அடக்கம்!
“அடக்கம் அமரருள் உய்க்கும், அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்”-அடக்கம் ஒருவனை தேவர்கள் நிலைக்கு உயர்த்தும். அடக்கம் இல்லாதிருந்தால், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் சேர்த்துவிடும்-வள்ளுவம்.
அடக்கத்தில் நாவடக்கம், வாயடக்கம், புலன் அடக்கம் முக்கியமானவைகள். இந்த அடக்கங்கள் உடலுக்கும், உடலால் உள்ளத்திற்கும், உள்ளத்தால் ஆன்மாவிற்கும் நன்மைபயக்கும்.
சுவை உணர்ந்து வாயின் நா உட்கொள்ளும்போது, போதும் என்ற அடக்கம், உடல் ஆரோக்கியத்திற்கும் அதன் மூலம் ஆனந்தத்திற்கும் எல்லை வகுக்கும்.
மேலும் சொற் குற்றத்தில் அகப்படாத நாவடக்கம் வேண்டும். தீய சொற்களின் பொருளால் விளையும் தீமைகளினால் மற்ற நண்மைகள் நடைபெறாமல் போகும். சூழ்நிலை அறிந்து, பெருளுணர்ந்து பேசுவதால் நமக்கும் மற்றோருக்கும் பயக்கும் நன்மையிலும் ஆனந்தமுண்டு.
புலன்களை அடக்கும் போது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியமும் ஆனந்தமும் தோன்றும். ஆமைபோல் ஐம்புலன்களையும் அடக்க முடிந்தால் அதன் பயனை எல்லாப் பிறவியிலும் ஒருவன் பெறமுடியும்.
ஆக அடக்கமானது எல்லாவகையிலும் நமது உடல், உள்ளம், ஆன்மா ஆகியவற்றிற்கு ஆரோக்கியத்தையும் அதனால் ஆனந்தத்தையும் தரவல்லது, அது மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்று. அதை கடைப்பிடிக்க நாம் நம் புலன்களை, உணர்வுகளைப் பழகிக் கொள்ளவேண்டும்.
கட்டுப்பாடுள்ள வாழ்க்கை சீரானதாக இருக்கும். கட்டுப்பாடு என்பது பிறரின் தலையீடு இன்றி நமக்கு நாமே விதித்துக் கொண்டதாக இருக்கவேண்டும். அதில் கானும் இன்பம் நிலையானது, துன்பமில்லாதது. சீரான சந்தோஷத்திற்கு ஓர் படி.
மனித ஆத்மாக்களே மற்ற ஆன்மாக்களிடம் குறைகள் கண்டுபிடிக்காதீர்கள். அடுத்தவரிடம் ஒரு குறை கண்டு பிடிப்பதற்கு முன்னால் உங்களிடம் அந்தக்குறை உள்ளதா என்பதை கண்டு அதை நீக்க முயலுங்கள். இது சிறந்த அடக்க உணர்ச்சியாகும். எத்தனை குறைகள் மற்றவர்மீது கண்டு என்ன பயன். நீங்கள் அந்தக்குறைகளை உணர்ந்து நீக்கி நிறைவுடன் குறையில்லா வாழ்க்கை வாழ முயற்சி செய்யுங்கள்.
குறையில்லா உயிர்கள் ஏதுமில்லை. அந்தந்த சூழலுக்கு ஏற்ப குறைகள் கொண்டிருக்கலாம். அதை பெரிதுபடுத்தி அதில் வெற்றிபெற நினைப்பது தவறாகும், அதே குறை உங்களிடம் இருந்தால் அதே முடிவுதான் என நினைத்து பாருங்கள். மனமாற்றம் கொள்ளுங்கள். அடுத்தவர் குறைதனை வெளிப்படுத்தாத அடக்கம் வேண்டும்.
அடக்கம் கொண்ட பணிவுடன் வாழ்பவர்கள் அவர்கள் காலத்தில் உலகம் கவனிக்கத் தவறினாலும், சரித்திரம் அவர்கள் பெயரை சுமந்திருக்கும். பணிவு உள்ளவர்கள் தங்களைத் திருத்தி மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் செயலாக்கம் கொள்ளமுடியும். பணிவும் இன்சொல்லும், எளிமையும் மனித ஆன்மாவிற்கு மலர்ச்சியை தரும்-குருஸ்ரீ பகோரா.