கவலை!
கஷ்டம், துன்பம், கவலை அதிகம் என வருந்துபவர்கள் மேலும் துன்பங்கள் சேர்ந்து துயரங்கள் அதிகமாகும்போது கடைசியாக சேர்ந்த துன்பம் விலகினால்கூட அது ஒரு பெரிய ஆறுதலாகிவிடும். எப்போதும் உள்ள கவலைகளுக்குத் தன்னை தயார் படுத்திக் கொள்கின்றான்.
மனித ஆன்மாவிற்கு தீராத ஒன்று கவலை. நினைவு தெரிந்த நாள்முதல் ஒவ்வொருநாளும் ஏதாவது ஒன்றை நினைத்து கவலைப்படுவதே அதன் நிலை. இதனால் தொடர்ந்து கவலைமேல் கவலைகள் அடைந்து அதிதீவிரமாகும்போது அவனின் தசைகள், நரம்புகள், மூளை, ஐம்புலன்கள் ஆகியவைகள் அந்த நினைவுகளால் பாதிக்கப்படுகின்றன.
உடலில் இரத்த உற்பத்தி குறைந்து சோகை ஏற்படும். அதன் ஜீரணசக்தி குறைகின்றது. ஜீவசக்தி கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து கொண்டுவருகின்றது. கவலை மிகுதியினால் அதனுள் ஓர் பயம் ஏற்படுகின்றது. அது கோபத்தைத் தூண்ட அதனால் அவனின் செயல்கள் எல்லாவகையிலும் பாதிக்கின்றன.
உறுப்புக்கள் பாதிக்கின்றன. பலவிதமான நோய்களால் அவன் பீடிக்கப்படுகின்றான். எனவே கவலையை விடமுயற்சி செய்யுங்கள். எது நடந்தாலும் கவலைப்படாதீர்கள். பல துக்க அனுபவங்களை கண்டு கேட்டு அனுபவித்து அவன் புத்தி தெளிகின்றான். அந்த அனுபவம் அறிவுக் கண்ணைத் திறக்கின்றது. தொடர்ந்த இடர்களை வேறுவழியின்றி பொறுத்துக் கொண்டதால் மன உறுதி உண்டாகிறது. அகத்தினுடைய பாவம் ஒழியும். இடரைக் கண்டு கலங்காதே! ஒவ்வொரு இடரும் மன உறுதியைக் கொடுக்கும் சாதனமாகும். உறுதியுடன் எதிர்த்து நின்று சாதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
நடப்பது நடக்கட்டும் என விட்டுவிடுங்கள். உங்கள் ஆலோசனைபடி எது நடைபெறுகின்றது? நடக்கின்ற விஷயங்களில் உங்களுக்கு சாதகமானவைகளைத் தேடுங்கள். ‘தேடுங்கள் கிடைக்கும் என்றார் ஏசுபிரான்’. கிடைக்காத ஒன்றுக்காக, நடக்காத ஒன்றுக்காக மனம் ஏங்கி, தவித்து, கவலைகொண்டு வாழ்வில் கிடைத்துள்ள பொன்னான நேரங்களை வீணடிக்காதீர்கள். கிடைத்த நிகழ்வில் சந்தோஷப்படுங்கள். கவலையை மறந்து அந்த சிறிய சந்தோஷம் உங்கள் உணர்வுகளுக்கு, உறுப்புகளுக்கு, உள்ளத்திற்கு தரும் சிறிய ஆறுதலை அனுபவியுங்கள்.
வாழ்நாளில் ஒவ்வொரு விநாடியும் ரசியுங்கள். பார்ப்பதை, பேசுவதை, செயலை, உண்பதை எல்லாவற்றையும் அங்குலம், அங்குலமாக ரசியுங்கள். வாழ்நாள் கடைசிவிநாடி வரைக்கும் முழுமையாக ரசித்துக்கொண்டிருங்கள். சந்தோஷமான தருணங்களை கவலையில் துரத்திவிட்டு வருந்தாதீர்கள். எந்தசூழலிலும் கவலையை நினைக்காமல் அந்த சூழலின் வயப்படுங்கள்.
விரும்பாதது வந்தாலும் துயரம், விரும்பியது விலகினாலும் துயரம், விரும்பியதை அடைந்தபின் அதை இழந்தாலும் துயரம். நிலையில்லா மறையும் உலகவாழ்வில், நம்மிடம் உள்ளவைகளினால் கிடைக்கும் இன்பத்தைவிட, அவைகளை இழந்துவிடுவோமோ என்ற நினைவுகளினால் ஏற்படும் அச்சத்தின் துயரமே, ஆன்மாவை கவலை கொள்ளவைக்கின்றது.
இன்சொற்கள்: உன் உள்ளத்தில் கவலைகள் ஏற்பட்டால் அதை நீக்க முயற்சி செய். அந்த கவலைகள் உன் முகத்தில் தெரியும். அதாவது “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” கவலையை நீக்கி ஆனந்தத்துடன் கூடிய சந்தோஷமான முகத்துடன் வெளியில் வா! உன் துக்கம், கவலை உன்னுடன் போகட்டும். மற்றவர்களுக்கு அதை தொற்றவிடாதே! மற்றவர்கள் ஏன் இப்படி இருக்கின்றாய், என உன்னை நலம் விசாரிக்கும்படி செய்யாதே! அதனால் அவர்கள் மனம் வாடக்கூடும். அகத்தின் இருளை வெளி உலகுக்கு சுமந்து செல்லாதே!
பிரச்சனைகள், கவலைகள், துன்பங்கள் யாருக்குத்தான் இல்லை! அதிலிருந்து தப்பி ஓட நினைக்காதே! வெற்றியா! தோல்வியா! என நினைத்து கணக்குப் போட்டுக் கொண்டிருக்காதே! நீ வெற்றி பெறவேண்டும் என நினைப்பது மனம். அந்த எண்ணங்கள் பிறந்த மனம் உறுதியோடு செயல்பட உதவு. விடாமுயற்சியுடன் செயல்படு!
ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் சக்தி உண்டு. நம் வாய் வழி வார்த்தைகளைப் பொறுத்தே நமக்கு மதிப்பீடு இடப்படுகின்றது. மனம் வழி எண்ணி செயல்கள் ஆரம்பித்தால் அதுவே நம் விதிக்கு ஆரம்பம். மும்மரமான சூழலில் வெற்றியின் இரகசியத்தை காண, கண்டுபிடித்து சந்தோஷிக்க முயலுக. நீங்கள் எப்போதும் மற்றவர்களால் பாராட்டப் படுகின்றீர்களா! இல்லையே!
பொறுப்பான அக்கறையுடன் சமூக நலனைக்கருத்தில் கொண்டு சில ஆன்மாக்கள் செய்யும் எத்தனையோ சேவைகள் கண்டுகொள்ளப்படாமல், யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் ஒதுக்கப்படுதல் கண்டு மனம் தளராதே! ஓர் ஆன்மாவால் கவனிக்கப்பட்டு போற்றப்படவேண்டும் என்ற நினைவில் நீ எதுவும் செய்யாதே!
கவலை கொள்ளாமல் துணிந்து பிறர் நலன் கருதி உங்கள் செயலை செய்து கொண்டிருங்கள். பாராட்டுகள் எல்லாம் தானாக உங்களை வந்து சேரும். அது ஆரோக்கியத்தின் முதற்படி. எனவே கவலை மறந்து சந்தோஷத்தை எங்கும் எதிலும் தேடுங்கள். கண்டுபிடியுங்கள், கிடைக்கும்... சந்தோஷப்படுங்கள்.
வசதி, மதம், கல்வி கொண்டிருக்கின்றீர்கள் எனக் கர்வப்படாதீர்கள். உங்களைப்பற்றிய கர்வமில்லா உயர்வான எண்ணம் போதும். வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. சொற்களின் விளைவுகளைப் புரிந்து அவைகளை உபயோகித்தல் சிறப்பு. கடுஞ்சொல் கூறாதீர்கள்.
அச்சொற்கள் ஒருவரின் மனதை எவ்வளவு புண்படுத்த முடியும், வேதனைப்படுத்த முடியும், கோபம் கொள்ளவைக்க முடியும் என்றால், ஏன் ஓர் இனிமையானசொல் சாந்தபடுத்தி அமைதியை ஏற்படுத்தாது. அதனால் ஏன் அவர் சந்தோஷமாயிருக்க முடியாது. முடியும். எனவே அன்பான ஆதரவான இன்சொற்களை உபயோகியுங்கள். அது வாழ்வில் வளமூட்டும். வாழ்வின் உயர்வும் தாழ்வும், ஆன்மாக்களின் உறவும், பிரிவும் வார்த்தைகளால்தான் ஏற்றம் இறக்கம் காண்கிறது.
பேசு மனிதா! பேசு, அளவுடன் பேசு! இனிமையாகபேசு! பயனுள்ளதாக பேசு! என ஆன்றோர்கள் கூறியுள்ளதைப்போல அளவுடன், பயனுள்ளவற்றை அன்புடன் பேச வேண்டும். இதை சரியாக யாரும் கடைபிடிப்பதில்லை. கடுமையான சொற்களையும், வன்சொற்களையும் தமது பேச்சில் அதிகம் பயன்படுத்துகின்றனர். சுடு சொற்கள் அடுத்தவர், கேட்பவர் மனத்தில் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தி அவர்களின் செயல்பாட்டின் திறனை இழக்கச்செய்யும் என நினைத்துப் பாருங்கள். உங்களை வேறொருவர் கடுஞ்சொற்களால் மனதை புண்படுத்திவிட்டார் என வைத்துக் கொள்ளுங்கள். அது எவ்வளவு நேரம் உங்களை ஆக்கிரமித்து, உங்களின் செயல்களில் பாதிப்பை ஏற்படுத்தி, உங்களை முடக்கி வைக்கின்றது என்பது புரியும்.
பஞ்சவடியில் ராம, இலக்குமண, சீதை இருந்தபோது, மாரீசன் மாயமானாக பொன்னிறத்தில் வந்ததை பார்த்து மயங்கிய சீதை, அது வேண்டும் என ராமனிடம் கேட்க, ராமன் சீதையை பார்த்துக்கொள்ள சொல்லி காட்டிற்குள் சென்றுவிட, ‘சீதா, இலக்குமணா’ என வஞ்சகமாக மாரீசன் இராமன் குரலில் அலற, சீதை இலக்குமணனை உடனே சென்று பார்க்கச் சொன்னபோது, அவர் சீதையை தனியே காட்டில் விட்டுச்செல்ல தயங்க, விதியின் செயல்பாட்டால், அதை தவறாக எடுத்துக் கொண்டு தகாத கடுமையான வார்த்தைகள் கூறியதே, இலக்குமணன் மனம் வேதனையடைந்து சீதையை தனியே விட்டுச் செல்லவும், சீதையை இராவணன் தூக்கிச்செல்லவும் வழிவகுத்தது.
கடுஞ்சொற்கள் எவ்வளவு வறட்சியை அந்த இதயத்தில் தோற்றுவிக்கும் என்பத புரிந்து கொள்ளுங்கள். “தீயினாற் சுட்ட புண் உள்ளாரும், ஆறாதே நாவினால் சுட்டவடு” என வள்ளுவர் கூறியது மிகையாகாது. பல வருடங்கள் சென்றபின்னும் சொல்லடிபட்ட இதயம் ஆறாத காயங்களை, இரணங்களை கொண்டிருக்கின்றது.
தான் இறக்கும் தருவாயில் அம்புப் படுக்கையில் படுத்திருக்கும்போது, தன் பேரன் யுதிஷ்டிரர், பீஷ்மர் வாழ்வில் அடைந்த வெற்றியைப்பற்றி கேட்டபோது ‘உன் நாவிலிருந்து எழும் சொற்களின் மீது கட்டுப்பாடு வைத்துக் கொண்டால் போதும், அது உன் வெற்றிக்கு வழிவகுக்கும்’ என்று பீஷ்மர் கூறியதாக புராணத்திலிருந்து நாம் அறிகிறோம்.
உங்களைவிடப் பெரியவர் ஒருவரை மரியாதையுடன் நீங்கள் எனச்சொல்வதற்குப் பதிலாக நீ என்று அழைத்தால் அவரை கொல்லாமல் கொன்றதற்குச் சமம் என்கின்றது சாஸ்திரங்கள். மகாபாரதபோரில் கர்ணனால் மயக்கநிலையடைந்த தர்மர், கர்ணனை கொல்லாமல் வந்ததைப்பார்த்த கோபத்தில், அர்ஜுனனையும் அவன் காண்டீபத்தையும் இகழ்வாகப்பேச, காண்டீபத்தை இகழ்ந்தவரை கொல்வேன் எனசபதம் செய்திருந்த அர்ஜுனன், தர்மரை கொல்ல வாளை உருவினான்.
அண்ணனை கொல்வது அதர்மம் எனத்தடுத்த கிருஷ்ணன் அர்ஜுனனின் சபதம் நிறைவேற, ‘அர்ஜுனா. மிகவும் உயர்வாகப் போற்றும் ஒருவரை இகழ்ந்து பேசினாலும் ஒருமையில் திட்டினாலும் அவரை கொலை செய்ததற்கு சமம்’ எனக்கூறினார். அர்ஜுனன் அப்போதைக்கு அதுபோன்று நடந்து தமையனை திட்டித்தீர்த்தான்.
அண்ணனை இகழ்ந்தவனை கொல்ல சபதம் செய்திருந்த அர்ஜுனன் தன்வாளால் தன் தலையை வெட்ட முயலும்போது கண்ணன் தடுத்து, தற்கொலைசெய்வது பாவம் எனக்கூறி, தற்பெருமைபேசுவது தற்கொலைக்குச் சமம், எனவே நீ உன்னையே புகழ்ந்துபேசி உனது சபதத்தை நிறைவேற்றிக்கொள் என அறிவுரைகூறினார்.
எனவே வாழ்வில் உயர்வான ஒருவரை ஒருமையில் பேசுவதும், இகழ்ந்து பேசுவதும், அவரை கொல்லாமல் கொல்வதற்கு சமம். மேலும் தன்னைபற்றி தாமே சொல்லும் தற்பெருமை தற்கொலைக்கு சமமானதாகும். ஒருவரிடத்தில் நாம் மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தால் அவரிடம் நம்மால் சுடு சொற்களால் பேசமுடியாது. ஆகவே ஒவ்வொருவருக்கும் தேவை, எல்லா உயிர்களிடத்தும் மதிப்பு, மரியாதை கொண்டு நேசிக்க பழகவேண்டும். அப்போது அந்த உயிர்களை நோக்கி நாம் கடுஞ்சொற்களை வீசமாட்டோம்.
இராமாயணத்தில் அரக்கி அயோமுகியின் மூக்கை லட்சுமணன் அறுக்க, அவள் அலற, அந்த அலறலைக்கேட்ட ராமர், அவளைக் கொன்றுவிட்டாயா? என கேட்கிறார். ‘பெண்ணைக் கொல்வேனா?’ எனக் கூற நினைத்த லட்சுமணன், ராமன் தாடகையை கொன்ற நினைப்புவர, அப்படிச்சொன்னால் அண்ணன் வருத்தமடையக்கூடும் என நினைத்து, ‘இல்லை, அண்ணா! அவள் அலறினாள், விட்டுவிட்டேன்’ எனக்கூறியதாக சொல்லப்பட்டுள்ளது. அண்ணனிடம் லட்சுமணன் கொண்டிருந்த அன்பின் காரணமாக, ராமர் செய்ததைக்கூட சொன்னால் அவர்மனம் வருந்தும் என நினைத்த தம்பியின் பக்குவமான மனம், பண்பு நமக்கு வேண்டும்.
நாவினால் பேசமுடியும் என்பதால் எதை வேண்டுமாலும் எப்படி வேண்டுமானாலும் பேசக்கூடாது. நாவினால் பேச முடியுமோ தவிர அதன் பாதிப்புகளை களைய முடியவே முடியாது. பொய் பேசுவதை தவிர்த்து, உண்மை பேசவேண்டும், இனிமையாக பிறர் மனம் புண்படுத்தாதவாறு பேசவேண்டும். உண்மை சுடும் என்பதற்காக கேட்பவர்கள் நெஞ்சம் பாதிக்கும் வண்ணம் கடுஞ்சொற்களை உபயோகிக்ககூடாது. யாருடன் பேசினாலும் அவரை மீண்டும் நீங்கள் பார்க்கப் போகிறீர்களா என்பதற்கு உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் எந்த உத்திரவாதமும் கிடையாது. எனவே எந்த எதிர்பார்ப்பில்லாமல் நட்புரிமையுடன் பேசுங்கள். அவரின் மனதை காயப்படுத்தாமல் உரையாடுங்கள்.
ஓர் ஏழை கூலித் தொழிலாளி. நல்லவன். பரோபகாரி. ஓருநாள் கரும்புத் தோட்டத்திற்கு வேளைக்குச் சென்றான். வேலை முடிந்ததும் அவனுக்கு கரும்பு கட்டு ஒன்றையே கூலியாக அளித்தனர். அதைப் பெற்று வரும்போது பள்ளிச் சிறுவர்களைக் கண்டான். அவர்களுக்கு ஒவ்வொரு துண்டாக கொடுத்து ஆனந்தப்பட்டான். கடைசியாக ஒரே துண்டுதான் மீதியானது. அதை எடுத்துக் கொண்டு வீடுதிரும்பினான்.
அன்றைய சம்பாத்தியத்தில் மீதி அந்த ஒரு துண்டுக் கரும்பே என்றதும், அவன் மனைவி அளவிற்கு அதிகமான கோபமடைந்தாள். கையில் கிடைத்த அந்த துண்டு கரும்பால் அந்த தொழிலாளியை அடித்தாள். கரும்பு இரண்டானது. அடி வாங்கி வேதனையைக் காண்பிக்காமல் அன்பே.. ஒரு துண்டுக் கரும்பை இருவர் எப்படிச் சாப்பிடுவது எனக் குழம்பியிருந்தேன். நல்லவேளை நீ அதை இரண்டாக்கினாய். வா! ஆளுக்கு ஒன்றாக கரும்பைத் ருசிக்கலாம் என்ற அவனின் இனிய அன்பு மொழிக்கேட்டு மனம் வருந்தினாள். மனம் திருந்தினாள். அன்பு கொண்டாள். அன்பு மனைவியினால் கரும்பின் சுவை அதிகரித்தது.
உண்மையை இனிமையாக அளவோடு பேசவேண்டும். நம்மைச் சுற்றியுள்ளவர்களின் இதயங்கள் நம்மிடமிருந்து குளிர்ந்த, பிரியமான, இதமான, இனிய சொற்களுக்காக ஏங்கிக் கிடக்கின்றது. அந்த சொற்கள் அந்த இதயங்களுக்கு மகிழ்வை ஏற்படுத்தி ஓர் மலர் பூத்ததுபோன்ற இனிய சுகத்தை தரும். சந்தோஷம் பிறக்கும். பிறர் சந்தோஷமாயிருத்தல், நம்மை சுற்றியுள்ளோரை சந்தோஷப் படுத்துதல் நம்கடமை. அது சந்தோஷக் கூட்டமாகட்டும்.
அதுசரி! கடுஞ்சொற்கள் உங்களை நோக்கி வீசப்பட்டால் என்ன செய்வது. ஒருவர் ஒரு பொருளை உங்களுக்கு அன்புடன் கொடுத்தார் என்றால், அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிடில் அது அவரையே சேரும். அதைப்போன்றே உங்கள்மேல் வீசப்பட்ட கடுஞ்சொற்கள், நீங்கள் குற்றமற்றவர் என்றால், அதை முற்றிலும் மறுத்து நிராகரித்தால், அதே சொற்கள் பயனின்றி போகும். உபயோகித்தவருக்கே அது சேரும்.
எனவே கடுஞ்சொற்களற்ற இன்சொற்களையே உபயோகிக்க பழகுங்கள். அன்பு இல்லாமல், ஏதோ ஒரு காரணத்திற்காக, பொருள் காரணமாக ஒருவர் பேசுகின்ற இனியசொல் அதைக் கேட்பவனுக்கு துன்பத்தைத் தரக்கூடியதாகும்.
ஒருவரை வார்த்தைகளால் சுட்டால், அது அந்த மனதில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி பகைமை வளர்த்துக் கொண்டே இருக்கும். பின்னாளில் அது பழிவாங்க தயாராக இருக்கும். பாஞ்சாலியின் சுயம்வரத்தில் கர்ணன் கலந்துகொள்ள, ஓரு தேரோட்டியின் மகனை ஒருநாளும் மணக்கமாட்டேன், என கூறிய சொற்கள் கர்ணன் மனதில் பதிந்துவிட்டன. தர்மவாணாகிய கர்ணன், பாஞ்சாலியை துச்சாதனன் துகிலுரிந்தபோது, அமைதியாக இருந்ததற்கு இதுவே காரணம்.
துரோணரும், துருபதனும் நண்பர்கள். நட்பில் நான் அரசனனால் அரசில் பாதி தருகிறேன் என்றான். பின்னாளில் மிகுந்தகஷ்டங்கள் ஏற்பட்டபோது நண்பன் கூறிய வார்த்தைகளை நம்பி துரோணர், துருபதனிடம் செல்ல அவரை கடுஞ்சொற்களால் மிகுந்த அவமானத்திற்குள்ளாக்கினான். துரோணர், அர்ஜுனனின் ஆசிரியரானபோது குரு தட்சனையாக துருபதனை கைதுசெய்து, துரோணர் முன் நிறுத்தினான். அப்போது துரோணர் துருபதனிடம், நீ இப்போது எல்லாவற்றையும் இழந்து விட்டாய். உன் நாடு என்னிடம். அதில் பாதியை உனக்கு தானமாகத் தருகிறேன். நாம் இருவரும் சமம் என துரோணரைக் கூறவைத்தது, அன்று துருபதன் விதைத்த கடுஞ்சொற்களின் விளைவே.
அதைப்போன்றே சிசுபாலன் தகாத கடுஞ்சொற்கள் கூறவே, அவைகளைப் பொறுமையுடன் கேட்ட கிருஷ்ணன், அந்த வார்த்தைகள் 1000க்கு அதிகமாகவே இனியும் பொறுமை காட்டலாகாது என அவனை சக்ராயுதத்தால் கொன்றதாக சொல்லப்பட்டுள்ளது. வாழ்வுப் பயணத்தில் கடுஞ்சொற்களைவிட இன்சொற்கள் மிகவும் பயனளிப்பவை என்பதை புரிந்து கடுஞ்சொற்களை தவிர்த்து, இன்சொற்களை உபயோகிக்கப் பழகுங்கள். அவைகள் உங்கள் நிலையை உயர்த்தும்.
ஒரு கோவில் யாணை இயல்பாகவே சாதுவான குணமுடையது. யாணைப் பாகனின் சொல்லுக்கு கீழ்படிந்து இருந்தது. கயவர்கள் பலர் யாணக்கூடத்தின் அருகே இரவில் சந்தித்து தங்களின் செயல்கள் பற்றி விவாதிக்க ஆரம்பித்தனர். இரக்கம் அற்றவர்களாகவும், தயவு தாட்சண்யம் அற்றவர்களாகவும் நடந்து கொள்ளவேண்டும் என்பதைப்பற்றி அடிக்கடி கேட்ட யாணையின் செயல்களில் மாறுபாடு தெரிந்தது. ஒருநாள் திடிரென்று அது யாணைப்பாகனைத் தாக்கியது. பலத்த காயம் அடந்தான்.
அதிகாரி மேலதிகாரியின் ஆலோசனையைக் கேட்டார். விசாரனை நடந்தது. முடிவில் நல்ல இயல்பான சாது குணமுடைய யாணை தொடர்ந்து தீவினைச் சொற்களை கேட்டதால் ஏற்பட்ட மாற்றம் என அறிந்து, இரவில் காவல் பலப்படுத்தப்பட்டது. யாணை தொடர்ந்து தீச்சொற்களை கேட்காததாலும், கோவிலில் நடந்த ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் பஜனை போன்றவைகளையே கேட்டதாலும் அதன் போக்கில் மாறுதல் தெரிய ஆரம்பித்தது. எனெவே எந்த ஆன்மாவாயிருந்தாலும் தொடர்ந்து துர்போதனைகளையும் கடுஞ்சொற்களையும் கேட்டுக்கொண்டிருந்தால் அந்த ஆத்மாவின் செயல்பாடுகளில் வக்ரம் தென்படும். இன்சொற்களே நல்ல பலன் தரும்.
ஒவ்வொரு மொழியிலும் இனிய சொற்கள் நிறைந்து கிடக்கும்போது, கடுமையானச் சொற்களைக் கூறுவது என்பது, கனிகள் நிறைந்திருக்கும்போது காய்களைத் தேடுபவன் செயலாகும். எல்லோருக்கும் துன்பம் தரும் கடுஞ்சொற்களைத் தவிர்த்துக் கூறும் இனிய சொற்கள், இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தைத் தரவல்லது-குருஸ்ரீ பகோரா.