ஓம்நமசிவய!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!
#####
சமாதிக் கிரியை!
1910. அழிவில்லாத சிவஞானிகள் உடல் தீயில் வெந்து கெடுமானால் நாட்டில் உள்ள மக்கள் எல்லாம் வெப்பு நோயினால் பீடிக்கப்பட்டு வருந்துவர். கவனிப்பார் இல்லாமல் அழுகி நரி அவ்வுடலைத் தின்னுமாயின் நுண்மையான பகை மூண்டு நாட்டில் உள்ளவர் அழிந்து நாய் நரிக்கு இரையாவர்.
1911. ஞானியின் உடல் தீயில் இடப்பட்டு வெந்தால் சிவன் வீற்றிருக்கும் சிவன் கோயிலைத் தீயிட்டுக் கொளுத்தியதைப் போன்றதாகும். அந்த நாட்டில் மழை பெய்யாது. உலகத்தில் பஞ்சம் உண்டாகும். நினைத்தற்கு அரிய மன்னர் பதவியை இழப்பார்.
1912. சிவஞானியின் உடலைப் புதைப்பது புண்ணியமாகும். அவர்தம் உடலை நெருப்பை இட்டுச் சுட்டு எரித்தால் நாட்டில் அழிவு ஏற்படும், அந்த உடலைப் புதைக்காமல் மண்ணில் கிடந்து அழியும்படி விட்டால் உலகத்திலே அழகு அழியும். உலகம் எங்கும் தீ பிடித்துக் கெடும்.
1913. அழிவில்லாத ஞானி அருளைப் பெற்றபின் உடலை விட்டால் அந்த உடம்பைக் குகை ஒன்றைக் கட்டி அதில் வைக்க வேண்டும். அங்ஙனம் செய்தால் அழகிய மன்னரும் பழைய குடிமக்களும் அள்வில்லாத இன்பத்தை விளைக்கும் இறைவனின் அருளைப் பெறுவர்.
1914. ஒன்பது சாணுக்குக் குறையாமல் ஆழமாய்க் குழியைத் தோண்டி அங்ஙனம் தோண்டிய மண்ணைக் குழியைச் சுற்றிலும் ஐந்து சாணுக்கு அப்பால் வளைத்துக் கொட்டித் தவம் மிக்க குகையை முக்கோண வடிவமாய் பக்கம் மூன்றுக்கு மூன்று சாண் அலவுள்ளதாய்ச் செய்து பிறவியை நீக்கும் நல்ல குகையில் ஞானியின் உடலைப் பதுமாசனம்போல் இருத்திடுக.
1915. சிவஞானியின் மேனியினை நல் அடக்கமான குகை அமைக்கின்ற இடங்கள்: சமாதி செய்யவிருப்பவன் வீட்டின் பக்கம், நடை பாதையின் பக்கம், குளக்கரை, ஆற்றிம் நடுப்படுகை, பூஞ்சோலை, நகரத்தில் நல்ல பூமி, நினைத்தற்கு அருமையான காடு உயர்ந்த மலைச் சாரல் என்ற இடங்கள் ஆகும்.
1916. நெருக்கமாக உள்ளவர் நல்ல குகை நாற்புறமும் காலடியால் ஐந்து அடி அகலமும் உயரம் ஒன்பது அடி நேராக அமைய அழகமைந்த குகையின் குறுக்களவு மூன்றுக்கு மூன்றாக செய்யும் முறையாகும்.
1917. ஐந்து வகை உலோலங்களையும் ஒன்பது வகை மணிகளையும் குகையினில் பரப்பி மிகுதியாய் இடவேண்டும். அதன்மீது இருக்கையை அமைத்துத் தருப்பையைப் பரப்பி திருவெண்ணீற்றை நிறைய இட வேண்டும். அதன் மீது பொற்கண்ணப் பொடியைப் போடவும் வேண்டும்.
1918. குகையின் நடுவில் நான்கு சதுரமாய் செய்து அதன் மீது தேன் ஒழுகும் மலர் சந்தனம் கத்தூரி அகியவற்றுடன் தெளிவான சாந்து, புனுகு, பன்னீர் என்பனவற்றை சேர்த்து தெளியுங்கள். ஒளி பொருந்திய தீபத்தை அக்குகையில் காட்டுங்கள்.
1919. வெண்ணீற்றுப் பூச்சாகிய சட்டையை மேலே இட்டு ஞானியின் உடலை இருக்கை மீது அமர்ந்தி பூ அறுகம்புல் நறுமணப் பொடி வெண்ணீறு ஆகியவற்றை அணிவித்துக் குகையின் மீது வைத்து நான்கு பக்கமும் மண்ணை விரித்து சமம் செய்யுங்கள்.
1920. வெண்ணீறு முதலியன விரித்தபின் நான்கு பக்கங்களிலும் பரப்பி பொரிக்கறி உணவு இளநீருடன் குருவின் திருவடியையும் இட்டு காதணி முகம் கண் முதலிய வற்றைச் சாத்தியபின் மேலே மேலாடை சாத்துங்கள்.
1921. திருநீற்றையும் நறுமணப் பொடியையும் மேலே சொரியும் தர்ப்பையையும் விலவ மலர் கொண்டு பாத்தியம் ஆசமனம் அர்க்கியம் தந்து நிலத்தின் மீது மூன்றுக்கு மூன்று அடி மேடை அமையுங்கள்.
1922. மேடை மீதில் அரசமரக்கன்று அல்லது சிவலிங்கம் எண்ணும் இவற்றுள் ஒன்றை நிறுவி சமாதியின் மேன்மையான சந்நிதிக்கு வடக்குத் திக்குப் பக்கம் அல்லது கிழக்குப் பக்கம் ஆகியவற்றுள் ஒன்ரு அமைய அன்புடன் பதினாறுவகை உபசாரம் செய்வீராக!
#####