ஓம்நமசிவய!
பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!
#####
ஞானாதித்தன்!
1993. விந்து ஒன்றே தூலமான அபரம் என்றும் நுண்மையான பரம் என்றும் இரண்டாக விரியும். விரிந்து அந்தத் தூல விந்துவே மேல் நோக்கும் போது பரநாதமாய் மேலான நிவிருத்தி முதலிய பஞ்ச கலைகள் வந்து ஞானக் கதிரவனின் தோற்றம் என்று சொல்லும்படி மனத்தில் மேல் எழுந்து தோன்றும்.
1994. ம்ன மண்டலத்தில் கதிரவன் தோற்றம் போல் எழும் ஒலியே தெளிந்த பரநாதத்தின் செயல். ஆதலால் வள்ளலான சிவபெருமான் அருளால் வைகரி முதலிய வாக்குகள் பரவிந்துவுடன் கூடி ஐந்து கலைகளிலிருந்து தோன்றும்.
1995. சிவம் சுற்றியுள்ள எட்டுத் திசைகளிலும் மேல் கீழ் என்ற இரண்டு பக்கங்களிலும் பத்துத் திக்குகளிலும் வெளிப்படுவான். பழங்காலத்தில் வந்தவர் நானமுகன் திருமால் உருத்திரன் மகேசுவரன் என்ற நால்வருக்கும் நடுநாயகமாய் உள்ளவன் எனவும் கூறினர். ஆனால் தேவர் இவனையே தங்கள் தலைவன் என உரைப்பர்.
1996. உலகங்கள் எல்லாவற்றுக்கும் தலைவனும் எந்தையுமான சிவன் கற்பனைப் பொருள் அல்லன். உண்மையில் உல்லவனே. மை போன்ற இருளை நீக்கும் திங்கள் அக்கினி கதிரவன் ஆகியவை அண்டகோசத்தில் கீழ் முகமாய்ச் செயல் பட்டபோது ஏற்பட்ட இருளை நீக்கும் ஞானச் செம்மலான சதாசிவன் என் வீணத் தண்டின் இருளைப் போக்கக் கீழிருந்து மேல்வரை கலந்திருந்தான்.
1997. நிகர் அற்ற சிவ ஒளியனது நிறைந்த அண்ட கோச இருளைச் நீங்கச் செய்து பெறுவதற்கு அரிய கனியினின்றும் ஊறும் தேன் போல் இனிமையான அமுதம் சுரக்கச் செய்யும் கனிந்த சுடர் போன்று விளங்கிய சிவபெருமான் நிறைந்த சுடர் போல் என் தலையின் மீது விளங்கும் தன்மையும் உடையவன் ஆவான்.
1998. அனுபவ ஞான் வடிவாக ஆன்மாவிடம் நிர்மபியிருக்கும் பேரொளியான பிழம்பு தடை இல்லாமல் எல்லா உலகங்களிலும் பரவிக் கலந்து நிற்கும். கதிரவன் ஒளி படாத இடத்திலும் இவ்வொளி படர்ந்து நிற்கும். இதுவே தன்மையானது என்பதை எவர் அறிவார்.
1999. சுவாதிட்டான சக்கரத்தினின்று மலர்ந்து எழுகின்ற கதிரவன் மன மண்டலத்துள் ஞானக் கதிரவனாய் ஒளியாய் விளங்குபவன். இருந்த இடத்திலினின்று இதனை அறியவல்ல ஞானியர்க்கு இந்த நிலையிலிருந்தே எங்கும் போய் உணர்ந்துவரும் ஆற்றல் வாய்க்கும்.
2000. உந்தி, கண், மூக்கு, புருவமத்தி, உச்சித்துளை ஆகிய இந்த ஐந்து இடங்களிலும் ஒளிரும் பேரொளியைத் தேவ இனத்தவரான உருத்திரன், திருமால், நான்முகன் ஆகிய மூவரும் உணர்ந்திருந்தனர்.
#####
சிவாதித்தன்!
2001. சிவ ஒளிக்கு மாறுபட்ட பாச இருளும் அதனால் உண்டாகும் அஞ்ஞானமும் சிவக்கதிரவன் ஒளி வீசும்போது அதனுள் ஒடுங்கும். பெரிய கதிரவன் எழுச்சிக்கு முன்பு உள்ள அருணோதயத்தால் நெருக்கமான இருள் விலகுவதைப் போல் தொலைந்து விடும்.
2002. நீர் உள்ள குடங்கள் தோறும் கதிரவன் தோன்றுவான். அவன் அதனுள் அடங்கும்படி மூடி வைத்தாலும் அக்குடங்களில் அடங்கி விடமாட்டான். அது போன்று நீல கண்டப் பெருமான் விருப்புட்ன் எழுந்தருளும் உயிரில் அடங்கி யிருக்கும் தன்மையும் அத்தன்மை போன்றதே ஆகும்.
2003. சிவமான தானே பரந்த கதிர்களை உடைய கதிரவன், திங்கள், தீ மூன்றும் பொருந்திய ஓர் ஒளியாக விளங்கும் தானே நான்முகன், திருமால் என நின்று தான் முதல்வன் என்ற தன்மையை மெய்பிக்கும். தானே அறிவற்ற உடம்பிலும் அறிவுடைய் உட்மபிலும் உயிரிலும் பிரிவின்றிக் கலந்திருக்கின்றான். அவனே வானமாகவும் அதன் ஒளியாகவும் இருப்பதுடன் இருளாகவும் இருக்கின்றான்.
2004. கடவுள் தன்மை பொருந்திய ஒளியுடன் கூடிய சிவத் தீயும் கதிரவனும் சந்திரனும் நிலமும் நீரும் நெருப்பும் காற்றும் வானமும் என்னும் எட்டும் சிவபெருமான் உறையும் திருமேனிகள் ஆகும். இத்திருமேனிகளைத் தாங்கியிருக்கின்ற பல் உயிர்களும் சத்தியோசாதர் முதலிய ஐவர்க்கும் பொருந்திய இருதயம் முதலிய ஆறு அங்கங்களுக்கும் இடம் ஆகும்.
#####