குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
ஏழாம் தந்திரம் (32)
ஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
#####
விந்து உற்பனம்!
1923. படைப்புக் காலத்தில் விந்துவில் உயர்வைச் செய்யும் குண்டலினியும் படைபுக்குக் காரணமான பரமாகாய மண்டலத்தில் விந்து காரியமான ஒன்பது பேதமான நான்முகன், முதலியவரும் அவர்களின் சத்திகளும் இவற்ரின் இயக்கத்தில் அந்தக் கரணங்கள் நிவிருத்தி முதலிய ஐந்து கலைகள் வைகரி முதலிய வாக்குஅளும் தோன்றின.
1924. விந்துவின் செயலால் நானமுகன் திருமால் உருத்திரன் மகேசுவரன், சதாசிவராகிய ஐவரும் ஐந்து உயிரில் பொருந்தித் தொழிற்படுவர்.. நாதபேத காரணத்தால் அது ஆறாகப் பிரியும். இவ்வாறு அமைவதால் உருவ விருத்திகளான நான்முகன் திருமால் உருத்திரர் மகேசுவரர் ஆகிய நால்வர் பால் மற்றத் தத்துவங்கள் பொருந்தும். இங்ஙனம் முப்பத்தாறு தத்துவங்களும் பொருந்தும்.
1925. வேறுபாடுகள் எல்லாம் பரவிந்துவால் உண்டாவன். தோற்றத்தைத் தரும் தூய மாயையும் வாக்கு சத்தியும் தற்பரையும் உயரச் செல்கின்ற பிரணவத்தில் மகிழ்வை உண்டாக்கும் குண்டலினியும் விந்துவிடம் இந்த நான்கும் பொருந்தி நிற்கும்.
1926. விளங்குகின்ற நிவிருத்தி முதலிய கலை அகராதி கலையில் பொருந்தும். வளமையுடைய உகாரம் மகரத்துள் அடங்கும். விந்து குற்றம் இல்லாத நாத முடிவை எய்தி அந்தக் கரணமாகிய மனம் முதலியவற்றுள் அந்தம் அடையும்.
1927. இறுதியும் முதலுமாகிய பராபரன் எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ள அந்த நெறியில் கிழங்கினைப் போன்ற முதற்காரணமான மாயையிலிருந்து உலகமான பிரபஞ்சத்தை தந்து ஐந்தொழிலையும் தான் செய்கின்ற விதையாகும்.
1928. விதையான விந்துவின் ஆற்றலால் ஆகின்ற் கண்டமும் அகண்டமும் விளங்கி வான் முதலிய ஐம்பூதங்களும் காரிய மாயையில் தோன்ற விந்து அவற்றின் உள்ளும் புறமுமாய் விளங்கும்.
1929. உள்ளும் புறமும் புகுந்து விளங்குகின்ற விந்துவின் நிறமானது வெண்மையாகும். நாதத்தின் நிறம் செந்நிறமாகும். அவை பொருந்துவதால் சிவசத்தி பதிதலாகும். இச் செயலால் ஆயுளும் ஆற்றலும் வீடும் அமையும்.
1930. உடலுக்கு வெளியே உள்ள ஒலி நிலையிலேயே ஆடையும் குடமும் வடிவு கொண்டு நிற்பதைப் போன்று நிலைபெற்று ஐந்து கலைகள் முதலிய காரணத்தினின்று காரியமாகிய உலகம் அனைத்துமாக விரிந்து மாயை ஆகும்.
1931. அகண்டத்தில் விதையாய் விளங்கித் தோன்றும் சிவமே பிண்டத்தில் விந்துவாக உள்ள இயல்பை மக்கள் உணரார். இன்பம் பொருந்திய சுவாதிட்டான மலரின் அன்னப் பறவை வடிவாக உள்ளவனே பரமாகாயத்தில் விளங்கும் சிவம் ஆகும்.
1932. வித்தின்றி முளையானது இல்லை. அதனால் அம்முளை விதையினின்று தோன்றுவதே அல்லாது வேறிடத்தில் தோன்றுவதில்லை. வித்தும் முளையும் ஒன்றை விட்டு ஒன்று இல்லாமையால் இரண்டையும் ஒரு பொருளாகக் கருத வேண்டும். அதைப் பொலவே விந்துவும் சிவமுமாகும்.
1933. உண்ட உணவுகள் பொருந்தும் உடல் உயிர் பொருந்துவதற்குரிய உடல் மனம் கழியும் மலம் என மூன்று பகுதியாகும். திருந்தும் உடலும் மனமும் ஆகிய இரண்டு பகுதியும் கூடி முன்னாள் உண்ட உணவின் சாரத்தால் அமைத்து இருந்தன.
1934. ஏழுவகையான தாதுக்களின் உணவு சாரம் இரத்தம் சுக்கிலம் என்னும் மூன்றால் உரிய நாளில் சாரம் குருதியாகி குருதி சுக்கிலமாக மாறி ஒரு புல்லின் முனையில் உள்ள பனித்துளி போல் அரிய விந்துவாக அமையும் இவ்வாறாய விந்து இருபத்தொரு நாள்கள் உடலில் வளரும்.
1935. உடலில் விந்துவானது மூன்று நாட்கல் கலந்திருக்கும். உடம்புள் மன மண்டலமாகிய ஒளி மண்டலமாகும் திருவடியில் ஒன்றி நின்றவர்க்கு ஒளி மண்டலம் நீங்காமல் நிலையாய் அமையும். அவ்வாறின்றி மாயா காரியமான உலக இன்பத்தில் ஈடுபடுவர்க்கு மனத்துடனே ஒளி மண்டலம் அழியும்.
1936. அழியும் விந்துவின் அளவை அறியமாட்டார். இருந்து அழியும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவும் அறியமாட்டார். அழியும் உடலில் அழிந்து தளர்ந்தவர் அழியும் தன்மையை அறிந்தும் விந்து நீக்கத்தினின்றும் நீங்க மாட்டார்.
#####
ஓம்நமசிவய!
யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!
#####
சமாதிக் கிரியை!
1910. அழிவில்லாத சிவஞானிகள் உடல் தீயில் வெந்து கெடுமானால் நாட்டில் உள்ள மக்கள் எல்லாம் வெப்பு நோயினால் பீடிக்கப்பட்டு வருந்துவர். கவனிப்பார் இல்லாமல் அழுகி நரி அவ்வுடலைத் தின்னுமாயின் நுண்மையான பகை மூண்டு நாட்டில் உள்ளவர் அழிந்து நாய் நரிக்கு இரையாவர்.
1911. ஞானியின் உடல் தீயில் இடப்பட்டு வெந்தால் சிவன் வீற்றிருக்கும் சிவன் கோயிலைத் தீயிட்டுக் கொளுத்தியதைப் போன்றதாகும். அந்த நாட்டில் மழை பெய்யாது. உலகத்தில் பஞ்சம் உண்டாகும். நினைத்தற்கு அரிய மன்னர் பதவியை இழப்பார்.
1912. சிவஞானியின் உடலைப் புதைப்பது புண்ணியமாகும். அவர்தம் உடலை நெருப்பை இட்டுச் சுட்டு எரித்தால் நாட்டில் அழிவு ஏற்படும், அந்த உடலைப் புதைக்காமல் மண்ணில் கிடந்து அழியும்படி விட்டால் உலகத்திலே அழகு அழியும். உலகம் எங்கும் தீ பிடித்துக் கெடும்.
1913. அழிவில்லாத ஞானி அருளைப் பெற்றபின் உடலை விட்டால் அந்த உடம்பைக் குகை ஒன்றைக் கட்டி அதில் வைக்க வேண்டும். அங்ஙனம் செய்தால் அழகிய மன்னரும் பழைய குடிமக்களும் அள்வில்லாத இன்பத்தை விளைக்கும் இறைவனின் அருளைப் பெறுவர்.
1914. ஒன்பது சாணுக்குக் குறையாமல் ஆழமாய்க் குழியைத் தோண்டி அங்ஙனம் தோண்டிய மண்ணைக் குழியைச் சுற்றிலும் ஐந்து சாணுக்கு அப்பால் வளைத்துக் கொட்டித் தவம் மிக்க குகையை முக்கோண வடிவமாய் பக்கம் மூன்றுக்கு மூன்று சாண் அலவுள்ளதாய்ச் செய்து பிறவியை நீக்கும் நல்ல குகையில் ஞானியின் உடலைப் பதுமாசனம்போல் இருத்திடுக.
1915. சிவஞானியின் மேனியினை நல் அடக்கமான குகை அமைக்கின்ற இடங்கள்: சமாதி செய்யவிருப்பவன் வீட்டின் பக்கம், நடை பாதையின் பக்கம், குளக்கரை, ஆற்றிம் நடுப்படுகை, பூஞ்சோலை, நகரத்தில் நல்ல பூமி, நினைத்தற்கு அருமையான காடு உயர்ந்த மலைச் சாரல் என்ற இடங்கள் ஆகும்.
1916. நெருக்கமாக உள்ளவர் நல்ல குகை நாற்புறமும் காலடியால் ஐந்து அடி அகலமும் உயரம் ஒன்பது அடி நேராக அமைய அழகமைந்த குகையின் குறுக்களவு மூன்றுக்கு மூன்றாக செய்யும் முறையாகும்.
1917. ஐந்து வகை உலோலங்களையும் ஒன்பது வகை மணிகளையும் குகையினில் பரப்பி மிகுதியாய் இடவேண்டும். அதன்மீது இருக்கையை அமைத்துத் தருப்பையைப் பரப்பி திருவெண்ணீற்றை நிறைய இட வேண்டும். அதன் மீது பொற்கண்ணப் பொடியைப் போடவும் வேண்டும்.
1918. குகையின் நடுவில் நான்கு சதுரமாய் செய்து அதன் மீது தேன் ஒழுகும் மலர் சந்தனம் கத்தூரி அகியவற்றுடன் தெளிவான சாந்து, புனுகு, பன்னீர் என்பனவற்றை சேர்த்து தெளியுங்கள். ஒளி பொருந்திய தீபத்தை அக்குகையில் காட்டுங்கள்.
1919. வெண்ணீற்றுப் பூச்சாகிய சட்டையை மேலே இட்டு ஞானியின் உடலை இருக்கை மீது அமர்ந்தி பூ அறுகம்புல் நறுமணப் பொடி வெண்ணீறு ஆகியவற்றை அணிவித்துக் குகையின் மீது வைத்து நான்கு பக்கமும் மண்ணை விரித்து சமம் செய்யுங்கள்.
1920. வெண்ணீறு முதலியன விரித்தபின் நான்கு பக்கங்களிலும் பரப்பி பொரிக்கறி உணவு இளநீருடன் குருவின் திருவடியையும் இட்டு காதணி முகம் கண் முதலிய வற்றைச் சாத்தியபின் மேலே மேலாடை சாத்துங்கள்.
1921. திருநீற்றையும் நறுமணப் பொடியையும் மேலே சொரியும் தர்ப்பையையும் விலவ மலர் கொண்டு பாத்தியம் ஆசமனம் அர்க்கியம் தந்து நிலத்தின் மீது மூன்றுக்கு மூன்று அடி மேடை அமையுங்கள்.
1922. மேடை மீதில் அரசமரக்கன்று அல்லது சிவலிங்கம் எண்ணும் இவற்றுள் ஒன்றை நிறுவி சமாதியின் மேன்மையான சந்நிதிக்கு வடக்குத் திக்குப் பக்கம் அல்லது கிழக்குப் பக்கம் ஆகியவற்றுள் ஒன்ரு அமைய அன்புடன் பதினாறுவகை உபசாரம் செய்வீராக!
#####
ஓம்நமசிவய!
ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!
#####
பூரணக் குகைநெறிச் சமாதி!
1902. சிவயோகி வினைப் போகத்திற்காகத் தாங்கிய இவ்வுடலை விட்டானாயின் அவனது ஆன்மா வளர்பிறையானால் தேவர்களுடன் தங்கி ஓளியில் நின்று பழகினவன் ஆனால், கதிரவ மண்டலத்தில் சிலநாட்கள் தங்கி தளர்ச்சி இல்லாத பிதுர் உலகில் சில நாட்கள் தங்கியிருந்து சந்திர மண்டலத்தைப் போய்ச் சேரும்.
1903. சமாதி கை கூடாமல் உடலை விட்டவர் போக வேண்டிய இடத்துக்குப்போய் அங்கு நியதி முடிந்தபின்பு புவியில் பிறந்து பிரார்த்துவ வினைகளைத் தூய்த்து மீண்டும் பிறவாத பெரிய யோகத்தை திருவருள் துணையாக நிறைவு செய்வர்.
1904. புவியில் பிறந்த யோகி மற்ற் உலகத்தார் போல் உண்டு உடுத்து உறங்கி வாழ்ந்து எல்லாவற்றுக்கும் மேலான சிவயோகத்தில் தலைப்பட்டு முயலும் போது ஆகும் அந்த ஒளியில் ஒளிவடிவம் பெறுவதற்கு முன் உடல் சித்தி பெற்று மதிக்கத்தக்க உடலை அடைவர்.
1905. சிவயோகியான ஞானியர் யோகம் நிறைவுறாமல் உயிர் நீங்கி உடலை விட்டால் தவ உலகத்தை அடைந்து பின்பு பிறந்து சிவயோக வாயிலாகச் சிவஞானம் நிலை பெற்று விளங்குவார். அவர்கள் ஒளியுலகத்தவரால் போற்றப்படும் புண்ணியர் ஆவார்.
1906. குறைவில்லாத சிவ ஞானியான நல்ல யோகி உடலை விட்டுப் பிரிந்தால் தான் என்ற நினைவில்லாது மோன நிலையில் இருந்து சிவமான தன்மையை அடைவர். அன்னார் வேறொரு உடலில் புகாமல் நின்மல் முத்தராய் விளங்கி உலகத்தில் மீண்டும் பிறவிக்கு வரமாட்டார்.
1907. இறந்தவர் அடையும் பயன் எதுவென்றால் இறந்தபின் நீங்கள் அடைவது சித்தியாகும். அது கூடுமானால் இறந்தவர் உலகில் இருந்தவரே ஆவார். அந்தச் சித்தர் மும்மலங்களையும் அழித்தவர் ஆவார்.
1908. பிரணவ யோகத்திலிருந்து பிரணவத்துக்குரிய எல்லா வல்லமையுடைய சிவத்தின் அருளைப் பல முறையும் சிந்திக்கப் பரசிவமே அந்த ஞானியர்க்குச் சத்தியின் கூட்டத்தை அருள்வாள். அங்ங்னம் தாம் பெற்ற அருளை எத்தகைய பக்குவம் வாய்த்தவர்க்கும் வேண்டி அளிப்பவன் ஞானி. அவனவன் விருப்புக்கேற்ப மாணவனை ஈசன் வடிவாக அமைத்தருள்வான்.
1909. நீக்கம் இல்லாமல் எங்கும் விளங்கும் சிவத்தின் அருள் நடுவில் பொருந்தியிருக்கும் சிவஞானிக்கு எங்கும் சிவமே தோன்றும். அங்கங்கே உள்ள நிலம் முதலிய பூதங்களை விழுங்கி அவற்றுள் கலந்துள்ள வானம் போன்று ஈசன் வடிவு பெற்ற ஞான உடல் உணர்வு விட்டு எல்லாவற்றிலும் கலந்திருக்கும்.
#####
ஓம்நமசிவய!
களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!
#####
முத்திரை பேதம்!
1892. பதினொரு கருவிகளும் சிவபோத வழியினின்று சிவபோத வழியில் மாறவே வந்த முத்திரை, அமுதம் சுரக்கும் பிரணவத்தில் அழுந்தச் செய்யும் யாவற்றுக்கும் மேலான சிவன் திருவடியை அடையச் செய்யும் ஆரவாரம் அடங்கி மேலான வீடு கிட்டச் செய்யும்.
1893. சீவ துரியம், பர துரியம், சிவ துரியம் என்னும் மூன்று துரியங்களும் அடங்கும் இடமாகி அருமையாய்ப் பேசும் நாவின் செயலை அடக்கிப் பொருந்திய சாம்பவியும் கேசரியும் உண்மை நெறியைப் பெருக்கி ஞானம் விளங்கும் முத்திரையாம்.
1894. சாம்பவி முத்திரை குருநாதனின் அருட்பார்வையை உண்டாக்குவதால் அஃது ஒன்றன்பின் ஒன்றாய் தொடர்ந்து வரும் பிறவியை அகற்றி அருள் அமுதம் வழங்கும் முத்திரை. பிரணவத் தியானத்துடன் பொருந்தியிருக்கும் கேசரி சிவயோகமாகிய் நாம் பயிலக்கூடிய உண்மையான ஞான முத்திரை.
1895. ஓர் ஆதாரத்தில் விளங்குவது சதாசிவம். ஆதாரம் இல்லாமல் நிராதாரத்தில் அறிவு வடிவாய்த் திகழ்வது பரசிவம். ஆதலால் வடிவம் உடைய நான்முகன் திருமால் உருத்திரன் மகேசுவரன் உருவச் சதாசிவர் ஆகியவரின் நிலையைக் கடந்த மௌன நிலையே முடிவுடைய முத்தி நிலையாகும்.
1896. வாக்கு மனம் என்ற இரண்டும் தொழில் இல்லாது இருப்பது மோன நிலையாகும். வாய் பேசாமல் மட்டும் இருப்பது ஊமையாகும்.. வாக்கு மனம் ஆகியவை தொழிற்படாதவரே தூய்மை உடையவர் ஆவார். அங்ஙனம் ஆக்கும் அத்தூய்மையான நிலையை அறிபவர் யார்.
1897. யோகம் ஒருவர்க்கு வந்து அடைந்ததற்கு அடையாளம் எண் பெருஞ் சத்திகளைப் பெறுதலாம். இறைவனுடன் ஒன்றுபடும் ஞான முத்திரைகளை ஆராயும் போது வேதத்தில் கேசரியும் சாம்பவியும் சிறப்பாய் பேசப்படுவன்வாகும். யோக நிலையில் எண்ணிப் பார்க்கில் கேசரியே யோக முத்திரையாம்.
1898. ஒரு யோகியானவன் எட்டுப் பெருஞ் சித்திகளையும் பெற்று அருள் ஒலி வாசனையில் இருப்பவன். அவனே அறம் பொருள் இன்பம் வீடாகிய பொருள்களை அறிந்து அனுபவிப்பவன். அவனுக்கு ஆதார சோதனையும் நல்ல சத்தியும் அமையும். அவனே ஏகமாகிய சிவத்தைக் கண்டு அதனுடன் பொருந்தி ஒன்றாய் நிற்பவன் ஆவான்.
1899. யோக நெறியில் கூறப்படும் பன்னிரண்டு கலைப் பிரசாத நெறியே பதினாறு கலைப் பிரசாத நெறியாகும். இதனால் ஞானேந்திரியங்கள் கன்மேந்திரியங்கள் என்பவை காமம் முதலிய அறுபகை வழிச் செல்லாமல் அவற்றின் விருப்பத்தை விட்டு நிற்கும். இதுவே கேடில்லாத வேதாந்த சித்தாந்த இயல்பாகும். இறைவனைத் துணையாக மனத்துடன் சிந்தித்தல் நல்ல சுத்த சைவம் ஆகும்.
1900. முத்தார்க்கு உரிய அடையாளம் மோன முத்திரையாகும். குருவாக விளங்குபவர்களுக்குரிய அடையாளம் ஞான முத்திரையாகும். சித்தம் இனிக்கும் குண்டலினி யோகம் சித்தாந்த நெறியின் அடையாளமாகும். காற்று நிற்பதற்குரிய சமயம் கண்ட முத்திரையாகும்.
1901. தூய்மையான நெறியான கண்டத்தை இடமாகக் கொண்டு உயிர்வளி உச்சிக்குப் போகும். அது சகசிர நெறியைக் கண்டு பொன் போன்ற இதழ்களின் நடுவில் பொருந்தி நின்றது. அதன்மேல் வெண்மையான மதி மண்டலம் விளங்கியது, உயிர்வளி போகும் நெறியைக் கண்டு உள்ளம் தூயன் ஆகலாம்.
#####
ஓம்நமசிவய!
மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!
#####
போசன விதி!
1884. இந்த உலகத்தில் எட்டுத் திசையிலும் இறைவன் அடியவர்க்கு அளித்த உணவை அவர்கள் அமுதம் என்று ஏற்பர். ஏனெனில் உடலான ஒரு நிலத்தைப் பொருந்தி அதைப் போற்றுபவர் அவ்வாறு அதனைப் பாதுகாக்காமல் பாழாய்க் கிடக்க விரும்பமாட்டார்.
1885. அடியார் அச்சிவன் உடலுள் உயிர்க்கு உயிராய் விளங்கும் அருளை உணர்ந்தவர், உச்சிப் போதில் மனத்தில் அயர்ந்திருக்கும் தலைவனுக்குப் பிச்சை ஏற்று உண்டு வேறுபாடில்லாத ஞானம் கைவரப் பெற்று ஆசையைவிட்டுத் தனியே சகசிரதளத்தில் இருப்பர்.
#####
பிட்சாவிதி!
1886. விந்துவான விதையைச் சேமிக்க உடம்பான பாத்திரம் உண்டு. விதையை விதைப்பதற்குப் பாதுகாப்பான சக்சிரதளம் என்ற நிலம் உண்டு. ஆஞ்ஞை சக்கரமான் உச்சிக்கு முன்பு தியான்மான வடிவு அமைந்தது. அச்சம் இல்லாமல் மேல் முகமாய் விளங்கும் சக்சிரதளமான அந்த நிலத்தில் பொருந்திச் சமாதியான் பயனை அடைய மாட்டாதவர் விருப்பம் காரணமாய் வெளியே போய்ப் பிச்சை ஏற்ருத் திரிந்கிறார்களே என்னே!
1887. சுவாதிட்டான சக்கரத்தில் உள்ள பிரம்ம படைப்பான வீரியத்தை இறைவன் ஏற்றான். காம உணர்ச்சியால் கழியாமல் நன்மை பெற இவ்வாறு பலி கொண்டான். நான்முகனின் தலையைக் கொண்டே காமக் கலையை மேலே எடுத்துக் கொண்டு போகப் பலி ஏற்றான். நான்முகன் பரமாகவேதான் இப்படிப் பலியைக் கொண்டான்.
1888. நீக்கம் இல்லாமல் நிறைந்து ஏழு உலகையும் படைத்த இறைவனை உலகத்தார் யாசித்து உண்பவன் என்று இகழ்ந்து நகையாடுவர். அப்பொருமான் ஏன் இரக்கின்றான். இடைவிடாமல் தன்னையே எண்னிக்கொண்டிருக்கும் அடியார்கள் வீரியத்தை ஏற்று ஒளியாய் மாற்றத் தன்திருவடியை அருளினான்.
1889. சிவபெருமானை தன்னை அடியவர் வந்து அடையும் நெறியில் நின்று உதவுவான். தன் நல்ல மெய்யடியார்க்குத் தன்னை இன்பவடிவில் தர இருந்தான். அடியார்க்கு அடக்கலமாக அடையும்படி இருந்தான். இங்ஙனம் அவன் தம் வரவை நோக்கியிருத்தலால் அவனை அறியாதவன் எனக் கூறலாமோ!
1890. சிவன் அடியார் தீயை ஒத்த பசி, ஆசை, சினம் என்ற குற்றங்களில் தங்கார். உடல் இன்பத்தை அவர்கள் நாட மாட்டார்கள். இந்த உலகத்திலும் பொன்னுலகத்திலும் தங்க விரும்ப மாட்டார்கள். சிவத்தையே கூடிட விரும்புவார்கள்.
1891. உண்மையான ஆன்ம ஞனத்தைப் பெற்று அறிவில் தெளிந்தவர்களும் கொடுக்கும் வள்ளன்மை உடையவர். வாயிலுக்கே செல்வர் பிச்சைக்குச் செல்லாமல் ஈசன் செயல் என்று இருந்த தவம் உடையவர். உலகவர் எல்லாம் தம்மிடத்தே வருவதற்கு இருந்தவர் ஆவர்.
#####
ஓம்நமசிவய!
பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
#####
அடியார் பெருமை!
1868. திசைகளை உரிமையாகக் கொண்ட ஒரு பரம்பொருளை நாடும் தன்மையுடைய அடியார் நீங்காமல் இருப்பின் அந்நாட்டில் பகைப்பதற்கு ஒருவருமில்லையாகும். அந்நாட்டில் பருவ மழை முறையாய்ப் பெய்யும். அந்நாட்டில் விளையும் பொருளின் விலை தக்கதாய் விளங்கும்.
1869. முன்னைய புண்ணியப் பயனால் மண் உலகில் சிலலோக ஞானத்துடன் பிறந்து எடுத்த உடலிலேயே சிவவுலகத்தை அடையும் தவத்தைச் செய்வர். இவ்வுலகத்தில் சிவசத்தியின் ஆற்றலை அடைவர்.
1870. நாம் மேற்கொண்ட ஒளிமண்டலத்தில் எட்டுக் குலமலை உச்ச்சியும் கீழ் உள்ள நாகர்களும் அண்டங்களில் வாழும் தேவர்களும் ஆதிப் பரம் பொருளும் எட்டுத் திக்குகளில் உள்ள அனைவரும் வந்து என் கையில் உள்ளார் என்றாகி நாம் இனி உய்வு பெற்றோம்.
1871. ஏழு உலகங்களும் எல்லையில்லாத வானமும் உயிர்களும் உலகத்தில் உள்ள இயங்குபவை இயங்காதவையான எல்லாமும் அவற்றின் குண விசேடங்களும் பழைய வேதங்களும் படைத்தல் காத்தல் முதலிய தொழில்களும் அவை முறையாய் நிகழும்படி காண்கின்ற சிவனும் என் இடம் அல்லாமல் இல்லை.
1872. இறைவன் ஆண் பெண் பேடு எனப் பாகுபாடு உடையவன் அல்லன். அண்ட கோசத்தால் மூடியிருக்கும்போது உளே உள்ள அச்சோதியை எவராலும் அறிதற்கு இயலாது. கண்ணான கருவி இல்லாமலேயே காணும் செவி இல்லாமல் கேட்கும் சோதிக்குள் சோதியாய் விளங்குவான். அத்தகைய சிவத்தின் பெருமையை ஆராய்ந்து அறிந்ததே முதிர்ந்த ஞானம் ஆகும்.
1873. இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் சிவனடியார்கள் அறியாமையின் வழிப்பட்டு மயங்காமல் அறிவு வழிபட்டுச் செல்வர். அதனால் அவ்வடியார் வான் உலகத்தையும் ஆள்வர். அன்னாரின் தோள்களும் எட்டுத் திசையாம். அன்னாரின் திருவடித் தாமரைகள் பாதலத்தில் இருப்பவை. மயக்கும் தன்மை இ;ல்லாத வெளி அண்டமே அவர் சிரமாகும்.
1874. மனத்தின் கண் விளங்கும் இறைவனை எண்ணி மனம் அடங்கப் பெற்ற அடியார் துன்பத்தினால் வருந்த மாட்டார். ஆகவே அகங்காரம் அடங்கப் பெற்று உள் புகுந்து இறைவனை அறியும் உள்ளம் தன்முனைப்பு அற்றுப் புரியட்டகம் ஆன நுண்னுடலை அழிக்கவும் அவரால் இயலும்.
1875. எனக்குச் செல்வாகவும் வரவாகவும் காதலுக்குரிய துணையாகவும் அழிவாகவும் உள்ளவன் இறைவன். இத்தகைய இறைவனை யான் எண்ணியபோது பழியும் புகழும் அவற்றால் ஏற்படும் பயனும் ஆகிய அனைத்தையும் நீங்கிய என் உயிராகிய நிலத்தை அவன் பக்குவம் செய்தான்.
1876. என் தாயுடன் என் தந்தை எழேழ் பிறப்பும் முன்னமே சிவனுக்கு அடிமை என்று எழுதிக் கொடுத்த அடிமை ஓலையை தான் ஒருவனாய் நின்று உலகம் அனைத்தையும் படைத்த முதல்வன் எழுதினான். மேகம் போன்ற கரிய நிறம் உடைய திருமால் சாட்சிக் கையெழுத்திட்டான்.
1877. ஐயம் கொள்ளாமல் தன்னையே தம் முதல்வன் என்று துணிந்து வழிபட்டால் நெஞ்சில் இறைவன் பொருந்திக் தங்குவான் தன்னை வணங்குபவர் மனத்தில் பொருந்திய விருப்பத்தை நிறைவேற்றி வைப்பான். தன்னை அணியாகக் கொண்டவர் மனத்தில் வீற்றிருக்கும் அந்த முதல்வனை நினைத்துக் கொண்டே இருப்பவர் கைவிட முடியுமோ முடியாது!
1878. தேவரின் முடிமீது விளங்கும் ஒளிக்கதிரையுடைய சிவம் தனக்கு அடிமை செய்யத் தன் திருவடியை அடியார்க்குச் சூட்டியருளினான். பின்பு ஊன் உடல் நீங்கிய உணர்வு கொண்டு ஒளி மண்டலத்தை ஆளும் அப்பெருமான் பயனை அடையச் செய்தான்.
1879. இளம் பருவம் உடைய அடியவரை அவர்கள் மேற் கொண்டிருக்கும் கோலத்தைக் கொண்டு அன்னாரை இறைவன் அடிமை கொள்கின்றான். அந்நிலையிலும் அவர்க்கு ஒர் பேரின்பத்தை அருள்கின்றான். சிவக்கோலம் உடைய அடியார் ஒளிக்கதிரையுடைய சடை ஒளி நீங்காதபடி கட்டிக் கொண்டிருப்பர். அவ்வடியார் திருவடி உணர்வில் பொருந்துவது பெரிய தவம் ஆகும்.
1880. சிவன் அடியார் தம்மை நெருங்கி அன்பு செய்பவ்ர்களைச் சிவனிடம் அணுகும்படி செய்யவும் வல்லமை உடையவர் ஆவர். சிவன் அடியாரை அணுகி அவரையே விரும்பும் அடியாரிடத்தில் சிவனடியாரின் பெருமை வந்து அடங்கி விளங்கும்.
1881. பதினெட்டுக் கணத்தேவர்கள் எல்லாம் எல்லையில்லாத அன்பினால் இப்பெரிய பூமியில் வருவார்கள். அவரது வரவினால் பூமியினது எட்டுத் திக்கும் வானத்தைப் போன்று விளங்கப் பன்னிரண்டு காத எல்லைவரை உள்ளவர்க்கு நனமை உண்டாகும்.
1882. சிவன் அடியார் தங்கியிருக்கும் அப்பகுதி தீயவர் சேர்க்கையானது இல்லாது அறிவுடையவர் தோன்றக் காரணமாகும். புதிய யோகப் பயன்கள் கிட்டி மக்களிடம் நல்ல பண்புகள் விளங்கும். பிற்விக்குக் காரணமான மலத்தின் சேர்க்கை இல்லாமல் மேல் உலகும் கிட்டும்.
1883. மேலான் அறிவு வடிவன சிவன் பல உலகங்களைப் படைத்தான். அப்பெருமான் தான் படைத்த அவற்றைக் கடந்தும் உள்ளான். பல அண்டங்களில் வாழும் தேவர்கள் அவனை அறிவர். சிவத்தின் மெய்யடியார் அவனை அறிவர்.
#####
ஓம்நமசிவய!
உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பா
#####
மகேசுவர பூசை!
1857. ஓவியம் போன்று அமைந்த மாடங்களையுடைய கோவில்களில் உள்ள இறைவனுக்கு ஏதேனும் படையல் செய்தால் நடமாடும் மாடக் கோயிலாக விளங்கும். சிவன் அடியவர்க்கு வந்து சேரா. ஆனால் நடமாடும் கோயிலாக விளங்கும் சிவனடியார்க்கு யாதேனும் ஒன்றைத் தந்தால் அது மாடக் கோவிலில் உள்ள இறைவனுக்கு மன நிறைவை அளிக்கும்.
1858. தீமையில்லாத சிந்தைபொருந்திய தவத்தையுடைய செல்வர்கள் தாம் மகிழ்வுடன் உண்டது மூன்று உலகங்களும் உண்டதாகும் அவர்கள் ஏற்றுக் கொண்டது மூன்று உலகங்களும் ஏற்றுக் கொண்டதாம். இவ்வாறு எட்டுத் திக்குகளுக்கும் தலைவனான நந்தி எடுத்துரைத்தான்.
1859. ஒரு மாத்திரையாகிய அகரத்தில் பொருந்தி உறையும் யோகிக்குத் தந்த அரிய பொருள் மூன்று மூர்த்திகளுக்கும் மூவேழு தலைமுறையினருக்கும் அர்ப்பணித்ததாகும் அதைத் தெளிவீராக.
1860. ஆயிரம் நகரம் அந்தணர்க்கு தந்தால் உண்டாகும் பயன் யாது! ஆயிரம் கோயில்கள் கட்டி முடித்தலால் யாது பயன்! சொல்லப்பெறும் ஞானி ஒரு பகல் உண்ணும் உணவால் உண்டாகும் பயனுக்கு நிகராகாது என்பது உண்மை.
1861. ஆற்றுப் படுத்தும் வேள்வியைச் செய்யும் அரிய நூல் வல்லவர் எனக் கூறப்படும் அந்தணர் கோடிபேர் உண்பதில் திருநீற்றைப் பூசும் தொண்டர் ஒருவர்க்கு உணவு அளிக்க வேண்டும் என எண்ணுவதில் உள்ள பயன் இல்லை. அங்ஙனம் பார்ப்பனர்க்கு அளிப்பது பேறு என்றால் அஃது ஒரு சிறிய அளவு பேறாகும்.
1862. வெண்நிற ஒளியில் விளங்குபவனே இறைவனே எம்பிரானே என்று திருநீற்றை அணிபவர்களாகிய அடியவர் இவ்வுலகில் தேவர் ஆவர். கங்கை ஆற்றைக் கொண்ட சிவந்த சடையையுடைய சிவம் இவரே என்று எண்ணி வழிபடுவர்க்கு வினை இல்லை.
1863. சிற்ந்த ஒளிமண்டல நினைவைக் கொண்டு தன் சந்நிதியில் இட்டுச் சென்ற பெரிய நந்தி என்று பேசப்படும் ஒளீக்கதிர்கள் விளங்கும் சடையை=யுடையவனை நான் மிகவும் நெகிழ்ந்துருகித் தோன்றும் அளவு கூறுவதற்காக நந்தியான சிவனது திருப்பெயரைத் திரும்பத் திருமப எண்ணிக் கொண்டிருப்பேன்.
1864. அழியும் தன்மை அற்ற சிவனின் அடியவர்க்கு அறியாமையான இருள் நீங்கும். அந்நிலை கெடாதபடி அறியாமை நீங்கிய பண்பு கொண்ட சிவத்தை நாடி வணங்கி மேல் ஏழ் உலகத்தில் துன்பம் நீங்கியதுடன் இனபமும் ஏற்படும்.
1865. இறைவனை அறிவதற்குரிய பண்பு சிறிதும் இல்லாதவர் ஆனாலும் உள்ளே மகிழ்வு உடையவராய் நின்று வழிபடும் உபசாரங்களுடன் பலகாலம் பொருந்தி நிற்பின் உள்ளத்தில் களிப்புடையவராய் நிலை பெற்று நின்று ஆராய்ந்து தெளிந்து பாசம் நீக்குவர் ஆவர்.
1866. திருத்தமான கோலத்தை உடைய மகேசுவரர் உண்ட உணவு உருத்திரன் திருமால் நான்முகன் என்னும் மூவரும் உண்ட பெருமை உடையதாகும். சித்தம் தெளிவு கொண்டவர் மிச்சத்தை உண்டால் முத்தி உண்டாகும் என்று நம் மூலன் உரைத்த மொழி உண்மையாகும்.
1867. மகேசுவரர் தம் முயற்சியில் குன்றாமல் அருந்தவத்தைச் செய்து கொண்டே இருப்பர். உம்மைத் துன்பத்தில் ஆழ்த்தும் பிராரத்துவ வினை நீங்க அவருக்கே அறத்தைச் செய்யுங்கள். அங்ஙனம் செய்தால் அது பிராரத்துவ வினையை நீக்கி மேல் ஏறும் ஆகாமிய வினையுடன் மிஞ்சி நிற்கும். சஞ்சித வினையையும் ஒருசேர அழித்து விடும். பின்பு ஞான மண்டலம் விளங்கும்.
#####
ஓம்நமசிவய!
அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை
#####
குருபூசை!
1847. மூலாதாரத்திலிருந்து நந்தியின் திருவடியைப் பற்றிச் சுழுமுனை நாடி வழியாகய் மேல் எழுந்து போகும் போதனையும் அங்குப் பூசை செய்யும் முறையையும் ஆதாராமாய் உள்ள முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து ஆன்மா விளங்கும் அடியையும் கண்டு மனத்தால் போற்றுவேன்.
1848. காட்டில் வளர்கின்ற உறுதி பொருந்திய மணம் உடைய சந்தனக் கட்டையால் ஆன சாந்தினையும் சிறந்த மலர்களையும் வான் அளாவத் தூவி வழிபட்டாலும் உடலின் பற்றை விட்டு ஞானத்தால் உணர்பவர்க்கு அன்றித் தேன்போல் இனிய சக்சிரதளத்தை அடைய இயலாது.
1849 .ஞானத்தில் சிறந்திருந்த மெய்ப் பொருள் காட்சி அவ்வழி ஞானத்திலே பொருந்தி நிற்றலே அர்ச்சனை. இடைவிடாமல் உள்ளத்தில் வழிபாடு செய்தால் அதுவே சிறந்த வழிபாடு. அங்ஙனம் திருவடி அடைதலே தன் செயல் இன்றி இருப்பதாகும்.
1850. காலை நண்பகம் மாலை என்று மூன்று வேளைகளிலும் இறைவனை விரும்புங்கள். விருப்பம் கொண்டு நமசிவய என்று அவனது திருநாமமான விதையினைத் தெளியுங்கள். இந்த விதை அக்கினி கதிரவன் சந்திரன் ஆகிய மும்மண்டலங்களிலும் விளைந்து பயிராவதை விரும்பி நில்லுங்கள். இவ்வாறு வளர்வதே நந்தி என்னும் பெயரையுடைய தலைவனாகும்.
1851. சிவத் தாலங்களில் சிவபூசை செய்தல் நூறு மடங்கு சிறந்ததாகும். தவம் செய்பவர் சந்நிதியில் சிவபூசை செய்தல் ஆயிரம் மடங்கு உயர்ந்தது. இனிமேல் எவற்றிலும் எண்ணமில்லாத சிவயோகிக்குப் பிச்சையிடில் கோடி மடங்கு உயர்ந்ததாகும். ஆனால் சிவ ஞானிக்கு உணவை அளித்து அவர்கள் உண்பதைப் பார்த்தால் அது மிகவும் சிறந்தத்து ஆகும்.
1852. திங்கள் கலை கதிரவன் கலை ஆகிய இரண்டிலும் மூச்சு இயங்கும்போது வழிபாட்டைச் செய்தால் அசுரர்க்கு விருப்பத்தைத் தரும் செயல் ஆகும். திங்கள் கலை கதிரவக்கலை என்னும் இரண்டு நாடி வழி பிராணன் இயங்காமல் பொருந்தியிருக்கும் நிலையில் வழிபாடு செய்வது சிவனுக்கு பெரும் பூசையாகும்.
1853. சந்திரகலை சூரியகலை என்று எழும் இவை விந்துவும் நாதமுமாய் விளங்கும் மேலிடத்தில் நிலையான சிந்தனையானது மேலும் சாக்கிராதீதத்தைப் பொருந்தி நந்தியை பூசிக்க அதுவே சிறந்த பூசையாகும்.
1854. மனம் மூச்சு ஆகியவற்றை மூல வாய்வு மேல் செல்வதால் மாற்றி நிலையில்லாத உடலை அவற்றின் காரண பூதமான பூதங்களிலும் பூதங்களை அவற்றின் கார்ணமான தன் மாத்திரையிலும் ஒடுக்கி சிவன்ருளில் தோய்ந்திருந்து இன்ப அனுபவத்துடன் செய்யப்படும் தனிப் பூசையே சதாசிவமூர்த்திக்கு உரியதாகும்.
1855. கதிரவன் கலை திங்கள் கலை இயங்கும்போது செய்யும் பூசையானது இயல்பாய் உள்ள சிவத்திற்கு இணைந்த மலராக மட்டும் அமையும். கதிரவன் திங்கள் கலைகள் இயங்காமல் அக்கினிக் கலையில் இயங்கும்போது செய்யும் பூசையைத் தாழ்ந்த ஒளிக்கதிரையுடைய இறைவன் விருப்புடனே ஏற்றுக் கொளவான்.
1856. இரவு பகல் என்பது அற்ருச் சாக்கிராதீதத்து நின்று வேறு எண்ணம் அற்றுச் சிவானந்தம் என்ற தேனைப் பருகி இரவும் பகலும் இல்லாத திருவடி இன்பத்தில் திளைத்து இரவு பகல் அற்று அசுத்தமாயை சுத்தமாயை இரண்டையும் விலக்கி நின்றேன்.
#####
ஓம்நமசிவய!
வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.
#####
சிவபூசை!
1823. அரிய உயிரின் உள்ளம் எனும் மனமண்டலமே சிவபெருமான் வீற்றிருக்கும் கருவறையாகும். ஊனால் ஆகிய உடம்பு ஆன்மாவின் ஆற்றலைக் குறைத்து வைத்திருக்கும் இடம் ஆகும். வள்ளலான தலைவனைச் சென்று வழிபடுவதற்கு வாய் கோபுர வாயிலாகும். ந்ன்கு அறிந்து தெளிவு பெற்றார்க்குச் சிவனே சிவலிங்கம் ஆகும். இவ்வகையாய் உணர்ந்து வழிபடுபவர்க்கு வஞ்சனையைச் செய்யும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் மிக்க ஒளியுடைய விளக்காகும்.
1824. வேள்வித் தீயுனுள் இடப்படும் அவியை ஏற்கும் விரிந்த கதிரையுடைய சிவபெருமானுக்குப் படைக்கக்கூடிய பொருள் நம்மிடம் இல்லை. காலையிலும் மாலையிலும் படைக்கப்படுபவை மனத்தை மகிழச் செய்யும் பாடல்களான உணவாம். அதை நாம் படைப்போம். அதுவே அப்பொருமானுக்கு பால் நிவேதன்யம் ஆகும்.
1825. பால் போல் இன்சொல்லையுடைய பராசத்தியின் பாகனான பராபரனை சதாசிவ மூர்த்தியைத் தலையில் நிலைப் பெறச் செய்து உச்சி முகத்தை ஈசான முகமாகச் சுழுமுனையில் துதித்துச் சீலமான முகத்தைச் செய்யச் சிவம் ஆவர்.
1826. சிவத்தை நினைத்துக் கொண்டிருப்பதும் சிவத்தைப் பற்ரி மற்றவர்க்கு எடுத்துக் கூறுவதும் ஆன இரண்டு வழிகள் அல்லாமல் நாதவடிவினனான சிவத்தைக் காண்பது அரிதாகும். நாத வடிவினனான சிவத்தைக் கண்டு மகிழ வல்லவர் நீரை முகமாக உடைய சுவதிட்டானத்தில் விளங்கும் மூலவாயுவை எழுப்பிச் சிவத்தை தொடுயோகத்தில் அடையத்தக்கவர்.
1827. திருமுழுக்காட்டிலும் அலங்காரத்திலும் விளக்கிலும் தேவர்களின் மனத்திலும் இறைவன் வீற்றிருக்கின்றான். இதற்குக் காரணம் பஞ்சக்கவ்விய உபசாரத்துடன் வழிபாட்டு முத்திரையுடன் பக்தர்களுடன் கலந்து வழிபட்டதே ஆகும்.
1828. சிவபூசையான புண்ணியச் செயலைச் செய்பவர்க்குப் பொருந்தும் நீரும் பூவும் உண்டு. அண்ணலான சிவம் அவ்வாறு பூசை செய்பவர்க்கு அருள் வழங்கி நிற்பான். எண்ணில்லாத பாவிகள் எம் தலைவனான சிவத்தைப் பொருத்தமுற அறியாமல் வீணே அழிகின்றனர்.
1829. சிவனின் ஒன்பது நீர்களிலும் ஆடித் திளைக்கும் தன்மையைக் கேட்பாய். அவ்வாறு பொருந்தி உண்மை ஞானம் பெற்று உயர்ந்தவர் திருவடியைத் தூய்மையாய்க் கழுவித் தெளித்துக் கொள்ள முத்தி கிட்டப் பெறுமென்பது நம் மூலன் கூறியதாகும்.
1830. தேவர் பெருமானே அறிவு பூர்வமற்று ஞானியர் உறவு கிட்டப் பெற்றாலும் சிறப்பான பூவையும் நீரையும் நான் திருந்தும்படி வெளிப்படுத்தி மறவாமல் உன்னை வழிபடும் ந்ன்மையை மிகவும் பெறுவதற்கு அருள் செய்வாயாக.
1831. ஆயிரம் திருப்பெயர்களையும் சிவனின் திருப்பெயரான சிவசிவ என்பனவற்ரையும் துதிக்கும் வகையால் என் இறைவன் விளங்குவான். அவ்வமயத்தே வழிபாடுகளும் தேவர்கள் கூட்டமும் அலை ஓயாத கடலும் நீங்கள் வாழும் உலகத்தில் உம் ஆணைவழி நிற்கும்.
1832. உயிர்களிடம் ஐந்து ஐந்தாகப் பொருந்தியுள்ளவற்றைப் பக்குவம் செய்து தேவர் கூட்டம் வணங்க எனக்கு ஓர் இறுதியும் இல்லாத தலைவன் சிவத்தின் அருளுடன் சுவாதிட்டான சக்கரத்தில் பொருந்தி தெளிந்த உலகத்தின் ஐந்து இயல்புகளை அமைத்தருள் செய்தான்.
1833. சுவதிட்டான சக்கரத்தினின்றும் ஊர்த்துவ முகமாய் பாயும் வான் கங்கையின் நீரைக்கொண்டு கருக் கொண்ட மேகம் மேல் செல்வதைப் போல் மேலே சென்று தேவர்கள் தளிர்த்துள்ள பாசத்தில் கிடந்து தயங்கி நின்று வழிபடத் தவறாமல் எம் பெருமானின் அருள் வழிபடுவார்க்கு வாய்க்கப் பெறும்.
1834. நீர்ப் பெருக்கினை உடைய சுவதிட்டான சக்கரத்தினின்று விரிந்து மேல் ஒளி மண்டலத்தில் விளங்கும் சதாசிவருக்கு மனம் என்ற வான் மண்டலத்தில் புகுந்து நீண்டு உயர்ந்துள்ள ஆயிரம் இதழ்த் தாமரைப் பூவையேந்தி வஞ்சத்தனமையுடைய பிறவிக் கடலைக் விட்டு உண்மையுடன் வணக்கம் செலுத்தமாட்டார். சேற்றுடன் கூடிய துன்பக் கடலுள் விழுந்து கெடுகின்றனர்.
1835. உப்பங்கழிகள் பொருந்திய குலிர்ச்சியுடைய சுவாதிட்டான கடல் கள்ளான இன்பப் பெருக்கைக் கொண்டது. அதனை வழிபடுபவர்கள் விரிதலும் குவிதலும் உடைய மலர் மொட்டுகளின் இயல்பை அறிய மாட்டார்கள். அதனால் அவர்கள் பழியிலே விழுவர் ஆனால் பலரின் பழிச் சொல்லும் கெட உடலைக் கடந்து மேலே செல்பவரின் மேல் முகமாக உள்ள சகசிரதளத்தில் சிவன் பொருந்தி நிற்கின்றான.
1836. பயன் அளிககக் கூடிய பொருள் ஒன்று உண்டு. பயனை எண்ணிப் பலகாலும் மலரைத் தூவி வழிபட்டவர்க்குச் சிவன் தானே தன் வரவினைக் கூறும். கண்கள் மூன்றுடைய சிவனது திருவடியைச் சார்தலும் அதுவே வழியாய் எப்போதும் வெளிப்பட்டு விளங்கினான்.
1837. பெருமை கொண்ட மலர்களைத் தூவிப் பூசனை செய்து நின்று ஆரவாரம் செய்து எம் ஈசனின் அருளான திருவடியை வழிபடுபவர் முதன்மையான திருவுருவத்தைத் தாங்கி நின்ற தூய்மையானவனும் ஆன சிவனை யாரும் வழிபட்டு மனதில் உணரவில்லை.
1838. தேவர்களுடன் கூடிப் பிருதிவி தத்துவத்தில் பொருந்திய சுவாதிட்டான மலரின்று வான் கங்கையின் மேல் எழும் உணர்வில் வெளிப்படும் தூய இறைவனை நான்முகன் திருமால் உருத்திரன், ஆகிய மூவருடன் கலந்தும் வேறாகவும் விளங்கும் முதல்வனான சிவன் அருளும் முறையை எவர் அறிந்து எண்ண வல்லவர்கள்!
1839. சிவனை நினைக்க வல்லவர் சுவாதிட்டான மலரினின்று சுழுமுனை வழியாய் மேல் நோக்கிப் பாயுமுணர்வு என்னும் நீரை ஏந்தித் தவறு இல்லாது இறைவனின் பெருந்தவத்தை விரும்பி இரண்டு கண் எனும் மலர்களைச் சேர்த்தலால் தோன்றும் திருவடியைப் பற்றி மழைபோல் பொழியும் மேகம் போன்ற ஒளியில் நிலைத்து நில்லுங்கள்.
1840. காமத்தை வென்று காலம் தாழ்த்தாமல் விந்துவைத் தர்ப்பணம் செய்யுங்கள் என்று முன்னோர் உரைத்தனர். அங்ஙனம் செய்து சிவம் விளங்குகின்ற முறையில் அமைய விந்து நாதம் கலக்கும் சுவதிட்டான மலர் கொண்டு நாள்தோறும் வழிபட்டால் சிவன் உம்மை ஏற்றுக் கொள்வான். இது முன்பே சொல்லப்பட்டது அன்றோ!
1841. சுவதிட்டான மலர் கதிரவ சந்திரர்களாகிய கண்கள் என்பனவற்றை இறைவனுக்குச் சாத்தியும் எவராலும் தோற்றுவிக்கப்படாதவன் எனத் துதித்தும் வணங்கியும், நாள்தோறும் உலகினர் வழிபட அறிய மாட்டார். துன்பத்தைப் போக்கி மனதில் குற்றத்தை நீக்கினால் அதுவே பெருந்திக்கான வீட்டுலகம் போவதற்குரிய வாயில் ஆகும்.
1842 .உயிரின் தாமரையான சகசிரதளத்துக்கு மேல் இன்பம் உண்டாகுமாறு பொருந்தி எங்கும் விளங்கும் பரந்த சடையான ஒளிக்கிரணத்தையுடைய சிவத்தை மந்திர சாதனை செய்து சிவம் விளங்கும் நாதாந்தத்தில் பொருந்தும் படியான மந்திரத்தை உலகத்தார் அறியார்.
1843. சாண் அளவுடைய உடலுள் மறைந்து கிடந்த மாணிக்கத்தைக் காணும்படி அதன் உண்மை இயல்பை அறிபவர் இல்லை. அதைப்போற்றி வளர்த்து எண்ண வல்லவர்க்கு மாணிக்கப் பேரொளியாய் மனத்தில் புகுந்து விளங்குவான்.
1844. சிவன் பெருந்தன்மையுடைய நந்தியும் மாறு பாட்டைச் செய்யும் இருளினைப் போக்கும் சக்கரப் படையை உடையவனும் என்மனத்தை தன் பேரருளால் இடம் கொண்டவனும் வேண்டியவர்க்கு வேண்டியது அருள்பவனும் ஆவான். அச்சிவனை வான் மண்டலத்து வாழ்பவர்களான தேவர்கள் தாங்கி நின்றனர்.
1845. சமய தீடசிக்கு உடல் தூயமை அடைந்து தன் செயல் நீங்கிடும் சிறப்பான தீட்சையால் மந்திரத் தூய்மை உண்டாகும். சமயத்தில் சிறந்ததான நிர்வாண தீட்சையால் கலை தூய்மை ஏற்படும். சிவஞானம் உடையார்க்குச் செய்வது ஆசாரிய திருமுழுக்காட்டாம்.
1846. ஊழிதோறும் உணர்ந்து வழிபட்டவர்க்கே அல்லாது அழியாத ஆன்மாவை உணர இயலாது. பாற்கடலில் வீற்றிருக்கும் திருமாலும் நான்முகனும் ஓர் யுகம் சென்றாலும் அவர்களால் அறியப்படாமல் ஞானியர் உச்சியில் விளங்குவான்.
#####
ஓம்நமசிவய!
பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.
#####
அருள் ஒளி!
1814. திருவருளே ஏற்ற துணையாகும் என்று அதில் அழுந்தித் தன் செயல் நீக்கப் பெறாதவர் திருவருள் இயக்கத்தில் பொருந்த மாட்டார். அத்தகையவர் ஆணவம் கன்மம் மாயை மாயேயம் திரோதாயி என்ற ஐந்து மலங்களையும் நீங்குவதில்லை. அருளின் பெருமையை அறியாதவர் அதில் அழுந்தார். திருவருளால் தோன்றி அருளே கண்ணாக அறிபவரே அறிந்தவர்.
1815. குருநாதனான சிவன் மீண்டும் பிறவிக்கு வராத நெறியை அருளியவன். தெவிட்டாத இன்ப அமுதத்தை அருள் செய்தான். ஆயிரம் திருப்பெயரையுடைய பொருமானின் பயர்களில் ஒன்றான சிவ என்பதால் தெவிட்டாத இன்பத் திருவருட் கடலில் முழுகி ஆடுக என்று அருள் செய்தான்..
1816. உண்டாகின்ற ஆனந்தத்தால் ஆடியும் பாடியும் கண்ணீர் மல்கியும் அலறியும் சிவனின் பேரியல்பைத் தேடி நான் கண்டு கொண்டேன். கண்டு பொருந்திய அப்போதே வடிவம் அற்ற ஒளியை அளித்துத் தன் அருளால் எனக்குள் மேல் கீழ் உள் என்ற பாகுபாடு இல்லாது விளங்கினான்.
1817 .குருநாதன் ஆணவ மலத்தால் உண்டான பிறப்பும் அப்பிறப்பினால் உண்டான மாயா கரியங்களும் இடையில் வந்து பற்றிய பொய்க்கூட்டம் என்று தெளிந்து நீ இவற்றை நீங்கினாய் என்று திருவடி ஞானமளித்தான். அதலால் இதுகாறும் கற்றவற்றை விட்டு விட்டேன். அவனருளால் கிட்டிய நாதத்தை நான் பணிந்து அதன் வழியிலே சென்றேன்.
1818. ஞானம் என்னும் விளக்கை ஏற்றி எல்லை அற்ற பரம் பொருளை அறிந்து கொள்ளுங்கள். அப்பரம் பொருளின் முன்னம் மல மயா கன்மங்களாகிய உடலின் துன்பங்கள் யாவும் அகலும். மிக்க ஒளியை வெளிப்படுத்தும் ஒளி உடையவர் சிவ ஒளியும் தம் ஒளியும் கூடிக் கலந்து நிற்கத் திகழ்வர்.
1819. ஒளியும் இருளும் எக்காலத்தும் கெட ஒளியில் கலந்திருப்பவர்க்கு அருள் ஒளி நீங்காது. புறக்கண் எதையும் இருளில் அறியாமல் ஒளியில் அறிவது உலகியல் அது போன்று புறக் கண்ணுக்கு வேறான அகக்கண் விளங்கும்.. அண்டகோச அறிவில் இருள் நீங்கி உயிர் ஒளியைப் பெற்றால் சிவமாகும்.
1820. ஆணவத்தால் வெளியே திரிந்திரிந்த எனக்கு உன் பொன் ஒளியில் விளங்கும் நாதத்தை அளித்தாய். என் அண்டகோச ஒளியில் புகுந்து என்னை மலம் நீங்கப் பெற்றாவனாகச் செய்தாய். என் அறவாழ்வில் புகுந்து எனக்குக் கிட்டுவதற்குரிய அரிய அமுதத்தை அளித்தாய். நின் இத்திறம்தான் என்னே என்று மயங்கினேன்.
1821. அருள் எனப்படும் பரவெளி ஒன்றும் பெய்ப்பொருள் எனப்படும் புகும் இடம் ஒன்றும் வேறு வேறு என்ற மயக்கம் நீங்க என் மனத்தகத்தே புகுந்த பேரொளியைச் சிவம் என்று தெளிவீராக பின்னர் சிவசத்தி உண்டாகும்..
1822. இவ்வுலகில் சிவமானது பிறந்து இறாந்த கதை உண்டு என்றால் கூறுங்கள். செத்துப் பிற்க்கும் மற்றத் தெய்வகளை மெய்ப்பொருள் என் எண்ணுவதைக் கை விட்டு விடுங்கள். பருந்து வட்டமிடும் உடலை கீழே வீழ்த்தி அரிய உயிரைத் தெளிவடையச் செய்வோம். இந்த உண்மையை பிறர்க்கும் சொல்லுங்கள்.
#####
More...
ஓம்நமசிவய!
ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.
#####
திருவருள் வைப்பு!
1792. அறிய வேண்டிய நெறி கதிரவ நெறி, திங்கள் நெறி என இரண்டாகும். இத்தகைய கதிரவன் கலை, திங்கள் கலை விளங்கவே உயிருக்கு உருவமான உடல் அமைந்தது. அருள் என்னும் தெய்வ சத்தியைப் பெறத் திங்கள் நெறி பற்றியவர்க்கு அறமும் கதிரவ நெறி பற்றியவர்க்குத் த்வமும் ஆக உள்ளன. இந்த இரு நெறியிலும் மனத்தின் பண்புக்கு ஏற்பப் போகப் பொருள்கள் உடலுக்கு அமையும்.
1793. ஊனக் கண்ணால் காண்பதற்கு அரியவன் மனத்தில் பாவித்து அறியவும் அரியவன், குரு மண்டலத்தில் விளங்கும் நந்தியும் தொடுவதற்கும் அணுகுவதற்கும் தொலைவில் இருப்பவனாய் தோன்றுவான். அவனையே வேண்டிக் கிடப்பவர்க்கு அகநோக்கில் விளக்கொளியாவான். அப்போது அவனையே செறிந்திருத்தலால் உள்ளத்தில் இருந்த அஞ்ஞானம் விலகும்.
1794. விளக்கொளியைப் பார்த்து நின்றபோது அகக் காட்சியில் உலகத்தில் உள்ள எல்லா உயிர்ப் பொருள்களும் கருவாய்த் தோன்றும். வெறுக்கத்தக்க ஆணவ இருள் நீங்கின் உயிர்க்குயிராய் இருக்கும் பரமன் உண்மையைக் காணலாம். அவ்வாறு அவனிடம் செறிந்த சிந்தையை ஆராயின் ஞானமே வடிவான காட்சி தோன்றித் தேவ வடிவு உண்டாகும்.
1795. ஞானத்தின் திருவடிவைத் தெளிந்து அறியாமையால் காலங்கள் வீணாய் கழிந்தன. எம் சிவனான தலைவன் தன் சொருப நிலையினின்றும் பெயர்ந்து குருவாய் வந்து காட்டிக் காண்பான் அங்ஙனம் உண்மை அறிவே துணையாய்ப் பொருந்தி உணர்பவரிடம் பொருந்தி விளங்கும் தன்மை உடையவன் சிவன்.
1796. உயிர்களைப் பிணித்திருக்கும் வினைகள் அழிந்தபின்பு ஒளிமயமான சிவன் தானே அறிவான். தான் அறியாது இருந்தும் என் பக்குவத்தை என் குருநாதனான அவன் அறிவான். ஆனால் ஊனே உருகி உணர்வு மயமான பொருளை அறிந்தபின் இறைவன் தேனைப் போல் நோயைப் போக்கி இன்பத்தை வழங்குவான்.
1797. இவ்வுடம்பு தோன்றியபோதே ஒளியாயும் உயிர்ப்பாயும் இருக்கின்ற இறைவனை நான் அறிந்தே இருந்தேன். வான் மண்டலத்தில் வாழ்பவர்கள் இந்த உண்மையை அறியாமல் மயங்கி இருந்தனர். உடலின் உள்ளே உயிர்ப்பின் இய்க்கத்தை நடத்தும் ஒளிமிக்க கொழுந்தான் இறைவன் தான் அறியவில்லை என்றால் பின்பு யார் அறிந்து உதவ முடியும்.
1798. உல்கத்தார் அருளே எங்குமாக இருக்கின்றாது என்பதை அறியார். இறையருள் அறிபவர்க்கு அஃது அமுதம் போல் இனிமையைத் தரும் என்பதையும் உலகத்தார் எண்ணித் தெளியார். சத்தியே மிக நுட்பமாய்ப் படைப்புத் தொழில் முதலிய ஐந்தொழிலுக்கும் காரணமானது என்பதை நினைத்துப் பார்பதில்லை. அருட்சத்தியானது கண்ணாய் இருந்து எல்லாவற்றையும் ஒரு சேர கண்பதையும் உணரார்.
1799. அறிவின் உருவமான சிவத்திடம் பொருந்துவதற்கு ஏற்ற அறிவைத் தந்து கருவிகள் வழிப் புலன்களைப் பற்றும் ஆசையை உண்டாக்கி ஆன்ம அறிவுடனே திருவருளும் கலந்து கருவிகளுடன் பொருந்தாமல் கூடிப் புலனறிவு பெறும் தன்மையான் அறிவை அளித்து அடியவர் நடுவுள் இருக்கும் அருளை அளிக்கும் தன்மையுடையவர் சிவம் ஆயினர்.
1800. அருட் சத்தியால் பிறந்து வளர்ந்து அருளால் அழிந்து இளைப்பு நீங்கி மறைந்துள்ள அவனை ஒளிமயமான ஆனந்தம் அடையும்படி செய்து பின்பு அவன் தானே எழுந்தருளிக் குருமண்டலத்தை விளங்கச் செய்தான்.
1801. என் குருநாதன் தன் அருட்சத்தியால் இறப்பைக் தவிர்க்கும் ஒளி மண்டலத்தில் இட்டுத் திருவருட் சத்தியைப் பதிப்பித்து என்றும் ஒரேவிதமான அனபையும் அளித்து சிவபோகமாகிய அழுதையும் உண்ணச் செய்து அருளால் என் மனத்தில் எழுந்தருளினான்.
1802. அருள் என்னைப் பாசத்தில் பொருந்த்தி அனுபவிக்கச் செய்தது. அந்தப் பாசத்தினால் பற்றாகக் கொண்டுள்ள என்னை அதிலிருந்து வேறுபடுத்தியது, அந்த பாசத்தில் பற்று விட்டதும் அன்புப்பொருளான சிவத்துடன் கூடிய கூட்டத்தில் காட்சிப் பொருளுடன் பிரிவின்றி நிலைபெறச் செய்தது.
1803. பிறவிக்குக் காரணமான இருளைப் போக்கி ஒளியைத் தந்த பெருங்கருணை உடையவன், சிவனை இன்பத்துள் ஆழ்த்தி மறைக்காதபடி சத்தியை பதிப்பித்து மாதவன் உதவுவதால் குறையாத இயல்புடைய கடல் போன்ற கருணையாளன் மேலான பொருள்களுக்கு எல்லாம் மேலானவன். இத்தகைய இய்ல்புடை இறைவனை விரும்பினேன். இதனால் அவன் உறவாய் வந்து என் மனத்துள் புகுந்தான்.
1804. இறைவன் தன் அருளால் என் மனத்துள் புகுந்தான். அருள் இல்லாமல் இருளில் அழுந்தியிருப்பவர்க்கு மனம் புகுந்தாலும் அவரால் அறியப்படான். என் மனத்துள் புகுந்து ஆனந்த மயமாக்கிச் சிவமாகச் செய்தான். மனத்துள் புகுந்த காரணத்தால் நானும் ஆனந்த வடிவு பெற்றவன் ஆனேன்.
1805. ஆராயும் அறிவு மயமான ஆன்மாவுடன் அறியப்படாத மாமாயையும் மாயையின் காரியமான அந்தக் காரணங்களையும் ஐம்பூதங்களையும் இந்திரியக் கூட்டங்களையும் அவற்றுடன் பராசத்தி ஆதிசத்தி இச்சாசத்தி ஞானசத்தி கிரியாசத்தி ஆகிய ஐந்து சத்திகளையும் பொருந்தியது இறைவனின் திருவருட் செயல் ஆகும்.
1806. பூத காரியம் அனைத்தும் அருளால் நிகழ்வன. அவை மலக் குற்றத்தால் அசைவனவாகவும் அசையாதனவாகவு,ம் அருளில் நிலை பெற்றுள்ளன. இருள் எனவும் ஒளி எனவும் கூறுமாறு எங்கும் உள்ள இறைவன் தன் அருட்சத்தியே திருமேனியாகக் கொண்டு விளங்குவான். திருவருள் அன்றிச் சிவம் வேறாக இல்லை.
1807. சிவம் சத்தி மேலான விந்து நாதம், மேலான சதாசிவம் மகேசுவரன் உருத்திரன் பிறவியில் படும் திருமால், நான்முகன் ஈறாக ஒன்பது வேறுபட்ட வடிவங்களாய்ப் பிரிந்து ஏகனாய் ஒன்றியும் நடிப்பவன் சிவனே ஆவான்.
1808. குருட்டுத் தன்மையுடைய கண் உடையவர்க்குக் கதிரவன் முதலியவை விளங்க மாட்டா. தெளிந்த கண் உடையவர்க்குக் கதிரவன் ஒளியால் எங்கும் ஒளியாய்த் திகழும். அவை போன்று அருட்கண் என்ற பெயரையுடைய அரும் பொருளான சிவம் சத்தி விந்து நாதம் ஆகியவை தோன்றா. நெற்றிச் சக்கரம் திறந்தவர்க்குச் சிவன் தன் நான்கு அருவத் திருமேனிகளையும் உணர்ந்த்த முகத்தின் முன்பு தோன்றியருளுவான்.
1809. சிவத்தின் சத்தியே தனுகரண புவன போகங்களைப் படைக்கும். படைத்தவற்றைச் சத்தியே காக்கும். காத்தவற்றை அதுவே அழிக்கும். அழித்தவற்றை ஓய்வு தந்து அதுவே மறைக்கும். இவற்றுடன் கூடியவனே பரந்துள்ள பொருள்கள் யாவற்றுக்கும் மேலான தலைவனாக உள்ளான்.
1810. மேன்மையுடைய சிவம் சத்தி நாதம் விந்து என்னும் நான்கும் சிவத்துக்குரிய அருள் நிலையாகும். நீங்காத அருவுருவம் சதாசிவம் நிலை பெறுவதற்குரிய மகேசுவரம், அரன், அரி, நான்முகன், ஆகிய நான்கும் நீடிய உருநிலைகளாகும். அழியாத் இந்த ஒன்பதாயும் இவற்றைக் கடந்து நின்று இவை யாவற்றையும் இயக்குவதாயும் உள்ள பரமசிவம் ஒன்றேயாகும்.
1811. ஒப்பில்லாத தன்மையால் கேடற்ற சிவம் தானேயாக நிற்கின்றது. அதுபோல அவற்றின் உயிராக உயிர்களுடன் பொருந்தி அவற்றின் மனத்தே நேயப் பொருளான சிவம் துணை என்று கூறும்படி உடன் நின்று செலுத்தியது விளையாட்டே ஆகும்.
1812. அன்பினால் நிலை பெற்றுள்ள மலமற்ற சிவன் சத்தியுடன் கூடி அதனைத் தொழில்படச் செய்தான். அதனால் நாதம் தோன்றிய்து. விரிந்து நிவிருத்தி முதலாய் ஐந்து கலைகளைக் கூடி அழிவற்ற விந்துவாக விளயும்.
1813. எல்லாமாகப் பரவிப் பரவிந்து வடிவில் நிலைத்துள்ள சத்தியே அனைத்துத் தத்துவங்களிலும் நிறைந்து விளங்குகின்றாள் அவளிடமிருந்தே அசுத்த மாயையும் மேலான சுத்தமாயையும் விளைகின்றன. இந்த இரண்டு வகையான மாயையிலே தேவரும் விரிவாகக் கூறப்பட்ட பிரணவமும் அதன் வெவ்வேறான மந்திரங்களும் நான்கு வேதங்களும் எண்ணில்லாத அண்ட கோடிகளும் தோன்றும்.
#####
ஓம்நமசிவய!
தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!
#####
சம்பிரதாயம்!
1778. குருவானவர் மாணவரின் உடல், பொருள், ஆவி மூன்றையும் நீருடன் சுத்தம் செய்ய ஏற்றுக்கொண்டு படர்ந்த வினையால் வரும் பற்றை அறுமாறு விழியால் பார்த்து மாணவனின் தலையில் கையை வைத்து திருவடி ஞானத்தை விளக்கி விரையக் கட்டினையுடைய பிறவியைப் போக்கியருளினான்.
1779. உயிரும் உடலும் ஒளிப்பொருளான வியப்புப் பொருந்திய பரமும் பொருந்திய பிராணனும் இவற்றை இயக்குகின்ற சிவமும் சத்தி முதலியவற்றை அறிந்து உய்யும்படி குருநாதன் ஆட்கொண்டனன்.
1780. மேற்குத் திக்கை ஒளிரச் செய்த குருநாதன் நாள்தோறும் என்னை இங்கு நினைப்பாயாக என்று உணர்த்திய அப்பொருள் உச்சிக்கு கீழேயும் உள்நாக்குக்கு மேலேயும் உள்ளது. இதுதான் மேலான பதமாகும். இதனை கையால் சொல்ல முடியாது.
1781. தான் விரும்பியபடியே எங்கும் அனுபவம் இல்லாது பிதற்றித் திரிந்து கொண்டிருந்த என்னை என்னிடம் உள்ள குற்றங்களை எல்லாம் அகற்றி பின் குருவான தன்னையும் மாணவனான என்னையும் சமமாகச் செய்தான். நாணயமாற்று வணிகம் முடிந்தது.
1782. இவ்வுலகத்தில் வாழும் பல உயிர்கட்கு எல்லாம் தலைவனான சிவன் உடனாய் இருக்கும் இயலபை இவ்வுலகத்தவர் சற்றும் அறியார். சுத்த மாயையின் மாறுபாட்டைப் போக்கி எல்லாவற்றையும் கருவாகக் கொண்ட சிவத்தை அறிந்து கொண்டேன்.
1783. வினைக்கு ஈடாய் உலகத்தை உய்விக்க வேண்டும் என்ற நினைவு கொண்டு தன் ஞான சத்தியால் விந்து நாதங்களான திருவடியை விரும்பிப் பதிப்பித்தும் பெருமை அற்ற உடலில் பற்றை ஒழித்து சிவம் சீவனில் கலந்து மறைந்து அவனே தானாய் விளங்கும்.
1784. எனக்கு பக்குவம் வந்தபோது அடிமையாய் ஏற்றுக்கொள்ள எண்ணியவன் எனது உயிர் பொருள் உடம்பின் கருவிக் கூட்டம் ஆகியவற்றை அவனுடையதாக்க் கொண்டான். வல்லமை யாவற்றையும் த்ந்தவனே எடுத்துக் கொள்வதால் என்னிடம் உள்ளவற்றை எடுத்துக் கொண்டான் எனச் சொல்வதற்கில்லை.
1785. குறியாக கொள்கின்ற உடலும் உடலை உடைய உயிரும் குடி நெறிப்பட இயங்கும் பிராணன் நிலைபெற்ற சிவன் இயமனால் நீக்கப்படும் உடம்பை எடுத்துக் கொண்டு இயல்பை உடம்புடன் கூடியிருக்கும்போதே அறிந்து பிரிக்க அறிந்து கொள்ளாதவர் பேயைப் போல அலைவர்,.
1786. சிவன் என்ற ஒளியை உணரும் இய்ல்பு உடையவர்க்கு எல்லா நுண்ணிய உலகங்களும் விளங்கும். அத்தகைய உணர்வு உடையவர் இந்த உலகத்தை அனுபவப் பொருளாய்க் காணாது சாட்சியாகக் காண்பதால் எத்தகைய துன்பமும் அவர்க்கு இல்லை. இவ்வாறு உணர்வு உடையவர்கள் தம்மையும் தலைவனையும் உணர்ந்தவர் ஆவார்.
1787. உடலது பரப்பில் அலந்து துரிய நிலையில் ஒளி மண்டலத்தில் மிக விரிந்து சிவத்துடன் பொருந்திக் குவிந்து சகல நிலையில் முப்பத்தாறு தத்துவங்களுடன் கூடியிருந்த அன்பர்க்கு தூய்மையான அருள் சத்தியை பதிப்பித்த சிவபெருமானை என்ன் சொல்லி வாழ்த்த முடியும்.
1788. நான் என்றும் நீ என்றும் நீ வந்து அடைதல் என்?றும் வேறாகப் பிரிந்து உணரக்கூடிய நிலை இல்லை. உடலும் உடலில் உள்ள உயிரும் போல் நாம் உடனிருக்கு வானத்தில் இறைவன் வேறாக இருப்பதாக எண்ணில் வான் மண்டலத்துள் வந்து பொருந்தி நின்று மனிதர் அனுபவிக்கின்ற இனபங்களைத் தேன்பொல் சுவைத்து அழுந்தியிருப்பர்.
1789. சிவனைத் துவைத பாவனையில் வணங்கும் சரியை கிரியை வழிநிற்பவர் அவ் இறைவனை அறிய மாட்டார். காணப்படுபவனைக் காண்பவன் அறிந்தால் அது இரு பொருளாக இல்லாமல் ஒரே பொருளாகக் காண்பவனும் காட்சியும் ஒன்றாக ஓடும். இவ்வாறு சரியை வழியில் நிற்பவனும் ஒன்றாய் உணரின் காணப்படும் பொருளான சிவனும் காண்பவ்னும் ஒன்றாகச் சீவன் சிவமாய் விடும்.
1790. தான் இந்தச் சிவனே என்று எண்ணுபவனான சீவன் உடலால் இதனைத் தான் எனவே எப்போதும் நினைக்கும் உயிர்போல் உளன். அவன் வானில் பரவும் பெரிய மேகத்தைப் போல் அருள் காட்டுபவ்னாக இருக்கின்றான். அதனால் நான் வான் தலைவனாக ஆனேன்.
1791. பெருந்தனமை உடைய தான் என்ற சிவனும் யான் என்ற சீவனும் வேறாக ஒரு சமயத்தில் இருக்கவில்லை. அத்தன்மையை இறைவன் இயல்பாகவே அறிகின்றான். உண்மையாகவே உயிர்களைத் திருத்தம் எய்தச் செய்யும் சிவன் தம்மை உடல் உயிர்போல் பிரிவில்லாமல் பொருந்தியிருப்பான்.
#####
ஓம்நமசிவய!
திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!
#####
சிவலிங்கம்!
1773. ஒலிக்கும் கடலால் சூழப்பட்ட உலகம், நீர், வீசும் காற்று, காற்றினிறு தோன்றும் தீ என்னும் இந்த நான்கும் தத்தம் நிலையும் முறையே மாறாமல், ஒழுங்கு பெற நிலைத்திருப்பதற்குரிய வானமும் ஆகப் பரந்து விரிந்து விளங்குபவன் சிவன். அவனை ஒரு குறியில் வைத்து வணங்கும் முறையை யான் அறியேன்.
1774. எவ்விடத்தும் பரவி விளங்கும் இறைவனை ஓர் எல்லைக்குட்படுத்தி வணங்கும் ஓரு முறை உண்டு. பொங்கி வருகின்ற உணர்வான நீரையுடைய சுவதிட்டானமான மலரை ஏத்தி அவனது திருப்பெயரை நினைந்து உணர்பவர்களுக்கு சிவன் எங்கும் துளை செய்து கொண்டு போகமாட்டான்.
1775. எம் இறைவனை உலக முதல்வனாய் நான் கண்டேன். நான் அப்பெருமானின் திருவடிகளை நன்மை தருவன என்று அறிந்து தொழ ஐம்பொறிகளின் வழி அறிவு செல்லாமல் அவற்றைக் கடந்து சிவத்துடன் பொருந்தி இன்பம் அடைய அப்போது ஆதிப்பிரானான சிவன் தனது திருவருள் சத்தியைப் பதிப்பிப்பான்.
1776. நான்முகன், திருமால், உருத்திரன், மகேசன், பலத்தை அளிக்கும் சதாசிவன், பரநாதம், நன்மையைத் தருகின்ற சத்தி சிவன் என்ற வடிவமாய் பயன்களைத் தருகின்ற இலிங்கமே மேலான சிவமாகும்.
1777. மூலாதாரத்தினின்று நடு நாடி வழியாய் போகின்ற செவ்வொளியுடன் கூடி ஆவி எழுகின்றவரை உடலில் உள்ள ஆதார கலைகளிலும் உடலை விட்டு நீங்கிய நிராதாரக் கலைகளிலும் பொருந்துவதும் நீங்குவதுமாய் உள்ளத்தை நிறுத்திப் பழகுவதில் மேன்மையான சிவசக்தியானது உண்டாகும்.
#####
ஓம்நமசிவய!
முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!
#####
ஞானலிங்கம்!
1763. சிவன் உருவம் அருவம் அருவுருவம் என மூன்று வகையான திருமேனியைக் கொண்டவன். நிலைபெற்ற பல உயிர்க்குக் குருவாகும் தன்மையுடையவன். அவனே சதாசிவமாய்க் கற்பக மரம் போல் வேண்டுவோர்க்கு வேண்டியவற்றை அளிப்பவன் ஆவான்.
1764 சதாசிவத்திற்குக் கீழ் உள்ள நானமுகன், திருமல், உருத்திரன், மகேசுவரன் ஆகிய நால்வரும் உருவம் உடையவர்கள். மெலே உள்ள நாதம் விந்து சத்தி சிவம் ஆகிய நால்வரும் அருவம் உடையவர்கள். நான்கில் நடுவே உள்ள சதாசிவம் அருவுருவமாய் உள்ளதால் இவ்வொன்பது வகையும் பரமசிவமே ஆகும்..
1765. தேவர் எல்லோர்க்கும் நாதனும் நான்கு திசைகளிலும் முகமுடையவனும் உருவ மூர்த்திகள் நால்வரையும் செலுத்துபவனும் உருவுக்கும் அருவத்துக்கும் இடையே உள்ள அருவுருவமான சதாசிவத்தை யார் பெருமான் என்று வணங்குகின்றாரோ அங்குப் பிரளயமாகிய சதாசிவம் தோன்றுவார். அப்படி அவரது திருவடியை அடையவும் கூடும்.
1766. ஆண்டு, திங்கள், நாள் என்ப்னவற்றைச் செய்கின்ற சிவக்கதிரவனான சதாசிவத்துடன் சத்தியை வழிபடினும், இருவரையும் வெவ்வேறாக எண்ணிடாது ஒருவராய் எண்ணித் தியானித்தாலும் பயன் ஒன்றேதான். ஆதலால் வினை நீங்க இவ்வாறு வணங்கினேன்.
1767. ஆதி பரம் பொருளான சதாசிவமே அவரவர் மண்டலத்தில் விளங்குவர்.. அவர் சோதியாக அடியவர் வணங்கும் பெருந் தெய்வமாகும். ஒவ்வொருவரின் அண்டா காயத்தில் நீதி வடிவாய் விளங்கும் பெருமை கொண்ட இறைவனாகும். அவர் எவரது உடலை இடமாகக் கொள்ளினும் மலம் அற்றவர் இத்தகைய என் இறையின் ஒரு பாதியில் பராசத்தி திகழ்கிறாள்.
1768. சத்திக்கு மேலே விளங்கும் பராசத்தி அண்ட கோச வெளியில் விளங்கும் வகையில் தூய்மையான சிவபதம் இங்கு ஏனைய தத்துவங்களில் தோய்வின்றி விளங்கும் வெளி உள்ளது அத்தன்மையுடையதாய் இறைவன் திருவடி விளங்கும். இவ்வெளிக்கு அப்பாலுக்கு அப்பாலாயும் ஒத்ததாயும் இருக்கும் சிவத்தின் உண்மையான நிலை.
1769. ஞானலிங்கம் என்ற ஒளி மயமான சதாசிவனை அறிந்தால் உலகம் எல்லாம் அங்கு நுண்மையாய் விளா\ங்குவது தெரியும். வல்லமை இருக்குமாயின் அழியாமல் இவ்வுலகில் இருத்தலும் கைகூடும். தத்துவங்களை விட்ட ஆன்மாவை உறுதியாய் பற்றின் சத்தி வடிவில் அமைந்த சிவம் சிந்தையிலே விளங்கும்.
1770. எம் தந்தையான சதாசிவத்தையும் என் அம்மையாகிய பிரணவ சத்திகளின் கூட்டத்தையும் முதன்மையாய்க் கருதி முறையாய் உணர்தலே ஞானமாகும். அவை பொருந்தியிருந்த புருவ நடுவில் விளங்குகின்ற விசாலாட்சியை இறைவன் உயர்ந்த இடத்தில் வைத்து விருப்புடன் விளங்கினன்.
1771. சத்தி சிவத்துடன் விளங்கும் தகுதிக்கு ஏற்ப உயிரின் நிலை விளங்கச் செய்து அதற்கேற்பச் சுத்தமாயை அசுத்த மாயை என்னும் கூட்டத்தில் சேர்ந்து உயிர் பக்குவம் ஆனபோது சுத்த மாயையில் விளங்கும் ஒளி மண்டலத்தை உணர்த்தி அதைக் கடக்கும்படி செய்து சீவனின் சித்தத்திலே சிவம் தங்கிச் சீவனை சிவம் உறையும் கோயிலாக ஆக்கும்.
1772. இவ்வுலகம் சிவசத்தியின் விளையாட்டாகும். வடிவம் உடைய அறிவான சிவமாகும். அறிவான சிவன் வடிவான சத்தியும் ஆகும். சத்தி சிவம் இல்லாமல் உடலுடைய உயிர்கள் ஒன்றும் நிலையில்லை. சத்தியே தேவைபட்டபோது சமைத்து எக்காலத்தும் வடிவம் பெறும்.
#####
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.