ஓம்நமசிவய!
ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.
#*#*#*#*#
ஆக்ரமிப்பு!
நல்ல காற்றோட்டத்துடன் குடியிருப்புகள் அமைய வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி மக்கள் ஆரோக்கியத்தை முன்னிட்டு அரசு சில சட்டங்கள் போட்டால் அதை ஏற்று மதித்து நடந்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்யா விடில் அதன் பாதிப்புகள் மக்களுக்கே. சட்டதிட்டங்களை மீறுபவர்கள் மட்டுமில்லாமல் மற்றவர்களும் அதனால் பாதிக்கப் படுகின்றனர். என்பதை மக்கள் உணர வேண்டும். யார் எப்படி போனால் என்ன நம் பிரச்சனை தீர்வு கண்டால் போதும் என்ற நிலைப்பாடானது அவர்களுக்கும் ஓர்நாள் தீங்கு விளை விக்கக்கூடும்.
சாலை ஓரங்களில் சாலையை ஒட்டி குடிசைகள் மற்றும் வீடுகள் கட்டிக் கொள்கின்றனர். அங்கு முறைப்படி விட வேண்டிய அளவிற்உ இடம் விட்டுக் கட்டுவதில்லை. சட்ட அமைப்பில் கூறிய இடத்தை விட்டால் இடம் குறுகி விடுகின்றது. மேலும் வளர்ந்த நகரங்கள், கிராமங்களில் அந்த இடத்தின் மதிப்பு அதிகமாவதால் அவ்வளவு இடத்தை விட்டுவிட மனதில் எண்ணம் தோன்றுவதில்லை. ஆனால் எதிர்பாராமல் நடைபெறும் விபத்துக்களைப் பார்க்கும்போது மதிப்பு பெருகிய இடத்தைவிட மனித உயிர்கள் மேலல்வா என்பதை புரிந்து செயலாக்கம் கொள்ள வேண்டும்.
சாலை ஓரத்தில் இருக்கும் வீட்டிற்குள் பேருந்தோ அல்லது கனரக வாகனங்களோ எதிர்பாரத நிலையில் கட்டுப்பாட்டை இழந்து புகுந்தால் வீட்டில் இருப்பவர்களின் நிலை என்ன என்பதை சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதை உணர்ந்து அரசும் இடத்தின் சொந்தக்காரரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கூடுமான வரையில் சாலை அருகே நெருங்கிய வண்ணம் குடியிருப்புகள் அமையக்கூடாது என்ற நிலையை அரசு மேற்கொள்ள வேண்டும். அந்த இடத்தை தவிர வேறு இடம் இல்லாதவர்களுக்கு அதற்குப் பதிலியாக மாற்று இடம் தர அரசு முன்வரவேண்டும். இதை அந்த இடத்து சொந்தக்காரரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
முக்கிய சாலைகளில் தாங்கள் வளம்பெற வேண்டுமென்று சிலர் வியாபார அமைப்பில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்கின்றனர். அந்த இடம் வியாபார ஸ்தலமாக மாறும் போது அங்கு வருபவர்களின் வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் அவர்கள் சாலையை பயன் படுத்துவதால் சாலையின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றது. அவ்வாறு வணிக வளாகங்கள் கட்டும்போது வாகனங்கள் நிறுத்த குறைந்த அளவிற்காகவது இடம் ஒதுக்க வேண்டும் என்ற கட்டாய நிலை ஏற்படுத்தப் படவேண்டும். வாகனங்கள் நிற்க இடம் இல்லா வணிக வளாகங்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும். அல்லது அவர்களது மின் இனைப்பு மற்றும் குடிநீர் இனைப்புகள் மறுக்கப் படவேண்டும்.
வீடாக இருந்த பகுதியை மாற்றி அமைத்து வணிக இடமாக மாற்றுகின்றனர். வீட்டிற்குமுன் காலியாக இருக்க வேண்டிய அளவு இடம் இல்லாமல் கட்டிவிடுகின்றனர். சிலகாலம் கழித்து இப்படி மாற்றுவதால் மேலும் சிக்கல் உருவாகி தாங்கள் இடம் விடாமல் விட்டதோடு அல்லாமல் பொது இடமான சாக்கடைகள் நடைபாதைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். அங்கு வரும் வாகனங்கள் எங்கு நிறுத்தப்படும்!. வேறு வழியின்றி சாலைகளில்தான் நிறுத்தப்படுகின்றன. இந்த முறைதனை மாற்ற வேண்டும். போக்குவரத்திற்கு எத்தனை தடைகள். மேலும் விபத்துக்கள் ஏற்படவும் வாய்பு இங்கு உறுவாகின்றதால் கடுமையான முறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும். இவர்கள் போட்டு இருக்கின்ற மேற்கூரை தகரங்கள் இவற்றிற்குள் புகுந்துதான் அவ்வழி செல்லும் மக்கள் செல்ல வேண்டியிருக்கின்றது.
பலர் கடைகளுக்கு முன்னால் ஓர் தார்பாய் அல்லது ஒரு ஓலைக்கீற்று கொட்டகை ஆகியவற்றை சாலைகளில் போட்டே தங்கள் கடைகளைப் பாதுகாத்துக் கொள்கின்றனர். கடை கட்ட வேண்டுமென்றால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்களது இடத்திலேதான் போட வேண்டும் அப்படி போடும் அளவிற்கு இடம் நிலத்திற்கு உள்ளேயே விட்டுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாய நிலை வேண்டும். பொது இடங்கள் ஒரு சிலர் முன்னேறுவதற்காக ஆக்கிரமிப்பு செய்வதற்கல்ல. பொதுவான இடங்கள் அனைவருக்கும் பயன் படவேண்டும் என்ற நிலை ஏற்பட வேண்டும். பொதுவாக இது போன்ற இடங்களுக்கு அரசு நிர்வாகத்தில் அனுமதி பெற்றே வணிகத்திற்கான இடங்களை அமைத்திட வேண்டும்.
அனுமதிபெற்ற கட்டுனர்களையே இனிவரும் காலங்களில் புதிய கட்டிடம் கட்ட அணுமதிக்கப்பட வேண்டும். மின் இனைப்பு பெறுவதற்கு ஓர் அனுமதி பெற்றவரின் கையொப்பம் மற்றும் கட்டிட வரைபடம் அனுமதி பெற்றவரின் ஒப்பத்திற்குப் பிறகே நிர்வாகத்தால் அனுமதிக்கப் படுவதுபோல் கட்டிடம் கட்டுவதற்கும் அனுமதி பெற்றவரால்தான் கட்டப்பட வேண்டும் என்ற நிலையில் விதிமுறைகளை மீறி தவறான அமைப்பில் கட்டிடம் கட்டப்பட்டால் அதற்கு அவர் பொறுப்பாவார். கட்டிடம் கட்டி முடித்தபின் அரசு நிர்வாகத்திலிருந்து ஒரு குழு மேற்பார்வை செய்து சரியாக விதிமுறைக்குட்பட்டு கட்டப்பட்டுள்ளது என்ற சான்றிதழ் அளித்த பின்னரே மின் இனைப்பு மற்றும் குடிநீர் இனைப்புகள் வழங்கப் படவேண்டும். சான்றிதழ் அளிக்கும் குழு தன் பணியைச் சரிவரச் செய்யாமலிருந்தால் அவர்களும் தண்டிக்கப்படலாம். விதி முறைப்படி கட்டப்படாத கட்டிடத்தை கட்டிய அனுமதி பெற்ற என்ஞினியரின் அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம். அவர்மேல் விசாரனை நடவடிக்கை எடுத்து பின்னர் நிரந்தரமாக ரத்து செய்யலாம்.
எந்த ஒரு கட்டிடமாயிருந்தாலும் அந்த கட்டிடத்திற்கு மின் இனைப்பு சரியாகச் செய்யப்பட்டுள்ளது என்றும், கழிவு நீர் குழாய்கள் சரியான முறையில் பொருத்தப்பட்டிருக்கின்றது என்றும் கட்டிடம் விதிமுறைப்படி கட்டப்பட்டுள்ளது என்றும் யாரால் கட்டப்பட்டுள்ளது என்றும் வணிக வளாகத்தின் பார்வையில் படும் பகுதியில் அல்லது மேற்பாற்வையாளர் வரும்போது பார்க்கும் வகையில் புகைப்படத்துடன் கையொப்பமிட்டு பொருத்தப்பட வேண்டும்.
இதுவரை கட்டப்பட்டுள்ள இடங்களை கால அவகாசம் கொடுத்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களே அகற்றாவிட்டால் நிர்வாகம் அகற்றவேண்டும் அதற்குரிய கட்டணத்தை கண்டிப்பாய் தண்டனைக் கட்டணத்துடன் வசூலிக்க வேண்டும்.
சிலர் தங்களின் வீட்டிற்கு முன்னால் பாதுகாப்பிற்காக பொது இடத்தை கோவில் என்ற அமைப்பை ஏற்படுத்தி நாளடைவில் மக்கள் அதைப் பயன்படுத்துவதால் ஓர் ஆக்கிரமிப்பு இடமாகின்றது. இதே போன்று சிலர் கல்லறைகளையும் சமாதிகளையும் கட்டிவிடுகின்றனர். ஏனென்றால் கோவில்கள் மற்றும் இது போன்ற சமாதிகள் அகற்றும் நிலை வந்தால் அந்த இனத்தாரை சேர்த்துக் கொண்டு போராட்டங்கள் ஏற்படுத்தும் சூழல் உருவாக்குகின்றனர். அவர்களுக்கு ஒன்று சொல்வேன். நீங்கள் உண்மையான பக்தராக இருந்தால் கோவிலுக்கு என்று ஓர் இடம் வாங்கி அல்லது உங்கள் சொந்த இடத்தில் கோவிலை கட்டி நீங்களும் மற்றவர்களும் வழிபட செய்யுங்களேன்! ஏன் இந்த ஆக்கிரமிப்பு புத்தி! இது முற்றிலும் சுயநலம்! இதைப் புரியாமல் மற்றவர்களும் இவர்களுடன் சேர்ந்து போராடுவது மிகுந்த வேதனை அளிக்கின்றது.
சாலைகள் ஆக்கிரமிப்பு என்றில்லாமல் கோவில் இடங்களையும் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து சுயலாபம் அடைந்து வருகின்றனர் பலர். அருகில் இருக்குமிடம் பலமடங்கு வாடகை வரும் அளவிற்கு உயர்ந்தபோதும் கோவில் இடங்களில் இருப்போர் ஓரளவாவது வாடகையை உயர்த்தி தராமல் சாக்கு போக்கு சொல்லி இருந்து வருகின்றனர். மேலும் வாடகைக்கு எடுத்தவர்கள் சிலர் உள் வாடகைக்கு விட்டு விட்டு அவர்கள் லாபம் சம்பாதிக்கின்றார்கள். இவைகளை கண்டறிந்து யார் பேருக்கு அனுமதி வழங்கப் பட்டிருக்கின்றதோ அவர்களே அங்கு இருக்க வேண்டும். மற்றவர்கள் இருந்தால் அவர்களை அகற்றி விட்டு வேறு உரிய நபரை அங்கு இருக்க வைக்க வேண்டும். கோவில் நிலங்களை குத்தைகை எடுத்தவர்கள் பொய்க்காரணங்கள் சொல்லி குத்தகையை சரியாக செலுத்துவதில்லை. மொத்த இடத்தில் எவ்வளவு சொந்தமாக்கிக்கொள்ள முடியுமோ அவ்வளவு செய்து விட்டிருக்கின்றனர். பழைய ஆவனங்களை எடுத்து இவற்றை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்படி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அவர்களாகவே திருப்பிக் கொடுத்துவிட்டால் சரி! இல்லை என்றால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலை ஓரங்கள், கோவில் நிலங்கள் என்றில்லாமல் நீர் வழிகளையும் ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்போது சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், முக்கிய பிரமுகர்களும் இந்த விஷயங்களில் தலையீடு செய்தல் கூடாது. பொது நன்மை கருதி தங்களை நாடி வரும் அன்பர்களுக்கு உபதேசம் செய்து அதுவே தாங்கள் வகிக்கும் பொறுப்பிற்கு உகந்த தகுதி என்பதை நிலை நிறுத்த வேண்டும
தங்களின் இனம், மதம் வளர வேண்டி அரசிடம் வேண்டிப் பெற்ற தொன்னூற்று ஒன்பது வருடத்திற்கான குத்தகை நிலத்தின் மூலமாக பயன் அடைந்து வளர்ந்தபின் அதை தங்கள் சொந்த சொத்தாக சில அமைப்புகள் கருதுகின்றன. இவ்வளவு காலம் ஆண்டு அனுபவித்த காராணத்தால் அவர்கள் உரிமையைக் கேட்கலாம். அதற்காக பொது மக்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய ரோடுகள் அமைக்கும் பணிக்கு கூட இடம் தர மறுப்பது எந்த விதத்திலும் சரியில்லை. அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து அந்த இடங்களை கைப்பற்றி பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சாலை வசதிகளை மேம்படுத்தி அமைக்க வேண்டும், குத்தகைக் காலம் முடிவடையாமலிருந்தாலும் பொது உபயோகத்திற்கு வேண்டிய இடத்தை திரும்ப பெறுவதில் எந்த தடையும் இருக்கக் கூடாது. வளார்ந்து வரும் நாட்டில் அனைத்து மக்களும் பயன் தரக்கூடிய திட்டங்களுக்கு எல்லா அமைப்புகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
வசதி பெற்ற சிலர் அரசு நடவடிக்கை எடுக்கும்போது ஒரு ரிட் போட்டு விட்டால் பல வருடங்களுக்கு இழுத்துக் கொண்டிருக்கும் நமக்கு கவலையில்லை என்று சட்டத்தில் இருக்கும் சந்து பொந்துகளை தெரிந்து வைத்துக் கொண்டு ஒரு சில ஆயிரத்தில் அரசின் நடவடிக்கையை தடுத்து விடுகின்றனர். இது போன்ற ஆக்கிரமிப்புகளுக்கு நீதி நிர்வாகம் எந்த வித ஒத்துழைப்பும் தரக்கூடாது என்பதே சிறப்பு. மேலும் இதுபோன்ற பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்த நல்லவர்களுக்கு நீதித்துறையைச் சார்ந்த வழக்கறிஞர்கள் ஆதரவு அளித்து அதை நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்ல ஆதரவு அளிக்கக்கூடாது. வழக்கறிகளுக்குத் தெரியும் இது போலி வழக்கு என்று. அப்படிப்பட்ட போலி வழக்குகளை ஏற்றுக் கொள்ளாமல் அவர்கள் தர்மத்தையும் நீதியையும் காக்க செயல் படவேண்டும். இதனால் நீதி மன்றங்களின் பொன்னான நேரம் மிச்சமாகும்.
சுதந்திரம் பெற்ற பின் கடந்த எழுபது ஆண்டிற்குள் வசதி படைத்தோர் மற்றும் அரசியல் ஈடுபாடு கொண்டவர்களால் நடத்தப்பட்ட ஆக்கிரமிப்புகள் அளவில்லாதவை அவற்றை சரி செய்தால் போதும். நீதி நியாயங்கள் காக்கப் படுவதோடு மக்களுக்கு ஆரோக்கியமும் பெருகி விபத்துகள் இல்லா நிலைக்கு நாடு செல்ல வசதியாக வழிவகுக்கும்.
ஆக்கிரமிப்பு செய்துவிட்டு அதைபற்றி கேட்டால் அங்கே பருங்கள். இங்கே பாருங்கள். அவர் இப்படிச் செய்துள்ளார் என்று மற்றொரு நிகழ்வைக் காட்டிக் கொடுத்து அதன் நிழலில் தான் தப்ப நினைப்பது அயோக்கியத் தனம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். யார் செய்தாலும் எப்படிச் செய்திருந்தாலும் தப்பு தப்புதான். பலர் தவறு செய்வதால் அது சரியாகி விடாது. நீங்கள் செய்யும் ஆக்கிரமிப்பு செயல்களால் பொதுவாக என்ன துயரங்கள் ஏற்படுகின்றன் என நினைத்து அந்த பாவங்களைச் செய்யாமலிக்க நினையுங்கள்.
ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஓர் உண்மையை இங்கு சொல்ல விரும்புகின்றேன். நீங்கள் சுயமாக நியாமாக தர்மமான முறையில் சம்பாதித்திருந்தாலும் அதிலிருந்து ஒரு குன்றின் மணி அளவுகூட நீங்கள் இவ்வுலகை விட்டுச் செல்லும்போது எடுத்துச் செல்லமுடியாது என்ற நிலையை உணருங்கள். அப்படியிருக்க வீண் ஆசையினால் ஆக்கிரமிப்பு செய்து மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்வதால் என்ன பலன் தெரியுமா! நீங்கள் உங்கள் கர்ம பலன்களில் பாவங்களை சேர்த்துக் கொள்வதுதான் மிச்சம். அந்த பாவங்களை நீங்களோ அல்லது உங்கள் சந்ததியினரோ தான் அனுபவிக்க வேண்டியிருக்கும். அது தான் வினை. இதற்காகவா இப்படி ஆக்கிரமிப்புச் செய்கின்றீர்கள். சற்று யோசித்துப் பாருங்கள்! ஆக்கிரமிப்பு ஒர் பெரும் தொற்று நோய்! மனம் தெளிவடைவீர். நல்லது நடக்கட்டும். நாடு வளம் பெறட்டும்! அன்புடன் குருஸ்ரீ பகோரா.
#####