ஓம்நமசிவய!
தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!
#####
திருக்கோயில் இழிவு!
515. நிலைபொருத்தப்பட்ட கோவிலில் உள்ள இலிங்கத்தை பெயர்த்து வேறிடத்தில் வைத்தால் அந்நாட்டு ஆட்சி அழியும். பிடுங்கி வைத்தவன் இறப்பதற்கு முன் தொழு நோயால் பீடிக்கப்படுவான்.. காவலனாகிய நந்தி இதை உரைத்துள்ளான்.
516. நன்றாக கட்டப்பட்ட மதில் சுவரின் ஒரு கல்லைப் பெயர்தெடுக்கும் தீமை முடி சூட்டு விழா நடந்த மன்னனை வெட்டி வீழ்த்தும். தவம் முற்றுப் பெறாமல் முனிவர்கள் தடுமாறுவர். கல்லைப் பெயர்த்தவன் அந்தணன் ஆனாலும் அவர்களையும் வெட்டி வீழ்த்தும்படி செய்யும். இது சிவனின் ஆணை.
517. காலனை உதைத்த பெருமான் எழுந்தருளியுள்ள கோவில்களில் மறைகளின் விதிப்படி பூசைகள் தொடர்ந்து நடைபெறாமலிருந்தால் நீக்க முடியாத நோய்கள் மிகுந்து காணப்படும். மழை பெய்யாது. பெரிய மன்னரும் போர் ஆற்றலில் குறைந்து காணப்படுவர்.
518. சிவன் கோவில்களில் பூசைகள் நடைபெறாமல் தடைபட்டால் மன்னருக்குத் தீமைகள் உண்டாகும். நாட்டில் மழை வளம் குறையும். கன்னக்கோல் கொண்டு செய்யும் களவு மிகும். இது எம்பெருமான் நந்தி உரைத்தது ஆகும்.
519. தகுதியில்லா பார்ப்பான் கோவிலில் பூசை செய்தால் போர் தொடுத்துச் சென்ற மன்னருக்கு பொல்லாத நோய்கள் உண்டாகும். எங்கும் பரவியுள்ள நாட்டிற்கு பஞ்சம் ஏற்படும் என் நந்தியெம்பெருமான் ஆராய்ந்து உரைத்துள்ளான்.
#####