காலப் பூக்கள்!
காலம் பார்த்து செயல் செய்தால் எதையும் விலைக்கு வாங்கலாம். காலங்களே நம் நண்பர்கள். காலங்களே நம் பகைவர்கள். காலங்கள் நமக்கு எல்லாம் தந்தும் பறித்தும் விடுகின்றன. அழவைக்கிற அதுவே சிரிப்பையும் தருகின்றது. ஒவ்வொருவர் வாழ்விலும் காலம் இன்றியமையாதது. காலத்தின் இயல்பு மாற்றத்தை தருவது. அந்த மாற்றம் இன்பத்தையும், துன்பத்தையும் சேர்ந்து தரவல்லது. எவ்வளவு துன்பம், எவ்வளவு இன்பம் என்ற அளவில்லாமல் அவரவர் கர்மவினைகளுக்கு ஏற்ப தரப்படுகின்றது. பெறப்படுகின்றது. எப்படித் தந்தாலும் அதை கர்மவினைகளின் பாதிப்பை குறைத்து அதில் இனிமை காண முயலவேண்டும்.
நல்ல சிந்தனைகள், நற்செயற்கள் கொண்டு கர்மவினையினால் பாதிக்கப்பட்டவன் இயங்கும் போது அதன் தாக்கம் குறைகின்றது. அதற்குறிய மனோபலத்துடன் செயல் படவேண்டும். முன்வினையின், முன்செய்த தீவினையின் வேகத்தை புதிய நல்வினையால், செயல்களால் தணிக்கலாம். சத்தியத்தை கடைபிடித்தால் தாழ்வு என்பது என்றுமில்லை. அவ்வப்போது ஏற்படும் தாழ்வுகளும் நிரந்தனமானதுமில்லை. நிச்சயம் ஏற்றம் வரும். சத்தியத்தை எந்த கொடிய சக்தியும் அழிக்கமுடியாது. அழிவில்லாத உன்னதமான சக்தி சத்தியம்.
ஓர் செயல் வீழ்ச்சிக்கு வித்து பொய்மையாகும். பொய்மை நீண்டநாள் வாழ்ந்ததில்லை. மகிழ்ச்சிக்கு வித்து அன்புடைமையாகும். நீ விதைத்த பொய் காலத்தினால் உருமாறி உன்னையே தாக்கும். விதைத்த அன்பு என்றும் எப்போதும் மகிழ்வை தரும். உண்மை நீண்டநாள் தாழ்ந்திருப்பதில்லை. உண்மைக்காக எதையும் விடலாம். ஆனால் உண்மையை விட்டு விடக்கூடாது.
“காலம் பதில் சொல்லும்” என்பர். அவ்வப்போது உணரா அன்புகூட பிரிதொரு நாளில் தெரிந்து நீர்மல்க கனிவு பிறந்து அன்பின் ஆனந்தம் புரியும். நம் முன் வினையால் நம் உறவினர்கள், சுற்றத்தார்கள் அமைகின்றனர். அதில் அவர்களின் கர்ம பலன்களும் உண்டு. எப்படியிருப்பினும் நல்செயல்கள் எல்லா பலன்களிலும் நன்மைபயக்கும். மீண்டும் அமையும் சுற்றம் நன்மை பயக்கும். மாற்றங்கள் நிகழும். அனுபவங்கள் நம் நன்மைக்கே! காலத்தின் அனுபவங்களை ஒதுக்கி செயல் படுதல் சரியன்று.
‘காலம் பொன் போன்றது’ என்ற பழமொழிக்கு ஏற்ப கிடைக்கும் சிறிய நேரத்தைக்கூட வீணடிக்காமல் பயன் படுத்துங்கள். ஓர் பயணத்தின்போது கிடைக்கும் நேரங்களை உபயோகித்துக் கொள்ளுங்கள். விரைவாக பயணித்துக் கொண்டிருக்கும்போது சிக்னல் தாமதம் என்றால்கூட அந்த கணநேரத்தை பயன்படும் விதமாக சிந்தியுங்கள். உங்கள் நலனுக்காகவோ, உற்றார், உறவினர், நண்பர்கள் நலனுக்காகவோ, பிரச்சனைகளிலிருந்து விடுபடவோ சிந்திக்க பயன்படுத்துங்கள்.
உடலின் உயிர்கள் அனைத்தையும் அடக்கி விழுங்கி விடுவதும், என்ன நடந்தாலும் எது அழிந்தாலும் அதன்பிறகு இருப்பதும், எல்லாம் கடந்து போவதற்கு காரணமாயிருப்பதும், எதனாலும் வெல்ல முடியாததுமான ஒன்றுதான் ‘காலம்’ -இது இயற்கையின் சிறப்பான நியதி. அதிர்ஷ்டம் என்பது நம்மை நோக்கி வரும் காலத்தை சரியான முறையில் பயன் படுத்துதலே!.
கிடைத்தற்கரிய காலம் வரும் வரை, கொக்கு போன்று பொறுமையுடன் காத்திருந்து, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, செய்தற்கரிய செயல்களை உடனுக்குடன் செய்ய வேண்டும்.