Print this page
புதன்கிழமை, 20 February 2013 00:00

பசுமை மொழி வித்து!

Written by
Rate this item
(0 votes)

ஓம்சிவாயநமக!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!

$$$$$

பசுமை மொழி வித்து!


பசுமை ஓர் இதமான எண்ணம். உணர்வு. அதை நினைத்தால் குளிர்ச்சியாய் இருக்கும். மனதில் அமைதி கிட்டும். ஆனந்தத்துடன் ஓர் பரவச நிலை ஏற்படும். அதன் வனப்பு குளுமையைத் தரும். உள்ளத்திற்கு உணர்வுகளுக்கு இனம்புரியாத ஆனந்த மகிழ்வைத் தரும். சந்தோஷத்தில் மூழ்கடிக்கும், பல புதிய எண்ணங்களை உருவாக்கும்.

பசுமை இனிமையான சூழலை உருவாக்கி அந்த இடத்தை மலர வைக்கும் தன்மையுடையது. அது உள்ளத்திற்கு புத்துணர்வு தந்து அதன் மூலமாக உடல் புதிய தெம்புடன் செயல்பட இயங்க வைக்க முடியும்.

இதுமட்டுமல்லாமல் பசுமை நிழல் தரும். நிழல் என்றால் ஒளியின் பரப்பால் பொருளின் உருவம் ஒளிக்கு எதிர் திசையில் உருவாகும். அதன் வடிவம் பல கோட்பாடுகளுக்குட்பட்டது. மரத்தின் நிழல் ஜீவராசிகள் அனைத்திற்கும் பயன் படும் வகையில் அமைந்துள்ளது. அதே நிழல் மனிதனுக்கும் உண்டு. ஆனால் அது அவனுக்கும் பயன் படாது. மற்றவர்களுக்கும் பயன்தராது. எனவேதான் மனிதன் எல்லோருக்கும் பயன்படும் நிழல் தரும் பசுமை கொள்ளும் மரங்களை வளர்க்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் ஆகின்றது.

வெய்யிலின் அருமை நிழலில் தெரியும் என்பது அனுபவித்த ஆன்றோரின் வாக்கு. அந்த நிழலின் சுகத்தை நமக்கும் மற்றைய ஜீவராசிகளுக்கும் அளிப்பது மரங்களே.

மரங்கள் இப்பூமியில் தோன்றி நிழல் மட்டும் தருவதில்லை. பலவகைகளில் உலக ஜீவிதத்திற்கு உற்ற துணையாக இருக்கின்றது. சில மர வித்துக்களிலிருந்து எண்ணெய் கிடைக்கப் பெற்று மனித குலம் பயன்படுத்துகின்றது.

நெருப்பை உருவாக்க, எரியும் நெருப்பை அதிகரிக்க, உயிரற்ற உடல்களை தகனம் செய்து சாம்பலாக மாற்றி மண்ணுடன் மண்ணாக்க நம்மிடைய இயற்கை அளித்துள்ள பல்வேறுவகையான மரங்களே நமக்கு உதவியாய் இருக்கின்றது.

மனிதன் ரப்பர் கண்டு அதன் உபயோகங்களை அறிந்து கொண்டு அதைத் தயாரிக்க மூலப் பொருளினை மரத்திலிருந்துதான் பெறுகின்றான். மரங்களிலிருந்து ஒட்டும் பிசின், பசை தயாரித்து உபயோக்கின்றோம்.

நாம் எழுதுவதற்கு உபயோகமாகும் காகிதங்களை மரத்திலிருந்துதான் நாம் பெறுகின்றோம். எழுதும் பென்சில் தயாரிக்கின்ரோம். நாம் குடியிருப்புக்கு தேவையான சன்னல், கதவு, விட்டம், கூரை ஆகியவற்றை மரங்கள் தாம் வழங்குகின்றது. நம் வீட்டிற்குள் மேஜை, நாற்காலி, கட்டில், பீரோ, சோபா போன்றவைகளும் அழகு சாதனங்கள் வைக்கவும் மரங்களைத்தான் நாம் பயன்படுத்துகின்றோம்.

அலங்காரப் பொருள்கள், மரச்சிலைகள், தெய்வ சிலைகளை மரங்களின் உதவியால் தயாரிக்கின்றோம். வாகனங்களுக்கு கூடுகட்ட பயன்படுத்துகின்றோம்.

இவைகளுக்கு மேலாக பல மரங்களும் செடி கொடிகளும் நமக்கு உண்ணுவதற்கு என பல்வேறு பழ வகைகளைத் தருகின்றன.

ஆடு, மாடு போன்ற பல நான்கு கால் ஜீவராசிகளின் உணவிற்கு பசுந்தழைகளைத் தருகின்றன.

மேட்டுப்பகுதியிலிருந்து மழைநீர் வேகமாகப் பாயும்போது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் அதனால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுத்தும் வெள்ள அபாயத்திலிருந்து ஜீவராசிகளுக்கு உதவியாய் இருப்பதும் மரங்களே.

மரம் செடி கொடிகளின் பூக்கள் கண்ணிற்கும் மனத்திற்கும் குளுமை அளித்து பரவசத்தை ஏற்படுத்தி மனிதனை தன் துன்ப துயரங்களிலிருந்து சில விநாடிகள் விடுவிக்கின்றன.

சூரிய ஒளியால் பூமி வெப்பம் அடைவதை தடுக்கின்றது.

பிரபஞ்சத்தில் வரும் அசுத்த காற்றை தான் ஏற்று சுத்த பிராணவாயுவை வெளியிட்டு வாழ்வின் ஜீவாதாரத்திற்கு துணை புரிகின்றது.

மேலும் மேகங்களைக் கவர்ந்து மழை தருவித்து அப்பகுதிக்கு நீர் கிடைக்க துணைபுரிகின்றது. குளிர்ந்த இதமான சூழலை ஏற்படுத்துகின்றது.

மனிதர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கின்றது.

உலக ஜீவராசிகளுக்கு அதுவும் மனித குலத்திற்கு இத்தனை பல்வேறு நலங்கள் நாம் கேட்காமல் அளிக்கும் மரங்களை நாம் உற்ற நண்பனாக கொண்டு அதைப் பேணிக் காக்க வேண்டும். ஒருவன்

வாழ்நாளில் ஓர் ஐந்து மரங்களையாவது வளர்க்க வேண்டும். மரங்களை வெட்டக்கூடாது. மரங்களை வெட்ட அரசாங்கத்தின் அனுமதி பெறவேண்டும் என்ற கட்டாய நிலை மேற்கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் மரங்கள் இல்லா நிலை ஏற்படும். நாம் அனுபவித்து வந்த எல்லாச் சுகங்களும் அழிந்து படும். அந்த நிலை வருமுன் காக்க அனைவரும் புரிந்துணர்வு கொண்டு ஒவ்வொருவரும்

குறைந்தது ஒரு மரம் வளர செய்யுங்கள். மரங்களை வெட்டாதீர்.

பசுமைதனை உணர்வீர். பசுமை என்ற இதமான உணர்வை பரப்புவீர். நம்மைச் சுற்றி பசுமை மலர முயற்சியுங்கள். அந்த பசுமைமொழி நம் பிற்கால சந்ததியினருக்கு, எதிர்கால மனித குலத்திற்கு ஓர் ஒளியாக உதவும். மனிதநேயம் கொண்டு அந்த உதவியைச் செய்ய முனைவீர் என அன்புடன் அழைக்கும்.

பசுமைமொழி வித்து ஒவ்வொரு மனித உள்ளத்திலும் முளைத்து குருத்துவிட ஆவல்--குருஸ்ரீ பகோரா

$$$$$
                                                   

Login to post comments