராணங்களில் அசுரர்களையும், கொடியவர்களையும் (மகிஷன்-, சூரபத்மன்-) அழித்த அவதாரங்கள், பின் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி ஏற்றுக் கொண்டதாகத்தான் எழுதப்பட்டுள்ளது.
தன் கடமைகளை சரிவர செய்யாமல், நல்லபொழுதை எல்லாம் துங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன், தானும் கெட்டார் எனச் சொல்வர். தூக்கம் ஓர் லயம், சுகம், போகமானது. ஒவ்வொருவருக்கும் நல்ல தூக்கம் வேண்டும்.
கடமைகளை மறந்த தூக்கம் சேம்பேறிகளுக்குரியது. விழிப்புணர்வின் வழி வளர்ச்சி. அதன் மூலம் வளர்ந்து காக்க வேண்டியவைகளைக் காத்து, சேர்க்க வேண்டியவைகளைச் சேர்த்து பின் போகத்தில் இருக்கலாம். அதுவும் அளவுடன் இருத்தல் நலம். கடமைகள் தவறிய போகம் ஆனந்தத்தை தராது-குருஸ்ரீ பகோரா.

வியாழக்கிழமை, 04 October 2012 11:40

1-8.பயம்!

பயம்!

பழம் பயந்தது என்றால் அது முற்றிலும் பழுத்தபின் கீழே விழுந்துவிடுவோமோ என்பதைத்தவிர வேறொன்றுமில்லை. முற்றிலும் பழுத்தால் கீழே விழவேண்டும் என்பது நியதி. இடையில் பிற உயிரினங்களுக்கு அது பழுத்தது தெரிந்தால் அவைகள் கீழே விழுமுன் உபயோகிக்கலாம். இது அடுத்த நியதி. இரண்டில் ஒன்று நடந்தாக வேண்டும். இதில் பயப்பட என்ன வேண்டியிருக்கின்றது.
குதிரையை நீர்குடிக்க நீர்நிலைக்கு அழைத்து சென்றால், அது நீரில்தன் நிழலைப் பார்த்து நமக்குப் போட்டியாக இன்னொரு குதிரை வந்துவிட்டது, நமக்கு நீர் இல்லாமல் போய்விடுமோ என அஞ்சி அதை முதலில் உதைக்கும். இதுபோன்ற பயம் தேவையற்றது. இந்த பிரபஞ்சத்தில் உங்களுக்கான உணவையும், காற்றையும் யாரும் களவாட முடியாது. உங்கள் கர்மத்தின் பலன்படி, நடக்கும் நிகழ்வுகளுக்கேற்ப உங்களுக்கு வரவேண்டியது வந்து சேரும். நீங்கள் அடைவது என நிர்ணயக்கப்பட்டதை அடைந்தே தீருவீர்கள்.
மனம் உற்சாகமாக இருந்தால் எந்தவிதத் தடங்கல்களும் நமக்கு தடைக்கல் இல்லை. தோல்விகளுக்கு பயம் ஒரு காரணம். எல்லாம் இருப்பவனுக்கு ஒருவித பயம்! ஒன்றும் இல்லாதவனுக்கும் ஒருவித பயம்! அளவாக இருப்பவனுக்கும், போதும் என்ற மனம் இருப்பவனுக்கும் பயமென்பது துளியுமில்லை. பயம் விசித்திரமானது. பயம் தோன்ற ஆரம்பித்தால் அதற்கு கை கால்கள் முளைத்து பெரிதாகி நம்மைப் பற்றி ஆட்டிப்படைக்கும். கவலைகூட முடிவில் பயத்தில் முடியும்.  
எதில் விருப்பம் இருக்கின்றதோ அதில் பற்றும் இருக்கும். பயமும் இருக்கும். குற்றமுள்ளவர்கள் அடையவேண்டியது பயம். உண்மையானவன் எப்போதும் பயப்படுவதில்லை. அளவில்லா செல்வமோ, உயர் பதவியோ, அளவில்லா அதிகாரங்களையோ அடைந்தவர் கடந்து வந்த பாதையில் தந்திரங்களும் சூழ்ச்சிகளும் நிறைந்ததாக இருக்கும். குற்றம் புரிபவன் தன் செயல் வெற்றிகரமாக நடக்க பயத்துடன் வேண்டுகிறான். குற்றம் புரிந்தபின் தான் செய்த குற்றத்திற்கு பயந்து வேண்டுகின்றான். ஆனால் குற்றங்கள் பற்றி நினையாதவன் யாதொன்றிற்கும் எப்போதும் பயப்படுவதில்லை.
வாழ்வுப் பயணத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானவர்கள் தாங்கள் ஏதோ பெரிய பாவம் புரிந்துவிட்டதாக நினைத்து அவதிப்படுகிறார்கள். ஒருபக்கம் அழுகின்றார்கள். இன்னொரு பக்கம் அழுகிவிடுகிறார்கள். அறியாத வயதில் புரியாத நிலையில் தவறு செய்தவர்களை பயமுறுத்துகிறது இந்தசமூகம். இந்த பயமும், குற்ற உணர்வும் தேவையில்லை.
மனிதர்கள் விலங்குகளைப் பார்த்து பயந்தகாலம்போய், மனிதர்கள் மனிதர்களைப் பார்த்து பயப்படும் காலமாகி வருகிறது. உள்ளத்தில் உள்ள காமம், மயக்கம், வெகுளித்தன்மை, கவலைகள் மற்றும் இயலாமை தான் பயத்தை உருவாக்குகின்றன. பொறாமையும், வெறுப்புணர்ச்சியும் பயத்தினை வளர்க்கின்றன. அது நமக்குள் பலவீனத்தை தோற்றுவிக்கின்றது. நம்மீது நாம் வைத்திருக்கும் பற்றே பயத்திற்கு காரணம்.   மனிதனின் தீராத, நிறைவேறாத ஆசைகள் மரணபயத்தை ஏற்படுத்துகின்றது. மரணத்திற்குபின் நமக்கு என்னவாகிறது என்பது புரியாததால் பயம் தோன்றுகிறது. நான், என்உலகம் எனப் பார்க்கும் மனிதனுக்குத்தான் பயம் புரிகின்றது. அதே மனிதனுக்கு தன் இளம்வயதில் அவ்வாறு பிரித்துப் பார்க்கத் தெரிவதில்லை. அதனால்தான் இளங்கன்று பயமறியாது என்கிறோம்.
மாடிப்பகுதியை வாடகைக்கு விடுபவர் எனக்கு சப்தம்னா பயம்! அலர்ஜி! மாடியிலே தொம் தொம் என சப்தம் விழாமல் குடியிருக்க வேண்டும் என்று கூறியதை ஏற்று மாடிக்கு குடிபுகுந்தான் இளைஞன் ஒருவன். காலையில் சென்று இரவு வந்தான். திடுதிடுவென்று மாடிஏறினான். காலனிகளை கழற்றி வீசினான். அவை மூலையில் சென்று தொம் தொம் என விழுந்தது. வீட்டுக்காரர் படப்படப்புடன் மேலே வந்தார். என்னப்ப ஒரு நாள் கூட ஆகவில்லை சென்னதை மறந்துவிட்டயே? என்றார். ஒ! மன்னிச்சிருங்கள்! பழக்கதோஷம்! இனிமே ஜாக்கிரதையாக இருக்கின்றேன் எனக் கூற பெரியவர் கீழே சென்றார்.
மறுநாள். இரவு பத்து மணிக்கு வந்தவன் கிடுகிடுவென மாடிக்கு சென்றான். பழக்க தோஷத்தில் ஒரு காலனியை கழற்றி தூக்கி எறிந்தான். அது தொம்மென்று விழுந்தது. அப்போது அவனுக்கு வீட்டுக்காரர் சொன்னது ஞாபகம் வந்தது. ஆகா! தப்பு செய்துவிட்டோமே! இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நினைத்து இன்னொரு காலணியை மெள்ளக் கழற்றினான். அதைக் கையில் எடுத்துக் கொண்டு அடிமேல் அடி வைத்து மூலைக்குச் சென்று சத்தமில்லாமல் கீழே வைத்தான். படுக்கையில் படுத்துக் கொண்டான்.
விடியற் காலம் 4மணிக்கு கதவு தட்டும் ஓசை கேட்டு கதவைத் திறக்க வீட்டுக்காரர் காதை பொத்திக் கொண்டு நடுக்கத்துடன் நிற்பதை பார்த்தான். ''என்னப்பா! ஒரு தடவை தொப் என்ற சப்தம் கேட்டது. அந்த இன்னொரு காலனியையும் சீக்கிரம் போட்டு விடேன். அந்த சத்தம் வரலையேனு ராத்திரி பூர காதை பொத்திக்கிட்டு முழிச்சிக்கிட்டே இருக்கேன்'' என்றார். இதைப் போலத்தான் நம்மில் பலர் எதையோ ஒன்றிற்காக பயந்து அது மீண்டும் நடந்து விடுமோ என்ற நினைவில், பயத்தில் மனதை அலைய விட்டுக் கொண்டிருக்கின்றோம்.
பயம், கவலை போன்றவைகளை நீக்கத் தெரிந்து கொள்ளவேண்டும். இல்லையெனில் அவைகள் உள்ளத்தில் குடிகொண்டு நாளடைவில் உடல் உறுப்புகளை சீராக செயல்படாமல் கெடுத்து நம் செயல்களுக்கு பங்கம் விளைவிக்கும். அதனால் மூளை, வயிறு போன்றவைகள் அதிகம் பாதிப்படைகின்றன. நமது திறமைகள் குறைந்துவிடும். அதைப் புரிந்து உணர்ந்து செயல் படுங்கள். அறியாமை, அச்சம் நீங்கினால் பயத்திலிருந்து தெளிந்து நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
அவதாரம்: மின்சாரம் இருக்கும் (+) பாசிட்டிவ் ஒயரும், மின்சாரம் இல்லா (-) நெகட்டிவ் ஒயரும் மின் இழைக் கம்பியில் இணைந்தால் தான் ஒளி. நாராயனர் உள்ளார் என நம்பிக்கை கொண்ட பிரகலாதனும், இல்லை என்ற இரண்யனும் மோதும் நிலையில் நரசிம்ம அவதாரம் நிகழ்வுற்றதாக புராணம் கூறுகிறது. அதைப் போலவே தர்மச் செயல்கள் முழுவதுமாய் குன்றி, அதர்மம் தொடர்ந்து தலை தூக்கும் போது மீண்டும் அவதாரங்கள் தோன்றும் என்ற நம்பிக்கை பிறக்கின்றது.
தேவர்களில் தவறு செய்து சாபம் அடைந்தவர்கள், பிரமஹத்தி தோஷம் அடைந்தவர்கள், தெய்வங்களாக கருதப்பட்டவர்கள் அனைவரும் மண்ணில் பிறந்து இறை வழிபாட்டில் ஈடுபாடு கொண்டு, இறையின் அருள் பெற்றதாக புராணங்கள் மூலம் தெரிகின்றது. இதிலிருந்து இப்புவியில் தேவர்களும், தெய்வங்களும் தோன்றி ஏதாவது ஒரு காரணத்திற்காக மண்ணில் மலர்ந்து வாசம் புரிந்துள்ளார்கள். அந்த முறையில் அவர்கள் பிறவி எடுத்த இப்பூமி சிறப்பை அடைகின்றது. உண்மை என்னவென்றால் தவறு செய்தவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் இடம் இந்த புவிதான் என உணர்த்துகின்றார்கள். அதுவே இந்த புவிக்கு இம்மண்ணுக்கு பெருமை - மண்ணின் மகிமையது.
யோக தியானத்தில் இருந்த மாண்டவ்யமுனியை  திருடர்கள் கூட்டத்தின் தலைவன் என நம்பி அவரையும் கைது செய்து மன்னரிடம் தகவல் அளிக்க மன்னர் உடனே முனிவரை கழுவில் ஏற்றச் சொன்னன். மாண்டவ்யர் கழுவில் ஏற்றப்பட்டாலும் தன் யோகத்தால் உயிருடன் தன் தியானத்தை தொடர்ந்தார். மற்ற முனிவர்கள் இதை அறிந்து மன்னனுக்குத் தெரிவித்தனர். மன்னன் தவறை உணர்ந்து மாண்டவ்யரை விடுதலை செய்து மன்னிப்புக் கோரினார். முனிவர் மன்னரை அனுப்பிவிட்டு தான் செய்யாத குற்றத்திற்கு ஏன் இந்த தண்டனை என தர்மதேவதையைக் கேட்க நீங்கள் குழந்தையாயிருந்தபோது பட்சிகளையும், வண்டுகளையும் இம்சை செய்ததின் கர்மபலன் இது என்று கூறியதைக்கேட்ட மாண்டவ்யருக்கு கோபம் உச்சத்தை அடைந்தது. இது அநியாயம். அறியா பருவத்தில் செய்த தவறுக்கு இந்த கடுமையான தண்டனை அளித்த தர்மதேவதை பூமியில் மனிதப் பிறவி எடுக்க சாபம் கொடுத்தார், அதன்படி பூமியில் பிறந்தவரே விதுரர். அவரின் உபதேசங்கள்தான் விதுரநீதி என்பதாகும். அதைபோலவே பூமியில் பல தேவர்கள் பிறந்து தங்களின் சாபங்களை கர்மபலன்களைப் போக்கிக் கொண்டுள்ளனர் எனப் புராணங்கள் வாயிலாக உணரலாம்.
ஆன்மாக்களே “அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்பதன் முழுமையும் புரிந்து கொள்ளுங்கள். இந்த மண்ணில் பிறந்ததால் நீங்கள் உங்கள் கர்ம பலன்களை நீங்கள் செய்யும் செயல் வழிமூலமாகக் குறைத்து கொள்ள சந்தர்ப்பங்கள் உண்டு. இனி பிறவி வேண்டாம் என்பதற்கும், இம்மண்ணில் நீ தோன்றிய இப்பிறவிமூலமே வழி உண்டு.
புண்ணியம்: புண்ணியம் என்பது ஓர் ஆன்மா தன் ஸ்தூல சரீரத்தின் மனத்தால் நினைத்து செய்யும் நல்ல செயல்களால் ஏற்படுவது. தீயவழியில் எல்லோரையும் ஏமாற்றி துன்புறுத்தி, அதன் மூலம் நிறைய பொருள் சம்பாதித்து பின் அதில் ஒர் பகுதியை தான தர்மங்கள், உதவிகள் செய்கிறேன் என்று செலவிடுவதால் வராதது புண்ணியம். தங்களுடைய தேவைகளுக்கு மீறீய பொருள் வைத்திருப்பவர்கள் கொஞ்சம் பொருள் கொடுப்பது தாங்கள் புகழடைய வேண்டும் என்பதற்காகத்தான். அவர்களின் ஆசைமனம் பொருள் குறைந்து விட்டதை கணக்குடன் நினைத்தால், அவ்வாறு தானம் கொடுப்பதில் புண்ணியமில்லை.
தன்னிடம் இருப்பதைக் கொடுப்பவன் வாழ்வில் நம்பிக்கையுடன் இருப்பான். எதையும் இழப்பதில்லை அவன், புகழோ வேதனையோ அடையாமல் தன்னிடம் இருக்கிறது எனக் கொடுப்பவர்கள் நிறைவுடன் வாழ்வர். மரங்களும், செடிகளும் யார் கேட்டும் கொடுப்பதில்லை. அவைகள் நிறைவுடன் மற்ற உயிர்களுக்கு அளிப்பதுபோல் நீங்களும் உங்கள் குலம் தழைத்துவாழ, மனித ஆன்மாக்கள் வாழ இருப்பதை மனமுவந்து கொடுத்து உதவுங்கள்.
நிறைய நன் முறையில் செயல் பட்டு தன் தேவைகளுக்கு ஏற்ப உழைத்து, மற்ற உயிர்களைத் துன்புறுத்தாமல் சம்பாதித்து பின் அதில் மற்றவருக்கு என ஓர் பகுதியை செலவழிப்பதே புண்ணியத்தை தரும். எனவே நல்வழி செயல்களால் கிடைக்கும் இன்பமும், புண்ணியமும் சிறப்பு.
நம்மிடம் இருக்கும் செல்வம் இன்று அல்லது நாளை அல்லது பிரிதொருநாள் நம்மை விட்டு போகலாம், என்று அது நடக்கும் என யாராலும் கூறமுடியாது. எனவே செல்வம் இருக்கும்போது அதைப் பயன்படுத்தி நல்ல காரியங்கள் செய்ய பழகுங்கள். அது உங்களுக்கு என்றும் நிம்மதியைத் தரும். இருக்கும் செல்வம் சென்றபின் அடடா! அதை செய்யலாம் என நினைத்தேன், இதைச்செய்யலாம் எனநினைத்தேன் என்று அங்கலாய்த்தலால் பயனில்லை. துன்பம்தான் மிச்சம். உங்களால் முடிந்த அளவிற்கு செல்வத்தை பயன் படுத்தி நற்செயல்கள் செய்தோமே என்ற மனத்திருப்தியாவது இருக்கும்.
நம்மீது கொண்ட பொறாமையின் காரணமாக நம்மை வசைபாடி நிந்திப்பவர்கள், நாம் செய்த பாவங்களிருந்து ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, நம் கர்ம பலனின் வேகத்தைக் குறைக்கும் பணியை செய்வதுமட்டுமல்லாமல், அவர்கள் எப்போதோ செய்த புண்ணியத்தின் ஒரு பகுதியை நமக்கு அளிக்கின்றார்கள். எனவே நம்மை நிந்திப்பவர்கள், அதன் காரணமாக நம் கர்மபலனின் பாவத்தின் பகுதியை தங்களை அறியாமலே எடுத்துக்கொள்ளும் அவர்கள் மீது கோபம் கொள்ளாதீர்கள். அவர்களை மன்னித்துவிட பழகிக் கொள்ளுங்கள்.
மேலும் அவர்கள் செயலால் உங்களுக்கு, “யார் செய்த புண்ணியமோ, எனக்கு இந்த பலன்” என நாம் சில சமயம் கூறுகிறோமோ அந்த புண்ணியம் உங்களை தூற்றி, நிந்தித்தவர்களால், உங்களை எதிர்ப்பவர்களால், விரோதியால், அல்லது நீங்கள், உங்கள் ரத்த சொந்தங்கள் செய்த நல்ல கர்ம பலனால் கூட இருக்கலாம்.
எதுவாயிருந்தாலும் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும். உங்களிடம் உண்மையன்பு நிறையும். கனிவு பிறந்து அன்பு தோன்றும். நீங்களும் பிறரை நிந்தித்து பாவம் செய்து உங்கள் புண்ணிய பலன்களின் பகுதியை இழந்து விடாதீர்கள். உங்கள் மூலமாகவோ உங்கள் முன்னோர் மூலமாகவோ உங்களை அடைந்திருக்கும் கர்மபலனின் புண்ணியங்கள் உங்களுக்கோ, அல்லது உங்கள் சந்ததிக்கோ மிகவும் உதவி புரியும்,
சுலபான வாழ்க்கையை சூழ்ச்சி, சுயநலமிகுந்ததாக ஆக்கிவிடாதிருக்கப் பழகுங்கள். “மனதின் வினைகளான பிறர்பொருளை அபகரித்தல், பிறருக்கு தீங்கு செய்ய நினைத்தல், பிறர் உயர்வு கண்டு பொறாமை கொள்ளுதல் ஆகியவைகளின்றி புண்ணியமான பிறர் பொருள் வேண்டாம் என எண்ணுதல், அனைவரும் நலமாக வாழ நினைத்தல், அவர்தம் நல் வாழ்வு கண்டு மகிழ்வு அடைதல்” ஆகியவை உங்களின் மேலான வாழ்வுக்கு சிறப்பானதாகும்.
நீதி நேர்மை தவறாத அரசன் ஒருவன், மிகுந்த இரக்க குணம் கொண்டவன். மக்களின் நன்மைக்காக வாரி வழங்கினான். பிறர் மகிழ்ச்சியைக் கண்டு தான் மகிழ்ந்தான். அவன் ஆயுட்காலம் முடிந்ததும் எமதூதர்கள் வந்து அழைத்துப் போயினர். அந்த அரசன் தன்னை அறியாமல் ஒரு தவறு செய்திருந்ததால் அந்த ஜீவனை நரகத்தின் செயல்பாடுகளை கண்டு பின் சொர்க்கம் அழைத்துச் செல்ல ஆணையிட்டான் எமதர்மன்.
அவ்வாறே அவன் செர்க்கம் செல்லும் வழியில் நரகத்தின் செயல்பாடுகளை பார்க்க அனுமதித்தனர். நரகத்தில் ஜீவன்கள் படும் துயரத்தைக் கண்டு மிகவும் வருந்தினான். அரசன் செய்திருந்த தவறுக்கு அதுவே தண்டனை என்பதால் அவனை அங்கிருந்து சொர்க்கம் கொண்டு செல்ல முனைப்பட்டனர்.
அப்போது அங்கிருந்த ஜீவன்கள் மன்னா, உங்கள் மேனியை தழுவிய காற்று, துன்பத்தில் இருக்கும் எங்களை அடையும்போது இதமாக இருக்கின்றது, எனவே இன்னும் சிறிது நேரம் இங்கிருங்கள் என வேண்டினர். மன்னர் அப்படி இதமான காற்று என்னால் உங்களுக்கு கிடைக்கிறது என்றால் நான் இங்கேயே தங்கி விடுகிறேன் என்றார். தூதர்களின் நிலை தர்ம சங்கடமானது.
எமதர்மனுக்கும், இந்திரனுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து மன்னா அவர்கள் செய்த பாவம் அவர்கள் அனுபவிக்க வேண்டியது என்றனர். நான் இங்கு தங்கினால் அவர்களுக்கு மகிழ்ச்சி என்றால் அதைவிட எனக்கு மகிழ்வு வேறில்லை. அப்படியில்லையெனில் நான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் அவர்களுக்கு தந்து விடுகிறேன் என்றான் மன்னன்.
அந்த புண்ணியத்தால் அனைவரும் சொர்க்கம் சென்றுவிடவே அங்கு இருந்த மன்னனிடம், அரசனே, கொடை அளிப்பதால் புண்ணியம் பெருகுமே அன்றி குறையாது. நீங்கள் உங்கள் புண்ணியங்களை தானம் செய்ததால் வந்த புண்ணியமும் உங்கள் கணக்கில் சேர்ந்திருப்பதால் நீங்களும் சொர்க்கம் சொல்லாம், வாருங்கள் என அழைத்துச் சென்றனர்.
தர்மம்: தர்மத்தினை உடலாலும், வாயாலும், மணத்தாலும், பணத்தாலும் செய்யலாம். ஆனால் ஆன்மாவிற்காக செய்யும் தர்மமே உனக்கு வரவு. மற்ற தர்மங்களெல்லாம் செலவுதான். நான் நிறைய பாவம் செய்திருக்கின்றேன், அதனால் தானதர்மங்கள் செய்கிறேன் என நினைக்கக்கூடாது. எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் ஓர் நிலையில் அவைகளை உணர்ந்து தன்னை தன் செயலை மாற்றிக் கொண்டுள்ளவர்கள் ஏராளம்.
அந்த பாவங்களுக்கு பிராயசித்தமாக தர்மங்களை செய்ய ஆரம்பிக்கின்றார்கள். இதை இறையருள் ஏற்றுக்கொள்கின்றது. தவறு செய்தவன் உணர்ந்து திருந்தினால் அவனுக்கு மன்னிப்பு உண்டு. மீண்டும் அந்த தவறு செய்யாமலிருக்க வேண்டும். தவறு செய்தவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்வதால் தான் ஒருவனுக்கு பெருமை கிடைக்கிறது. அந்த பெருமை முற்றிலும் இறைவனுக்கே!
அளவில்லா பெருமை கொண்ட அந்த இறைவன், பாவம் செய்தவர்களை மன்னித்து அடைக்கலம் தந்ததாக புராண நிகழ்வுகள் நிறைய உள்ளது. செய்யக்கூடாது என மனதிற்கு தோன்றுவது பாவம். செய்வது நல்லது எனத் தோன்றுவது புண்ணியம்.
புண்ணியம் செய்வதனால் மனம் கஷ்டமின்றி சுகமாக இருக்க விரும்புகின்றது. மனம் சாந்தமடைகிறது. புண்ணியத்தினால் ஆனந்தமாக இருக்க விழையும் மனம், சிந்திப்பது செயல்படுவது பாவமான நிகழ்வுகளை. பாவம் பண்ணுவது தவறு என நினைத்தாலும் அவனின் கர்மபலன் அதை செய்யதூண்டுகிறது. மனதை ஓர்முகப்படுத்தி ஆசைகளை விட்டு ஒதுக்கி செயல்பட்டால் பாவம் செய்ய வாய்ப்பில்லை. பாவங்கள் ஆசையின் பிறப்பிடம்.
எந்த காரியங்களாயிருந்தாலும் ஆசையின்றி செய்ய விழையவேண்டும். நம் சுய சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை ஆசையைவிட்டு தர்மத்திற்காக செய்தால் அதுவே புண்ணியம் தரும்.
மனதினால் உடம்பினால் நல்லகாரியங்களைச் செய்யவேண்டும். உன்னைப்பற்றிய கணக்கெடுப்பில் நீ எவ்வளவு சொத்து சேர்த்து வைத்துள்ளாய் என்று பார்ப்பதில்லை! என்னென்ன நல்ல காரியங்களும், தர்மங்களும் செய்திருக்கின்றாய் என்பதே உதவிக்கு வரும். செல்வமிருந்தும் தானம் செய்ய மனமில்லை என்றால் அடுத்த பிறவியில் பிச்சை எடுத்து வாழ்வான் என்கிறது பவிஷ்யபுராணம்.
இறை ஆன்மாக்களை சோதனை செய்வதற்காகவே எல்லாவற்றையும் அளிக்கின்றான். ஏதும் செய்ய முடியாமல் இருப்பவர்களுக்கு நல்ல இதயங்களையும், செய்ய விரும்பாதவனுக்கு மற்றவைகளையும் வாரி வழங்குகின்றான்.
பெரியவர் ஒருவர் மேடையில் பேச தயாராகிக் கொண்டிருந்தார். அங்குவந்த பணக்காரர் அவரிடம், ஐயா, நீங்கள் கூட்டத்தில் பேசும்போது என்னைப் பற்றி ஏதாவது குறிப்பிட்டு ஒரு முறை சொல்லுங்கள் என்றார்.
பேச்சாளரும் இவர் பெரிய சமுத்திரம், அள்ள அள்ளக் குறையாத கடல் மாதிரி. பெரிய செல்வந்தர், சமுத்திரம்னா சமுத்திரம்தான், ஏரி, குளம் மாதிரி சின்ன ஆளு இல்லை. என்ற பாராட்டை கேட்டு மகிழ்ந்த பணக்காரர் அங்கிருந்து சென்றபின் பேச்சாளரின் சீடர் தயக்கத்துடன் "இந்த ஆள் பெரிய கஞ்சன். எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் உதவியது இல்லை, அவரை உங்களைப் போன்ற பெரியவர்கள் இப்படி பொய்யாக பாராட்டலாமா?” எனக் கேட்டார்.
அதற்கு பேச்சாளர், அதைத்தான் நானும் சொன்னேன். புரியலையா? சமுத்திரம் ரெம்பவும் பெரிசு, ஏகப்பட்ட தண்ணீர் வெச்சிருக்கு, ஒருவாய் தண்ணீர் ஒருவருக்கும் குடிக்க பயன் படாது. எவருடைய தாகத்தையும் தணிக்காது. இந்த நபர் சமுத்திரம் மாதிரி எவ்வளவு பணம், பெருள் வைத்திருந்தாளும் ஒருவருக்கும் பயன் பட உதவமாட்டார். என்றுதான் கூறினேன் என்றார். எங்கும் நீர் பஞ்சம். கடலில் நீர். என்ன பலன்! செய்ய முடிந்தும் யாருக்கும் எதுவும் செய்யாமலிருப்பவனின் உடைமைகள் எதாவது ஓர் முறையில் அழிவை தேடும். தானதர்மங்களைச் செய்யாதவனின் அடுத்த தலைமுறையினர் அந்த சொத்துக்களை சரியான முறையில் அனுபவிப்பதுமில்லை.
தர்மங்களை இரண்டு வகையாக கொள்ளலாம். ஒன்று ஆன்மாவின் உயிர் தன்னுடைய தாய், தந்தை, குரு ஆகியவரின் ஆலோசனைகளை ஏற்று செய்வது என்பது சாதாரணவகை தர்மமாகும். அவர்கள் தமக்கு நல்லது சொல்வார்கள் என்றும், அவர்களின் கருத்துக்களை ஏற்க வேண்டும் என்றும் செயல்படுவது நமது கடமையாகும்.
ஆனால் இதை மீறி மாதா, பிதா, குரு ஆகியோர் விருப்பங்களை தெரிவித்தாலும், ஆலோசனை கூறினாலும், அதை ஏற்காமல் தாங்கள் மதிக்கும் தர்மத்தை நிலைநாட்ட செயல்படுவது மற்றொருவகை சிறப்பு தர்மமாகும்.
மகாபாரதத்தில் பரதன், தன் தந்தையின் உயிர் பிரிவதற்கு தாயே காரணம் என்றும், அவரின் மறைவுக்குப்பின் குலதர்மத்தின்படி அண்ணன் ஸ்ரீராமனே ஆட்சிபீடம் ஏறவேண்டும் என்று நினைத்து, தன்னை பட்டம் சூட்டிக்கொள்ள அனைவரும் கூறியும் கேளாது, மரபும், சாஸ்திர தர்மமும் காக்க, தன் தமையனின் பாதுகையை அரியாசனத்தில் வைத்தது சிறப்பான தர்மமாகும்.
கர்ணனிடமிருந்து கவச குண்டலங்களைப்பறிக்க முயற்சி நடப்பதை அவனின் தந்தையாகிய சூரிய பகவான் கூறியும் கேளாமல், யாசித்ததை தருவதே தர்மம் என கர்ணன் நினைத்து செயல் பட்டது சிறப்பாகும்.
தன் குரு எச்சரித்தும் கேளாமல் மகாபலி, வாமனருக்கு தானம் தந்ததும் சிறப்பு ஆகும். தர்மம் என நீங்கள் நினைத்தால், உள்மனது சொன்னால், அதன் பொருட்டு எதையும் மீறி தர்மம் செய்யலாம்.
பிச்சை ஒருவன் யாசித்தபின் அளிப்பது. சமூகத்தின் தேவையறிந்து யாரும் கேளாமல் தருவது பகிர்ந்தளித்தல் ஆகும். தன்னிடமிருப்பதை தேவைபடுபவர்களின் தேவைக்கேற்ப பகிர்ந்தளிதல் சிறப்பான தர்மம். தானம் செய்ததை சொல்லிப் புகழ்வதும், தானம் கொடுத்துவிட்டு நொந்து கொள்வதும், தானம் செய்வதைத் தவிர்ப்பதும் தர்மமாகாது. புகழ், புண்ணியத்திற்காக அன்றி இல்லாதவனுக்கு உதவுவதே இருப்பவனது கடமை என நினைத்தலே உண்மையான தர்மமாகும்.  
தர்மம் சொல்லிவிட்டோம். தர்மசங்கடம் என்றால்... இரண்டு அறமான நியாயங்கள் சமநிலையில் மோதும்போது தர்மத்திற்கு ஏற்படுவதே சங்கடம், தர்மசங்கடம். புறா தன்னை காப்பாற்ற சிபு மன்னனிடம் வேண்டுகோள் விடுத்தது. துரத்தி வந்த பருந்து, விலங்குகளும், பறவைகளும் ஒன்றை மற்ற ஒன்று உணவாக கொள்வது என்பது இயற்கையின் தர்மம். இன்று இயற்கை எனக்கு அளித்த உணவு இந்த புறா. அது எனது பிறப்புரிமை. எனக்கு கொடுத்துவிடுங்கள் என அறத்தைக் கூறியது.
என்னை பருந்துக்கு இரையாக்கிவிடாதீர். உங்களை அடைக்கலம் தேடி வந்தேன், என்னைக் காப்பதே சிறந்த அறம் என புறாவும் தர்மம் கூறியது. இந்த இரண்டு அறத்திற்கிடையே சிபியின் தர்மம் சங்கடமான நிலையை அடைந்தது. யாருக்கு சாதகமாக கூறினாலும் ஒருவருக்கு அறம் தவறாகிவிடும்.
உயிர்வாழ வேண்டும் என்பது அனைவரின் அவா. ஆசை. தன்னை காத்துக் கொள்ள வேண்டும் என புறா நினைப்பதும் சரியே. புறா காப்பற்றப்பட்டு, அதே சமயம் பருந்தும் பசியாறுதல் சிறப்பு. உலகின் உயர்ந்த அறமானது உண்மையும், கருணையும் ஆகும். எனவே புறாவிற்கு பதிலாக தன் தொடையின் பகுதியை தரமுன்வந்து தர்மங்களை நிலைநாட்ட முனைப்பட்டவர் சிபி சக்ரவர்த்தி என வரலாறு பகர்கின்றது.
சிபி போன்று நீங்கள் செயல்பட வேண்டாம். அதற்காக தர்ம சிந்தனைகள் இன்றி செயல்பட வேண்டாம். பிற உயிர்கள் படும் துன்பங்களை உணர்ந்தால், நேயம் கொண்டு செயல்படுங்கள் என்பதே தர்மத்தின் நோக்கம்.
கர்ணணைப் போல் தான தர்மங்கள் செய்து தானும் கொடையாளி என்றபெயரை, புகழை அடைய நினைத்த துரியோதனன், தன் அரண்மனை வாயிலில் “இங்கு யார் வந்து என்ன கேட்டாலும், ‘இல்லை’ எனச் சொல்லாமல் கொடுக்கப்படும்” என்ற அறிவிப்பு பலகையை வைத்தான். அவன் உளமார தர்மம் செய்ய முன்வராமல் வெறும் பெயரை அடையவே இவ்வாறு செய்கிறான், என்பதை அவனுக்கு உணர்த்த கிருஷ்ணர் எண்ணங் கொண்டார்.
நல்ல மழைக்காலம் அது. அப்போது அந்தணர் வேடமேற்று சென்ற அவரை வரவேற்ற துரியோதனனிடம், தான் ஒரு யாகம் செய்யப் போவதாகவும், அப்போது உணவு தயாரிப்பதற்காக காய்ந்த விறகுகள் 100 வண்டிகள் தந்து உதவ வேண்டும் எனக் கேட்டார். கேட்ட துரியோதனன் பேய்மழையில் எப்படி காய்ந்த விறகுகள் அதுவும் 100 வண்டிகள் எனச் சலித்துக் கொண்டான்.
அவ்வளவு கிடைக்குமா என விசாரித்து விறகு இல்லை என்று கூற அந்தனர் வாயிலில் உள்ள தகவல் பலகையை சுட்டிக் காண்பித்து அதை அகற்றிவிட வேண்டினார். இருப்பதைத்தானே கொடுக்கமுடியும், இல்லாததைக் கேட்டால் எப்படி கொடுக்க முடியும், இந்த சூழலில் காய்ந்த விறகை யாரேனும் கொடுத்தால் பலகையை அகற்றி விடுகிறேன் என்றான் துரியோதனன்.
அடுத்து கர்ணனின் அரண்மனைக்கு சென்ற அந்தணருக்கு அங்கும் விறகு இல்லை எனதெரியவந்தது. அப்போது கர்ணன் அந்தனரை பக்கத்தில் உள்ள ஓர் வீட்டிற்கு சென்று பேச அழைத்தான். சிறிது வேளையில் அந்தணர் கேட்ட 100 வண்டிகள் நிறைய காய்ந்த விறகுகள் தயாராக இருந்தன.
எங்குமே காய்ந்த விறகு இல்லா நிலையில் கர்ணா உன்னால் எப்படி முடிந்தது இது என அந்தணர் கேட்க, நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் என அந்த வீட்டிலிருந்து வெளியே அழைத்து வந்தான். அங்கிருந்த கர்ணனின் அரண்மனை சிதைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த தேக்கு, சந்தனம் போன்ற பல்வேறு மரங்கள் விறகாகி இருந்தன.
அந்த 100 விறகு வண்டிகளுடன் துரியோதனின் அரண்மனைக்குச் சென்று சந்தித்தார் அந்தணர், வெட்கத்தால் தலைகுணிந்த துரியோதனன் உடன் தகவல் பலகையை நீக்கினான். போட்டி, பொறாமையின்றி உள்ளார்ந்த நினைவுகளுடன் தர்மம் செய்தல் சிறப்பாகும். புகழ் வேண்டி செய்த தர்மங்கள் பலன் தராது-குருஸ்ரீ பகோரா. 

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26952297
All
26952297
Your IP: 34.201.28.181
2024-03-29 19:35

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg