ஏழாம் தந்திரம்!
ஓம்நமசிவய!
ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!
####
ஆறு ஆதாரம்!
1704. நான்கு இதழ் தாமரை வடிவான மூலாதாரம், ஆறு இதழ் தாமரை வடிவான சுவதிட்டானம், பத்து இதழ் தாமரை வடிவமான மணிபூரகம், பன்னிரண்டு இதழ் தாமரை வடிவமான அநாதகம், இவற்றுக்குமேல் இருக்கும் பதினாறு இதழ்தாமரை வடிவான விசுத்தி என்ற இந்த ஐந்து ஆதாரங்களையும் தரிசித்தபின் இரண்டு இதழ் தாமரை வடிவான ஆஞ்ஞையில் பழம் பொருளாகிய சிவத்தின் திருவடியைக் காணலாம்.
1705. நாத தத்துவத்தில் பன்னிரு கலைகளுடன் கூடியது சூரிய மண்டலம். மேதை முதலிய பதினாறு கலைகளுடன் கூடியது சந்திரமண்டலம். மேதை முதலான கலைகளில் நாதாந்தத்திற்கு மேல் விளங்குபவள் பராசக்தி. அறிவான பிரசாத நெறியில் வேற்றுமை இல்லாத அறிவால் சென்றால் மேதை முதலான ஆதாரம் கடந்த நிலையில் சிவன் விளங்குவான்.
1706. பிரசாத நெறியில் நின்று மேல் கீழ் என்ற பாகுபாட்டைக் கடந்து ஒரே ஒளியாய் காணும்போது அவனே தான் ஆன இறைமைக் குணங்கள் ஆறும் எங்கும் பரவிய பரம்பொரூள் கார்மேகம் தங்கும் கற்பக மரத்தைப்போன்று அருள் பொழிவான்.
1707. ஆறு ஆதாரங்களைத் தூய்மை செய்வதால் நாடி தூய்மை அடையும். மேலும் மேதை முதலாக உள்ள பதினாறு கலைகளின் முடிவில் வானத்தின் ஒளி ஏற்படும். அறிவாலயமான சாதகனின் ஆன்மாவில் வெளி நோக்குடைய ஐம்பொறிகள் அந்தக்கரணங்கள், புத்தி என்பன அவற்றின் கீழே இழுக்கின்ற இயல்பை விட்டு நிற்கும். இவ்வாறு நிற்பது சகமார்க்கம்- தோழமை நெரீயாகும்.
1708. மேதை முதலிய பதினாறு கலைகளில் பிரணவ தியானத்தில் நின்று தூண்டினால் குண்டலினி சத்தி முறையே மூலாதாரம் முதலிய இடங்களிலிருந்து மேலே சென்று அத்துவாவை உண்டாக்கும்.. வீரியத்தை இடமாகக் கொண்ட கலையை மடை மாற்றி மேலே ஏறச் செய்யின் ஆறு ஆதாரங்களிலும் ஒளி பெருகும் உடலில் இன்பம் விளையும்.
1709. ஆறு ஆதாரங்களை உடைய உடம்பில் மேலே கூறிய வண்ணம் அந்த அறு ஆதாரங்களை அறிந்து தியானம் செய்து மேல் ஏறுங்கள். அந்த ஆதாரங்களில் அமைக்கப்பட்ட எழுத்துக்கள் ஐம்பதையும் கடந்தபோது பொருந்திய ஆதாரமாக உள்ள ஓர் எழுத்து நாதமயம்னான ஓம் என்ற பிரணவம்.
1710. பருமையான உடலும் பிரிகின்ற அவ்வுடலுடன் போகும் நுணுடலும் பொருந்துவது நுண்மையாய் நாதத்தில் ஒடுங்கி விரியும் ஐம்பது எழுத்துக்களாலும் தத்துவங்களாலும் ஆகும். பிறவிக்கு ஆகும் உடம்புக்கு ஆறு ஆதாரங்களும் அவற்றை எல்லாம் கடந்த பிரணவமும் பொருந்தி அமையும்.
1711. இதயத் தாமரை மேலாகப் பதினாறு இதழ்களுடன் கூடிய விசுக்தியான தாமரை கழுத்திடத்து உள்ளது. அங்குதான் தூய அறிவான ஆன்மா சிவானந்தமே தனது வடிவாகப் போய் எங்கும் பொருந்திய அறிவாய் நீக்கம் இல்லாது நிறையும்.
#####