முன்னேறு! கழுதையின் ஞானம்!
வயதான கழுதை தவறுதலாக கிணற்றில் விழுந்து விட்டது. வெளியேவர முயற்சித்து முடியவில்லை. பயத்தால் அரண்ட கழுதை கத்தியது. கழுதையின் குரலைக் கேட்ட விவசாயி அங்குவந்து பார்த்து நிலைமைதனைப் புரிந்துகொண்டான். வயதான கழுதை இனி தனக்கு உபயோகப்படாது. கிணறும் நீரின்றி பாழ். கிணற்றை மூடி விட எண்ணம் கொண்டிருந்தவன் ஆட்களை வரவழைத்து செயல் படத்துவங்கினான். சிறிது நேரத்தில் நடப்பதை புரிந்து கொண்டது கழுதை. தன்னை மண்ணில் மூடி அப்படியே கிணற்றில் புதைக்கப்போவதை உணர்ந்தது.
மண்ணை வாரிப்போட கத்திக் கொண்டிருந்த கழுதை தன் சப்தத்தை நிறுத்திவிட இறந்துவிட்டதா என சந்தேகத்தில் கிணற்றின் உள்ளே எட்டிப் பார்த்தவர்களுக்கு ஆச்சரியம். உள்ளே தள்ளிய மண் தன் மேல் விழுந்ததும் உடலை சிலிர்த்து அம்மண்ணைக் கீழே தள்ளி விட்டு அதன் மேல் நின்று கொண்டிருந்தது கழுதை. இப்படியே தன் மேல் விழும் மண்ணை தள்ளிவிட்டு அதன்மேல் ஏறித் தொடர்ந்து செயல்பட்டு கிணறு நிரம்பியதும் மேலேறி வந்தது.
ஆத்மாக்களே உங்களை நோக்கி எரியப்படும் குப்பை கூளங்களை, கற்களை ஒதுக்கிவிட்டு அடியெடுத்து மேலே செல்லப் பழகுங்கள். அவமானப்படுத்தும் நிகழ்வுகளையும் சொற்களையும் ஊக்கப்படுத்துபவைகளாகக் கொள்ளுங்கள். முதுகின் மேலுள்ள சுமையை இறக்கிவைது அதை நீங்கள் ஏறி நிற்கும் மேடையாக மாற வாய்ப்புகளை உருவாக்கு. புரிந்து கொள் மனமே!