ஓம்நமசிவய!
மழைபொழி இமயவல்லி சேய் தழைசெவி எண்தோள்
தலைவ திங்கட் சடையோன் செல்வ எங்கட்கு அருளும்
இறைவா ஆறுமுகச் செவ்வேட்கு அண்ணா
சிறுகண் களிற்றுத் திருமுக போற்றி! போற்றி!
#####
திதி!
411. உலக உயிர்களுக்கு அருளைச் செய்யும் சிவனே வெளியாகவும் இருளாகவும் இருக்கின்றான். அவனே ஞானியர்களால் புகழப்படுபவனாகவும் அஞ்ஞானியர்களால் இகழப்படும் பொருளாகவும் உள்ளான். அவனே உடலாகவும் உயிராகவும் இருப்பான். கலந்து நின்று உயிர்களின் அறிவுக்கு அறிவாய் அறிவு விளங்க நிலை பெற்று நிற்பான்.
412 .சிவனே எல்லாத் திசைகளிலும் பரவி தேவர்களாக இருப்பான். அவனே உடல், உயிர், வான் தத்துவக் கூற்றில் பொருந்தியும் கடலாகவும், மலையாகவும அசையாத பொருள்களாகவும் உள்ளான். அவனே தலைவனும் ஆவான்.
413. சிரசின் மீது பொருந்திய ஒளிமயமான வான்பகுதியில் விளங்கும் அருளை வழங்கும் மூர்த்தி உடலாகவும் உயிராய் உலகமாய் கடலாய் இருண்ட மேகமாய் மழை நீரைப் பொய்பவனாகவும் இருக்கின்றான். இவைகளுக்கு நடுவில் இருந்து அழியாதவனாய் நிலைத்திருந்து விளங்குவான்.
414. சிவபெருமான் எட்டு திசைகளிலும் தேடித்திரியும் உடலுடன் உயிர் கூடிப் பிறக்கும்படி செய்தவன். மங்கையரும், ஆடவருமாய் கூடுகின்றவரின் உள்ளத்தில் எழுந்து நின்று ஒன்றை ஒன்று விரும்பும் விருப்பை உண்டாக்கும் அருள் தன்மையை நான் அறிவேன்..
415 சிவனே உலகம் அழிய வேண்டிய காலத்து மழையைத் தவிர்த்து சூரியனாய் அழிப்பான். அவனே சூறாவளிக் காற்றாகி அழிப்பான். பெருமழையைப் பெய்யச் செய்து வெள்ளம் தோன்றி அழிவை செய்வான். அவனே திருமாலாய் விளங்கி உலகத்தையும் காப்பான்.
416. பெருமானே அன்பு, அறிவு, அடக்கம் ஆகிய பண்புகளாக இருப்பான். அவனே இன்பத்திற்கும் இன்பக் காரணம் மற்றும் கூட்டுறவிற்கும் காரணமாய் இருப்பான். அவனே கால எல்லையை வகுத்து அதை முடிப்பவனாகவும் இருப்பான். மாயையைப் புரியும் நாதம் விந்து சதாக்கியம் மகேசுவரம் சுத்த வித்தை என்ற ஐந்தில் பொருந்தி தொழில்களைச் செய்வான்.
417. பெருமானே மாயையினின்று உலகைப் படைப்பவன் ஆவான். உயிர்களுக்கு பிறவி தருபவன் அவனே. பெரிய குடமாகிய பேரண்டமும் சிறிய குடமாகிய சிற்றண்டமும் ஆலயம் என்ற உடம்பும் மற்றவைகளையும் குயவனைப் போல் மண்ணால் மாயையினால் செய்ய வல்லவன் ஆவான்.
418. எம்பெருமான் நந்தி உடலின் உள்ளே உயிர்ப்பிற்காக மூச்சுக் காற்றாய் இருப்பான். அந்த தத்துவங்களுடன் கூடாத உயிர்கள் வானத்தை இடமாகக் கொண்டு ஒளியாய் விளங்கினாலும் பெருமானே அசைவை உண்டாக்கும் உணர்வுடன் உடலுள் பரவி உயிர் வெளியேற விடாமல் கால எல்லையை தொழிலாக செய்கின்றான்.
419. உயிர்கள் உடலை விட்டு நீங்காவண்ணம் தாங்கி கால எல்லையில் உடம்பினின்று பிரித்து உயிரை காத்தல் அவனையன்றி வேறு ஒருவரும் இல்லை. பின்வரும் ஏழு பிறவிகளுக்கும் யோகாநந்த நிலையில் வான் தலைவனான அச்சிவனே தாங்கிக் கொண்டுள்ளான்.
419. உயிர்களுடன் கூடி கலந்த நிலையில் சிவனைப் புறத்தே போய்த் தேடினால் அவன் அவர்க்கு தொலைவில் இருப்பான். அக்னிக் கலையைத் தூண்டி பிரமரந்திரம் போய் நெருங்கினால் அருளை வழங்குவான். எத்தனை பிறவி எடுத்து அவனை வணங்கினாலும் அந்தந்த பிறவியில் பணி செய்தாலும் இறைவன் அதற்கு உடம்பை தந்தருள்வான்.
#####