இளமைப் பூக்கள்!
வாழ்க்கையின் முழு சாரத்தையும் அப்படியே அனுபவிக்க நினைப்பது இளமை. எனவே எல்லோரும் இளமையுடன் இருக்கவேண்டும் என்பதே அனைவரின் அவா. அந்த ஆசை மட்டும் இருந்தால் போதாது. அதற்குறிய செயல்பாடுகள் வேண்டும். இளமையுடன் செயல்பாடுகள் இனைந்திருக்க வேண்டும். எண்ணங்கள் இளமையாக இருக்க வேண்டும்.
நம்மைச்சுற்றி இளைஞர்கள் இருக்கவேண்டும். இளமையான எண்ணங்களை உடையவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் சுறுசுறுப்பிற்கு நீங்களும் இயங்கவேண்டும். மனம் சோர்வு அடையக்கூடாது. எப்போதும் எந்த நிகழ்வுபற்றியாவது விவாதங்கள், செயல்திட்டங்கள், என நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதற்குத்தக்க நம் உடம்பும், உறுப்புகளும் ஒத்துழைக்க வேண்டும். எல்லோருடனும் அன்பு, நட்புடன் பழகவேண்டும். நீங்கள் பூவாகவோ, நாராகவோ, அல்லது நீங்கள் பழகும் நபர் பூவாகவோ, நாராகவோ இருக்கலம். எப்படியிருப்பினும் பூவும் நாரும் சேர்ந்தால்தான் பூச்சரம், மாலை. ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மணம்-அது இயற்கை.
உங்களைவிட திறமைசாலிகளை சந்திக்கும்போது நமக்கு புத்திசாலித்தனம் இல்லை என வருத்தப்படாதீர்கள். அவர்களுடன் நட்புக்கரம் நீட்டி பழகுங்கள். ஓர்நாள் நீங்கள் பூவோடு சேர்ந்த நார்போல் மணம் பெறுவீர். ஏன் மணக்கும் மலராகக்கூட மாறிவிட வாய்ப்புண்டு. புதிய சிந்தனைகள் ஏற்பட்டு உங்கள் இளமை தூண்டப்பட்டு செயலாக்கம் நடைபெற்று வெற்றி காண்பீர்கள்.
ஒருவரை அறிமுகம் செய்து வைக்கும் போது வணக்கம் என நீங்கள் கைகூப்பி வணங்கும் போது அவர் சிரித்த முகங்கொண்டு கைகுலுக்க கைநீட்டினார் என்றால் உங்களைவிட அவர் நட்பை, மனித நேயத்தை விரும்புகின்றவர் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவரை தீண்டி கைகுலுக்கிப் பரிசிப்பதால் அதை நீங்கள் உணர முடியும்.
அன்பின் உறவை பலப்படுத்தும் அந்த மனித நேயத்தை உணர்வீர்! கைகூப்பி வணக்கம் சொல்வது வேறு! கைகுலுக்கி ஆனந்தப்படுவது, ஆனந்தபடுத்துவது வேறு! “ஒவ்வொரு புரட்சி என்கிற மலரும், முதலில் சிந்தனை என்ற அரும்பாக இருந்ததுதான்” என ஓர் கவிஞன் சொல்லியுள்ளார்.
நம்மைப்பற்றி நம் செயல்களைப்பற்றி முதலில் ஒவ்வொருவரும் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் எதை அடைய விரும்புகின்றீர்கள் என முடிவாக தெரிந்துகொண்டு செயல் படுங்கள். உங்கள் பலவீனங்கள் என்ன! அதை எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும் என சிந்தியுங்கள். ஓர் செயல் செய்ய ஆரம்பிக்கும்போது ஏன்! எதற்காக இதைச் செய்கின்றோம் என்ற தெளிவான நினைவின்றி ஆரம்பிக்கக்கூடாது.
அவ்வாறு எந்த முடிவை நோக்கி எனப்புரியாமல் செயல்பட ஆரம்பித்தால் காலப்போக்கில் ஓர் வித சலிப்பு உங்களுக்குள் ஏற்பட்டுவிடும். என்னடா வாழ்க்கை இது என்று மனம் பேதலிக்கும் எண்ணங்கள் தோன்றும்.
இது போன்ற சலிப்பு வாழ்வில் ஏற்பட நாம் அனுமதிக்கக்கூடாது. இல்லையெனில் அது நம் உடலில் ஓர் இராசாயண மாற்றத்தை ஏற்படுத்தி இளமை செயல்பாடுகளை குன்றவைத்து, முதுமை எண்ணங்களைத் தோற்றுவிக்கும் சக்தி கொண்டது.
இளமை இனிமையானது. அதை பலர் தவறவிட்டு விடுகின்றனர். அது இளநீர் போன்றது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குமேல் இளநீர் தேங்காய் நீராகிவிடும். இளநீரின் சுவைவேறு. பயன்வேறு. தேங்காயின் நீர்வேறு சுவை. இளநீர் தேங்காய் நீராகும். தேங்காய் நீர் எப்போதும் இளநீராக முடியாது. இதைப்போன்றதே இளமையும். காலங்கடந்தபின் இளமையின் சுவையை அனுபவிக்காமல்விட்டு பின்னால் வருத்தமடைகின்றனர்.
எந்த நோக்கிலும் அந்த இளமை அவர்களுக்கு மீண்டும் கிடைக்காது. இழந்தது இழந்ததுதான். காலம் கடவுளின் ராகம். அவை வீணடிக்கப்பட்டால் திரும்பவும் கிடைக்காது. சமூகத்தின் மேல் பழி சொல்லி, அதனால் என்னால் முடிவு எடுக்க முடியவில்லை என கொள்ளக்கூடாது. உனக்கு, உன் ஆன்மாவிற்கு சரியென்று தோன்றினால் செயல்படு. இளமையின் ஆனந்தத்தை ருசிக்க முடியும் போதெல்லாம் ருசித்துவிடு.
ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று கழியும். வயதுக்கு ஏறுகிற சக்தியுண்டு. இறங்குகிற சக்தி கிடையாது. கழிந்தபின் வருத்தப்பட்டு ஒன்றும் பயனில்லை. எத்தனை வயது வாழ்ந்தான் என்பதில் பயனில்லை. என்ன செய்தான் என்பதுதான் கேள்வியாக வரும்.
அரசாங்கத்தில் வேலை செய்ய வயது வரம்பு வைத்துள்ளனர். அதை தாண்டிய ஒருவருக்கு அங்கு வேலை கிடைக்காது. அதைப் போன்றே இளமையில் அடைய வேண்டியதை அடைய வேண்டும்.
இளமையின் பருவங்களை அனுபவியாமல் விட்டு, மீதி பயணத்தில் யந்திரகணமாக அவசர அவசரமாக இழந்ததை அடைய வேண்டும் என்ற நினைப்பில், வாழ்வின் ருசியை அறியாமல், எதையும் புரியாமல் கண்டும், கேட்டும், உடுத்தும், உண்டும் நாட்களை கழித்து விட்டீர்களானால் எப்படி ஆனந்த வாழ்வு வாழமுடியும்.
நீங்கள் அழகாக இருந்தால் அதனால் இளமையாக இருக்கின்றீர்கள் என அர்த்தமில்லை. கண்களில் ஓர் பிரகாசம் இருக்க வேண்டும். பார்வையில் ஓர் துடிப்பு இருக்க வேண்டும். புண்ணகை முறுவல்ஒளி தவழவேண்டும். அகத்தின் அழகு முகத்தில் என்பது போன்றே இளமையின் மினுமினுப்பு முகத்தில் இருக்க வேண்டும்.
இளங்கன்று பயம் அறியாது என்பதற்கேற்ப முகத்தின் தோற்றம் கவலை, துக்கம், துயரம் போன்றவைகள் பற்றிய எண்ணங்களை பிரதிபலிப்பனவாக இருக்கக்கூடாது. ஒரு பந்தை வீசி எறிந்தால் அது எப்படி துள்ளிக் குதிக்கின்றதோ அதுபோன்ற துள்ளிக் குதிக்கும் எண்ண உணர்வுகள் வேண்டும் மனதிற்கு, அதுவே இளமையின் அடையாளம். ஆடி மகிழும் காலம். இப்போது என்ன வேண்டும் என்று இளமையைக் கேட்டால் எல்லாம் வேண்டும் என்று பதில் வரவேண்டும். அதுவே இளமை.
வேதங்கள் சொல்லும் அறிவுரைகளை மனதில் வாங்கி புத்தி கெடாமல் காப்பாற்றிகொள்ளும் திறமையுடையது இளமை. பின்னாளில் அந்த திறமை உபயோகமாகும்.
இசைக்கருவியின் கம்பிகள் அதிக இறுக்கத்துடன் இருந்தால் கம்பிகள் அறுந்து விடும். தளர்வாக இருந்தாலும் இசை பிறவா. விறைப்புமின்றி தளர்வுமின்றி நடுநிலையில் இருந்தால் மட்டுமே இசை பிறக்கும். அது இளமையின் தன்மைகொண்டது.
எப்போதும் மலர்ந்தமுகம், இனியசொல், தெளிந்த சிந்தனை இவற்றோடு துடிப்புடன் இருப்பதே இளமையின் அடையாளங்களாகும். அதற்கு ஆத்மார்ந்த சந்தோஷத்தில் திகழ வேண்டும் அந்த இளமை-அன்பு உயிர்களே இளமை தவழும் எண்ணகளைக்கொண்டு இனிமையான வாழ்வை வாழங்கள் -குருஸ்ரீ பகோரா