தொடர்பு ஏற்படுத்துங்கள்!
இருவர் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டனர். பல தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டனர். ஒருநாள் அவர்கள் இரவு தங்கியிருந்த இடம் இரயில் பாதை அருகே இருந்தது. அசதியில் படுத்ததும் இருவரும் உறங்கினர். கொஞ்ச நேரத்தில் இரயில் செல்வதனால் ஏற்படும் சப்தம் கேட்டு விழித்தனர். ஆனால் ஒருவருக்கு தூக்கம் பிடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் தொடர்ந்து சப்தம் கேட்பதால் அவரால் ஆழ்ந்து உறங்க முடியவில்லை. இரயில்பாதை அருகே இருப்பதால் அந்த சப்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டுதானிருக்கும். அதற்கும் இவருக்கும் என்ன சம்பந்தம். அந்த சப்தத்தில் கவனம் செலுத்தாமல் இருந்தால் தூக்கம் வரும் என்றார் மற்றவர். அதெப்படி சப்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும்போது அதை கவனியால் இருக்க முடிய வில்லையே என்றார். இரயில் ஓடினால் சப்தம் வரும். அது இயற்கையானது. அதை மாற்றமுடியாது. பயணிகளை ஓரிடத்திலிருந்து வேறு இடத்திற்கு கொண்டு சொல்ல இந்த இரயிலின் பயணம் தேவை. அதை நிறுத்த முடியாது. இதை இப்படி இயற்கையாக எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சப்தம் உங்களுக்கு தொந்தரவாக இருக்காது இயல்பாக பழகி விடும் என்றார் மற்றவர். இவர் பேச்சில் அவருக்கு எரிச்சல் உண்டானது. இருந்தாலும் வேறுவழியில்லை ஆதலால் அவர் சொன்னபடி நினைத்தார். சிறிது நேரத்தில் உறங்கிவிட்டார். அடுத்தநாள் காலை எழுந்ததும் அவருக்கு நன்றி சொன்னார்.
இதிலிருந்து என்ன புரிகின்றது உங்களுக்கு! உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் உங்களுக்கு இடைஞ்சலாக இருந்து எரிச்சலை தோற்றுவிக்கலாம். மனம் நிம்மதியில்லாமல் போகலாம். உடனே அந்த விசயத்தைப் பற்றி மேலும் மேலும் ஆராயாமல் அமைதியாக அது இயற்கையாக ஏற்பட்ட நிகழ்வு என்று ஆறுதல் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் ஒரு கடவுளை நினைத்துக் கொள்ளுங்கள். மனதை அந்த கடவுளின் நினைவு ஆக்கிரமித்துக் கொள்வதால் மனம் நிம்மதியடையும். அதனால் முன்பு தோன்றிய குழப்பங்கள் எரிச்சல் மறையும் நீங்கள் நிம்மதி அடைவீர்! அதனால் குழப்பங்கள் ஏற்படும்போது மனதின் எண்ண அலைகளை இறைவனுடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சித்து வெற்றி பெறுங்கள்!-குருஸ்ரீ