அனுபவம் பாடம். அது தீர்வல்ல!
மழையின்று எங்கும் வறட்சி காணப்பட்டது. போதிய உணவு இல்லாமையால் மிருகங்கள் பல இறந்தன. சிங்கம், நரி, ஓநாய் மூன்றுமட்டும் மிஞ்சியிருந்தன. ஒன்றாக அலைந்து காட்டில் இறந்து கிடக்கும் விலங்குகளின் உடலைத் தேடிக்கண்டு உண்டுவந்தன. அதற்கும் தட்டுப்பாடு வந்தது.
காட்டில் உணவுக்காக தேடியலைந்தவைகள் ஒரு முயல் இறந்து கிடந்ததை பார்த்தன். சிங்கம் ஒநாயைப்பார்த்து இந்த முயலை நம் மூவருக்கும் பங்கிடு என்றது. ஒநாய் எல்லோரும் சமம் என நினைத்து மூன்று பங்காகப் பிரித்தது. சிங்கம் கோபத்தின் உச்சத்தை அடைந்து, நானும் நீயும் ஒன்றா, உனக்கும் எனக்கும் சமபங்கா, இதை இப்படியே விட்டால் சரியாகாது, இதற்கு தீர்வு என ஓநாய்மேல் பாய்ந்து கடித்து குதறி உண்டது. சிங்கம் உண்டது போக மீதியிருந்ததை நரி உண்டது.
நாட்கள் நகர்ந்தன. மிகவும் சிரமப்பட்டு இரைத் தேடிக் கண்டுபிடித்து உண்டன. ஒருநாள் வழியில் இறந்து கிடந்த மிருக உடலைக்கண்டு சிங்கம், நரியிடம் அதை பங்குபோடச் சொல்லியது. நரி விலங்கின் உடலை ஒருபங்காகவும் வாலை ஒருபங்காகவும் செய்து வால் தனக்கு போதும் என்றது. ஆச்சரியப்பட்ட சிங்கம் நரியைப் பார்த்துச் சொன்னது இப்படி பங்குபோட எங்கு கற்றாய் என்றது. அதற்கு நரி சொன்னது அன்று இறந்த ஓநாய் சொல்லித்தந்த பாடம் இது என்றது.
அந்த அனுபவம் நரிக்குப் புரிந்தது. அனுபவம் என்பது ஓர் பாடம். அதிலிருந்து உனக்கு தேவையானதைப் புரிந்து கொள். அது உனக்கு தீர்வல்ல. ஓர் எச்சரிக்கை.