ஓம்நமசிவய!
பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.
#*#*#*#*#
38.அன்றாடக் கடமைகளாக செய்ய வேண்டியவை!
காலை உறக்கத்திலிருந்து எழும்போது இந்நாள் நல்ல நாளாக இருக்க வேண்டும் எனக் கடவுளைத் தியானிக்க வேண்டும். இரவு உறங்கும்முன் இந்நாள் நன்றாகக் கழிந்ததற்கும் இறைவனைத் தியானித்தல் அவசியம்.
காலைக் கடன்களான பல்துலக்கி, மலம் ஜலம் கழித்து, நீராடி, கந்தையானாலும் கசக்கி கட்டு என்ற பழிமொழிப்படி- தூய ஆடை உடுத்திக்கொள்ள வேண்டும், இந்தக் காலைக் கடன்கள் எல்லாவற்றையும் தினசரி கட்டாயம் செய்ய வேண்டும்.
ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மல சுத்தமாய் விநாயகர், குலதெய்வம், மற்றும் விருப்பான தெய்வங்களை வழிபட்டு பின் வாழ்க்கைக்குத் தேவையான தினசரி செயல்களில் ஈடுபட வேண்டும்.
தனக்கும் தன் குடும்பத்திற்கும் என செயல்படும்போது பிறர் கஷ்ட நஷ்டங்களை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.
செல்வம் சேர்க்கும் ஆசை அனைவருக்கும் இருந்தாலும் அச்செல்வத்தை எப்படி வேண்டுமானாலும் சேர்க்கலாம் எனச் சிந்திக்காமல் தர்ம வழிகளில் சேர்க்க நினைவு கொண்ட செயலாக்கம் வேண்டும் என்றே சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அதிகமான இருள் சூழ்ந்த பகுதியில் செல்லும்போது கையில் ஒளிதரக்கூடிய விளக்குகளின்றி பயனித்தல் கூடாது.
வஞ்சகர்களுடன் உறவோ, நட்போ வைத்துக் கொள்ளக்கூடாது. குருகிய வழியில் வெற்றி பெறலாம், நிறைய பொருள் சேர்க்கலாம் என ஆசைக்காட்டி மோசம் செய்யும் தீயோர் சாகவாசம் கூடாது. அவ்வகைச் சேர்க்கை ஆரம்ப காலத்தில் நன்றாக வளமிக்கதாகத் தெரியும். பின்நாளில் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தும்.
ஒருவர் பேசும் போது அவர் என்ன சொல்கின்றார் என்பதை முழுவதையும் கேட்க வேண்டும் குறுக்கிட்டுப் பேசுதல் கூடாது.
#*#*#*#*#