ஓம்நமசிவய!
ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!
#####
பூரணக் குகைநெறிச் சமாதி!
1902. சிவயோகி வினைப் போகத்திற்காகத் தாங்கிய இவ்வுடலை விட்டானாயின் அவனது ஆன்மா வளர்பிறையானால் தேவர்களுடன் தங்கி ஓளியில் நின்று பழகினவன் ஆனால், கதிரவ மண்டலத்தில் சிலநாட்கள் தங்கி தளர்ச்சி இல்லாத பிதுர் உலகில் சில நாட்கள் தங்கியிருந்து சந்திர மண்டலத்தைப் போய்ச் சேரும்.
1903. சமாதி கை கூடாமல் உடலை விட்டவர் போக வேண்டிய இடத்துக்குப்போய் அங்கு நியதி முடிந்தபின்பு புவியில் பிறந்து பிரார்த்துவ வினைகளைத் தூய்த்து மீண்டும் பிறவாத பெரிய யோகத்தை திருவருள் துணையாக நிறைவு செய்வர்.
1904. புவியில் பிறந்த யோகி மற்ற் உலகத்தார் போல் உண்டு உடுத்து உறங்கி வாழ்ந்து எல்லாவற்றுக்கும் மேலான சிவயோகத்தில் தலைப்பட்டு முயலும் போது ஆகும் அந்த ஒளியில் ஒளிவடிவம் பெறுவதற்கு முன் உடல் சித்தி பெற்று மதிக்கத்தக்க உடலை அடைவர்.
1905. சிவயோகியான ஞானியர் யோகம் நிறைவுறாமல் உயிர் நீங்கி உடலை விட்டால் தவ உலகத்தை அடைந்து பின்பு பிறந்து சிவயோக வாயிலாகச் சிவஞானம் நிலை பெற்று விளங்குவார். அவர்கள் ஒளியுலகத்தவரால் போற்றப்படும் புண்ணியர் ஆவார்.
1906. குறைவில்லாத சிவ ஞானியான நல்ல யோகி உடலை விட்டுப் பிரிந்தால் தான் என்ற நினைவில்லாது மோன நிலையில் இருந்து சிவமான தன்மையை அடைவர். அன்னார் வேறொரு உடலில் புகாமல் நின்மல் முத்தராய் விளங்கி உலகத்தில் மீண்டும் பிறவிக்கு வரமாட்டார்.
1907. இறந்தவர் அடையும் பயன் எதுவென்றால் இறந்தபின் நீங்கள் அடைவது சித்தியாகும். அது கூடுமானால் இறந்தவர் உலகில் இருந்தவரே ஆவார். அந்தச் சித்தர் மும்மலங்களையும் அழித்தவர் ஆவார்.
1908. பிரணவ யோகத்திலிருந்து பிரணவத்துக்குரிய எல்லா வல்லமையுடைய சிவத்தின் அருளைப் பல முறையும் சிந்திக்கப் பரசிவமே அந்த ஞானியர்க்குச் சத்தியின் கூட்டத்தை அருள்வாள். அங்ங்னம் தாம் பெற்ற அருளை எத்தகைய பக்குவம் வாய்த்தவர்க்கும் வேண்டி அளிப்பவன் ஞானி. அவனவன் விருப்புக்கேற்ப மாணவனை ஈசன் வடிவாக அமைத்தருள்வான்.
1909. நீக்கம் இல்லாமல் எங்கும் விளங்கும் சிவத்தின் அருள் நடுவில் பொருந்தியிருக்கும் சிவஞானிக்கு எங்கும் சிவமே தோன்றும். அங்கங்கே உள்ள நிலம் முதலிய பூதங்களை விழுங்கி அவற்றுள் கலந்துள்ள வானம் போன்று ஈசன் வடிவு பெற்ற ஞான உடல் உணர்வு விட்டு எல்லாவற்றிலும் கலந்திருக்கும்.
#####