Print this page
திங்கட்கிழமை, 20 April 2020 16:16

தாரணை!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#####

தாரணை!

588. வெளியில் செல்லாமல் தடுக்கப்பட்ட மனதைக் கட்டுப்படுத்தி கீழ் நோக்காமல் தடுத்து நடு நாடியின் வழி போகும் மூச்சுடன் பொருத்தி வானத்தில் பார்வையை செலுத்தி எதையும் காணாத கண்ணுமாய் கேளாத செவியுமாய் இருந்தால் வாழ்நாள் அழியாது அடைக்கும் வழியாகும்.

589. மலை போன்ற தலையில் வான் கங்கை நீர் எப்போதும் பாய்ந்து கொண்டிருக்கும். சுழுமுனை நாடி வழியாகப் போய் நாத ஒலியுடைய சபையில் கூத்தாடிக் கொண்டிருக்கும் நீங்கா ஆனந்தத்தை அளிக்கும் பேரொளியை காண்பீர்.

590. தலையின்மேல் எழுந்தருளியுள்ள சக்தி மாற்றத்தை செய்யும் தேவியாகும், மூலாதாரத்தில் பொருந்தியிருக்கும் மூர்த்தியைத் தாரனை செய்து தலையில் எழுந்தருளி சக்தியுடன் சேருமாறு செய்தால் வயது முதிர்ந்தவனும் இளவயதுடையவன் ஆவான். நந்தி சிவபெருமானின் ஆனை இதுவாகும்.

591. மூலாதாரத்தில் உள்ள காம வாயுவை மேலே செல்லும்படி செய்துவிட்டு மைய வழியான சுழுமுனைமேல் மனதை இருத்தி நீர் ஓடும் கால்வாயில் மீனுக்காக காத்திருக்கும் கொக்கைப்போல் நாட்டமுடன் இருப்பவர்க்கு உடல் சிதையாமல் ஊழி காலம் வரை இருக்கும்.

592. உயிர் உடம்பில் பொருந்தியிருக்கும் காலத்தை கணக்கிட்டு அறிந்து கொண்டால் அக்காலஎல்லை பிராணனின் இயக்கத்தால் அமைந்திருப்பது புரியும்.
அத்தகைய உயிரில் பிராணனது இயக்கத்தை கட்டிச் சேர்த்து விட்டால் உயிருடன் கூடிய காலம் அழிவில்லாது நிற்கும்.

593. வாய் திறவாமல் மௌனத்தை மேற்கொள்பவரின் மன மண்டலத்தில் பிராணன் எனப்படும் சக்தி உள்ளது. அப்படியின்றி வாய் திறந்து பேசிக் கொண்டிருப்பவர் பிராணனை வெளியே விட்டு வீணாக்குகின்றார். வாய் பேசாதவர் பிராணனைச் செலுத்தி சோதியை அறிவார். சகசரதளத்தை திறந்து பார்க்க ஆற்றல் இல்லாதவர்கள் கோழைத்தனம் கொண்டவர் ஆவார்.

594. மனத்திலிருந்து இறங்கி பிரிந்து செல்கின்ற வாயிவை வெளியே போகாதபடி நடுநாடியில் செலுத்தினால் கண், காது, நாசி, வாய் ஆகிய ஏழு சாளரங்களையும் கருவாய் எருவாய் என்ற இரண்டு பெரிய வாயில்களையும் கொண்ட கோயிலான உடல் பெரும்பள்ளி அறையிலே பலகாலம் வாழலாம்.

595. புலன்கள் துய்த்து நிரம்பிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்து வாக்கு, கை, கால், குதம், கருவாய் ஆகிய கன்மேந்திரியங்கள் ஐந்து ஆகிய பத்தில் ஞானேந்திரியம் ஐந்தும் நீங்கினால் அறிவற்றவனாகி வருந்தி ஒரு பயனுமில்லை.. பொறிக்ளின் எல்லையைத் தாண்டி நிற்பவர்க்கு மனம் என்ற குரங்கை உடலில் குறும்பு செய்யாமல் இருக்கச் செய்ய முடியும்.

596. முன்னர் வந்து பிறந்தவர் எல்லாம் தாரணை இல்லாததால் அழிந்தனர். பின்னால் தோன்றுபவர் அழியமாட்டார் என்பதற்கு என்ன ஆதாரம். அவ்வாறு அழிகின்றவர் நிலையைப் பற்றி பேசி என்ன பயன் இது என்ன மாயம். ஆற்றில் இடிந்து கரையும் கரை போன்று நாளுக்கு நாள் அழியும் உடம்பு அழியாமல் இருக்குமோ!

597. ஐந்து பொறிகளால் அரிக்கப்பட்ட உடலை ஐம்பூதங்களில் வைத்து அப்பூதங்களின் ரசம், ரூபம், ஸ்பரிசம், சப்தம், கந்தம் ஆகிய் தன் மாத்திரைகளில் போகும்படி செய்து மனம், புத்தி, சித்தம், அகங்காரம் முதலிய அந்த காரண நாதத்தில் ஒடுங்கி இருக்க ஆன்மா சிவத்துடன் பொருந்தியிருந்தால் அதுவே தாரணை,

#####

Read 1553 times Last modified on செவ்வாய்க்கிழமை, 21 April 2020 10:10
Login to post comments